• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிலவாக உனக்குள் - 15 (இறுதி)

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
40
அத்தியாயம் - 15 (இறுதி)
கரண் கம்பை சுழற்றியபடி சிரித்துக் கொண்டே நிற்க, “எவ்வளவு நேரம் கதவைத் தட்டுறோம் திறக்காம இருக்க. மாடிக்கு ஏறி அங்கிருந்து உள்ள வரது எவ்வளவு கஷ்டமா இருக்கு” என்றவன் கதவைத் திறக்கவும் மற்றவர்கள் உள்ளே நுழைந்து சங்கவியைச் சுற்றி அமர்ந்தார்கள்.

முதல் முறையாகப் பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “யார் நீங்கெல்லாம் எதுக்கு வந்திருக்கீங்க? முதல்ல வெளிய போங்க” எனக் கத்தினாள்.

“எதுக்குக் கத்திட்டு இருக்க? உன் அண்ணன் வினோத் புகார் கொடுத்திருக்கான். அதனால், விசாரிக்க வந்திருக்கோம். உன்னைத் தள்ளிட்டு வந்தானே அவனை எங்க?”

“கண்டபடி பேசாதீங்க. நானா இஷ்டப்பட்டுத்தான் வந்தேன். அவர் இப்போ என் கணவர்” என்று தாலியைக் காட்ட, “உங்களை அனுப்பிய வினோத்கிட்ட போய்ச் சொல்லுங்க எங்களுக்குக் கல்யாணமாயிட்டு. உன் தங்கை இங்கிருந்து வரமாட்டா. உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோன்னு நான் சொன்னேன்னு சொல்லுங்க”

எல்லோரும் சத்தமாகச் சிரிக்க, “அவன் உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்லவே இல்லையே. உன்னையும் நகுலையும் புதைச்சிட்டு வரச் சொல்லியிருக்கான்” எனக் கரண் சொல்லவும் சங்கவிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. நிஜமாவே வினோத் தன்னை கொல்லும் அளவுக்குச் சென்றுவிட்டானா? நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.

பயத்தில் தலை முதல் கால்வரை நடுங்க, இவர்களிடமிருந்து தப்புவது இயலாத காரியம். அடுத்து என்ன செய்வதென்று சுற்றிப் பார்த்து யோசிப்பதற்குள், கரண் அவள் மூக்கில் வெள்ளை தூளைத் தடவினான்.

சங்கவி என்னவென்று யோசித்துச் சுதாரிப்பதற்குள் அவள் உள்ளிழுத்த காற்று வழியாக உள்ளே செல்ல, தலை சுற்ற, பார்வை மங்கலாக, கை, கால்கள் மிதப்பது போலிருக்க, அப்படியே கீழே சாய்ந்தாள்.

தன்னைச் சுற்றி நடப்பதெல்லாம் தெரிந்தாலும், எதிர்த்து அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போதை தலைக்கேற கிடந்தவளுக்குக் காக்கிச் சீருடைத் தவிர, நகுல் இருக்கும் அடையாளமும் தெரியாமல் போனது.

சிகரெட்டில் தூளைக் கொட்டி உள்ளிழுத்துக் கொண்டு மது பாட்டில்களோடு ஆட்டம் ஆடினார்கள். தன் நிலையை மறந்த கரண், சங்கவியைத் தூக்கிக் கொண்டு மாடிக்குச் செல்ல, அவன் பின்னே மற்றவர்களும் சென்று கரும்பு சக்கையாகப் பிழிந்தனர்.

போதை இறங்க இறங்க திரும்ப ஏற்றிக் காலைத் தொடங்கியது மாலைவரை தொடர, இருட்டுவதற்குள் ஒவ்வொரு இதழாகப் பிய்த்துக் கசக்கி எறியப்பட்டு குற்றுயிராகா கிடந்தாள். சிறிது நினைவு வர மெல்ல கண்களைத் திறந்து பார்க்க, தன் நிலை கண்டு அழக் கூடப் பலம் இல்லாமல் இருந்தவளுக்கு இனிமே உயிரோடு இருக்கப் போவதில்லை என்பது புரிந்து போனது.

அறையைச் சுற்றி கண்களைச் சுழல விட்டவளுக்குத் தன் கை அருகில் கைப்பேசி இருப்பதைக் கண்டு எடுத்துக் காணொளிப் பதிவைப் பதிய, “என் சாவுக்கு என் அண்ணன் வினோத்தும் அவன் அனுப்பிய பத்துப் போலீசும்தான்” எனத் திக்கித் திணறிப் பேசியவளால் அதற்கு மேல் பேச முடியாமல் பதிவைச் சேமித்துவிட்டு கீழே வைத்தாள்.

