• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிலவாக உனக்குள் - 4

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
19
அத்தியாயம் - 4
"இராத்திரி படுக்கும்போது கிரைம், திரில்லர், ஹாரர் படமெல்லாம் பார்க்காதன்னு சொன்னா கேட்கியா? கண்டதையும் பார்த்தா கனவு கண்டபடிதான் வரும்” என தெய்வானை காலையில் எழுந்ததும் வினோத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.

வினோ திட்டு வாங்குவதைக் கண்டு வாயில் கையை வைத்து மூடிக் கேலியாகச் சிரித்தபடி இருந்தான் சந்துரு. அதில் இன்னும் அதிகமான கோபம் வினோத்துக்கு ஏறியது.

“ஆமாம்மா, இவன் கனவு கண்டதும் இல்லாம என்னையும் அப்பாவையும் கொலைகாரனா ஆக்கிட்டான். ஆனால், உண்மையிலே இவன் அடித்த அடியில் நான்தான் பரலோகம் போயிருப்பேன். நல்ல வேளை தப்பித்தேன்” என தெய்வானைக்கு மேலும் சந்துரு எடுத்துக் கொடுக்க, சந்திரன் அவன் தலையில் தட்டிச் சாப்பிடு என்று தட்டின் பக்கம் கையை நீட்டினார்.

“அம்மா, நான் கனவு இல்லைன்னு சொல்றேன். நீங்க திரும்பத் திரும்பக் கனவுன்னே சொல்லிட்டு இருக்கீங்க. என்னால் ரொம்ப நேரம் கை, கால் எதையும் அசைக்க முடியலை. நீங்க நம்புனா நம்புங்க” என்று கோபத்தில் சாப்பிட்ட தட்டைப் பாத்திரம் கழுவும் தொட்டியில் வீசிவிட்டு தன் பையைத் தோளில் மாட்டியபடி வெளியேறினான்.

வினோத்தின் கோபம் கண்டு தெய்வானை அமைதியாக, சந்துருவின் தலையில் அடித்த சந்திரன், “ஏத்திவிட்டல்ல! போய்ச் சாமாதானம் செய் போ” என்றதும் தன் இருசக்கர வாகனத்தில் சென்று வினோத்தின் முன் நிறுத்தினான்.

“வண்டியில் ஏறு. நான் கொண்டு போய் விடுறேன்.”

“நான் உன்னைக் கொலை பண்ண பார்த்தவன். போற வழியில் ஏதாவது உன்னைப் பண்ணிடுவேன்” என விடுவிடுவென நடந்தான்.

சந்துரு அவன் பின்னாடியே சென்று, “பைத்தியம் மாதிரி பேசாத கிணடலுக்குப் பேசினதை எதுக்குச் சீரியஸா எடுத்துட்டுப் பேசுற? சரி அதைச் சாயங்காலம் பேசிக்கலாம். இப்ப வண்டியில் ஏறு.”

“ஆமா நான் பைத்தியம்தான். பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் அட்மிட் பண்ணு” என்று நடையின் வேகத்தைக் கூட்டினான்.

வண்டியில் அமர்ந்தபடியே இரு கைகளையும் கட்டிக் கொண்டு வினோத் செல்வதையே பார்த்திருந்தான் சந்துரு. இருவரையும் பார்த்திருந்த தெய்வாணையும் சந்திரனும் ஒருவர் ஒருவரைப் பார்த்துப் பெருமூச்சு விட்டனர்.

வீட்டிலிருந்து கோபத்தில் சென்ற வினோத் அலுவலகக் காரில் செல்லும் போதும் முகத்தை, ‘உர்ரென்று’ வைத்தபடியே வந்தான். அவனைக் கண்ணாடியில் பார்த்தபடியே வந்தான் கண்ணன்.

“என்ன வினோ தம்பி முகம் ரொம்ப அஷ்ட கோணலா இருக்கு. பின்னாடி வர்ற வண்டியைக் கண்ணாடியில் பார்த்தா உன் முகம்தான் தெரியுது.”

