• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Mar 20, 2025
Messages
15
கொஞ்ச நாளாய் தான் எனக்கு இது நடக்கிறது. மிகச் சில தினங்களுக்கு முன்பு இருந்துதான் அந்த உணர்வு தோன்றுகிறது. அது வரும்போது எல்லாம் என் நிம்மதி பறி போய், என்னைப் பரிதாப ஜீவனாகத் தவிக்க வைக்கிறது. என்னால் இதை, இந்த இதய பிசைவை தாங்க முடியும் என்று தோன்றவில்லை. எந்தக் கனத்திலும் அளவுக்கு மீறி ஊதப்பட்ட பலூன்போல நான் வெடித்து சிதறி விடுவேன் போல இருக்கிறது.

அதன் ஆரம்ப அறிகுறியாகத் தானோ என்னவோ, எனது உடல் எடையை இழக்க தொடங்கி உள்ளது. அதுவும் அசுர வேகத்தில். இன்னும் கொஞ்ச நாள் வரை இந்நிலை நீடித்தால், என் உடலை நானே உணர கூட முடியாமல் போய்விடும்.

‘எல்லாத்துக்கும் காரணம் இந்த அரசாங்கம் தான் சார். தன் பிள்ளைகளுக்குச் சோறு போட வக்கு இல்லாத பெற்றோர்களுக்கு எதுக்கு பிள்ளைகள்? தன் குடிமகனுக்கு வேலை கொடுக்க முடியாத அரசாங்கத்திற்கு, எதற்கு இத்தனை மக்கள்? என் புலம்பல் பெரிது. காரணம் நான் ஒரு வேலை இல்லாப் பட்டதாரி. ஆனால், உங்களிடம் நான் சொல்ல வந்தது எனது பர்சனல் பிரச்சனைகளைப் பற்றி அல்ல. மாறாக எனக்குச் சில தினங்களாக நடக்கும் அந்த விசித்திரங்களை பற்றி. குறிப்பாக மாடி வீட்டில் அந்த அந்நியன் குடி வந்ததிலிருந்து.’

‘என் பெயர் ரமேஷ். நான் தூத்துக்குடி பக்கம் ஒரு பெயர் சொன்னால் உங்களால் அறிந்து கொள்ள முடியாத ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். படித்து விட்டு வேலை தேடும் லட்சோப லட்சம் பாவிகளில் ஒருவன். நானும் இறுதியில் படை எடுத்தது ஆபத்பாந்தவன் சென்னை நோக்கித் தான். இன்னொரு முக்கிய காரணம் அங்கே தான் எனது எல்லோர் நண்பன் சரவணன் இருக்கிறான். என்னைப் போல விஐபியாகச் சென்று, அங்கே தட்டுத் தடுமாறி இப்போது ஏதோ ஒரு கம்பெனியில் அக்கவுண்டாக நல்ல வேலையில் இருக்கிறான். அவன் தான் எனக்குச் சொன்னான். தான் ஒரு மேன்ஷனில் இருப்பதாக. அவனுக்கு இப்போது கம்பெனி குவார்டர்ஸ கிடைத்துவிட்டதால், அவன் இருந்த அறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் (லாபம் = அட்வான்ஸ் மிச்சம்) அங்கே மாடி அறை ஒன்று காலியாக இருக்கிறது என்றும். வேற யாரை வேணும் என்றாலும் கூட அழைத்து வா என்றும் சொன்னான்.’

நண்பனிடம் தகவலைப் பெற்றதும், உடனே அந்த மேன்ஷனில் குடியேறினேன். ஒரு முறை வந்து பார்த்துவிட்டு ஏற்பாடுகள் செய்துவிட்டுச் சென்றான். அந்த மேன்சனை பற்றி நான் சொல்லி ஆக வேண்டும். என்னைப் பற்றியும் தான். சென்னையில் ஒரு ஒதுக்கு புறத்திலிருந்தது அந்தக் கட்டிடம். கட்டப்பட்ட ஆண்டு நிச்சயம் ஆங்கிலேயன் நடை போட்ட ஒரு ஆண்டு. உள்ளே பகலிலேயே இருட்டு எபெக்ட். நமக்குப் பழைய சத்திய ஜித்ரே படங்களை நினைவுபடுத்தும். உள்ளே ஹாலில்தான் மாடிக்குச் செல்லும் படிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவைகள் அந்தக் கால ஸ்டைலில் அமைக்கப்பட்ட மரப் படிகள். அவைகளை பார்க்கும்போது எல்லாம், மனிதன் ஏறினால் எப்படிச் சத்தம் வரும் என்று ஒரு ஆவல் வருவதை என்னால் தடுக்க முடியாது.’