“ஐயோ! சங்கவி! சங்கவி!” என நகுல் அலறும் சத்தம் காதுகளில் கேட்க, மூடிய கண்கள் திறக்க, தலையில் அடித்து அழும் நகுல் தெரிந்தான். அவளைத் தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, “உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது” நகுலின் நாடக புலம்பலில் கண்ணீர் சிந்தியவள், அவன் கைகளில் கைப்பேசியை வைத்தாள்.

“போலீ…ஸி…டம் கொ…டு” எனத் தன் உயிரை விட்டிருந்தாள் சங்கவி. அதை உறுதி செய்தவன் மற்றவர்களையும் மேலே வரச் சொல்லி, இரவோடு இரவாகத் தோட்டத்தில் சங்கவியையும் அவள் பொருட்கள் அனைத்தையும் சருகோடு சருகாக எரித்துவிட்டனர். அவள் வந்த தடயம் எதுவுமின்றி அழித்துவிட்டனர்.

சங்கவி பதிவு பண்ணிய கைப்பேசியை மட்டும் பத்திரமாகத் தன் கால் சட்டைப் பையில் வைத்தான். நாள் முழுவதும் ஏற்றிய போதையில் சென்றவன், இயற்கை உபாதையைக் கழிக்க வழியில் இறங்கியவன் கைப்பேசியைத் தவறவிட்டிருந்தான்.

******

நடு வீட்டில் பூசைப் பொருள்களுடன் புகை மண்டலம் சூழ சாமியார் மந்திரங்கள் ஓத, சீடர்களும் அவர்களுடன் சேர்ந்து மந்திரங்கள் சொல்ல, விலங்கு மாட்டி நகுலும் கரணும் இருக்க, அவர்கள் பின்னாடி தேவன், கண்ணன், முகிலன் இருந்தனர். அவர்களுக்கு எதிரில் தெய்வானைத் தவிர மற்ற எல்லோரும் இருந்தனர்.

நகுலும் கரணும் நடப்பது எதுவும் புரியாமல் குழப்பத்தில் இருக்க, கணொளியை நீதிமன்றத்தில் காண்பித்துத் தப்பிவிடலாமென நினைத்தவர்களுக்கு அங்கு அழைத்துச் செல்லாமல் இங்குப் பலி கொடுத்துவிடுவார்களோ என்ற ஐயத்தில் இருந்தனர்.

வினோத்தும் சந்துருவும் நகுலை வீட்டிற்கு அழைத்து வரக் கேட்டது பற்றிக் கண்ணன் தேவனிடம் சொல்ல, தன் சொந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி கொடுத்துவிட்டு தானும் உடன் வந்திருந்தார்.

நேரம் ஆக ஆகப் பூசையின் உச்சத்தில் சங்கவி வர வேண்டும். ஆனால், அவள் வராமல் அலைக் கழித்தாள். அவளை வர வைக்கச் சாமியாரும் சீடர்களும் முயற்சிக்க, சங்கவியின் ஆன்மா வரமால் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருப்பதைச் சாமியார் எல்லோரிடமும் சொன்னார்.

சங்கவியின் ஆன்மா என்றதும் நகுலும் கரணும் வெடவெடத்துப் போக, எழுந்து ஓட முயற்சிக்க எழ முடியாமல் பின்னிருந்த மூவரின் கரம் அழுத்திப் பிடித்திருந்தது.

திடீரென்று எழுந்த வினோத், “சங்கவி, வா! நான்தான் கொலை பண்ணேன்னு சொன்னியே… யார் காரணம்னு உண்மை தெரிஞ்சிக்கனும்னா இங்க வா” என வினோத் கூப்பிட்டான்.

“உயிரோடு இருக்கும் போதுதான் நாங்க சொல்றதைக் கேட்கலை. உன் வாழ்க்கையை இழந்து இவ்வுலகை விட்டு போன பிறகும் உனக்கு நிம்மதி இல்லைன்னா அது கொடுமை சங்கவி. இப்பவாது நாங்க சொல்றதைக் கேளு. நீ உண்மையைத் தெரிஞ்சிக்கனும்னா வா சங்கவி” திவ்யா சுற்றிச் சுற்றிப் பார்த்து விழிகளில் நீர் வடிய அழைத்தாள்.

