• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

பிரியமுடன் பிரியன் - நர்மதா சுப்ரமணியம்

Joined
Dec 18, 2024
Messages
5
பிரியமுடன் பிரியன்

1000138929.jpg



"எனக்கு நீ வேண்டாம். என்னை விட்டுப் போடா" ஆங்காரமாய்க் கத்தியிருந்தாள் பவித்ரா.


"பைத்தியம் மாதிரி பேசாதடி" அவளுக்கு இணையாக அவளின் கணவன் பிரியனும் கத்த,

இவர்களின் சத்தத்தில் எட்டு மாத குழந்தையான தியா பயந்து வீறிட்டு அழுதாள்.

உடனே அறைக்குள் ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கியவள், "ச்சோ ச்சோ ஒன்னுமில்லடா ஒன்னுமில்ல. பாப்பா பயந்துட்டீங்களா! சும்மா அம்மாவும் அப்பாவும் பேசிட்டு இருந்தோம்டா பட்டுக்குட்டி" கொஞ்சி சமாதானம் செய்தவளாய் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தாள்.

கோபத்துடன் மனைவியை முறைத்தவனாய், "இப்ப என்ன தான் சொல்ற பவித்ரா" என மீண்டுமாய்க் கேட்க,

"அறிவிருக்காடா உனக்கு? குழந்தை முன்னாடி கத்துற" என்றவளாய் குழந்தையைத் தொட்டிலில் போட்டு தூங்க வைத்து விட்டு முகப்பறைக்கு வருவதற்குள் வெளியே சென்றிருந்தான் பிரியன்.

சென்னையில் இவர்களின் வசிப்பிடத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை இருப்பதினால் வழமைச் செயலாய் தனது கோபத்தைத் தணித்துக் கொள்ளக் கடற்கரை நோக்கிச் சென்றிருந்தான்.

அங்கே கடலலையை நோக்கியவனாய் மணலில் அமர்ந்திருந்தவனுக்கு மனத்தைச் சூழ்ந்திருந்தன குழப்பக் கேள்விகள்.

தங்களது இருபத்தைந்தாவது வயதில் பிரியனும் பவித்ராவும் வீட்டை எதிர்த்து மணம் புரிந்து கொண்டனர். ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இடையில் காதல் அரும்ப, பெற்றோர்கள் அதனை எதிர்க்க, நண்பர்கள் உதவியுடன் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பிரியனுக்கு உடன் பிறந்த தம்பியும், பவித்ராவுக்கு உடன் பிறந்த தங்கையும் இருந்தனர். தங்களுக்குப் பின்பு பிறந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் கவலைக்கொள்ளாமல் இவர்கள் எடுத்த முடிவு பெற்றோர்களுக்குப் பெரும் மனவலியைக் கொடுத்திருந்தது. அதனாலேயே குழந்தைப் பிறந்த பின்னும் இவர்கள் மீது கோபம் குறையாமல் ஒதுக்கி வைத்திருக்கின்றனர். பிரியனின் தாய் சிவப்ரியா மட்டும் அவ்வப்போது அவனிடம் பேசிக் கொள்வார்.

கண்களை மூடியவாறு மணலில் படுத்திருந்தவனின் கைப்பேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தான். தாயின் அழைப்பு என்றதும் அழைப்பெடுத்துப் பேசினான்.

"எங்கடா இருக்க?" என்றவர் கேட்டதும்,

"பீச்ல இருக்கேன்மா" என்றான்.

"ஓ பொண்டாட்டி பிள்ளையோட பீச்சுக்குப் போயிருக்கியா?" எனக் கேட்டார்.