‘மாடி அறையில் நான் வந்ததிலிருந்து நீண்ட நாளுக்கு யாருமே வந்தது கிடையாது. ஒவ்வொரு நாளும் நான் வேலை தேடி அலைந்து களைத்து வரும்போதும் என்னை வரவேற்பது அந்த ரிசப்ஷனில் இருக்கும் ஒரு வயதான கிழவன்தான். அவன் பேசி நான் கேட்டதாக நினைவு இல்லை. பேசுவானா என்றே தெரிய வில்லை.’

‘அப்புறம் ஒரு விஷயம். என்னைப் பற்றி ஒரு கேவலமான உண்மை உங்களிடம் சொல்லாமல் மறைக்கலாம் என்று தான் உள்ளம் சொல்கிறது. இவைகளை யாரிடமாவது பகிர்ந்தால் தான், எனக்குக் கொஞ்சமேனும் ஆறுதல் கிடைக்கும் போல இருப்பதால், இதை மறைக்காமல் சொல்லுகிறேன். அதாவது பல மாத வேலையின் அலைச்சலும், ஆற்றாமையும், தோல்வியும் என்னை விரக்தியின் உச்சியில் விரட்டிய ஒரு கோடி காலத்தில் ஒரு நாளில் தான், நான் தற்கொலைக்கு முயன்றேன். எனது வாழ்வில் நான் எதையும் விறுவிறுப்பாக உணராத சோகை வாழ்க்கை எனக்குப் போர் அடித்து விட்டததனால் வந்த முடிவு அது.’

ஆனால், அன்றைய தினம்தான் எல்லாம் தொடங்கியது.
பூச்சி மருந்தை நான் பல கலவையான சிந்தனைகள் தாக்குதலுக்கு இடையில் உற்று பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்வில் இனி ஏதும் நான் அடைய வேண்டியதில்லை என்கிற நிலையில் இருந்த, அந்தக் கணத்தில் தான் என் வாழ்வில் அந்த விறுவிறுப்பு வினாடிகள் தோன்றின. முதல்முறையாக எனது காதுகள் அந்த ஒலியைக் கேட்டது. நான் நீண்ட நாளாகக் கேட்கத் துடித்த அந்த ஒலி. க்ரச்சக்... க்ரச்சக்... க்ரச்சக்...
மாடியின் அந்தப் படியில் யாரோ ஏறும் ஒலி. ஏனோ எனக்கு இந்த வினாடி வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக, அந்த ஒலிக்குச் சொந்தக்கார மனிதனைப் பார்க்கும் ஆவல் எழுந்தது.’

‘பூச்சி மருந்து டப்பாவைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, முதலில் செய்ய வேண்டிய வேலையாக ஓடிச் சென்று மாடிப்படிகளை நோக்கினேன். எப்போதும் அந்தக் கட்டிடத்திற்குள் இருக்கும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்ட ஒளிபோல, ஒளி தரும் பழைய கால சோகையான சாண்ட்லியர் வெளிச்சத்தில் பார்த்தேன். அந்த மனிதன் தனது கடைசி படிகளில் இருந்தான். ஏனோ அவனைப் பார்க்கும்போது ஒரு இனம் புரியாத மர்ம உணர்வு என்னைத் தாக்கியது. அந்த உணர்வு எனக்கு மிகப் புதிது. ஏன் அந்த மனிதனை பார்க்கும்போது மட்டும் இது தெரியவில்லை. அதற்கான விடை அறிய எனது மனம் ஆவல் கொண்டது.’

