• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
21

காரிலிருந்து இறங்கியதுமே அந்த வீட்டின் சொந்தம் அவளை உணர்ச்சிவசப்பட வைத்தது. சுற்றிலும் வீடுகள் எள்ள ஏரியாவில், சற்று பழமையான பெரிய வீடு. வரும்பொழுதுதான் நாகலட்சுமி அவர்கள் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று சொன்னதுமே தெரிந்தது, தன் தாய் பிறந்து வளர்ந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருப்பது.

அதன்பின் தான் சின்ன மாமாவை முழுமையாகப் பார்க்க, அவரைப்பற்றி தப்பான எண்ணமெல்லாம் வரவில்லை. மாறாக பாரதியை முதலில் பார்த்தபொழுது தோன்றிய அதே உணர்வு ஏற்பட்டது. அவர்கள் பேசியதைக் கேட்டிருந்ததாலும், தன் முகப்போக்கை பார்த்திருந்ததாலும் ஜெகனிடம் விஷயத்தை சொன்னாள்.

‘இவர்கள் தன் உறவுகள். அதுவும் பிடிக்காத உறவுகள்’ என்ற எண்ணமும் வந்தது. தன்னைப் பெற்ற அப்பாவின் பெயரைக் கேட்டதுமே ரொம்ப நெருக்கமான உறவாகத்தான் இருக்கும் என்று நினைத்தவள்தான். ஆனால், தான் பார்க்க, கேள்விகள் கேட்க வேண்டிய முக்கியமான ஆளே இவர்தான் என தெரியும்போது, அவளால் சில நிமிடங்கள் தன் கோவ உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முயன்று தன்னை நிதானித்துக் கொண்டிருந்தாள்.

கார் சத்தம் கேட்டதும், வாசல் வந்த மேனகா கண்ணில் முதலில் பாகீரதி பட, “பாப்பா” என அழைக்கப் போனவர், மருமகளின் அவசரமான கண்ணசைவில் நின்று, மற்றவர்களை கவனித்து, “என்னாச்சி நாகுவுக்கு?” என மச்சினரிடம் கேட்டார்.

அவரும் தகுந்த விளக்கம் சொல்ல, நாகலட்சுமியோ “நீ வா வளர்மதி” என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.

“வளர்மதியா!” என வாய் பிளந்து நின்றிருந்த மேனகா அருகில் வந்தவன், “ஆமா ஆன்ட்டி வளர்மதிதான். நான் அவளோட கூடப்பிறந்த அண்ணன் ஜெகன்” என்றான் சிரிக்காது.

‘இது எப்போதிருந்து?’ என அவன் விட்ட லுக்கையே அவரும் விட, “இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான்” என்று சிரித்தபடி சொன்னான்.

“நீ யாருப்பா?” என்று விசாரிக்க, “இங்க வரும்போதுதான் இது அவங்க வீடுன்னே தெரியும்” என்று நடந்ததைச் சொல்ல, “இப்போதைக்கு அவங்க உங்க சொந்த மருமகள்ன்ற உண்மை தெரிய வேண்டாம் ஆன்ட்டி. அப்புறம் அவங்க எதுக்காக வந்திருக்காங்களோ, அதுக்கு அதிக தடங்கலாகிரும்” என்றான்.

அவரும் சம்மதித்து அவனை உள்ளே அழைத்துச்செல்ல, அங்கே அவர் கண்ட காட்சியில் திறந்தவாய் மூடவில்லை. ‘நாகலட்சுமியா இது! இவளுக்கு பாசமாகக் கூட இருக்கத் தெரியுமா?’ என்றுதான் தோன்றியது. அவ்வளவு பாசமாய் பாகீரதியின் தலைவருடி, வேலைக்காரப் பெண்ணிடம் குடிக்க எடுத்துவரச் சொல்லி, அவரே அவளுக்கு கொடுத்தது என்பது எட்டாவது, இல்லை பத்தாவது அதிசயமாகவேப் பட்டது மேனகாவிற்கு.

