• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
22


காலை ஆறு மணிக்கெல்லாம் விழித்த பாகீரதி எழுந்து குளித்து வர, கால் தரையில் படாமல் அந்தரத்தில் மிதப்பதுபோல் தோன்ற, என்னவென்று பார்த்தவள் அதிர்ந்தே போனாள் இன்பமாய். ‘இவங்க எப்படி இங்க?’ மனம் சந்தோஷக் கூச்சலிட, என்னவென்று யோசிக்கும் முன் கட்டிலில் கணவன் அருகிலிருந்தாள். நிறைய கேள்விகள் இருந்தாலும், அமைதியாக கணவனாகிய மன்மதனை ரசித்துக் கொண்டிருந்தாள் அவனின் ரதி.

“என்ன அப்படி ஒரு பார்வை? என்னடா மும்பைன்னு சொல்லிட்டு வந்தோமே. இங்க இருக்கிறது எப்படி தெரிஞ்சதுன்னு பார்க்கிறியா? நான் ஸ்ரீனிவாசன்! கடவுள் ஸ்ரீனிவாசனுக்கு உலகத்தையே தனக்குள்ள அடக்க முடியும் போது, இந்த ஸ்ரீனிவாசனால பொண்டாட்டி இருக்கிற இடம் தேடிப் பிடிச்சி எனக்குள்ள அடக்கவா முடியாது. தூக்க முடியுமா கேட்டதான? இப்ப உன்னைத் தூக்கிட்டேன். என்ன செய்யலாம். சொல்லு?” என்றான் குறும்போடு.

“அ...அது நீங்க கண்டுபிடிப்பீங்க தெரியாது. மும்பை அட்ரஸ் எதுவும் சொல்லலையா. அதான் அசால்டா சொன்னேன்” என்றாள் உள்ளே போன குரலில்.

மனைவியின் கைவிரல்களுள் தன் விரல்களைக் கோர்த்தபடி விளையாடியவன், “மும்பை போன அன்னைக்கு இல்லாம, மறுநாள் மெசேஜ் வரும்போதே யோசிச்சிருக்கணும். உன்னோட மெசேஜ் வந்ததே பெரிய விஷயம்னு இருந்துட்டேன். அப்புறம் ரெண்டு நாள் கான்டாக்ட் பண்ணாம, மூணாவது நாள் போன் செய்தியா, அதுவும் ஜாலியா” என்றான் முகம் கடுக்க, அதில் அவள் சிரித்தாள்.

“ஆமா இப்ப சிரி. எப்படா உன்னை நேர்ல பார்ப்போம்னு இருந்தது. நான் போனை வச்சிட்டதா நினைச்சி, நீ கட் பண்ணாம இருந்த. எங்க வளத்தம்மா, ஏலே பாப்பா நேரமாயிட்டிருக்கு சாப்பிடாம என்ன பண்ணுறான்னு கேட்டது, என் காதுல தேனா வந்து விழுந்தது. சோ, நேத்தே எல்லா வேலையும் முடிச்சிட்டு, நைட்டோட நைட்டா கிளம்பிட்டேன், என் முறைப்பெண்ணைப் பார்க்க” என்றான் கண்ணடித்து.

“யாரோ நீ என்ன மூணு முத்தம் கொடுக்கிறது. நான் முன்னூறு கொடுக்கிறேன்னு சொன்னாங்க. இப்போதைக்கு மூணு மட்டும் கொடுக்கச் சொல்லு ரதிமா. அதுக்காகவே நைட்டோட நைட்டா வந்திருக்கேன்” என்றான் கிசுகிசுப்பாய்.

“அச்சோ! நான் உங்களோட பேசக்கூடாதுங்களே!” என்று கோவை பாஷையில் அலறினாள்.

“ஹா...ஹா... அப்புறம்!”

“நெசந்தானுங்க. நான் உங்க கூட பேசக்கூடாது. நாமதான் பிரிஞ்சிருக்கோம்லங்க” என்றாள் அப்பாவியாய்.