நான் சில நாளாக வேலை தேடும் படலத்தை அறவே நிறுத்திவிட்டு, பாதாள சாக்கடையில் ஒளிந்து இருக்கும், ஒளி ஒத்து கொள்ளாத ஒரு கரப்பான் போல, அந்த அறைகளில் அடைந்து கிடந்தேன். எனவே அடுத்த நாள் காலை அவன் முகத்தைப் பார்க்க எழுந்து ஓடி வந்தேன். ஆனால் அப்போதைக்கு அவன் அந்த அறையில் இல்லை. வேலை தேடியோ அல்லது வேலைக்கோ அல்லது வேறு எங்கோ ரூமை பூட்டிவிட்டுச் சென்றிருந்தான். அவனிடம் ஏதோ ஒன்று இருந்ததே அது என்ன?’
 
New member
Joined
Mar 20, 2025
Messages
15
‘நான் அறையில் வந்து பூட்டி கொண்டேன். ஆனால், அன்று மாலைவரை இருப்பு கொள்ளாமல், அவ்வபோது வந்து மாடி அறையை வந்து உற்றுப் பார்த்தேன். எனக்குச் சிரிப்பாக இருந்தது. காதலியைத் தேடும் காதலன் போல, நான் ஏன் அந்த மாடி அறை மனிதனைத் தேடுகிறேன் என்று எனக்கேப் புரியவில்லை. தேவை இல்லாத ஒரு வேலையை இவ்ளோ ஆர்வமாக நான் ஏன் செயகிறேன்? தெரியவில்லை.’

‘அன்று மாலை ஒரு ஆறு அல்லது ஏழு இருக்கும். வெளியே அந்த ஒலி. க்ரிசிக்... க்ரிசிக்... க்ரிசிக்... க்ரிசிக்... நான் நொடி தாமதிக்காமல் ஓடி வந்து கதவைத் திறந்துப் பார்த்தேன். அங்கே அவன் மாடியில் ஏறிக்கொண்டிருந்தான். மீண்டும் அதே உணர்வு. இது என்ன வகை உணர்வு என்று ஒன்றும் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அந்தத் தாடிக்காரனிடம், ஏதோ ஒன்று இருந்தது. அது என்னைக் கவர்ந்தது நிஜம். ஒரு நிமிடம்.. என்னது தாடிக்காரனா? நான் எப்படி அவனைத் தாடிக்காரன் என்று முடிவிற்கு வந்தேன். அவன் முகத்தை இதுவரை பார்த்ததாக நினைவு இல்லையே. ஆனால், அவன் தாடி வைத்திருப்பான் என்று உள்ளுணர்வு சொன்னது.

‘அவன் படிக்கட்டில் தொடர்ந்து ஏறிக் கொண்டு இருந்தான். க்ரிசிக்... க்ரிசிக்... அந்த ஒலி என்னை ஏதோ செய்தது. அவனை அழைக்கும் படி எனது உள் உணர்வு உந்தியது. அழைக்கலாமா? வேணாமா? என்ன செய்யலாம்? அவன் மாடிப்படி முடிவுகளை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். நான் தயக்கத்தை, ஒரு சின்னத் தயக்கத்திற்கு பின் தள்ளி வைத்துவிட்டுத் தயங்கி தயங்கி "ஹலோ" என்றேன். அது என் காதுகளுக்கே கேட்கவில்லை. பிறகு கொஞ்சம் சப்தம் கூட்டி "ஹலோ” என்றேன் சப்தமாக. எனது ஒலி அவனை அடைந்ததாகத் தெரியவில்லை. அவன் எந்த ரியாக்சனும் இல்லாமல் மாடிகளின் முடிவை அடைந்தான்.’

‘எனது உள்ளுணர்வு ப்ளீஸ் திரும்பிப் பாரு. ப்ளீஸ் திரும்பிப் பாரு என்றது. அவன் ரூமின் பூட்டை திறப்பது தெரிந்தது. கதவைத் திறந்து உள்ளே போக எத்தனித்தான். அப்போது திடீர் என்று ஏதோ எனது உள்ளுணர்வு அவனைத் தாக்கியது போல. ஒரு வினாடி ஒரே வினாடி என்னைத் திரும்பிப் பார்த்தான். என்னைப் பார்த்துப் புன்னகைத்ததாகத் தான் தோன்றியது. சரியாகச் சொல்ல முடியவில்லை. உடனே கதவைச் சாத்தி கொண்டான். நான் குழபத்திற்கும், சின்ன அதிர்ச்சிக்கும் ஆளானேன் காரணம் அவன் நான் நினைத்தது போலவே தாடி வைத்து இருந்தான்.’

