• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
94
பகுதி - 17

உணவு தட்டை எடுத்துக் கொண்டு அந்த வஸ்து இருந்த பாத்திரத்தோடு சமையலறைக்கு சென்றவன் அதை ஒரு கவரில் கொட்டி இறுக்கமாக முடிச்சிட்டு குப்பையில் கொட்டப் போக, "என்ன செய்யப் போறீங்க?" வேகமாக வினவினாள் யுவனி.

" பார்த்தா தெரியல? குப்பையில கொட்டப் போறேன். அப்படியே குப்பைல போட்டு எதாவது வாயில்லா ஜீவன் அதை சாப்டு, அதோட உயிரோட விளையாட எனக்கு மனசில்ல. அதான் கவர்ல போட்டு வெளியே வராத மாதிரி இறுக்கமாக கட்டி போடுறேன்." விளக்கமளித்தான் ரகு.

அதைக்கேட்ட யுவனி அவனை முறைத்தபடி,"எந்த ஃபுட்டும் வேஸ்ட் பண்ணக் கூடாதுனு உங்களுக்கு சின்ன வயசுல சொல்லித் தரலையா? நான் உங்களுக்காக சமைச்சது அதை நீங்கதான் சாப்பிட்டு முடிக்கனும்." கடுமையுடன் கூறினாள் யுவனி.

"எனக்கே ஆர்டர் போடுறியா? இதைச் சாப்டேன்னா கொஞ்ச நேரத்துல குடல் வெந்து நான் பரலோகம் போயிடுவேன்." இடுப்பில் கைவைத்து அவளை தீவிரமாக முறைத்துக் கொண்டு சொன்னான் ரகு.

"இதனால எல்லாம் சாக மாட்டாங்க. நெஞ்செரிச்சல், வயித்துவலி, டைய்ரியா மாதிரி தான் வரும். இப்ப எனக்கு தெரியாது இதை நீங்க தான் சாப்டாகனும்." யுவனி சொல்ல அவளை முறைத்தபடி சென்று விட்டான்.

அவனை வலுக்கட்டாயமாக அமர வைத்து ஒருவழியாக அந்த பிரியாணி(!?)யை தயிரில் குழைத்து உண்ண வைத்து விட்டாள். முடியாமல் அவன் திணறினால் ஒருபக்கத்திற்கு உணவுப் பற்றி லெக்சர் எடுத்து அறுத்துத் தள்ளினாள்.

அந்த கொடுமைக்கு இந்த கொடுமையே மேல் என்ற ரீதியில் முகத்தில் பலவித பாவனைகள் காட்டியபடி உண்டவன், இரவு உணவாவது சாப்பிடக்கூடிய மாதிரி சமைக்கச் சொல்லிவிட்டு, விட்டால் போதுமென எழுந்து ஓடினான்.

அவனது பாவனையில் அவளுக்கு சிரிப்பு வந்தாலும் மனதில் ஒருபுறம் அவனை நினைத்து பாவமாக இருந்தது. 'டைவர்ட் ஆகாதே யுவனி.' தன்னையே மோட்டிவேட் செய்து இரவும் தன் கைவரிசையை காட்டினாள்.

இரவு உணவில் காரத்திற்கு பதில் உப்பு. பிறகு அதற்கான அல்டர்னேட் சொல்யூஷன் கொடுத்து பிடிவாதமாக அவனையே உண்ண வைத்தாள். இப்படியாக தொடர்ந்த அவளது புதுவித உணவு முயற்சிகளுக்கு பலிகடாவாகிப் போனான் ரகு.

'வாயை வைச்சுட்டு கம்முனு இருந்திருக்கலாம்ல முட்டாள். இப்படி உனக்கு நீயே சூன்யம் வச்சுட்டியேடா!' என்று மனதிற்குள் ஒவ்வொரு உணவின் போதும் தன்னையே திட்டித் தீர்த்தான்.

நான்கு தினங்களுக்கு மேல் முடியாமல் அலுவலகம் செல்வதாகச் சொல்லி தப்பிக்க எண்ணி ஐடியா கண்டறிந்து குதூகளித்தான். ஆனால் அதிலும் அரை லோடு மண்ணள்ளி போட்டு புதைத்தாள் மனையாள்.

