- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
15
“உண்மையைச் சொல்லுங்கப்பா? யார் அந்த லேடி?”
நெற்றியில் முடிச்சுடன், “வாட் டூ யூ மீன்?” என்றார்.
“ஐ மீன், அந்த லேடி அங்கதான இருக்காங்க” என்று மருத்துவமனையைக் காண்பித்தாள்.
“அம்மு உனக்கெப்படி தெரியும்?” என்றவருக்கு பிரச்சனையின் விபரீதம் புரிய, நிறுவனப் பிரச்சனையிலும், பாரதியின் பிரச்சனையிலும் உழன்றிருந்த மனம் சோர்ந்து போக, கண்ணைக் கட்டியது அவருக்கு. “பாரதியை உனக்கெப்படி தெரியும்?” என்றார் வராத குரலில்.
“ம்... தெரியும் ரெண்டு வருஷம் முன்னாடியே. நீங்க, அவங்க, ஒரு பையன், மூணுபேரும் சென்னையில ஒரு மால்ல சுத்துனீங்கள்ல. அப்ப தெரியும்” என்றாள் கோவம் குறையாது.
தன்னை இன்னொரு குடும்பத்துடன் பார்த்தேன் என்றதும், “ரதிமாஆஆ...” என்றார் பயந்த குரலில்.
“ஆமா ரதிதான். அதை உங்ககிட்ட நேர்ல கேட்க தைரியமில்லாமல்தான், யாரையாவது கல்யாணம் பண்ணினா வீட்டைவிட்டுப் போயிரலாம்னு போயிட்டேன். கடைசி நேரத்துல அது தப்புன்னு தோணினதால திரும்ப வந்துட்டேன்.”
மகள் இப்படியொரு குண்டைத் தூக்கிப்போடுவாள் என்று அறிந்திராத அந்த தகப்பனிற்கு அதிர்ச்சி. தன்னைக் காரணமாக வைத்து இரண்டு வருடம் முன்பே திருமணம் செய்யப் போயிருக்கிறாள் என நினைக்கும்போதே, அன்று நவீனின் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கேப்டன் என்ற முறையில், சென்னையில் நடந்த தமிழ்நாடு அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அவன் வந்தது மட்டுமில்லாமல், கூடவே தன் தாயையும் அழைத்து வந்து, ‘உங்களைப் பார்க்கணும் போலயிருக்குப்பா’ என்றதும் மறுக்க மனமில்லாமல் சென்றதும் நினைவு வந்தது. தன் வாழ்நாளிலே அன்றுதான் பாரதி சென்னை வந்தது. அன்றே மகளின் கண்ணில் பட்டிருக்கிறோம். அங்கு செல்வதற்கு முன் பெரிய மகனின் எச்சரிக்கை நினைவு வந்தது.
கைமீறிப்போன விஷயத்தை என்னவென்று சொல்வது. அதற்காக தன்னைவிட்டு விலகியிருக்க திருமணம்தான் சரியான வழியென்று அவள் தேர்ந்தெடுத்ததை அவரால் தாங்க முடியவில்லை. கடைசி நேர மனமாற்றம் இல்லாமல் போயிருந்தால், அந்த நினைவே அவருக்கு மரண வலியைக் கொத்தது. அதை மறைத்தபடி, “இ..இது சந்திராவுக்குத் தெரியுமா?” என கேட்டார்.
“ம்... எல்லாருக்கும் தெரியும். ஆனா, என்ன காரணம்னுதான் தெரியாது” என்று விட்டேற்றியாக சொன்னாள்.
‘என்கிட்ட ஏன் சொல்லலை?’ என்ற எண்ணம் அவருக்கு வந்தது.
“அம்மாவை விட அவங்க எந்த வகையிலப்பா உசத்தி?”
‘எல்லா வகையிலும் உசத்திமா.’ மனம் சொன்னது ஊமையாய்.
“நான் உங்களை இந்தளவுக்கு நினைக்கலப்பா. இந்த உலகத்துல எல்லாரையும் விடவும் பெஸ்ட் நீங்கதான்னு பெருமைப்பட்டேன்ப்பா. ஆனா, முடியலைப்பா. என்னை நீங்க ஏமாத்திட்டீங்க. ஐ ஹேட் யூப்பா! ஐ ஹேட் யூ!” என கதறி அழுதவள் நிமிர்ந்து கண்ணீர் துடைத்து, “இனி நீங்க அங்க போகமாட்டீங்க சொல்லிட்டேன்பா. அவங்களும் சரி சொல்லிட்டாங்க” என்றாள்.