திவ்யாவின் கண்ணீர் சங்கவியை அசைக்க, திடீரென்று சாமியார் போட்டிருந்த வட்டத்திற்குள் தீச்சுவாலைகளின் நடுவில் தெரிந்தாள், நெருப்பைத் தாண்டி அவளால் அடியெடுத்து வைக்க முடியாது. சாமியாரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாள்.

“சொல் உனக்கு வேணும்? எதுக்கு இவங்களைப் பழி வாங்க துடிக்கிற?” சாமியார் மிரட்டலுடன் கேட்க.

“எனக்கு என்ன வேணும்னு தெரியாமலா பூசை செஞ்சு என்னை உன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த?” எனக் கர்ஜித்தாள்.

“நீ முதலில் இவங்க சொல்றதைக் கேள். அதுக்குப் பிறகு என்ன செய்யனுமோ செய். ஆனா, யார் உயிரையும் எடுக்க உன்னை அனுமதிக்கமாட்டேன். தப்புப் பண்ணவங்களைச் சட்டம் பார்த்துக்கும்” எனச் சாமியாரும் பதிலுக்குக் கர்ஜித்தார்.

“ஓ! பார்க்கலாம் அதையும்… ம்… ம்…” என உறுமியவள், “சொல்லச் சொல்லு” என்றாள் எகத்தாளாமாக.

“வினோத் என்னுடனும் இன்ஸ்பெக்டருடனும் பேசியது உண்மைதான். அது உன்னைக் கொல்ல இல்லை. உன்னைக் கண்டுபிடிக்க. அதை வீடியோ எடுத்து உன்னைக் கொல்ல திட்டம் போட்டதாக நகுல் மாற்றியிருக்கான். அதை நம்பிதான் வினோத்தை தப்பா நினைச்சிட்டு இப்படிப் பண்ணிட்டு இருக்க” என்றான் முகிலன்.


“வினோத்தை ஜெயிலுக்கு அனுப்ப சாகுற நேரத்தில் நீ பதிவு பண்ணியிருந்த கைப்பேசியை நகுல் தவற விட்டுட்டான். அந்தக் கைப்பேசி என்னிடம் கிடைச்சது. அதை வைத்து விசாரணை தொடங்கினப்போதான் எங்களுக்குப் பல உண்மைகள் தெரிய வந்தது. நீ பதிவு பண்ண கைப்பேசி உன்னுடையது இல்லை. உன்னுடைய பொருள்கள் இருந்தால் மாட்டிக் கொள்வோம்னு எல்லாத்தையும் நகுல் அழிச்சிட்டான்” கண்ணன் சொல்ல.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
40
“நீ நினைக்கிற மாதிரி நகுல் நல்லவன் இல்லை. இவனும் இவன் கூட்டாளிகளும் சேர்ந்து உன்னை மட்டுமில்லை. உன்னை மாதிரி பத்துக்கும் மேற்பட்ட பொண்ணுகளைச் சீரழிச்சு சாகடிச்சிருக்கானுங்க. இவனுங்க வேலையே இன்ஸ்டாவில் காதல் வலை விரிப்பதுதான். அதில் சிக்குற பொண்ணுங்க யாரையும் உயிரோட விடுறதில்லை. வெளியில் இவனுங்க ரொம்ப நல்லவனுங்க. ஆனால், உள்ளுக்குள் கேவலமான வக்கிர புத்தி” தேவன் சொல்ல.

“நீ பதிவு பண்ண வீடியோவைத் தவிர வேற எதுவுமே அதில் இல்லை. சிம் கார்டு கூட இல்லை. அதுவே எங்களுக்குப் பெரிய சந்தேகமாச்சு. வினோத்திடம் உன் கைப்பேசி விபரங்கள் கேட்ட போதுதான் தெரிஞ்சது. கடைசியா உன் கைப்பேசி நகுலோட தோட்டத்து வீட்டில் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கு” எனக் கண்ணன் சங்கவி பதிவு பண்ணிய காணொளியை ஓடவிட்டு கைப்பேசியை அவளிடன் காட்டினான்.

வினோத்துடன் சண்டை போட வேண்டுமென்று கைப்பேசியைத் தேடிக் கொண்டிருந்தது சங்கவிக்கு ஞாபகம் வர, உயிர் பிரியும் நேரத்தில் கைப்பேசி எப்படித் தன் அருகில் இருந்தது? என்ற சந்தேகம் காலம் கடந்து வர, அவள் பார்வை மெல்ல நகுலின் பக்கம் திரும்ப, பின்னாடி வந்து பயமுறுத்தியது, மூக்கில் எதையோ தடவி தன்னை மயக்கடைய வைத்த கரண் அவனுடன் இருப்பதைக் கண்டதும், தான் செய்த தவறும் முட்டாள்தனமும் புரிய ஆரம்பித்தது.