“சும்மா இருங்கண்ணா நீங்களும் என்னைக் கிண்டல் பண்ணாதீங்க. நான் ரொம்பக் கோபத்தில் இருக்கேன்” என்றவன் பார்வையைச் சன்னல் பக்கம் திருப்பினான்.

“ம்ம்… அப்போ வீட்டில் கேலி பண்ணதுக்குத்தான் இவ்வளவு கோபமா? இப்படியே ஆபீஸ் போனா எல்லாம் தப்பும் தவறுமாத்தான் இருக்கும். அதனால், என்ன நடந்ததுன்னு வெளிய அவிழ்த்துவிடு” மூச்சை உள்ளிழுத்து வெளியில் விட்டபிறகு இரவு முதல் காலை வரை நடந்ததைச் சொன்னான்.

“அட! எங்கப்பா கூட அடிக்கடிச் சொல்வாங்க. யாரோ என் மேல படுத்து அசையவிடாம அழுத்திப் பிடிச்சிட்டு கொல்ல முயற்சி பண்றதா சொல்வாங்க. அப்பெல்லாம் அடிக்கடி இராத்திரி தூக்கத்தில் புலம்புவாங்க, கத்துவாங்க. வேற வீடு மாறிப் பார்க்கலாம்னு அம்மா சொன்னாங்கன்னு வேற வீடு வந்தோம். அதிலிருந்து அப்பா நல்லா இருக்காங்க” என்றாள் சக தோழி.

“ஓ! இராசி இல்லைன்னு சொல்றியா? இல்லை, அந்த வீட்டில் பேய் இருந்ததுன்னு சொல்றியா? எனக்கென்னமோ உன் அப்பாக்கு வீடு பிடிக்கலைன்னு காலி பண்ண இப்படியொரு நாடகம் போட்டிருப்பாரோன்னு தோனுது” கண்ணன் சிரித்தபடியே சொல்ல.

“எதுனாலும் இருக்கலாம். உங்க மனோ தத்துவப்படி மனதில் உள்ள ஏதோ ஒரு பயம் எங்க அப்பாவை ஆட்டி வைத்திருக்கலாம்.”

“ஹா! ஹா!” எனச் சிரித்த கண்ணன், “நூறு சதவீதம் அதுதான் உண்மை. பேய், இராசி இல்லை என்பதெல்லாம் சும்மா. வினோ உன் அடி ஆழ மனதில் ஏதோ ஒரு குழப்பம் உன்னை ஆட்டுது. நீ எதுக்கும் டாக்டரைப் பாரேன்.”

நீங்களும் என்னைப் பைத்தியம்னு சொல்றீங்களா?” என வினோத்தின் முகம் வெளிறியது.

“நான் உன்னைப் பைத்தியம்னு சொல்லலை. உன் பிரச்சனைக்குத் தீர்வு காணச் சொல்றேன். நீ பைத்தியமா இருந்தா இராத்திரி மட்டும் இருக்கமாட்ட. பகலிலும் லூசாத்தான் இருப்ப. நீ மனசில் குழப்பிக்கிற ஏதோ ஒன்னு இராத்திரியில் பிரதிபலிக்குது. நீ பத்து நாள் லீவு போட்டு ஏதாவது ஊருக்குப் போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாயேன். இடமாற்றம் உன் பிரச்சனைக்கு வழி காட்டலாம் இல்லையா?”

கண்ணன் சொல்வதைக் கேட்ட வினோத் கண்களை மூடிச் சாய்ந்து யோசனையில் ஆழ்ந்தான். பத்து நாள் ஊருக்குப் போயிட்டு வந்தா என்ன? என்ற யோசனையில் ஆழ்ந்தவன் அலுவலகம் உள்ளே சென்றதும் தன் தந்தை சந்திரனை அழைத்து ஊருக்குச் செல்வதைப் பற்றிச் சொன்னான் வினோத். மாலை வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம் என்றார்.

மாலை வீட்டில் தெய்வானை குட்டிப் போட்ட பூனைபோல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட வினோத் புன்னகை ததும்ப உள்ளே நுழைந்தான்.

