- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
2௦
“என்ன சொல்லச் சொல்ற நதி?”
“ப்ச்... விளையாடுற நேரம் கிடையாதுங்க. எதுவா இருந்தாலும் சீக்கிரமா சொல்லுங்க. இந்த டைம் நம்மளை யாராவது தனியா பார்த்தா தப்பாகிரும்.”
“என்ன தப்பாகும் நட்சத்திரா? நமக்குள்ள குறைஞ்சது ஐந்தடி இடைவெளியிருக்கு. காதல் கீதல்னு சொல்லி கட்டிப்பிடிச்சிட்டு நிற்கலையே” என்றதும் நட்சத்திரா அவனை முறைக்க, “என்ன முறைப்பு உண்மையைத்தான சொன்னேன்.”
“ஷப்பா! எது எப்படியோ, பேச வந்ததைச் சொல்லுங்க? கீழ என்னைத் தேடப்போறாங்க.”
“முதல்ல இந்த தண்ணீரைக் குடி. அப்பதான் டென்ஷன் குறைஞ்சி நீ நிதானமாவ.”
“சந்துரு ப்ளீஸ். உங்க நேம் ஸ்பாய்ல் ஆகும். அது உங்களுக்கு நல்லதில்ல. காலையில் கல்யாணத்தை வச்சிட்டு இப்படிலாம் பண்ணிக்காதீங்க.”
‘சந்துரு’ என்ற பெயர் அவள் வாயிலிருந்த வந்ததில் எழுந்த சந்தோஷத்தை மறைத்து, “அப்ப உன் நேம் ஸ்பாய்ல் ஆகாதா?” என்றான்.
“நீங்க வேணும்னே பேச்சை வளர்க்கிற மாதிரி இருக்கு. பேசுறதுக்கு எதவும் இல்லன்னா நான் கிளம்புறேன்” என்று நடக்க ஆரம்பிக்க, “ஆ” என்ற அலறலில் வேகமாகத் திரும்பியவள் அவனருகில் வர, கையில் இரத்தம் வழிய வலியைப் பொறுத்து நின்றிருந்தான் அரிச்சந்திரன்.
அதனைக் கண்டதும் பயந்து பதற்றத்தில் கண்கள் நீரைச் சுமக்க, “என்னாச்சிங்க? ஐயோ! ஏன் இப்படி?” அவன் வலிதனை தான் சுமக்கப் போராடினாளோ!
அமைதியாய் அவளை! அவளின் பரிதவிப்பை! அவளறியாமல் வெளிப்படுத்தும் காதலை! என முழுதாக தனக்குள் அவளை சுவாசித்தான்.
சில நொடி தடுமாற்றத்திற்குப் பின் அவளுக்குக் கொடுத்த மீதி தண்ணீரை எடுத்து இரத்தத்தைக் கழுவி, தன்னிடமிருந்த கைக்குட்டையை வைத்துக் கட்ட, “என்மேல் ஏன் இத்தனை கரிசனம் நதி?” ஆழ்ந்து ஒலித்தது அவனின் குரல்.
“ஏன்னா, நீங்க என் சந்துரு. நான் கரிசனம் காட்டாம யார் காட்டுவாங்க” என்று அவன் முகம் காணாது வேகத்துடன் உரைத்தாள்.
அவள் பேசும் உண்மையை அவளே உணராமல் போக, அதை முழுதாக உணர்ந்தவனோ, அவள் தலையை வருட எழுந்த கையை அடக்கி நின்று கொண்டிருந்தான்.
கட்டு போட்டு நிமிர்ந்து அவனின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தவள், அவன் கண்கள் காட்டிய காதல்தனில் சற்று தடுமாறித்தான் போனாளோ! பிடித்த அவன் கைகள் தன்னுள்ளிருக்க, இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் தழுவித் தடுமாறி மாறாதிருந்தது.
“வாவ்! செம ரொமாண்டிக் சீன்” என்ற கை தட்டலுடன் கேட்ட குரலில் இருவரும் திரும்ப, அங்கு நதீரா என்று தன்னை அறிமுகப்படுத்தியவள் நின்றிருந்தாள்.
“வெல் மிஸ்டர்.அர்ஸ் தேங்க்யூ சோ மச். உங்க சர்ப்ரைஸ் திருமணம் சூப்பர். என்னோடன்னு சொன்னாங்களே அதெல்லாம் பொய்யா?”