"இல்லம்மா! அவளும் பாப்பாவும் வீட்டுல இருக்காங்க. நான் மட்டும் தான் வந்தேன்"

"என்னது அவங்களைத் தனியா விட்டுட்டு வந்தியா? அறிவு இருக்காடா உனக்கு?" மனைவி சொன்ன அதே வாக்கியத்தைச் சொல்லி தாயும் கத்தவும்,

"ஆமா எனக்கு அறிவு இல்லை. நான் முட்டாள் தான். மூளை இல்லாத முட்டாள் பிள்ளையைத் தான் நீ பெத்து வச்சிருக்க. சந்தோஷமா உனக்கு" அத்தனை ஆத்திரத்துடன் உரைத்திருந்தான்.

அவனின் பதிலில் இவரின் பெற்ற வயிற்றில் சுருக்கெனக் குத்த, "ஏன்டா இப்படிப் பேசுற! நான் சும்மா சாதாரணமா தான்டா சொன்னேன்" என்றார்.

"பின்னே பெத்த அம்மாவும் கட்டின பொண்டாட்டியும் அறிவிருக்கா உனக்குனு திட்டினா மனுஷனுக்கு எப்படி இருக்குமாம்" என்று கோபத்துடன் கேட்டிருந்தான்.

மகனின் கூற்றில் அவனது இல்வாழ்வில் ஏதும் பிரச்சினையோ எனக் கலங்கியவராய், "என்னடா எதுவும் சண்டையா அவ கூட" எனக் கேட்டார்.

இது வரை தங்களது வாழ்வில் நிகழ்ந்தவை எதையும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளாது இருந்தவன், மனத்தை அழுத்திய பாரத்தைத் தாங்கவியலாது இன்று தாயிடம் உரைத்திருந்தான்.

"ம்ப்ச் என்ன பிரச்சினைனே தெரியலைம்மா. சும்மாவே கத்துறா! பாப்பா பிறந்ததுலருந்து எனக்குத் தூக்கமே இல்லமா. பகல் முழுக்க அவ தனியா பாப்பாவை கவனிச்சிக்கிறனால நைட் முழுக்க நானும் அவக்கூட முழுச்சிட்டு இருப்பேன். எனக்கும் ரிலாக்ஸேஷன் வேணும் தானேமா. எனக்கு ஞாயித்துக் கிழமை மட்டும் தான் லீவ்! இன்னிக்கு எனக்குப் பிடிச்ச வெப் சிரீஸ் பார்த்துட்டு இருந்தேன். அது அவளுக்குச் சுத்தமா பிடிக்கலை. அவளுக்குப் பிடிக்காததை நான் பார்க்கிறேன்னு சண்டை போடுறா! வாரத்துல ஆறு நாளும் ஓடி உழைக்கிறவன் ஒரு நாள் எனக்குப் பிடிச்சதை செஞ்சா இவளுக்குக் கோபம் வருது. என்னை விட்டு போய்டுனு கத்துறா? குழந்தை பிறந்ததுலருந்தே இப்படித் தான் இருக்காமா. இவளுக்கு என்ன ஆச்சுனே புரியலை" என்று புலம்பினான் பிரியன்.

"எங்க பேச்சைக் கேட்டிருந்தா இப்படிக் கொடுமைக்கார பொண்டாட்டிக்கிட்ட நீ இடிபடுற நிலைமை வந்திருக்குமா... இவ வேண்டாம் உனக்குனு சொன்னேனே கேட்டியா?" என்று சிவப்ரியா தொடங்கவும், அவனுக்குள் கோபம் எரிமலையாய் பொங்க,

"ஆத்தா மாரியாத்தா தெரியாம உன்கிட்ட புலம்பிட்டேன். உன்கிட்ட பேசுறதுக்கு என் பொண்டாட்டியே பரவாயில்லைனு என்னைப் புலம்ப விட்டுடாதமா" என்றவனாய் அழைப்பைத் துண்டித்தான்.

தன்னைச் சமன் செய்தவனாய் திரும்பவும் வீட்டிற்குச் சென்றவன் அவளிடம் பேசாது முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே சுற்றினான். பவித்ராவும் அவனிடம் பேசாது கோபமாகவே அன்றைய நாளை கடத்தியிருந்தாள்.

மறுநாள் காலை குழந்தையைக் கட்டிலில் படுக்க வைத்து சுற்றி தலையணையை வைத்து விட்டு சமையல் வேலையைப் பவித்ரா செய்து கொண்டிருக்க, குழந்தையைத் தனது பார்வையில் வைத்துக் கொண்டே அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் பிரியன்.

அச்சமயம் வாசலில் அழைப்பொலிக் கேட்டு கதவைத் திறந்தவன் அங்கு நின்றிருந்த அன்னையைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.

திருமணமான நாளிலிருந்து இன்று வரை, குழந்தை பிறந்த சமயம் கூட வராது இருந்த தாய் இன்று தனது வீட்டிற்கு வந்திருப்பதைப் பார்த்து மகிழ்வதற்குப் பதிலாகப் பயம் தான் மேலோங்கியது அவனுக்கு.

'அய்யய்யோ ஏற்கனவே அவ கோபத்துல இருக்காளே இதுல இவங்களும் வந்து கொடுமைக்கார பொண்டாட்டினுலாம் சொன்னா எனக்கு டைவர்ஸ் கொடுத்துடுவாளே என் பொண்டாட்டி' என மனத்திற்குள் அலறினான்.

"ம்மாஅஅஅஅ... என்னம்மா திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்திருக்க! நீ மட்டும் தான் வந்திருக்கியா? அப்பா தம்பிலாம் வரலையா? " அதிர்ந்த பார்வையும் சிரித்த முகமாய்க் கேட்ட மகனை முறைத்தவராய்,

"ஏன்டா உன் அப்பா தம்பிலாம் இல்லாம வந்தா என்னை வீட்டுக்குள்ள விட மாட்டியா நீ?" என்றவர் அவனைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்குள்ளே சென்றார்.

வீட்டிற்குள் எங்கு நின்று பேசினாலும் அனைத்து அறைகளிலும் கேட்கும் விதமாய் அமைக்கப்பெற்ற அந்த வீட்டில், கணவனின் பேச்சுச் சத்தம் கேட்டு சமையலறையின் வாசலில் நின்று எட்டிப் பார்த்தாள் பவித்ரா. இது வரை ஒளிப்படத்தில் மட்டுமே பார்த்திருந்த மாமியாரை முதல் முறையாக நேரில் பார்த்ததில் என்ன செய்வதென்று புரியாத நிலை அவளுக்கு.

"வாங்க அத்தை" பதட்டத்தை மறைத்து சிரித்த முகமாய் வரவேற்றாள்.

அவசரமாக ஒரு சொம்பு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவளை மெச்சுதல் பார்வையுடன் பார்த்தவராய் வாங்கி அருந்தியவர், "நல்லாயிருக்கியாமா?" எனக் கேட்டார்.

"நல்லா இருக்கேன் அத்தை" என்றவள், "அவருக்கு லன்ச் கட்டனும். பாதிலேயே விட்டுட்டு வந்துட்டேன்" என்றவளாய் சமையலறைக்குள் நுழைந்து கொள்ள,

'இப்ப எதுக்காக அம்மா வந்திருக்காங்க' எனச் சிந்தித்தவனாய் அன்னையைப் பார்த்திருந்தான் பிரியன்.

"என்னடா திருதிருனு முழிச்சிட்டு என்னைய பார்த்துட்டு இருக்க! ஆபிஸூக்கு நேரமாகலையா உனக்கு! போய்க் கிளம்பு! நான் இன்னும் ரெண்டு நாளைக்கு இங்கே தான் இருப்பேன். ஆபிஸ் போய்ட்டு வந்து பொறுமையா என்னை ரசிக்கலாம்" என்றவராய் அவனுடனேயே உள்ளே சென்றவர், குழந்தையைக் கண்டு ஆனந்த கண்ணீர் மல்க தூக்கிக் கொஞ்சினார்.

