- Joined
- Aug 31, 2024
- Messages
- 21
- Thread Author
- #1
அத்தியாயம் - 5
சரவணன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்க, வினோத்தும் சந்துருவும் கன்னத்தில் கை வைத்துத் தலையைத் தொங்க போட்டு உட்கார்ந்திருந்தனர்.
“நீங்க எல்லோரும் ஊருக்கு வந்து எத்தனை வருஷமாச்சு. அன்னைக்கு இருந்த மாதிரியா இன்னும் இருக்கும்? என்னென்ன மாறியிருக்குனு இங்க இருக்கிறவங்களுக்குதானே தெரியும். போறதுக்கு முன்னாடி என்னிடம் கேட்டுட்டு போயிருக்கலாமில்ல” கோபத்தில் மலை உச்சியில் நின்று கொண்டிருந்தார்.
“அப்பா, எதுக்கு இப்ப கத்திட்டு இருக்கீங்க? அதான் மச்சான் ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகலையே” பரிந்து கொண்டு வந்தாள் திவ்யா.
“கடவுள் புண்ணியத்தில் அவங்களுக்கு ஒன்னும் ஆகலை. மகேஷை நினைச்சுப் பார்த்தியா? உயிர் பிழைத்ததே மறு பிழைப்புன்னு டாக்டர் சொல்லியிருக்கார். அவனால்தான் அந்தக் குடும்பமே நல்லா இருக்கு. அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தா அவன் தங்கச்சிங்க நிலைமை என்ன ஆகியிருக்கும்!”
“ஏன்பா அவரை மச்சானா கூப்பிட்டாங்க. அவராத்தானே போயிருக்கார். மேலே பார்க்காதீங்கன்னு தாத்தா சொல்லியும் மேல பார்த்தது அவர் தப்பு. அதுக்கு இவங்க ரெண்டு பேரையும் திட்டி என்ன ஆகப் போகுது?” அடுத்து இலக்கியாவும் ஆதரவுக்கு வர, ‘ஆ’ வென்று சந்துரு பார்த்திருக்க, வினோத் அவன் வாயை மூட, சந்துரு முறைப்புக்கு ஆளானான்.
“மாமா, கேட்காம போனது தப்புதான். பழைய ஃப்ரெண்ட்ஸ் வருவாங்கன்னு நினைச்சு ஆசையில் போயிட்டோம் மன்னிச்சிருங்க” வினோத் சொல்ல, சற்றென்று கோபம் தணிந்து அமைதியாகப் பேசினார்.
“மாமா, சங்கவி பற்றி இங்க யாருக்கும் எதுவும் சொல்லலையா?” சந்துரு கேட்க,
“சொல்லலை. சொல்ற மாதிரியா அவ பண்ணிட்டுப் போயிருக்கா. காதலிச்சது தப்பில்லை. படிச்சு முடி. அதுக்குப் பிறகு மற்றதை பேசிக்கலாம்னு சொல்லியும் நம்மை நம்பாம ஓடிப் போனவளைப் பற்றி எப்படிச் சொல்ல முடியும். இது கிராமம் சின்ன விஷயம்னாலே பெரிசா பேசுவாங்க. இந்த மாதிரி விஷயமெல்லாம் அவங்களுக்கு அல்வா கொடுக்கிற மாதிரி. கல்யாணம் பண்ணிட்டு வெளிநாடு போயிட்டான்னு சொல்லி வச்சிருக்கேன். ஆமா நீ ஏன் கேட்ட?”
“சங்கவி ஃப்ரெண்ட்ஸ் எங்களைப் பார்த்ததும் அவளைப் பற்றிக் கேட்டாங்க.”
“ம்ம்ம்… மாப்ள உங்க வீட்ல என் பொண்ணுங்களைக் கட்டிக் கொடுக்கப் போறேன். அதனால், எங்க குடும்பக் கௌரவமும் இதில் அடங்கி இருக்கு. அதான் அப்படிச் சொன்னேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க” சந்திரனிடம் பணிவாகச் சொன்னார் சரவணன்.
