• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Feb 16, 2025
Messages
8
நீயும் நானும் அன்பே…


அந்த இடம் முழுவதுமே அமைதியை நிரப்பிக் கொண்டிருந்தது.செவிலியர்களும்,
மருத்துவர்களும்,நோயாளிகள் அவர்களுடன் வருவோர் என இடமே மக்களுடன் பரபரப்பைத் தொற்றிக் கொண்டிருந்தாலும் ஒருவித அமைதியை கடைப்பிடித்திருந்தது.


ஆனால் அதே இடத்தில் ஒரு ஓரமாய் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மனமோ கடல் அலையைப் போல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.வெளியே அமைதியை நிலைநாட்டிக் கொண்டிருந்தாலும் மனதிலுள்ளே இரைச்சலின் சத்தம் அவனின் காதை அடைக்க இரண்டு கைகளால் தன் காதுகளை அடைத்துப் பிடித்துக் கொண்டிருந்தான்.


அவனின் நிலைமையைக் கண்ட அவனுடன் வந்திருந்த நண்பன் அருகில் வந்து "என்ன ஆச்சுடா? உடம்புக்கு எதுவும் முடியலையா?"


வருத்தம் தொண்டையை அடைத்துக் கொண்டதோடு வறண்டும் போய் இருக்க பேச வார்த்தை வராமல் "இல்லை" என்று தலையை மட்டும் அசைத்துக் கொண்டான்.


நண்பனின் தோள்களை ஆதரவாய் பற்றிக் கொண்டவன் "கதிரேசா வீட்ல எல்லோர்கிட்டயும் சொல்லிட்டியா?" என்று தன் நண்பன் கிருஷ்ணன் கேட்டகவும் தலைகுனிந்து இருந்தவன் நிமிர்ந்து கோபமாய் ஒரு பார்வை பார்த்தான்.


அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டவனோ "கதிரேசா கோபப்படாதே! இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் இருக்கு அதுக்குள்ளாள நாம நினைக்காதது எல்லாம் நடந்துச்சு போச்சு அதான்…" என்று கிருஷ்ணன் பேச்சை இழுத்து பேசவும் சட்டென்று ஏதோ ஒரு வேகத்தில் எழுந்த கதிரேசன் கிருஷ்ணனைப் பார்த்து…


"நீ என்னோட நண்பனாச்சேன்னு தான் உதவிக்குஅழைச்சேன்,
ஆனால் நீ பேசுறதைப் பார்த்தால் எல்லாம் முடிஞ்சு போன மாதிரி பேசுற,அவளுக்கு என்ன தேவையோ அதுக்கான முடிவை நானே தான் எடுப்பேன் இதை மற்றவங்களுக்கு சொல்லனும் எந்த அவசியமும் இல்லை அதேமாதிரி அவ ஆசைப்பட்ட மாதிரி எங்க கல்யாணமும் கண்டிப்பா நடக்கும்" என்று சொல்லும் போது கதிரேசனின் கண்கள் இரண்டும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.


எதற்கும் அசராதவன் இன்று கலங்கி நிற்பதைப் பார்க்க கிருஷ்ணனுக்கும் வருத்தமாகத் தான் இருந்தது.ஆனால் இந்த நிலைமையை எல்லோரும் கடந்தே ஆக வேண்டும் என்பது வழக்கமான ஒன்று தானே!


ஆனால் கதிரேசன் மனதிலோ நீலாவைப் பற்றிய எண்ணங்களே மனம் முழுவதும் நிறைந்து இருந்தது.அதை அவனால் புறக்கணிக்கவும் முடியவில்லை.அவனுடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துப் போனவளை எப்படி மறக்க முடியும்.இமைகள் மூடி சுவற்றில் சாய்ந்து தன்னவளின் எண்ணங்களை மீண்டும் தன்னுள்ளே நிரப்பிக் கொண்டிருந்தான்.



கதிரேசன் தன் சொந்த ஊருக்கு திருமணத்திற்காக குடும்பத்தோடு சென்றிருந்தான்.ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக நண்பனோடு ஆற்றங்கரையின் ஓரம் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது…


அங்கே ஒருசில இளம் பெண்களின் கூட்டம் ஒன்றாக அமர்ந்துக் கொண்டு எதைப் பற்றியோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.


