Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 157
- Thread Author
- #1
பூ உதிரும் தருணங்கள்
எஸ். பர்வின் பானு
அடையாரில் பஸ் பிடித்து கண்ணகி நகர் வந்து சேர்ந்தபோது நேரம் நான்கைத் தாண்டி இருந்தது. நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தார்கள்.வாசலில் இருந்த போகன்வில்லா முகப்பில் பூக்கோலம் போட்டு இருந்தது. இயல்பான நாளாக இருந்தால், நின்று நிதானித்து இதையெல்லாம் ரசித்துவிட்டுத் தான் அங்கிருந்து நகர்ந்திருப்பார்கள் இருவரும். ஆனால் இன்று அப்படி இல்லை… நெஞ்சுப் பகுதியில் ஒரு சிலந்திப்பூச்சி உயிரோடு உலாவுவது போல் இருந்தது, மனசு..!
உள்ளே வந்து சோபாவில் சரிய,தண்ணி எடுத்து வர நகர்ந்த சாரதாவைப் பதறிப் போய் தடுத்தார்.
‘’வேணாம் சாரதா இப்படி உட்காரு..! நான் பார்த்துக்கறேன். உடம்பைப் போட்டு அலட்டிக்காதே…’’ சொல்லும்போதே தொண்டைக்கடியில் ஏதோவொன்று பலமாய்த் தாக்க, மிடறு விழுங்கியவரை விழி விலக்காமல் பார்த்தாள் சாரதா.
‘’ஏன் போக வேண்டாம்னு சொல்றீங்க..? எனக்கு ஒண்ணும் இல்லை..! நான் நல்லாத்தான் இருக்கேன். அடையார் போயிட்டு வர மொத்தமா நாலு மணிநேரம் ஆச்சு..! அதுக்குள்ள பலகீனப்பட்டா போயிடப் போறேன்..!
இருங்க ஹார்லிக்ஸ் கரைச்சுட்டு வந்துடறேன். இந்த பால்கனி விண்டோவைத் கொஞ்சம் திறந்து வைங்க..!வெளிச்சம் வரட்டும் வீட்டுக்குள்ள.ஃபேனை கொஞ்சம் வேகமா வைக்கட்டுமா..?’’
சதாசிவத்தால் நம்பத்தான் இயலவில்லை..!இதயம் நழுவி வயிற்றில் விழுந்து விட்டதுபோல் அவருக்கு இருக்க,சாரதாவோ வெகு இயல்பாக இருந்தாள்.
போகும்போது கடைந்து வைத்துவிட்டுப் போய் இருந்த பருப்பு உசிலியும், சாம்பாரையும் சூடுபடுத்தி எடுத்து டேபிளில் வைத்து இருந்தாள். சிட் அவுட்டில் காயப் போட்டு இருந்த துணிகளை எடுத்து கொண்டு வந்து மடித்து வைத்தாள்.
பவளமல்லிகள் பால்கனியில் எட்டிப் பார்த்து குசலம் விசாரிக்க, அவற்றின் தலையை மென்மையாக வருடித் தந்தாள்.உள்ளே திரும்பி வர, இன்னும் அதே இடத்தில் அமர்ந்திருந்தார் சதாசிவம். பக்கத்தில் வந்து அமர்ந்து மெல்ல அவர் நரைத்த கேசத்தை தடவித் தந்த போது, தரையில் இருந்த பார்வையை பெயர்த்து இலக்கில்லாமல் பதித்தார்.
வறண்ட கரங்களை பற்றியபோது ஜீவனின் மிச்சம் இருந்தது. ரேகைகளுக்கு நடுவே ஒரு பதட்டமான நடுக்கம் தெரிந்தது,
’’என்னாச்சு மாமா..?’’
விசுக்கென நிமிர்ந்து பார்த்தவர் கண்ணில் ஒரு குடம் கண்ணீர் தேங்கிக் கிடக்க, அந்த அழைப்பின் தாக்கத்தில் இருந்து விடுபடாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
வெகு பிரத்யேகமான தருணங்களில் மட்டும் சாரதா அழைக்கும் மாமா’ என்ற அழைப்பு, அவரை என்னவோ செய்தது. திருமணமாகி நாற்பத்தைந்து வருடங்கள் கடந்து போய்விட்டது.
நிறைய சம்பவங்களும், சந்தோசங்களும், மனையறங்களும் நிறைந்த வாழ்க்கை…சின்னச் சின்ன சச்சரவுகள் அவ்வப்போது உண்டு..! ஆனால் எந்த இடத்திலும் அவர்கள் இல்லறம் சறுக்கியதே இல்லை.
மகள் காஞ்சிபுரத்திலும், மகன் கேளம்பாக்கத்திலும் இருந்த போதும் இவர்கள் இங்கிருந்து நகரவில்லை..!தனியாக இருந்தார்கள். அவர்கள் முதுமைக்கு இந்தத் தனிமை ஒருவிதத்தில் இதமாகத்தான் இருந்தது..!இயங்கும் வரைக்கும் எதற்கு தயங்க..:? என்ற கரிசனம் மனதில் இருந்தது.
ஓய்வு காலத்தில் பழைய நினைவுகளை எண்ணி எண்ணி இளைப்பாறும் ஒரு அற்புதத் துணையாக..!
‘’எதுக்கு இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்து இருக்கீங்க..? நாம ரெண்டு பேரும் இங்கேயே இருக்கவா வரம் வாங்கிட்டு வந்திருக்கோம்..? இல்ல அப்படி இருந்துதான் என்ன செய்யப் போறோம்..? பிள்ளைகள் தனித்தனியா செட்டில் ஆகியாச்சு. வெட்டு வெட்டுனு கூரையைப் பார்த்துட்டு உட்கார ஆரம்பிச்சே பதினஞ்சு வருசமாச்சு…’’
சொன்ன மனைவியை ஆதங்கமாகப் பார்த்தார்.
‘’பிள்ளைகளைப் பெறவும் அதுங்களை வளர்த்தி எடுக்கவும் தான் நாம பிறப்பெடுத்ததா சாரதா..?’’
‘’இல்லைதான்..! அதைத் தாண்டியும் வாழ்ந்தாச்சு. தேசாந்திரம் போயிட்டு வந்தாச்சு.கோயில், ஸ்தலம், பண்டிகை விசேசம் ஒண்ணும் பாக்கி இல்லை..! அத்தனைக்கு பிறகும் இனி என்ன இருக்கு இங்கே..?’’ இயல்பான கேள்வி..! ஆனால் எப்படி கேட்க மனசு வரும்..?
பதில் பேசாமல் அமர்ந்திருந்தார். கையைப் பற்றி அழைத்துப் போய் டேபிளில் அமர்த்தி தட்டை எடுத்து முன்னே வைத்தாள். இப்போது மறுபடியும் கண்ணைக் கட்டியது.
‘’பேசாது சாப்பிட்டு கொஞ்சநேரம் படுங்க…! இன்னைக்கு முழுக்க அலைச்சல் உங்களுக்கு. ‘’
சாதத்தைப் போட்டு சாம்பாரை விட, அதைக் கரைத்துக் கொண்டே இருந்தார். மனம் எங்கோ தடுமாறிக் கொண்டு இருந்தது.
‘’பிள்ளைங்களுக்கு சொல்லிடலாமா..? பார்த்திட்ட கேட்டா ஏதாவது ஐடியா வச்சிருப்பான்.வெளிநாடு எங்கயாசசும் போய் காட்டலாமா’னு…’’ அவர் தவிப்பின் மொத்த வலுவையும் வார்த்தைகளின் வழி சொல்லிவிடும் முஸ்தீபில் இருப்பது தெரிந்தது.
‘’சொல்லலாம். இப்ப சாப்பிடுங்க. சாயங்காலம் ஆபிசில் இருந்து வரட்டும், அப்புறம் சொல்லிக்கலாம். எதுக்கு அவனையும் பதட்டம் பண்ணிட்டு..! ‘’
அவரால் இயலவில்லை. ஒவ்வொரு முறை கண்கள் படபடத்து பிரியும் போதும், இனம் புரியாத பதட்டம், ஒரு பரிதவிப்பு.பூமிப் பந்து முழுக்க தனியாளாய் சுமப்பது போல் அழுத்தம் கண்களை மிரட்டியது.
சாப்பிடாமல் எடுத்துக் கொண்டு போய் போட்டு விட்டு வந்தார். இனிமேல் இந்தச் சாப்பாடு கிடைக்குமா’ என்ற சிந்தனை வந்தபோது குப்பென்று வேர்க்க, அத்துவான மதியத்தின் காகத்தின் அலறல் மிரட்டலாய் காதைக் கொத்தியது.
மாலையில் பார்த்திபனுக்கு அழைத்துச் சொன்னபோது சில நிமிசத் துளிகள் எதிர்முனையில் மெளனம் தாக்கி இருந்தது.
‘’நான் ஏற்கனவே சந்தேகப்பட்டேன்,சரியாகிடுச்சுப்பா..! யூட்ரஸ்ல இருந்து ப்ளாடர் முழுக்க பரவி இருக்கு. அதான் உதிரப்போக்கு இருக்கு. இப்ப என்ன பண்றது..?’’ அவன் எதிர்கேள்வி கேட்க பதிலற்று அமைதியாக இருந்தார். ஒற்றை நூலில் தொங்கிக் கொண்டிருந்த நம்பிக்கையும் அறுந்து போக, மனம் அமைதியிழந்து தவித்தது.
‘’நீதான் பார்த்தி சொல்லணும்..! எனக்கு மதியத்துல இருந்து உலகமே சுத்தல… நின்ன இடத்துலயே நிற்கிறேன்..! ‘’
‘’எத்தனை வயசாகுது அம்மாக்கு..?’’
‘’எழுபத்தி மூணு நடக்குது. இதெல்லாம் ஒரு வயசா..?’’ அவருடைய அன்பு தொண்ணூற்றி நாலானாலும் இதையேதான் சொல்லும் என்று பார்த்திக்கும் தெரியும்.
‘’நாளைக்கு நான் வர்றேன்பா..!’’ அடுத்தென்ன பேசுவது என்றறியாமல் தடுமாறினான்.
‘’அம்மாகிட்ட பேசுறியா..?‘’
‘’இல்ல நாளைக்கு வந்து பேசிக்கிறேன்…’’வைத்துவிட்டான்.
நாளைக்கு வந்தபோது இன்னும் இன்றைவிட திடமாக பேசியது போல் இருந்தது சதாசிவத்துக்கு.
‘’டாக்டர்கிட்டே நிறைய விசாரிச்சுட்டேன். இதுக்குமேல ட்ரீட்மெண்ட், லேசர் அது இதுன்னு அலைகழிக்க வேண்டாம்னு சொல்றார். அமைதியான வாழ்நாளை குடுங்க. மருந்து மாத்திரையோட எவ்வளவு முடியுமோ அவ்வளவுநாள் நகரட்டும்னு சொல்றார்.’’பார்த்தி அடைத்துப் போன சன்னக் குரலில் சொன்னான்.
வார்த்தைகளை முழுதாய்த் தொலைந்து போய் அமர்ந்திருந்தார் சதாசிவம். அவர் மருந்துக்கு காத்திருந்தால், இங்கே அடுத்தென்ன என்பதிற்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
’’வெளிநாட்டுக்கு எதுவும் கூட்டிட்டு போய் பார்க்க முடியாதா..?’’ குரல் அடைத்துக் கொண்டது.