“ந...நதீரா நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்ல. சந்துருக்கு கையில அடிபட்டிருக்கு. அதான்...” என்று நட்சத்திரா தடுமாற,
“சந்துரு! ம்... குட். அப்புறம் ம்... எல்லாத்துக்கும் குட் பை அர்ஸ்” என்றாளவள்.
“அச்சோ! ஏன்ங்க. நீங்க தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க. சந்துரு சொல்லுங்களேன்.” தன்னால் அவனின் வாழ்க்கை கேள்விக்குறியாவதில் விருப்பமில்லை அவளுக்கு. அவனுக்காகத் தன் காதலையே விட்டுக் கொடுத்தவளாயிற்றே!
நட்சத்திராவின் தவிப்பைக் குறைக்கும் பொருட்டு அவன் பேச வாய் திறக்க, “எதுவும் பேசாதீங்க அர்ஸ். யா அல்லாஹ்! இப்பவே உங்களைத் தெரிஞ்சதே. என்னைப் பேசி கன்வின்ஸ் பண்ண நினைக்காதீங்க அர்ஸ். அப்புறம் நான் பொல்லாதவளாகிருவேன்.”
“நதீரா ஏன் சின்ன விஷயத்தைப் பெருசாக்குறீங்க? சந்துரு உங்களை... உங்களை மட்டும்தான் காதலிக்கிறார். நீங்கத் தப்பா...”
“நீ அடிக்கடி நாங்க தப்பு பண்ணலன்னு சொல்றப்பதான் இன்னுமே சந்தேகம் வருது” என்றதும் இடையிட வந்த அரிச்சந்திரனை கை நீட்டித் தடுத்து, “நீங்க பேசக்கூடாது சொன்னேன் அர்ஸ். நமக்குள்ள எல்லாம் முடிஞ்சது. நான் கிளம்புறேன்” என்றதும் இருவரும் அழைக்க நிற்காமல் சென்றுவிட்டாள்.
நட்சத்திரா தொய்ந்து போய் சுவற்றில் சாய, அரிச்சந்திரன் அருகிலிருக்கும் நட்சத்திராவைத் தேற்ற முடியாமல் வானத்து நட்சத்திரத்தைக் காண, அந்தோ பரிதாபம் அந்நேரம் ஜில்லென லேசான மழைத்துளிகள் விழுந்து வானம் வெற்றிடமாய் காட்சியளிக்க, வானில் இடியும் மின்னலும் இலவச இணைப்பானதோ!
எதையும் உணராமல், “சாரிங்க” என்றாள்.
“நீ எதுக்கு சாரி சொல்ற?”
“இல்ல இப்படி நடக்கும்னு தெரியாது. நீங்க அவங்க மேல எவ்வளவு உயிரா இருக்கீங்க. அதைப் புரிஞ்சிக்காம போயிட்டாங்க. எனக்கு அழுகை அழுகையா வருது. எல்லாம் என்னால்தான். நான் இங்க வந்திருக்கவே கூடாது.”
“நதி உன்னாலன்னு ஏன் பழியை உன்மேல தூக்கிப் போட்டுக்கற? காதல் எதையும் சந்தேகப்படாது. கையைப் பிடிச்சதுக்கே சந்தேகப்பட்டா அது காதல் இல்லை.”
“ஓவர் பொஸஸிவ் இருந்தால்கூட அப்படிதான் பிஹேவ் பண்ணுவாங்க.”
‘அப்ப நீ ஏன்டி என்மேல பொஸஸிவா இல்ல. அப்படி இருந்திருந்தா என்னை விட்டுக்கொடுத்திருக்க மாட்ட. கொஞ்சம் லேட்டானாலும் நானும் உன்னை... உன் அன்பைப் புரிஞ்சிருந்திருப்பேன். நீ என்னடான்னா, என்னை என் காதலியோட சேர்த்து வைக்கச் சொல்லி சத்தியமெல்லாம் வாங்குற. போ உன் தியாகத்துக்கு மெரினாவுல சிலை வைக்கிறாங்களாம்! ப்ச்.. போடி!’ சத்தமாகக் கத்தித் தன்னை அவளுக்கு புரியவைக்கத் தோன்றிய மனதை அடக்கி,
“அதிகமான பொஸஸிவ் குணம் கூட ஒரு வகையில் சந்தேகம்தான் நதி. அதனால் எத்தனை பேர் கோர்ட் படியேறி வாழ்க்கையை இழந்திருக்காங்க தெரியுமா?”