இருக்காதா பின்னே, பாசம் என்றால் கிலோ என்ன விலையென்று கேட்கும் ரகமாகிற்றே! ‘இந்தப் பாசம் அவளைக் காப்பாற்றியதால் வந்தது. இதே என் தம்பி பெண் என்று தெரிந்தால், அடுத்த நிமிடம் நாகமாகவே மாறிவிடுவாள். எதற்கும் மருமகள் எவ்வழியோ மாமியாரும் அவ்வழியே இருந்துவிட்டுப் போயிரலாம்” என்ற முடிவுக்கு வந்தார்.

சிறிது நேரத்தில் மேனகாவின் கணவர் அண்ணாமலை வர, அவருக்குமே பாகீரதியைப் பார்க்கையில் சந்தேகம் வந்தது. அதுவும் ஜெகனை உடன்பிறந்த சகோதரன் என்றதும் மறைந்தும் போயிற்று. எதையும் பகுத்தறியும் நிலையில் அவரில்லை.

“வீடு எங்கு இருக்கிறது?” என்று நாகலட்சுமி விசாரிக்க, “ஆலங்குளம்” என்றாள். மேனகா, ‘அம்மா வீட்லயா இருக்கிற?’ என்பதுபோல் மருமகளைப் பார்க்க, “ஆமாம்” என்றது அவளின் சம்மதமான வாயசைப்பு.

அங்கு இருந்த நேரம் வரை அவர்களிடம் நல்ல தோழமையுடனும், பாசத்துடனும் பழகவும், வீட்டில் மற்ற உறுப்பினர்களுக்குமே அவளை மிகவும் பிடித்துவிட, வீட்டில் ஒருத்தியாக எண்ண ஆரம்பித்தனர்..

நாகலட்சுமிக்கு அவள்மேல் அளவிட முடியாத பாசம் வந்து ஒட்டிக்கொண்டது. ஒருவேளை அவளின் முகத்தோற்றம்தான் காரணமோ!

இரவு வீட்டிற்கு வந்து நடந்ததை மற்றவர்களிடம் சொல்லி முடித்து, தான் ஓய்வெடுக்கப்போவதாகக் கிளம்பி, தன் அறைக்குச் சென்றவளுக்கு உறக்கம்தான் வரமறுத்தது.

யாரைப் பழிவாங்க வேண்டுமென்று கிளம்பி வந்தாளோ அவளையே இன்று இரத்தம் கொடுத்துக் காப்பாற்றியிருக்கிறாள். அதற்கு பிரதிபலன் சின்ன மாமனின் மனைவியின் அபரிமிதமான அன்பு. இதுவரை யாரிடமும் அன்பு செலுத்தியே வாழாதவள், தன்னை அன்பால் குளிப்பாட்டுகிறாள். இப்பொழுது தான் என்ன செய்வதென்று அவளுக்கே குழப்பம் வந்தது.

திருமணம் முடிந்து தாய் தன் கதையைச் சொல்லியிருக்க, தந்தை குணமாகி வரும் வரை எதையும் கவனிக்கும் சூழ்நிலையில் பாகீரதி இல்லை. அதே நேரம் தனக்குத் திருமணமானதையோ! கணவன் என்று ஒருவன் இருப்பதையோ மறந்திருந்தாள். அந்தளவு அப்பாவின் பாசம் அவளை மூழ்கடித்திருந்தது.

ஒரு மாதத்திற்குள் சரியாகி, மறுமாசம் சிகிச்சையில் அனைத்தும் நலம் என்று வந்தபின்பே நிம்மதி மூச்சிவிட்டாள். வீட்டிற்கு வந்ததும் தாயைச் சுற்றிய நினைவுகள், அவருடைய மருமகனையும் சுற்ற, வேகமாக யோசித்தவள் சுகந்திக்கு அழைத்துவிட்டாள்.