எந்தக் காணொளியை வைத்துத் தப்பிக்கலாமென நினைத்திருந்தவர்களுக்கு, அதே காணொளியால்தான் தாங்கள் மாட்டியிருக்கிறோம் என்பதும் புரிந்தது.

“நகுல், நீ பண்ணதை நீயே சொல்லு. சொல்லலைன்னா… பூசையை வேண்டாம்னு சொல்லிட்டு வினோத்தை கொல்ல வந்த சங்கவியின் ஆன்மா உன்னைக் கொல்லட்டும்னு விட்டுட்டு போயிருவோம். நீயா உண்மையைச் சொல்லிட்டா… சாமியாரை வைத்துச் சங்கவிகிட்ட இருந்து காப்பாற்றுவோம்” கண்ணன் சொல்ல, மிரண்டு போன நகுல் உண்மையைக் கொட்ட ஆரம்பித்தான்.

வள்ளி காதுகளை மூடிக் கொண்டார். சந்திரன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார். சரவணன் காது, கண் இரண்டையும் மூடிக் கொண்டார். நகுல் சொல்லி முடிக்கவும் திவ்யா, இலக்கியா மயக்கமடைந்திருந்தனர். இருவரையும் தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள்.

தன் குடும்பத்தார் துடிப்பதையும் நகுலின் பயந்த பார்வையும் சங்கவிக்கு உண்மை அன்பும் பாசமும் எது என்பது புரிந்தாலும், உயிர் போனபின் அதைப் பற்றி வருந்துவதால் பயன் ஒன்றுமில்லை.

ஒருவனை நம்பி ஏமாந்து தன் குடும்பத்தாரை பழிவாங்க நினைத்துவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சி சங்கவியை ஆட்டிப் படைக்க, நகுலை கொல்ல வெறிக் கொண்டு ஆடினாள். ஆனால், சாமியாரின் கட்டுப்பாட்டை மீறி அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

சாமியாரிடம் அவளை விடுமாறு கெஞ்சினாள். ஆனால், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையைக் கடவுள் பார்த்துக் கொள்வாரென முடியாதென்றுவிட்டார்.

கண்ணீர் மல்கத் தன் குடும்பத்தாரிடம் திரும்ப, “அண்ணா, என்னை மன்னிச்சிரு நீங்க எல்லோரும் சொன்னதைக் கேட்கலை. அதுக்கு நான் நல்லா அனுபவிச்சிட்டேன். என் நிலைமை யாருக்கும் வரக் கூடாது. இப்ப நான் வருந்துவதால் எந்தப் பயனும் இல்லை.”

சங்கவி செய்தது தவறுதான் என்றாலும், அவள் அனுபவித்த வலி பெரிய கொடுமை. உடனே அவளைத் தேடியிருந்தால், அவளைக் காப்பாற்றி இருக்கலாம் என்ற குற்ற உணர்வு வினோத்துக்கு இருக்க, அவளிடம் பேச முடியாமல், தன் கைகளை நீட்டினான் வினோத்.

கடினப் புன்னகை உதிர்த்த சங்கவி, “நீ விரல் நீட்டினப்போ தள்ளிவிட்டுப் போனேன். இப்பவும் நீ கை நீட்டுற, ஆனால், நான் பிடிக்க நினைத்தாலும் முடியாத நிலையாகிருச்சு. உனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் வேண்டாம்ணா. நான், ‘நிலவாக உனக்குள்’ எப்பவும் இருப்பேன்”

அனைவரிடமும் விடை பெற்றவள் சாமியார் வைத்திருந்த குப்பியில் புகையாக அடக்கமானாள். மற்ற சம்பிரதாயங்கள் முடிந்து நகுலும் கரணும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தெய்வானை குணமானதும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர, தெய்வானையிடம் எதுவும் சொல்ல வேண்டாமென்று முடிவு செய்திருந்ததால், அவர் கேட்டதும் சாமியார் வைத்து அவள் ஆன்மாவை அடக்கிவிட்டோம், நகுலை சிறைக்கு அனுப்பியாச்சு என்றிருந்தனர்.

தெய்வானையை உள்ளே படுக்க வைத்துவிட்டு வினோத், திவ்யா வெளியில் வர, முகிலன் வீட்டிற்குள் நுழைந்து, “வினோ, டிவி ஆன் பண்ணு” என்றான்.