“ஹ்ம்... ஆமாம்ல. சீக்கிரமே ஒரு நல்லநாள் பார்க்கச் சொல்லணும்” என்றான் தீவிரமாய்.

“எதுக்கு?” என்று புரியாமல் விழித்தாள்.

“ரெண்டு மாசத்தை வேஸ்ட் பண்ணியாச்சி. அப்புறம் நாம எப்ப அப்பா, அம்மா ஆகுறது?” என தோள்குலுக்க,

“ச்சீ...” என்று முகம் சிவந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு, “ஐ மிஸ் யூ ரதி. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். நைட் முழிச்சிருந்தது அப்படியே அசத்துது” என்றதும்தான் தாமதம், “ஓ.. சாரிங்க. நீங்க தூங்குங்க. நான் கீழ போறேன்” என்று எழப்போனாள்.

“ப்ச்... இப்ப நீ ஏன் எழுந்திருக்க? பக்கத்துலயே இரு” என அவளை அணைத்தபடி சில நிமிடங்களில் உறங்கிப்போனான்.

கணவனையே பார்த்திருந்தவளுக்கு, ‘நானா இது! எப்படி மாறிப்போனேன் நான். கணவனைக் காதலிக்கும் அளவு. என்று தோன்றிய நேசம்’ என்பது அவளுக்கே புரியவில்லை. ஏதேதோ காரணம் சொல்லி இவனை ஒதுக்க நினைத்தாலும், மனம் சண்டித்தனம் செய்து அவனை அடைந்துவிட்டதே.

‘ஹா...ஹா...’ என்று மனசாட்சி சத்தம் போட்டுக் குதித்தது. ஹேய் பாக்ஸ் டூடூ லேட்யா. அதோட உனக்கு ஒரு தேங்க்ஸ்பா!’ என்றது எகத்தாளமாய்.

‘உன்னை யார் கூப்பிட்டாங்கன்னு. இங்க வந்து குதிக்கிற? இந்த வேலையெல்லாம் வேண்டாம் ஓடிரு சொல்லிட்டேன்.’

‘பாக்ஸ் இப்பவும் நடிக்கிற பார்த்தியா. வான்ட்டடா என்னைய கூப்பிட்டு, என்னோடவே பேசிட்டிருந்துட்டு, இல்லவே இல்லன்ற மாதிரி சொல்ற?’

‘ஸ்ஸ்...’ என தன் தலையிலேயே தட்டிக்கொண்டு, ‘ஓகே ஓகே ஒத்துக்கறேன். நான் மனசு மாறிட்டேன் போதுமா!’

‘அதுவும் ரொம்ப நாள் முன்னாடியே. அதைச்சொல்லு?’

‘ஆமா. அதுக்கு இப்ப என்ன பண்ணனும்ன்ற? நீ கிளம்புறியா. என் புருஷனை ரசிக்க விடமாட்டேன்ற. இத்தனை நாள்ல இவ்வளவு நெருக்கமா இருக்க சந்தர்ப்பம் கிடைக்கல. கிடைச்சாலும் நான் விடல. ப்ளீஸ்’ என்ற கெஞ்சலில் மனம் ஓரம்கட்ட, அமைதியாக ரசித்தாள் கணவனை.

ஸ்ரீனிவாசன் தூங்கி எழ இரண்டு மணியானது. காலையில் பாட்டி தந்த காப்பியில் படுத்தவன்தான். இடையில் மனைவி எழுப்பியும் எழவில்லை. நிம்மதியான ஒரு தூக்கம். நிறைய நாள் தூங்கவில்லையோ என்று எண்ணும்படியான தூக்கம்.

