- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
22
முதன்முறையாக முறைவைத்து அழைக்கும் தம்பி மனைவியை பாசத்துடன் பார்த்தவன், “எங்க வீட்டுல உள்ளவரால உனக்கு எந்த அவப்பெயரும் வந்திரக்கூடாதுன்னு மனசைக் கல்லாக்கிக்கிட்டுதான் ஐஸ் அப்படிச் செய்தா. எப்ப அவர் பற்றிய சந்தேகம் வந்ததோ அப்பயிருந்து, நீ அங்க இருந்தவரை உன்னை அறியாமலே பாதுகாப்பா வச்சிருந்தா. அவர் முன்ன ஐஸ் நிற்கவோ பேசவோ மாட்டாள். நானே அவர் இருக்கிற இடத்தில் இவளை இருக்க விடமாட்டேன். இப்பவும் உனக்காக உன்கிட்ட பேசியதைத் தப்புன்னு நாங்க நினைக்கலை. என்ன உன் மனசுல இவளுக்கான இடமில்லைன்ற வருத்தத்தில் அப்பப்ப புலம்புவா” என்று மனைவியின் தோளணைத்து கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
சுவீகரன் பேசப்பேச வாயடைத்துப்போய் கேட்டிருந்த பூரணிக்கு நடப்பவை அனைத்திற்கும் மறுபக்கம் ஒன்று உண்டென்று புரிந்த நிமிடம், “அக்கா என்னை மன்னிச்சிருங்க” என்று ஐஸ்வர்யாவின் காலில் விழுந்துவிட்டாள். அவள் செய்த உதவி அப்படிப்பட்டதாகிற்றே!
“ஏய் பூரணி! ஏய் என்னமா செய்யுற? எழுந்திரி” என்று கணவனைவிட்டு விலகி அவளை எழுப்பித் தன்னோடு அணைத்துக்கொள்ள, “ஐம் சாரிக்கா. ஐம் சாரி. நா..நான் தப்புப்பண்ணிட்டேன். ஒரு நிமிடம்கூட உங்க இடத்திலிருந்தது யோசிச்சிப் பார்க்கலை. அப்ப உங்க மேல அன்புன்னு நான் சொன்னதெல்லாம் வெறும் வாய் வார்த்தைதான. நீங்க ரொம்ப கிரேட் அக்கா. நான்தான்...” என புலம்ப,
“ஹேய்மா! போதும். ரொம்ப எமோஷனலாகுற பாரு. அமைதியாயிரு” என்று ஆறுதல்படுத்த, திடீரென்று பின்னிருந்து இருகைகள் ஐஸ்வர்யாவை அணைக்க, ‘இது யார்டா?’ என்று நினைக்கையில், “நானும் சாரிக்கா. பூரணி விஷயம் தெரிந்த நாளிலிருந்த உங்களைத் திட்டாத நேரமில்லை” என்று சண்முகி மன்னிப்பு கேட்டாள்.
“அட ரௌடி பேபி மன்னிப்பெல்லாம் கேட்கிறா. உனக்கு இந்த சென்டிமெண்ட் சீன் செட்டாகலையே” என்று சண்முகியைச் சீண்டினாலும், அதையும் மீறி அத்தனை நாளிருந்த அலைப்புறுதல் நின்று மனதிற்குள் பேரமைதி ஐஸ்வர்யாவுக்குள்.
“இப்ப மட்டும் செட்டாகிக்கட்டும்” என்று சண்முகி சிணுங்க, “அங்க எட்டிப்பாரு அவன் நம்மளை முறைக்கிறான்” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு அங்கு வந்த தினகரனைக் காட்ட... “முறைச்சா முழியைத் தோண்டி மண்ணுல புதைச்சிரலாம் அக்கா” என்றாள்.
“அப்படின்ற? அப்ப உரிமையோடத் தோண்டு” என்ற ஐஸ்வர்யாவின் தோளில் செல்லமாய் அடிக்க, அவர்களைப் பார்த்த பூரணி புரியாது விழித்தாலும் ஏதோ புரிவதுபோலிருக்க, “எனக்குத் தெரியாம என்னவோ நடக்குது” என்றவள் கன்னம் தொட்டு, சண்முகிக்கு ஒரு...”