வினோத்தைக் கண்டதும் தெய்வானை, “நானே உன்னிடம் கேட்கனும்னு நினைச்சேன். நீயும் சந்துருவும் லீவு கிடைக்கலை கம்பெனியே உங்க தலையில் நடக்கிற மாதிரி சீன் போடுவீங்க. அதான் கேட்கலை. இப்ப நீயே கேட்டதால் உன் புத்தி மாறிடக் கூடாதுன்னு நாளைக்கே கிளம்ப டிக்கெட் போட்டாச்சு. ஊருக்குப் போய் அஞ்சு வருஷத்துக்கு மேலாச்சு” கூதுகுலமாகச் சொன்னார்.

அம்மா இப்படி ஏதாவது செய்து வைப்பார் என்று பத்து நாட்கள் விடுமுறை எடுத்ததும் இல்லாமல், சந்துருவையும் விடுமுறைக்குக் கேட்கச் சொல்லிக் கிடைத்துவிட்டதா என்பதையும் உறுதி செய்து கொண்டான் வினோத்.

******

மறுநாள் திட்டமிட்டபடியே நால்வரும் சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள வெள்ளாங்குழிக்குப் பயணமானார்கள்.

ஊருக்கு வருவதை முன்னாடியே கூறி இருந்ததால் ஆட்களை வைத்துச் சரவணனும் வள்ளியம்மையும் வீட்டைச் சுத்தம் செய்து வைத்திருந்தனர். காலை உணவையும் தயார் செய்து வைத்திருந்தார்.

வினோத் வருகிறான் என்றதும் இருப்புக் கொள்ளாமல் வாசலுக்கும் அறைக்கும் நடந்து கொண்டிருந்தாள் திவ்யா. அவள் செய்வதை எல்லாம் காணொளியாகப் பதிவு செய்து வினோத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தாள் இலக்கியா.

ஒவ்வொரு காணொளி காட்சிகளையும் கண்டு ரசித்தவன் அவளுடன் விளையாட நினைத்து வரும் வழியில் தோட்டத்தில் இறங்கிவிட்டு தான் வரவில்லை என்று திவ்யாவிடம் கூறுமாறு மற்றவர்களை அனுப்பி வைத்தான்.

வீட்டிற்கு வந்ததும் திவ்யாவின் கண்கள் வினோத்தை தேடி கலைத்துப் போய்த் தொட்டாச் சிணுங்கியாக முகம் மாறியது.

“மச்சான் வரலையா அத்தை?” என்றவளின் முகம் வாடிய மலராகச் சுருங்கியிருந்தது.

“இவ்வளவு பெரிய உருவம் முன்னாடி நிற்கிறேன் கண்ணுக்குத் தெரியலையா?” என்ற சந்துருவை திவ்யா அடிக்கப் போக, “உன் ஆளுக்கு நேற்று லீவு கொடுத்தாங்க. கிளம்புற நேரத்தில் லீவ் இல்லை ஆபீஸ்க்கு கண்டிப்பா வரனும்னு சொல்லிட்டாங்க. கடைசி நேரத்தில் ஒன்னும் செய்ய முடியலை. அதான் நாங்க மட்டும் வந்தோம்” என்று அவள் அடியிலிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டே சொன்னான் சந்துரு.

மூச்சு வாங்க நின்றவளுக்கு அவன் வரவில்லை என்றது ஏமாற்றமாக இருக்க, கண்களில் நீர் தேங்கியது. மற்றவர்கள் முன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கடினப் புன்னகையை உதிர்த்தாள். அதற்கு மேல் தன் முகத்தை மறைக்க முடியாமல் தன் வீட்டிற்குச் செல்ல வாசலுக்குச் சென்றாள்.

“அழறதுன்னு முடிவு பண்ணிட்ட. அதை இங்கயே அழ வேண்டியதுதானே. வீட்ல போய்த் தலைவாணியை நனைக்கனுமா? அது காயப் பத்து நாளாகும், இது தேவையா? உன் ஆளு வந்திருக்கான். தோட்டத்தைப் பார்க்கப் போயிருக்கான். இங்க நீ பண்றதை எல்லாம் அந்தக் குட்டிச் சாத்தான் வீடியோ எடுத்து அனுப்பிட்டு இருக்கா. அதான் ஐயா உன்னிடம் விளையாட நினைச்சிட்டார்” என்றான் சந்துரு.

