• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 11, 2025
Messages
3
நேசங்களுடன் நித்திலன்!!!!


"கண்மணி!!!" இத்தனை வருடங்கள் கடந்த பின்பும் அவனின் அழைப்பில் கொட்டிக் கிடந்த நேசத்தில் அவளுள் அதே சிலிர்ப்பு!!!

"கண்மணி!!! லைன்ல இருக்கியா டா???" என்றவனின் குரலில் லேசாய் பதற்றம் கூடியிருந்ததோ??

"இருக்கேன் நித்தி!!! எனக்கு ஒன்னும் இல்லை பதறாதீங்க" என அவனைப் புரிந்தவளாய் உடனடியாக பதிலளித்தாள் அவனின் கண்மணி.

அவன் ஆசுவாசமாக பெருமூச்சொன்றை வெளியிடுவதை உணர்ந்து கொண்டவளின் முகத்தில் ஒரு புன்முறுவல் .

"இன்னைக்கு லோன் பேப்பர் சம்மிட் பண்ணதுல கொஞ்சம் குழப்பம் டா.. சோ அதை சரி பார்த்திட்டு கிளம்ப இன்னும் ஹாஃப் அன் ஹவர் ஆகிடும்.. நான் வேணும்னா மாமாவை வரச் சொல்லவா?? அவர் கூட கிளம்பிடுறியா நீ??" நிறைமாதத்தில் இருக்கும் மனைவியைத் தனியாய் காத்திருக்க வைக்கிறோமே எனும் பரிதவிப்பு அவன் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.

"அதெல்லாம் வேண்டாம் நித்தி!! இங்க இப்போதான் பேக்கர்ஸ் வந்து ஆல்மோஸ்ட் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு கிளம்பினாங்க.. அதைச் சொல்லத் தான் உங்களுக்கு கால் பண்ணேன்"

"இப்படி டெலிவரி டைம்ல டிரான்ஸ்ஃபர் கிடைக்கும்னு நான் நினைச்சே பார்க்கலை டா.. நானும் இதை போஸ்ட்போன் பண்ண எவ்வளவோ டிரை பண்ணேன்.. ப்ச் முடியலை.. அதான் இந்த டைம்ல உன்னை அலைய வைக்க வேண்டாம்னு உங்க வீட்டுல விட்டுட்டு போறேன்.. இருந்துப்ப தான???" என கடந்த ஒரு மாதமாய் கேட்டுக் கேட்டு சலித்துப் போன அதே கேள்வியை மீண்டும் அவளிடம் கேட்டவனின் குரலில், முதல் முறை கேட்டது போல இன்றளவும் கலக்கமே வியாபித்திருந்தது.

"நித்தி!!! பேங்க் மேனேஜரா இருக்கப்போ டிரான்ஸ்ஃபர் எல்லாம் யூஸ்வல் தானே?? இதுக்கு ஏன் இவளோ ஃபீல் பண்றீங்க நீங்க?? எப்படியும் ஒன்பதாம் மாசம் வளைகாப்பு போட்டா அம்மா வீட்டுல தான இருக்கணும்.. நான் கொஞ்சம் முன்னாடி எட்டாம் மாசமே போறேன்.. அவ்ளோதான்.. நீங்க இதையே யோசிக்காம போய் வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க.. டின்னர் அங்க தான்னு அம்மா சொல்லிட்டாங்க" என எதார்த்தத்தை அவனுக்கு புரிய வைக்க முயன்றவள், இதற்கு மேல் பேசினால் அவன் இதையே நினைத்து வருந்துவான் என்றுணர்ந்து அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

திருமணம் முடிந்து இதோ ஐந்து வருடங்கள் கடந்து விட்டது. இன்றளவும் அவனின் நேசத்தில் கடுகளவு கூட மாற்றம் இல்லை. சொல்லப்போனால், நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டு தான் போகிறது என்று அனுபவத்தில் உணர்ந்து கொண்ட கண்மணிக்கு, இப்படி ஒரு வாழ்க்கைத் துணையை தனக்குத் தேடிக் கொடுத்த பெற்றவர்களுக்கும் அந்த கடவுளுக்கும் நன்றி சொல்வதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

நித்திலன் வரும் வரையிலும் அப்படியே அமர்ந்திருக்கப் பிடிக்காமல் மீண்டும் அனைத்தும் சரியாக எடுத்து வைத்தாகிற்றா என்று பார்த்து வர எண்ணிக் கிளம்பினாள்.

