• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
157
❤️நீ கனவா? நிஜமா?❤️


"அடியே, மரகதம்! மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர நேரமாச்சுடி, ரெடியா?" என்றார் சிதம்பரம்.

"எல்லாம் ரெடிங்க, உங்க பொண்ணு ரெடியான்னு பாக்குறேன்." என்று சொல்லிக் கொண்டே மாடிக் கதவைத் திறந்தவர், எதிரிலிருந்தவளைப் பார்த்து அதிர்ந்து நின்றார்.

"ஏன்னம்மா? அங்கேயே நிக்கிற? உள்ள வா!" என்றாள் தேன்மலர் சிரிப்புடன்.

"நீயாடி கிளம்பி நிக்கிற?" என்றார் அவர், அதிர்ச்சி விலகாமல்.

"அம்மா, நான்தான்ம்மா! அதுக்குள்ள நீ பெத்த ரத்தினத்தை மறந்துட்டியே!" என்றாள் அவள், கிண்டல் சிரிப்புடன்.

"அம்மா, அதிர்ச்சி ஆகாம எப்படி இருப்பாங்கடி? நீ பார்க்க வர ஒவ்வொரு மாப்பிள்ளையையும் பொண்ணைக் காட்டாமாட்டாங்க போல. நாம கிளம்பலாம்னு போறப்ப தான் மேடம் வெளிலயே வருவீங்க. இன்னைக்கு என்ன எல்லாத்துக்கும் முன்னாடி ரெடியாகி நிக்கிறீங்க? சம்திங் ராங்!" என்று சந்தேகமாகப் பார்த்தாள் தேன்மலரின் தங்கைப் பனிமலர்.

"ரெடியா இருந்தாலும் தப்பு, இல்லையென்றாலும் தப்பு! சரி, திரும்பி குளிக்கட்டா?" என்று தேன்மலர் வேகமாகத் திரும்பினாள்.

"ஏய்! ஏய்! அதுலா வேணாடி, தேனு!" என்றார் அவசரமாக.

"பின்ன என்னம்மா?" என்று சினுங்கினாள் அவள்.

"ஏய்! பனி, அந்தப் பக்கம் போடி. அவ ஏதாச்சும் கிறுக்கு மாதிரி பண்ணி வைக்கப் போறா. உங்க அப்பா கிட்ட யாருடி திட்டுவாங்குறது?" என்று இரண்டாவது மகளை வெளியே இழுத்தார்.

"அம்மா! எனக்கு ஒரே சந்தேகமா இருக்கு. இவ ஆளே சரியில்ல!" என்றாள் பனிமலர், சந்தேகமாக.

"சரிம்மா, நா புடவையைக் கலட்டுறேன்!" என்று தேன்மலர் அவிழ்க்கப் போனாள்.

"ஏய்! வேணாடி! இவ பேசுறதுலாம் பெருசா எடுத்துக்காத. என் தங்கம் அழகா இருக்க, இந்தப் புடவையில என் கண்ணே பட்டுரும் போல!" என்று கைகளில் நெட்டி முறித்தார்.

தேன்மலர் சந்தோஷமாக சிரித்தாள்.

"அம்மா இருந்தாலும்..." என்று பனிமலர் ஆரம்பிக்க,

"வாய மூடிக்கிட்டு வெளிய வாடி!" என்று இழுத்துச் சென்றார்.

"அந்தப் பயம் இருக்கணும்." என்று சிரித்தாள். அப்பொழுது அவளுடைய போன் அடித்தது.

"ஹலோ.." என்றாள் சந்தோஷமாக.

"பொண்ணு ரெடியா?" என்ற ஆண்குரல் கேட்டது.

"பொண்ணு ரெடியாகி ஆறு மாசமாச்சு." உற்சாகமாக சொன்னாள்.

"அய்யய்யோ! சரியான அழுக்கு பொண்ணா இருக்கும் போலயே! குளிக்காமலேயே ஆறு மாசமா? அதான் ஊரோட என்ட்ரென்ஸ்லே நாத்தம் அடிக்குதா?" என்றான் கிண்டலாக.

"பாவா..." கோபமாக குறுக்கிட்டாள்.

"சரி, சரி, கூல் பேபி! நாங்க பக்கத்துல வந்துட்டோம்."

"சூப்பர்."

"நேர்ல மீட் பண்ணலாம். பை!" என்று வைத்தான்.