திடீரென்று அங்கு வந்த குலரசேகரனைக் கண்டு பேச்சுகள் தடைபட்டு, இடமே அமைதியாகி கோபமூச்சுகள் மட்டுமே அங்கு சுழன்றது. அவர் முகம் பார்க்கக்கூட யாரும் தயாராயில்லை. முகம் திருப்பி நின்றிருந்த சின்ன மருமகளின் அருகில் வந்தவர் படாரென அவள் காலில் விழ, “அத்தை” என்று பூரணி அலற, அவரின் அச்செயலில் திடீர் அதிர்வு அங்கே!
எழுந்து அவள்முன் கைகுவித்தவர், “நான் மன்னிக்கிற தப்பைச் செய்யலைதான். இருந்தாலும் என்னை மன்னிச்சிருமா. நான் செஞ்சது யாருக்கும் தெரியாதுன்ற மிதப்புல இருந்துட்டேன். எல்லாரும் என்னை ஒதுக்கி வச்சப்ப கூட ஏன் எதுக்குன்ற காரணம் தெரியாமல் தவிச்சேன். இதை நான் கண்டிப்பா எதிர்பார்க்கலை. நீங்க பேசினதைக் கேட்கலைன்னா கடைசிவரை தண்டனைக்கான காரணம் தெரியாமலே போயிருக்கும். மனதின் சபலத்தால் என் குடும்பத்தையே இழந்துட்டு நிற்கிறேன். பெண்பாவம் பொல்லாதுன்றதை அனுபவப்பூர்வமா உணர்ந்துட்டேன்.”
“இங்க என்னை யாரும் அழைக்கலை. உங்க குடும்பத்தோட எப்பயிருந்து இந்தத் திடீர் உறவுன்னு தெரிஞ்சிக்கதான் அழையா விருந்தாளியா வந்தேன். வந்ததும் நல்லதுதான். எல்லார் மதிப்பிலிருந்தும் இறங்கி... ப்ச்..” என தனக்குத்தானே சுயபச்சாதாபம் எழ, “உன்னை அடுத்த வீட்டுப் பெண்ணா பார்க்காம, என் வீட்டுப் பெண்ணா பார்த்திருந்தா எதுவுமே மாறியிருக்காது. பெரிய தப்புப் பண்ணிட்டேன்மா” என்றார்.
கலங்கிய கண்களைத் துடைத்து ஐஸ்வாயாவிடம் வந்து, “நீயும் என்னை மன்னிச்சிருமா. இந்த நிமிடம் என்னை நானே அசிங்கமா பார்க்கிறேன். யாரையும் நேருக்கு நேர் பார்க்கிற தகுதிகூட எனக்கில்லை. உன் அத்தையோட நம்பிக்கையையும் முழுசா கெடுத்துட்டேன். ஏன் என் புத்தி அப்படியாச்சின்னு எனக்கேத் தெரியலை. வேண்டாத போதனை.. வேண்டாத நேரத்துல மூளைக்குள்ள புகுந்து என்னையே அழிச்சிருச்சி. இப்ப அதனால உங்களை இழந்து நிற்கிறேன்” என்றவர் திரும்பவும் பூரணியிடம் வந்து நின்றார்.
அவளோ பயத்தில் ஐஸ்வர்யாவின் கையை இறுக்கிக் கட்டிக்கொள்ள, பூரணியை ஆறுதலாக அணைத்துக்கொண்டாள்.
“நான் பண்ணின தப்புக்கு என் பையனைத் தண்டிச்சிராதமா. அவன் ரொம்ப நல்லவன். உன் அத்தையோட வளர்ப்பு சோடைபோகாது. உன்னை நல்லா பார்த்துக்குவான். என்னாலதான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன்ற அப்படின்னா, பிரச்சனைக்குரிய நான் இனி அங்கயிருக்கமாட்டேன். எனக்கு என் குடும்ப நிம்மதி முக்கியம்” என்று அங்கிருந்து நகர்ந்தவர் கண்முன் தோன்றியது அக்காட்சிகள்.
