• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
19


சென்னையிலேயே பெரிய மண்டபங்களில் அதுவும் ஒன்று. மண்டபம் முழுக்க சென்ட்ரலைஸ் ஏசி. வாகனம் நிறுத்தும் இடம் மட்டுமே ஏக்கர் கணக்கில். ‘அரிச்சந்திரன் எம்.ஏ பி.எல். நட்சத்திரா எம்.சி.ஏ. வாசலிலுள்ள பெயர்ப் பலகையில் இரண்டு பெயர்களும மின்னிக் கொண்டிருந்தது.

காலையில் திருமணம் என்பதால் இரவிலேயே மண்டபம் செல்ல மனைவி, மகளை சீக்கிரம் கிளம்பச் சொல்லி விரட்டியபடி இருந்தார் நந்தகுமார்.

“நான் எப்பவோ ரெடி. உங்க பொண்ணுதான் ரொம்ப லேட் பண்றா. அவளை என்னன்னு கேளுங்க” என்றார் யசோதா.

“நதிமா இன்னும் கிளம்பலையா? டைமாச்சிது பாரு.”

“நா...நான் வரலைப்பா. நீங்களும் அம்மாவும் போயிட்டு வாங்க” என்றவளுக்கு ஏனோ அங்கு செல்ல கால் எழவில்லை. என்னதான் அவனுக்காக, அவன் காதலுக்காக தோழியிடம் பேசினாலும் நிஜம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா! அதுவும் அவளின் மனதிற்குள் மட்டுமே இருக்கும் அவனின் நினைவை எப்படி அழிப்பது. அவளைப் பொருத்தவரை அவன் நினைவு என்பது பென்சிலால் வரைந்த ஓவியமல்ல! கல்வெட்டாய் மனதில் பதிந்த காவியம்.

‘இப்ப, இந்த நிமிஷம் இது ரொம்ப முக்கியம்’ என மனசாட்சி எகத்தாளம் பேச, ‘ஸ்ஸ்... சீரியஸ் டைம் அமைதி’ என்றது மூளை!

“நாங்க மட்டும் போகவா? என்ன பேசுற நதிமா? உன் தோழியானதாலதான் எங்களுக்கு கொடி அறிமுகம். உனக்கே போகப் பிடிக்கலைன்னும் போது அங்க நாங்க எதுக்கு? விடு யசோ. நாம எங்கேயும் போகவேண்டாம்” என்றார் வேகமாக.

“அப்பா என்ன பேசுறீங்க? கொடி யாரோவா? அவ நம்ம வீட்ல ஒருத்திப்பா. அவளை எப்படி பிரிச்சிப் பார்க்கப் போச்சி. நீங்க மேரேஜ்கு போயிட்டு வாங்கப்பா.”

“இல்லமா. நீ என்ன சொன்னாலும் நீயில்லாம நாங்க அங்க போறதாயில்லை” என்றார் முடிவாக.

“அப்பா ப்ளீஸ்” என்று கெஞ்சிப் பரிதவிக்கும் மகளைக் காண்கையில் வருத்தமளித்தாலும், உண்மையைச் சொல்ல மனம் வரவில்லை அவருக்கு. அப்படியே சொன்னாலும் நதீரா தான்தான் என்பது தெரியாததால், அரிச்சந்திரன் நலன் கருதி மறுத்தாலோ இல்லை தான்தான் நதீரா என்றாலுமே அவளின் மனம் எப்படி யோசிக்கும் என்பதை கணிக்க முடியாதே! அன்று சஞ்சித் பேசியது நினைவில் வந்தது.

தூரத்தில் இருந்தவர்களைக் காண்பித்து, “அதுதான் மாமா ஜோடி! அதுதான் மாமா நதியோட குடும்பம்!” என்றிருந்தான்.

நட்சத்திராவின் மெசேஜ் படித்த சஞ்சித் திருமணத்தை நிறுத்தச் சொன்னதோடு, அடுத்தடுத்து நடந்ததைப் பார்த்த நந்தகுமாருக்கு, மின்னல் வேகம் என்பது இதுதானோ! என்றிருந்தது.

மாலையில் மாமனுடன் கல்யாணத்தை விமரிசையாகச் செய்வது பற்றிப் பேசுவதற்காக பூங்காவிற்கு வந்திருந்தான் சஞ்சித்.