நான்கு தினங்கள் கொடுமைக்கு பிறகு, "நாளைக்கு நான் ஆஃபிஸ் போகனும். அதனால காலையில சீக்கிரமே கிளம்பிடுவேன்." என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு கூறினான்.

அவனது திட்டத்தை புரிந்துகொண்டு உள்ளுக்குள் சிரித்தபடி, "சரிங்க. லன்ச்க்கு என்ன சமைச்சு தரனும்னு மெனு சொல்லிடுங்க." அவள் இமைதட்டி பவ்யமாகக் கேட்க, அதில் அரண்டான் அவன்.

ஆஃபிஸில் சக பணியாளர்களின் முன் இந்த பயங்கரங்களை உண்டு, அவர்கள் முன்னிலையில் கேளிக்கை பொருளாக விரும்பாமல், திடுமென அலைபேசியில் வராத அழைப்பை ஏற்று பேசியபடி அறையை விட்டு வெளியேறினான்.

சிறிது நேரம் கழித்து வந்தவன், "நாளைக்கு வர வேண்டிய அவசியம் இல்லையாம். அப்படி போகனும்ன்ற போது சொல்றேன்." அவன் தப்பிக்க பார்க்க அவளுக்கு சிரிப்பை அடக்கத்தான் பெரும்பாடானது.

ஒருவாரமாக வீட்டிலிருந்து வேலை பார்த்தபடி, வீட்டுச் சாப்பாடு என்ற பெயரில் அவள் செய்யும் சமையல் சம்பவங்களில் வகைதொகையாக சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருந்தவன்,

இன்றைய கொலை செய்யப்பட்ட தோசைகளை கண்டு அவனது நாக்கும் வயிறும் 'எங்கள கொஞ்சம் கொஞ்சமா இப்படி கொல்றதுக்கு பதிலா நாங்களே ஒரேயடியா செத்துடுறோம்டா.' என்று மன்றாடின அவனிடம்.

அதன் சத்தம் வெளிய கர்புர்ரென கேட்க, "என்னாச்சுங்க வயிறு சரியில்லயா புருசரே? நேத்து தான் யூ டியூப்ல அதுக்கும் ஒரு கசாயம் பார்த்தேன். நீங்க போய் உட்காருங்க. சட்டுனு அதையும் செய்து கொண்டு வர்றேன்." வேகமாக எதையோ எடுக்கப் போனாள்.

சாப்பாடு என்ற பெயரில் அவள் தரும் தண்டனையே தாங்க முடியவில்லை. இதில் கசாயமா!?என்று அரண்டவன், "அதெல்லாம் வேண்டாம். அது, பசில சத்தம் கேட்குது போல." அப்பட்டமாக பொய் சொல்ல 'இதோ எல்லாம் ரெடி' அவள் பரபரப்பாக தயாரானாள்.

'அடேய் க்ராதகா! உனக்கு வந்து வாய்ச்சதை தவிர வேறென்னடா பாவம் செய்தோம் நாங்க?!' என்று கரித்துக் கொட்டியது அவனது உணவு மண்டலம்.

அவளது தட்டிலிருந்த பூரியும் கிழங்கும் அவனது வாயில் உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்க, அவனது தட்டிலிருந்த துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலையான தோசைகள் பயத்தில் அட்ரீனல் சுரப்பை அதிகரித்தது.

அவனுக்கு சாம்பார் என்ற பெயரில் மஞ்சள் தண்ணீரை, பிய்ந்து போய் வெந்தும் வேகாமலும் இருந்த தோசைகள் மீது ஊற்றி விட்டு அவளது உணவை உண்ணத் துவங்க, அவளது தட்டையே வெறித்துப் பார்த்திருந்தான் அவன்.

'ருசியா?! ரோஷமா!?' என்று அவன் மனதிற்குள் நடந்த பட்டிமன்ற முடிவில் அவனது ரோஷம் தோற்றுப் போய், "இன்னிக்கு ஒருநாள் உன் சாப்பாட்டை தர்றியா?" எனக் கேட்க வைத்தது அவனது வாய்.