உண்மையும் தானே. திருமணம் முடிந்து மாமனாரின் மருத்துவமனை வாசத்தில் மனைவியின் கவனமெல்லாம் அங்கிருக்க, அவளின் மன நிம்மதிதான் தேவையென்று அவளை நெருங்காமல் விட்டுவிட்டான். வீடு வந்த பின்பும் திருப்பூரிலேயே இருக்க, சென்னை வரமறுத்தாள். அதையும் தந்தை மேலுள்ள பாசம் என்றுவிட, சென்னை வந்தவள் நேரே ‘மும்பைக்கு வேலைக்கு கிளம்புறேன்’ என்றதும்தான் உண்மையிலேயே மனைவிக்குத் தன்மேல் எந்த எண்ணமும் இல்லையோ என்று பரிதவித்தான்.

அவளைத் தடுக்கப் பார்த்து முடியாமல், தன் அத்தையையும் அனுப்பி முடியாமல் போக, ஊருக்குச் செல்லும் அன்றுதானே அவளை நெருங்கினான். அவளின் மனமும் தன்னை நாடுவதை உணர்ந்தாலும், அதை ஒத்துக்கொள்ளாமல் வீம்பில் செல்லும் மனைவியை எப்படி நிறுத்துவதென்று தெரியவில்லை. ஆனால், விரைவில் சரிபடுத்திவிடலாம் என்று மட்டும் தோன்றினாலும், அவளில்லாத வீட்டில் உறக்கம் அவனை அண்ட மறுத்தது. தற்பொழுது மனைவி தன் அணைப்பினுள் என்ற எண்ணமே மேலோங்க தூக்கம் சடுதியில் வந்தது.

அவனையே பார்த்திருந்தவள் மனம் கனிய, ‘இனியொரு தரம் இந்த தவறு நடக்காது பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று மனதினுள் முடிவெடுத்தாள்.

மாலை நான்கு மணிக்கெல்லாம் தாயைப் பார்க்கவென ஸ்ரீனிவாசன் கிளம்ப, “நானும் வரட்டுமா?” என்ற மனைவியை ஆச்சர்யமாக பார்த்தான்.

“என்ன ஆச்சர்யம்? எங்க அத்தையைப் பார்க்க நான் வரவா கேட்டேன்?” என்றவள் குரல் வெளியே வரவில்லை. கணவனின் நம்பாத பார்வை உணர்ந்து முன்தினம் நடந்ததைச் சொன்னாள்.

“ஓ... இவ்வளவு நடந்திருக்கா? ஆமா. இப்ப எதுக்கு மும்பை போறேன்னு இங்க வந்திருக்க? வீட்ல உள்ளவங்களைப் பார்க்கணும்னு சொல்லியிருந்தா, நானே கூப்பிட்டு வந்திருப்பேன்ல.”

“அ...அது” என தடுமாற, மனைவியின் தடுமாற்றத்தில் எதோ விஷயமிருப்பதை உணர்ந்தவன் என்னவென்று கேட்க, “ஸ்ஸ்... சஸ்பென்ஸ்” என்று கண்சிமிட்டினாள்.

“ரதின்னு சொல்றதுக்காக இந்த மாதிரிலாம் செஞ்சி என்னை மயக்கி சோதிக்கக்கூடாது” என்றபடி அவளை நெருங்க, சட்டென்று விலகியவள், “ம்ம்... சும்மாலாம் சொல்லக்கூடாது. இங்க உங்களை யாரும் சோதிக்கலை. நீங்கதான்...”

“ம்... நான்தான்” என்றான் உற்சாகமான குரலில்.

‘சே... லூசு பாகி. நீயே வாய்கொடுத்து மாட்டிக்கிற’ என்று உஷாரானவள், “ம்... நீங்கதான் புலம்பிட்டு இருக்கீங்கன்னு சொல்ல வந்தேன். இப்ப என்ன தெரியணும்? கூடவே வர்றேன்ல அங்க வாங்க எல்லாமே தெரியும்” என்றாள்.

“நமக்கு கல்யாணம் ஆனது அப்பாவுக்கு தெரியாதே? அப்புறம் எப்படி நீ என்னோட வருவ?”