“அப்படி ஒருத்தி எனக்கும் மகளா பிறந்ததாவே எனக்கு ஞாபகம் இல்லை மச்சான்” என்று ஒரே வார்த்தையில் பட்டென்று முடித்தார் சந்திரன்.
இருவரின் பேச்சைக் கேட்டு தெய்வாணையின் முகம் மாறிக் கண்களில் நீர் திரண்டது. தன்னால் எதையும் வெளியில் பேச முடியாத சூழ்நிலை என்பதால் திரண்ட கண்ணீரை சிந்தாமல் அடக்கி வைத்தார்.
பேசுவது எல்லாம் வினோத்தின் காதுகளில் விழுந்தாலும், எதையும் கவனிக்காமல் தான் மட்டும் பலத்த யோசனையில் இருக்க, அதைக் கண்ட திவ்யா உறித்துக் கொண்டிருந்த வெங்காயத்தை அவன்மீது எறிந்தாள்.
சட்டென்று திரும்பியவனிடம் கண்ணால் என்ன யோசனையெனக் கேட்க, “ம்ப்ச்” ஒன்னுமில்லையெனத் தலையை அசைத்து வெங்காயத்தை அவள் மீதே வீசினான். இருவரின் விளையாட்டைக் கண்டும் காணாமலும் சந்திரனும் சரவணனும் வெளியில் புறப்பட்டனர்.
சரவணன் செல்லும் வரை காத்திருந்த இலக்கியா, “அம்மா, நான் எப்போ சந்துருவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அப்பா என்னையும் சேர்த்து கட்டிக் கொடுக்கிற மாதிரி சொல்றார்” யாருக்கும் எதுவும் தெரியாது என நினைத்து இலக்கியா வள்ளியிடம் கேட்க.
“ஆமா உனக்குன்னு ஊர் ஊரா தேடிட்டு அலைய முடியாது. பக்கத்திலையே ஈசியா கிடைக்கிற சந்துருவுக்கே கட்டிக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். சந்துரு, உனக்குக் காவ்யாவை கட்டிக்க இஷ்டமில்லையா?” வள்ளியம்மை திடீரென்று எல்லோர் முன்னாடியும் கேட்கவும் பதில் சொல்லத் தடுமாறியவன், ‘ஆமா’, ‘இல்லை’ என இரு பக்கமும் தலையை ஆட்டினான்.
வினோத்தும் திவ்யாவும் இருவரையும் கேலியாகப் பார்த்துச் சிரிக்க இரண்டு பேரையும் பார்த்த இலக்கியா ஏதோ வில்லங்கம் இருக்கெனப் புரிந்தவள் என்னவாக இருக்குமென யோசனையில் ஆழ்ந்தாள்.
“திவ்யா, நேத்து ஆன்லைனில் மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கேன்னு சொன்னியே, அதை டிவியில் போட்டுக்காட்டு இலக்கியா பார்த்துட்டு யாரை பிடிச்சிருக்குன்னு சொல்லட்டும். அதுக்கு முன்னாடி அந்த வீடியோவில் இருக்கிற மாப்பிள்ளையையும் போட்டுக்காட்டிடு” என வள்ளி தெய்வானையைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.
சந்துருவின் முகம் மாறினாலும் காட்டிக் கொள்ளாமல் இருந்தான். வீடியோ என்றதும் மூளை வேகமாக வேலை செய்ய, கண்டிப்பா இதில் ஏதோ இருக்கு. நாம இங்கிருந்து போறதுதான் நல்லதென எண்ணியவன் மகேஷைப் பார்க்கப் போவதாகச் சொல்லி எழுந்தவனை இழுத்து உட்கார வைத்தான் வினோத்.
“இலக்கியாவுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறோம். நீ மட்டும் மகேஷைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு இருக்க. ரெண்டு பேரும் சேர்ந்தே போலாம். முதல்ல இலக்கியா மாப்பிள்ளையைப் பார்க்கலாம்” என்ற வினோத்திடம் மறுப்பு சொல்ல முடியாமல் அமர்ந்தான்.