இலக்கியாவின் பக்கம் திரும்பிய திவ்யா தன் அருகில் இருந்த கிண்ணத்தை எடுத்து அவள் மீது வீச, சரியாக அதைப் பிடித்த இலக்கியா அதே வேகத்தில் சந்துரு மீது வீசினாள்.

இதைச் சற்றும் எதிர்பாராத சந்துரு சுதாரிப்பதற்குள் அவன் தலையில், ‘நங்’ என்று விழுந்தது. சிரித்தவாறே திவ்யா தோட்டத்திற்கு ஓட, “வாவ்! சூப்பர் ஷாட்!” என்று கைதட்டிய இலக்கியாவை பிடிக்கத் தலையைத் தடவி கொண்டே எட்டெடுத்து வைத்த சந்துருவிடமிருந்து தப்பிக்க இலக்கியாவும் ஓட்டமெடுத்தாள்.


பிள்ளைகளின் குறும்புகளைக் கண்டு ரசித்தபடி இருந்த பெரியவர்கள் அதே மகிழ்ச்சியோடு தங்கள் கதையைப் பேசத் தொடங்கினார்கள்.

******
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
19
வினோத்தை தேடி தோட்டத்திற்கு வந்த திவ்யா அவனைக் காணாது தோட்டம் முழுவதும் சுற்றி சுற்றி வந்தாள். வினோத்துக்கு மரம் ஏறத் தெரியும் என்பதால் மரத்தின் மீது இருக்கிறானா என்று தலையைத் தூக்கியபடி நின்றிருந்தவளை பின்னிருந்து தூக்கி பல முறை சுற்றிய பிறகே கீழே இறக்கினான்.

தலை கிறுகிறுக்க வினோத்தின் மார்பில் சாய்ந்து நின்ற திவ்யா சிறிது நேரம் கண்களை முடியவள் திரும்பி அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

“யோவ் மச்சான் இப்படியா பயமுறுத்தறது வர வர உங்க விளையாட்டுக்கு அளவே இல்லாம போச்சு. எல்லாத்தையும் மொத்தமா சேர்த்து அடக்குறேன்” என எகிறியவளின் கன்னத்தில் இட்ட முத்தத்தில் ஒரே நொடியில் அடக்கினாள். எதிர்பார இதழ் ஒற்றலில் தானாக அவன் அணைப்பில் அடங்கிப் போனாள்.

சில விநாடிகள் கரைந்து போக மெல்ல திவ்யாவை விடுவித்து அவள் முகம் பார்க்க, அவனைக் காண முடியாமல் நாணம் மேலிட அவன் நெஞ்சமெனும் பஞ்சணையில் தஞ்சமடைந்தாள்.

இருவரும் காற்று நுழையா வண்ணம் நின்றிருந்ததைக் கண்ட காற்று ரூபத்தில் இருக்கும் உருவம் பொறாமை கொண்டு தென்னை மட்டையைக் கீழே தள்ளியது. மட்டை வரும் சத்தம் கேட்டு மேலே பார்த்தவர்கள் உடனே சுதாரித்துத் தள்ளி நிற்க, இருவரின் தலை தப்பியது.

கடைசி நேரத்தில் இருவரும் விலகிச் சென்று தப்பித்தது உருவத்தும் பெருத்த ஏமாற்றத்தைத் தர, அதுவே அதுக்கு இன்னும் கோப வெறியை உண்டாக்கி காற்றைப் பலமாக வீசச் செய்தது. காற்றின் வேகமாக அதிகமாவதைக் கண்டது திவ்யாவும் வினோவும் வீட்டிற்கு நடந்தனர்.

