• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 5, 2025
Messages
21
பாலைவனத்து முல்லை❣️

பகுதி-3


'எல்லாம் காதல் பண்ணும் பாடு' என்று கதிர்வேலனின் மாற்றதுக்கு உண்டான விடையாக சொன்னாள் ரோஜா.

'என்ன ரோஜா சொல்லுற? காதலா!? ஓ... அப்போ மாமா சார் மீனாவை காதலிக்கிறாரா?'என முல்லை கேட்டாள்.

'இப்போ உனக்கு ஏன் வாத்தியோட கதை,சரி நீ சொல்லு, உன் அப்பாவுக்கு உன் காதல் விவகாரம் தெரிந்தால் அவரு உன்னை இந்த வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைப்பாரா?'என ரோஜா கேட்டதும், 'மாட்டாரு தான்' என்றாள் முல்லை.

'அப்போ என்ன பண்றதா உத்தேசம்!?' என ரோஜா கேட்டதும்,' மாமா தான் சொல்லணும்'என்ற முல்லைக்கு ஜீவானந்தத்தின் சொல்லே வேதவாக்கு.

'மாமானா! எந்த மாமா? உனக்கு தான் நாலு மாமா இருக்காங்களே' என ரோஜா சொல்ல,

'ஜீவானந்தம் மாமாவை தான் சொன்னேன்' என முல்லை காதல் மிளிரும் விழிகளில் சொன்னாள்.

'பெரிய அண்ணன் வாய் மட்டும் தான் பேசும், உன் அப்பாவுக்கு வாத்தி ரைடு தான் சரி, அதனால நீ உன் மாமா சாரை அழைச்சிட்டு போய் உன் அப்பாகிட்ட பேசு' என்றாள் ரோஜா இலைமறை காயாக.

'ஹையோ... அவுகளுக்கு தான் என்னை பிடிக்கவே பிடிக்காதே, அதனால மாமா சார் எனக்காக எல்லாம் பேச மாட்டாரு' என முல்லை சொன்னதும்,

'ஆமா ஆமா இப்போ உன்னை வாத்திக்கு பிடிக்காது தான்' என்றாள் ரோஜா.

அடுப்பணையில் நின்றப்படியே ரோஜாவும் முல்லையும் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் கதிர்வேலனின் அறையில் இருந்து குறட்டை சத்தம் கேட்டது.

'இதோ வாத்தி வண்டியை ஸ்டார்ட் பண்ணிடுது. நீ வா முல்லை நம்ம சாப்பிடலாம்' என ரோஜா வெள்ளி தட்டில் சாப்பாட்டை வைத்து முல்லைக்கு கொடுத்தாள்.

'எனக்கு இப்போ சாப்பாடு வேண்டாம் ரோஜா, மாமா வந்ததும் நான் அவுக கூட சாப்பிடுறேன்' என முல்லை சொன்னதும்,

'ஆம்பளைங்க வெளிய போனால் நம்மள மறந்துடுவாங்க முல்ல, நீ வா நம்ம சாப்பிடலாம்'என ரோஜா வம்படியாக முல்லையை மதிய வேளை உணவை சாப்பிட வைத்தாள்.

பிறந்த கணத்தில் இருந்து தாய் பாசம் என்னவென்று அறியாத ரோஜாவிற்கு பாண்டியன் தான் அப்பா என்றால், ஜீவானந்தம் தான் ரோஜாவின் அன்னை,

ஜீவானந்தத்தை அம்மாவாக பார்க்கும் ரோஜா, தன் இன்னோரு அண்ணன் கதிர்வேலனை மட்டும் பிள்ளையாக பார்த்தாள்.

கதிர்வேலனின் கோவம் அடங்கும் ஒரே இடம் ரோஜாவின் ஒரே ஒரு பார்வை தான்.

ரோஜா ஒரு வார்த்தை சொன்னால் மறுத்து பேசாத கதிர்வேலனின் மது பழக்கத்தை மட்டும் ரோஜாவால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அவரை கட்டுக்குள்க்கொண்டு வர முயற்சி செய்கிறாள் ரோஜா.

மதிய வேளை உணவை முடித்த பிறகு முல்லையும் ரோஜாவும் ஒன்றாய் அமர்ந்து இரண்டு வருட கதையை பேசிக்கொண்டு இருந்தார்கள்.