திவ்யா வீடியோவை ஓட விடச் சட்டென்று சுதாரித்த இலக்கியா எழுந்து ஓட எத்தனிக்க அவள் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தாள் திவ்யா.
“என்னப்பா தம்பி வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு ரொமான்ஸ் எல்லாம் வேற லெவல்ல இருக்கு. இப்ப சொல்லு இலக்கியாவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கலாமா?” கிண்டலாக வினோத் கேட்க,
“நான் எப்பவுமே அவளை வேண்டாம்னு சொல்லலை. அவதான் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கா. இப்பவும் மாமா சொன்னதுக்கு அத்தையிடம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கா. அவளுக்கு என்ன இஷ்டமோ அதையே எல்லோரும் செய்ங்க” என்றவன் எழுந்து திரும்பவும் வெளியில் செல்ல எழ,
“என்ன அவசரம் வீடியோவை முழுசா பாரு. அவளுக்கு இஷ்டமா இல்லையான்னு தெரியும்.”
இலக்கியா ஒளிந்திருந்து பார்த்ததையும் அவள் வெட்கப்பட்டுச் சென்றதையும் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி என்றாலும் அவள் வாயிலிருந்து சம்மதம் என்ற வார்த்தை வரலையே என்ற ஆதங்க முண்டியடித்து நின்றது.
“இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதை வைத்து அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு எப்படிச் சொல்றீங்க? காதல் மனசிலிருந்து வரனும். பார்த்ததும் வரது காதல் இல்லை. அந்த நேரத்தில் வினோத் அங்க இருந்தாலும் நான் செய்ததைதான் செய்திருப்பான். அதுக்காகத் திவ்யாவிடம் இருக்கிற காதல் இலக்கியாவிடம் மாறிட்டுன்னு சொல்வீங்களா? அது ஒரு உதவி அவ்ளோதான்” படபடவெனப் பேசியவன் எழுந்து வெளியில் செல்ல, திரும்பி இலக்கியாவை ஒரு பார்வைப் பார்த்துச் சென்றான்.
“ஏன் திவ்யா இப்ப நாம லூஸா? இல்லை, அவன் லூஸா? இப்படி வேதாந்தம் பேசிட்டுப் போறான்” என வினோ திவ்யா முகம் பார்க்க,
“வீட்டில் ஒன்னுன்னா பரவாயில்லை. ரெண்டு லூஸை வச்சிகிட்டு நாங்க எப்படித்தான் குப்பைக் கொட்ட போறோமே தெரியலையே கடவுளே காப்பாத்தப்பா” திவ்யா கைகளை மேலே தூக்கி விரல்களை விரிக்க,
“ம்ம்… கல்யாணம் பண்ணிட்டு வந்ததும் எப்படிக் குப்பை கொட்டுறதுன்னு தெரிஞ்சிப்ப. அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒன்னுமே இல்லையாம். நீ மற்ற மாப்ளை போட்டோவைப் போடு. இலக்கியா பார்த்து யாரை பிடிச்சிருக்குன்னு சொல்லட்டும். இலக்கியா, பார்த்துச் சட்டுன்னு சொல்லுமா. நீ இழுத்துட்டே போனா எங்க கல்யாணத்தையும் உங்க அப்பா இழுத்துட்டுப் போவார்” ஆதங்கத்தில் வினோத் சொல்ல.
சந்துருவின் மனதில் என்ன இருக்கு என்பதைத் தெரிந்து கொள்ளத்தானே தாயிடம் பீடிகைப் போட்டாள். தன்னையே சொல்லச் சொல்றானே, அவனுக்குக் காதல் இருக்கா? இல்லையா? இருதலைக் கொள்ளியாகத் தவித்த இலக்கியா வினோத் கேட்டதைக் காதில் வாங்காமல் அறைக்குள் சென்றாள்.
“ரெண்டும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிட்டு இருக்குங்க. இன்னும் எத்தனை நாளைக்குன்னு பார்க்கலாம்” திவ்யா சொல்ல, மற்ற மூவரும் சிரித்தனர்.
******