• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
21

அரிச்சந்திரன் திருமணத்திற்குக் கேட்கவும் அதிர்ச்சியா! ஆச்சர்யமா! நடக்காது என நினைத்த ஒன்று தன்முன் நடைபெறும் மாயமா! பேச வாயெழாமல் கண்ணீர் வடித்தாள்.

அதை உணர்ந்தவனோ “சரி விடு. விருப்பமில்லாத பெண்ணை கட்டாயப்படுத்தக்கூடாது. உன் லைஃப் மாதிரியே நானும்...”

சட்டென அவன் வாய்மூடி “நா... நான் சம்மதிக்கிறேன்” என்றாள் வேகமாக. ‘எங்கே தன்னைப்போல் திருமணமே வேண்டாமென்று இருந்துவிடுவானோ’ என்ற பயமே அவளைச் சம்மதிக்க வைத்தது.

அவளின் கைவிலக்கி, “சூழ்நிலையால சம்மதிக்கக்கூடாது நதி. முழு மனசோட என்னோட வாழ்ற முடிவோட சம்மதிக்கணும். உன்னை போர்ஸ் பண்ணல. யோசிச்சிச் சொல்லு?”

“அ...அப்ப நதீரா?”

“அப்படி ஒரு கேரக்டர் இருக்கிறதையே மறந்திருமா. உனக்கு என்னோட வாழ விருப்பமான்னு மட்டும் சொல்லு? நேரம் அதிகம் இல்ல நதி” என்றவன் பூவை நீட்டியபடியே இருந்தான்.

பூவையும் அவனையும் ஒருமுறை பார்த்தவள் ஆழ மூச்செடுத்து பூவை வாங்கிக்கொள்ள, “தேங்க்ஸ்” என்றுரைத்து அவளருகில் அமர்ந்தான்.

“ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்குள்ள தேங்க்ஸ் தேவையில்லைன்னு நான் நினைக்கிறேன்.” வெகு நிதானமாக அமைதியாக வந்தது அவளது வார்த்தைகள்.

‘என் பொண்ணு பிராக்டிகலானவள் மாப்பிள்ளை. நடக்குறதை அதன் போக்குல ஏத்துக்குவா. வெட்டி விவாதம்லாம் பண்ணமாட்டா. அவள் பிடிவாதமா நின்னது அவன் விஷயத்துல மட்டும்தான்.’ தன்னுடைய திருமணம் நட்சத்திராவுடன் என்று தெரிந்ததும் நந்தகுமாரை நேரில் பார்த்து நன்றி சொல்லச் சென்றவனிடம் அவர் சொன்னது.

“தேங்க்ஸ்” என்றான் மறுபடியும். எதற்கென்பதாய் நிமிர்ந்து திரும்பி அவன் முகம் காண, “ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்னு சொன்னியே அதுக்கு” என்று சிரித்தான்.

சில நொடிகள் அவனில் தொலைந்து, எழுந்து, “உண்மையைத்தான சொன்னேன். இதுக்கு ஏன் தேங்க்ஸ். உங்களை புரிஞ்சிக்கவே முடியலைங்க. பொண்ணு மாறினதை எல்லாருக்கும் சொல்ல வேண்டாமா?” என்றாள்.

“சொல்லி சம்மதம் வாங்கிட்டுதான் வந்தேன்.” அவளின் முறைப்பை உணர்ந்து, “உன்னை சம்மதிக்க வச்சிருவேன்ற நம்பிக்கையிலதான் நதி சொன்னேன்.”

“ஓ... அதுதான் சித்தி மருமகன் பார்த்துக்குவார்னு சொன்னாங்களா?” நினைத்ததை அவனிடமே கேட்க,

“உன்னை யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க. எதையும் போட்டு குழப்பிக்காம சந்தோஷமா மணமேடைக்கு வந்தா போதும்.

“ம்...” என்றாள்.

“வந்துருவல்ல நதி?”

“என்மேல் நம்பிக்கையில்லையா? நம்பிக்கையில் வந்தேன்னு சொன்னீங்க?” ஆதங்கம் அவள் குரலில் இருந்ததோ!