'ஏன் ரோஜா... மீனாவை கஸ்தூரி சித்தி இங்க இருந்து அடிச்சி அழைச்சிட்டு
போய் இருக்காங்களே! ஏன் மாமா சார் அதைப்பற்றி யாரிடமும் எதையும் கேக்கவே இல்லை' என முல்லை கேட்டதும்,

'வாத்தி கேட்டா மட்டும் கஸ்தூரி அத்த மீனாவை வாத்திக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்குமா!?' என கேட்டாள் ரோஜா.

'ஓ! மீனாவை கஸ்தூரி சித்தி மாமா சாருக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டாங்கன்னு தான் மாமா சார் குடித்து குடித்து உடம்பை கெடுத்துக்குறாரா!' என முல்லை கேட்டதும்,

'எப்படி முல்லை நீ எல்லாமே சரியா தப்பா புரிஞ்சிக்கிற' என கேட்டாள் ரோஜா.

'என்ன சொல்ற! நான் சரின்னு சொல்லுறியா இல்ல தப்புனு சொல்லுறியா?' என முல்லை கேட்டதும்,

'இனி சரி எது, தப்பு எதுன்னு பேசி என்ன ஆகப்போகுது, எல்லாம் விதிப்படி நடக்கட்டும்' என்றாள் ரோஜா.

நேரம் போவதைப் பெரும்பாலும் உணர முடியாத உரையாடலில் இருவரும் மூழ்கியிருந்தார்கள்.

தன் கைகடிகாரத்தில்
மூன்று மணி ஆனதை கண்டவுடன் முல்லை சற்று கலக்கமடைந்தவளாய்,
'ரோஜா... நான்கு மணிக்குப் பஸ் இருக்கு. அந்த பஸ்ல போனால்தான் சரியா இருக்கும். ஏன் இன்னும் மாமா வீட்டுக்கு வரல, இப்போ நான் எப்படி பஸ் ஸ்டாண்ட் போறது?" என சளைக்க கேட்டாள் முல்லை.

'நீ பதட்டபடாத, நான் மூத்தவருக்கு போன் பண்ணி பார்க்குறேன்' என ரோஜா தன் பெரிய அண்ணனை அழைத்ததும்,
'ஹலோ சொல்லு ரோஜா' என்றார் ஜீவானந்தம்.

'அண்ணா... முல்லைக்கு நாலு மணிக்கு பஸ் இருக்காம்! நீங்க எப்போ வீட்டுக்கு வருவீங்கன்னு கேக்குறா' என ரோஜா சொன்னதும்,'நீ போனை முல்லைகிட்ட கொடு' என்றார் ஜீவானந்தம்.

'இந்தா முல்ல, அண்ணன் தான் பேசுறாரு' என போனை ரோஜா முல்லையிடம் நீட்ட,

"மாமா..." என ஆசையாக அழைக்கும் முல்லையின் குரலில் கூட மென்மை மட்டுமே இருந்தது.

'முல்ல... இங்கன ஒரு பெரிய பிரச்சனை, என்னால இப்போதைக்கு வீட்டுக்கு வர முடியாது, நீ கவலைப்படாத! நான் கதிருக்கு மெசேஜ் பண்ணி உன்னை பஸ் ஸ்டாண்ட்ல அழைச்சிட்டு போய் விட சொல்லுறேன்' என ஜீவானந்தம் சொன்னதும்,

'ஆனா மாமா, அவுக நல்லா தூங்கிட்டு இருக்காகளே' என்றாள் முல்லை.

'அவன் சரியா 3.30pm மணிக்கு எழுந்துடுவான் முல்ல... அவனே உன்னை அழைச்சிட்டு போய் பஸ் ஏத்தி விட்டுடுவான். சாரி மா! என்னால இப்போ வீட்டுக்கு வர முடியாது' என்றார் ஜீவானந்தம்.

'ம்... சரி மாமா, ஆனா நீங்க இன்னும் மதியம் சாப்பிடலையே! உங்களுக்கு பசிக்கலையா' என முல்லை அன்பாக தன் மாமனை விசாரிக்க,

'ரெண்டு வருஷம் கடந்து உன்னை பார்த்ததால எனக்கு பசியே மறந்து போச்சு'என அதே அன்போடு பதில் சொன்னார் ஜீவானந்தம்.