******

சந்துரு விரட்டி வருகிறான் என்று ஓடிய இலக்கியா, அதற்கு மேல் செல்ல முடியாமல் வழி தேடி திணறினாள். பின்னாடியே வந்த சந்துரு அவளை நெருங்கிக் கொண்டிருக்க, முன்னாடி போனாலும் உதைக்குது பின்னாடி போனாலும் உதைக்கும் என்ன செய்யவென்று எதையும் யோசிக்காமல் கால்வாயில் சட்டென்று குதித்துவிட்டாள்.

அவளை எட்டிப் பிடிக்க எகிறிய சந்துருவின் கைகளில் அவள் துப்பட்டா சிக்க, ‘ச்ச’ என்று தரையில் கால்களை ஓங்கி அடித்தான்.

நீச்சல் நன்றாகத் தெரியும் என்ற தைரியத்தில் குதித்துவிட்டாள். குதித்த பிறகுதான் யோசித்தாள் அக்கரைக்குப் போக முடியாதென ஞாபகம் வந்தது.

சந்துரு சிரித்துக் கொண்டே துப்பட்டாவை தலையில் சுற்றி சம்மணமிட்டு உட்கார்ந்துவிட்டான். வேறு வழியில்லை என்பதால் மேலே ஏறிய இலக்கியா தன் உடையைக் கண்டு தண்ணீருக்குள் மூழ்கினாள்.

ஒரு நொடி மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்த சந்துரு சடாரென்று எழுந்து நிற்க, மடமடவென்று தன் சட்டையைக் கழற்றி நீருக்குள் இறங்கி கொடுக்க, “இந்தச் சட்டையைப் போட்டுட்டு மேல வா” என்று கரையேறி திரும்பி நின்றான்.

சட்டையை அணிந்த பிறகு மேலே வந்த காவ்யாவிடம், “உன்னைஅப்படி என்ன பண்ணிடப் போறேன்? என்ன மாதிரி டிரெஸ் போட்டிருக்கன்னு யோசிக்காம தண்ணியில் குதிச்சிருக்க” என்றவன் துப்பட்டாவையும் போர்த்திவிட்டு, “போ போய் டிரெஸ் மாத்திட்டு வா. அப்புறம் வச்சிக்கிறேன் உனக்குக் கச்சேரி” எனச் சொன்னவனைப் பார்த்து முகத்தைச் சுழித்துக் காட்டிச் சென்றாள்.

வெள்ளை உடை அணிந்திருந்த இலக்கியா நீரில் நனைந்ததும் உள்ளாடைகள் வெளியில் தெரிய, அதே நேரம் அங்கு வந்த திவ்யா ஓடி வர அவளைப் பிடித்து நிறுத்தி, அமைதியாக வேடிக்கைப் பார்க்கச் சொன்னான் வினோத்.

சந்துருவின் செயலைக் கண்டு கண்களை விரித்த திவ்யா, “அட! மச்சான், இந்த ஜோடி சேராதுன்னு நினைச்சேன், சேர்ந்திருமா?” எனக் கேட்க.

“இது சாதாரண உதவிதான் இதை வைத்து எதையும் எடை போட முடியாது. பொறுத்திரு என்ன நடக்குன்னு வேடிக்கை பார்க்கலாம்” என இருவரும் மறைந்து நின்ற கைப்பேசியில் காணொளி காட்சியாகப் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

இலக்கியா செல்வதையே பார்த்திருந்த சந்துரு அவள் தலை மறைந்ததும் வலது கையை இடப்பக்கமும் இடது கையை வலப் பக்கமும் வைத்தபடி கண்களை மூடி வலம் இடமாக அசைந்து ஆடினான்.

சிறிது நேரம் மெல்ல ஆடியவன் கண்களைத் திறந்து கைகளை விரித்து ஒரு சுற்றுச் சுற்றியவன் இதழில் எழுந்த புன்னகையோடு வீட்டிற்கு நடக்கத் தொடங்கினான்.

முன்னாடி சென்ற இலக்கியா மெல்ல பின்னாடி வந்து சந்துருவை மறைந்து நின்று கவனிக்க, வெட்கத்தில் முகம் செவ்வானமாகச் சிவக்க, தன் ஒரு கையில் முகத்தை மூடி, கன்னங்களில் குழி விழச் சிரித்துக் கொண்டே ஓடினாள்.