"இவ்வளோ பாசம் வச்சிட்டு ஏன்மா குழந்தை பிறந்தப்ப கூட வராம இருந்துட்ட?" என்றவன் கேட்டதற்கு, "அப்ப ஒரு விதமான கோபம். எப்படியோ என் பையன் சந்தோஷமா இருக்கான்னு இருந்துட்டேன். ஆனா நேத்து நீ இந்தக் கொடுமைக்காரிக்கிட்ட படுற கஷ்டத்தைக் கேட்டப் பிறகு எனக்குத் தூக்கமே வரலைடா. அதான் காலைலயே உன் அப்பாகிட்டயும் தம்பிகிட்டயும் ரெண்டு நாள் சமாளிச்சிக்கோங்கனு சொல்லிட்டு வந்துட்டேன். இனி எப்படி என் முன்னாடி உன்னை இவ கொடுமைப்படுத்துறானு பார்த்துடுறேன்" என்றவர் அதட்டலாய் சொல்லும் போதே, 'அய்யோ அம்மா வாயை மூடு! அவளுக்குக் கேட்கப் போகுது' என்றெண்ணியவனாய் பதட்டத்துடன் நின்றிருக்க, இதை எல்லாம் அறையின் வாசலில் நின்று கேட்டவாறு உக்கிரமாய் அவனை முறைத்திருந்தாள் பவித்ரா.

"அம்மாஆஆஆ" என்று பற்களைக் கடித்தவாறு தாயை அவன் முறைக்க, "என்னை ஏன்டா முறைக்கிற? நான் உண்மையைத் தானே சொன்னேன். நான் ஏன் உன் பொண்டாட்டியைப்‌ பார்த்துப் பயப்படனும்" என்றவர் கேட்டதில்,

'நீயாச்சு உன் மருமகளாச்சு' என்றவனாய் அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றிருந்தான் பிரியன்.
 
Last edited:
Joined
Dec 18, 2024
Messages
5
அன்றைய நாள் முழுவதும் குழந்தையைக் கவனித்துக் கொண்ட சிவப்ரியா, பவித்ராவிற்கு முழு ஓய்வு கொடுத்திருந்தார். குழந்தை அழும் நேரங்களிலும் அவள் உணவு உண்ணும் நேரங்களில் மட்டுமே அவளை எழுப்பியவர், மற்ற நேரங்களில் அவளை உறங்க விட்டார்.

அன்று மாலை தேநீர் அருந்துவதற்காக அவளை அவர் எழுப்பும் போது, காலையில் அவர் மேல் இருந்த எரிச்சலும் கோபமும் பாதியளவு குறைந்திருந்தது பவித்ராவிற்கு.

அன்றிரவு பவித்ரா மற்றும் குழந்தை தியாவுடன் தான் தங்கிக் கொள்வதாக உரைத்தவர், மகனை வேறொரு அறையில் உறங்குமாறு அனுப்பி விட்டார்.

எவ்விதத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக உறங்கியவன், மறுநாள் காலை அத்தனை புத்துணர்வுடன் எழுந்தான்.

காலையில் பவித்ரா சமையல் செய்து கொண்டிருக்க, குழந்தையுடன் விளையாடியவாறு இருந்தார் சிவப்ரியா.

குளித்து முடித்து அலுவலகத்திற்குக் கிளம்பி கொண்டிருந்த மகனைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த சிவப்ரியா, "இன்னிக்குச் சாயங்காலம் மருமகளை எங்கேயாவது கூட்டிட்டுப் போடா! பாப்பாவைப் பார்த்துக்கத் தான் நான் இருக்கேனே" என்றார்‌.

"ம்மாஅஅஅ ஏற்கனவே நீ செஞ்சி வச்சிருக்க வேலைக்கு அவ என்கிட்ட எப்படிலாம் சண்டைப் போடுவாளோனு நான் பயந்துட்டு இருக்கேன். இதுல தனியா கூட்டிட்டு போய் அடி வாங்க சொல்றியா நீ" என்றவனாய் அன்னையை முறைத்தான்.