அது வாடகை வீடு தான். இவர்கள் திருமணம் முடிந்த கையோடு இங்கு தான் வந்து குடியேறியிடுக்க, அவ்வீட்டின் ஒவ்வொரு இடமும் அவர்களின் காதல் கதையை அழகாய் எடுத்துச் சொல்லும். அப்படி ஒரு நிறைவான வாழ்க்கையைத் தான் அவர்கள் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். எனவே இத்தனை அழகான நினைவுகளை தாங்கி நிற்கும் இந்த வீட்டினை விட்டுச் செல்வது கண்மணிக்கு மிகவும் கடினமாக இருந்தது.

வருங்காலத்தில் இந்த வீட்டை, வீட்டின் உரிமையாளர்கள் விற்கும் எண்ணத்திற்கு வந்தால், தாங்களே வாங்கிக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டே வந்தவள் அவர்களின் படுக்கையறைக்கு வந்திருந்தாள்.

அங்கே அவர்களின் உடமையெல்லாம் நித்திலனே எடுத்து வைத்து விட்டு போயிருக்க, லாஃப்ட்டில் இருந்த சில பைகளை மட்டும் அந்த 'பாஸ்ட் மூவர்ஸ்' கம்பெனியில் இருந்து வந்த ஆட்கள் கீழே எடுத்து வைத்து விட்டுப் போயிருந்தனர்.

அதில் சில பைகளில் நித்திலனின் பழைய புத்தகங்கள் மற்றும் அவன் சிறுவயதில் வாங்கிய சில பரிசுக் கோப்பைகள் அடங்கியிருக்க, அதற்கு அருகே அழுக்குப் படாமல் இருக்க பாலீத்தின் பை ஒன்றில் சுற்றப்பட்டிருந்த சூட்கேஸ் ஒன்று பெண்ணவளின் கவனத்தை ஈர்த்தது.

"இந்த சூட்கேஸ்க்கு மட்டும் என்னவாம் இவளோ பாதுகாப்பு??" என நினைத்தவளின் புருவம் மேலேற, அந்த பாலீத்தின் பையைப் பிரித்து உள்ளிருந்த சூட்கேஸை வெளியில் எடுத்தாள்.

அது ஒரு நம்பர்லாக் வகை சூட்கேஸாக இருக்க, "என்ன நம்பர் போட்டு வச்சிருப்பாங்க??" என தாடையைத் தடவிக் கொண்டே யோசித்தவள், முதலில் அவனின் பிறந்த நாள் தேதியைப் போட, அது திறக்கவில்லை.

"வேற எந்த நம்பர் போடுறது??" என தனக்குள் கேட்டுக் கொண்ட அடுத்த முயற்சியாக அவனின் கைபேசி கடவு எண்ணை அழுத்திப் பார்க்க, அதுவும் தவறாகிப் போனது.

"அட என்னடா இது??" என நொந்து கொண்டவள், கடைசி முயற்சியாக கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல் அவளின் பிறந்தநாள் எண்ணைப் போட, அது சட்டென திறந்து கொண்டு அவளை திகைக்கச் செய்தது.

"இந்த சூட்கேஸை நான் கல்யாணம் ஆகி வந்ததுல இருந்து பார்த்ததே இல்லை.. ஆனா இதுக்கு என் பெர்த் டேட்டை நம்பர் லாக்ல செட் பண்ணி வச்சிருக்காங்க இந்த நித்தி!!" என ஆச்சரியப்பட்டவள், உள்ளே என்ன இருக்கிறது என பார்க்கத் தன்னை மீறிய ஆர்வத்துடன் அதைத் திறந்திருந்தாள்.