“உனக்குக் கஷ்டமா இல்லையா சஞ்சித்?” எனக்கேட்டார் நந்தகுமார்.

“நம்ம நதி நல்லாயிருக்கணும் மாமா. அது போதும் எனக்கு. இதுல கஷ்டம் எங்கயிருந்து வந்தது?”

“நீ வெளியில் சொல்லலன்னாலும், என் பொண்ணு மேல உனக்குள்ள இருக்கிற தனிப்பட்ட விருப்பம் தெரியாதுன்னு நினைச்சியா?” என்றார் மருமகனை அறிந்தவராய்.

“மாமா!” தன் மனம் எப்படித் தெரியுமென்று அதிரத்தான் செய்தானோ!

“உன்னோட சூழ்நிலை சொல்லவிடாம தடுத்திருச்சின்னு வேணும்னா சொல்லு ஒத்துக்குறேன். உனக்கு அவளைப் பிடிக்கலைன்னு சொல்றதை ஒத்துக்க முடியாது.”

மனம் படபடக்க, “என்ன மாமா என்னெல்லாமோ சொல்றீங்க?” என்றான்.

மெல்லிய புன்னகையுடன், “தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாதுடா மருமகனே! என் பொண்ணை விட உன்னை நல்லாத் தெரியும். யசோ அன்னைக்கு உனக்குப் பேசினப்ப, நான் ஏன் அமைதியா இருந்தேன்னு யோசிச்சியா? உன்னைத் தெரிந்ததால்தான்” என்றதும் அவன் தலை கவிழ, “என் பொண்ணுக்கு டைம் கூடக் கொடுக்கலை நாங்க. நீ அவளுக்கு எவ்வளவோ செய்திருக்கடா. நீ அவளை நல்லா பார்த்துக்குவன்றது தெரியும் சஞ்சித்” என்றார் நந்தகுமார்.

“அவளைப் பொருத்தவரை ஆர்த்தி அண்ணி மாதிரி நானும் ஒரு நல்ல நண்பன்தான் மாமா. அதை நான் கெடுத்துக்க விரும்பல. என் நோயும் ஒரு காரணம்தான். அதையும் மீறி அவளோட மனசுதான் மாமா முக்கியம். அந்த சித்தார்த்தை...” ‘அவளோட வாழ்க்கையில நுழைய விட்ரக்கூடாது மாமா’ என்று சொல்ல வந்தவன், அங்கு வந்த நட்சத்திராவைக் கண்டு பேச்சை நிறுத்தி அவள்புறம் கைநீட்டினான்.

சஞ்சித் கை நீட்டிய திசை பார்த்தவர் அங்கு வந்து அமர்ந்த மகளை யோசனையுடன் கண்டார்.

“எவ்வளவு பிரச்சனை வந்தாலும், வரும்போது பார்த்துக்கலாம்னு அசால்ட்டா இருக்கிறவள் மாமா. என்னோட கல்யாணம் பேசாம இருந்திருந்தாலாவது, இரண்டொரு நாள் வருத்தபட்டுட்டு தன் வேதனையை மறைச்சி, பின்னாடி நார்மல் லைஃப்கு வந்திருப்பா. இப்பப் பாருங்க சந்தோஷம்னா என்னன்னு கேட்கிற நிலையில் இருக்கா. அவளோட சந்தோஷம் எல்லாம் அவளோட சந்துரு மட்டும்தான் மாமா. ஏதோ மிஸ் அண்டர்ஸ்டான்டிங்னால பிரச்சனையாகிப் போச்சி. அர்ஸ்க்குப் பிடிச்ச பொண்ணு நம்ம நதின்றப்ப சேர்த்து வச்சிரலாம் மாமா” என்று மாமனிடம் அவரின் மகளுக்காக பேசிக் கொண்டிருக்கும் போதே, சோகச் சித்திரமாய் அமர்ந்திருந்தவள் அருகில், எந்தவித சங்கோஜமும் இல்லாமல் வந்தமர்ந்தவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தான் சஞ்சித்.

சில நிமிடங்கள் இருவரும் பேசியதில், மாமன் மகள் வெளியே செல்வது தெரிந்தது. அடுத்த சில நிமிடத்தில் ஒரு பார்சலோடு வந்து அவனை உண்ண வைக்க, அதன்பின் அரிச்சந்திரனும் அதையே செய்ய, அவர்கள் இருவரின் இயல்பான, யதார்த்தமான செய்கைகள், ஆண்கள் இருவருக்கும் தாங்கள் எடுத்த முடிவு சரியே என்ற எண்ணத்தை வரவைத்தது.

“இவங்களுக்குள்ள எவ்வளவு புரிதல்னு பார்த்தீங்களா மாமா. அதுதான் மாமா ஜோடி! அதுதான் மாமா நதி குடும்பம். அதிலிருந்து அவளைப் பிரிச்சா உயிரில்லா பொம்மை மாமா அவள். அவங்க காதல் ஒவ்வொரு செய்கையிலும் தெரியுறதை என்னால உணர முடியுது. இதுக்குமேல என்ன மாமா வேணும்?” என்றான் மனதார.

“உன்னோட இருந்தாலும் நல்லாதான் இருப்பா சஞ்சித்.”

“ப்ச்... ப்ச்... கிடையாது மாமா. என்னோட கல்யாணம் நடந்தா... நடந்தா என்ன, மணமகளா என் பக்கத்துல கூட அவளால உட்கார முடியாது மாமா. இதுதான் மாமா அப்பட்டமான உண்மை. வேணும்னா அர்ஸ் போனதும் உங்களுக்கு அதைப் புரிய வைக்கிறேன் பாருங்க” என்றான்.

அரிச்சந்திரன் செல்லும்வரைக் காத்திருந்து நட்சத்திராவின் அருகில் சென்று, “ஹாய் நதி” என்றதும் அவள் முகத்தில் ஒருவித பயம் ஒட்டிக்கொண்டதைப் பார்த்தவன், ‘சிறு வயதிலிருந்து உடன் வளர்ந்த மாமன் மகள் என்னைக் கண்டு பயப்படுகிறாளா!’ ஏனோ வேதனையுடன் சேர்த்து சிரிப்புதான் வந்தது சஞ்சித்திற்கு.

“பக்கத்தில் உட்கார்” என்று அவன் சொல்லவும், அவள் வேகமாக மறுத்ததும் தன் மாமனைப் பார்த்தான். அரிச்சந்திரனுடன் உரிமையாகப் பேசியவள், தன்முன் தன் இயல்பைத் தொலைத்து நின்றிருப்பதை உணர்கையில், அவளின் செயல் மனதில் வலியைத் தோற்றுவித்தாலும் “திருமணத்தைப் பற்றி எதாவது சொல்லணுமா?” என்று கேட்டான். இல்லையென்று மறுத்ததும் அவளை வீட்டிற்கு அனுப்ப, அவள் சென்றதும் நந்தகுமார் அவ்விடம் வந்தார்.

“நான் சொன்னது சரின்னு இப்ப உணர்றீங்களா மாமா?”

“உண்மைதான் சஞ்சித். லாயரைப் பார்த்ததும் அவள் முகத்துல வந்த சந்தோஷம்! உன்னைக் கண்டதும் குற்றவுணர்வா, பயமான்னு தெரியாத ஒன்றை என் பொண்ணுகிட்டப் பார்த்தேன்” என்றார்.

“அர்ஸ்கு முழு மனசோட கல்யாணம் பண்ணிவைங்க மாமா. எத்தனை சித்தார்த் வந்தாலும் நம்ம நதியை விட்டுரமாட்டார்.”

“கண்டிப்பா மருமகனே! உன் மனசு போல எல்லாம் நடக்கும்” என்றார்.

“இப்பதான் மாமா மனசு லேசான மாதிரியிருக்கு. அப்புறம் மாமா, கல்யாணம் வரை நதிக்கு எதுவும் தெரிய வேண்டாம். ஆனந்த அதிர்ச்சிதான் அவளுக்கான அவளின் சந்துரு. அப்புறம் நான் போறேன் மாமா” என்று சென்றவன்தான் ஒரேயடியாகப் போய்விட்டான்.

கடவுளின் விதியோ என்னவோ! ஒரே நாளில் தன் பெண்ணின் தலையெழுத்தைச் சரியாக்கி, அதே வேகத்தில் அவனும் சென்றுவிட்டான். இதோ தனக்குத் திருமணம் என்றறியாமல் வரமாட்டேன் என அடம்பிடிக்கும் பெண்.

“யசோ அப்ப நீயும் இங்கேயே இரு. நான் என் நண்பனைப் பார்த்துட்டு வர்றேன்” என்று கிளம்ப யத்தனிக்க,

“அப்பா, அப்ப கொடி அண்ணன் கல்யாணம்?”

“நீ வர்றதா இருந்தா குடும்பமா போகலாம். இல்லையா வீட்லயே இருப்போம்” என்று வெளியே நடக்க ஆரம்பித்தார்.

“நா...நான் வர்றேன்பா” என்றாள் வேகமாக.

“எங்கமா? என் ஃப்ரண்டைப் பார்க்கவா?” கேலியைக் கூட அப்பாவி முகபாவனையில் கேட்டார்.

“அப்பா” என முறைத்து, “சந்துரு கல்யாணத்துக்குப் போகலாம்.”

“இப்படியேவா வரப்போற?” என்ற தாயிடம்,

“ஏன் எனக்கென்ன? சுடிதார் நல்லாத்தான் இருக்கு.”

“ப்ச்... நான் சுடிதாரைச் சொல்லலை. போய் சேலை கட்டிட்டு வான்னு சொல்றேன்.”

“ம்மா... எதுக்கும்மா?”

“உன் ஃப்ரண்ட் வீட்டுக் கல்யாணத்துல, நீ இப்படி இருந்தா நல்லாவா இருக்கும். இப்படி வர்றதாயிருந்தா நீயும், உன் அப்பாவும் மட்டும் கிளம்புங்க. அங்க வந்து மத்தவங்க கேட்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது” என முறுக்கிக் கொண்டார் யசோதா.

“ம்மா... ரொம்பப் படுத்துறீங்க” என பல்லைக்கடித்து, “சரி நீங்க சொன்னபடி செய்றேன்” என்றதும் வந்த புன்னகையை மறைத்துத் தான் மகளுக்கு என்ன செய்ய நினைத்தாரோ அவ்வாறாக அவளை தயார்படுத்திக் கண்ணாடி முன் நிறுத்த, “நானாம்மா இது?” என்றாள் நம்பமாட்டாமல்.

“நீயேதான்டா நதிமா” என கையால் திருஷ்டி சுற்றி, “ஹப்பா என் பொண்ணுக்கு எவ்ளோ திருஷ்டி. கைவிரல்லாம் பட்பட்டுன்னு முறியுது” என்று புன்னகைத்தார்.

“ஆனாலும், ஒரு மேரேஜ்கு போயிட்டு வர இதெல்லாம் அதிகம்மா.”

“உன்னை எந்த விசேஷத்துக்கும் கூட்டிட்டுப் போனதில்லையேடா. உன்னை இப்படி அலங்கரிச்சிப் பார்க்க ஆசையிருந்தும், அவனால வந்த பயத்துலயே, எங்களுக்கு மட்டும் அழகா தெரிஞ்சா போதும்னு விட்டுட்டோம்.”

“இப்பவும் அவனுக்கு என்னைத் தெரிஞ்சிருக்கும்மா” என்று உளறி சட்டென்று நாக்கைக் கடித்தாள்.

“புரியலைமா?” என்ற தாயிடம், “ஒண்ணுமில்லம்மா. எத்தனை காலத்துக்கு பயந்துட்டிருக்கிறது? நம்மளை மீறி யாரும் எதுவும் செய்திட முடியாதும்மா” என்றாள்.

“ம்ம்... அதுவும் சரிதான். கிளம்பு கார் வெய்ட்டிங்ல இருக்கு” என்றார் யசோதா.

அவர்களுடன் ஏதேதோ காரணம் சொல்லி சஞ்சித்தின் குடும்பமும் சேர்ந்து மண்டபம் வர, இரவு எட்டு மணியானது. வாசலில் இருந்த பெயர்ப்பலகையைப் பார்க்க விடாமல் மறைத்தவாறு, மகளை மண்டப வாசல் கூட்டிச் சென்றார் நந்தகுமார்.

தங்களுடன் இன்னொரு குடும்பமும் வந்து நிற்க, வேகமாக வந்த அரிச்சந்திரன் குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்று, திருஷ்டி கழிக்க ஆரத்தியுடன் வர, தனக்கோ என ஒரு வினாடி தடுமாறிய நட்சத்திராவிற்கு, தன்னருகில் இன்னொரு பெண் நிற்பது தெரிய சற்று ஆசுவாச மூச்சுவிட்டாள். இவள்தான் நதீராவோ என்று அவளின் முகம் பார்க்க நினைக்க, நினைக்க மட்டுமே முடிந்தது. அவளைப் பார்க்கும் தைரியம் ஏனோ இருக்கவில்லை.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
தன்முன் நடந்த எதையும் உணரும் முன் அவள் நெற்றியில் பொட்டு வைத்து திருஷ்டி எடுத்தவர் நகர, ‘பே’ என விழித்தவள் நெற்றியில் கைவைத்துப், “பொட்டு விழுற மாதிரியா வைக்குறது? இப்ப சரியாயிருக்கு” என்ற மின்னலின் குரலும், தன் நெற்றியில் அவள் கொடுத்த அழுத்தமும், நட்சத்திராவை நதீராவின் நினைவிலிருந்து கலைத்தது.

சந்தோஷத்தில் தோழியின் முகம் பார்க்க, “வெல்கம் நட்டு. அழகா இருக்கடி” என்று அணைத்து விடுவித்தாள்.

“மின்னல்மா நகரு. அவங்க உள்ள வரட்டும். உன் ஃப்ரண்டை உன்னோட கூட்டிட்டுப் போ” என்ற பாட்டியின் குரலில் தோழியின் கைபிடித்து மணமகள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

மகளை மின்னல்கொடியின் பொறுப்பில் விட்டுவிட்டு கல்யாண வேலையைப் பார்க்கக் கிளம்பினார்கள் நந்தகுமார் தம்பதியர்.

“மயிலு இது மணமகள் அறைதான? இங்க நமக்கென்னடி வேலை? வேர் இஸ் நதீரா? என் கண்ணுல காட்டவே மாட்டேன்னுற. என்ன கண்ணு வச்சிருவோம்னு காட்டமாட்டேன்றியா?”

“ம்க்கும் அப்படியே வச்சிரகிச்சிரப் போற. சீக்கிரமே காட்டுறேன்டி” என்றாள்.

“ஹேய் கொடி! உன் அண்ணனுக்கு தெரிஞ்சிருச்சா?”

“நீ அன்னைக்கு சொன்ன மாதிரி தெரிஞ்சிருக்க நிறைய வாய்ப்பிருக்கு. ஆனா, என்கிட்ட வந்த கேட்கலை.”

“பிடிச்ச பொண்ணை நீங்களே கட்டிவைக்கப் போறீங்கன்றப்ப, சாருக்குக் கசக்குதா என்ன” என்று சிரிக்க,

“ஹா...ஹா அதே அதேதான் நட்டுமா. அப்படித்தான் இருக்கும்னு நானும் நினைச்சேன். கேடி லாயர் அவன்.”

“சரி வா பொண்ணை பார்த்துட்டு வரலாம். வெளியில பக்கத்துல நின்னப்ப பார்க்கத் தோணலை. இப்ப பார்க்கலாம்.”

“ரொம்ப நல்லது” என கேலியிழையோட சொல்லி, “அவங்க வேற ரூம்ல இருக்காங்க. காலையில மணமேடையில் பார்த்துக்கலாம்” எனும்போது மின்னலின் உறவினர் சிலர் வந்து பெண்ணைப் பார்த்தார்கள்.

“ஏய் மயிலு அவங்க பொண்ணன்னு நினைச்சி என்னைப் பார்க்கிறாங்க நினைக்கிறேன். அவங்களை பொண்ணு ரூம்கு அனுப்பு. இல்ல என் பாடு திண்டாட்டம்” என்று தோழியின் காதில் முணுமுணுத்தாள்.

“உனக்குத் திண்டாட்டம்னா எனக்குக் கொண்டாட்டம் நட்டுமா. சோ நான் எதுவும் சொல்லப் போறதில்லை” என்று பதிலுக்கு அவளும் கிசுகிசுத்தாள்.

“வேண்டாம்டி. அப்புறம் ஆமாங்க நான்தான் பொண்ணுன்னு மணமேடை ஏறி, உன் அண்ணனை கல்யாணம் பண்ணிப்பேன். அப்புறம் உன் அண்ணனுக்குத்தான் கஷ்டம்” என்றாள் மிரட்டலாக.

“ச்சோ ஸ்வீட் நட்டுமா” என்று கன்னத்தில் முத்தமிட்டு, “அப்படி நடந்தாலும் நான்தான் அதிகம் சந்தோஷப்படுவேன்” என்று கண்ணடிக்க,

“ச்சீ... போடி” என்று இரண்டு அடிகளிட்டு, “முதல்ல அவங்களை அனுப்பு கொடி. ஒரு மாதிரி அன்ஈஸியா ஃபீலாகுது” என்றாள் நட்சத்திரா.

“ஓகே கூல். நான் இருக்கேன்ல” என்று அவர்களிடம் பேசியபடி வெளியே அழைத்துச் சென்று, திரும்பி வர நீண்ட நேரங்கள் ஆனது. திரும்பி வந்து தோழியை சாப்பிட அழைத்துச் சென்று மணமகள் அறையில் அமர்ந்திருக்கையில் வந்த சகுந்தலா, “கொஞ்ச நேரம் தனியா இருப்பியா நட்சத்திரா? கொடியை வீடு வரை அனுப்பணும். சீக்கிரமே வந்திருவா” என்றார்.

“பரவாயில்லை அத்தை நான் வெய்ட் பண்றேன்.”

அவர் மகளை அழைத்துச் சென்ற சில நிமிடங்களில் வந்தாள் அவள்! தன்னை, “நதீரா” என்று அறிமுகப்படுத்திப் புன்னகைத்தாள்.

‘அழகுடன் சேர்த்து இஸ்லாமியப் பெண்களுக்கான அத்தனை அம்சமும் பொருந்தியவள். சந்துருவிற்கு ஏற்றவள்தான்’ என்று நட்சத்திரா மனம் சொல்ல, “உங்களைப் பார்க்கத்தான் கொடிகிட்ட கேட்டுட்டிருந்தேன்” என்று பதிலுக்குப் புன்னகைத்தாள்.

“உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும் நட்சத்திரா. என்னோட வர முடியுமா?”

“என்கிட்டயா? என்கிட்டப் பேச என்னயிருக்கு?”

“ஜஸ்ட் ஃப்ரண்ட்லி டாக்பா. எனக்கு அர்ஸ் குடும்பம் பற்றி எதுவும் தெரியாது...”

“எனக்கு மட்டும் தெரியுமா என்ன?”

“உங்க ஃப்ரண்ட்ஷிப் பற்றி அர்ஸ் சொன்னாங்க. அதான்...” என தடுமாறினாள் அவள்.

“என்னைப் பற்றிலாம் பேச டைம் இருக்கும்போது அவங்க குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்லாமலா இருப்பாங்க?” நேரில் கேட்டுவிட்டாலும் என்ன நினைத்தாளோ, “சரி பேசலாம். இங்க நாம மட்டும்தான் இருக்கோம். என்ன கேட்கணுமோ கேளுங்க” என்றாள்.

“இங்க வேண்டாமே ப்ளீஸ். மேல மாடிக்குப் போகலாம்.”

“இப்பவா? ம்.. ஓகே வாங்க போகலாம்.” அவளுடன் கிளம்பி மாடியை அடையும் வரை பேசிக்கொண்டு வந்த நதீரா, திடீரெனக் காணாமல் போனதும் பயம் பிடித்துக்கொண்டது நட்சத்திராவிற்கு.

இது சித்தார்த்தின் ஏற்பாடோ என்றெண்ணிய மறு வினாடி கீழே இறங்க யத்தனிக்கையில், நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே என்ற ரிதம் பட பாடல் ரிங்டோன் கேட்க, யாரென்று சுற்றிலும் பார்த்தவள் கண்களில் அவன் பட யாரெனப் புரிந்ததும் அசையாது நின்றுவிட்டாள்.

அவனைக் கண்ட நொடி பேச வாயெழாது பார்க்க, ‘ஐ லவ் சந்துரு! கொடிகிட்ட சொன்ன மாதிரி மணமேடையில மணமகளா நான் போய் நின்னா நல்லாயிருக்கும்ல’ என்ற மனதின் ஆசை தன்னை மீறி வெளிப்பட்டது.

‘எடு வெளக்குமாத்த! அடுத்தவள் புருஷனை நினைக்கிறதே தப்பு. இதுல அசிங்கமான நினைப்பு வேறயா. அழுக்குகளை எப்பவும் சேரவிடாத நதி. அது உன்னையே அழிச்சிரும். எப்பவும் நீ நீயாய் இரு! தவறின உன்னோட வளர்ப்பே கேள்விக்குறியாகிரும்’ என்று மூளை ஓங்கித் தலையில் அடிக்க, சில நொடிகள் தடுமாறிய தன்னை, தன் எண்ணத்தை எண்ணி நிலைகுலைந்து போனாள்.

‘இல்ல இங்க இருக்கக்கூடாது. இங்கிருந்து போயிரணும். இல்லன்னா எல்லாமே தப்பாப்போகும். அந்தளவுக்கு நம்மளை நாமளே தாழ்த்திக்கக்கூடாது’ என மூளை அறிவுறுத்த, வேகமாகத் திரும்பி நடந்தவளை வழிமறிந்து நின்றான் அரிச்சந்திரன்.

‘ஐயோ!’ என்ற அலறல் அவள் மனதினுள் ஒலிக்க, “என்னை விஷ் பண்ணமாட்டியா நதி?” என்றான்.

“சா...சாரி வாழ்த்துகள். உங்க உட்பி பேசணும் சொன்னதாலதான் வந்தேன். நான் கீழ போறேன். கொடி என்னைத் தேடுவா” என்று நகர,

“அதான் வந்துட்டியே நதி. கொஞ்ச நேரம் பேசலாம்தான?” என்றான்.

“இல்லங்க. மணி பத்தாகுது. இந்நேரம் நீங்களும் நானும் தனியா.. ம்கூம்... இது தப்பு. நான் கிளம்புறேன்” என நடக்க ஆரம்பித்தாள்.

“நதி ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் உன்னோட பேசணும்.” அவன் குரல் கெஞ்சலாக வர, இருதலைக்கொள்ளி எறும்பாய்த் தவித்தவள், சில நொடி கண்மூடித் தன்னை நிதானப்படுத்தி கண்திறந்து அவனை நேராகப் பார்த்து, “சொல்லுங்க அரிச்சந்திரன்?” என்றாள்.

‘அடப்பார்றா! அரிச்சந்திரனா?’ என்று அவளை மெச்சுதலாகப் பார்த்தவனுக்கு, அவளின் செய்கையிலேயே தங்கள் திருமணம் பற்றி அவளுக்கு இன்னும் சொல்லப்படவில்லை என்றெண்ணிய சந்தேகம் தீர்ந்தது.

நட்சத்திரா பிறந்தநாள் அன்று கோவில் சென்று வந்த பின்புதான் நிறைய சந்தேகம் எழுந்தது அவனுக்கு. ஆனால், உறுதிப்படுத்த முடியாமல் திணறினான். இரண்டு நாட்களுக்கு முன்னர் அதை உறுதியும் செய்துவிட்டான். வீட்டினரிடம் அவனாக எதுவும் கேட்கவில்லை.

இன்று மாலை வரை வீட்டினரால் மறைக்கப்பட்டிருக்க, சிரிப்புதான் வந்தது அவனுள். ‘நானும் வக்கீல்ன்றதை அப்பப்ப நம்ம வீட்டுலயே மறந்திடுறாங்கய்யா. ஹையோ ஹையோ!’ வடிவேலு ஃபீல்தான் அரிச்சந்திரனுக்கு.

மண்டபத்திற்கு அவனை அழைக்க, என்ன ஏதென்று ஆயிரத்தெட்டு குறுக்கு விசாரனை நடத்தி, அவர்கள் வாயால் உண்மையை ஒத்துக் கொண்ட பிறகே விட்டான்.

நட்சத்திராவிற்கு இதுவரை எதுவும் தெரியாது என்றதில் அதை தெளிவுபடுத்தவும், காலையில் தன்னை நதீராவைக் காரணம் காட்டி மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும் ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறான்.


நாடகத்தின் விளைவு,நட்சத்திரா அரிச்சந்திரனின் மனைவியாவாளா! இல்லை???
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top