“அண்ணி எதுக்காக உங்க தம்பியை வீட்டைவிட்டு அனுப்பினாங்க?” என்று காரணம் கேட்க, சுகந்தி சொன்ன காரணத்தை ஒரு விஷயமாகவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘சே... ஒரு காரணமே இல்லாத காரணத்திற்காக தண்டனையா?’ என்றுதான் தோன்றியது.

ஸ்ரீ(சீ)னிவாசன் பனிரெண்டு முடித்து விடுமுறையில் இருந்த தருணம். தேர்வு முடிவு பார்த்து மேற்படிப்பு என்ன படிக்கலாம் என்ற நினைவுகளில் இருந்த சமயத்தில், தூரத்து உறவான பழனிவேல் தன்னுடைய மெக்கானிக் செட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வேண்டுமென்று அழைத்து, “அம்மாகிட்ட ஃப்ரண்டோட போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வா” என்றான்.

“ஏன் உங்களோட வர்றதாவே சொல்றேன். அம்மா எதுவும் சொல்லமாட்டாங்க” என்று கிளம்பியவனைத் தடுத்து, “நான் சொன்னதைச் செய்டா?” என்றான் கெஞ்சுதலாய். ஏனோ அவனுக்கு அந்நேரம் மறுக்கத் தோன்றவில்லை. தாயிடம் பொய் சொல்லி பழனியுடன் செல்ல, அதை வழியில் நாகலட்சுமி கண்டதை அறியவில்லை ஸ்ரீனிவாசன்.

அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நின்ற இடத்தைக் கண்டவன் அதிர்ந்து பழனியைப் பார்க்க, “எனக்கும் எங்க தெருக்கடைசில இருக்கிற சாந்தாவுக்கும் கல்யாணம்டா தம்பி. என் சார்புல கையெழுத்துப்போடன்னு யாரும் இல்லை. அதான் உன்னைப் பார்த்ததும் கூட்டிட்டு வந்துட்டேன்.”

“இல்ல நான் மாட்டேன்” என்றவனிடம், “ப்ளீஸ்டா தம்பி. இப்ப விட்டா இவளைப் பார்க்க முடியாது.” ஏனென்பது போல் அவன் பார்க்க, “அ...அது அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. நான் இல்லன்னா செத்துருவேன்றா” என கெஞ்சிக் கொண்டிருக்க, அப்பொழுது அங்கு வந்த பெண்ணையும், அவளின் தோழிகளையும் பார்த்தவன், “அதான் இத்தனை சாட்சியிருக்கே. நான் எதுக்கு? நான் இங்க வந்தது அப்பாவுக்குத் தெரிஞ்சிது, ஐயனார் மாதிரி அருவாளைத் தூக்கிருவார். நான் வரேன்” என்று வெளியேற,

“தம்பி” என்றழைத்த கல்யாணப்பெண்ணின் குரலில், அவன் நிற்க. “எங்களுக்கு வேற வழியில்லாமல்தான் இப்படி செய்றோம். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.” அவளின் கெஞ்சலில் மனமிறங்கியவன் சம்மதித்து கையெழுத்திடப் போனான்.

“உனக்கு பதினெட்டு வயசு முடிஞ்சிருச்சா?” என்ற பதிவாளரின் கேள்விக்கு, இல்லையென்று சொல்லுமுன், “என் தம்பிக்கு இருவது வயசு சார்” என்றான் பழனி. அண்ணனை முறைத்து கையெழுத்திட, அன்றே வீட்டிலும் பூகம்பம் வெடித்தது.

பழனி திருட்டுக் கல்யாணம் பண்ணியதைக் கேள்விப்பட்டதும், நாகலட்சுமி அவனிடம், “இதுக்குத்தான் அவனோட போனியா?” என்று நேருக்குநேர் கேட்க, தாயும், ‘நண்பனைப் பார்க்கப் போவதாகத்தான சொன்னான். இதென்ன?’ என்பதுபோல் மகனைப் பார்க்கவும், அவனின் தலைகுனிவு, ‘பொய் சொல்லியிருக்கிறான்’ என்பதை சொல்லாமல் சொன்னது. இருந்தாலும் இந்த வேலையை செய்திருப்பான் என்பதில் நம்பிக்கையில்லை மேனகாவுக்கு.