உள்ளே, அவள் கனவிலும் எதிர்பாரா வகையில் நித்திலனின் காதல் சின்னங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷமாய், பாதுகாப்பாக அதற்குள் அடங்கியிருந்தது.

"அடப்பாவி!! சில்லுனு ஒரு காதல் படத்துல வர மாதிரி எனக்கு முன்னாடி வேற ஒருத்தி இருக்காளா???" என அந்த சூட்கேஸில் அடங்கியிருந்தத ஒரு பெண்ணின் துப்பட்டா, ஒற்றைக்கால் கொலுசு, சில மிட்டாய் கவர்கள் என ஒவ்வொன்றாய் கண்டவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதிலும் அனைத்திற்கும் அருகில், உடைந்த கண்ணாடி வளையல்களைக் கொண்டு அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த டைரி அவளின் கவனத்தைக் கவர,

"நித்தி!! இப்படி ஒரு நிலமையில என்னைய கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே??? லவ் எல்லாம் பண்ணா அவங்க நினைவுச் சின்னத்தை எல்லாம் என் கண்ணுல படாம ஒளிச்சு வச்சிருக்கலாம் தான?? உங்கமேல கோவம் கூட பட முடியலை" என்றவளின் மனம் ஒரு நிலையில் அல்லாமல் திண்டாடித் தவித்தது.

நிச்சயம் கணவனின் அன்பின் மீது துளியளவும் சந்தேகம் இல்லை. நித்திலன் அவளுடன் வாழ்ந்த வாழ்க்கை பொய்யில்லை என அவள் அறிந்திருந்தாலும் தனக்கு முன் அவன் வாழ்வில் ஒருத்தி இருந்திருக்கிறாள் என்பதை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

'என் நித்தி!! எனக்கு மட்டும் தான்!! இது அவர் வாழ்க்கையில முடிஞ்சு போனது.. இனி நான் மட்டும் தான் அவருக்கு' என மனதில் அதை நன்றாய் பதித்துக் கொண்டவள், தடதடக்கும் மனதுடன் அந்த டைரியைத் திறந்து முதல் பக்கத்தைப் பார்க்க அவள் கண்கள் அதிர்ச்சியில் சாசர் போல் விரிந்தது.

"நித்தி!!!!" என்றவளுக்கு உண்மையில் அந்தநொடியை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் கண்கள் கலங்க அப்படியே அமர்ந்து விட்டாள்.

இன்னமும் அவளால் தன் கண்களால் கண்டதை நம்பமுடியவில்லை.

'எப்படி???' எனும் ஒரே கேள்வி தான் அவள் மனதெங்கும் வியாபித்திருக்க, நடுங்கும் கரங்களுடன் மீண்டும் அந்தப் பக்கத்தை திறந்து பார்வையை அதில் பதித்தவளுக்கு மீண்டும் ஆனந்தத்தில் கண்ணீர் வரும் போலானது.

ஏனெனில் அங்கே இருந்தது அவளின் வரைபடம் அல்லவா??? 'கண்மணி' எனும் அவள் பெயரை மட்டுமே கொண்டு அவளின் முகத்தை அழகாய் வரைந்து வைத்திருந்தான் அவளின் காதல் கணவன் நித்திலன்.

"நிஜமாவே நான் தானா???" என மீண்டும் நம்பமாட்டாமல் அவன் மறைத்து வைத்திருந்த காதலை கண்டுகொள்ள அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டியவளுக்கு உண்மையில் அவனின் காதலைக் கண்டு பிரமிப்பாக இருந்தது.