'காதலிக்கிறவனையே கல்யாணம் பண்ணுற வாய்ப்பு எத்தனைப் பேருக்கு கிடைக்குமோ! நம்ம அப்பாவுக்குக் காதல்'னாவே அலர்ஜி. தெரிஞ்சா கல்யாணமே நடக்காது! தெரியவே கூடாது! முருகா, காப்பாத்து!' மேலே பார்த்து வேண்டிக் கொண்டே கதவு பக்கம் திரும்பியவள் லேசாக அதிர்ந்தாள்.

"என்ன பண்ணிட்டு இருக்க?" என்றாள் பனிமலர்ச் சந்தேகமாக.

'நா போன் பேசுனதைக் கேட்டுருப்பாளோ?' யோசனையுடன் பார்த்தாள்.

"மேல பார்த்து என்ன பண்ணுற?"

"ஒன்னும் இல்லடி, இந்த வரன் செட்டாகணும்னு வேண்டிக்கிட்டேன்." என்றாள் சிரிப்புடன்.

"ஒ... சொல்ல வந்ததையே மறந்துட்டேன்! மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தாச்சு. மாமா செம்மையா இருக்காரு. உனக்கு வேண்டாம்னா சொல்லு, நா கட்டிக்கிறேன்!" கண்ணடித்தாள்.

"ஏய்!" என்றாள் கோவமாக.

"சரி, சரி, கோவப்படாத! மாப்பிள்ளைக்குத் தம்பி ஏதாவது இருக்கானு நா விசாரிச்சுட்டு வரேன்." என்று செல்ல போனவள்.

"தம்பி இல்ல." என்றாள் வேகமாக.

"அது எப்படி உனக்குத் தெரியும்?" என்று வேகமாகத் திரும்பி கேட்டாள்.

"அது..." என்று தடுமறியவள், "ஆ... அப்படி இருந்தாலும் உனக்கு இல்லை." என்றாள் அவசரமாக.

"ஏன்? ஏன்?" என்றாள் வேகமாக.

"அங்கேயும் வந்து உன் தொல்லைய அனுபவிக்க முடியாதுப்பா! என் கொழுந்தனுக்கு உன்னைவிட பெட்டராக நானே பொண்ணு பார்ப்பேன்." என்றாள் கிண்டலாக.

"என்னை விட உனக்கு உன் கொழுந்தன் முக்கியமா போயிட்டானாடி?" என்று சண்டைக்கு வந்தாள்.

"ஏய்! என்னங்க டி, சத்தம் போட்டுக்கிட்டு இருக்கீங்க? மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துட்டாங்கடி!" என்று திட்டியப்படியே உள்ளே வந்தார் மரகதம்.

"அம்மா, பாரும்மா! இவளுக்கு என்னைவிட இவ கொழுந்தன் முக்கியமாம்!" என்று புகார்க் கொடுத்தாள்.

"என்னடி உலறுற?" குழப்பமாகக் கேட்டார். நடந்த அனைத்தையும் வேகமாக எடுத்துரைத்தாள் சிறியவள்.

"எரும… அந்தப் பையனுக்கு அக்கா மட்டும் தான் டி!" என்று தலையில் அடித்தார்.

"அப்போ, தம்பி இல்லையா?"

"ஒரு அம்மாகிட்ட பேசுற பேச்சா இது? இவங்கலாம் கிளம்பிட்டும், அப்பறம் இருக்கு டி, சின்னவளே! அக்காவை அஞ்சு நிமிஷத்துல கூட்டிக்கிட்டு வா!" பதிலை எதிர்பார்க்காமல் சென்றார்.

"இருந்தாலும், நீ இப்படி சொல்லலாமா?" என்றாள் சோகமாக.

"ஏய், லூசு!" என்று தலையில் லேசாகத் தட்டிவிட்டு, "சும்மா சொன்னேன் டி! எனக்கு நீதான் முக்கியம்." என சிரிப்புடன் அணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் பனிமலர், தேன்மலரைக் கீழே அழைத்து வந்தாள். அனைவரையும் பார்த்து வணங்கினாள். அங்கு இரண்டு பெரியவர்கள், ஒரு பையன் மற்றும் ஓர்ப் பெண் இருந்தனர். மாப்பிள்ளை, இவளைப் பார்த்துக் கண்ணடித்து, சிரித்தபடி தலையை ஆட்டினான். இவளும் யாரும் அறியாமல் வெக்கத்துடன் தலையை ஆட்டினாள்.