“அதுக்காக அப்படியே விடப்போறீங்களா?”
“விடுமா. எங்க போயிரப்போறா. காலையில் வந்திருவா. நான் விரும்பின பொண்ணோட மட்டும்தான் என் கல்யாணம் நடக்கும். உனக்கு நான் ப்ராமிஸ் பண்றேன்” என்று அவள் கைபிடித்து சத்தியம் செய்தான்.
சட்டென்று அவன் மேல் ஏக்கமாக பதிந்த பார்வை ஏமாற்றத்தில் கவிழ்ந்ததோ! அவனைப் பார்க்காமலேயே, “சாரலடிக்குது. நான் கீழ போறேன். நீங்களும் மழையில் நனையாம ரூம்கு போங்க” என நிற்காமல் செல்ல, புன்னகை மட்டுமே அவனிடம்.
தான் இருக்கும் அடுக்குமாடிக் குடியிறுப்பில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான் சித்தார்த். நட்சத்திராவைப் பற்றிய தேடலில் அவள் இருப்பிடம் முதல், அவளின் திருமணம் வரை அறிந்திருந்தான். முதலில் பேசிய திருமணம் மணமகனின் இறப்பால் நின்று போனதால், சற்று அலட்சியமாகவே இருந்தான். ஆனால், மறுபடியும் அவளின் திருமணம் என கேள்விப்பட்டதும் யாருமறியாமல் சில ஏற்பாடுகள் செய்திருந்தான்.
பூங்காவில் அவளுடன் அரிச்சந்திரனைப் பார்த்ததும்தான், மாப்பிள்ளை யாரென்று விசாரிக்கத் தோன்றியது. அரிச்சந்திரன்தான் மாப்பிள்ளை என்று தெரிந்த நிமிடம் என்ன செய்வதென்று புரியாத நிலை சித்தார்த்திற்கு. அவனின் சொத்து வழக்கு அவர்களிடமல்லவா கொடுத்திருக்கிறான். எதாவது செய்துவிட்டால்? என்ற பயம் வந்த போதிலும், அரிச்சந்திரனிடம் ஒருமுறை பேசியதில், ‘தொழில் வேறு. குடும்பம் வேறு. குடும்பப் பிரச்சனையை தொழிலில் காட்டமாட்டேன்’ என்றது நினைவு வர, தான் எடுத்த முடிவு சரியென்று தோன்ற, இதோ திருமணத்தை நிறுத்த அனைத்தும் செய்தாகிவிட்டது.
முகூர்த்தம் ஒன்பதிலிருந்து பத்தரை என்பதால் இரவு நடப்பதாய் இருந்த திட்டத்தைப் பகலுக்கு மாற்றினான்.
“சாரி மிஸ்டர்.அர்ஸ் உங்க வாழ்க்கையில வரணும்ன்றது என் எண்ணம் கிடையாது. ஆனா, நீங்க என் வாழ்க்கையில இடையிடுறது தப்புதான? அவள் என் மனைவி! அவளை உங்களுக்கு விட்டுக் கொடுக்கிற அளவு நான் பெருந்தன்மையானவன் கிடையாது. நட்சத்திரா சித்தார்த்திற்கு மட்டுமே! அவள் இல்லாமல் நான் ஊருக்குப் போறதாயில்ல. நாளை முதல் என்னோட இத்தனை வருஷ காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கும்.”
இடையே வெண்மதியின் குரலும் எட்டிப் பார்த்தது. ‘கௌரவத்துக்காக பொண்ணைத் தேடுறான் சார். காதலால் கிடையாது.’ ஏனோ சித்தார்த்தின் நியாய மனசு அவள் சொன்னதை ஒப்புக் கொண்டாலும், சிறு வயதிலிருந்து கௌரவம் என்ற சொல்லே வேதமாய் வளர்ந்தவனுக்கு அது மட்டுமே முக்கியம் என்றாக, வேறு வழியில்லாமல் போனது.