அப்பொழுது சட்டென்று ஒருத்தி எழுந்து முன்னால் போடப்பட்டிருந்த பின்னலிட்ட சடையை தன் தலையை லேசாக அசைத்து பின்னால் நகர்த்தியவள் எழுந்து சத்தமாக "பேச்சுவார்த்தை எல்லாம் சரிபட்டு வராது உடனடியாக களத்தில் குதிச்சு நிரூபிச்சு காட்டுங்க பார்ப்போம்" என்று கண்களின் கருவிழிகளை உருட்டிக் கொண்டு கைகளை இரண்டையும் இடுப்பில் அடவுக் கொடுத்து வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.


கதிரேசனுக்கு அவளைப் பார்த்த உடனே ஏனோ நெஞ்சில் ஓவியமாய் பதிந்து போனாள்.அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட பக்கத்தில் இருந்த நண்பனோ சிறிது பதற்றத்தோடு "கதிரேசா நாம இங்கே நிற்க வேண்டாம் வா சீக்கிரமா போகலாம்"
என்றான்.


அவனின் பதற்றத்தைப் புரிந்துக் கொள்ளாமல் கதிரேசனோ "கொஞ்சம் அமைதியா இருடா இங்கே என்னவோ நடக்கப் போகுதுன்னு வேடிக்கை பார்த்துட்டு போகலாம்" என்றான் ஆர்வமாக….


நண்பனோ இன்னும் அவசரமாய் "இங்கே நடக்கிறதை பார்க்க வேண்டாம்னு தான் போகலாம்னு சொல்றேன்" என்றான்.


கதிரேசனோ நண்பனை புரியாமல் பார்த்தான்.அதற்கிடையில் அந்த பெண்களுக்குள் வாக்குவாதம் கொஞ்சம் பலமாகச் சென்றுக் கொண்டிருந்தது.அதில் ஒருத்தி அங்கிருந்து வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்.


நீண்ட பின்னலிட்டவளோ தாவணியின் முனையை எடுத்து இடுப்பில் சொறுவிக் கொண்டு எதற்காகவோ தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.


கதிரேசனின் நண்பனோ அவனின் கையைப் பிடித்து இழுத்துக் கொள்ள முயற்சிக்க கதிரேசனோ நண்பனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றான்.


அப்பொழுது எதிரே நின்றுக் கொண்டிருந்த இருவரையும் முறைத்தவளோ ஆற்றில் ஒரே தாவலில் குதித்தாள்.அடுத்து அங்கிருந்த மற்றவர்களும் ஒவ்வொருவராக ஆற்றில் குதித்தார்கள்.



நண்பனோ "அடேய்… அவ நம்பளை பார்த்துட்டா போச்சு வேலில போற ஓணானை மடியில் போட்ட கதை தான் இனிமேல் உன் நிலைமை ஒழுங்கா தப்பிக்கிற வழிய பாரு சாமி நான் இங்க இருந்து போறேன்" என்று அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.


கதிரேசன் என்ன நடக்கிறது? என்பதை பார்க்கும் ஆவலில் ஆற்றங்கரையின் ஓரமாக எட்டி நின்று அங்கேயே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


ஆற்றில் குதித்த எல்லோரும் வேகமாக நீந்திக் கொண்டிருந்தார்கள்.இதில் குறிப்பிட்ட தொலைவு வரை வேகமாக நீந்தி விட்டு திரும்பி கரையில் இவன் பார்த்த அவளே தான் முதலில் வந்து ஏறியவள் அங்கே வைத்திருந்த ஒரு துணியை வைத்து உடல் முழுக்க ஈரத்தோடு இருப்பதை மூடியபடி மேலே வந்தவள் கதிரேசன் வேடிக்கைப் பார்ப்பதைப் பார்த்தப்படியே அருகில் வந்தவள் “ஏய் என்ன இதுவரைக்கும் பொண்ணுங்களை பார்த்ததில்லையோ? அப்படியே முழுங்கிற மாதிரி பார்க்கிறே?” என்று மிரட்டியபடி கேட்டாள்.


அதற்கு கதிரேசன் சற்றும் அசராமல் சிரித்தப்படியே “பொண்ணுங்க நிறைய பேரை பார்த்திருக்கேன் ஆனால் இந்த மாதிரி தைரியமான பொண்ணை இப்போத் தான் பார்க்கிறேன்” என்றான்.


