- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
20
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம்:
அந்தக் காலை வேளையில் வாடகை வாகனத்தில் இருந்து இறங்கியவளுக்குள் ஒருவித சிலிர்ப்பு வந்தது. இதுதான் என் சொந்தம். இதைவிட்டு இத்தனை ஆண்டுகள் தனித்திருந்தது மிகுந்த வேதனையைத் தந்தது என்றால், தெரியாமலேயே இருந்தது எவ்வளவு பிழை என்று உணர்ந்தாள். மனதில் பல எழ, அதை மறைத்து சிரித்த முகமாகவே தான் வந்து நின்றிருந்த வீட்டடுக் கதவைத் தட்டி, தன் கையிலுள்ள கைபேசியை எடுத்து “ஆலங்குளம் வந்தாச்சி” என தகவல் அனுப்பிக் காத்திருந்தாள்.
கதவைத் திறந்த முதிய பெண்மணி, “யார்லே நீ? காலங்காத்தால இங்கன என்ன பண்றா?” கேட்ட அவரை வைத்த கண் வாங்காது பார்த்தவள் நொடியில், “பாட்டிஈஈஈ...” என்று கட்டியணைத்தாள்.
“ஏ புள்ளா... விடு. விடு சொல்றேன்ல. யார்லே நீ? அசிங்கமா கட்டிலாம் புடிக்கா?” என்றார் கூச்சத்துடன்.
“உரிமை உள்ளவங்களைத் தான் கட்டிப்பிடிப்பாங்க பாட்டி. சரி இந்த தாத்தா எங்க? இவ்வளவு பெரிய வீட்ல ஓல்ட்ஸ் மட்டும் ஜாலியா என்ஜாய் பண்றீங்களா? இனி எப்படிப் பண்றீங்கன்னு பார்க்கிறேன்” என்றபடி வீட்டினுள் செல்ல,
“எவள்லே இவா? சொல்லச்சொல்ல கேக்காம உள்ள வாரா. ஏய்யா! இங்கன வந்து பாரும். எவளோ ஒருத்தி நடு வீட்டுல நின்னுட்டு நாட்டாமை பண்ணுறா?” என்று கணவனுக்கு வார்த்தைத் தூதனுப்பினார்.
“ஏன்லே கத்திட்டே இருக்கா? விடிஞ்சதுல இருந்து அடையுற வரைக்கும் ஒரே கத்துதான். அதத் தவித்து ஒண்ணுந் தெரியாது” என்றபடி வந்த மூர்த்தியையும் விடாது, “ஹாய் தாத்தா! இந்த பாட்டி வெரி பேட்” என்று கைபிடித்து, “உங்க ரொமான்ஸ்கு நடுவுல நான் வந்துட்டேன்னு பொறாமையில பொங்குறாங்க” என்றாள் சிரிப்பை அடக்கி.
அவளின் ரொமான்ஸ்கு அர்த்தம் தெரியாதவர்கள், “அதென்னமா டொமாசு?” என்றார் அப்பாவியாய்.
சட்டென்று சிரித்தவள், “அது டொமாசு இல்ல தாத்தா. ரொமான்ஸ்.”
“சரி அந்தக் கழுதையத்தான் சொல்லேன் கேப்போம்” என்றார்.
ரொமான்ஸுக்கு தமிழின் அர்த்தம் புரியாமல் விழித்து, ‘இது கூடத்தெரியாம ஆலங்குளம் பொண்ணுன்னு பெருமை வேற அடிக்கிறேன். யோசி யோசி’ என மூளையை விரட்டி, “ஹான்! தனியா இருக்கிற ஜோடிங்க ஒருத்தரையொருத்தர் பார்வையிலேயே புரிஞ்சிக்கிறது. தெளிவா சொல்லணும்னா காதல் பண்றாங்கள்ல அது” என்று விளக்கி, ‘ஷப்பா ஒருவழியா சொல்லிட்டேன்’ என ஆசுவாச மூச்சுவிட்டாள்.
“ஐய என்னல நீ? இப்புடி பேசுத?” என வெட்கப்பட்ட பாட்டியை, தன்னுடன் சேர்ந்து தாத்தாவும் ரசிக்க, “இப்ப உங்களைத் தாத்தா ரசிக்கிறாங்கள்ல. அதான் ரொமான்ஸ்” என்று பாட்டியிடம் கூறினாள்.