குனிந்து பூரியை விண்டு வாயில் வைக்கப் போனவள், பாவமாக அவன் கேட்ட தொனியில் உருகிப் போனாள். "ஆனா, உங்களுக்கு கடை சாப்பாடு ஒத்துக்காதுனு சொன்னீங்களே." தயக்கத்துடன் கேட்டாள் யுவனி.

"பரவால்ல. இன்னிக்கு ஒருநாள் மட்டும், ப்ளீஸ்!" தட்டையே ஆசையாக பார்த்து சொன்னவனைக் கண்டு இளகிய யுவனி மெதுவாக தட்டை அவன்புறம் நகர்த்த, அதை இழுத்து வேகவேகமாக அவன் உண்பதைக் கண்டு யுவனிக்கு பாவமாக இருந்தது.

காலை உணவை உண்டு முடித்து ஏதோ சொர்க்க கதி அடைந்த திருப்தியில் மடிக்கணினியோடு தனது பணியை தொடங்கிய ரகு நேரம் போனது தெரியாமல் இருக்க, அவன் முன் வந்து நின்றாள் யுவனி.

"மதியம் உங்களுக்கும் சேர்த்து ஆர்டர் போடவா? இல்ல நான்தான் உங்களுக்கு சமைக்கனும்னாலும் ஐ ஹேவ் நோ அப்ஜெக்ஷன். ஐ லைக் குக்கிங்." அவனுக்காக பரிதாபப்பட்டு அக்கறையில் கேட்டுவிட்டு கடைசியில் குண்டை வைத்தாள்.

காலையில் ஆசையாக அள்ளி உணவு உண்டவனைக் கண்டு மனம் இளகியவள் அவன் மீதான அக்கறையில் கேட்டதை, அவன் காசில்லாத காரணத்தால் தான் வெளி உணவை தவிர்க்கிறான் என்று ஏளனம் செய்வதாக எண்ணி கோபமுற்றான்.

"ஒன்னும் தேவையில்ல. ஆன்லைன் ஆர்டர் தானே? எங்கிட்டேயும் காசு இருக்கு. உனக்கும் சேர்த்துக் கூட என்னால ஆர்டர் போட முடியும். நான் அந்தளவுக்கு வக்கில்லாம இல்லை." அவளது பணக்காரத்தனத்தை தன்னிடம் காட்ட முயல்கிறாள் என்றெண்ணி காய்ந்தான் அவன்.

'காலையில பரக்காவெட்டியாட்டம் சாப்டியேனு ஒரு கர்ட்டஸிக்காக உங்கிட்ட வந்து கேட்டேன் பாரு. என்னைச் சொல்லனும். போய்யா லூசு!' இத்தனையும் மனதிற்குள் திட்டிக் கொண்டு அவனை அசையாமல் பார்த்தபடி வெளியேறி விட்டாள்.

அவள்மீது கோபமாக இருந்தவனின் வயிறு சில நாட்களுக்கு பிறகு ருசியான சாப்பாடு கொடுத்ததில்' இப்பவும் எதாவது கொடேன்' என்ற ஆசையில் தான் இருப்பதை பசியின் மூலம் உணர்த்த, உணவு ஆர்டர் போட்டுவிட்டு சிறிது நேரத்தில் அது வரவும் சாப்பிட வெளியே வந்தான்.

அவள் தனது உணவை முடித்துவிட்டு அலைபேசியில் கம்பெனியின் விசயங்களை பேசியபடி மும்முரமாக இருக்க, அவளை முறைத்துக் கொண்டே தனது உணவை உண்டு முடித்து ஆஸ்ட்ரிச் போல மீண்டும் அறைக்குள் அடைந்து கொண்டான்.

அவளது பணத்திமிரை தன்னிடம் காட்ட முயன்றாள் என்ற கோபத்தில் அவனது ஈகோ சுரண்டிவிடப்பட, இருவரும் ஏதோ ரூம்மேட் போல ஆளுக்கு ஒரு ஆர்டர் போட்டு தங்களது உணவுத்தேவையை முடித்துக் கொண்டனர்.

ஆனால் அதன் விளைவு அடுத்து வந்த இருதினங்களில் தெரிய வர, இருவருமே வெவ்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டனர்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top