“சரி. சாரி. மணமேடைக்கு வரும்போது என்னை மட்டும் பார். வேற எங்கேயும் உன் கவனம் போக வேண்டாம். சரியா?”

“ம்...”

“இந்த ம்... என்ற வார்த்தையைக் கண்டுபிடிச்சவனை...” என்று வாய்க்குள் திட்ட, அவளோ கேள்வியாய் அவனை நோக்க, “இல்ல ம்... வார்த்தை நீ சொன்னா, சங்கீதமா கேட்குதுன்னு சொல்ல வந்தேன்” என்று அசடு வழிய சிரித்தான்.

“அஹான்!” கிண்டலாய் அவள் மொழிய,

“கிண்டலா செய்ற. உன்னை... வேண்டாம் எதுவாயிருந்தாலும் மேரேஜ் அப்புறம் பார்த்துக்கறேன்” என்று எழ, தானும் எழுந்து அவன் கைபிடித்து “உங்களுக்கு எதுவும் பிரச்சனையில்லையே?” என்றாள்.

அவளின் கலக்கம் உணர்ந்து, “நடைமுறைன்னு ஒண்ணு இருக்கு நதி. என்னை உன் ஹஸ்பண்டா மட்டும் பாரு. நான் தெளிவா இருக்கேன். நீயும் தெளிந்த மனசோட மணமேடைக்கு வா. நான் உனக்காகக் காத்திருக்கேன்” என்று அவளைச் சமாதானப்படுத்திக் கிளம்பினான்.

அவன் சென்ற பின்னும் யோசிக்கக்கூட இயலாதவளாய் அமர்ந்திருக்க, அங்கு வந்தாள் நட்சத்திராவின் சித்தப்பா பெண்.

“ஹேய் பாப்பு! நீயும் சித்தியோட வந்தியா? எப்படியிருக்க?” என்று நலம் விசாரிக்க,

“நான் நலம்தான். என்னை அடையாளம் தெரியுதாக்கா? சின்னப்பிள்ளையில் பார்த்தது.”

“என்னடி கேள்வி இது. என் தங்கையை எனக்குத் தெரியாதா? நல்லா வளர்ந்துட்ட.”

“ஆமாக்கா. ஒரு ஆறேழு அடி வளர்ந்துட்டேன்.” கிண்டலாகப் பதிலளிக்கவும் நட்சத்திரா அவளை முறைத்துச் சிரிக்க, “உன்னை இப்படி மணப்பெண்ணா பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துகள் அக்கா” என்றாள்.

“ம்... தேங்க்ஸ். அண்ணன் வரலையா? ஆமா. சித்தப்பா எங்க?”

“நீ அம்மாவை சரியா பார்க்கலையாக்கா?” என்றவள் குரல் கலங்கி வந்தது.

“பார்க்கலையான்னா? பாப்பூ...” என்றாள் அலறலாக.

“அப்பா நான் பத்து படிக்கும்போதே...” என்று தேம்பிய தங்கையை கண்ணீருடன் அணைத்துக் கொண்டவள், “என்னாச்சி? எப்படி இறந்தாங்க?”

“கேன்சர். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா ஹாஸ்பிடல், வீடுன்னு அலைஞ்சும் ஒரேடியா கிளம்பிட்டாங்க.”

‘ஓ... அப்பா அம்மாவுக்குத் தெரிந்திருக்குமோ?’ தங்கையை அழவைக்க மனமில்லாது, “அண்ணனை எங்க?” என்று பேச்சை மாற்றினாள்.

“ஏர்போர்ட் வந்து டேக்ஸியில வந்துட்டிருக்காங்க.”

“நாங்க இருக்கிற இடம் எப்படித் தெரிஞ்சது?” என்றாள் புரியாது.

“அதெல்லாம் மதியம் ஃப்ரீயா இருக்கும்போது பேசிக்கலாம்” என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எட்டு மணியளவில் பட்டும் பகட்டுமாய் இரு பெண்கள் வர, அறையில் தன் குடும்பத்தினரின் புகைப்படத்தை கைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தவளை, அவளறியாமல் புகைப்படம் எடுத்து, ‘இதுதான் மணப்பெண்ணா?’ என்று கேட்டு செய்தி அனுப்பினார்கள்.