பாலைக் கொடுத்த அன்று ஏதோ ஒரு வேகத்தில் மகன் அறைக்குள் சென்றுவிட்டார்தான். ஆனால் அவர்கள் இருந்த கோலம் நிஜ கணவன் மனைவியைக் கண்முன் கொண்டுவர, முதன்முதலாகத் தன் தவறை உணர ஆரம்பித்தார். மகனின் தலையை மெல்ல வருடிக்கொடுத்து, மருமகளை தவறான எண்ணத்தில் இல்லாமல் தொட வர, மகனின் கரம் தன் கையைத் தட்டிவிட்டு மனைவியை அணைத்ததைக் கண்ட நிமிடம்தான், குலசேகரன் மனம் தன் தப்பை முழுதாக உணர்ந்து தெளிவானது.
மறுநாள் அவளை வீட்டைவிட்டு அனுப்பியதைக் கேட்டவருக்கு, தான் விதைத்த வினை என்பது புரிய, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்தார். ஏனோ அவள் முகம் பார்க்கத் திராணியற்றவராக, தன்னைப்பற்றிய உண்மை வீட்டினருக்குத் தெரியாதென்ற தைரியத்திலும், மகன் பைத்தியம் என்பதாலும், அவள் வீட்டில் பேசி மனைவியின் துணையுடன் மகனின் திருமண வாழ்க்கைக்கு முடிவும் கட்டிவிட்டார். இதோ அதற்கான பலனை அனுபவிக்கக் கிளம்பிவிட்டார் குலசேகரன்.
அவர் சென்ற நிமிடம் அப்படியே அமர்ந்தவள் வருடக்கணக்கில் சேர்த்து வைத்திருந்த அழுகையை அழுதாள். இதுதான் காரணமென்றில்லாது அனைத்திற்கு சேர்த்து அழுது தீர்த்தாள்.
அவள் துன்பம் போக சிறிது நேரம் அழவிட்டு, அவளருகில் அமர்ந்து தலையைக் கோதிக்கொடுத்து, “போதும் பூரணிமா. நடந்து முடிஞ்சதுக்காக அழுறது இதுவே கடைசியாயிருக்கட்டும். உன் வாழ்க்கையைப் பற்றிய முடிவெடுக்கிற நேரமிது. நல்ல முடிவோடதான் இந்த மண்டபத்தைவிட்டு நாங்க கிளம்புவோம்” என்றார் ஆனந்தி.
கணவனில் ஆரம்பித்து அனைவரும் அவளின் வாழ்க்கைக்கான முடிவெடுக்கச் சொல்ல, அங்கு வந்த மலையரசனும், ஜனனி ஜெஃப்ரினும் அதையே வலியுறுத்த, “முதலில் அவளை யோசிக்க விடுங்க” என்ற சண்முகி அனைவரையும் அனுப்பி தோழியிடம் வந்தமர்ந்தாள்.
“நீ என்ன முடிவெடுத்தாலும் என் ஆதரவு உனக்குதான் பூரணி. கடைசிவரை உன்னோடவே இருப்பேன். அதே சமயம் உன் கணவரோட வாழப்போனா இங்கேயிருக்கிற அத்தனை பேரையும்விட நான்தான் அதிகம் சந்தோஷப்படுவேன். எனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம்” என்றாள்.
“நான் எதிர்மறையா சொன்னா கல்யாணமே பண்ணாம என்னோட இருந்திருவ இல்ல சண்மு?” என்று அவளை ஆழ்ந்து பார்க்க,
சிறு அதிர்வு கண்ணில் வந்தபோதும், “அப்பவும் இப்படித்தான் ஏதோ உளறின. அப்படிலாம் எதுவும் கிடையாது பூரணி. சரியான ஆள் கிடைக்காததால வெய்ட்டிங்” என்றாள்.
“எனக்கு உண்மை தெரியும் சண்மு” என்றதும், “ப்ச்.. விடு பரவாயில்லை. மனசைப் போட்டுக் குழப்பிக்காம முடிவெடு” என்று எழுந்து அவளுக்கு யோசிக்க இடைவெளி கொடுத்துச் செல்ல, தோழியைக் கண்டவள் கண்கள் கலங்கியது. இத்தனை நடந்தும் கடைசிவரைத் தன்னுடன் இருக்கிறேன் என்பவளை என்னவென்று சொல்வாள். தோழிக்காகவாவது நல்ல முடிவெடுக்க வேண்டுமென்ற எண்ணம் எழாமலில்லை.