"அப்போ நான் +2 படிக்கிறப்போ இருந்து என்னை லவ் பண்றீங்களா நித்தி நீங்க???" என மனதோடு அவனிடம் கேட்டுக் கொண்டவள்,

அங்கு அவனின் எழுத்து வழியாக, அவளின் கடந்தகாலத்திற்கு காலப்பயணம் மேற்கொண்டு வந்துவிட்டாள்.

அங்கு அவன் சேமித்து வைத்திருந்த அவளின் துப்பட்டா முதற்கொண்டு ஒவ்வொரு பொருளும் எப்போது எப்படி அவனிடம் வந்து சேர்ந்தது என அவனின் எழுத்தின் வாயிலாக அறிந்து கொண்டவளுக்கு, 'இப்படி பைத்தியக்காரத் தனமா ஒருத்தன் நம்ம பின்னாடியே இத்தனை வருஷம் சுத்திருக்கான்.. அதுகூட தெரியாம எப்படி டி இருந்த??? மக்கு மக்கு!!' என தன் மீதே கோபம் கொண்டு தலையில் தட்டிக் கொண்டாள்.

தொடர்ந்து, ஆசையும் ஆர்வமும் போட்டிபோட அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டியவளுக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல் அந்த டைரியில் இருந்த ஒவ்வொரு பக்கங்களும் அவளின் மீதான நித்திலன் மாசில்லா காதல் பெண்ணவள் மீது மழையாய்ப் பொழிந்து அவளைக் குளிர்வித்தது.

அதுவும் கடைசியாக அவளின் பரீட்சை முடிந்த இறுதி நாள், அவர்கள் குடும்பத்துடன் அவ்வூரை விட்டுக் கிளம்பிய தினத்தில், நித்திலனின் மனநிலையை படித்துத் தெரிந்து கொண்டவளுக்கு, தன்னைப்போல் கண்கள் கலங்க, "ஏன் நித்தி?? சொல்லிருக்களாமே?? ஏன் இப்படி தனியா கஷ்டப்பட்டீங்க??" என எப்போதோ அவன் அடைந்த துயருக்கு இப்போது கண்ணீர் சிந்தினாள் அவனின் கண்மணி.


நேரம் போவது தெரியாமல் அவள் அந்த டைரியிலே மூழ்கியிருக்க, வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நித்திலன் கதவைத் தட்டித் தட்டி பார்த்துவிட்டு அவள் திறக்கவில்லை என்றதும் அவளுக்கு என்னாயிற்றோ என பயந்துபோய் தன்னிடம் உள்ள சாவி கொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்தவன்,

"கண்மணி!!! டேய்!! கண்மணி!! எங்கடா இருக்க??" என பரிதவிப்புடன் அவளை அழைத்துக் கொண்டே வீட்டின் ஒவ்வொரு இடமாய் அவளைத் தேடியவன், இறுதியாக அவர்களின் படுக்கையறைக்கு வர, அங்கே அவன் வந்ததைக் கூட உணர முடியாமல் அவன் மறைத்து வைத்திருந்த பொக்கிஷத்தின் மத்தியில் சமைந்து போய் அமர்ந்திருந்தாள் அவனின் கண்மணி.

"பார்த்துவிட்டாள்!!! அனைத்தையும் பார்த்துவிட்டாள்!!!" எனக் கண்டதும் புரிந்து கொண்டவனின் மனம் எவ்வாறு உணர்கிறது என அவனாலேயே விளங்கிக் கொள்ள முடியவில்லை.

கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்களாக யாருக்கும் தெரியாமல் அவன் மட்டுமே நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த சுகமான பாரம் ஒன்று இன்று விடுதலை அடைந்துவிட்டது. ஆனால் அதை நினைத்து மகிழ்ச்சி அடையக் கூட அவனின் மரத்துவிட்ட மூளை செயல்படவில்லை.