‘இவைகள் எல்லாம் தொடங்கியது சில தினங்களுக்கு முன்புதான் என்றாலும், அந்தச் சில தினங்கள் எனக்குப் பரிச்சயம் இல்லாத, ஒரு நிலைக்கு என்னைக் கொண்டு சென்றது. ஏன் அவனைப் பார்க்கும்போது எனக்கு ஒரு மாதிரி உணர்வு வருகிறது? அது என்ன உணர்வு? அதை உற்று கவனித்தபோது ஒன்றே ஒன்று புரிந்ததது. மிகத் தாமதமாகத் தான் அது புரிந்தது. அவன் என்னைப் போல ஒருவன் இல்லை அவன் வேற ஏதோ! விரைவிலேயே அந்த விசித்திரத்துக்கு நான் விடை கண்டு கொண்டேன்.’

‘அவன் என்னைப் பார்க்காமலே தன்னை பற்றி எனக்கு உணர்த்தி கொண்டு, தகவல் தந்து கொண்டே இருக்கிறான். உதாரணமாக, அடுத்த தினம் நான் வழக்கம்போலப் பெட்டில் படுத்து இருந்தேன். இப்போது அவன் அறையை விட்டு வரப் போகிறான் என்று உள்ளுணர்வு சொன்னது, கொஞ்ச நாளாக எனது உள்ளுணர்வு, மிகக் கூர்மையாக ஆகி போனதை என்னால் உணர முடிந்தது. நான் உடனே வெளியே வந்து கதவு அருகே காத்திருந்தேன். மிகச் சரியாக இரண்டு நிமிடம் கழித்து அவன் மாடி அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.’

‘இம்முறை கையில் ஏதோ சூட்கேஸ் வைத்து இருந்தான். தான் வெளியே வரப்போவதை, வந்து என்னைப் பார் என்று, அவன் உள்ளுணர்வில் எனக்குச் சொன்னது எப்படி? என்று நான் குழம்பி நின்றேன். இம்முறை கண் எதிரே அந்தத் தாடிக்காரன் நிதானமாக இறங்கிச் சென்றான். அவன் முகம் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்த அடர்த்தியான புருவம். கூர்மையான கண்கள். அகல நெற்றி. உயரமான ஒல்லியான உடல். நான் இருபதையே சட்டை பண்ணாதவன் போல அவன் கடந்து சென்றான். ஆனால் ரிசப்சனை நெருங்கும்போது என்னைத் திரும்பிப் பார்த்து. என்ன அது புன்னகை தானே? சிரித்தானா, இல்லையா?’

நான் எனது அறையில் புகுந்து கொண்டேன். வெளியில் வேலை தேடுவது மட்டும் அல்ல. சாப்பிட செல்வதும் முற்றிலும் தவிர்த்து விட்டிருந்தேன். எனக்கு என் உடல்மேல் துளியும் அக்கறை இல்லை. எனது அக்கறை எல்லாம், அந்தத் தாடிக்காரன் மாலை எப்போ வருவான் என்பதை பற்றித்தான். அன்று மாலை அதே உள் உணர்வு. அவன் வருகிறான். வெளியே சென்று நாய்போல அவனுக்காகக் காத்துக் கிடந்தேன். சரியாக ஐந்து நிமிடம் கழித்து அவன் வந்தான். அதே போலக் கண்டு கொள்ளாமல் ஏறிச் சென்றான். அதே சத்தம். க்ரிசிக்... க்ரிசிக்...
க்ரிசிக்...’

‘அதன்பின் வந்த நாட்கள் விசித்திரங்கள் அதிகமாகியது. நான் ஒரு கொக்கேய்ன்க்கு அடிமையாகும் போதைக்காரனைப் போல அந்தப் பழக்கத்திற்கு அடிமை ஆனேன். அவன் தொடர்ந்து என்னுடன் உள் உணர்வு வாயிலாகப் பேசிக் கொண்டே இருந்தான் அந்த ராஜ சேகர். ஆம் அவன் தனது பெயரை எனக்கு மனதின் வாயிலாகச் சொல்லிவிட்டான். இது அனைத்துமே எனது கற்பனைதான் என்று நீங்கள் நினைக்கலாம். ஏன் நானும்தான் அதை நினைத்தேன். ரிசப்சனை நெருங்கிக் கிழவன் இல்லாதபோது அந்த லெட்ஜரில் நான் அவன் பெயரை உறுதி செய்யும் வரை.’