“நீ நட்பாகக் கிடைக்க என்ன தவம் செய்தேன் சண்மு. இக்கலிகாலத்தில் உன்னைப்போல் லட்சத்தில் ஒருத்தி மட்டுமே இருப்பாள். உன் நட்பு கிடைக்க நான் எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தேனோ!”
“என் பிடிவாதத்தால் எனக்குப் பிடித்தவர்களைக் கஷ்டப்படுத்த மட்டுமே செய்திருக்கேன். எனக்காகவே என்னை விட்டு விலகப்போவதாகச் சொல்லும் என் வசீகரன்! என்ன தப்பு செய்தாங்க அவங்க? ஒரு உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை நினைக்காது போனதில், மனநிலை பிறழ்ந்தது அவங்க தவறில்லையே? தன்னைப் பற்றிய உண்மை தெரிந்ததும் என்னைத் தேடித்தானே வந்தாங்க.”
“வசீகரனைப் பிடித்திருந்தும் மறுக்கும் நிலையைக் கடவுள் ஏன் கொடுக்கணும்? யார் யாருக்காகவோவா திருமணம் செய்தது? இல்லையே. நாங்க வாழத்தானே! ஏன் வாழக்கூடாது? யாரோ ஒருத்தருக்காக என் வாழ்வோட சேர்த்து என் வசீகரன் வாழ்வையும் ஏன் அழிக்கணும்? இல்லை நான் வாழ்வேன். இனியொரு முறை என் வசீகரனை என்னிடம் யாசிக்க விடமாட்டேன்.”
மனதில் ஒரு தெளிவு எழுந்ததும் தன் முடிவைத் தோழியிடமும் மாமியாரிடமும் சொல்ல, இதோ அனைவரின் ஆசீர்வாதத்துடன் தன் கணவனின் முன் நிற்கிறாள்.
“பரி நீ..” என்றவனை பட்டென்று அடிக்க, திகைத்து நின்றவனைக் கண்டு, “ஏன்டா.. வேற யாரையாவது பிடிச்சா நான் கல்யாணம் செய்துக்கணுமா? சொல்லு செய்துக்கணுமா? ஒண்ணுக்கு இரண்டு முறை தாலி கட்டிட்டு பேச்சா பேசுற? எவ்வளவு தைரியமிருந்தா என்னைப் பார்த்து அப்படிச் சொல்வ? அதோட என்னை விட்டுட்டு கண்காணாத இடத்துக்குப் போயிருவியா? நான் வேண்டாமா உனக்கு? ஆனா எனக்கு நீ வேணும். நீ மட்டும்தான் வேணும். என்னை விட்டுப் போகணும்னு நினைப்பியா?” என்று அவனை விடாது அடித்தாள்.
அவளின் செல்ல அடியில் நிதானத்திற்கு வந்திருந்தவன், தன்னைச் சூழ்ந்த துன்பத்தையெல்லாம் ஆழ மூச்செடுத்து வெளியே தள்ளி, மனைவியின் கைபிடித்து கண்பார்த்து, “காலையில் மூன்றாவது முறையா தாலி கட்டுறேன் பரி. அதுவும் உன் முழு சம்மதத்தோடு” என்றான் வசீகரப் புன்னகை சிந்தி.
“உன்னை.. போடா..” என்றாள் சிணுங்கலாக.
“போடா வேண்டாம் பரிமா. வாடா சொல்லு” என்று மார்போடு மென்மையாய் அணைக்க, அவர்கள் மேல் பூமாரி பொழிந்தது இளையவர்களின் சந்தோஷக் கூச்சலுடன்.
தலையில் விழுந்த பூக்களை எதிர்பாராததால் வெட்கத்தில் கணவனை விட்டு விலக, “ஹேய் பூரணி வாழ்த்துகள்” என்று தோழியை மெல்லியதாய் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் சண்முகி.