“ஜோடி சேர்ந்திருச்சு” என்று திவ்யாவும் வினோத்தும் கைகளைத் தட்டிக் கொண்டார்கள்.

வீட்டிற்குள் சென்ற இலக்கியாவிடம், “என்ன டிரெஸ் நனைஞ்சிருக்கு? ஏன் சந்துரு சட்டையைப் போட்டிருக்க?” என தெய்வானையும் வள்ளியம்மையும் ஒரு சேர கேட்க.

“ஒன்னுமில்லை” என்று இருவருக்கும் சேர்த்து ஒரே பதிலாகச் சொல்லிச் சென்றாள்.

பின்னாடியே வந்த சந்துரு தொலைக்காட்சியின் முன் அமர்ந்தவன் முதலிருந்து கடைசிக் கடைசியிலிருந்து முதலென ஒவ்வொரு சேனலாக மாற்றினானே தவிர ஒன்றையும் பார்த்த மாதிரி தெரியவில்லை. சந்துருவை விநோதமாகப் பார்த்திருந்தனர் பெரியவர்கள் இருவரும்.

திவ்யாவும் வினோத்தும் உள்ளே வர அவர்களிடம் என்னவென்று கண்ணசைத்துக் கேட்டார் தெய்வானை. இருவரும் திருமணத்திற்குத் தயார் என்று சமிக்ஞையில் சொன்ன திவ்யா இருவருக்கும் மெல்ல நடந்ததைச் சொன்னாள். தெய்வாவும் வள்ளியும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.

******

தோட்டத்துக் கிணற்றில் குளிக்க வினோத், சந்துருவுக்கு ரொம்பப் பிடித்தமானது. அதனால், மறுநாள் விடியற் காலையில் இருவரும் கிணற்றில் குளிக்கப் புறப்பட்டு விட்டனர்.

கிராமத்தில் காலை நான்கு ஐந்து மணிக்கே பொதுக் கிணற்றுக்குக் குளிக்க வந்துவிடுவார்கள். சிறு வயது அனுபவம் மனதில் ஓட மகிழ்வான நிகழ்வுகளை நினைத்தபடி ஆசையோடு கிணற்றுக்கு வர ஒரு சிலரைத் தவிர யாரையும் காணும்.

“வினோ, என்ன கிணறு வெறிச்சோடி கிடக்கு?” சந்துரு கேட்க,

“அதான் எனக்கும் புரியலை. இன்னைக்கு யாருக்கும் வேலை இல்லையா?” என இருவரும் குழப்பத்துடன் கிணற்றின் அருகில் வர,

“அட! வினோ, சந்துரு நீங்க எப்ப வந்தீங்க? உங்களை எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் பழையதை மறக்கலையா? நானும் ஆசையோடு வந்தா, இங்க ஒருத்தரையும் காணும்” என்றான் பால்ய சிநேகிதன் மகேஷ்.

“மகேஷ்! நீ எப்படி! யப்பா எத்தனை வருஷமாச்சு! மாறவே இல்லை. அப்படியே இருக்க. வேலை வேலைன்னு ஓடி நாங்களும் ஊர் பக்கம் வரலை” என்றபடி நண்பனை ஆரத் தழுவினான் வினோத்.

மகேஷ் படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த நேரம் அவன் அப்பா நெஞ்சுவலியில் இறந்துவிட, மூத்தவன் என்பதால் குடும்பச் சுமையை ஏற்கும் நிலை ஆயிற்று.

கிராமத்தில் கிடைத்த வேலையில் கால் வயிறு கஞ்சி குடிப்பதே பெரும்பாடாக இருக்க, படித்த படிப்புக்குப் பெங்களூரில் வேலை கிடைக்க, குடும்பத்தோடு அங்கயே நிரந்தரமாகிவிட்டான் மகேஷ்.

குடும்பச் சொத்து ஊரில் இருப்பதால் அதைப் பராமரிக்க முடியாமல் கிடந்தது. அதனால், அதை விற்றுவிடத் தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்து இருந்தான். நல்ல விலைக்கு ஒருவர் வாங்க முன் வந்ததால் அது சம்பந்தமான வேலைகளை முடிக்க ஊர் வந்திருந்தான்.