அதே முறைப்போடு உற்றுப் பார்த்தவள் “ஹோ என்கிட்டயே ஜொல்லு ஊத்துறே? இரு” என்று சட்டென்று அவனே எதிர்பாரா நேரத்தில் அவனை ஆற்றில் தள்ளி விட்டாள்.


இவனோ பதறியபடி “அம்மாஆ…” என்று கத்தியபடி விழுந்தவன் கொஞ்சம் எம்மியபடி “எனக்கு நீச்சல் தெரியாது ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க” என்று கதறினான்.



இதற்கிடையில் ஏற்கனவே நீந்தியவர்கள் கரையில் ஏறிவிட பக்கத்தில் இருந்த மற்ற பெண்களில் ஒருத்தி “ஹேய் எதுக்கு இப்போ யாருன்னு தெரியாத அந்த ஆளை தள்ளி விட்டே?”


அதற்கு அவளோ “என்கிட்ட வம்பு பேசினான் அதான்” என்ற பொழுது அவனோ தண்ணீரில் தத்தளித்தப்படி மூழ்கிக் கொண்டிருந்தான்.


அதைப் பார்த்தவர்களில் ஒருத்தி “ஹேய் அந்த ஆளுக்கு உண்மையிலேயே நீச்சல் தெரியில போல ஆத்துத் தண்ணீர் இழுத்தப்படி மூழ்கிட்டு இருக்கான்டி” என்றதும் எட்டிப் பார்த்தவள் எதுவும் யோசிக்காமல் ஆற்றில் குதித்தவள் அவனின் தலைமுடியை பிடித்து இழுத்தப்படி அவள் நீந்தி வந்தாள்.


இதற்கிடையில் கதிரேசனை விட்டுச் சென்ற நண்பனோ அவன் இன்னும் வராததால் திரும்பவும் ஆற்றங்கரைக்கு வந்தான்.


அங்கே நின்றிருந்த பெண்களைப் பார்த்தப்படி ஆற்றங்கரையில் எட்டிப் பார்த்தவன் கதிரேசனை அவள் இழுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தவன் “ஹய்யோ கதிரேசா என்னடா இது? அவனுக்கு நீச்சல் வேற தெரியாதே! எப்படி அவன் தண்ணீர் குள்ளே போனான்?” என்று புலம்ப அவள் அவனை இழுத்துக் கொண்டு கரைக்கு வர கதிரேசனின் நண்பன் அவனை தூக்கிக் கொண்டு கரையில் போட அவள் தான் கதிரேசனுக்கு முதலுதவி செய்துக் கொண்டிருந்தாள்.


வயிற்றை அழுத்தவும் வாயிலிருந்து தண்ணீர் வெளியே வர அவன் நண்பன் காலை தேய்த்து விடவும் லேசாக கண்ணைத் திறந்தான் கதிரேசன்.


அதைப் பார்த்த அவன் நண்பன் “கதிரேசா வெளியூர்ல இருந்து வந்துட்டு நல்லா படியா ஊர் போய் சேர வழியைப் பாருடா எதுக்கு இந்த தேவையில்லாத வேலை நல்லவேளை நீலா வந்து காப்பாத்தினாள் என்று சொன்னவன் “ஆமா தண்ணீல போய் எப்படி விழுந்தே?” என்று அடுத்து ஒரு கேள்வியைக் கேட்கவும் கதிரேசன் எழுந்து உட்கார்ந்தான்.



அவன் அப்படிக் கேட்டதும் எல்லோரும் நீலாவைப் பார்க்க கதிரேசனோ “ஆற்றுடைய அழகுல மயங்கி நழுவி உள்ளே விழுந்திட்டேன்” என்றான்.


நீலா வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள மற்ற பெண்கள் கதிரேசனை அதிசயித்துப் போய் பார்த்தனர்.