முதலில் திணறியவன் அதன்பின் நடந்த உண்மையைச் சொல்லுமுன், உள்ளே வந்த அண்ணாமலை மகனை என்ன ஏதென்று விசாரிக்காது அடி விளாசித்தள்ளி, “என்ன காரியம்லே பண்ணிட்டு வந்திருக்கா? படிக்கிற வயசுல சோடி சேர்த்து வைக்கியலோ” என்றார் ஆத்திரமாக.

“எல்லாம் அவங்கம்மா குடுக்கிற இடம் மச்சான். உங்க பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டுத்தான் போனான்” என அவன் தாயையும் போட்டுக்கொடுக்க, கோவத்தில் இருந்த அண்ணாமலைக்கோ இன்னும் உச்சிக்கு ஏறியது. மனைவியை எரிக்கிறார்போல் நோக்க, “அம்மாவுக்கு எதுவும் தெரியாதுப்பா. ஏன் எனக்கே தெரியாதுப்பா. வேணும்னா பழனி அண்ணனைக் கேட்டுக்கோங்க” என்று உண்மையைச் சொல்ல வர,

“பார்த்தீங்களா மச்சான். சந்தடி சாக்குல நான் கையெழுத்தே போடல சொல்லிருவான் போல. இதுக்கு அந்த பயலும்ல துணை. இப்பவே இத்தனை பொய்யா?” என ஆச்சர்யபடுபவளாய் வாயில் கைவைத்து சொல்ல,

“நீ அங்க போயி கையெழுத்துப் போட்டதை நேர்ல பார்த்தவங்க சொன்னாங்க. அதை இல்லைன்னு சொல்லப்போறியா? சொல்லுடா?” என்றவரின் மனதிற்குத்தான் தெரியும் பார்த்தது யாரென்று.

“நான் வேணும்னே பண்ணலப்பா. அங்க போன பின்னாடிதான்...”

“நிறுத்துடா. அங்க போன பின்னாடிதான் தெரியும்ன்றியா? அப்படித் தெரிஞ்சிருந்தா அந்த நிமிஷமே அங்க இருந்து வந்திருக்கலாம்ல” எனும்போது ஸ்ரீனிவாசன் தலைகவிழ, அது அவரை உச்சக்கட்ட கோவத்தில் ஆழ்த்தி, விசாரணை இல்லாமலே தண்டனை கொடுக்கத் தயாரானார் அண்ணாமலை. தன் மகன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்பதிலேயே, அவனை புரிந்துகொள்ள மறந்து வார்த்தைகளை விட்டார்.

தாயின் வார்த்தைகளோ, மனைவியின் கெஞ்சல்களோ, அவரின் காதில் விழவில்லை. தன் மகன் தவறான வழிக்குச் செல்கிறான் என்பதே அவரின் மனதில் நின்றது.

தாத்தாவும், சின்ன மகனான ஐயப்பனும் அதை என்ன ஏதென்று கேட்காமல், “ஏன்லே இப்படிப் பண்ணிட்டா? எல்லாரும் புள்ளய வளர்த்திருக்கான் பாருன்னு காரித்துப்புறாங்க. இப்படி ஒரு அவமானத்தைத் தேடிக் குடுத்திட்டியேடா?” என்றனர்.

அவர்களின் ஆதரவும் தனக்கில்லை என்றதில் பாவமாகத் தாயைப் பார்க்க, தாயின் கண்களில் கண்ணீரைக் கண்டவன், ‘அழ வேண்டாம்’ என்று தலையசைத்த நொடி, தகப்பனின் “வீட்டைவிட்டுப் போ” என்ற வார்த்தை இடியாக விழுந்தது.

விசாரிக்காமலே தீர்ப்பெழுதிய அனைவரின் மேலும் கோவமே அவனுக்கு. அந்தக் கோவமே ரோஷமாக மாறி, “என்மேல நம்பிக்கை இல்லாதவங்க எனக்கு எப்பவும் வேண்டாம்” என்று கத்திச்சொல்லி வீட்டைவிட்டு வெளியேற வைத்தது.

