Member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 16
- Thread Author
- #1

"வர்மன் வீட்டில் சிறுவன் அருணின் அழுகை சத்தம் அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தது.
"அப்பா சொன்னால் கேக்க மாட்டியா! ஏன் இப்படி அடம் பிடிக்குற?" என்ற வர்மனின் கையைத் தட்டி விட்ட சிறுவன், "எனக்கு அம்மா வேணும்" என்று அழுத்தமாகச் சொன்னான்.
"அடம் பிடிக்காதே அருண். நீ நல்ல பையன் தானே! அப்பா சொன்னால் கேட்கணும்" என்று பொறுமையாக அருணுக்கு எடுத்துறைத்தான் வர்மன்.
"மாட்டேன்... எனக்கு அம்மா வேணும்.அம்மாகிட்ட என்னை அழைச்சிட்டு போங்க"என்று ஒட்டாரம் பிடிக்கும் சிறுவனை ஒருக்கணம் முறைத்து பார்த்தவன்,"சரி... நீ நல்ல புள்ளையா இருந்தினா உன் அம்மாவை நான் ஊருல இருந்து உன்னைப் பார்க்க இங்க வரச் சொல்லுவேன், ஆனா நீ சமத்து பிள்ளையாக இருக்கனும்" என்ற வர்மனின் கையை மீண்டும் அதே கோபத்துடன் தட்டி விட்டான் சிறுவன்.
"முதல்ல அம்மா வரட்டும், அப்புறம் நீங்க என்னைக் கட்டி பிடிக்கலாம்!"என்ற சிறுவன் கோவமாக அவன் அறைக்குள் சென்று கதவை அடித்துச் சாத்தினான்.
சிறுவனின் செயலைக் கண்ட வர்மன் பெருமுச்சுடன் அவன் அறைக்குள் நுழைந்து தன் ஆடைகளைக் கலைந்து குளியலறை புகுந்து குளிர்ந்த நீரை தலையில் எடுத்து ஊற்றியவனின் உடலில் உள்ள வெப்பம் குறைந்ததே தவிர அவன் இதயத்தில் கொழுந்து விட்டு எரியும் சில துரோகங்களும் அதனால் ஏற்பட்ட காயங்களும் ஆறாத ரணமாக இருந்தது.
நீண்ட நேரம் தண்ணீரில் தன்னிலை மறந்து குளித்து முடித்தவன் வெள்ளை சட்டையும் கருப்பு நிற கால் சட்டையும் அணிந்துக்கொண்டு தலை முடியைத் துவட்டியப்படி தன் அறையிலிருந்து வெளியே வந்தவனை மேசையில் அமர்ந்து இருந்த வர்மனின் தந்தை ராஜன் பாவமாகப் பார்த்து இருந்தார்.
தன் அப்பாவின் எண்ண ஓட்டத்தை அறிந்த வர்மன் "அப்பா வாங்க சாப்பிடலாம்" என்று அவரை அழைத்தவன், சிறுவன் அருண் இருக்கும் அறையின் கதவைத் திறந்து பார்க்க, அங்கே கட்டிலில் சிறுவன் தலையணையை கட்டிக்கொண்டு கன்னத்தில் கண்ணீர் கோடுகளுடன் உறங்கிக்கொண்டு இருந்தான்.
தூங்கும் சிறுவனின் பால்மணம் மாறாத முகத்தைப் பார்த்துக் கவலைக் கொண்டவனாகத் தன் தந்தையின் அருகே அமர்ந்த வர்மன், "ஏன் அப்பா... ஏன் சில பொண்ணுங்க எல்லாம் இவ்ளோ கல் மனசா இருக்காங்க!? பெரியவுங்க பண்ற தப்புக்கு பிள்ளைங்க ஏன் தண்டனை அனுபவிக்கணும்?" என்ற வர்மனின் கேள்வியில் அப்படியொரு வலி மறைந்து இருந்தது.
"என் விதி தான் அருணுக்கும் விதிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அதான் அவனும் விவரம் தெரியும் போதே அவனோட அம்மா பாசம் இல்லாமல் ஏங்கி போறான்" என்ற வர்மனின் தோளை ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தார் ராஜன்.
"வர்மா... சொல்லுறேன் தப்பா எடுத்துக்காத, வேணும்னா அருணை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்போம். அவன் அங்கேயே ஹாஸ்டல்ல தங்கி படித்தால் இப்படி அம்மா வேணும் ஆட்டுக்குட்டி வேணும்னு அடம் பிடிக்கமாட்டான்" என்ற தன் தந்தையை பார்த்து முடியாது என்ற ரீதியில் மறுத்தான் வர்மன்.
வர்மன் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே இந்த வீட்டுக்கு வந்து செல்பவனுக்கு சிறுவன் அருண் செய்யும் அட்டுழியங்கள் எல்லாம் தெரிய வாய்ப்பு இல்லாமல் போனது.