“அம்மு பாரதியை நேர்ல பார்த்தியா?” மகள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்க கொஞ்சம் சத்தமாகவே கேட்டார்.
அவரை சற்று அலட்சியமாக பார்த்துவிட்டு, “ஆமா பார்த்தேன்தான். முகூர்த்தத்துக்கு கொஞ்சநேரம் முன்னாடி. எங்கப்பா எனக்கு வேணும் கேட்டேன். உங்கப்பா எப்பவும் உனக்கு மட்டும்தான்னு சொல்லிட்டாங்க. பழகினா நல்லவங்களா தெரியுறாங்க. அப்புறம் எப்படி...?” இரண்டாம் தாரமாக வந்தார் என்பதை முடிக்காமல் முடித்தாள்.
ஒரு கசந்த முறுவல் ஒன்று அவருள் தோன்றியது. ‘ஏன் சொல்லமாட்டா. எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தே பழக்கப்பட்டவளாச்சே! புருஷன், பிள்ளைன்னு!’ நெஞ்சினோரம் எழுந்த வலி மூளையைச் சென்றடைய கண்ணைக்கட்டி வந்ததைப் பிடித்து நிறுத்தியவர், “அம்மு பத்து நிமிஷம் நிதானமா பேசலாமா? இதைக் கூட உன் மேரேஜ் அப்புறம் சொல்றதாதான் இருந்தோம். என்ன நடந்ததுன்னு நீ கட்டாயம் தெரிஞ்சிக்கணும்மா.”
“ஏன்ப்பா? ஏற்கனவே கதை ரெடி பண்ணிட்டீங்களா என்ன?” சற்று ஏளனத்தோடு கேட்டாள்.
“ரதிமா அவ்வளவுதான் என்மேலுள்ள நம்பிக்கையா?”
“உங்க மேலிருந்த நம்பிக்கைதான் மால்ல தூள் தூளா உடைஞ்சிருச்சேப்பா. இருந்தாலும் சரியாகிரும்னு இந்த இரண்டு வருஷமா நினைச்சேன். நேத்து நைட் அவசர அவசரமா அவங்களைப் பார்க்க நீங்க போகும் போதுதான்ப்பா தெரிஞ்சது, என்னோட நம்பிக்கை லெவல் என்னன்னு. நீங்களா இப்படின்னு சுத்தமா உடைஞ்சிட்டேன்ப்பா!” கண்ணில் வழிந்த நீரை துடைக்கக் கூட மனமின்றி, “இது அம்மாவுக்கும், அண்ணனுக்கும் தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு தான், அந்த கஷ்டத்தை அவங்களுக்கு கொடுக்கலை. மொத்தமா நானே தாங்கிக்கிட்டேன். இப்பக்கூட மனசு ரணமா வலிச்சதாலதான் உங்ககிட்ட கேட்கிறேன். ஏன்ப்பா? ஏன்? ஐயோ! என்னால தாங்க முடியலப்பா. அப்படியே செத்துரமாட்டோமான்னு இருக்குப்பா” என்றாள் தலையைப் பிடித்தபடி.
“அம்மூஊஊ...” என அவளின் வாய்பொத்தி, “என்னை வார்த்தையாலயே கொல்றடா. இந்த மாதிரி பேசாதம்மா. நீ...நீ என் தேவதைடா! எனக்கே எனக்காக கடவுள் கொடுத்த குட்டி தேவதை! ஒருமுறை உன்னை மீட்டெடுக்கவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம். இன்னொரு முறை இந்த வார்த்தையை சொல்லாதம்மா. உன்னைவிட எனக்கு இருக்கிற வலியோட அளவு அதிகம்னு உனக்குத் தெரியாது அம்மு.”
“தேவதையைத்தான் எல்லாரும் கஷ்டப்படுத்துவாங்களாப்பா?” என்றாள் மற்றதை கவனிக்காது.
“நான் உன்னைக் கஷ்டப்படுத்துவேன்னு நினைக்கிறியா? இல்லமா. என்னால எந்த நிலையிலும் உன்னைக் கஷ்டப்படுத்த முடியாது.”