தடுத்தத் தாயையும், மறித்தபடி நின்ற அப்பம்மாவையும் விலக்கி, தன் சட்டைப் பையில் வைத்திருந்த, அதாவது எதோ வாங்க பாட்டி தந்திருந்த நூற்றைம்பது ரூபாய் பணத்துடன் வெளியேறினான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“அதைக்கூட அனுப்பி வச்சிட்டான்னு அம்மா சொல்லி அழுதாங்க. சண்டை போட்டதும் எங்கிட்டயாவது வந்திருக்கலாம். ரோஷக்காரன் கிடைச்ச பஸ்ஸையோ, ட்ரெயினையோ பிடிச்சி திருப்பூர் போயிருக்கான். படிக்கணும்னு தான் என்னை கான்டாக்ட் பண்ணினான். இல்லன்னா, கடைசிவரை எங்க இருக்கான்னு தெரிஞ்சிருக்கவே செய்யாது. பிடிவாதமா என்ன நடந்ததுன்னு கேட்டேன். நான் யாருக்கும் நிரூபிக்கத் தேவையில்லன்னு முதல்ல மறுத்தான். நான் அவனோட அக்காவாச்சே. அவனோட பிடிவாதமா இருந்து விஷயத்தைக் கறந்துட்டேன். நான் கொடுத்த பணத்தையுமே முக்கால்வாசி தந்துட்டான். வேண்டாம்டா சொன்னா, வாங்கலன்னா வட்டிபோட்டுத் தருவேன்றான்மா.”

“தேங்க்ஸ் அண்ணி.”

“தேங்க்ஸ் இருக்கட்டும். இதைக்கேட்டு என்னலே செய்யப்போறா?”

“என்ன செய்யப்போறேன். எப்படி செய்யப்போறேன்னு பொறுத்திருந்து பாருங்கண்ணி.”

“அப்புறம் பாகீ...” என இழுக்க,

“என்னண்ணி இழுக்குறீங்க?”

“இல்ல தம்பிமேல கோவமா இருக்கியா? உங்க கல்யாணமாகி ரெண்டு மாசமாகுது. கலா அத்தையும், பாரதி அத்தையும் ஃபீல் பண்றாங்க” என்றாள். ஏனென்று புரிந்தபோதும் என்ன பதில் சொல்வதென்று அமைதியாக இருக்க, “பாகீ லைன்ல இருக்கியா?” என்றாள் வேகமாக.

“ஹான்! இருக்கேன் அண்ணி. சொல்லுங்க?”

“இல்லமா. நீ வெளிநாடு படிக்கப்போறேன்னு சொன்னதான? அது மாதிரி எதுவும்...” என முடிக்குமுன், “தேங்க்ஸ் அண்ணி. அடுத்து என்னடா செய்யுறதுன்னு ஒரே யோசனை. நான் சொன்னது எனக்கே மறந்திருச்சி. நல்லவேளை நியாபகப்படுத்தினீங்க” என்று குதூகலிக்க,

ஙே.. என விழித்து, “பாகீமா ஏன் இப்படிப் பேசுற? சீனு நல்ல பையன்” என்றாள்.

“தெரியும் அண்ணி. எனக்கு டைமாகுது பை.”

“பாகீ! அம்மு!” எந்த அழைப்பிற்கும் செவிசாய்க்காமல் அவசரமாக வைத்தாள்.

பின் தந்தையிடம் சென்று தான் தென்காசி போவதாகச் சொல்ல, ராமின் எல்லா மறுப்புகளையும் ஒன்றுமில்லாமல் செய்து, தன் சொந்தங்களைப் பார்க்க வேண்டுமென்று பிடிவாதமாகச் சொல்லி, ‘இது மற்றவர்களுக்கு ஏன் தன் தாய்க்குமே தெரியவேண்டாம்’ என்றும் சொன்னாள்.