(இங்கே ஒன்றை நான் சொல்லி ஆக வேண்டும். நான் லெட்ஜரை நெருங்கும் போதே ஏதோ அந்தப் புத்தகம் எனது நோக்கம் அறிந்ததை போலக் காற்றில் படப் படத்து சரியான பக்கத்தில் வந்து நின்றது. நிச்சயம் தற்செயலானது அல்ல.)

‘அதன் பின் வந்த நாட்கள் எனக்கு அலைச்சலை அதிகம் ஆக்கியது. அறை எங்கும் ஒரு இடத்தில் என்னால் உட்கார முடியாமல் அவன் வரும் வரை அறை எங்கும் அலைந்து கொண்டே இருந்தேன் நான். மாடி அறை மர்ம மனிதன் யார் என்பதை அறியாமல் இனி என்னால இருக்க முடியாது என்று தோன்றியது. இடையில் சில நாளாக உணவு தவிர்த்து இருந்ததால், சுத்தமாக உடல் இழப்பிற்கு ஆளானேன். நான் என்ன செய்வது? பசித்தால்தானே சாப்பிடுவதற்கு. எனக்கு மனது எங்கும் வியாபித்து இருந்தது, அந்த மாடி அறை மனிதன் மட்டுமே.’

‘அன்று வழக்கம்போல அவனை வேடிக்கை பார்த்துவிட்டு வந்த மாலை நேரம். அறையில் நான் முடங்கி இருந்தபோது அவனைப் பற்றி நிறைய தகவல்களை, எனது உள்ளுணர்வால் உணர முடிவதை உணர்ந்தேன். அன்று இரவு சரியாக மணி பனிரெண்டுக்கு, அந்த மாடிக்காரன் என்னை வா வா என்று அழைப்பதுபோல இருந்தது. கண்ணை மூடி ஆழ்ந்து பார்த்தபோது அவன் கவிழ்ந்த நிலையில் படுத்து இருப்பது தெரிந்தது. ஹாலில் உள்ள சோபாவில் படுத்து இருப்பது தெரிந்தது. இது நிச்சயம் சுத்த பேத்தல். இங்கே இருந்து கொண்டே, அவனை இந்தளவு பார்ப்பது சாத்தியம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம்.’

‘ஆனால், என் மாடி அறை நண்பனைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். ஆனாலும், அதை நான் உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தேன். மெல்ல எழுந்து மாடிப் படியில் கால் வைத்தேன்.
கொஞ்சமே கொஞ்சம் கூடச் சப்தம் வராதபடி அந்தப் படிகளில் எறினேன். எனது திறமையை நானே பாராட்டிக் கொண்டேன். ஏதோ ஒரு யுகம்போலக் கடந்த ஒரு நிலையில் கதவை அடைந்தேன். இது தேவையா? மீண்டும் சென்று விடலாமா என்று தோன்றிய ஒரு எண்ணத்தை ரப்பர் வைத்து உடனே அழித்தேன். இதற்கு இன்று விடை கண்டே ஆக வேண்டும் எனக்கு.’

அவன் அறைக்குள் சிரமம் இல்லாமல் நுழைந்தேன். ஹாலில் அந்தப் பழங்கால சோபாவில் அவன் கவிழ்ந்த நிலையில் கிடந்தான். எனக்கு ஆச்சர்யம் ஏதும் இல்லை. இதைத்தான் நான் எதிர்பார்த்து வந்தேன். எவ்வளவு நேரம் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்று இருந்தேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நேரம் என்பதே நின்று போனது போல இருந்தது. நான் மெல்ல மெல்ல முன்னேறி, அவனைத் தொட்டேன். அவன் உடலில் ஒரு சில்லிப்பு இருந்ததை உணர முடிந்தது. திடீர் என்று அவனுக்குள் அப்படியே கரைந்து விட வேண்டும் போல இருந்தது.’