அதில் வெட்கத்தில் பாட்டி தலைகவிழ்ந்து பின் நிமிர்ந்து, “ஆமா. யாரு மவ நீ? எங்கள எப்படித் தெரியும்?”
“என்னை இன்னுமா தெரியல? என்னை நல்லா பாருங்க” என்று சிரித்தபடி நின்றவளை, சில வினாடிகள் கூர்ந்து கவனித்தவர்கள், “பாப்பா!” என ஆச்சர்யமாய் அதிசயித்து, “என் பேத்தியாலே நீ. ஐயோ! ஒன்னைய அடையாளம் தெரியாம போயிட்டோமேல. குழந்தையில ஒன்ன பாத்தது” என கண்கலங்கி, “எங்களால நம்பவே முடியலை. எப்புடிலா இருக்கா? அப்படியே எங்கய்யாவப் பாத்தமாதிரி இருக்கு. என்னமா வளந்துட்ட நீ. ஆயுசுக்கும் நல்லாயிருக்கணும்லே. எங்களாலதான் அன்னைக்கு...”
பாட்டியின் வாய்மூடி கண்ணீர் துடைத்து, “அதான் நான் வந்துட்டேன்ல. இனிமேல் அதை நினைக்கக்கூடாது.”
“ஏய் ராசம்மா! எதுக்கு வராது வந்த புள்ளகிட்ட கண்ணக் கசக்கிட்டு நிக்கா. போ போயி பாப்பாக்கு காப்பித்தண்ணி எதாவது தா” என்று மனைவியை விரட்டியவர், “உக்காரு பாப்பா” என்றார்.
சில வினாடிகளில் அவளருகில் வந்த பாட்டி பேத்தியின் கைபற்றி வெளியே இழுத்து வந்து விட்டுவிட, அவரின் செயலில் பயந்து, “பாட்டி” என அலறி கண்களில் நீர் கோர்க்க நிற்க, அடுத்து அவர் எடுத்த ஆரத்தியில் சந்தோஷத்தில் கண்கள் மிதந்தது.
உப்பு மிளகாய் சுற்றி அடுப்பில் போட அது வெடிக்காமல் இருப்பதைப் பார்த்து, “பாருங்கப்பு புள்ள மேல எம்புட்டு திருஷ்டினு.” வாய் புலம்பலுடன் அடுப்படி சென்று பால்காப்பியுடன் வர, அதை மறுக்காமல் வாங்கிக் குடித்து, அருகிலமர்த்தி பாட்டியின் தோள்சாய்ந்து, தாத்தாவின் கைபிடித்துக் கொண்டாள்.
நீண்ட பல வருடங்கள் கழித்து வந்த தன் சொந்தத்தை, தன்னுள்ளே வைத்துக்கொள்வது போல் பிடித்துக்கொண்டார் ராசம்மாள்.
“ரெண்டு பேரும் தனியாவா இருக்கீங்க? தெரிஞ்சிருந்தா நான் என்னோடவே வச்சிருப்பேன் தாத்தா” என வருத்தப்பட்டவளிடம், “முடிஞ்சதப் போட்டுப் பேசி என்னலே செய்யமுடியும் சொல்லு. நடக்குறதுதான்லே நடக்கும். யாராலயும் எதையும் மாத்தமுடியாது. விதியை மதியால வெல்லலாம்னு வார்த்தைக்கு சொல்ல நல்லாயிருக்கும் பாப்பா. ஆனா, என்னைக்குமே விதியை வெல்ல விதியால மட்டும்தான் முடியும். எதையும் போட்டு கொழப்பிக்காம கொஞ்ச நேரம் படுத்து எந்திரி” என்று தத்துவார்த்தமாய் பேசி, “ராசம் புள்ளய மேல கூட்டிட்டுப்போ” என்றார்.
“ஏன் பாட்டி? துணைக்கு ஆளில்லாம எப்படி சமாளிக்கிறீங்க?” என்று நடந்தபடியே கேட்டாள்.
