Member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 16
- Thread Author
- #1

அருள்மொழி வர்மனை சிறுவன் அருண் அப்பா என்று அழைத்ததை நம்ப முடியாமல் மகதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
"சொல்லுங்க அப்பா இவங்க தான் என் அம்மாவா!?" என்று கேட்ட அருண் வேகமாக ஓடிச் சென்று மகதியை ஏக்கமாகக் கட்டிக்கொண்டான்.
"அருண்... இந்தப் பக்கம் வா. அப்பா யாரு இவங்க?" என்ற வர்மன் சிறுவன் அருணை தன் வசம் அணைத்துக்கொண்டவனை ஏமாற்றமாகப் பார்த்தாள் மகதி.
தன்னை யாரென்று தெரியாததை போலப் பேசும் வர்மனின் வார்த்தையைக் கேட்டு மகதியின் முகம் மேலும் வாடிப்போனது.
"அப்பா... உங்கள தான் கேக்குறேன் யாரு இவங்க?" என்று மீண்டும் வர்மன் கேக்க,
"என்ன வர்மா நீ! என் மருமகளை மறந்துட்டியா! இவ தான் நம்ம மகாலிங்கம் பொண்ணு மகதி" என்று ராஜன் சொன்னதும், "என்ன மகதியா!?" என்று ஆச்சிரியமாகக் கேட்ட வர்மனின் அருகே நின்று இருந்த சிறுவன் மீண்டும் மகதி அருகே சென்றவன், "அம்மா... நீங்கத் தானே என் அம்மா?" என்று மீண்டும் அதே ஏக்கத்துடன் கேட்டான்.
"அருண்... இவங்க உன் அம்மா இல்ல" என்ற வர்மன் சிறுவனைத் தன் வசம் தூக்கிகொண்டவன், "எப்படி மகதி இருக்க? அத்தை மாமா எப்படி இருக்காங்க?" என்று கேட்ட வர்மனுக்கு தன் தந்தையிடம் பணியாற்றிய மகாலிங்கத்தை உரிமையோடு மாமா என்று அழைப்பது தான் வழக்கம்.
இத்தனை வருடம் வர்மனின் காதலுக்காகக் காத்து இருந்த மகதிக்கு அவனை அப்பா என்று அழைத்த சிறுவனைப் பார்த்து, எது உண்மை எது பொய் என்று புரியாமல் குழம்பி போனவளை,"மருமகளே... வர்மன் உன்கிட்ட தான் பேசுறான்" என்ற ராஜனின் குரல் சுயத்துக்கு அழைத்து வந்தது.
"ஹாங்...நல்லா இருக்காங்க" என்று மகதி சொல்ல, "அருண் வா நேரமாகுது பாரு குளிச்சிட்டு ஸ்கூல் கிளம்பனும்" என்ற வர்மன் சிறுவனைக் தூக்கிக்கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தவனை
அதே இடத்தில் சட்டையைப் பிடித்து
என்னை ஏன்டா ஏமாத்துன என்று கத்தி அழ வேண்டும் என்று மகதிக்கு ஆதங்கம் தோன்றியது.
"மகதி...அருணை நேரத்தோடு ஸ்கூலுக்கு அனுப்பனும். அதனால தான் வர்மன் உன்க்கிட்ட சரியா பேசாம போறான். நீ வா, வந்து இப்படி உட்காரு. மாயா... அருண் கிளம்பினதும் அவனை ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போயி விட்டுடு. அப்புறம் அவன் டீச்சர் ஏதோ அருணைப் பற்றிப் பேசணும்னு சொன்னாங்க. நான் சாயங்காலம் அவங்களை வந்து பார்க்கிறேன்னு சொல்லு" என்று ராஜன் சொல்ல, "அண்ணா... வர்மனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று கேட்ட மகதியின் குரலில் அவ்வளவு வலிகள் நிறைந்து இருந்ததை மாயன் உணர்ந்து இருந்தான்.