நண்பர்களின், ‘உன் பொண்டாட்டி உன்னை வேண்டாம்னு போயிட்டாளாமே!’ உறவுகளின், ‘என்ன செல்லம் உன் மருமக தாலியைக் கழட்டி தூக்கி எறிஞ்சிட்டுப் போயிட்டாளாமே!’ ஊராரின், ‘உனக்கு இதெல்லாம் தேவைதான். கொஞ்ச நஞ்சமா ஆடுனீங்க’ என்ற அவமானப் பார்வையும் அவனை நிதானமிழக்கச் செய்திருந்தது என்னவோ நிஜம்.
காதலைக் காக்க அரிச்சந்திரனும்! கௌரவம் காக்க சித்தார்த்தும்!
காலை ஐந்து மணிக்கெல்லாம் மண்டபம் பரபரப்பாக. மேளச் சத்தத்துடன் நாதஸ்வர ஓசையும் ஒலித்துக் கொண்டிருந்தது.
சீக்கிரமே குளித்து வந்த மின்னல், நட்சத்திராவையும் குளிக்க அனுப்ப, “அம்மாவைக் கூப்பிடு கொடி” என்றாள்.
“எதுக்குடி முதுகு தேய்ச்சி விடுறதுக்கா? அதுக்கு யசோம்மா எதுக்கு வரணும். நான் எதுக்கு இருக்கேன். வா போகலாம்” என்றாள்.
“தொலைச்சிருவேன்டி. குளின்னு சொன்னா போதுமா, என்னோட ட்ரஸ் வேண்டாமா? அம்மாதான் எல்லாம் எடுத்து வச்சாங்க. போய் வாங்கிட்டு வா.”
“அதுக்கு ஏன் அங்க போகணும்? என்கிட்டதான் உன் ட்ரஸ் இருக்கு. குளிச்சிட்டு வந்து கட்டிக்கோ.” நட்சத்திராவின் தயக்கத்தை உணர்ந்து “யாரும் வராமல் காவல் இருக்கேன் தாயே!” என்றாள்.
குளியலறை சென்று குளித்து வந்தவள் மின்னல் கொடுத்த புடவையைக் கட்டியபடி, “மயிலு புடவை காஸ்ட்லியா தெரியுதே? அம்மாவும் நானும் போனப்ப இந்தப் புடவையை எடுத்ததா நினைவில்லையே?” என்றாள் யோசனையாய்.
“என் அண்ணன் கல்யாணத்துக்கு, நான் உனக்கு வாங்கிய புடவை இது. இல்ல கட்டமாட்டேன் சொன்னா கொன்னுருவேன்.”
“ம்... எதுக்குக் கொல்லணும்? கட்டிட்டுத்தான இருக்கோம்” என்று முனக,
“நாங்களும் பார்த்துக்கிட்டுதான இருக்கோம்” என்று மின்னலும் பதிலளிக்க,
“ஏய்... ச்சீய்... எருமை தள்ளிப்போ” என விரட்டி புடவையைக் கட்டி முடித்ததும், மின்னல் மடிப்பை சரி செய்யும்பொழுது யசோதாவும், சகுந்தலாவும் சேர்ந்தாற்போல் வந்து, “இப்ப ப்யூட்டி பார்லர்ல இருந்து ஆள் வருவாங்க. நீங்க ரெண்டு பேரும் மேக்கப் பண்ணிக்கோங்க” என்றார்கள்.
நட்சத்திரா ‘தனக்கு ஏன்’ என கேட்க வாய் திறக்கப் போக, “உன் ப்ரண்ட்ஸ் யாரும் வரலையா மின்னல்?” என்றார் சகுந்தலா.
“எனக்கு ப்ரண்ட்னா இவள் மட்டும்தான்மா. மத்தபடி யாருக்கும் சொல்லலை. தன்யா மேம், சுஜய் சாரோட சேர்த்து என்னோட ஒர்க் பண்ற ஜுனியர்ஸ்கும் பத்திரிக்கை வச்சேன். அவங்க மட்டும் வரலாம்” என்றாள் மின்னல் பெண்.
அப்பொழுது அங்கு வந்தவரை அடையாளம் கண்ட நட்சத்திரா. “சித்தி” என்றழைத்து அவர் கைகளைப் பிடித்து, “பார்த்து எவ்வளவு வருஷமாச்சி?” என தன் சந்தோஷத்தைக் காட்டினாள்.