“ஏன்மா?” என்றதற்கு, ‘ம்...மருமகனுக்கு ஓவரா சப்போர்ட் பண்ணினாங்கள்ல. அதான்’ என்பதை மனதினுள் நினைத்து, “ப்ளீஸ்ப்பா நான் மும்பை போறதா சொல்லிட்டுத்தான் போகப்போறேன்” என்று கிளம்பியும் விட்டாள். விமானம் ஏற்றவிட வந்த கணவன் வெளியே செல்வது தெரிய, வேகமாக வெளியே வந்தவள் ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி, ராஜேஷ் வீடு சென்று சில மணிநேரங்கள் கழித்து, அங்கிருந்து காரில் ஆலங்குளம் வந்திருந்தாள்.

நினைவுகளிலிருந்து மீண்டாலும், தாயையும், கணவனையும் அவர்களிடம் நிரபராதியாக காட்ட வேண்டுமென்ற வெறியே இருந்தது. அதற்காக இந்த விபத்தில் நல்லவளாகப் பழகும் நாகலட்சுமி செய்ததை மறக்கமுடியுமா என்ன? முன்வைத்த காலை பின்வைக்க மனமில்லை பாகீரதிக்கு. எப்படியும் தன் தாய்க்கும், கணவனுக்கும் நடந்த கொடுமைக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தாள்.

‘நாகலட்சுமியின் இந்த பாசம் கூடத் தான் அப்பாவைப் போன்று இருப்பதாலோ?’ என்றும் தோன்றியது. அதுவே உண்மையென்றும் புலப்பட்டது. ‘சே... திருமணம் முடிந்து கணவனுடன் சேர்ந்திருக்கும் பெண்ணிற்கு, ஏன் புத்தி இப்படிப்போகுது?’ பல எண்ணங்களுடன் படுத்தவளுக்கு கணவனிடம் பேச வேண்டும் போல் தோன்றியது. முதலில் தாய்க்கு அழைத்துப் பேசி முடித்து, கணவனுக்குப் பேச யோசித்த வேளையில், மெசேஜ் வர எடுத்துப் பார்த்தவள் முகம் மலர்ந்தது.

‘முறைப்பெண்ணிற்கு முறையான மூன்று முத்தங்களுடன் இரவு வணக்கங்கள்!’ என்றிருந்தது. ஏனோ கணவன் குரலைக் கேட்க வேண்டுமென்று தோன்ற உடனே அவனை அழைக்கப்போக, “ப்ச் வேண்டாம். எதாவது தப்பா நினைச்சிட்டா என்ன பண்றது?” என்று வைத்துவிட்டாள்.

கணவன் மனைவிக்குள் தப்பு சரியென்று எதுவுமில்லையென்பது தெரியவில்லை அப்பெண் பாவைக்கு.

அவள் வைத்த அடுத்த வினாடி கணவனிடம் இருந்து அழைப்பு வர, எடுத்து, “ஹலோ” சொல்ல, மறுமுனை அமைதியாக இருந்தது. காதிலிருந்து எடுத்துப் பார்த்தவளுக்கு அவன் இருப்பது தெரிய, திரும்பவும் “ஹலோ” சொல்லி, “லைன்ல இருக்கீங்களா? ஹலோ! என்னங்க? லைன்ல இருக்கீங்களா? உங்களைத்தான்!” எதற்கும் சத்தமில்லாமல் போக, “அட இந்த சீனு முறைப்பையனைப் பாருங்கப்பா. ரொம்பத்தான் முறுக்கிக்கிறான்” என சலித்து அணைத்து வைக்கப்போக,

“முறைப்பையன் முறுக்க மட்டுமில்ல, முத்தம் கூட கொடுப்பான்” என்ற குறும்புக் குரலில், “அச்சோ! கேட்டுருச்சா?” என நாக்கைக் கடிக்க, “எல்லாமே!” என்றான் எதுவும் அறியாதவனாய்.

“அப்ப நான் குட் நைட்” என்றாள் பதறி.