“நீங்க என்ன வீட்டுக்குள்ளயா வரப்போறீங்க? அத்தை, தாத்தா சொல்லமாட்டாங்க. அப்புறம் எப்படி நமக்கு கல்யாணமானது தெரியும். அதெல்லாம் நான் சமாளிச்சிக்கறேன்” என்றபடி காரில் ஏறி, தென்காசியிலுள்ள தங்களின் வீட்டின் முன் ரோட்டில் வண்டியை நிறுத்தி ஹாரன் அடித்தான். ஆள் யாரும் வரவில்லை என்றதும் அடுத்த முறை ஹாரன் அடிக்க, மேனகா உள்ளேயிருந்து, “யாரது?” என்றபடி வந்தார்.

மகன் காரைவிட்டு இறங்கியதைப் பார்த்தவர் சந்தோசத்தில், “ஏலேய் சீனு வாயா. எப்படியா இருக்கா? அத்தை மாமால்லாம் நல்லா இருக்காவளா?” என்று மேனகா மகனை விசாரிக்க, மறுபுறமிருந்து மருமகள் இறங்கியதைப் பார்த்தவர் கண்கள் மலர்ந்து, அவளிடம் போக இருந்த தாயைக் கைப்பிடித்து இழுத்தவன், “அம்மா, இப்போதைக்கு அவ உங்க தம்பி பொண்ணு மட்டும்தான். கொஞ்சம் அமைதியா இருங்க. உங்க தங்கச்சி வர்றாங்க” என்றான் முன்னறிவிப்பாக.

முகத்திலுள்ள சந்தோஷத்தை மறைத்து, “வாம்மா நீ நேத்து நாகுவோட வந்த பொண்ணுதான? என்ன இவனோட வந்திருக்கா? இவன எப்படி ஒனக்குத் தெரியும்?” என மூன்றாம் நபராய் விசாரிக்க,

‘அத்தை உங்களுக்கு ஆஸ்கார் அவார்ட் கன்பார்ம்!’ என மனதினுள் எண்ணி வெளியே லேசாக தலையசைத்தாள்.

சத்தம் கேட்டு வந்த நாகலட்சுமி, ‘யார் இவன்’? என்று அவன் முகம் காண, அடுத்த வினாடி புரிந்தது. தன் மச்சான் மகனென்று. ‘ஆனா, இவள் எப்படி இவனோட கார்ல வந்து இறங்குறா?’ என்ற சந்தேகத்தில் பாகீரதியை நோக்கி வர,

அதற்குள் சுதாரித்த பாகீரதி மேனகாவிடம், “ஆன்ட்டி இவர் உங்க பையனா?” என்று அவனிடம் திரும்பி, “ரொம்ப நன்றி சார்” என்று கைகுவித்து நாகலட்சுமி அறியாமல் கணவனைப் பார்த்து கேலியாக கண்சிமிட்டினாள்.

“அடிப்பாவி!” என்று சத்தமில்லாமல் உதடசைத்துச் சொல்லி, “இட்ஸ் ஓகே. நீங்க என்ன வேணும்னா என் கார்ல ஏறுனீங்க. அட்ரஸ் தெரியாம திருதிருன்னு முழிச்சிட்டிருந்தீங்க. என்ன ஏதுன்னு கேட்டு நானும் இங்கே வர்றதாலதான் கூட்டிட்டு வந்தேன்” என்றான் அவளை குழந்தையாக்கி.

‘உங்களை.! நான் திருதிருன்னு முழிச்சிட்டிருந்தேனா? வீட்டுக்கு வாங்க பார்த்துக்கறேன்’ என பல்லைக்கடித்து கணவனை கண்களால் மிரட்ட, அவனோ அதை ரசிக்க, “ஆமா ஆன்ட்டி. நேத்து கார்ல வந்தோம்ல. இன்னைக்கு பஸ்ல வந்தேன். பஸ்ஸ்டாண்ட் தாண்டி எந்த தெருன்னு மறந்திருச்சி. சார்கிட்டத்தான் விசாரிச்சேன். தனியா நிற்கிறது நல்லதுக்கு இல்லைன்னு அழைச்சிட்டு வந்தார்” என்றாள் பவ்யமாய்.