"மகதி... நான் தான் சொன்னேனே! இங்க எதுவும் நீ நினைத்ததை போல இருக்காது. சரி நீ உக்காரு நான் போய் அருணை ஸ்கூல்ல விட்டுட்டு வரேன்" என்ற மாயன் சிறுவன் அறைக்குள் நுழைந்தவன் வர்மனுடன் சேர்ந்து சிறுவனைப் பள்ளிக்குக் கிளம்ப உதவி செய்தான்.
"மாட்டேன்... நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன். எனக்கு என் அம்மா எங்கன்னு சொல்லுங்க. அப்போ தான் நான் ஸ்கூலுக்கு போவேன்" என்று அடம் பிடிக்கும் சிறுவனை ஒரு வழியாகக் காக்கா குளியலை குளிப்பாட்டி வர்மன் சாப்பாட்டு மேசைக்குத் தூக்கி வந்தவனின் முகமெல்லாம் வியர்வை துளி படர்ந்து இருந்தது.
கடந்த சில வருடங்களாக ஊடங்களிலும் செய்தி தாள்களிலும் வர்மனை பற்றி வந்த எந்த கட்டுக்கதையையும் நம்பாத மகதிக்கு இன்று நேரில் வர்மனை குழந்தையுடன் பார்த்ததும் அவள் காதில் விழுந்த செய்திகள் எல்லாம் உண்மை தானா என்று தோன்றியது.
"அப்புறம் மருமகளே... எப்போ சென்னையில இருந்து வந்த?" என்று ராஜன் விசாரிக்க, "காலையில தான் மாமா"என்ற மகதிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
"அப்பா... நீங்கச் சாப்பிட்டீங்களா?" என்ற வர்மன் அவசர அவசரமாகச் சிறுவனுக்குக் காலை உணவை ஊட்டியவன், "மகதி நீ சாப்பிட்டியா?" எனக் கடமைக்கென்று விசாரிப்பவனின் பேச்சில் ஒரு துளி கூடக் காதல் உணர்வே இல்லை என்று அப்பட்டமாகப் புரிந்துகொண்ட மகதிக்கு அந்தக் கணமே அங்கிருந்து வெளியேற வேண்டும் எண்ணம் தோன்றியது.
"மாயா... இவன் இதுக்கு மேல சாப்பிட மாட்டான். மதியம் லஞ்ச் இந்தப் பாக்ஸ்ல இருக்கு. நீ போய் அருணை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடு. இன்னைக்கு நடிகர் சங்கத்துல ஒரு மீட்டிங் இருக்கு நான் அங்க கிளம்பனும்" என்ற வர்மன் சிறுவன் அருணின் கன்னத்தில் இதழ் பதித்தவன் வேகமாக அவன் அறைக்குள் புகுந்தவனை இமைகள் அசைக்காமல் பார்த்து
இருந்தாள் மகதி.
"மருமகளே...என்ன நீ? ஏன் ஒரு மாதிரி இருக்க? ஆமா... ஏன் நீ மட்டும் மும்பை வந்து இருக்க? எதாவது முக்கியமான விஷயமா?" என்று ராஜன் உரிமையாக மகதியை கேட்டதும், "சார்... பாப்பாவுக்கு மும்பையில வேலை பார்க்கனும்னு ஆசையாம், அதான் சித்தப்பா இங்க அனுப்பி வச்சி இருக்காரு" என்ற மாயன் சிறுவன் அருணை தன் தோளில் தூக்கிகொண்டான்.
"ஓ... வேலைக்கு வந்து இருக்கியா.ஆமா நீ என்ன படிச்சு இருக்க?" என்று ராஜன் கேட்டதும், "B. Ed. முடிச்சிட்டு பாப்பா ஒரு ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்த்துகிட்டு இருந்தா சார்" என்று மாயன் சொல்ல, "என்னப்பா சொல்ற? சென்னை ஸ்கூல்ல வேலை பார்த்த டீச்சர் பொண்ணுக்கு மும்பையில வேலை செய்யறதுக்கு என்ன அவசியம் வந்துச்சு?" என்ற ராஜனின் மனதில் தோன்றிய அதே கேள்விதான் மாயன் மனதிலும் தோன்றியது.