விடிந்ததிலிருந்து இரவுவரை என் அம்மா எங்கே? அம்மாவை வரச் சொல்லுங்க என்ற சொற்களை மட்டும் தாரக மந்திரமாக உச்சரிக்கும் அருண் செய்யும் சேட்டைக்ளுக்கு அளவே இல்லாமல் போனது.
சிறுவன் அருண் அவ்வப்போது தன் தாத்தா ராஜனை எதிர்த்துப் பேசுவது மட்டுமில்லாமல் வயதுக்கு மீறிய செயலாக ராஜினின் மருந்தை எடுத்து ஒளித்து வைப்பது, ராஜன் சொல்ப் பேச்சைக் கேட்காமல் அடம் பிடிப்பது என்று பல ரக பட்ட தொல்லைகளைத் தருபவனின் மூளையில் என்னதான் பிரச்சனை இருக்கிறது என்பதை வர்மனும் ராஜனும் தெரிந்துகொள்ள தவறினார்கள்.
சினிமா துறையில் நடன கலைஞராக விஸ்வரூப வெற்றியை அடைந்து கொண்டிருக்கும் தன் மகன் வர்மனிடம் சிறுவன் அருணை பற்றிய அனாவசியமான செய்திகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று எண்ணிய ராஜனுக்கு சிறுவன் அருணால் நிம்மதி குறைந்து போனது.
தன் தந்தையின் எண்ண ஓட்டத்தை அறிந்த வர்மன், "அப்பா... அருண் இங்கே இருக்கிறது தான் அவனுக்குப் பாதுகாப்பு. ஆல்ரெடி மீடியாவில் அருணைப் பற்றித் தெரிஞ்ச மாதிரி ஒரு சில கேள்விகள் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்போ அருண் நமக்கிட்ட இருக்கிறது மட்டும் ரம்யாவுக்கு தெரிஞ்சா அப்புறம் பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். அதனால அருண் இங்கேயே இருக்கட்டும்" என்று தீர்க்கமான தன் முடிவைச் சொன்னான் வர்மன்.
"எனக்குப் புரியுது வர்மா...ஆனால் அருணை இப்படியே விட்டால் அவனுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தெரியாம போயிடும். அதுவும் இல்லாம இது தான் அம்மாவும் அப்பாவும் கூட இருந்து வளர்க்க வேண்டிய வயசு. எனக்கும் முன்ன மாதிரி அவன்க் கிட்ட மல்லுக்கட்ட முடியல. அதனாலதான் அவனை ஹாஸ்டல்ல சேர்க்கலாமானு கேட்டேன்" என்று ராஜன் சொல்ல, அவர் நிலையிலிருந்து யோசித்துப் பார்த்த வர்மன் தன் தந்தையின் எண்ணத்தைப் புரிந்துத் தான் இருந்தான்
"சரி வர்மா...நீ வா நம்ம சாப்பிடலாம். குழந்தை தானே பாத்துக்கலாம்" என்று ராஜன் சொல்ல, "நான் அருணை பாத்துக்க வேற ஒரு ஏற்பாடு பண்றேன் அப்பா" என்ற வர்மன் தன் தந்தையுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தவன், "மாயா நீயும் வந்து சாப்பிடு" என்று தன் நண்பன் மாயணையும் அழைத்தான்.
இதே சமயம் சென்னையிலிருந்து மும்பையை நோக்கி ரயிலில் பயணித்துக்கொண்டு இருந்த மகதிக்கு எப்போது அருள்மொழி வர்மனின் முகத்தைப் பார்ப்போம் என்ற தவிப்பு அப்படமாகத் தெரிந்தது.
"என்ன பாப்பா... மும்பைக்கு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறியா?" என்று மகதியின் அருகே படுத்து இருந்த மூதாட்டி பாதி உறக்கத்தில் ஏழுந்து, இந்த நொடிவரை தூங்காமல் அமர்ந்து இருக்கும் மகதியை கேட்டதும், "ஆமா பாட்டி... என் அண்ணன் வீட்டுக்குப் போறேன்"
என்றாள் மகதி.
"நாங்கயெல்லாம் அந்தக் காலத்துல பக்கத்து தெருவுல இருக்குற கடைக்குக் கூட ஆம்பள துணையில்லாம் போகமாட்டோம். ஆனா!இப்போ பாரு நீ தனியா மும்பை வரைக்கும் போற, காலம் ரொம்ப மாறிப் போச்சு" என்ற மூதாட்டி மீண்டும் படுத்துக் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தார்.
"பாப்பா... இந்தப் பையைப் பார்த்துக்கோ நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்" என்ற பெண் பயணி ஒருவர் மகதியின் கையில் ஒரு பையைக் கொடுத்துச் செல்ல, மகதியோ அமர்ந்த இடத்திலிருந்து எழாமல் ரயிலின் ஜன்னல் வழியே தெரியும் இயற்கை காட்சிகளை ரசித்தபடி அமர்ந்து இருந்தவள் மனதில் அருள்மொழி வர்மனின் நினைவுகள் மட்டுமே தோன்றிய வண்ணமாக இருந்தது.