“அதுக்காக நீ இவனோட வருவியா? வேற காரே கெடைக்கலயா ஒனக்கு. சரி இனிமேல் கண்டவங்க கூப்பிட்டா வண்டியில ஏறிராத. சரியான ஏமாத்துக்காரங்க” என முகம் சுழித்தபடி சொன்னாள்.

‘யார் கண்டவங்க? என் புருஷனா?’ என்ற வார்த்தை பாகீரதியின் வாய்க்குள்ளேயே நின்றது. அதை கண்கள் காட்டியதை நாகலட்சுமி கவனிக்கவில்லை.

கண்டவன் என்றதும் கோபத்தில் திமிறிய மகனின் கைபிடித்து, “அவ கொணந்தேன் ஒனக்குத் தெரியுமேயா. கொஞ்சம் அமைதியாயிரு. எனக்காக” என்றார் கெஞ்சலாக.


“அம்மா இருந்தாலும் அவங்க ஓவராதான் போயிட்டு இருக்காங்க. அவங்க பேசுறதையெல்லாம் கேட்டுட்டு இருக்க நான் குழந்தையும் இல்லை. சந்திரகலாவும் இல்லை” என்றான் சித்திக்கும் கேட்க வேண்டுமென்று அழுத்தமாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“ம்க்கும்...” என தோள் இடித்து, “நீ வா வளர்மதி. நீ வருவேன்னு தோணியோ என்னவோ பாயசம் செஞ்சி வெச்சிருக்கேன். சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு?” என்று உள்ளே அழைத்துச் செல்ல,

‘வளர்மதியா! எனக்குத் தெரியாம இதென்ன புதுப்பெயர்?’ என குழம்பித் தவித்தான் அவளின் கணவன்.

“இது மட்டும் இல்லலே. அவளுக்கு கூடப்பொறந்த அண்ணன் ஜெகன்னு ஒருத்தன் இங்க ஆலங்குளத்துல இருக்கான்” என்றார் நக்கலாக.

“இங்க என்னதான்ம்மா நடக்கு? இவ நேத்து சித்திக்கு ஆக்சிடெண்ட் ஆச்சிது. காப்பாத்தி வீட்ல விடப்போன போதுதான் தெரிஞ்சது உங்க சித்தின்னு. அப்படியே அத்தை, மாமா எல்லாரையும் பார்த்துட்டு வந்தேன். இன்னைக்கு உங்களோட வர்றேன்னு மட்டும்தான் சொன்னா. பெயரை மாற்றிச் சொன்னதை சொல்லலம்மா?” என்றான் வருத்தமாக.

“எய்யா என்ன இங்கனயே நிக்கா? வா வீட்டுக்கு? என்றபடி காசி வந்தார்.

“இல்ல தாத்தா. நான் வரல. வரவும் மாட்டேன். இந்த வீட்டுல உள்ளவங்க எனக்கு எந்த நியாயமும் செய்யல. எனக்குள்ள இருக்கிற கோவம் இன்னும் இருக்கு. அது மாறவும் மாறாது. நான் இங்கேயே உங்ககிட்ட பேசிட்டு போயிருறேன்.”

“என்னலே நீ இப்படிப் பேசுறா? நாந்தான் மன்னிப்பு கேட்டேன்ல. இது என்னோட சம்பாத்யத்துல கட்டினது. மொறப்படி பாத்தாலும் நீதாம்லே உரிமைப்பட்டவன்.”

“ஏன் எங்களை எல்லாம் பாத்தா மனுசனா தெரியலையாக்கும். எங்களுக்குதேன் பிள்ளயில்ல. சரி உங்களுக்கு ஐயப்பன்றவர் பையந்தான?” உள்ளே சென்றிருந்த நாகலட்சுமி திரும்பி வந்து கேள்வி கேட்டு முறைத்தார்.