“ஏன் என்ன ஆச்சு?” என்றபடியே தொலைக்காட்சியை உயிர்ப்புக்குக் கொண்டு வந்த வினோத்திடமிருந்து ரிமோட்டை கையில் வாங்கிச் செய்தி சேனலை வைத்தான் முகிலன்.

பத்து கைதிகளை விசாரணை முடித்து நீதிமன்றம் அழைத்துச் சென்ற போது வேன் கட்டுப்பாட்டை இழந்து முப்பதடி பள்ளத்தில் உருண்டு விழுந்த விபத்தில் பத்து பேரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டதும் குடும்பமே அதிர்ச்சியில் எழுந்து நின்றது.

“எப்படி முகிலன்?” ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் கேட்டான் வினோத்.

“அதுதான் எங்களுக்குத் தெரியலை. நான் கண்ணன் சார் காரிலும், பத்து பேர் வேனில் ஐந்து கான்ஸ்டபில்களுடன் கோர்ட்டுக்கு போயிட்டு இருந்தோம். திடீர்னு லாரி எங்கிருந்து வந்ததுன்னே தெரியலை. பத்து பேர் வந்த வேனில் மோத, உள்ள இருந்த காவலர்கள் ரோட்டில் தூக்கி வீசப்பட்டு விழுந்தனர். பத்து பேரோடு வேன் பள்ளத்தில் உருண்டு விழுந்து தீப்பிடிச்சு எரிஞ்சிட்டு. நாங்க யாரும் பக்கத்தில் போகவே முடியலை”

“என்னது லாரி எங்கிருந்து வந்ததுன்னு தெரியலையா?” சந்துரு சந்தேகத்தில் கேட்டான்.

“ஆமா, அதைவிட இன்னொரு ஆச்சரியம் என்னன்னா ரோட்டில் விழுந்த எந்தப் போலீஸுக்கும் ஒரு சின்னக் கீறல் கூட இல்லை. அதுதான் எங்களால் நம்பவே முடியலை. சங்கவியோட ஆன்மா வந்ததே ஏதோ பிரம்மையோன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனால், இது…” என இரு கரங்களையும் விரித்தான்.

கண்ணன் சிரித்துக் கொண்டே உள்ளே வர, “நம்பித்தான் ஆகனும் பாஸ். இந்த வீடியோவைப் பாரு புரியும்” விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி பதிவில், வேன் உருண்டு விழுந்து தீப்பிடித்த சில நிமிடங்கள் கழித்துச் சாமியாரின் கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கியவர் சிறு புன்னகையோடு திரும்பவும் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

இவர் எப்படி? என்று எல்லோரும் முழிக்க, கண்ணனுக்கும் அதே சந்தேகம் வர, நேரில் சென்று சாமியாரிடம் கேட்க, புன்னகையைச் சிந்தியவர், “நான்தான் கடவுள் பார்த்துக்குவார்னு சொன்னேன்ல” என்று தன் தியான நிலைக்குச் சென்றுவிட்டார்.

குடும்பமே மகிழ்ச்சியில் இருக்க, “அப்ப இது சங்கவியோட வேலையா? சார், நாம எதுக்குக் கொலையாளிகளைப் பிடிக்க உயிரைப் பணயம் வைத்து அலையனும். பேசாம சங்கவியைக் கூடவே வச்சிக்கலாம். உட்கார்ந்த இடத்திலே எல்லாக் கேஸையும் பிடிச்சு நாமளே தண்டனையும் கொடுத்திரலாமே” வினோத்தும் சந்துருவும் இடுப்பில் கை வைத்து முறைக்க.

“அது முடியாது தம்பி. சங்கவி ஆவியா வந்த வேலை முடிஞ்சிட்டு. அதனால், அவ ஆன்மாவைச் சாந்தி அடைய வைத்துவிட்டார் சாமியார்” எனக் கண்ணன் சிரித்தபடியே முழு நிலவைச் சன்னலில் காட்டினான். அவனுடன் மற்றவர்களும் சேர்ந்து நிலவைக் காண, வினோத்தின் கண்களில் துளித் துளியாக நீர் விழ, அதைத் துடைத்த திவ்யா அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

இணையத்தளங்களில் நல்லவை, தீயவை இருந்தாலும், இணையத் தளத்தினால் வரும் காதல் எப்பொழுதும் கேள்விக் குறிதான். காதலில் உண்மைக் காதல் எது என்பதை அறிந்து பழகினால் சங்கவியைப் போல் உயிரை இழக்க வேண்டிய நிலை யாருக்கும் ஏற்படாது.

*******
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top