"இது தான் ம்மா, மாப்பிள்ளைப் பையன். பையனோட அப்பா, அம்மா, இவங்க அக்கா," என்று அறிமுகம் செய்தார் தரகர். தேன்மலர் அனைவரையும் பார்த்து சிரித்தாள்.

"என்ன படிச்சிருக்கம்மா?" என்றார் பையனின் அப்பா.

"பி.இ."

"எங்க வேலைப் பார்க்கறீங்க?" என்றாள் பையனின் அக்கா.

"எக்ஸ் கம்பெனி, சென்னைல ஒர்க் பண்ணுறேன்."

"சிதம்பரம் சார், வீட்டுக்குப் போய் தகவல் சொல்லுறேன். இதுல நமக்கு சரி வராது. எங்களுக்குப் பொண்ணு ஃபோட்டோலயே ரொம்ப பிடிச்சுப் போச்சு. நீங்க என் பையனைப் பார்க்கணும்னு தான் நேர்ல வந்தோம். நீங்க கலந்து பேசி உங்க முடிவ சொல்லுங்க." என்றார் பையனின் அப்பா சிரிப்புடன்.

"எங்களுக்கும் பையன ரொம்ப பிடிச்சுருக்கு." என்றார் சந்தோஷமாக.

"உங்க பொண்ணுக்கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க சார். எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை."

"என்னம்மா தேனு, உனக்குப் பிடிச்சுருக்கா?" என்று சிரித்தபடி கேட்க, புன்னகையுடன் தலையை ஆட்டினாள்.

"எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம், சார்." என்றார் பையனின் அப்பா.

"இன்னும் என்னங்க, சார்னு சொல்லிக்கிட்டு? சம்மந்தின்னு உரிமையோட கூப்பிடுங்க." என்றார் சிதம்பரம் சந்தோஷமாக, சிரித்தபடி.

"நீங்களும் கூப்பிடுங்க." என்று பையனின் அப்பா, சிதம்பரத்தின் கையைப் பிடித்துக் கொண்டே கூறினார்.

"ஆசிர்வாதம் வாங்கிக்கோ தேனு." என்றார் மரகதம்.

பையனின் அம்மா, அப்பாவின் காலில் விழுந்தாள்.

"நல்ல இரும்மா, சந்தோஷமா இருக்கணும்." என்று ஆசிர்வதித்தனர்.

பையனின் அக்காவும், அம்மாவும் பூ வைத்து உறுதிச் செய்தனர். கல்யாணத் தேதி ஓர் மாதத்துக்குள் பேசி முடிவும் செய்தனர்.

"இப்பயாச்சும் பொண்ணு கிட்ட பேசவிடுவாங்களா? இல்ல, கல்யாணத்துக்கு அப்புறம்தானா?" என்றான் மாப்பிள்ளை மெதுவாக, தன் அக்காவின் காதில்."டேய்! கம்முனு இருடா! ஏற்கனவே தரகர் சொல்லிருக்காருல, அவங்க அப்பா அந்தக் காலத்து ஆளுன்னு." என்று மெதுவாகப் பல்லைக் கடித்தபடி தம்பியை அடக்கினாள்.

"என்னம்மா, சொல்லுறாங்க மாப்பிள்ளை?" என்றார் சிதம்பரம், சிரிப்புடன்.

"ஒன்னும் இல்லைங்க... நிச்சயதார்த்தம் இல்லையான்னு கேட்டான்." என்று சமாளித்தாள்.

"இல்ல மாப்பிள்ளை, இன்னும் இரண்டு மாசத்துல உங்களுக்கும் தேனுக்கும் குரு பார்வை முடிய போகுது. தேதியும் நல்ல தேதி இல்ல. அதான் நேரவே கல்யாணத்த வச்சுக்கலாம்னு." என்றார் விளக்கமாக.

"சரிங்க மாமா." என்று வேகமாகத் தலையை ஆட்டினான்.

"பொண்ணுக்கிட்ட தனியா பேசணும்னு நினைச்சிங்கனா, பேசுங்க மாப்பிள்ளை." என்றார் சிரித்தபடி.

"ஆமாடா, போ." என்றார் பையனின் அப்பா.

"தேனு, மாப்பிள்ளையை அழைச்சிட்டுப் போமா?" என்றார் சிதம்பரம்.