இதை அனைத்தையும் கண்ட பின் அவனின் கண்மணியின் மனம் எவ்வாறு உணர்கிறது என்பதிலே அவனின் எண்ணம் சுழல, மெதுவாய் எட்டு வைத்து அவனின் மனையாளை நெருங்கி மண்டியிட்டு கீழே அமார்ந்தவன், "கண்மணி!!!" என பெயருக்கே வலித்து விடும் போல் மிகவும் மென்மையாய் அழைக்க,

அவளிடம் பதிலில்லை.

"டேய் கண்மணி!!" என அவளின் தோளைத் தொட்டு அழைத்த பின்பு தான் அவளுக்கு ஸ்மரணையே வர, அவளின் நித்தி வந்துவிட்டதே அப்போது தான் அவளின் புத்திக்கு உரைத்தது.

"நித்தி!!!" என அடுத்த நொடி அவனைப் பாய்ந்து கட்டிக் கொண்டவள், எதற்கு அழுகிறோம் என்றே தெரியாமல் அவன் மார்பில் முகத்தைப் பதித்து அழுது தீர்க்க,

அவளுக்கு என்னவாகிற்று எனப் புரியாமல், அவள் அழுகையையும் தாங்கமாட்டாமல், "கண்மணி!!! என்னைப் பாரு!! என்னடா?? எதுக்குமா இந்த அழுகை.. ரிலாக்ஸ்!! ஒன்னும் இல்லை.. நீ அழுது உள்ள பேபியையும் பயம் காட்டாத டா.." என ஆதரவாய் அவள் முதுகை நீவி விட்டுக் கொண்டே நித்திலன் பேச, கொஞ்சம் கொஞ்சமாக அவளின் அழுகை சமன்பட்டது.

இன்னும் லேசாய் விசும்பல் இருக்க, மெதுவாய் அவன் மார்பில் இருந்த முகத்தை நிமிர்த்தி நித்திலனின் முகம் பார்த்தவள், "ஏன்????" ஒரே கேள்வி தான் அவளிடம்.

'ஏன் என்னிடம் முன்பே கூறவில்லை???' என்கிற அவளின் ஆதங்கம் அவனுக்கு நன்றாய் புரிந்தாலும், அவனிடம் அதே அமைதியான புன்னகை.

"ஏன் சொல்லணும்???" என விளையாட்டாய், அழுது சிவந்திருந்த அவளின் மூக்கைப் பிடித்து இழுத்தபடி அவன் இலகுவாகக் கேட்க,
 
Joined
Feb 11, 2025
Messages
3
"சொல்லணும் தானே??? அட்லீஸ்ட் கல்யாணம் ஆன பின்னாடியாச்சும் சொல்லிருக்களாமே" தன்னிடம் இத்தனை காலம் மறைத்து விட்டானே எனும் மனத்தாங்கல் அவள் குரலில் தெரிய,



அதை உணர்ந்தது போல் இன்னும் அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டவன்,



"சொந்த ஊரை விட்டு வெளியவே போக மாட்டேன்னு அவ்ளோ அடம் பண்ணேன்.. ஆனா எங்க வீட்டுல என் பேச்சைக் கேட்காம திருச்சியில கொண்டு வந்து சேர்த்து என் வாழ்க்கையில எனக்கு மிகப் பெரிய நல்லது பண்ணிட்டாங்க என் அம்மா.. முதல்முறை உன்னை ரெட்டை ஜடையோட ஸ்கூல் யூனிஃபார்ம்ல பார்த்தேன் கண்மணி!!!! இன்னும் அது என் கண்ணுக்குள்ளயே நிக்குது.. உனக்கு அன்னைக்கு கடைசி எக்ஸாம்.. சரியா பண்ணலைன்னு உன் பிரண்டுகிட்ட சொல்லி நீ லேசா கண்ணு கலங்குன பாரு.. என் மனசை ஏதோ பண்ணிருச்சு டி அது!!!!" என இப்போது நடந்தது போல் அவன் நெஞ்சை நீவி விட்டுக்கொள்ள,



அனைத்தையும் எழுத்து மூலமாக தெரிந்து கொண்டாலும் அவனின் வாய்மொழியாகக் கேட்கையில் பெண்ணவளுள் ஏதோ சிலிர்த்து அடங்கியது.



