Member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 16
- Thread Author
- #1

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் வெளியே குவிந்திருந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகக் குழுக்கள், ஒளிப்படக்கருவிகள் மற்றும் மைக் கம்பிகளுடன் அருள்மொழி வர்மனை சூழ்ந்தனர்.
"வர்மன் மாஸ்டர், இந்த வருட தேசிய விருது பெற்றதற்கான மகிழ்ச்சியை எப்படி பீல் பண்றிங்க? உங்கள் நடன பயணத்தில் இது ஒரு முக்கிய நிகழ்வு அல்லவா?"என்று பத்திரிகையாளர் ஒருவர் மரியாதையுடன் கேள்வி கேட்டார்.
அருள்மொழி வர்மன் மிதமான சிரிப்புடன்,
"நன்றி. இது ஒரு நன்நாள். ஆனால் இந்த விருது என் ஒருவனுக்கு மட்டும் கிடைத்த அங்கீகாரம் இல்லை.என் குருவுக்கும், என் மாணவர்களுக்கும், ரசிகர்களுக்கும் சொந்தமானது." என்று பதில் சொன்னவன் வேகமாக அவர்களைக் கடந்து தன் காருக்குச் செல்ல முயன்றான்.
"சார் சார்...இருங்க, இன்னொரு முக்கியமான கேள்வி. உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?" என்று பத்திரிக்கையாளரின் ஒருவர் கேட்டதும் வர்மனின் முகம் தீப்பிழம்பாக மாறியது.
"சுத்து வட்டாரத்துல உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு சொல்றாங்க, ஆனா உங்களுக்கு எட்டு வயசுல ஒரு பையன் இருக்கிறதாவும் சொல்றாங்களே! இதுல எது சார் உண்மை?" என்று பத்திரிக்கையாளரில் இன்னொருவர் கேள்வி கேட்க, வர்மனின் பார்வைப்பட்டு அவனைச் சூழ்ந்து இருந்த ஒளிக்கதிர்கள் நொறுங்கிய கண்ணாடிகளைப் போலச் சிதறின.
"சொல்லுங்க சார்... உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?" என்று மீண்டும் அந்தப் பத்திரிக்கையாளர் அதே கேள்வியைக் கேட்டத்தும் ஒரு கணம் அவரை அழுத்தமாகப் பார்த்த வர்மனின் வார்த்தையில் கவனம் தேவை என்று எண்ணியவன் குரலைச் செருமி தன் கைகடிகாரத்தை பார்த்துப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.
"நாட்டுல சமுதாய சீர்கேடுகள் எவ்வளவோ நடக்குது, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியா இருக்கு, அதனால நீங்கள் எப்போதும் பிரபலங்களின் காதல், கல்யாண விவாகரத்துல காட்டுற இதே ஈடுபாடை நாட்டில் நடக்குற பிரச்சனைகள்மீதும் விவசாயிகளின் கஷ்டங்கள்மீதும் காட்டுங்க. பத்திரிக்கை என்பது பொறுப்பும், மனித நேயமும் கொண்ட ஒரு தொழில். அது சாமான்ய மக்களின் குரலா இருக்கணும். எனக்குத் திருமணம் ஆனாலும், குழந்தை இருந்தாலும் உங்களுக்கு அதனால ஏதாவது பாதகம் ஏற்படப்போகுதா? இல்லை தானே? போங்க... போய் வேலை செய்து பிள்ளை குட்டிய காப்பாற்ற வழியைப் பாருங்க" என்று மிகப் பொறுமையாகவும், மரியாதையாகவும் அழுத்தத் திருத்தமாகப் பதில் அளித்த அருள்மொழி வர்மன் தன் காரில் ஏறி அமர்ந்ததும், அவனின் உயிர் தோழன் மாயன் வண்டியை வர்மனின் பங்களாவை நோக்கி விரட்டினான்.
"என்ன வர்மா... எப்போவும் போல அதே கேள்வி தான் கேக்குறாங்களா?" என்று சிரித்துக்கொண்டே மாயன் கேக்க,
"புனிதமான பத்திரிக்கை தொழில் இப்போ எல்லாம் தேவையில்லாத செய்திகளைப் பரப்பத் தான் ஆவலாய் இருக்காங்க" என்ற வர்மன் தன் கைபேசி மூலம் அவன் மும்பை வந்து இறங்கிய செய்தியைக் குறுஞ்செய்தி வாயிலாகத் தன் தந்தை வர்ம ராஜனிடம் தெரியப்படுத்தினான்.
அருள்மொழி வர்மனின் குடும்பமே நாட்டியக்கலை வம்சா வழியைச் சேர்ந்தவர்கள்.
அருள்மொழிவர்மனின் தந்தை வர்மராஜன் என்கிற ராஜன் ஒரு காலத்தில் வெள்ளித்திரையில் தனக்கெனத் தனி சாம்ராஜ்யத்தை நிலை நாட்டியவர்.
அவர் திரைத்துறையில் கொடிக் கட்டி பறக்கும் காலத்தில் தன் இரட்டை பிள்ளைகளான அருள்மொழிவர்மனையும் அவன் சகோதரன் மயில் வர்மனையும் வெளிநாட்டில் தங்கி படிக்க வைத்தவருக்குத் தன் மனைவியால் ஏற்பட்ட அவப்பெயரால் பிள்ளைகளை இந்தியாவிற்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டார்.