“என்னமா இப்படிப் பேசுறா? நான் நடைமுறையல சொன்னேன்.”

“என்ன நடைமுறை? ஒரு கண்ணுல வெண்ணெயும் மறு கண்ணுல சுண்ணாம்பும் வைக்கிறிய. எனக்குப் புள்ள இல்லன்னா, இதோ இந்த மாதிரி ஒருத்தியை, ஏன் இவளையே தத்தெடுத்துக்கறேன்.”

“ஆன்ட்டி எதுக்கு இந்த பேச்சி?” என தடுத்தவளைத் தடுத்து, “ப்ச்... நீ சும்மாயிரு வளரு” என்று அருகில் நிறுத்தி மாமனாரிடம், “இப்ப சொத்தெழுதி வைப்பீங்கள்ல?” என்றார்.

பேத்தியைப் பார்த்து வந்த சந்தோஷத்தை அடக்கி, அவளும் உரிமைப்பட்டவதான் என்ற எண்ணத்தில், “தாராளமா மூணு பேருக்கும் கொடுத்திரலாம்” என்றார்.

“என்ன மூணு பேரா? ரெண்டு பேர்தான?” என கேள்வியாய் நாகலட்சுமி பார்க்க,

“என்னம்மா, சுகந்தி என்னோட பேத்தியில்லயா?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. உங்க பையங்க ரெண்டுபேருக்கு மட்டுந்தான்” என்றாள் சத்தமாக.

“அப்பக் கலா?”

‘கலாவா! அவ வேற இருக்காளோ?’ என மனம் சொல்ல, “ஓ... இன்னும் பொண்ணு மேல பாசம் இருக்கா. அவதான் நீங்க வேண்டாம் அந்த ராமகிருஷ்ணன் போதும் சொன்னாள்ல. இன்னுமா உங்களுக்கு புத்தில ஒரைக்கல...” என்று மேலே என்ன சொல்லியிருப்பாரோ,

‘வாயை மூடுறீங்களா?’ என்று ஸ்ரீனிவாசனும், பாகீரதியும் சொல்லுமுன்,

“வாயை மூடுறியா. இதுக்குமேல ஒத்த வார்த்த கலாவ பத்தி பேசின தம்பி பொண்டாட்டின்னு கூட பாக்கமாட்டேன்” என உறுமினார் அண்ணாமலை. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பேசுவது போன்ற தோற்றமளித்தாலும்.. நாகலட்சுமியைப் பற்றி அனைவருக்கும் தெரியுமாதலால், இது நிதமும் நடக்கும் நிகழ்வாகத்தான் மற்றவர்களுக்குத் தெரிந்தது. அண்ணாமலை கத்தவில்லை. கோவம் அனைத்தையும் பல்லைக்கடித்து அடக்கி கண்களில் காண்பித்து, சத்தத்தைக் குறைத்து அதட்டினார்.

அதுவரை கேவலமாக பேசிக்கொண்டிருந்த நாகலட்சுமி வாயடைத்து நிற்க. மற்றவர்களுக்கும் அதே நிலையே!

“என் தங்கச்சியப் பேசுறதுக்கு ஒனக்கெந்த அருகதையுமில்ல. அவளப்பத்தி என்ன தெரியும்னு வாய்க்கு வந்ததைப் பேசுறா? நீ பேசுறதுக்கெல்லாம் அமைதியா இருக்காவன்றதுக்காக எல்லாத்தையும் கேட்டுட்டு வாய மூடிட்டு இருப்பேன்னு தப்புக்கணக்கு போட்டுட்டியோ? இன்னொரு முறை அவளப் பத்தின தப்பான வார்த்தை என் காதுல விழுந்தது... விழுந்தது இல்ல இனிமேல் விழக்கூடாது. என் கூடப்பொறந்தவன் பொண்டாட்டிங்கிறதால அமைதியா இருக்கேன்” என்றவர் தகப்பனிடம் திரும்பி, “என்னப்பா நீங்களும் சரிக்கு சமமா பேசிட்டிருக்கிய. சகதியில கல்லெடுத்து வீசினா சாக்கடை நம்ம மேலதேன் தெறிக்கும்னு தெரியாதா? சொத்து உங்க சம்பந்தப்பட்டது. இப்ப அந்தப் பேச்செதுக்கு” என்று உள்ளே சென்றார்.