"அது...அது வந்து மாமா, வீட்ல கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க. அதான் நான் கொஞ்ச நாள் இங்க வந்து வேலை பார்க்கலாம்ன்னு அண்ணன் வீட்டுக்கு வந்துட்டேன்"
என்ற மகதியின் வார்த்தையைக் கேட்டு ராஜன் சிரித்துக் கொண்டவர் "ஏமா கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலையா? என்ன காதல் விவகாரம் ஏதாவது இருக்கா என்ன? என்று சிரித்துக்கொண்டே கேட்டார் ராஜன்.
"ஆமாம் காதல் தான். பத்து வருஷமா உங்க மகனைத் தான் காதலிக்கிறேன். ஆனா என் காதலுக்கு ஒரு துளிகூட தகுதி இல்லாதவர் உங்கள் மகன்" என்று தன் மனதளவில் நினைத்த மகதி, "சரி மாமா நான் கிளம்புறன்" என்றவள் அவசர அவசரமாக வாசலை நோக்கி நடந்தாள்.
"மகதி...நீதானே ராஜன் சாரை இன்னைக்கு பார்த்தே ஆகணும்னு வேகவேகமாக இந்த வீட்டுக்குக் கிளம்பி வந்த! இப்ப என்ன உடனே நம்ம வீட்டுக்குப் போகலாம்ன்னு சொல்ற?" என மாயன் கேட்க,
"ஆமா...நான் தான் மாமாவைப் பார்க்கலாம்னு வந்தேன். அதான் பாத்துட்டேனே. நீங்க என்னை வீட்ல இறக்கி விட்டுடுங்க"என்ற மகதியின் முகம் வாடி இருப்பதை பார்த்த மாயனுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று எண்ணம் தோன்றியது.
"என் மருமக காலையில தானேப்பா சென்னையில இருந்து மும்பைக்கு வந்து இறங்கி இருக்கிறாள். அதான் சோர்வா இருக்கிறாள் போல! இனி மும்பையிலதான மகதி இருக்கப் போறாள். அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்துட்டு போகட்டும். இப்போ அருணை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே மகதியை உன் வீட்டுல டிராப்
பண்ணிட்டு வா " என்று ராஜன் சொல்ல,
"சரி சார் நாங்க கிளம்புறோம்"என்ற மாயன் சிறுவன் அருணை அழைத்துச் சென்று காரின் முன் இருக்கையில் அமர வைத்தான்.
வர்மன் நுழைந்த அறையை ஒரு கணம் திரும்பிப் பார்த்த மகதி அவனைக் காணாமல் "போயிட்டு வரேன் மாமா" என்று ராஜனிடம் சொன்னபடி வேகவேகமாக மாயன் காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
சிறுவன் அருணையும் மகதியையும் வர்மன் வீட்டிலிருந்து மாயன் காரில் அழைத்துச் செல்ல, வழி எல்லாம் மகதி பல மணக்குமரல்களை மனதில் சுமந்தபடியே அமர்ந்திருந்தவளை காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் சிறுவன் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு வந்தவன் மனதில் இவள் தான் நம் அம்மாவா என்ற கேள்வி மட்டுமே எழுந்த வண்ணமாக இருந்தது.
"என்ன அருண் செல்லம் ஏன் என் தங்கச்சிய திரும்பித் திரும்பிப் பாக்குற?" என்று மாயன் கேட்க, "இவங்கதான் உங்க தங்கச்சியா? இவங்க எங்க இருந்து வராங்க? நான் இவங்கள உங்க கூடப் பார்த்ததே இல்லையே" என்ற சிறுவன் மாயனிடம் நட்பாகப் பேசுபவன் தன் தாத்தாவிடம் கடுக்கடுத்து எரிந்து விழக் காரணம் அவன் அம்மா எங்கே என்று கேட்கும் சிறுவனின் கேள்விக்கு இதுவரை அவர் பதில் சொல்லாமல் இருப்பது தான்.