“நோ. பேட் நைட் முறைப்பொண்ணு” என்றான் அவள் வைத்துவிடும் முன் வேகமாக.

“ஏன் எதாவது பிரச்சனையா?” என்றாள் அவனைவிட வேகமாக.

“ம்... பிரச்சனைதான். என் ஒய்ஃப் பக்கத்துல இல்லாம எங்கயோ போயி உட்கார்ந்துகிட்டா. கேட்டா என்மேல கோவமா இருக்காளாம். ஆனா, பாரு போன்ல முத்தம்லாம் தர்றா” என்றான் அப்பாவிக் குரலில்,

“பேசாம அவளைத் தூக்கிருங்க” என்றாள் கிண்டலாக.

“ம்... தூக்கத்தான் போறேன். அப்ப அவளே நினைச்சாலும் என்னைத் தடுக்க முடியாது தெரியுமா?” கொஞ்சும் குரலில் சொல்ல,

“உங்க ஒய்ஃபை தூக்குறதை தடுக்கிறதுக்கு யாருக்கு தைரியமிருக்கு” என்றாள் கெத்தாய்.

“அப்ப தூக்கலாம்ன்றியா?” என்றவன் குரல் ஹஸ்கியாகக் கேட்டாது.

“ம்... தூக்கலாம் உங்க ஒய்ஃபை. பட், உங்க முறைப்பொண்ணை தூக்க முடியாது. அவ கொஞ்சம் டேஞ்சரஸ் ஃபெலோ” என்றாள் சிரிப்பை அடக்கி.

“ஹா...ஹா... என் முறைப்பொண்ணை அடக்குற வித்தை எனக்குத்தான் தெரியும். அதைப்பற்றி என் ஒய்ஃப் ஃபீல் பண்ணிக்க வேண்டாம்” என்றான் சிரித்தபடி.

“என்னவோ பண்ணுங்க. இப்ப வச்சிருறேன்.”

“ஏய் ரதி! வச்சிராத. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றவன் குரலிலுள்ள பதற்றம் அவளையும் தொற்றிக்கொண்டது.

“என்ன விஷயம்ங்க? அப்பா, அம்மா எல்லாரும் நல்லாயிருக்காங்கள்ல?” என்றாள் பதற்றமாக.

“அவங்கள்லாம் நல்லாத்தான் இருக்காங்க. உன் புருஷன்தான் சரியில்ல. அவன் தூங்கணும்னா ஒரு கிஸ் பண்ணு. சமத்தா தூங்குவான்” என்று வம்பிழுத்தான்.

“நல்லவேளை நீங்க என் பக்கத்துல இல்லை” என்றாள் கோவத்தில்.

“ஹேய்! ரதிமா நிஜமாவா. நேர்லயே தர்றேன்றியா?” என்றான் ஆயிரம் எதிர்பார்ப்போடு.

“ம்க்கும் ரொம்பத்தான் ஆசை. முக்கியமான விஷயம்னு சொன்னதும் என்னவோ ஏதோன்னு பதட்டத்துல கேட்டா, முத்தம் கேட்குதா உங்களுக்கு. பக்கத்துல இருந்திருந்தா அடி கன்பார்ம்னு சொல்ல வந்தேன்” என்றாள் பல்லைக்கடித்தபடி.

“ஹேய்! கூல் பேபி கூல். உண்மையிலேயே நல்ல விஷயம்தான். நாளைக்கு காலையில சொல்றேன் ஓகே. படுத்துத் தூங்கு” என்றபடி போனை வைத்த அடுத்த நிமிடம் வந்த மெசேஜை எடுத்துப் பார்த்தவன் மனம் சிறகில்லாமல் பறந்தது. ‘முறைப்பையன் மூணுதான் கொடுப்பான். சரியான கஞ்சம். முறைப்பெண்ணின் முன்னூறு முத்தங்கள்’ என்றிருந்தது அந்த மெசேஜ்.

இருவருக்குமே மனது லேசாக இரவுப்பொழுது இனிமையாக கழிந்தது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top