எதிரில் இருந்தவன் ‘ஆம். அவள்தான் நட்சத்திரா!” என்று பதிலனுப்ப,

அதைக் கண்டதும் முகத்தில் திருப்தி எழ, “நல்லாயிருக்கியாமா?” என்றார்கள் அவளைக் கண்டு.

யாரென்று தெரியாவிட்டாலும் யாராவது உறவினராக இருக்குமென்று “நான் நல்லாயிருக்கேன்” என்றாள்.

“நாங்க யார்னு தெரியுதா?”

“சாரிங்க தெரியல.”

“நாங்க பையனுக்கு அத்தை முறை” என்று பேச்சுக் கொடுத்தபடி அவள் மூக்கில் கர்சீப் வைக்க, ஏதோ ஒரு மயக்கம் தன்னை இழுக்கவும், “ஏய்! யார் நீ? யாழு நீ...” வாய் குளறியது. முழுதாக மயக்கமும் இல்லாமல் இருக்க, அப்பெண்கள் தாங்கள் வைத்திருந்த பர்தாவை அவளுக்கு அணிவித்து, அவள் கைதாங்கி நடத்தி வாசல் செல்ல, எதிரில் வந்த பெண்ணைக் கண்டு ஆச்சர்யத்திலும்! அதிர்ச்சியிலும்! பயத்திலும் விழித்தார்கள்.

“யார் நீங்க? என்னாச்சி இவங்களுக்கு? எங்க கூட்டிட்டுப் போறீங்க?” என கேள்விகளை அவள் தொடுக்க,

“அ...அதுமா மாப்பிள்ளைத் தம்பியோட வேலை பார்க்கிற ஃபாத்திமாதான் இந்தப் பொண்ணு. கல்யாணத்துக்காக உடம்பு சரியில்லாததையும் பொருட்படுத்தாம வந்துட்டா போல. ரொம்ப முடியலை. அரி தம்பிதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிட்டு அப்படியே வீட்ல விட்டுடச் சொன்னான்.” அனைத்தும் தெரியும் என்பதை தெளிவான குரலில் பேசினார்கள்.

“நல்லதுங்க. நீங்க யார்னு சொல்லலையே?”

“நாங்க அரியோட சின்ன தாத்தா பொண்ணுங்க. அவனுக்கு அத்தைங்கமா.”

“சரிங்கம்மா. பார்த்து கூட்டிட்டுப் போங்க” என்று அறைக்குள் சென்றாள்.

மண்டபத்திலிருந்து காரில் ஏற்றும்வரை எந்தவித படபடப்பும் இல்லாமல், சொன்ன பொய்யை மாறாமல் கேட்டவர்களிடம் சொல்லியிருந்தார்கள்.

“டிரைவர் காரை நான் சொன்ன ரெஜிஸ்டர் ஆஃபிஸ் விடு” என்றதும் அந்த கருப்பு நிற பொலேரோ மண்டபம் தாண்டிச் சென்றது.

அதே நேரம் கைபேசியில் பேசியபடி வெளியே வந்த அரிச்சந்திரன் யோசனையுடன் அந்தக் காரைப் பார்த்தான். திருமணத்திற்குத் தொடர்ந்து ஆள்கள் வர யாருக்கோ அழைத்துப் பேசி உள்ளே சென்றுவிட்டான்.

“அப்புறம் மின்னல் பெண்ணே! உங்க ரூட் க்ளியர் போல?” என கிண்டலடித்த விஜயை முறைத்து, அவன் பின்னால் வந்த சுஜயை வரவேற்றாள்.

“சார் வீட்ல கூட்டிட்டு வரலையா?”

“பையனுக்கு உடம்பு சரியில்லமா. அதான் நாங்க மட்டும் வந்தோம்.”

“ஓ... ஹாஸ்பிடல்ல பார்த்தாச்சா சார்?” என்றாள் அக்கறையாக.

“இப்ப கொஞ்சம் ஓகேமா” என்றான் சுஜய்.

“நீங்க உள்ள போங்க சார்” என்றதும் அவர்கள் செல்ல, தன்யா தன் கணவன் நிதின் சக்கரவர்த்தி, குழந்தை தன்சிகாவுடன் வந்தாள்.