கொல்லைப்புறம் அழைத்துச் சென்றாள். "என்ன ஹனி, இப்ப ஹேப்பியா?" என்றான் சிரிப்புடன்.

"ஹேப்பிதான் பாவா, இருந்தாலும் கல்யாணம் முடியுற வரைக்கும் பயமாகத்தான் இருக்கு." என்றாள் லேசாகச் சிரித்தபடி.

"பயப்படாதே, நான் இருக்கேன் எல்லாம் பார்த்துக்கலாம்." என்றான் ஆறுதலாக.

"ஆமா, நீங்க எப்படி இங்க பொண்ணு பார்க்க வந்தீங்க? உங்க ஃபோட்டோ எப்படி வந்தது? ஓரே குழப்பமா இருக்கு!"

"அதை நா அப்புறம் சொல்லுறேன். என் கிட்ட நைட், இங்கதான் உக்காந்து பேசுவியா?" என்றான் சுற்றிப் பார்த்தபடி.

"ஆமா பாவா, இந்தத் துணித்துவைக்கிற கல்லுல தான் உக்காந்து பேசுவேன்." என்று கல்லைக் காட்டினாள்.

"இன்னிமே யாருக்கும் தெரியாம பேசத் தேவையில்ல." என்றான் சிரிப்புடன்.

"ஆ..." என்று ஆரம்பிக்கும் போதே

"எக்ஸ்க்யூஸ் மீ... சாரி ஃபார்த் த டிஸ்டர்பன்ஸ்." என்றபடி வந்தாள் பனிமலர். இருவரும் திரும்பிப் பார்த்தனர். "உங்களை வரச் சொன்னாங்க." என்றாள் தயங்கியபடி.

"சரி, வாங்க போகலாம்." என்று இரு பெண்களுடன் உள்ளே வந்தான்.

கல்யாணத்தைப் பற்றி அனைத்தையும் பேசி முடிவு செய்துவிட்டு, மாப்பிள்ளை வீட்டார்க் கிளம்பினர்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
157
"தேனு, நீ எப்பம்மா ஆபீஸ் போகணும்?" என்றார் சிதம்பரம்.

"இன்னும் ரெண்டு நாள்ல ப்பா."

"சரி, நீ கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி லீவு போட்டுட்டு வந்துரு."

"சரிப்பா."

கல்யாண வேலை ஆரம்பமானது. மூன்று நாட்கள் பிறகு, இருவரும் (பொண்ணு, பையன்) ஓர்க் காஃபி ஷாப்பில் சந்தித்தனர்.

"நீங்க எப்படி இந்தக் கல்யாணத்துக்கான ஏற்பாடுகளைப் பண்ணினீங்கன்னு சொல்லவே இல்ல." என்றாள் ஆர்வமாக.

"உங்க புரோக்கர் இருக்காருல? அவருக்குக் காசு குடுத்து, கரெக்ட் பண்ணினேன்."

"அச்சோ! அந்த ஆளு சரியான உளறு வாயாச்சே!" என்றாள் பதறியபடி.

"அதனால தான் ஜோசியரைக் கரெக்ட் பண்ணினேன்." என்றான் சலிப்புடன்.

"ஜோசியரா?

"ஆமா ஹனி, இந்த ஆளு கிட்ட பேசுறப்பவே புரிஞ்சுருச்சு, சரியான உளறு வாய்னு. உங்க அப்பா பார்க்குற ஜோசியர் யாருன்னு புரோக்கர் தான் சொன்னாரு. அவர்கிட்ட நம்ம காதல் விஷயத்த மட்டும் இல்ல, புரோக்கர் விஷயத்தையும் சொல்லி, சீக்கிரமா கல்யாண தேதி குறிச்சேன்."

"ஓ... ஜோசியர் ஒத்துக்கிட்டாரா?" என்றாள் ஆர்வமாக.

"ஃபர்ஸ்ட் முடியாதுன்னு சொன்னாரு. அப்புறம் நமக்கு நல்ல பொருத்தம் இருந்தது, அதுக்கப்புறம் கெஞ்சி ஒத்துக்க வச்சேன்."

"மை ஸ்வீட் பாவா!" என்று கொஞ்சினாள்.

சிரிப்புடன், "இப்படிப் பேசி பேசியே என்னைய மயக்கிடு ம்ம்... உன் தங்கச்சி கிட்ட நம்ம விஷயத்த சொல்லியிருக்கலாம்ல?"