அவன் நண்பனோ “வாடா வீட்டுக்கு போகலாம்” என்று அழைத்துப் போனவன் போகும் வழியினில் “கதிரேசா அந்த நீலாத் தானே உன்னை ஆத்துல தள்ளி விட்டாள்”


இவனோ யோசனையோடு “இல்லை” என்றதும் “அடேய் மறைக்காதே! நான் இந்த ஊர்க்காரன் எனக்குத் தெரியாதா? நீலா சரியான ரவுடி யாராவது அவகிட்ட வம்பு பேசினால் இப்படித் தான் எதாவது ஏடாகூடாமாக பண்ணிடுவாள் அதனாலத் தான் உன்னை அப்பவே இங்கிருந்து போகலாம்னு சொன்னேன் கேட்டியா! இப்போ பாரு நல்லவேளை அவளா உன்னை வந்து காப்பாத்தினாள் ஏதோ உனக்கு நல்ல நேரம் ஆனால் அவளைப் போய் நீ காப்பாத்துறேன் பொய் சொன்னே பாரு ம்ம்…” என்றான் சலித்தப்படி…


கதிரேசன் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை நீயே எதாவது தப்பா புரிஞ்சுக்காதே!”


“ஆளே சரியில்லை எதாவது வம்பு பண்ணிடப்போற பார்த்து இருந்துக்கோ” என்று தன் நண்பனை எச்சரித்து விட்டே அனுப்பினான்.


அடுத்து இருவருக்குமான சந்திப்பு திருமண நிகழ்ச்சியில் நடந்தது.
நீலா எங்கே சென்றாலும் அவள் கண்களில் படும்படியே நின்றுக் கொண்டிருந்தான்.


நீலா பொறுக்க முடியாமல் “ஹேய் இங்கே வா எதுக்கு இப்போ என் முன்னாடி சீன் போடுற?” என்று நேராக கதிரேசனைப் பார்த்துக் கேட்டாள்.


அவனோ சுற்றும் முற்றும் பார்த்தப்படி “என்னைத் தான் சொன்னீங்களா?”


அவளோ “ம்ம்… நடிக்காதே! உன்னைத் தான் சொன்னேன் வெளியூர்ல இருந்து வந்த மாதிரி ஒழுங்கா சேதாரம் ஆகாமல் ஊர் போய் சேரனும் புரியுதா?” என்று கதிரேசனை மிரட்டிச் சென்றாள் நீலா.


அவளின் திமிரான பேச்சில் இன்னும் விழுந்தவன் தன் நண்பனிடம் “ஏன்டா இந்த நீலா ஏன்டா இவ்வளவு அழகா இருக்கா?” என்றதும்


அவனோ “நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது மச்சான் அவளைப் பார்த்தால் இந்த ஊர்ல உள்ள பசங்க எல்லாம் ஓடுறானுங்க நீ என்னடான்னா அவளை இரசிக்கிற காதலுக்கு கண் இல்லைன்னு சும்மாவா சொன்னாங்க” என்று நொந்துக் கொண்டான்.



அடுத்து சந்தையில் வைத்து பார்க்கவும் அதே பாணியை கதிரேசன் பின்பற்ற இம்முறை நீலா அவனின் நண்பனிடம் சென்று “இங்கே பாரு இனிமேல் அந்தப் பய என்கிட்ட வந்து வழிஞ்சுட்டு நிற்கிறதைப் பார்த்தேன் அவ்வளவு தான் வெளியூர்காரனாச்சேன்னு போன போகட்டும் பார்த்தா இது சரி வராது போல” என்று மிரட்டிச் சென்றாள்.


ஒரு மரத்தின் ஓரம் கதிரேசனை அழைத்துச் சென்று அவனைப் பார்த்து “ஏன்டா உனக்கு இந்த தேவையில்லாத வேலை” என்று நடந்ததைச் சொன்னான்.


கதிரேசன் அப்போதும் “எனக்கு நீலாவை பிடிச்சிருக்குடா அவளை கல்யாணம் பண்ணனும் ஆசைப்படுறேன்”என்றான்.
 
New member
Joined
Feb 16, 2025
Messages
8

“உண்மையாகவா?”


“ஆமாம்”


“அவளைப் பத்தி தெரிஞ்சால் நீ ஒத்துக்க மாட்டே”


“என்னச் சொல்லு? தெரிஞ்சுக்கிறேன்”


“நீலவோட அப்பா குடிக்காரன் அவளோட அம்மா நடத்தை சரியில்லைன்னு இந்த ஊரே சொல்லுது இப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ளவளை யாரு கல்யாணம் பண்ணுவாங்க சொல்லு அப்பாவும் இல்லை அம்மா படுக்கையில் அதான் நீலா எப்பவும் ரவுடியாட்டும் சுத்திட்டு இருக்கா” என்றான்.