தன் மாமனின் பதிலில் முல்லையின் முகம் சிவந்து போக,'நேர நேரத்துக்கு சாப்பிடுங்க மாமா. நான் ஊருக்கு போனதும் அங்க சூழ்நிலையை பார்த்துட்டு உங்களுக்கு போன் பண்ணுறேன்' என முல்லை அலைபேசியின் இணைப்பை துண்டித்தாள்.

'என்ன முல்ல... வாத்தியை போய் ட்ரோப் பண்ண சொல்லிட்டாரா?' என ரோஜா கேக்க,

'ஆமா... ஆனா இன்னும் மாமா சார் தூங்கிகிட்டு இருக்காரே' என்று சந்தேகமாக கதிர்வேலனின் அறையை பார்த்தாள் முல்லை.

'நீ சஞ்சலப்படாத! இன்னும் பத்து நிமிஷத்துல வாத்தி உன்னை அழைச்சிட்டு போகும்' என ரோஜா சொன்னதும், அவள் வார்த்தையில் நம்பிக்கை இல்லாமல் பதட்டமாகவே இருந்த முல்லை நொடிக்கு நான்கு முறை கைகடிகாரத்தை பார்க்க,

'ரோஜா அக்கா...வாத்தியார் இல்லையா?' என வாசலில் பத்து வயது சிறுவன் கையில் சிலம்பமுடன் வந்து நின்றான்.

'என்னடா? ஏன் இப்போ கத்துற, வாத்தி உள்ள இருக்காரு.
என்ன விஷயம் சொல்லு' என ரோஜா வாசலை நோக்கி சென்றதும்,

'இந்தாங்க அக்கா பணம். வாத்தியார் சொன்னது போலவே கிரவுண்ட் ரெடி பண்ணிட்டேன்' என்றான் அந்த சிறுவன்.

'நல்லது டா. நீ சரியா ஐந்து மணிக்கு கிளாஸ்க்கு வந்துடு. உன் கூட்டாளிகளையும் அழைச்சிட்டு வந்துடு ' என ரோஜா சொன்னதும்,

'சரி சரி அக்கா! சரியா ஐந்து மணிக்கு வரேன்' என சிறுவன் அங்கிருந்து சென்றான்.

'என்ன ரோஜா! மறுபடியும் மாமா சார் சிலம்பம் கத்து தர ஸ்டார்ட் பண்ண போறாரா?' என ஆசையாக கேட்டாள் முல்லை.

'ஆமா முல்ல... நான் தான் கண்டிப்பா இனி லாரி எல்லாம் ஓட்ட போகக்கூடாதுனு சொல்லிட்டேன். அதான் மறுபடியும் வாத்தியை பசங்களுக்கு சிலம்பம் கத்து தர சொல்லிருக்கேன்' என ரோஜா சொன்னதும்,

' நல்ல விஷயம் ரோஜா, மாமா சார் இப்படி எதாவது பண்ணா தான் அவரும் பழையப்படி ட்ரிங்க்ஸ் பண்ணாம குட் பாயா இருப்பாரு' என்றாள் முல்லை.

'அவரு குட் பாயா இருக்குறது இருக்கட்டும், ஆமா நீ என்ன இன்னும் வாத்திகிட்ட கத்துகிட்ட சிலம்ப பயிற்சியை நினைவு வச்சிரிகியா இல்லையா?' என ரோஜா கேட்க,

'அது எங்க எனக்கு நினைவுக்கு இருக்கு, நான் ஆசையா சில்ம்பம் கத்துக்க வரும் போது மாமா சார் என்னை கோவமா முறைக்கிற முறைய்ப்பில்லையே நான் எல்லாத்தையும் மறந்து இல்ல போயிடுவேன்' என்றாள் முல்லை.

'ஆமா ஆமா... உனக்கு வாத்தி சொல்லி தந்த சிலம்பம் நினைவுக்கு இல்லை, ஆனா அவரு விளையாட்டா உன்னை சாருன்னு கூப்பிட சொன்னது மட்டும் நீ நினைவுல வச்சிக்கிட்டு எப்போ பாரு மாமா சார் மாமா சார்ன்னு வாத்தியை லந்து பண்ணுறியா?' என கேட்டாள் ரோஜா.