‘அறையின் நிசப்தத்தில் பழைய மின் விசிறியின் டடக் டடக் ஒலி மட்டும் ஏதோ அமானுஷ்யத்தை கூட்டியது போல இருந்தது. அப்போது சரேலென அவன் திரும்பினான். திரும்பியவுடன் நான் முற்றிலும் எதிர் பாராத அந்த விச்சித்திர காரியம் செய்தான். வாயில் கையை வைத்து வீல் என்று அலறினான். “என்ன விட்டுடு. என்னை விட்டுடு. நீ என்னைப் பின் தொடர்ந்து துரதிக்கிட்டே இருக்க. எனக்குத் தெரியும். என்னை விட்டுடு ஒன்னும் பண்ணாத" என்று லாரியில் அடி பட்ட நாய்போல ஊளையிட்டான். அலறினான். என்னைக் குழப்பம் சூழ்ந்தது. ஒன்றும் புரியாத ஒரு நிலையில், உடனே அங்கே இருந்து ஓடி வந்து எனது அறையில் புகுந்து, கொண்டு கதவைச் சாத்தி கொண்டேன். இனம் புரியாத உணர்வு என்னைத் தாக்க, அங்கே அறையில் இருந்த பரணில் ஏறி, ஒரு மூலையில், ஒரு பயந்த பூனை போலச் சுருண்டு படுத்துக் கொண்டேன். எவ்வளவு நேரம் கடந்தது என்று தெரியவில்லை. அறைக்கு வெளியே சில அவசர குரல்கள் கேட்டது.’

“சார் உள் பக்கமா பூட்டி இருக்கு சார்" என்று ஒரு குரல் அதைத் தொடர்ந்து, "உடைத்து திறப்பா" என்ற குரல் அதைத் தொடர்ந்து கதவை இடிக்கும் சப்தம் இடி போலக் கேட்டது. சிறிது நேரத்தில் தடால் என்று உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தவர்களைப் பார்த்ததும் போலீஸ் என்று அடையாளம் தெரிந்தது. கூட மாடி அறை ராஜசேகர் இருந்தான்.’

‘போலீஸ் அவன் பக்கம் திரும்பி, "யோவ் இங்க யாருயா உன்ன கொலை பண்ண பாத்தது?" என்று கேட்டார். “சார் அதோ அங்கே பாருங்கள் சார்” என்றான் ராஜசேகர் .அவன் காட்டிய இடம் எனது படுக்கை. அங்கே அதிர்ச்சியோடு நெருங்கிய போலீஸ் அதைப் பார்த்தது.’

‘படுக்கையில் ஒரு பிணம் கிடந்தது. வாயில் ரத்தம் ஒழுகி, உடல் மெலிந்து, கொஞ்சம் அழுகிய பிணம். கீழே கிடந்த அந்த டப்பாவைப் புரட்டிய போலீஸ், "யோவ்! பூச்சி மருந்தைக் குடித்து செத்து இருகான்யா. செத்து இரண்டு அல்லது மூன்று நாள் இருக்கும். யாருயா இவன்?" என்றார். அந்த ரிசப்சன் கிழவன் போலீசை நெருங்கி, "அய்யா! இவன் பேரு ரமேஷ்ங்க. இங்க தங்கி வேலை தேடிட்டு இருந்தான். பாவம் தங்கமான பையன்ங்க” என்றான்.

‘பரணில் படுத்து இருந்த நான் அதிர்ந்தேன். கொஞ்சம் இருங்கள். படுக்கையில் இருப்பது ரமேஷின் பிணமா? அப்போ உங்களிடம் இவ்வளவு நேரம் கதை சொல்லிக் கொண்டிருக்கும் நான் யார்? ஒன்னும் புரியாமல் பரணிலிருந்து நகர்ந்து, சீலிங்கில் தலைகீழாகத் தொங்கி கொண்டு, அவர்களை வேடிக்கை பார்த்தேன்.’

அதே நேரம் போலீசிடம், ராஜசேகர் தயங்கி தயங்கி கொஞ்சம் பயந்த குரலில் சொல்லிக் கொண்டு இருந்தான். "நான் சொன்னா நீங்க நம்ப மாட்டேன்றீங்க சார். இவன் ஆவி இங்கயே தான் சார் சுத்திக்கிட்டு இருக்கு. அது என்னைத் தினம் கண்காணிக்குது சார்.’
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சார் 💐 💐 💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top