’’இந்த வயசுக்கு மேல சான்சே இல்லப்பா…’’
கொஞ்சம் அசெளகரியம் அலைக்கழித்தது. பார்த்தி உள்ளே எழுந்து போய் அம்மாவுடன் கொஞ்சம் பேசிக் கொண்டு இருந்தான். முன்னைவிட ஒரு பரபரப்பு சதாசிவத்துக்கு. அவயங்கள் அத்தனையும் செயல் இழந்து உயிர் மட்டும் தங்குவது போன்ற அவஸ்தை.
பார்த்தி முகத்தில் சோகம் இருந்தாலும் இயல்பாகத்தான் இருந்தான்.
‘’ஞாயிற்றுக் கிழமை வரும்போது மீனாவையும் பசங்களையும் கூட்டிட்டு வர்றேன்.ரமாக்கு ஃபோன் பண்ணி இருக்கேன். அவளும் வரட்டும்… என்ன முடிவு செய்யறதுன்னு பார்க்கலாம்…’’ அவன் அடுத்த கட்டத்துக்கு தயாராகி விட்டான். இவரால் தான் அணு அளவும் அசைய முடியவில்லை.!
பார்த்தி கிளம்பும்போது பயமாக இருந்தது. அவர் கண்களின் கலக்கத்தைப் பார்த்து பார்த்தியின் கண்கள் குளமாகி விட்டது.
‘’தைரியமா இருங்கப்பா…’’ என்றான் அவர் கைகளை எடுத்து தன்னுடைய கைகளுக்குள் மறைத்துக் கொண்டு.
மெல்ல தலையாட்டிக் கொண்டார். வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை…
இத்தனை நாள் உணராத தனிமையை உணர்ந்தார். சாரதா இன்னும் அப்படியேதான் இருக்கிறாள்… அப்படி இருந்தும்…
இரவு உறங்க மனசு தவித்தது….உறங்கி விடுவோமோ என்று ஆன்மா பயந்தது…
ஆனால் சாரதா அமைதியும் நிம்மதியுமான மனநிலையில் இருப்பது புரிந்தது. பெருவாரியான நேரம், பாண்டுரங்கனின் துதியிலும் மீதி நேரம், ஏதோ சிந்தனையிலுமே இருந்தாள்.
உடலும், மனசும் பலகீனமாக இல்லை. ஆனால் ஆன்மா அந்திமத்தின் வாயிலில் நின்றாலும் பாண்டுரங்கனின் நிழலில் கலக்க முடியாமல், உயிர் ஏதோ அவஸ்தையில் நெளிவது போல் உணர்ந்தாள். ஆசை இருந்தால் தான் லெளகீகங்களை பற்றிக் கொண்டு ஆன்மா ஆட்டமிடும்… ஆசைகள் எல்லாம் இளமையிலேயே கரைத்து கலந்தாயிற்றே… பிறகென்ன..?
குறையொன்றும் இல்லை… மறைமூர்த்தி கண்ணாதான்… தேவைகளும் ஏக்கங்களும் கனவுகளும் எதுவுமேயில்லை… அப்படி இருந்தும் பாண்டுரங்கனின் பத்மகமலத்தை தீண்ட ஆன்மாவின் நிழல் அஞ்சிக் கொண்டு, எதுவோ தடுக்கிறது…
எழுந்து வெளியில் வர, ஈ,சி சேரில் சாய்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்த சதாசிவத்தைப் பார்த்தபோது இதயத்தில் எதுவோ இடறியது.
‘’ஒரு டம்ளர் காப்பி போட்டுத் தர்றீங்களா..?’’ குரல்கேட்டு வேகமாய் நிமிர்ந்து பார்த்தவர், விதிர்த்துப் போய் எழுந்து நின்றார்.
‘’என்னாச்சு..? புதுசா என்னை கேட்குறே..? முடியலயா..? நான் போய் கடையில வாங்கிட்டு வந்துடவா..?பார்த்திக்கு ஃபோன் பண்ணவா..?’’ அடுக்கடுக்காய் அத்தனையும் கேள்விகள்.