“வெல்கம் மேம். வாங்க சார்” என புன்னகையுடன் வரவேற்று, “ஹேய் குட்டிப்பொண்ணு! ஹவ் ஆர் யூ?” எனக் கேட்டாள்.

“பைன் மின்னு பொண்ணு” என குழந்தை பதிலளிக்க,

“மேம் இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்” என்றாள் சிணுங்கலாக.

“அதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது. சரியில்ல சொன்னா அவள் கேட்க ரெடியாயில்ல. அவள் பெரியப்பாவை அவங்க பாட்டி மின்னு சொல்வாங்க. நான் உன்னை மின்னல் பெண்ணே சொல்றேனா, அதை இப்படிப் பிடிச்சிக்கிட்டா போல.”

“ஒண்ணும் பண்ண வேண்டாம். வாங்க கல்யாணப் பொண்ணைப் பார்க்கலாம்.”

“எஸ் எஸ் ரொம்ப நாளா பார்க்கணும்னு ஆசைப்பட்ட பொண்ணு” என்ற தன்யாவிடம், “தன்யா நீ போய் பார்த்துட்டு வா. நான் ரவிச்சந்திரன் சாரைப் பார்த்துட்டு வர்றேன்” என்று நிதின் சொல்லிக் கொண்டிருக்க,

“வெல்கம் நிதின் சக்கரவர்த்தி அவர்களே!” என்ற திடீர் வரவேற்பில் “ரவி சார் வணக்கம்” என்றான் அவன்.

எப்பொழுதும் அவர்மேல் நிதினுக்கு மரியாதை உண்டு. தன் மாமா லாயர் குமரேசனின் இறப்புக்குப் பின் தன்யா அந்த இடத்தில் இருந்தாலும், அவளால் மட்டும் அதை செய்ய முடியாதென்று, மூத்த வழக்கறிஞரான ரவிச்சந்திரனை தங்கள் சேனலின் லீகல் அட்வைசர் ஆக்கினார்கள். முதலில் மறுத்தாலும் தன் மகனின் வேண்டுகோளில் சம்மதித்திருந்தார் ரவிச்சந்திரன்.

பரஸ்பர விசாரணையுடன் நிதினை விட்டு தன்யா மின்னலுடன் நட்சத்திராவைத் தேடிச்செல்ல, அங்கே பெண்ணைக் காணாமல் மண்டபமே கதிகலங்கியது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“என்னை விட்டுட்டு அவனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியா? அதெப்படி நான் விட்ருவேன்னு நினைச்ச? உனக்கும் எனக்கும்தான் கடவுள் முடிச்சி போட்டிருக்கார். அது மாறாது. மாறவும் விடமாட்டேன்” என்ற சித்தார்த் தன் கோபங்களை ஓரம்கட்டி அவளின் பர்தாவை விலக்கச் சொல்ல, பெண்கள் பர்தாவைக் கழட்ட தொய்ந்து விழுந்த தலையை நிமிர்த்த முடியாது “ஏ...ய்... என்...னை வி...டு...ங்க. எ...ன்னை என்ன செய்...தீங்க? யார் நீங்க?” என்றவள் வார்த்தைகள் தடுமாறி வந்தது.

“நான் சித்தார்த்!” என்றான் அழுத்தமான குரலில்.

“நீ... நீயா? நீ ஏன்டா என்னைக் கடத்தின? மண்டபத்துல என்னைத் தேடுவாங்க. கூட்டிட்டுப் போய் விடுடா” என குழறலாகப் பேச,

“கூட்டிட்டுப் போறேன். அதுக்கு முன்னாடி நான் சொல்ற இடத்துக்கு வந்து சைன் பண்ணிக்கொடுத்துட்டு போ” என்றான்.

“சைனா? எ...எதுக்கு?”

“நாம கல்யாணம் செஞ்சுக்கப் போறோம்ல. அதுக்குதான்!” என்றான் நக்கலாய்.

“கல்யாணமா? உன்னையா? நானா? உவ்வே! போடா போய் வேற வேலையிருந்தா பாரு.” திருமணம் என்றதும் சற்று மயக்கம் தெளிந்து கடுப்புடன் மொழிந்தாள்.