'ஹையோ... நான் லந்து எல்லாம் பண்ணல, அன்னைக்கு மாமா சார் என்னை இனி நீ சாருன்னு தான் கூப்பிடணும்னு சொன்னாரு, அதனால தான் சாருன்னு கூப்பிட்டேன், ஆனா ஜீவானந்தம் மாமா உறவு முறை வச்சி தான் கூப்பிடனும். கதிர்வேலன் கூட உனக்கு மாமன் தான், அதனால் அவரையும் மாமான்னு கூப்பிடுன்னு சொல்லிட்டாரு, அதான் ரெண்டு பேர் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து நான் மாமா சாருன்னு கூபிட்றேன்' என நீண்ட விளக்கம் கொடுக்கும் முல்லையின் இயல்பே இது தான் என்று அறிந்திருந்த ரோஜாவுக்கும் முல்லையிடம் பிடித்ததே அந்த வெகுளி தனமான குணம் தான்.

இப்படியாக இவர்கள் பேசிக்கொண்டு இருந்த வேளையில் நேரம் மதியம் 3.30pm காட்டியது.'ரோஜா... எனக்கு நேரம் ஆகுது, நீ போய் மாமா சாரை எழுப்புறியா? " என தயக்கத்துடன் கேட்டாள் முல்லை.

முல்லையின் குரல் கதிர்வேலனுக்கு கேட்டதோ என்னவோ தன் அறையின் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தவர் நெற்றியில்! விபூதி பட்டை, வெள்ளை நிற அரைகை சட்டை, வெள்ளை நிற கால்சட்டை, ஒற்றை காதில் நீல கல் வைத்த கடுக்கன், கையில் ஐம்பொன் காப்பு, கழுத்தில் உத்திராட்சம் என்று பக்தி பரவசமாக முல்லை முன்னே வந்து நின்றவரை பார்த்து முகம் மலர்ந்தாள் முல்லை.

'மாமா சார் உங்களுக்கு இந்த ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு' என தன்னை மீறி தன் கரங்களால் 👌முத்திரையை காட்டி கதிர்வேலனை புகழ்ந்தவள், என்ன நினைத்தாளோ மேற்கொண்டு பேசாமல் தன் வார்த்தைகளுக்கு வடிகால் போட்டுக்கொண்டாள்.

'அம்மா... நான் வண்டியை எடுக்குறேன், இந்த ரவா லட்டை சீக்கிரமா வர சொல்லு' என கதிர்வேலன் பைக்கை நோக்கி வேகமாக நடந்தார்.

கதிர்வேலன் இன்று வரை தன் தங்கையை அம்மா என்ற வார்த்தையை தவிர்த்து பெயர் சொல்லிக் கூட அழைத்தது இல்லை.

முல்லைக்கு சிறுவயதில் இருந்தே ரவா லட்டு பிடிக்கும் என்று பாண்டியனின் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததால் அவளுக்காக சின்ன வயதில் பாண்டியன் வாங்கிக்கொடுத்த இரண்டு கிலோ ரவா லட்டை ஒரே ஆளாக முல்லை சாப்பிட்டு நாளெல்லாம் வயிற்று வலியில் அல்லோளப்பட்ட பெண்ணை கதிர்வேலன் தான் மருத்துவரிடம் அழைத்து சென்றார்.
 
New member
Joined
Dec 5, 2025
Messages
21
இந்த சம்பவம் நடந்து எட்டு வருடங்கள் கடந்து இருந்தாலும், இன்றும் கதிர்வேலன் மட்டும் முல்லையை ரவா லட்டு என்று தான் அழைப்பார்.

இன்றும் அதே போல முல்லையை வெறுப்பேற்றும் விதமாக அழைத்தாலும் அப்படியெல்லாம் என்னை கூப்பிடாதீர்கள் என சொல்லும் தைரியம் முல்லைக்கு இல்லை என்பது தான் உண்மை.

'அம்மா... அவ வருவாளா இல்லை நான் கிளம்பவா?' என புல்லட்டை விட அதிகமாக கதிர்வேலன் உரும்பியதும்,

'ஹையோ... நான் வந்துட்டேன் மாமா சார், ரோஜா நான் போய்ட்டு வரேன், பாண்டியன் மாமாகிட்ட சொல்லிடு, நான் முடிந்தால் வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு வரும் போது உன்னை வந்து பார்க்குறேன்' என வேகமாய் வாசலை தாண்டி ஓடிய முல்லை புல்லட் அருகே சென்று பிரேக் அடித்ததை போல நின்றவளை ஏற இறங்க முறைத்தார் கதிர்வேலன்.