அண்ணாமலைக்கு எந்த கெட்டபழக்கங்களும் கிடையாது. விவசாயமே தொழிலானாலும், தாத்தாவின் காலத்தில் துணி வியாபாரம் பார்க்க கேரளா சென்றனர். குடும்பம் பெருகப்பெருக அப்பா காசியின் காலத்தில் துணி வியாபாரம், சின்ன கடையாக தென்காசியில் ஆரம்பிக்கப்பட்டு, தற்பொழுது மகன்களால், பெரிய டெக்ஸ்டைல்சாக தென்காசியிலும், திருநெல்வேலியிலும், திருச்செந்தூரிலும் மாறியிருக்கிறது.

அதன் தாக்கம்தானோ என்னவோ ஸ்ரீனிவாசனுக்கும் அதிலேயே ஒரு பிடிப்பு ஏற்பட்டு, படிக்காமல் மூத்த தலைமுறைகள் செய்த தொழிலை, படித்துவிட்டு செய்கிறான். அண்ணாமலை தற்பொழுது ஊராட்சித் தலைவர் பதவியுடன், சாதிக்கட்சித் தலைவர் என்ற பதவியுடன் ஊருக்குள் கௌரவமாக வாழ்ந்து வரும் மனிதர்.

மச்சினன் மறைவிற்குப் பிறகு தங்கையை இங்கேயே அழைத்துக் கொள்ளலாம் என்றெண்ண, அதற்கு அவள் மறுக்க, தங்கள் ஜனங்களின் முன் கௌரவம் காக்க, தங்கையை வேண்டாமென வந்துவிட்டார். இதுதான் மற்றவர்கள் பார்வையில் அண்ணாமலை பற்றிய பொதுவான அபிப்ராயம். ஆனால், அவரின் உள் மனதிற்குத்தானே தெரியும் எது உண்மையென்று. அதனால்தான் பொறுக்க முடியாமல் பொங்கிவிட்டார்.

ஒரு பஞ்சாயத்து முடித்துவிட்டு வீடு திரும்ப, முன்னாள் சென்ற கார் தன் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்து, சற்று தள்ளியே தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். ஏனென்று தெரியவில்லை எப்பொழுதும் யாராவது தன்னைப்பார்க்க காரில் வருவது இயற்கைதான். என்னவோ இன்று, ‘அங்கே செல்லாதே’ என்ற மன உந்துதலில் தள்ளியே நின்றார். காரிலிருந்து இறங்கிய இளைஞனைப் பார்த்த சில வினாடிகள் புரியாமல், புரிந்ததும் மனதில் சந்தோஷ ஊற்றெடுத்தது, பல வருடங்கழித்து மகனைப் பார்த்ததில்.

பதினேழு வயதில் பார்த்த அரும்பு மீசைப் பையன். இளங்காளையாக பார்ப்போரைக் கவரும் வகையில் நல்ல அழகுடன், வசதியுடன் (பார்த்ததும் புரிந்தது பையன் வசதியாக இருக்கிறானென்று) மகிழ்வுடன் இருக்கிறானென்று தெரிந்தது. ஏனோ நெருங்கிப் பேசத்தோன்றவில்லை. பத்தொன்பது வருடத்திற்கு முன் என்மேல் நம்பிக்கையில்லாதவங்க, எப்பவும் எனக்கு வேண்டாம்’ என்று தங்கை சொன்ன அதே வார்த்தை அச்சுபிசகாமல், பத்து வருடத்திற்குமுன் மகன் சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