‘அரை மயக்கத்திலும் வாயடிக்குது பாரு.’ மனதிற்குள் அவளைத் திட்டி “இப்போதைக்கு உன்னை என் மனைவியா ஊருக்குக் கூட்டிட்டுப் போறதுதான் வேலையே” என்றான் திமிராய்.

“தப்புப் பண்றடா. என்னை விடு நான் போகணும்” என அழ ஆரம்பிக்க,

“கையெழுத்து போட்டதும் சேர்ந்தே போகலாம். இப்ப அமைதியா வரலைன்னா, உன்னைச் சேர்ந்த எல்லாரையும் தூக்கிருவேன்” என்று பயமுறுத்தினான்.

அவளோ, “போ... போய்த் தூக்கு. அவங்க எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்கோ. என்னை மட்டும் விட்ரு. நான் போறேன்” என்று அழ, அவனையும் மீறி எழுந்த புன்னகையை அடக்க, மற்றவர்களும் அதையே செய்வது புரிந்தது. அவளின் இந்த செய்கைகளில் அவனும் தொலையத்தான் செய்தானோ!

நகர முயன்றவளைத் தடுத்து, “நல்லா பேசுறடி. ஒருமுறை உன்னை விட்டமாதிரி இப்பவும் இருப்பேன்னு நினைச்சியா? மரியாதையா என்னோட வந்து சைன் பண்ணு” என்றபடி பெண்களிடம் திரும்பி, “நீங்க அவளைக் கூட்டிட்டு வாங்க” என முன்னே நடந்தான்.

“டேய்! நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன். நீ சின்னப் பொண்ணுன்னு தெரிஞ்சும் தாலி கட்டினவன். நீ நல்லவன் இல்லை. என்னை விடச்சொல்லு” என அரற்றினாள்.

சில நொடித் தடுமாற்றம் அவனுள். நியாயம் அநியாயம் பார்க்கும் நேரமில்லை என்பதை உணர்ந்தானோ! “லைட்டா முகத்துல தண்ணீர் தெளிச்சி கூட்டிட்டு வாங்க” என்று கட்டளையிட்டு பதிவாளரைத் தேடிச் சென்றான்.

ஒன்பதரைக்கெல்லாம் திருமணப் பதிவில் சித்தார்த் கையெழுத்திட, சிறு தடுமாற்றத்துடன் மட்டுமே நின்றிருந்தவள், “மாட்டேன்” என மறுக்க, “விளையாடாம வா நட்சத்திரா. இல்ல கல்யாண மண்டபத்துல உனக்காகக் காத்திருக்கிற உன் சந்துரு இருக்கமாட்டான். என் ஆளுங்க உன் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் தொடர்ந்துட்டு இருக்காங்க. நீ கையெழுத்து போடல, அத்தனை பேரோட தலையெழுத்தையும் ஒரே போன் கால்ல முடிச்சிருவேன்” என்று மிரட்டினான்.

அவன் அப்படி யாரையும் அனுப்பவில்லை என்பதை பெண்ணவளுக்கு யார் சொல்வதோ!

அத்தனை நேரமும் இருந்த சோர்வை விலக்கி, அவனை ஒரு பார்வை பார்த்து, வேகமாகக் கையெழுத்திட்டாள்.

“குட். கங்க்ராட்ஸ் பொண்டாட்டி” என்று அவள் தோளைச் சுற்றி கைபோட வர, அவளோ அவனை விட்டு விலகி நின்றாள்.

அதற்குள் அவள் கழுத்தில் மாலை அணிவித்து தனக்கும் போடச் சொன்னான். வேண்டா வெறுப்பாய்ப் போட்டவளைக் கண்டுகொள்ளாது அடுத்து தாலியை எடுக்க, மிரண்டுதான் போனாள் அவள்.

“இல்ல வேண்டாம் சித்தார்த். என்னை விட்ரு” என்று பின்னால் செல்ல,

“சட்டப்படி நாம கணவன் மனைவி ஆகிட்டோம் நட்சத்திரா. இது சம்பிரதாயம்தான்டா. தாலி இல்லன்னா நம்ம உறவு தப்பாகிரும்.”