கதிரேசன் எதுவும் யோசிக்காமல் “எனக்கு பொண்டாட்டின்னா இனிமேல் அவ தான்டா” என்று எந்த தயக்கமும் இல்லாமல் சொன்னான்.


இதை எல்லாம் அங்கே ஏதேச்சையாக வந்த நீலா ஓரமாக நின்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.அவன் சொன்னதைக் கேட்டதும் விழிகள் இரண்டும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.


இதுவரை அவளைப் பற்றி தெரிந்ததும் எல்லோரும் ஒதுங்கி விடுவார்கள்.
இல்லையென்றால் தேவைக்குத் தான் என்று சொல்லி இருப்பதை அவள் காதுபடவே கேட்டு இருக்கிறாள்.ஆனால் கதிரேசன் அவளை உரிமையோடு சொன்னது பட்டென்று நெஞ்சில் பதிந்து போனது.


கதிரேசன் இந்த நினைவில் அமர்ந்திருக்க செவிலியர் அருகில் “சார் சார் உங்களை டாக்டர் கூப்பிடுறாங்க” என்றாள்.


உடனே இரு விழிகளையும் தேய்த்து எழுந்தவன் மெதுவாக நடக்க பின்னால் கிருஷ்ணனும் உடன் சென்றான்.


மருத்துவருக்கு எதிரே போய் இருவரும் அமர்ந்தனர்.


அப்போது அவரே “நீங்க பேஷண்ட்டுக்கு யாரு?”


உடனே கதிரேசன் “நான் அவளோட ஹஸ்பண்ட் டாக்டர்”பக்கத்தில் இருந்த கிருஷ்ணனைக் காட்டி “இவன் என் ப்ரெண்ட் டாக்டர்” என்று அறிமுகப்படுத்தினான்.


“உங்கக்கூட பசங்க யாரும் வரலையா?”


அதைக் கேட்டதும் கதிரேசனின் முகம் முழுவதும் மாறிப்போய் “ஏன் டாக்டர் என் பொண்ணாட்டியைப் பத்தி என்கிட்ட சொல்ல மாட்டீங்களா? எதுவாக இருந்தாலும் என்கிட்டயே சொல்லுங்க அவங்க யாரும் இங்கே இல்லை” என்றான்.


உடனே மருத்துவர் “சரி உங்க வைப்க்கு வயசானதுனாலயும் ஏற்கனவே இன்பெக்ஷன் ஆகியிருந்து கவனிக்காமல் போனதால இப்போ கிட்னியோட பங்ஷன்ஸ் கொஞ்சம் குறைவா இருக்கு அதனால அவங்களை ரொம்ப கவனமா பார்த்துக்கனும் அதோட டயாலிஸிஸ் பண்ணாலும் ரொம்ப நாள் இருக்க முடியாது” என்ற போது கதிரேசனின் மனம் மொத்தமாக நொருங்கிப் போனது.


அந்த வலியோடு “ரொம்ப நாள்னா எத்தனை நாள்?” என்று தயங்கியபடியே கேட்டார்.


மருத்துவர் “மூணு மாசம் ஒரு வேளை டீரீட்மெண்ட் ஒத்துக்கிச்சுன்னா இன்னும் ஒரு வருஷம் கூட நீடிக்கலாம்” என்றார்.


அதைக்கேட்ட கதிரேசன் “சரிங்க டாக்டர் நீங்க சொல்ற மாதிரியே நான் இனிமேல் நீலாவை கவனிச்சுக்கிறேன் அவ நல்ல படியா இன்னும் ரொம்ப வருஷத்துக்கு வாழ்வாள்” என்று நேர்மறையாக பதில் சொன்னார் கதிரேசன்.


அவரின் பதிலைக் கேட்டு சிரித்த மருத்துவர் “இந்த நம்பிக்கைத் தான் எங்களுக்கு வேண்டும் நாளைக்கு டிஜ்சார்ஜ் பண்ணிக்கலாம் நான் கொடுக்கிற மருந்தையும் நான் சொல்ற உணவுமுறையே பாலோ பண்ணால் போதும்” என்றார்.