'என்னடி! உன்னை தூக்கி புல்லட்ல நான் உக்கார வைக்கணுமோ?' என கதிர்வேலன் கேக்க,

'இல்லிங்க மாமா சார், நீங்க முன்னாடி நகர்ந்து உக்கார்ந்தா தானே நான் சரியா உக்கார முடியும்' என தயங்கியப்படி சொன்னாள் முல்லை.

'முன்னாடினா!? எங்க பெட்ரோல் டேங்க்ல உக்காரவா?' என கதிர்வேலன் கேக்க,

'ஹையோ...அங்க உக்காந்தா உங்கனால வண்டியை ஓட்ட முடியாதே!' என்றவளை பார்வையால் சீறினார் கதிர்வேலன்.

'இப்போ உக்கார போறியா! இல்ல வண்டியை உன் வாய் மேல
ஏத்தவா டி!?'என வார்த்தையால் மென்னு துப்பியா கதிர்வேலனை பார்த்து,

'வேணா வேணா வாய் மேல எல்லாம் வண்டியை ஏத்தாதீங்க' என பயந்தவளாய் புல்லட்டில் ஏறி அமர்ந்தாள் முல்லை.

கதிர்வேலனின் கையில் அதி வேகத்தில் சென்று கொண்டு இருந்த புல்லட் ஒரு அம்மன் கோவிலின் முன்னே நின்றது.

'மாமா சார்...நான் பஸ் ஸ்டாண்ட் போகணும், கோவிலுக்கு இல்லை' என முல்லை சொன்னதும்,

'எனக்கு தெரியும், நீ இங்கனயே இரு.
நான் இதோ வரேன்' என்றவாரு வேகமாக கோவில் அருகே மலர்களை தொடுத்து விற்பனை செய்யும் கடையை நோக்கி விரைந்தார் கதிர்வேலன்.

'ஹையோ... இன்னும் கால் மணி நேரத்துல பஸ் கிளம்பிடும்' என விழிகளை சுழற்றியப்படி முல்லை மிருண்டு விழிக்க,
தூரத்தில் பதினெட்டு வயதில் இருக்கும் பெண் பிள்ளையின் கன்னத்தில் ஓங்கி அறைந்த கதிர்வேலனின் செயலில் முல்லையின் விழிகள் அதே இடத்தில் ஸ்தம்பித்து போனது.

'இந்த பெண்ணை அடிக்க தான் கோவிலுக்கு வந்தாகளா?' என முல்லை எண்ணும் முன்னே, அந்த பெண் கதிர்வேலனை கட்டி அணைத்து அழுதாள்.

'ஹையோ... மீனா தானே மாமா சாரை காதலிக்கிறாள்! இங்கன என்ன இவுகள அந்த பொண்ணு கட்டிப்பிடித்து அழுதுகிட்டு இருக்கு' என தன் எண்ண ஓட்டங்களின் கேள்விகளுக்கு விடை தெரியாமல் முல்லை தூரத்தில் நடக்கும் காட்சியினை ஆராய்ச்சியுடன் நோக்கினாள்.

கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் சமாதானத்திற்கு பிறகு 18 வயதை நிரம்பிய பெண் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டவள் கதிர்வேலன்னை பார்த்து கைகள் கூப்பி நன்றி சொன்னவளின் இதழ்களில் இப்போது வலி நிறைந்த புன்னகை தெரிந்தது.

அந்த பெண்ணின் தலையை வாஞ்சையாக வருடிக்கொடுத்த கதிர்வேலன் அந்தப் பெண்ணுக்கு தைரியம் சொன்னபடி மீண்டும் தன் புல்லட்டை நோக்கி வேகமாக நடந்து வந்தவரை பார்த்த முல்லை,

'மாமா சார்...யாரு அந்த பொண்ணு?அப்போ ரோஜா சொன்ன உங்க காதல் விவகாரம் இந்த பொண்ணை பற்றி தானா?' என தன் மனதில் உள்ள சந்தேகத்தை அபத்தமாய் கதிர்வேலனிடமே நேரடியாக கேட்டு வைத்தாள் முல்லை.