“என்னை டா சொல்லாத” என்று இன்னும் முரண்டு பிடிக்கவும், “ப்ச்... விளையாடாத” என்று பெண்களிடம் கண்காண்பித்தான்.

அவர்கள் அவளருகில் நெருங்கி நிற்க, “வேண்டாம். இதனால ரொம்ப கஷ்டப்படுவ” என்றாள் கோவமாக.

‘பொண்ணை மாத்தி கீத்தி தூக்கிட்டு வந்துட்டோமோ?’ அந்த எண்ணம் எழ, அவளின் முகம் பார்த்து, “சேச்சே கிடையாது. என் நெற்றியைப் பதம் பார்த்தவளை மறக்குமா என்ன?” என்றவன் அவளிடம், “புருஷன் கஷ்டப்பட்டா பொண்டாட்டி உன்னையும்தான் பிடிக்கும். வா சேர்ந்தே கஷ்டப்படுவோம்” என்றான் அலட்சியமாக.

“புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா? ஏற்கனவே நீ செய்த பாவம் போதாதா? இன்னும் எத்தனை எத்தனை செய்வ?” என்று சீறி விழுந்தாள்.

“உன்னைக் கல்யாணம் பண்ணினது பாவக்கணக்குலயா சேருது. ம்...” என யோசிப்பதுபோல் செய்து, “சரி விடு. நாம குடும்பம் நடத்தி அதைப் புண்ணியக் கணக்காக்கிடலாம்” என்றான்.

“காலையிலிருந்து பச்சைத் தண்ணீர் கூடப் பல்லுல படாம வெறும் வயித்துல சொல்றேன்டா. நீ... நீ கடைசிவரை உன் பொண்டாட்டி கையால அடிபட்டே சாகப்போற பாரு.”

“ஹா...ஹா ஹையோ! நீயென்ன இப்படியிருக்க? ஹேய்! நீதான்டி என் பொண்டாட்டி. என்னை அடிச்சே சாகடிக்கப்போறியா? நல்லவேளை கையாலன்னு சொன்ன. கம்பாலையோ, கட்டையாலயோ அடிப்பேன்னு சாபம் கொடுக்காம விட்டியே” என்றதும் அவள் முறைக்க, “உன் அன்பால எவ்வளவு அடி வேணும்னாலும் கொடு. வெகுதாராளமா வாங்கிக்குறேன். ஹா...ஹா வெறும் வயித்துல சாபம் கொடுத்தா பலிக்குமா? அப்படிப் பார்த்தா, நான் நேத்து மதியத்திலிருந்து சாப்பிடலை. ம்... என்ன சாபம் கொடுக்கலாம்?” என தீவிரமாய் யோசித்தான்.

சித்தார்த் அவளைத் திரும்பவும் கௌரவத்திற்காக திருமணம் செய்தாலும், காலத்திற்கும் அவளை அன்பாகப் பார்த்துக்கொள்ள மனம் விழைந்தது. அதனால் மட்டுமே தன் கோவத்தை எல்லாம் விட்டு, சாதாரணமாக அவளிடம் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குமே தேடல் வாழ்க்கை சுவாரசியம் இல்லாமல் போக, இதோ இவளின் வாய்ச்சவடால்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யுமென்ற நம்பிக்கை வந்தது.

“லைஃப் லாங் என்னோடவும், நம்ம பிள்ளைகளோடவும், சந்தோஷமா, ஆரோக்கியமா இருக்கணும்னு சாபம் கொடுக்கிறேன்” என்றான் புன்னகையுடன்.

“என்னது! ஏய் என்ன சொன்ன திரும்பச் சொல்லு?” என்றாள் அதிர்வாய்.

“கோல்டன் வேர்ட்ஸ். நாட் ரிபீடட் செல்லம். ஒரு நிமிஷம் உனக்குப் பிடிச்ச கடவுளை கண்மூடி வேண்டு” என்றான்.

“அதெல்லாம் முடியாது. இன்னையிலிருந்து சாமியே கும்பிடப் போறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன். அதுக்கு அந்த முருகர்தான் சாட்சி” என்று வேகமாகச் சொல்லி அவனை ஏளனமாய் பார்த்தாள்.