உடனே கதிரேசன் “சரிங்க டாக்டர் அடுத்த வாரம் எனக்கும் என் நீலாவிற்கும் எழுபதாம் கல்யாணம் கண்டிப்பா வந்திடுங்க” என்று தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து ஒரு அழைப்பிதழை எடுத்து மருத்துவரிடம் கொடுத்தார் கதிரேசன்.


மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்ததும் கதிரேசன் கிருஷ்ணனிடம் “இங்கே நடந்தது எல்லாம் நம்ம ரெண்டுபேருக்கு தெரிஞ்சது போலவே இருக்கட்டும்டா ஏன்னா நீலாக்கு தெரிந்தால் எனக்கு பாராமாக இருக்கிறேன்னு நினைச்சு கவலைப்படுவாள்.ஏற்கனவே பெத்த பிள்ளைங்க மூணு பேரும் அவங்க வாழ்க்கைத் தான் முக்கியம் போய்ட்டாங்க நான் அவங்களை குறைச் சொல்லலை ஏன்னா எங்களுக்கு தேவையான பணத்தை அனுப்புறாங்க தானே அதோட எனக்கு அறுபது வயசு முடியும் போதே இந்த நிகழ்ச்சியை நடத்தனும்னு நினைச்சு முடியலைன்னு ஒரே வருத்தம் நீலாவுக்கு இப்போ எழுபதாவது வயசில பீமரத சாந்தி நிகழ்ச்சிக்குத் தான் எல்லா பசங்களும் அவங்க குடும்பத்தோட பார்க்கலாம்னு எல்லோர்கிட்டயும் பேசி ஒத்துக்க வைச்சு இதை நடத்துறாள். பிறந்ததில் இருந்து அவங்க குடும்பத்துக்காக வாழ்ந்தவ என்னைக் கல்யாணம் பண்ணதிலிருந்து எனக்காகவும் பெத்த பிள்ளைங்களுக்காவும் நாட்களை ஓட்டியாச்சு இனிமேலாவது அவ இஷ்டப்படி சந்தோஷமா நடத்தட்டும் அன்றைக்கு எப்படி எனக்கு நீலாவை பிடிச்சிருக்குங்கிறதை தெரிஞ்சு எங்க அம்மாகிட்ட பேசி நம்ம ஊரு பொண்ணை
கல்யாணம் பண்ணி வைங்கன்னு பேசி என் திருமணத்தை நடத்தி வைச்சியோ அதேப் போல இந்த கல்யாணத்தையும் நடத்தி வைடா” என்று நடுங்கும் தன் கைகளை நண்பனின் தோள் சுருங்கிய கரங்களோடு இணைத்துக் கேட்ட நண்பனைப் பார்க்க நாற்பதைந்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த கதிரேசன் கிருஷ்ணனின் கண்களுக்கு முன்னால் வந்து போனான்.



விழிகள் முழுவதும் கண்ணீரை நிரப்பியபடி “சரி கதிரேசா எப்பவும் நான் உனக்கு துணையா இருப்பேன் இந்த கல்யாணத்தை நீலா விருப்பப்படி நடத்தலாம்” என்றார் நம்பிக்கையோடு….


கதிரேசன் நீலா இருந்த அறைக்குச் சென்றவர் அவளருகில் அமைதியாக உட்கார்ந்தார்.சிறிது நேரத்திற்குப் பிறகு மெதுவாக விழிகளைத் திறந்த நீலா “என்னங்க என்னாச்சு?”


“ஒன்னுமில்லைம்மா கிட்னில ஏதோ இன்பெக்ஷனாம் அதான் இப்படி மயக்கம் வந்திருக்கு”

“அப்படியா! வேற ஒன்னும் பயப்படுற மாதிரி இல்லைல்ல”


“அதெல்லாம் ஒன்னுமில்லை டாக்டர் சொன்ன மாத்திரைகளையும் டயட் பாலோ பண்ணாலே போதுமாம் நீ சரியாகிடுவே நீலா” என்று கதிரேசன் சொல்லவும் அதை முழுவதுமாக நம்பினார் நீலா.


“எப்படியோ நம்ம பிள்ளைங்க பேரப்பிள்ளைங்களோட சொந்தக்காரங்க எல்லோருடைய முன்னிலையிலும் பீமரத சாந்தி நல்லபடியா நடக்கனும்” என்று கடவுளை வேண்டிக் கொண்டார் நீலா.