“ஹ்ம்...” என பெருமூச்சிவிட்டவர், “இத்தன காலம் தனியாத்தான்ல இருந்தோம். ஆறு மாசத்துக்கு முன்னாடி பொழைப்புக்குனு புருஷன் பொண்டாட்டி வந்தாக. அப்படியே பக்கத்துல நம்ம பழைய ஓட்டு வீடு இருந்துச்சி. அவியளுக்கு வாடகைக்கு விட்டேன். பழகுறதுக்கு நல்ல புள்ளைக. நமக்கும் யாரும் இல்லன்னதும் கொஞ்சம் பாசம் ஜாஸ்தி. எங்களுக்கு ஒண்ணுன்னா துடிக்கிதுங்க புள்ளைங்க. இதுபோதும்னு இருந்துட்டோம்.”
“செலவுக்கெல்லாம் என்ன பண்றீங்க பாட்டி?”
“நல்லா கேட்ட போ. இதை எம்புள்ள கேட்டான். உன்னைத் தொலைச்சிருவான். அவன் இருக்கும் போது எங்களுக்கு என்ன ராசா வீட்டுப் புள்ளைய மாதிரி இருக்கோம். பத்தாததுக்கு உங்கம்மாளும் பணம் அனுப்புறா. ரெண்டு பேரும் அங்கன வரச்சொல்லி அலுத்துப் போயிட்டாவ. என்ன பண்றது வயசானதும் சொந்த மண்ணை விட்டுப்போக மனசேயில்லை. இதான்ல ஒன் ரூமு. அப்பவே பொண்டாட்டிக்காக எல்லாம் உள்ளயே வச்சிக் கட்டிப்புட்டான் உங்கப்பன். ரெண்டு பேரும் வாழ்ந்த இடம் பாப்பா. நீயும் இங்கனயே தங்கிக்க. நான் காலைக்கு சாப்பாடு செய்றேன்” என்று கீழே சென்றார்.
தன் தாய், தகப்பன் வாழ்ந்த அறை என்றதுமே கண்கலங்கியது. ஏன் எதற்கென்று சொல்லத் தெரியவில்லை அவளுக்கு.
ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட்டு முடித்து அமர்ந்திருந்த பேத்தியிடம், “செல்லையா தாத்தாவ பாக்கப் போகலையாலே?” என்றதும்,
“யாரு செல்லையா?” என கேட்டாள்.
“கெட்டது போ. என்னலே நீ? உங்கப்பனப் பெத்தவன்.”
“ஓ... சாரி பாட்டி. பெயர் தெரியாதுல்ல. அதான் குழம்பிட்டேன். கண்டிப்பா அவங்களையும் பார்க்கணும். எப்ப போகலாம்?”
“வெயில் தாள போகலாம். இப்ப போனா வெயில்ல வெந்து போயிருவோம்” என்றார்.
“உங்க நிறைய வார்த்தைகள் புரியல பாட்டி. ஆனா, இழுத்துப் பேசுற உங்க பாஷை எனக்குப் பிடிச்சிருக்கு.”
“பிடிக்காம போனாத்தான்லே தப்பு” என்றார் உன் இரத்தத்தில் ஊறிய மொழியாகிற்றே என்ற அர்த்தத்தில்.
மாலையில் தாத்தாவுடன் கிளம்பி அருகிலுள்ள நல்லூருக்குச் சென்று, செல்லையாவையும் பார்த்து பாசமழை பொழிந்து, சில விஷயங்களுக்கு கோவப்பட்டு திரும்பி வீட்டிற்கு வர இரவானது.
இரவு வீட்டிற்குள் நுழைய, “இதோ என் பேத்தி வந்துட்டாயா?” என்றார்.
அங்கு அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. ‘தான் காண்பது கனவா! நனவா!’ என்றிருந்தது. அவர்கள், ‘ஹாய்’ சொல்லுமுன் சந்தோஷத்தில், “ஹாய்! ஜெகன் அன்ட் ராஜி!” என்ற அழைப்புடன் அவர்கள் எதிரிலுள்ள கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தாள் பாகீரதி.
ஆம். பாகீரதிதான். சில உறவுகளைக் காண, சில உறவுகளிடம் சிலவற்றைப் புரியவைக்க, தாயிடமும், கணவனிடமும் கூட சொல்லாது வந்திருந்தாள் தகப்பன் ராமகிருஷ்ணனின் உதவியுடன்.