"பொண்டாட்டிக்கிட்ட கௌரவம் பார்த்தீனா வாழ்க்கைல பொழைக்க முடியாது மவனே!" என்று உரைத்த தாயை புரியாத பார்வையுடன் அவன் நோக்க,

"நாள் முழுக்க யார்க்கிட்டயும் பேசாம மௌன விரதம் மாதிரி இருந்திருக்கிறியாடா நீ?" எனக் கேட்டார்.

"நான் ஏன்மா ஆபிஸ்ல மௌன விரதம் இருக்கப் போறேன்" என்றான்.

"இங்கே வாழுற பல இல்லத்தரசிகளுக்கு இந்த மௌன விரதம் பழகிப் போன ஒன்னுடா. நாள்‌ முழுக்க வீட்டு வேலைப் பார்த்துட்டு யார்கிட்டயும் பேசாம இருக்கிறவங்களுக்கு ஆறுதலே சாயங்காலம் வீட்டுக்கு வர்ற புருஷன்கிட்ட அவங்க பேசுற பேச்சு தான். நேத்து தான் நான் பார்த்தேனா நீ பாட்டுக்கு போற வர்ற! உன் பொண்ணைக் கொஞ்சு கொஞ்சுனு கொஞ்சுற! உன் பொண்டாட்டிக்கிட்ட என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை பேச மாட்டேங்கிற!"

"ம்மாஅஅஅ அவ சண்டைப் போடுவாமா..." என்று அவன் தொடங்கவும்,

"சண்டைப் போட்டா நீயும் நின்னு சண்டைப் போடு! பேசு! இல்லனா கோபம் குறையுற வரைக்கும் இங்கேயே அறைக்குள்ள போய் அமைதியா உட்காரு! நீ பாட்டுக்கு வெளியே போனா.. அந்தப் பொண்ணுக்கு எப்படி இருக்கும்? உனக்கு வண்டி இருக்கு ஆம்பிளைங்கிற திமிருல நீ வெளில போய்ட்ட! இதுவே அந்தப் பொண்ணு குழந்தையை விட்டுட்டு அப்படி வெளியே போயிருந்தா அவளை என்ன சொல்லிருப்ப? என்ன பேச்சுலாம் பேசியிருப்ப? அப்ப உனக்கொரு நியாயம் அந்தப் பொண்ணுக்கு ஒரு நியாயமா?" எனக் கேட்டார்.

மாமியாரின் இந்தப் பேச்சை சமையலறையில் இருந்தவாறு கேட்டிருந்த பவித்ராவின் கண்களை நிறைத்தது கண்ணீர். தன்னிடம் சண்டைப் போடுவதற்காக மாமியார் வந்திருப்பதாக நினைத்திருந்தவள் அவரின் இந்தக் கரிசனமான பேச்சில் நெகிழ்ந்து போனாள்.

அம்மாவின் பேச்சைக் கேட்டவாறு கிளம்பியவன், "ம்ப்ச் அட்வைஸ் செஞ்சி கொல்லாதமா" என்றவனாய் அலுவலகத்திற்குச் சென்றிருந்தான்.

அலுவலகத்தில் கைகள் அதன் போக்கிற்கு வேலைச் செய்திருந்தாலும் தாயின் அந்தப் பேச்சு அவன் மனத்திற்குள் ஓடிக் கொண்டே இருந்தது.

மதியம் பவித்ராவின் எண்ணிற்கு அழைக்கலாமா என்று கைப்பேசியை எடுத்தவன், 'போன்ல எதுவும் திட்டி மூட் அவுட் செஞ்சிட்டாள்னா?' என்று சிந்தித்தவனாய், மாலை ஆறு மணியளவில் கிளம்பி இருக்குமாறு அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான்.