முல்லையின் விழிகளுக்குள் ஆழ்ந்த பார்வையை செலுத்தியவர்,
'உன் குட்டி மூளைக்குள்ள ரொம்ப பெரிய விஷயங்களை எல்லாம் யோசிக்காத. ஒழுங்கா வண்டியில ஏறி உட்காரு. இன்னும் பத்து நிமிஷத்துல நீ பயணிக்க போகும் பஸ் கிளம்பிடும்' என கதிர்வேலனின் வார்த்தைகள் கோபம் கலந்த குரலில் வெளிவர, முல்லை மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்காமல் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

மௌனமான பயணத்தில் முல்லை இறங்க வேண்டிய பஸ் நிலையத்திற்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

முல்லையின் ஊரான சிவகங்கைக்கு செல்ல போகும் பேருந்து முல்லைக்காகவே காத்திருந்தது, காரணம் பேருந்தின் ஓட்டுனர் கதிர்வேலனின் மாணவன்.

ஆம்... அந்த சுத்து வட்டாரத்தில் கதிர்வேலனின் சிலம்பாட்டத்திற்கு இணையாக அவரை எதிர்த்து போட்டியில் வெற்றி பெற இந்த நாள் வரை யாரும் இல்லை என்பதே கதிர்வேலனின் தந்தை பாண்டினிற்கு பெருமையான விஷயமாக அமைந்தது.

தனது பத்து வயதில் இருந்தே சிலம்பாட்டத்தில் பெயர் பெற்ற கதிர்வேலன் கடந்த மூன்று ஆண்டுகளாக சிலம்பத்தை தொடாமல் இருந்தவரின் மாற்றத்திற்கு என்ன காரணம் என எவ்வளவோ ஆராய்ந்தும் பாண்டியனுக்கும் ஜீவானந்தத்துக்கும் விடை கிடைக்காமல் போக, இன்று கதிர்வேலன் மீண்டும் சிலம்பாட்ட பயிற்சியை மாணவர்களுக்கு கற்றுத் தருவதற்கு காரணம் கதிர்வேலனின் ஒரே தங்கை ரோஜா தான்.

'வத்தியாரே... உங்களுக்காக தான் காத்து இருக்கேன், இப்போ வண்டியை எடுக்கலாமா'என பஸ் ஓட்டுநர் கேட்டதும்,

'இந்தா... போய் சேர்ந்ததும் அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லிடு' என கதிர்வேலன் முல்லையை பார்க்காமலேயே பேசியவர் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து வாழைஇலையின் பசுமையில் ஒளிந்திருந்த மல்லிகைப் பூவை எடுத்து, முல்லையிடம் நீட்டினார்.

கதிர்வேலன் கொடுத்த மலரை வாங்காமல் அந்நேரம் அவளது விழிகளில் ஒரு தயக்கம் தெரிய, அவளது பார்வையே அவள் மனதில் உள்ள சஞ்சலத்தை தெளிவாக உரைத்தது.

முல்லையின் தயக்கத்தை அறிந்து,'அண்ணன் தான் வாங்கி தர சொன்னாரு' என கதிர்வேலனின் சொற்கள் முடியும் முன்னே, அவர் கொடுத்த மல்லிபூ அவளது கூந்தலில் நிசப்தமாக உறைந்துவிட்டது.

கணமொரு கணம் அவளை நேராக பார்த்து, "இந்தா பாரு,உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..." என கதிர்வேலன் சொல்லி முடிக்கும் முன்னே,முல்லையின் கைபேசியில் ஜீவானந்தத்தின் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

ஜீவானந்தத்தின் எண்ணை பார்த்த முல்லை எதையும் காதில் வாங்காமல் கைபேசியை உயிர்பித்தவள்,
'மாமா...நாங்க பஸ் ஸ்டாண்ட் வந்துட்டோம். நீங்க கொடுக்க சொன்ன மல்லிப்பூவை மாமா சார் என்கிட்ட கொடுத்துட்டாரு, தேங்க்ஸ் மாமா' என காதலாக பேசினாள்.

''என்ன மல்லிப்பூவா?'என மறுமுனையில் இருந்து ஜீவானந்தம் கேள்வியை எழுப்ப, 'ஆமா மல்லிப்பூ தான்'என்ற முல்லை சிரித்த முகத்துடன் சொன்னாள்.

'எங்க போனை அவனிடம் கொடு'
என்ற ஜீவானந்தத்தின் கட்டளையுடன், முல்லை கைபேசியை கதிர்வேலனின் முன் நீட்ட, அந்தக் கணம் கதிர்வேலனின் முகத்தில் ஒரு பதற்றம் எச்சரிக்கையாக மலர்ந்தது.

தொடரும் 🌹
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top