“ப்ச்... முன்னாடி இதிலிருந்து தப்பிக்க கல்யாணம்தான் பெஸ்ட்னு நினைச்சேன். இப்ப உங்க இரண்டு குடும்பத்தை பார்த்த பிறகு கல்யாணமே பண்ணிக்ககூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்ப்பா” என்றாள் விரக்தியாய்.
‘என்னம்மா இப்படியெல்லாம் பேசுற? உன்னோட கல்யாணத்துக்காகத்தானே இவ்வளவும்’ என்பதை வெளியில் சொல்லாமல், “அம்மு! எனக்கு நீ இப்படி இருக்கிறது பேசுறது பிடிக்கல. நான் உனக்காக எதையும் செய்வேன்மா” என்றார் குரலில் வேதனையைக் காட்டி.
“அப்ப அந்த இல்லீகல் காண்டாக்டை மொத்தமா விட்டுருங்கப்பா” என்றாள் பட்டென்று.
‘இல்லீகலா? ஐயோ!’ என்றிருந்தது அவருக்கு. ’நீ யாருக்காக இத்தனை கஷ்டப்பட்டியோ, அவளே உன்னை என்ன வார்த்தை சொல்லிட்டா பாருமா. இதுவே வேற யாராவதா இருந்தா நடக்கிறதே வேற. ஆனா, என் உயிரான பொண்ணா போயிட்டாளே.’ மகளின் வார்த்தையில் முழுவதும் உடைந்தவர் கண்கள் உடைப்பெடுக்க,
அவரின் பதிலில்லா தன்மையை தவறாகக் கணித்தவள், “உங்களால விடமுடியாதுன்னு தெரியுதுப்பா. இனிமேல் உங்களுக்கு மகள்னு ஒருத்தி இல்லவே இல்லைன்னு நினைச்சிக்கோங்கப்பா. நான் வர்றேன். இல்ல போறேன்ப்பா. இனி நீங்க எனக்கு வேண்டவே வேண்டாம்ப்பா!”
கண்கலங்க சென்றவளையே கண்ணீருடன் பார்த்திருந்தவர், “இவ்வளவு வெறுப்புலயும் வார்த்தைக்கு வார்த்தை அப்பா சொல்றியே ரதிமா. எப்படி உன்னை விட்டுட்டுப் போவேன். அப்படிப் போகணும்னா என்னோட உயிர்தான் போகும். நீங்க ரெண்டு பேருமே என்னோட தேவதைகள்மா. ஒருத்தி மனைவியா வந்தவள்னா! நீ மகளாய் வந்தவள்! தேவை எந்தன் தேவதைகள்!” என்றார் உயிர் உருகும் குரலில்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்தது கார் நிறுத்துமிடத்தில் இருந்த ராமின் காரினருகில். ஏற்கனவே ஸ்ரீனிவாசனுக்கு அனைத்தும் தெரியுமாதலால், முந்தின தினம் இருந்த கலகலப்பு இல்லாமலிருக்க, மதன் குழுவுடன் சேர்ந்து அந்த சூழ்நிலையை மாற்ற சின்னச்சின்ன கேலிகள் என ஆரம்பித்து அந்த இடத்தையே கலகலப்பாக்கினான்.
அவ்வப்பொழுது தன் முறைப் பெண்ணையும், முறையில்லாமல் திருட்டுத்தனமாக ரசித்திருக்க, ஒருவித இறுக்கத்துடனே நின்றிருந்தவளின் முகத்திலுள்ள உணர்ச்சிகளை அறியமுடியவில்லை அவனால். திருமணம் முடிந்ததும் ராம் வெளியே செல்ல, அவர் பின்னே பாகீரதியும் செல்வதைப் பார்த்தவன், பின்னாலேயே வந்து கொஞ்சம் தள்ளியே நின்றான். இருவரும் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போலிருந்தது. அவளின் கோபம், தவிப்பு, கெஞ்சல், கண்ணீர் என பார்த்தாலும், அவளால் அதிகம் காயப்படுவது தன் மாமாதான் என்பது தெரிந்தது.
பேசி முடித்து உள்ளே செல்லும்பொழுது, எதிரில் வந்த சந்திராவிற்கு பெண்ணின் அழுகை முகம் தெரிய ஏனென்று விசாரித்தவரிடம், “நான் வெளிநாடு போய் படிக்கலாம்னு இருக்கேன்ம்மா. இங்க இருந்தா அப்பா முகத்துல முழிக்க வேண்டியிருக்கும். அதை நான் விரும்பல எப்பவும்” என்றாள் விட்டேற்றியாக.