சட்டென்று சத்தமாகச் சிரித்தவன், “கடவுளே வேண்டாம்னு சொல்லக்கூட, கடவுளைக் கூப்பிடுற. வாவ் இன்ட்ரெஸ்டிங்” என்று புன்னகையுடன் சொல்லி சிலாகித்து “என்னை கொல்ற வெறி உனக்குள்ள இருக்குல்ல. அப்ப என்னைப் பார்” என்று அவள் கவனத்தை தன்னிடம் முழுதாக இழுத்தான்.

திரும்பி அவன் கண்பார்க்க, தன்னை நேருக்கு நேர் பார்க்கும் பெண்ணின் கழுத்தில் அந்த தங்கத்தாலியை அணிவித்தான்.

“ஏய்ய்ய்...!” என்ற அலறல் வலுவில்லாமல் போக, அவ்வளவு நேரமிருந்த தைரியம் காணாமல் போய் கண்கள் கண்ணீரைச் சிந்தியது. துடைக்க வந்தவனைத் தடுத்து, “உன் ஆசைதான் நிறைவேறிருச்சில்ல. இப்பவாவது என்னை மண்டபத்துக்கு கூட்டிட்டுப் போ” என்றாள்.

“மரியாதைனா என்னன்னு தெரியாதா? வா போன்னு ஏதோ குழந்தையைக் கூப்பிடுற மாதிரி அழைக்கிற?” என கடுப்பாகக் கேட்டான்.

“சார் ப்ளீஸ் சார். என்னை எல்லாரும் தேடுவாங்க” என கெஞ்ச ஆரம்பித்ததும், மனம் இளக, “நீங்க ரெண்டு பேரும் விட்டுட்டு வாங்க. நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்று அதே பெண்களை உடன் அனுப்பினான்.

“நீ எதுக்கு வரணும்? நீ வராத. நீ வந்தா அங்க பிரச்சனையாகும்” என்றாள் வேகமாக.

“நான் வரலன்னா சரிவராதுமா. நம்ம கல்யாணத்தைத் தெரிவிக்க வேண்டாமா? அங்க நம்ம சொந்தக்காரங்களும் இருக்காங்களே. அவங்க முன்னாடி நடந்ததைச் சொல்லிரலாம். இப்போதைக்கு சாரி” என்று க்ளோரோபார்ம் உள்ள துணியை அவள் மூக்கில் வைக்க, திரும்பவும் அதே குழறல் குரல்.

கொண்டு வந்தாற்போல் அவளை மண்டபத்தில் விட்டுச் சென்றார்கள் அப்பெண்கள்.

“நதி என்னாச்சிமா? போய் முகம் கழுவிட்டு வா” என்று குளியலறை அனுப்பிய சில நிமிடத்திற்கெல்லாம் அருகில் இருக்கும் சந்துரு, நதி சந்திப்பின் அடையாளமான முருகன் கோவில் அழைத்துச் சென்று மணமேடையில் உட்காரவைக்க, சிறிது தள்ளாட்டம் அவள் உடலில் இருந்தது.

ஹோமகுண்டலப் புகை வேறு கண்ணில்பட்டு எரிச்சலைக் கொடுக்க ஒருவித பயத்துடன் அமர்ந்திருந்தாள் நட்சத்திரா. என்ன நடந்தது என்று சொல்லக்கூட நேரமில்லாமல் போக யோசனை முகத்துடன் கண்களில் கலக்கத்துடன் இருந்தாள்.

அவளைக் கவனித்த அரிச்சந்திரன், “என்னமா? கண் எரியுதா?” என விசாரிக்க,

“நத்திங்” என்றாள் குழப்பம் விலகாமலே.

சரியாக தாலி கட்டும் சமயம் திருமணத்தை நிறுத்தச் சொல்லி வந்து நின்றான் சித்தார்த்.

“எவன்டா அவன்! சீரியல்ல கடைசி நிமிஷத்துல வந்து கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி தொடரும் போடுறவன்” என்று எரிச்சலாய்ப் பார்த்தான் அரிச்சந்திரன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top