‘’எதுவுமில்லை, கத்துக்கங்க..! ஒருநாளைக்கு நாலுவேளை காப்பி வேணும்… ஆனால் போடத் தெரியாதில்ல..?இனி அப்படி இருந்து என்ன பண்றது..? காப்பி போட, அரிசி களைஞ்சு குக்கரில் வைக்க, பருப்பு தீயாம தீயல் பண்ண, மோர் புளிக்காம மிளகாய் போட்டு வைக்க, இப்படி சின்னச் சின்னதா வேலைகளை கத்துக்கங்க…’’ முகத்தில் முறுவல் மாறாமல் சொல்ல, அவர் நாபிக் கமண்டலத்தில் கேவல் வெடித்தது..!
‘’நான் அழுதும் பார்த்துட்டு போகணும்னு நினைக்கிறியா சாரதா..?’’ என்றார் வெறுமை பொங்க.
பக்கத்தில் வந்து அவர் காலடியில் அமர்ந்து அவர் மடியில் தலை வைத்துக் கொண்டாள் சாரதா. இருவருக்கும் நாற்பத்தைந்து வருடங்கள் கண்முன்னே நொடியில் ஒருசேர விரிந்தது, நான்கு கண்ணில் ஓரே காட்சியாய்.
‘’நியாபகம் இருக்கா சாரதா, முதல்முறையா நீ என் மடியில தலை வச்சு படுத்தது, உன் பெரிய அண்ணியோட தம்பி கல்யாணத்துக்காக சீர்காழி போயிருந்தப்போ…. அப்போ பார்த்தி உன் வயித்தில இருந்தான். பஸ்சில் உனக்கு ஒத்துக்கல; வாமிட் எடுத்து ஓய்ஞ்சிட்டு, மயக்கத்திலே அப்படியே என் மடியில சாய்ஞ்சு படுத்துட்டே, நியாபகம் இருக்கா..?’’
அவர் கேட்டதும் சாரதாவின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.
‘’ஏன் இல்லாம…? பஸ்சில அத்தனை பேர் இருக்கறதையும் மறந்து மடியிலயே தலைசாய்ஞ்சு இருந்ததும், சீர்காழி போய்ச் சேர்ற வரைக்கும் காலை அசைக்காமல் அப்படியே இருந்து மரத்துப் போய் நின்னதையும் எப்படி மறக்க முடியும்…’’
‘’ம் ம்,,! பார்த்தி பிறந்ததும் அந்த சுதந்திரம் எல்லாம் போச்சு. கொஞ்சம் உன்கூட பேசிட்டு இருந்தாலும் அவனுக்கு கோபம் வந்துடும். ரமா மட்டும் என்ன லேசுப்பட்டவளா..?’’
தூசி படர்ந்து கிடந்த வீணையின் நரம்புகளை மெல்ல சுண்டிவிட்டு அதிரவைப்பது போல் அவர்கள் வாழ்ந்த நாட்களை மீட்டிக் கொண்டு இருந்தார்கள். அதற்கு பங்கேற்பாளர்களும் அவர்கள்தான் பார்வையாளர்களும் அவர்கள் தான்..!
சுண்டிய நரம்பின் அதிர்வு அடங்கியதும், சப்தங்கள் ஒடுங்கி ஒரு மயான அமைதி சூழ்ந்து கொண்டது. நிகழ்வின் கணம் அவர் முகத்தில் வெளிச்சத்தில் விழுந்த நிழல் போல் இருந்தது.
‘’ஏதாவது வலிக்குதா சாரதா..?’’ என்ற அவருடைய கேள்விதான் வலித்தது. எதற்கு இத்தனை பரிதவிக்கிறார்’ என்ற சிந்தனை அபத்தமாகத் தோன்ற கண்களை மூடித் திறந்தாள்.