"அவ சின்னப்பொண்ணு டா மடையா!! இது தப்புன்னு எனக்கு நானே எவ்வளவோ சொல்லி தடை போட்டுப் பார்த்தாலும்.. இதோ உன் கண்ணு!!! அது எல்லாத்தையும் உடைச்சு போட்டுட்டு மனசு மொத்தமும் உன்னையே நிறைச்சு வச்சுக்கும்" என அவள் கண்களைச் சுட்டிக்காட்டி அவன் காதலுடன் கூற, அவன் கண்கள் சொன்ன பரிபாஷையை கண்டுகொண்ட கண்மனிக்கு மூச்சடைத்த உணர்வு.



"ஸ்கூல் முடிஞ்சு கொஞ்ச நாளுலயே உன் வீட்டைக் கண்டுபிடிச்சிட்டேன்.. ஐ க்நோ!! ஸ்டாக்கிங்(Stalking) தப்பு தான்.. பட் எனக்கு வேற வழி தெரியலை.. இது லவ் தான்னு நான் உணர்ந்தாலும் உன்கிட்ட பேசவோ அதைச் சொல்லவோ உன்னோட வயசும் படிப்பும் பெரிய தடையா இருந்தது.. தேவையில்லாம என்னால உன் லைஃப்ல எதுவும் பிரச்சனை வரக்கூடாதுன்னு உன் கண்முன்னாடி கூட நான் வந்ததில்லை... கருவறைக்குள்ள இருக்க சாமியை தூரத்துல இருந்தே கும்பிட்டு போற ஒரு சராசரி பக்தன் மாதிரி தினமும் உன்னை நான் தூரத்துல இருந்தே ரசிச்சுட்டு போய்டுவேன் கண்மணி!!!" என்றவனின் கூற்றில் கொட்டிக் கிடந்த காதலைக் கண்டு வாயடைத்துப் போய் அமர்ந்துவிட்டாள் கண்மணி.



"முதல்ல சொல்லணும்னு தோணலை.. அடுத்து சொல்லணும்னு நினைக்கும் போது அதுக்கான தைரியம் எனக்கு வரலை.. அதான் உண்மை!!! ஒருவேளை உனக்கு என்னைப் பிடிக்காம போய்ட்டா?? அதை நினைச்சுக் கூட பார்க்க முடியலை என்னால.. தினமும் உன்னோட பஸ்ல ஒன்னா பயணிக்கிற அந்த அரைமணி நேரம்!!! என் வாழ்க்கையிலே பொன்னான நேரம் தெரியுமா??? வாழ்க்கையில முதல் முறையா ரெட் சிக்னல்ல வெய்ட் பண்றதை ரசிச்சேன் உன்னால... " என அவன் அந்நாளின் நினைவிற்கே போய் அனுபவித்து கூறிக் கொண்டிருக்க,



'இத்தனை காதலுக்கும் தான் தகுதியானவள் தானா??' எனும் ஐயமே தோன்றிவிட்டது கண்மணிக்குள்.



"எனக்கு படிப்பு முடிஞ்சாலும்.. உனக்காக.. உன்னைப் பிரிய முடியாம.. எங்கம்மா கிட்ட திட்டு வாங்கிட்டே அதே காலேஜ்ல பிஜி சேர்ந்தேன்... வருஷங்கள் தான் கண்மூடித் திறக்குறதுக்குள்ள ஓடிருச்சு.. அப்போ சட்டுனு ஒரு நாள் காலேஜ் முடிஞ்சதும் நீங்க வீட்டையெல்லாம் காலி பண்ணிட்டு கிளம்பி போய்ட்டீங்க எங்கேயோ.. எங்க போனீங்கன்னு தெரியாம உங்க வீடு இருந்த தெருவுல கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி ஒரு வாரம் சுத்தினேன் தெரியுமா கண்மணி??" எனக் கேட்டவனின் குரலில் அன்றைக்கு இருந்த சோகத்தின் சாயல் தெரிய,