“ஓ! அதான் கடைசியா கிணற்றடியில் குளிக்க வந்துட்டியா?” எனச் சிரித்தான் சந்துரு.

“தாத்தா, ஊர் சனமே நாலு மணியிலிருந்து இங்கதான் குளிக்க வருவாங்க. மணி நாலரை ஆகப் போகுது யாரையும் காணும்?” அருகில் குளித்துக் கொண்டிருந்த முதியவரிடம் கேட்டான் வினோத்.

“இப்பெல்லாம் கிராமத்துலையே எல்லா வசதியும் வந்துட்டு. அதனால், வீட்டுக்குள்ளையே எல்லாம் முடிஞ்சிருது. எங்களை மாதிரி வழி இல்லாதவங்களும் பழையதை மறக்க முடியாம வர உங்களைப் போல ஆட்கள் யாராவது இங்க வந்தாதான் உண்டு” என முதியவர் சொல்லிக் கொண்டிருக்க,

திடீரென நிலா வெளிச்சம் மறைந்து ஏதோ நிழலாட, என்னது என்று மேலே பார்க்கப் போன மூவரையும் முதியவர், “மேலே பார்க்காதீங்க. என்ன நடந்தாலும் அசையாதீங்க. அப்படியே நில்லுங்க” என்றார்.

வினோத்தும், சந்துருவும் தாத்தாவைப் பார்த்தபடியே நிற்க, “என்ன இருக்கு மேல? எதுக்குப் பார்க்க வேண்டாம்னு சொல்றீங்க?” என உதடு அசையாமல் கிசுகிசுத்தான் மகேஷ்.

“காத்துக் கருப்பு நடமாடுது. கிணற்றுக்குக் குளிக்க வரவங்களைத் தொந்தரவு செய்து பயமுறுத்துது. அந்தப் பயத்திலே சிலர் உயிர் போயிடுது. அதனால்தான் இப்ப கிணற்றுக்கு வரக் கூட்டம் குறைந்து போச்சு” முதியவர் மெல்லிய குரலில் சொல்ல,

களகளவென்று சிரித்த மகேஷ், “அட தாத்தா! நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன். இந்தக் காலத்தில் போய்ப் பேய் பிசாசுன்னு பயந்துகிட்டு இருக்கீங்க. அதெல்லாம் சும்மா…” என்றவன் மேலே பார்த்த நொடி, ‘ஆ’ வென்று அலறிப் பின்னாடி போகக் கால் இடற, உறைக் கிணறு என்பதால் உயரம் குறைவாக இருக்க, தடுக்கிய மகேஷ் கிணற்றுக்குள் பாய்ந்தான்.

ஒரு நொடியும் தாமதிக்காமல் மகேஷ் கையை எட்டிப் பிடித்தான் வினோத். அவனுக்கு உதவியாகச் சந்துருவும் கைக்கொடுக்க, இருவரும் சேர்ந்து மகேஷை மேலே இழுத்தனர்.

வழுக்கி விழுந்த வேகத்தில் தலை கிணற்றின் உறையில் அடித்ததால் இரத்தம் கொட்டியது. தன் கையிலிருந்த துண்டால் மகேஷ் தலையில் இறுக்கமாகக் கட்டிவிட்டு, “சந்துரு, ஒரு கைப்பிடி பக்கத்தில் ஹாஸ்பிடல் இருக்கு. அங்க தூக்கிட்டுப் போயிடலாம்” என்றான் வினோத் அவசரமாக.

இருவருடன் சேர்ந்து அருகில் இருந்தவர்களும் உதவிக்கு வர, மகேஷை சுலபலமாகச் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

வினோத்துக்கு வைக்கும் குறியிலும் அவன் தப்பிச் செல்வதை மேலே பறந்து கொண்டிருந்த உருவத்துக்குக் கோபம் தலைக்கு ஏற இரத்தக் காட்டேரியைப் போல் மாறியிருந்தது.

தொடரும்...
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top