“அம்மு என்ன சொல்ற? அப்பா முகத்துல முழிக்கமாட்டியா? என்ன உளறல் இது?” என்றவாரு அவரைப் பார்க்க, கண்களில் தவிப்புடன் மொத்த வேதனையையும் முகத்தில் காட்டி நின்றிருந்தவரைப் பார்த்து மகளிடம் திரும்பி, “என்னடி சொன்ன? பாவம் அவர் முகம் இப்படியிருக்கு? தப்பு பாப்பா” என்று கண்டித்தார்.
“உண்மையைச் சொன்னா முகம் அப்படித்தான் போகும். பாவமா? யாரு அவரா? அட போங்கம்மா” என்று நிற்காமல் உள்ளே சென்றாள்.
மகள் சென்றதும், “ராம் என்னாச்சி? அவ வெளிநாடு போறேன்னு ஏதேதோ உளறிட்டுப் போறா?” என்றபடி சந்திரா வர, அதேநேரம் ஸ்ரீனிவாசனும் அவர்களருகில் வர,
“அவளுக்கு எது தெரிய வேண்டாம்னு இத்தனைக் காலம் மறைச்சோமோ, அது தெரிஞ்சிருச்சி சந்திரா” என்றதும் மற்றவர்கள் முகம் அதிர்ந்தாலும், அவளின் பேச்சினால் வந்த சந்தேகமும் நம்ப வைத்தது. “தெரிஞ்ச நேரமும் தெரிஞ்ச விதமும், அதை அவள் புரிஞ்ச விதமும்தான் சரி கிடையாது” என்றவர் குரல் அடைக்க முகம் வியர்க்க ஆரம்பித்ததும், காரில் அமரவைத்து ஏசி போட்டுவிட்டான் அவரின் மருமகன்.
“எப்படி ராம்? நாம ஜாக்கிரதையாகத்தான இருந்தோம்.”
“அவ பாரதியையும், என்னையும் சேர்த்து ரெண்டு வருஷம் முன்னாடி சென்னை வந்தப்பவே பார்த்திருக்கா சந்திரா. அதோட விளைவு கல்யாணம் பண்ணிக்கப் போனது. இதை நீ என்கிட்ட சொல்லலையே சந்திரா? தெரிஞ்சிருந்தா எதனாலன்னு கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாமே. இப்ப எல்லாமே கைமீறிப் போயிருச்சி. காலையில பாரதியை பார்த்துட்டு வந்திருக்கா. என்ன பேசினாள்னு தெரியல. அவளும் இதுவரை போன் பண்ணிச் சொல்லல. ரொம்ப பேசிட்டா சந்திரா. என்னால தாங்கிக்க முடியல” என்றவரின் முகத்திலுள்ள வேதனை அளவிட முடியாததாக இருந்தது.
“என்னை மன்னிச்சிக்கோங்க ராம் எல்லாத்துக்கும். எனக்கு அவ கல்யாணம் பண்ணிக்க போனது தெரியும். ஆனா, காரணம் நீங்க சொல்லித்தான் தெரியுது. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப் ராம். அவ எடுத்துச் சொன்னா புரிஞ்சிப்பா. நான் பேசுறேன்” என்றார் கவலையாக.
“மாமா கவலைப்படாதீங்க. அவ புரிஞ்சிக்கிற கேரக்டர்தான்” என்றான் தன் பங்கிற்கு.
“இல்ல கோவத்தில் இருக்கும்போது நாம எது பேசினாலும் அது தப்பா, தப்பான அர்த்தத்துலதான் எடுத்துக்கத் தோணும். இந்த உண்மையை ஏத்துக்கமாட்டா. உங்களைப் பார்த்து கல்யாணமே பண்ணிக்கிறதாயில்ல சொல்றா. எனக்கு பயமாயிருக்கு சந்திரா? எதுக்காக இத்தனை வருஷம் காத்திருந்தோமோ, அதையே வேண்டாம்னு சொல்றா. எங்க இப்படியே இருந்திருவாளோ பயமாயிருக்கு” என்றவருக்கு மனம் படபடத்தது.