'போதுமே!!' என்பதைப் போல் அந்த சூழ்நிலையின் கணம் தாங்காமல் அவள் இறைஞ்சுதலாய் பார்க்க,



லேசாய் புன்னகைத்து அவளை மீண்டும் தோளோடு கட்டிக் கொண்டவன், "அது அப்போ டா!!! இப்போ இந்த உலகத்திலேயே என்னை விட யாரும் சந்தோஷமா இருக்க முடியாது தெரியுமா??" எனக்கேட்டு அவளின் தலையைப் பிடித்து லேசாய் ஆட்டி விடுவித்தான்.



"உங்க அப்பாக்கு சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சிருக்கு.. அவ்ளோ தான் என்னால கண்டுபிடிக்க முடிஞ்சது.. அதை வச்சு என்னால என்ன பண்ண முடியும் சொல்லு?? இருந்தாலும் தேடுனேன்.. பேங்க் எக்ஸாம் கோச்சிங் இதுக்காகவே சென்னையில சேர்ந்து என்னால முடிஞ்ச வரை தேடினேன் கண்மணி உன்னை!!!! இந்தக் கண்ணை என்னால கண்டுபிடிக்கவே முடியலை" என தொண்டையடைக்கக் கூறியவன், பின் தன்னை சமன்படுத்திக் கொண்டு,



"உனக்கே தெரியாம உன்னோட நினைவுகளா.. இதோ இங்க சேகரிச்சு வச்சிருக்கேனே.. அதுதான்.. அதுமட்டும் தான் என் வாழ்க்கையாவே மாறிடுச்சு.. நான், என் வேலை, உன் நினைவுகள் இப்படியே என் காலம் போய்டும்னு நான் நினைச்சப்போ, இல்லைடா மடையா இந்தா உன் கண்மணின்னு கடவுள் உன்னை எனக்கே எனக்காகக் கொடுத்துட்டாரு கண்மணி!!! இது மாதிரி யாருக்கும் நடந்திருக்கான்னு எனக்குத் தெரியலை.. ஆனா நாம மனசார ஒன்னை விரும்புனா அந்த இயற்கையே நம்ம கிட்ட அதைக் கொண்டு வந்து சேர்க்கும்னு அன்னைக்கு நான் உணர்ந்தேன்.. இதோ இந்த நிமிஷம் வரைக்கும் நீ எனக்கே எனக்கா என்கிட்ட வந்துட்டன்னு என்னால நம்ப முடியலை கண்மணி!! நிச்சயம் நீ இல்லைனாலும் நான் வாழ்ந்திருப்பேன்.. ஆனால் அந்த வாழ்க்கையில ஒரு ஜீவன் இருக்காது.. நீ வந்து தான் எனக்கும் என் வாழ்க்கைக்கும் உயிர் கொடுத்திருக்க கண்மணி.. ஐ லவ் யூ!!!" என கரகரத்த குரலில் கூறியவன் அவள் பிறைநுதலில் முத்தம் பதிக்க,



அவன் கழுத்தை எக்கிக் கட்டிக் கொண்ட கண்மணி, "இவ்வளவு காதலையும் வேதனையும் ஏங்க இத்தனை வருஷமும் உங்களுக்குள்ளவே வச்சு கஷ்டப்பட்டீங்க?? என்கிட்ட சொல்லிருக்கலாம் தான?? இப்படி ஒருத்தரை நான் வேண்டாம்னு சொல்லிடுவேனா??? ஒருவேளை எங்க அப்பா கைக்கு உங்க போட்டோவும் ஜாதகமும் வராம போயிருந்தா என்னாகிருக்கும்???" என ஒருவேளை அப்படி மட்டும் நடந்திருந்தால் என எண்ணிப் பார்க்கக் கூட அஞ்சி அவள் அமர்ந்திருக்க,