எதிரிலிருந்தவர்கள் முழிப்பதைப் பார்த்தவள், “என்னடா இப்பத்தான் முதல்முறையா பார்க்கிற பொண்ணு நம்ம பெயர் சொல்லுதேன்னு பார்க்கறீங்களா? ஆனா, நான் உங்களை ரெண்டரை வருஷம் முன்னாடி பார்த்திருக்கேன்.” அவர்களின் அதிர்ச்சி முகம் பார்த்து, “எங்கன்னு யோசிக்கிறீங்களா? திருமலையில்” என்றாள்.
“ஒரு டைம் பார்த்த எங்களை எப்படி அடையாளம் தெரிஞ்சது? அதுவும் அத்தனை ஜனங்கள் இருந்த கூட்டத்துல?”
“லட்சம் பேருக்கு நடுவுல நீங்க ரெண்டுபேரும் நின்றிருந்தாலும் கண்டுபிடிச்சிருவேன். என் வாழ்க்கையில ஒருத்தருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்னா, அது உங்களுக்கு மட்டும்தான்” என்றாள் மனதார.
“‘நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலங்க?” என்றார்கள் இருவரும்.
“என் வாழ்க்கையில நடக்கவிருந்த அசம்பாவிதத்தை, நீங்க ராஜிக்கு பண்ணின அட்வைஸை கேட்டதாலதான் திருத்திக்கிட்டேன். அந்த டைம் உங்களைப் பார்க்காமல் போயிருந்தேன்னா, நான் என்னவாகிருப்பேன்னு எனக்கே தெரியாது. எப்படியாவது ஒரு டைம் உங்களை மீட் பண்ணி நன்றி சொல்லணும். அடுத்து உங்க மேரேஜ் நடந்துதா தெரிஞ்சிக்கணும்னு ஆசை.”
என்ன காரணம் என்பது புரிந்ததும் வெளிக்காட்டாமல், “சாரி எங்களுக்கு என்ன பேசினோம்னு நினைவில்லை. இருந்தாலும் நன்றி சொல்றதுக்கு எல்லாம் சென்னையிலிருந்து ஆலங்குளம் தேடி வந்திருக்க வேண்டாம்” என்றான் கிண்டலாக.
“ஹல்ல்லோ! ப்ரதர்! என்ன நக்கலா? எங்க வீட்டு ஓல்ட்ஸ் எல்லாம் இந்த ஏரியாவிட்டு வரமாட்டேன்னு ஒரே பிடிவாதமாம். அதான் அந்த மூஞ்சிகளை நாமளும் பார்த்துட்டு, அப்படியே கொஞ்சநாள் இருந்துட்டு வருவோமேன்னு வந்தோம். முதல்ல தூக்கிடலாம்னுதான் ப்ளான் போட்டேன். ஆனா, பாருங்க நாலுபேரைத் தூக்குற அளவுக்கு என்கிட்ட பலம் இல்ல. சோ, ப்ளான் சேஞ்ச் பண்ணிட்டேன்” என பதிலுரைத்து, “என்ன உங்க மிஸஸ் பேசமாட்டாங்களா?” என்றாள் அதே கேலியுடன்.
“பேசாம இருக்கிறது வரை நல்லதுன்னு நினைச்சிக்கோங்க சிஸ்டர். ஆரம்பிச்சா நிறுத்தமாட்டா” என்ற கணவனை கைமுட்டியால் இடித்து, “இவங்க இப்படித்தான்கா. என் காலை வாருரதே வேலையா வச்சிருக்காங்க.”
“அச்சோ ப்ரதர்! அப்ப நீங்க ரெண்டுபேரும் வேற வேலைக்குப் போகலையா? காலை வாரிட்டே இருந்தா சம்பளம் தர்றாங்களா? யார் தர்றாங்கன்னு சொல்லுங்க. நானும் ஒருத்தரை ரொம்ப வாரணும்” என்று கணவனை எண்ணி சொல்லி அவர்களை கிண்டலடிக்க,
“என்னங்க காதுல ரெத்தம் வருதான்னு பாருங்களேன்” என்ற ராஜியை முறைத்து, “ப்ரதர் உங்க ஒய்ஃப் கொஞ்சம் டேஞ்சரஸ் பெல்லோதான். நான் ஒத்துக்கறேன்” என்று பாகீரதி ஜகா வாங்கினாள்.
சிறியவர்களின் கலாட்டா பேச்சுக்களில் வீடே புதிதாகத் தெரிய, பெரியவர்களும் மகிழ்ந்தனர்.