"அவள்கிட்ட சொன்னா என்னைய கிண்டல் பண்ணுறேன்னு வேற யார்க் காதுலயாச்சும் நம்ம லவ் மேட்டர் விழுந்தா, அவ்ளோதான்! நா ரிஸ்க் எடுக்க விரும்பல. நம்ம கல்யாணம் முடியுற வரைக்கும் எனக்குப் பக்குபக்குன்னு தான் இருக்கு." என்றாள் பயத்துடன்.

"நா பார்த்துக்குறேன் டா, கவலைப்படாதே. என்ன ஆனாலும் சரி, உன் கழுத்துல நா தாலி கட்டுறத யாராலயும் நிறுத்த முடியாது" என்றான் நம்பிக்கையுடன். அவள் கைகளைப் பிடித்தான்.

சிரிப்புடன் அவன் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

கல்யாண வேலைப் பரபரப்பாக நடந்தது. சிதம்பரம் சொன்னது போலவே, கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி தேன்மலர் வீட்டுக்கு வந்துவிட்டாள். பாதி நேரம் போனிலும், மீதி நேரம் சொந்தங்களுடன் கழிந்தது. நேரம் ரெக்கைக்கட்டி பறந்தது. கல்யாண நாள் அழகாக விடிந்தது.

"பொண்ண மேடைக்கு அழைச்சிட்டு வாங்க." என்று ஐயர் சத்தம் போட்டார். தேன்மலரை அழைத்து வந்து உக்கார வைத்தனர்.

"ஹனி செல்லம், பாவாவ கொல்றியே." என்றான் சந்தோஷமாக.

"போங்க பாவா!" என்றாள் வெட்கத்துடன்.

"இந்த மாப்பிள்ளைத் தம்பி என் கிட்ட வந்து, நாங்க காதலிக்கிறோம். அவங்க அப்பாக்குத் தெரியாம, எங்க கல்யாணத்த நீங்கதான் எப்படியாச்சும் நடத்தி வைக்கணும்'னு என் கால பிடிச்சு கெஞ்சாத குறையக் கேட்டான். நம்மளால காதல் ஜோடி சேர ஒரு வாய்ப்பு கிடைக்கிறப்ப, சேர்த்து வைக்கலாமேன்னு அவங்க அப்பா கிட்ட, வரன் வந்த மாதிரி இந்தப் பையன் ஜாதகத்தைக் கொடுத்துட்டேன். எப்படியோ, இவங்களச் சேர்த்து வச்சுட்டேன் ப்பா!" என்று தரகர் முடித்தார்.

"சூப்பர் சார், நானும் அந்த நிலைமையில தான் இருக்கேன்!" என்றான் ஓர் இளைஞன் தயக்கத்துடன்.

"சரிப்பா, உன்ன சேர்த்து வைக்கிறது என் பொறுப்பு. போன் அடிக்குது, பேசிட்டு வரேன்." என்று எழுந்து வந்தவர், அதிர்ந்தார்.

சிதம்பரம், உச்சக்கட்ட கோபத்தில் நின்றுக்கொண்டு இருந்தார்.

"நீ இப்ப பேசுனதுல உண்மையா?" என்றார் கோபமாக."சிதம்பரம், நீ நினைக்கிற மாதிரிலாம் இல்ல. அந்தப் பையன் உண்மையாவே தங்கம்பா!" என்றார் அவசரமாக.

"நா கேட்டதுக்கு ஆமா, இல்ல, அத மட்டும் சொல்லு. வேற எதுவும் பேசாத!" என்றார் கோபமாக.

"ஆமா." என்றார் தயங்கியபடி.

"எல்லாம் சேர்ந்து என்னைய முட்டாளாக்கிட்டீங்களா?" என்றார் ஆத்திரமாக.

"என்னங்க, கன்னிகாதானம் பண்ணிட்டு, எதுக்குத் தான் கீழே போவீங்களோ! சீக்கிரம் வாங்க, தாலி கட்ட போறாங்க!" என்று வேகமாகச் சிதம்பரத்தின் பக்கத்தில் வந்து சொல்லிவிட்டுச் சென்றார் மரகதம்.

"கெட்டிமேளம்! கெட்டிமேளம்!"

ஐயர்ச் சத்தம் போட்டார். மாப்பிள்ளை, பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட போகும் நேரத்தில்

"நிறுந்துங்க! இந்தக் கல்யாணம் நடக்காது!" என்று சிதம்பரம் கத்தினார்.

"லவ் தெரிஞ்சுபோச்சா?" என்றாள் அபி (தேனின் தோழி) அதிர்ச்சியாக.

"ஆமா." என்றாள் தேன்மலர்ச் சோகமாக.

"அப்பறம் என்னாச்சு?" என்றாள் பனிமலர் ஆர்வமாக.

“அப்பறம் என்ன? முகத்துல தண்ணி தெளிச்சு, அந்தக் கண்டக்டர் ஊர் வந்துருச்சு! 'இறங்கிப் போன்னு' சொல்லிட்டாரு," என்றாள் உச்சக்கட்ட சோகத்தில்.

"இது அனைத்தும் கனவா, கோபால்?" என்றாள் அபி, நெஞ்சைப் பிடித்து நடித்தபடி.

"இல்லை, இல்லை, ஆம், லதா!" என்றாள் பனிமலர், அவள் நடிப்புடன் இணைந்து.

இருவரையும் தேன்மலர் முறைத்தாள்.

"ஏய்! புள்ளைங்களா, வெட்டிக்கதைப் பேசாம அவளுக்கு அலங்காரம் பண்ணுங்க! மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர நேரமாச்சு!" என்று மரகதம் சத்தமாகச் சொன்னார்.

தேன்மலருக்கு அலங்காரம் செய்து கொண்டே, "கனவுல வந்த மாப்பிள்ளை எப்படி?" என்றாள் அபி.

"அக்கா, அந்த மாமா பேரே நீ சொல்லல!" பனிமலர் வேகமாகக் கேட்டாள்.

"ஆளு செம்ம சூப்பரா இருந்தாரு! இன்ன வரைக்கும் நா பார்த்ததேயில்லை. பேரு தெரியலடி! நா 'பாவா'ன்னு தான் பேசினேன்." என்று சந்தோஷமாக ஆரம்பித்து, வருத்தமாக முடித்தாள்.

"சரி விடுடி! உனக்கு லவ் மேரேஜ் செட்டாகல, இன்னைக்குப் பார்க்குற பையனாச்சும் செட்டாகட்டும்!" என்றாள் அபி.

"என் கனவே லவ் மேரேஜ் தான்! அதுவும் பலிக்காது, நா கண்ட கனவும் பலிக்காது..." என்றாள் வருத்தமாக.

"பனிமலர், அக்காவ அழைச்சுட்டு வாமா?" என்றார் மரகதம் சத்தமாக.

தேன்மலரைக் கீழே அழைத்து வந்தனர்.

"தேனு, எல்லாருக்கும் காபியைக் குடும்மா." என்று தட்டைக் கொடுத்தார் மரகதம். அதை வாங்கிக்கொண்டு குடுக்க ஆரம்பித்தாள்.

"இவன் தான்மா மாப்பிள்ளை! இது என் பொண்ணு! பக்கத்துல இருக்குறவங்க எல்லாரும் மாப்பிள்ளையோட ஃப்ரெண்ட்ஸ்." என்றார்ச் சேதுபதி (பையனின் அப்பா)

தலையை ஆட்டியபடி மாப்பிள்ளை நிமிர்ந்து பார்த்தவள், அதிர்ந்தாள்.

"உங்க அக்கா என்னடி மாப்பிள்ளைய வாயப்பிளந்து பார்த்துக்கிட்டு இருக்கா? மனத்த வாங்குறா?" என்றாள் அபி மெதுவாக.

"அதான் கா! எனக்குப் புரியல!" என்று இருமினாள் பனிமலர்.

தேன்மலர், இவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்தாள். காபியை அடுத்து குடுக்குமாறு செய்கைச் செய்தனர். அனைவருக்கும் காபியைக் கொடுத்துவிட்டு, இவர்களின் பக்கத்தில் வந்து நின்றாள்.

"என்ன படிச்சுருக்கம்மா?" என்றார் அரசி (பையனின் அம்மா).

"பி.இ."

"எங்கே வேலைச் செய்யறீங்க?" என்றாள் தாமரை (பையனின் அக்கா).

"சென்னைல எக்ஸ் கம்பெனி."

பக்கத்தில் இருந்த அபியும் பனியும், கனவில் தேன் சொன்னதுபோல் இருப்பதை உணர்ந்து, தேனைத் திரும்பிப் பார்த்தனர்.

"நா கனவுல பார்த்த பையன் இவன் தான்டி!" என்றாள் மெதுவாக இருவரிடமும்.

"என்ன?" என்று இருவரும் அதிர்ச்சியில் சத்தமாகக் கத்தினர்.

அனைவரும் திரும்பிப் பார்த்தனர். "சாரி." என்றனர்.

"விளையாட்டு பிள்ளைங்க." என்றார் அரசி.

"பொண்ணுக்கும் பையனுக்கும் பிடிச்சுருச்சுனா, அடுத்த கட்டத்துக்குப் போகலாம்." என்றார் சேதுபதி.

"தேனு, உனக்குச் சம்மதமா?" என்றார் மரகதம் மெதுவாக.

வேகமாகத் தலையை ஆட்டினாள். மரகதம், சிதம்பரத்தைப் பார்த்துத் தலையசைத்தார்.

"அப்பா, எனக்குச் சம்மதம்! நா பொண்ணுக்கூட தனியா பேசனும்… பேசலாமா?" என்று அப்பாவிடம் ஆரம்பித்து, சிதம்பரத்திடம் முடித்தான்.

"எங்களுக்கும் முழு சம்மதம். நீங்க ரெண்டு பேரும் பேசுங்க, தம்பி! தேனு, அழைச்சிட்டுப் போமா?" என்றார்ச் சிதம்பரம். கொல்லைப்புறம் அழைத்துச் சென்றாள்.

"ஹாய்! எனக்கு உங்களைப் பிடிச்சுருக்கு. உங்களுக்கு என்னைய பிடிச்சுருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான் தனியா பேசணும்னு சொன்னேன்." என்றான் சிரிப்புடன்.

"பிடிச்சுருக்கு." என்றாள் லேசான வெட்கத்துடன்.

"உண்மையாவா?"

"ஆமாங்க, பிடிச்சுருக்கு." என்றாள் வேகமாக.

"ஆனா, நீங்க என்னைப் பார்த்தும் ஏன் அப்படி முழிச்சீங்க?"

"அது வந்து..." தயக்கமாக நிறுத்திக்கொண்டாள்.

"சொல்லுங்க!"

"சொன்னா, எப்படி எடுத்திப்பீங்கனு தெரியல."

"தப்பா எடுத்துக்க மாட்டேன்."

கனவில் நடந்த அனைத்தையும் சொன்னாள்.

"ஓ… இதான் விஷயமா? சரி, எப்ப லவ் பண்ணலாம்?" என்று சிரித்தான்.

"ஆ..." என்று முழித்தாள்.

"உனக்கு லவ் பண்ணி மேரேஜ் பண்ணனும், அவ்ளோ தானே? மேரேஜ் டேட் வரைக்கும் லவ்வர்ஸ்… அதுக்கு அப்புறமும் லைஃப் லாங் லவ் பண்ணலாம்! ஓகேவா?" என்றான் சிரிப்புடன்.

"ஓகே!" என்றாள் சந்தோஷமாக.

"ஓகே மட்டும் தானா?" என்று புருவம் உயர்த்தினான்.

"வேற என்ன?" என்றாள் குழப்பமாக.

"ஓகே, பாவா… இல்லையா?" என்று கண்ணடித்தான்.

"அது…" என்று முழித்தாள்.

சிரித்தான். "நீங்க கனவா? நிஜமா?" என்று கிள்ளிப் பார்த்தாள்.

"ஆ... நா நிஜம் தான்!" என்று கையைத் தேய்த்தான்.

"சாரி, பாவா." என்று கையைத் தேய்த்துவிட்டாள்.

"பாவா வந்துருச்சு!" என்று சிரித்தான்.

"சாரி, சாரி! உங்க ரெண்டு பேரையும் கூப்பிடுறாங்க." என்று பனிமலர் சொல்லிவிட்டு ஓடினாள்.

இருவரும் சிரித்தனர்.

"சரி, போலாமா?" என்றான்.

"ம்ம்ம்..." என்று செல்லப் போனவள், வேகமாகத் திரும்பி, "உங்க பேர் என்ன?" என்றாள் அவசரமாக.

அவன் சிரித்தபடி "அர்ஜுன்." என்றான்.



❤️❤️❤️❤️ முற்றும் ❤️❤️❤️❤️
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
கதை சூப்பர். கண்டக்டர் வந்து காரியத்தைக் கெடுத்துட்டார்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ரம்யா💐💐💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top