மகனையே விழியகற்றாமல் பார்த்து மனதினுள் பூட்டிவைக்க, மறுபக்கத்தில் இருந்து முந்தைய தினம் வீட்டிற்கு வந்த பெண் இறங்க, அவளை ஆச்சர்யமாய் பார்த்தார். அவளோ மகனையே பார்வையால் விழுங்கியபடி இறங்க, ‘இவங்க ரெண்டுபேரும் ஏற்கனவே அறிமுகமா?’ என்று எண்ணும்போதே உள்ளிருந்து வந்த மனைவி மகனைக் கொஞ்சி, அந்தப்பெண்ணைக் கண்டதும் கண்கள் மின்ன ஆர்வத்தோடு எதையோ கேட்கப்போனார். மகன் தாயின் கைபிடித்து காதோரம் ஏதோ சொல்லி பார்வையால் எதையோ உணர்த்தவும், மனைவி ஆர்வம் குறைந்து சாதாரணமாக விசாரிக்கையில், மனைவியின் பார்வை போன திக்கைப் பார்த்தவருக்கு வருவது யாரென்று புரிந்தது.

அதற்குள் அப்பெண் எதோ கேட்டு மகனைப் பார்த்து கண்சிமிட்ட, அதன்பின் நடந்த சின்னச்சின்ன விஷயங்களும் அவர்களுக்குள் எதோ இருக்கிறது என்பதை உறுதிப்பட வைத்தது.

‘ஒருவேளை காதலித்து, சினிமாவில் வருவதுபோல் வேறு மதமாக இருந்து... ப்ச்... இல்லையே பொண்ணோட நெற்றியில பொட்டு இருக்குதே. இல்லன்னா வேற ஜாதியா இருந்து நாங்க சம்மதிக்கமாட்டோம்னு தாய், தகப்பன் சம்மதத்திற்காக வந்திருக்கிறார்களோ?’ யோசனைகளின் நடுவே தந்தை வருவதைப் பார்த்தவர், மெல்ல தானும் அருகில் செல்ல நடக்க, அவர்கள் பேசுவது மெல்லியதாக தெளிவாகவே கேட்டது. தகப்பனின் விசாரணையிலேயே மகனுக்கும் அவர்களுக்குமான தொடர்பு புரிந்தது. சமீபமாக ‘என் பையன் எங்க போனான்னு தெரியலையே’ என்ற மனைவியின் புலம்பல்கள் குறைந்திருப்பதின் காரணம் புரிந்தது.

‘அடப்பாவியளா! அப்ப நான் மட்டும் வில்லனாகிட்டேன். நீங்கள்லாம் நல்லவங்க!’ மனம் புலம்ப, ‘இந்தப் பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்கணுமே’ என்று எண்ணியபடி வர, நாகலட்சுமி அந்தப் பெண்ணை சொத்துக்கு வாரிசாக்கி, அத்தோடு விடாமல் தன் தங்கையைப் பற்றித் தரக்குறைவாகப் பேச, பொறுமையைக் கைவிட்டு சத்தமில்லாமல் திட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

தன் தாய்மாமனின் பேச்சைக் கேட்ட பாகீரதி, ஆச்சர்யமா! சந்தோஷமா! குழப்பமா! தெரியாத நிலையில் கணவனைப் பார்க்க, தனக்கும் இது புது புதுசெய்திதான் என்பதுபோல் தோள்குலுக்கினாலும், ஆச்சர்யம் மட்டும் குறைந்தபாடில்லை ‘எங்கப்பாவா பேசியது?’ என்று.

அண்ணாமலையிடம் இருந்து இப்படி ஒரு பாய்ச்சலை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆச்சர்யமும், அதிர்ச்சியும் போட்டிபோட அசையாது நின்றிருந்தார்கள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top