மாலை ஐந்து மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பிய சமயம் கூட அவள் அந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்ததற்கான நீலநிறக் குறியீடு வராமல் இருக்க, சற்று கோபத்துடேனேயே வீட்டிற்கு வந்தவன் உறங்கிக் கொண்டிருந்த பவித்ராவைப் பார்த்து அமைதியானான்.

அவளைப் பார்த்து விட்டுச் சமையலறையில் இருந்த அன்னையிடம் வந்தவனாய், "அவளைக் கிளம்பியிருக்கச் சொல்லி மெசேஜ் செஞ்சிருந்தேன். பார்க்கலை போல அவ?" என்றான்.

"ரெண்டு நாளா உன் பொண்டாட்டி அந்தப் படுக்கையை விட்டு எழுந்திரிக்கலை. இப்படி இருந்தா வீடு எப்படி விளங்கும்" என்றவராய் தேநீரைத் தயாரிக்க,

"பாவம்மா அவ! குழந்தையை வச்சிக்கிட்டு தூங்கவே நேரமில்லாம ரொம்பக் கஷ்டப்படுறா! நீ வந்த பிறகு நேத்து தான் நானே நல்லா தூங்கினேன்னா அவளை நினைச்சு பாரு! தூக்கம் இல்லாத அந்த எரிச்சலிலும் அசதியிலும் தான் என்கிட்ட கத்துறானு எனக்குப் புரியுது. நானும் என் கோபத்தைக் காண்பிச்சு அவளைக் கஷ்டப்படுத்திடக் கூடாதுனு தான் வீட்டை விட்டு வெளில போய்டுறது. ஆனா அது கூட அவளைக் கஷ்டப்படுத்தும்னு நீ சொல்லும் போது புரிஞ்சிதுமா" என்ற பிரியனைப் பார்த்த சிவப்ரியா,

"போதும் போதும் ஓவரா பொண்டாட்டிக்கு ஜால்ரா அடிக்காத!" என்றவராய் அவன் கையில் தேநீரைக் கொடுக்க, வாய்விட்டுச் சிரித்தவனாய்,

"என் அம்மா கண்ணுல பொசசிவ் பொங்கி வழியுதே" என்று அவரைக் கேலிச் செய்திருந்தான்.

கணவனின் பேச்சுச் சத்தத்தில் விழித்த பவித்ராவின் கண்களை நிறைத்தது ஆனந்த கண்ணீர்.

அன்று மாலை கணவனும் மனைவியுமாய் வெளியே சென்று விட்டு மகிழ்வுடன் வீட்டிற்கு வந்ததைப் பார்த்த சிவப்ரியா, இனி‌ வரும் நாட்களில் மகனும் மருமகளும் தங்களின் வாழ்வை பிரியமுடன் பார்த்துக் கொள்வார்கள் என்கின்ற நிம்மதியுடன் மறுநாள் காலை தனது வீட்டிற்குக் கிளம்பியிருந்தார்.

-- நர்மதா சுப்ரமணியம்
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
புரிதல் இருந்தால் பிரிதலுக்கு வழியே இல்லை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் நர்மதா 💐 💐 💐
 
Joined
Dec 30, 2024
Messages
2
பிரியமே பிரியமாய் இன்னும் வேண்டும் அதற்குள் முடிந்து விட்டதா என தோன்றும் எழுத்து நடை. ரொம்ப இயல்பா எதார்த்தமான கதை நகர்வு டயலாக் போர்ஷன் நல்லா இருந்தது. இருவரின் மனநிலை மற்றும் அதற்கான தீர்வாக மாமியாரின் வார்த்தைகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
Joined
Dec 18, 2024
Messages
5
பிரியமே பிரியமாய் இன்னும் வேண்டும் அதற்குள் முடிந்து விட்டதா என தோன்றும் எழுத்து நடை. ரொம்ப இயல்பா எதார்த்தமான கதை நகர்வு டயலாக் போர்ஷன் நல்லா இருந்தது. இருவரின் மனநிலை மற்றும் அதற்கான தீர்வாக மாமியாரின் வார்த்தைகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி மா ❤️
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top