மறுநாள் வீட்டிற்கு இருவரும் வந்து இருந்தனர்.எப்பொழுதும் போல் எல்லா வேலைகளையும் நீலா பார்க்கச் செல்ல இம்முறை கதிரேசனும் அவருடன் இருந்து எல்லாவற்றிருக்கும் உதவியாக இருந்தார்.


இதை எல்லாம் பார்த்து சிரித்த நீலா “அன்றைக்கு உங்களைப் பார்த்த போலவே இப்பவும் இருக்குங்க ஆனால் என்ன நமக்கு வயசு ஆயிடுச்சுன்னு நம்ம உடம்புக்கு வேணாம் தெரியலாம் மனசுக்கு இல்லைங்க அன்னைக்கு நீங்க பேசினதை நான் கேட்டதை தெரிஞ்சு அப்பவே சம்மதமான்னு சத்தமா கேட்டவங்க தானே நீங்க” என்றதும்


உடனே கதிரேசன் தன் சுருங்கிய உதடுகளோடு விரிய சிரித்தவர் “மேடம் மட்டும் உடனே பச்சைக் கொடி தான் பதில் சொன்னீங்களே அது என்ன?” என்றதும் இருவரும் ஒன்றாக சிரித்தனர்.


நீலா தன் கணவனின் நெஞ்சில் அன்பாக சாய்ந்துக் கொள்ள “ஏங்க எதாவது எங்கிட்ட மறைக்கிறீங்களா?”


“இல்லையே ஏன் என்னாச்சு?”


“எப்போ இந்த கரங்களை பிடிச்சீங்களோ அன்றைக்கு காட்டின அக்கறை தான் இதுவரைக்கும் அதுல துளி அளவுலக் கூட மாற்றம் இல்லை அது நம்ம ரெண்டுபேருக்குள்ளே எத்தனையோ தடவை வாக்குவாதம்,சண்டை வந்து மாறவில்லை.ஆனால் இந்த ஹாஸ்பிடல் போய் வந்துட்டு இரண்டு நாளா ரொம்ப அக்கறையா பார்த்துக்கிறீங்களே! அதான் கேட்டேன்” என்றார்.



உடனே புன்னகை ஒன்றை தந்தவர் “நமக்கு கல்யாணம் ஆகப் போகுதுல்ல அதனால் தான் இந்த அக்கறை” என்றார்.


நீலா வெட்கமாய் “அட போங்க” என்று சொல்லி விட்டுச் சென்றார்.பீமரத சாந்தியின் இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே வெளிநாடுகளில் இருந்த பெற்ற பிள்ளைகள் பேரன்,பேத்திகளோடு வீடே களபரத்திலும் மகிழ்ச்சியிலும் நிறைந்து இருந்தது.


திருமண நாளன்று முகம் முழுக்க புன்னகையோடு நீலா அமர்ந்திருக்க அருகில் கதிரேசனும் அந்த பூரிப்போடு அமர்ந்திருக்க நீலாவின் கழுத்தில் இரண்டாவது முறையாக திருமாங்கல்யத்தை தன் பிள்ளைச் செல்வங்கள் உற்றார், உறவினர் முன்னால் அதே மாறா அன்போடு கட்டினார் கதிரேசன்.


நீலா திருமாங்கல்யத்தை தன் வாழ்நாளின் பெரும் பொக்கிஷமாய் கையில் ஏந்திக் கொள்ள கதிரேசன் தன் மனதினுள் இந்த உயிர் அவரின் உடலில் இருக்கும் வரைக்கும் தன்னவளை இன்னும் அன்பும்,அக்கறையாய் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தோல் சுருங்கிய அழகிய வதனத்தை தன் பக்கம் திருப்பி நெற்றியில் அடுத்த அத்தியாயத்திற்கான அன்பு முத்தத்தை வைத்தார்.


வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது.

மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது.


நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே…





 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அழகான கதை. ஆரம்பம் தொட்டு முடிவு வரை மாறாத பந்தம் அவர்களுடையது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சாலிஹா💐💐💐
 
New member
Joined
Feb 16, 2025
Messages
8
அழகான கதை. ஆரம்பம் தொட்டு முடிவு வரை மாறாத பந்தம் அவர்களுடையது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சாலிஹா💐💐💐
மனமார்ந்த நன்றிகள் மேம் 😍😍😍
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top