"மகதி" அவள் பெயரின் சுபாவமே யாரையும் சார்ந்து இல்லாமல் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவள்.மற்றவருக்கு உதவி செய்யக் கூடியவள். மற்றவர்களின் உணர்ச்சிக்கும் மதிப்பு கொடுக்கத் தவறாதவள். காதலை விரும்பக்கூடிய பெண். என்றுமே உற்சாகம் நிறைந்த குணமுடைய பெண். தன்னை சுற்றியுள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண். சித்திர மாதத்தில் பிறந்த தன் ஒரே பெண் பிள்ளைக்குச் சித்ர மகதி என்று அவளின் அவள் தந்தை பெயர் சூட்டி அழகு பார்த்தவர் மகதியை தைரியமான பெண்ணாகத் தான் வளர்த்துள்ளாr
மகதியின் அப்பா மகாலிங்கம் சிறுவயதில் இருந்தே அவளுக்குக் கொடுத்த தைரியத்தின் அடிப்படையில் இன்று தனியாகத் தன் எதிர்கால வாழ்க்கையைத் தேடி மும்பைக்கு பயணிக்கும் மகதியின் பெரியம்மா பையன் தான் அருள்மொழி வர்மனின் உயிர் தோழன் மாயாண்டி என்கிற மாயன்.
மாயன் மும்பையில் தன் அம்மா, மனைவியுடன் வசிப்பவனுக்கு சகல வசதிகளும் அவன் நண்பன் அருள்மொழி வர்மன் ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளான்.
மாயனுக்கு தன் சித்தி மகள் மகதி என்றால் கொள்ளை பிரியம். இதுவரை மகதி கேட்டு அவன் இல்லை என்று சொன்ன சரித்திரமே கிடையாது. தன் சொந்த தங்கையாக மகதியை என்னும் மாயனை நம்பி மகதி மும்பைக்கு செல்ல முடிவெடுத்தவள் எப்படியாவது அருள்மொழி வர்மனை பார்த்து நம் காதலுக்காகப் பத்து வருடம் காத்திருக்கிறேன், ஏன் இன்னும் என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வியைக் கேட்பதற்காகத் தான் மகதி சென்னையிலிருந்து மும்பைக்கு பயணிக்கிறாள்.
கிட்டதட்ட 23 மணி நேர பயணத்திற்கு பிறகு மும்பையை நெருங்கப் போகும் ரயிலில் மகதி தன் அண்ணன் மாயனையும் தன் மன்னன் வர்மனையும் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்த அவளின் கைப்பேசிக்கு தன் தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது.
"அப்பா... இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அண்ணனைப் பார்த்துடுவேன். அண்ணனைப் பார்த்ததும் உங்களுக்குப் போன் பண்றேன். நீங்க ஜாக்கிரதையா இருங்க. அம்மாவைப் பயப்பட வேணாம்னு சொல்லுங்க" என்ற மகதி மறுமுனையில் தன் தந்தை பேச இருக்கும் வார்த்தையைக் கேட்காமல் கைப்பேசி அழைப்பைத் துண்டித்தாள்.
மீண்டும் மகதியின் தந்தை மகாலிங்கம், தன் மகளைக் கைபேசி வாயிலாக அழைத்தவர், "அம்மாடி! நான் போன் பண்ணா முதல்ல நான் என்ன பேசறேன்னு கேளு, நான் பேசுவதை கேட்காமல் நீயா பேசிட்டு போனை கட் பண்ணா என்ன அர்த்தம்? " என்று தன் அப்பா கேட்டதும்
தான் மகாலிங்கத்தை பேசவே விடவில்லை என்று அறிந்த மகதி தன் தலையில் தானே குட்டிக் கொண்டாள்.
"சாரி அப்பா...மும்பையை நெருங்க நெருங்க அண்ணனையும் வர்மனையும் பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷத்துல எனக்குக் கையும் ஓடல காலும் ஓடல" என்று மகதி சொல்ல,"சரி சரி, மாயன் ரயில்வே ஸ்டேஷன்ல தான் காத்துக்கிட்டு இருக்கான். அத சொல்லத் தான் உனக்குப் போன் பண்ணேன். நான் மறுபடியும் சொல்றேன்! நீ வர்மனுக்காகத் தான் மும்பைக்கு போறன்ற உண்மை மாயனுக்கு தெரியாது. அங்க என்ன சூழ்நிலையோ அதை வச்சி நீ மாயன்க்கிட்ட உன் மனசுல இருக்குறத பேசு" என்ற தன் தந்தையின் வார்த்தையில் ஏதோ விடயம் ஒளிந்திருக்கிறது என்று மகதி அறியவில்லை.