"உன் மேல நான் வச்ச காதல் நீ என் வாழ்க்கையில் இருந்தாலும், இல்லைனாலும் என்னை வாழவைக்கும் கண்மணி!! என் ஜீவன் வாழ உன் நினைவுகள் போதும்.. அது கூடவே நான் வாழ்ந்து மடிஞ்சிருப்பேன்" என ஆத்மார்த்தமாகக் கூறியவனின் குரலில் இருந்த உறுதி அதுதான் உண்மை என்று கூற, அவன் வாயிலே இரண்டு அடி போட்ட கண்மணி,



"இன்னொரு டைம் இப்படி பேசுனீங்க.. பிச்சு பிச்சு!!!" என கண்ணை உருட்டி அவள் மிரட்டிய அழகில், மீண்டும் முதலில் இருந்து அவள் கண்களுக்குள் விழுந்தான், மீளவே கூடாது எனும் வேண்டுதலுடன்.



"ஒன் சைட் லவ் உண்மையாவே கிரேட் தான்ல!! ஹப்பா எப்படித்தான் லவ் பண்றவங்க கிட்ட எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம அவங்களை மட்டுமே நினைச்சிட்டு அவங்களுக்காக எல்லாம் பண்ணிட்டு, அதுவும் நம்ம கொடுக்குற லவ் அவங்களுக்கு தெரியப்படுத்தக் கூட இல்லாம இருக்கிறது எல்லாம் எவ்ளோ கஷ்டம்?? சத்தியமா என்னால அப்படிலாம் இருக்கவே முடியாது.. " என அவள் அதை எண்ணி மலைப்பாகக் கூற,



வாய்விட்டு நகைத்த நித்திலன்,



"காதல்ல வர சுமை கூட சுகமா தான் இருக்கும் கண்மணி!! அதை நீ உணர்ந்து வாழ்ந்தா.." என அனுபவஸ்தனாக அவன் கூற,



அதை ஆமோதிப்பாய் ஏற்றுக் கொண்டாள் அவனின் மனையாள்.



"கல்யாணத்துக்கு பின்னாடியாவது சொல்லிருக்களாம் தானே???" இன்னும் அவளுக்கு அதில் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்தது.



"சொன்னால் தான் காதலா??? அப்போ இத்தனை வருஷமும் என் காதலை நீ உணரலையா கண்மணி??" என புருவம் உயர்த்தி அவன் கேட்க,



அவளுள்ளும் அதே கேள்வி.



'உண்மைதானே!! இத்தனை வருடங்களில் அவன் செயலில் உணர்த்திய காதலை விடவா அவனின் அந்த வார்த்தைகள் உணர்த்திவிடப் போகிறது??' என அவன் காதலை எண்ணித் திளைத்தவள்,



"லவ் யூங்க!!!" என மனம் கொள்ளாக் காதலுடன் கூறி அவனை அணைத்துக் கொள்ள,



அவளைத் திருப்பி அணைத்துக் கொண்டவனின் முகத்தில் வாழ்க்கையை வென்றுவிட்ட நிறைவான புன்னகை!

!!



காதல் அனைத்தையும் அழகாக்கும், சரியானவ
ர்களை காதலித்தால்.



சொல்லிய காதல் அழகு!! சொல்லாத காதல் பேரழகு!!



மொத்தத்தில் காதலே அழகானது தானே!!!

 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
உண்மை. நமக்கு அமையும் துணை சரியாக இருந்தால், காதல் அனைத்தையும் அழகாக்கும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் மித்து💐💐💐
 
Joined
Feb 11, 2025
Messages
3
உண்மை. நமக்கு அமையும் துணை சரியாக இருந்தால், காதல் அனைத்தையும் அழகாக்கும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் மித்து💐💐💐
மிக்க நன்றி கா❤️❤️
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top