தன் பிள்ளைகளுக்கு 15 வயது இருக்கும் நிலையில் தன் மனைவிக்கும் தனக்கும் விவாகரத்து நடந்த செய்தியைக் கூடப் பிள்ளைகளுக்கு அவர் தெரிவிக்காததற்கு காரணம் பிள்ளைகளை நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் எனக்கு உங்களிடமிருந்து விடுதலை கிடைத்தால் போதும் என்று அவரின் மனைவி சொன்ன ஒரு வார்த்தைக்காகத் தான்.
தன் மனைவியின் பிரிவால் ஏற்பட்ட மன உளைச்சலையும் அவப்பெயரையும் தாங்கிக் கொள்ள முடியாத ராஜன் வீட்டிலேயே அடைப்பட்டு நடைபிணமாக மாறியவருக்கு தன் பிள்ளை அருள்மொழி வர்மன் தான் இன்று பிள்ளைக்குப் பிள்ளையாகவும் தாய்க்கு தாயாகவும் இருந்து பார்த்துக் கொள்கின்றான்.
தன் தந்தை உருவாக்கிய சாம்ராஜ்யத்தை அடுத்தடுத்து திரையுலகில் கால் பதித்தவர்கள் தரை மட்டமாக அழிப்பதை நேரில் கண்ட அருள்மொழிவர்மனுக்கு மீண்டும் தன் தந்தையின் பெயரைத் திரை உலகம் உச்சரிக்க வேண்டும் எனில் அவருடைய வாரிசாக நான் இந்தத் திரையுலகத்தில் வெற்றி நடை போட வேண்டும் என்ற எண்ணம் அவன் இதயத்தில் விதையாக விழ, இந்திய பாரம்பரிய நடனங்கள், இந்திய கிராமிய நடனங்கள், மேற்கத்திய நடனங்கள், இலத்தீன நடனங்கள் என்று எல்லா வகை நடனத்திலும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைத் தேடி பிடித்து அவர்களிடம் முறைப்படி நடனம் கற்று இன்று தேசிய விருதைப் பெற்றிருக்கும் அருள்மொழிவர்மனுக்கு பெண்கள்மீது அதிக மரியாதை உண்டு.
ஆனால்! அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தினால் பெண் என்ற புனிதமான சொல்லைக் கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளும் பெண்களைப் பார்த்தாலே அவர்களைக் கடுகளவும் மதிக்காமல் அவர்களைக் கடந்து செல்வது அவன் வழக்கம்.
அருள்மொழிவர்மன் என்கிற வர்மனுக்கு நட்பு வட்டாரம் என்று பெரிதாக யாரும் இல்லாத பட்சத்தில் அவனின் உயிர்த்தோழன் மாயன் ஒருவன் மட்டுமே நண்பனுக்கு நண்பனாகவும் அவன் தொழில் சார்ந்த விஷயங்களைப் பார்த்துக் கொள்ளும் உதவியாளருமாக இருக்கின்றான்.
தேசிய விருதைப் பெற்றுக் கொண்டு தன் தந்தையிடம் ஆசி பெறுவதற்காகத் தன் வீட்டிற்கு சென்ற வர்மனின் காரைப் பார்த்ததும்,"வாழ்த்துகள் வர்மா" என்று தன் நடையில் வேகத்தைக்கூட்டி கையில் ஆரத்தி தட்டுடன் வாசலை நோக்கி
வந்தார் ராஜன்.
"அப்பா..." என்று அன்பாக அழைத்த வர்மன், தன் கையில் இருந்த விருதை அவன் தந்தையிடம் கொடுத்துச் சாஷ்தாங்கமாகக் காலில் விழுந்து ஆசி வாங்கியவனின் நெற்றியில் பெருமிதத்துடன் இதழ் பதித்தார் ராஜன்.
"ரொம்ப பெருமையா இருக்கு வர்மா. இது ஆரம்பம் தான். இன்னும் நீ மென்மேலும் வளர என் வாழ்த்துகள். சரி உள்ள வா, குளிச்சிட்டு சாப்பிடலாம்" என்ற ராஜன் அவர் கையில் இருந்த விருதை மேசைமேல் வைக்க, கண் இமைக்கும் நொடியில் அந்த விருதை எடுத்து நடு வீட்டில் தூக்கி வீசினான் எட்டு வயது சிறுவன் அருண்வர்மன் என்கின்ற அருண்.
"டேய் டேய் என்ன காரியம் பண்ணுற? என் பிள்ளையின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரத்தை இப்படியா தூக்கி போடுவ! நீ எல்லாம் பிள்ளையா!?" என்று அதிக கோபத்தில் சிறுவனை அடிக்கக் கை ஓங்கிய தன் அப்பாவிடமிருந்து அருணை தன் வசம் இழுத்துக் கொண்டான் வர்மன்.
"அப்பா விடுங்க... ஏதோ தெரியாம பண்ணிட்டான். அருண் நீ உன் ரூமுக்கு போ" என்று வர்மன் பொறுமையாகச் சொன்னவன், கீழே விழுந்தும் உடையாமல் இருந்த விருதை எடுத்துச் சரி செய்து கொண்டு இருந்தான்.
"நான் தெரியாம பண்ணல, தெரிஞ்சுதான் பண்ணேன்.எனக்கு என் அம்மா வேணும். என் அம்மா எங்க? என்கூட படிக்கிற எல்லாருக்கும் அம்மா இருக்காங்க. என் அம்மா யார்? ஏன் என் அம்மாகிட்ட என்னை அழைச்சிட்டு போக மாட்றீங்க? சொல்லுங்க அப்பா என் அம்மா எங்க?" என்று வர்மனின் சட்டையைப் பிடித்து உலுக்கும் எட்டு வயது சிறுவன் அருணின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்றபுரியாமல் தவித்தான் நம் கதையின் நாயகன் வர்மன்.
Attachments
Last edited: