• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
18

வீட்டில் திருமணத்திற்குச் சம்மதம் கேட்டால் சம்மதம் சொல்வாயா என்று கேட்டதற்கு, நட்சத்திரா சந்தேகம்தான் என்றதும், “என்னடி சொல்ற? லூசு மாதிரி உளறாத” என்றாள் மின்னல் பெண்.

“இதுல எங்க லூசுத்தனம் வந்திச்சி? மனசுல பட்டதைச் சொன்னேன். ஹேய் கொடி! இன்னைக்கு உன் அண்ணா ஸ்மார்ட்டா இருக்காங்க. நான் கண்ணு வச்சிட்டேன். சோ, வீட்டுக்குப் போனதும் மறக்காம சுத்திப்போடு” என்றாள்.

“என் அண்ணனையா?”

“நக்கலு. அவங்களை உன்னால தூக்க முடியுமா சொல்லு? எங்க முடிஞ்சா தூக்கிச் சுத்திப்போடு” என அலட்சியமாகச் சொல்ல,

“நிஜமாவே என் அண்ணனைக் கண்ணு வச்சிட்டியா?”

“அட ஆமான்றேன்” என பட்டென சொல்ல, ரவிச்சந்திரன் சகுந்தலா இருவருக்கும் முகமெல்லாம் புன்னகை.

“ஹா...ஹா நட்டுமா. உண்மையிலேயே நட்டு கழண்டு போச்சிது நினைக்கிறேன்.”

“ம்ம்... அதெல்லாம் மார்கழி ஒண்ணாம் தேதி அன்னைக்கு, எப்ப உன் அண்ணனைப் பார்த்தேனோ அப்பவே கழண்டுருச்சி. மாட்ட ட்ரை பண்ணிதான் பார்க்கிறேன். சுத்தமா முடியலடி. அதைப்பற்றி நீ என்ன நினைக்கிற மயிலு?” என்றாள் தோழியை வம்பிழுக்கும் குரலில்.

“எங்கம்மா அப்பவே சொன்னிச்சி. நட்டு கழண்ட கேசுங்களோட பேசாத மின்னலு. பேசுனா உனக்கும் பைத்தியம் புச்சிரும்னு. கேட்டனா நானு. இதோ வகைதொகையில்லாம வான்டடா வந்த சிக்கிட்டேன்ல.” காமெடியை வார்த்தையில் அள்ளித் தெளிக்க...

“ஹா...ஹா நாட்டி கேர்ள்” என்று மின்னலின் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டாள்.

“ஸ்ஸ்... ஏன்டி எருமை வலிக்குற மாதிரி கிள்ளுற?”

“வலியைப் பார்க்காத மயிலு. நான் கொடுத்த முத்தத்தைப் பார். அதோட வேல்யூ தெரியலை உனக்கு” என்றாள் கண்ணடித்து.

“இந்த வன்முறை முத்தம் எனக்கு வேண்டாம் தாயே! எதுவாயிருந்தாலும் உன்னைக் கட்டிக்கப் போறவனுக்குக் கொடுத்து அவனை அழவிடு” என்றாள் மின்னல்கொடி.

“அதற்கு சந்தர்ப்பம் கம்மிதான்.”

“சரி கம்மின்னே வச்சிப்போம். அதையும் மீறி எவனாவது வந்தா?”

“வெறும் வன்முறையை மட்டும் எடுத்துக்குவோம் மயிலு. சென்னைத் தமிழ் பைட் ஒண்ணு போட்டா பத்தாதா, அவனை ஓடவிடுறதுக்கு.”

“அஹான் ஜி! பார்க்கலாமே எப்படி ஓடவிடுறன்னு?”

“ப்ச்... வேற பேசலாம்” என்று மின்னலை முழங்கையால் இடிக்க, அதற்குள் பூஜைக்கு அழைக்கவும் எழுந்து சென்றார்கள்.

இரு குடும்பத்தின் சார்பாக ரவிச்சந்திரன்-நந்தகுமார் சன்னிதானத்திற்குள் செல்ல, மணமக்களின் ராசி, நட்சத்திரம் சொல்லி வெளியே வந்தவர்களை, அரிச்சந்திரன், நட்சத்திரா இருவரும் ஆச்சர்யமாகப் பார்க்க, அவர்களுக்கு பெரிய அளவில் சந்தேகம் வருமுன் அவர்களின் கவனத்தை தங்கள் புறம் திருப்பினாள் மின்னல் கொடி.

“அண்ணா நீ எனக்கு தம்பியா பிறந்திருக்கலாம்” என்றாள் சிறு ஏக்கத்தோடு.

“ஏன்டா மின்னல்?”

“தம்பியா இருந்தா அதட்டி மிரட்டி கூடவே வச்சிக்கலாம்.”

“இப்ப என்ன குறைஞ்சி போச்சிது. அதைத்தான நிதமும் செய்திட்டிருக்க?”

“இருந்தாலும் முழு சுவாரசியம் இல்லண்ணா.”

தங்கை தன் கவனத்தை மாற்றுகிறாள் என்று புரிய, “எனக்கு ஒரு விஷயம் சொல்லு? ஏன் ரெண்டு குடும்பமும் காலையிலேயே வந்திருக்கு? எனக்குத் தெரியாம எதாவது கேம் ஆடுறீங்களா?” என்றான்.

‘ஐயோ அதுக்குள்ள கண்டுபிடிச்சாச்சா? இது தப்பாச்சே!’ என்ற மின்னலின் மனம் தடுமாற,

“அப்பா டெல்லியிலேயே குப்பை கொட்டுற ஆள். ஒரு மாசமா போயிட்டு வந்துட்டுன்னு இருக்காங்க. வீட்டுலயும் எப்பவும் ஒரு பரபரப்பு தெரியுது. வீட்டை விட்டா எதுவுமே தெரியாத க்ரேன்மா, இப்ப வீட்லயே இருக்கிறதில்லை. என்ன மின்னல் எனக்கேத் தெரியாம கல்யாணம் எதுவும் ரெடி செய்துட்டீங்களா என்ன?”

மின்னலின் மனம் பக்கென்றாக, “அச்சோ அண்ணா! நீ வக்கீல்தான் ஒத்துக்கறேன். அதுக்காக ஓவரா சந்தேகப்படாத. நந்தப்பாகிட்ட நீ பேசிட்டிருந்தல்ல? அவர்கிட்ட கேட்காமலா இருந்த? உண்மையைச் சொல்லு?” என்றாள்.

“ம்... வருடா வருடம் பொண்ணு பிறந்தநாளுக்கு கோவிலுக்கு வர்றதா சொன்னார். நாம ஏன் இந்தக் கோவில் வந்தோம்? அது சரி உன் ஃப்ரண்ட் இன்னைக்கு முக்காடு போடலையா?” என்று தொடர் கேள்வியாய் கேட்க,

“நாம மட்டும் இருக்கிறதால போடலை. அதை ஏன் நீ கேட்கிற?”

“அது நதீராவா பார்த்தவளை, இப்பதான் நட்சத்திராவா பார்க்கிறேன்” என்றான் அவனவளைக் கண்டபடி.

ஆம் பார்க்கிறான்! பார்த்துக்கொண்டே இருக்கிறான்! பார்த்த முதல் நாளிலிருந்து முகத்தில் அதே நட்சத்திர ஜொலிப்பு! மூக்கில் இருப்பதே தெரியாதது போல் பளிச் மின்னலுடன் வெள்ளைக்கல் பதித்த மூக்குத்தியின் நட்சத்திர மின்னல்! அவள் கட்டியிருந்த புடவைக் கலரில் நெற்றியில் சின்ன நட்சத்திரப் பொட்டு! கழுத்தில் நீளமாக சற்று மெல்லியதாகத் தொங்கிக் கொண்டிருந்த செயினில் நட்சத்திர டாலர்! அனைத்தையும் மிஞ்சும் தன்னைக் காண்கையில் அவள் கண்களில் தோன்றும் நட்சத்திர மின்னல்கள்! அதற்குப் போட்டியாய் சிரிக்கும் பற்களின் நட்சத்திரப் புன்னகை!

‘உனக்கு எல்லாம் நட்சத்திராவாடா? வர வர நீ கவிஞனாகிட்டிருக்க அர்ஸ்.’ மனம் சொல்ல, ‘வர்ணனைக்குப் பெயர் கவியா? காலக்கொடுமைடா அர்ஸ் பையா!’ மனசாட்சி மல்லுக்கு நின்றது. கண்கள் மட்டும் சாமியையும், எதிரில் நிற்கும் நட்சத்திரப் பெண்ணவளையுமே வட்டமிட, சாவின் விளிம்பில் சஞ்சித் தன்னிடம் வாங்கிய சத்தியமும் நினைவில் வந்தது.

ஆக்சிடெண்டான காரைப் பார்த்து அதன்பின் சஞ்சித்தைக் காண அவன் தன்னை அழைப்பது போலிருந்தது. தன் காலில் ஏற்பட்ட வலியைப் பொருட்படுத்தாது அவனருகில் செல்ல, தன்னைக் கண்டதும் அவன் முகத்தில் தெரிந்த ஆர்வம் வித்தியாசமாய் பட்டது. அவனுக்கு தன்னைத் தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்தான். ‘ஆனால் எப்படி?’ என எண்ணுகையில் சஞ்சித் தன் கைபேசியையும், தன் அருகில் இருந்த பத்திரிக்கையையும் அவனிடம் கொடுத்து, “ந...நதி... நதீ...ரா... நதி ரொம்ப நல்லவ. வெகுளிப் பொண்ணு. அவள் எப்பவும் உங்க நதீராதான். அவளை... உங்க நதியைக் கல்யாணம் பண்ணிக்கோங்க அர்ஸ்.”

‘நதி... நட்சத்திரா’ என திணறி குழப்பத்துடன் பத்திரிக்கையைப் பார்க்க, அப்பொழுதுதான் புரிந்தது நட்சத்திராவிற்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை இவன் என்று.

“ந...தியை கல்யாணம்... ப்ராமிஸ் பண்ணுங்க அர்ஸ். அவளை கடைசிவரை கணவனா நீங்கதான் பார்த்துக்கணும். அவள் தொலைத்த எல்லா சந்தோஷமும் அவளுக்குக் கிடைக்கணும். அதை உங்களால மட்டும்தான் அவளுக்குத் தர முடியும். ப்ளீஸ்” என்ற பொழுது சஞ்சித்தின் உடல் வெட்டி இழுத்தது.

சட்டென்று அவன் கைபிடித்து, “சத்தியமா அவள்தான்... அவள் மட்டும்தான் என் மனைவி. கடைசிவரை சந்தோஷமா பார்த்துக்குவேன். வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்று கைநீட்டினான்.

“நன்றி” என்ற வார்த்தை முடிய சஞ்சித்தின் உயிர் பிரிந்திருந்தது.

சஞ்சித்திற்காக நட்சத்திராவைத் திருமணம் செய்யக்கூடாது என்பதால் தான், அன்று நடந்ததை இதுவரை யாரிடமும் பகிரவில்லை. அனைத்தையும் தாண்டி தன் ஆசை வீட்டினருக்குத் தெரியும் என்பதாலும், தங்கையின் ஆசையும் தெரியுமாதலால், தங்கள் திருமணத்திற்குத் தடை வராதென்ற தைரியத்தில் இருக்கிறான்.

மாலை ஐந்தரை மணியளவில் பூங்காவில் யோசனையுடன் அமர்ந்திருந்தாள் நட்சத்திரா. காலையில் கட்டியிருந்த புடவையை மாற்றி சுடிதார் அணிந்திருந்தாள். அதே பர்தா மாடல் துப்பட்டா. மதியம் கொளுத்திய வெயிலுக்கு மாலை வெயில் சற்று இதமாக இருந்தது.

சில நிமிடங்களில் லேசாக மழைக்காற்று அடித்து, சட்டென்று மேகங்கள் திரண்டு மழை சிறு சிறு துளிகளாய் இறங்க, ஏதோ ஒரு உறுத்தலில் நிமிர்ந்தவள் உடல் சர்வாங்கமும் ஆட, மூளை வேலை நிறுத்தம் செய்ததோ! சற்று தள்ளி நின்றிருந்தவனை வெறித்திருந்தது அவளின் கண்கள்.

‘கடவுளே! என் இருப்பிடம் தெரிந்துவிட்டதா? என்னை நிம்மதியாக வாழவிட மாட்டானாமா? நதி கெட் அவுட் ஆப் ஹியர் சூன்.” சட்டென்று எழுந்து பார்க்கின் வாசல் நோக்கி ஓடினாள்.

“ஏய் நட்சத்திரா ஓடாத நில்லு. உன்கிட்ட பேசணும். பேசாம எங்க போனாலும் விடமாட்டேன். ஏய் நில்லு சொல்றேன்ல.”

நிற்கவில்லை அவள்! அவளின் ஓட்டம் தொடர, தூரமும் அதிகமானதோ! மழை வந்ததும் அங்கிருந்த ஒரு சிலரும் சென்றிருக்க, அக்கம்பக்கம் திரும்பிப் பார்க்காமல் ஓடியவளை தடுத்து நிறுத்தினான் அவன்.

“வேண்டாம் என்னை விட்டுரு. நா...நான் நீ நினைக்கிற ஆள் கிடையாது. நான் உன்னோட வரமாட்டேன்” என்று கையை அவனிடமிருந்து விடுவிக்கப் போராடினாள்.

“நான் எப்ப என்னோட வரச்சொல்லிக் கூப்பிட்டேன். அப்ப உன்னைக் கூப்பிடணும் சொல்றியா?” என்ற கேலிக்குரலில் சடாரென நிமிர்ந்து பார்த்தவள் முகம் மலர கண்கள் மட்டுமே கண்ணீரைக் கொட்டியதோ!

“என்னமா? எதாவது பிரச்சனையா? ஏன் அழுற? எதுக்காக இப்படி கண்மண் தெரியாம ஓடி வர்ற?” அவள் பார்வையின் அலைப்புறுதலில் “மகாபலிபுரத்துல விரட்டிட்டு வந்தானே. அவனா?” என்றான்.

பேச வாயெழாமல் ஆமென்று தலையசைத்தாள்.

“அன்னைக்கே யார்னு சொல்லச் சொன்னேன்ல? முதல்ல அழுறதை நிறுத்து” என்று அவளின் கண்ணீர் துடைத்து, “வந்து யார்னு மட்டும் சொல்லு. நான் பார்த்துக்கறேன்” எனும்போது வானமும் சற்று தெளிவாயிருந்தது.

தன்னைப் பிடித்திருந்த அவனின் கையை மறுகரத்தால் பிடித்து, “வே...வேண்டாம். நீங்க வாங்க போகலாம்” என்றவளின் வார்த்தை குழறியபடி வந்தது.

“என்ன நினைச்சிட்டிருக்க என்னைப்பற்றி? ஒரு பொண்ணைக் காப்பாத்த முடியாத கோழைன்னு நினைச்சியா? எத்தனை நாள் ஒருத்தனுக்கு பயந்து இப்படி முக்காடு போட்டுட்டு அலைவ? கேட்க யாரும் இல்லைன்றதாலதான உன்னை விரட்டிருக்கான். நான் கேட்கிறேன் வா” என்றான் கோவமாக.

அவனின் கோவத்தை முதல்முறை பார்க்கிறாள். சற்று பயம் வந்த போதிலும் அவனை அவன் கோபத்தை நிறைய பிடித்திருந்தது நட்சத்திராவிற்கு. சுற்றிலும் பார்த்து அவன் இல்லை என்றவுடன் ஆசுவாச மூச்சு அவளுள். தன் பயம் நீங்கி, “அவன் போயிட்டான் போல. இங்க இல்லை” என்றாள்.

“ப்ச்... நீ அவனைக் காண்பித்திருக்கலாம்?” கோவமாகக் கேட்டபடி அவளைக் காண, அந்த முக்காடு அவனுள் எரிச்சலை உண்டாக்க, “முதல்ல தலையைச் சுற்றி துப்பட்டாவால மூடுற பழக்கத்தை விடு” என்று அதை அவனே எடுத்தும் விட்டு, “இதாலதான் நீ என்னைவிட்டுப் போயிட்ட” என்று முணுமுணுக்க, அவள் காதிலும் கடைசி வாக்கியங்கள் மெல்லியதாகக் கேட்டதோ!

‘நிஜம்தான். ஆனா விட்டுட்டுப் போனது நானில்லை. இன்னும் ஐந்து நாள்ல கல்யாணம் உங்களுக்குத் தானே தவிர எனக்கில்லை.’ மனதில் எண்ணியதை அவனைப்போல் வெளியே கொட்டிவிடவில்லை.

கொட்டியிருக்கலாம் அனைத்தும் சரியாகியிருக்கும்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“இனிமேல் உன் முகத்தை மறைச்ச, அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என மிரட்டவும் செய்தான்.

“ம்...”

“என்ன ம்... வாயைத் திறந்து சொல்லு?” என்று அதட்டல் போட்டான்.

“இனி போடலை” என்றாள் மெல்லிசையாய்.

“சரி வா. வந்து ரெண்டு நிமிஷம் ரிலாக்ஸாகிட்டு கிளம்பு.”

“இல்ல நான் வீட்...”

“சொன்னா கேட்கமாட்ட நீ. வா” என்று கைபிடித்து அங்கிருந்த இருக்கையில் அமரவைத்து தானும் அருகில் அமர்ந்து, “அதான் இழுத்து மூடிட்டிருக்கும் போதே உன்னை அடையாளம் தெரிஞ்சிக்கிட்டானே. அதுக்கு ஏன் முக்காடு? கல்யாணத்துல சீப்பை ஒழிச்சி வச்சிட்டா கல்யாணம் நடக்காது சொல்ற மாதிரி இருக்கு, நீ செய்றதைப் பார்த்தா” என்றான் கிண்டலாக.

அவளோ அவனை முடிந்த மட்டும் முறைக்க, “உண்மையைச் சொன்னா அப்படிதான் யாருக்கும் பிடிக்கிறதில்லை. இப்பவாவது சொல்லு? யார் அவன்? லவ் பண்ணச்சொல்லி டார்ச்சர் பண்றானா? அப்படின்னா ஒரு கம்ப்ளைண்ட் கொடு. அவனைத் தூக்கி உள்ள வச்சிரலாம்” என்றான் உண்மையாகவே.

“இல்ல வேண்டாம்” என மறுப்பாக தலையசைத்தாள்.

“என்ன வேண்டாம்? ஆளை மட்டும் அடையாளம் காட்டு தூக்கிடலாம். என்ன அமைதியாகிட்ட? ஏன் அவனைக் காட்டிக்கொடுக்க மனசு வரலையா?” என ஒரு மாதிரிக் குரலில் கேட்டான்.

“அச்சோ! அப்படிலாம் கிடையாது. அவன் உங்களை எதாவது பண்ணிருவான்ற பயம்தான் எனக்கு. வேறெதுவும் இல்லை.”

“ஏன் நான் அவனை எதாவது பண்ணிரமாட்டேனா?”

“அப்பவும் உங்களுக்குதான் பிரச்சனை. போலீஸ் ஜெயில்னு என்னால நினைச்சிப் பார்க்கவே முடியலை” என்றாள் தலையைப் பிடித்தபடி.

அதில், அந்த அக்கறையில் புன்னகை வரப்பெற்றவன், “சரி சாப்பிட்டியா?” எனக்கேட்டான்.

‘ம்...’ என தலையசைக்க,

“என்னைக் கேட்கமாட்டியா?” என்ற கேள்வியில் அவள் ‘பே’ என விழிக்க, இவனோ “நான் இன்னும் சாப்பிடலை தெரியுமா?” என்றான்.

“ஏன் சாப்பிடலை? வீட்டுக்குப் போயி சாப்பிடுங்க.”

அவளின் அலட்சியமான பதிலில் “அன்னைக்கு மட்டும் கேட்காமலே வாங்கித் தந்த? இன்னைக்கு கேட்டும் மறுக்கிற? ம்...” என்றான் புருவம் உயர்த்தி.

“அ...அப்ப சூழ்நிலை வேற. நீங்க நிஜமாவே சாப்பிடலை. ரொம்பவே களைப்பா இருந்தீங்க. இப்ப பொய் சொல்றீங்க?” என்றதும் அவன் அசட்டு சிரிப்பு சிரிக்க, ‘ஹையோ என் அழகு!’ அவனை மனதினுள் கொஞ்சி, “உங்க நதீரா போட்டோ காண்பிங்க?” என்றாள்.

“அவள் போட்டோ என்கிட்ட கிடையாதே. நான்தான் அவளுக்குக் கல்யாணம்னு சொன்னேன்ல?” நதீரா என்பவளை இறந்த காலமாக்கி, நட்சத்திராவை மட்டுமே மனதினுள் வைத்ததால் நடக்காததை நடந்ததாக சொன்னான்.

“முடிஞ்சிருச்சா?” என்றபடி அவனை ஆராய்ச்சியாய்ப் பார்க்க,

“என்ன சந்தேகம்? அப்பவே முடிஞ்சிருச்சி. அடுத்தவன் மனைவியை நினைக்கிறது தப்பில்லையா?” என்றான் அவளிடமே!

“ஓ...” என்றவளுக்குள், ‘திருமணம் முடிந்திருந்தால் எப்படி இவங்களுக்கு பார்த்திருப்பாங்க. ஒருவேளை அன்னைக்கு என்கிட்ட பேசின பிறகு அந்தப் பொண்ணைப் பார்க்கவே இல்லையோ? அதனால்தான் நடந்திருக்கும்னு நம்பிட்டிருக்காங்களோ? ம்க்கும்... தனக்கு நடக்கப்போகும் கல்யாணமே தெரியலையாம். இதுல சார் என்னைக் காப்பாற்றப் போறாங்களாம்.’ மனம் சற்று ஏளனமாக எண்ணியதோ!

அவளின் முகபாவம் புரியாமல் “என்ன யோசனை?” என கேட்டான்.

“நத்திங். கிளம்பலாமா?” என்றாள் அவள்.

“ம்... போகலாம். உனக்கு வீட்டுல பையன் பார்க்கிறாங்களா?”

“பையனா? ஏன் பையனைப் பார்க்கணும்? என் வயசுக்கு ஒரு இளைஞனைத்தான பார்க்கணும்” என்றவள் கண்கள் சிரிக்க, வாயை அழுந்த மூடிக்கொண்டாள்.

“நீ பார்க்கதான் சைலண்டான பொண்ணா தெரியுற? ஆனா, சரியான டெரர் பீஸ்” என்றவன் அவளின் முறைப்பைக் கண்டுகொள்ளாது “கேட்டதுக்கு பதில்?” என்று நிற்க,

“ஏன் கேட்குறீங்க?”

“எல்லாம் ஒரு அப்ளிகேஷன் போடதான்.”

“அதுக்கு முன்ன உங்க லவர் நதீராகிட்ட கேட்டுட்டுப் போடுங்க. இல்ல அவங்க உங்களைப் போடப்போறாங்க.”

“ஹாஹா... அப்படியே செய்யலாமே. அவள் சம்மதத்தோட வர்றேன். அப்ப என்ன சொன்னாலும் நீ தட்டாம செய்யணும்?”

“அதை அப்பப் பார்க்கலாம்.”

“அதெல்லாம் செல்லாது. எஸ் சொல்லு?” என்றான் பிடிவாதமாக.

“சரி சரி நீங்க என்ன சொன்னாலும் செய்றேன். போதுமா” என்றாள்.

“பிராமிஸ்!” என கைநீட்டினான்.

‘இதுக்கெல்லாமா. சில்லி பாய்’ என நினைத்தாலும், “பிராமிஸ்” என்று அவன் கையில் தன் விரல்களை வைத்தாள்.

அவள் விரல்களைப் பிடித்தபடி, “நம்ம வாழ்க்கையில் இந்த பார்க்குக்கு தனி அத்தியாயமே போட்டுரலாம் போல. நம்ம ரெண்டு பேர் மீட்டிங்கும் அநேக நேரம் இங்கதான் நடக்குது” என்று அவ்விடத்தை ஆசையாய்ப் பார்த்தான்.

‘நம்ம வாழ்க்கையா?’ நிறைவேறாத தன் ஆசையை மனதினுள் புதைத்து, “வாங்க போகலாம்” என்று எழ, இருவரும் பேசியபடி வெளியே சென்றார்கள்.

அவர்களையே வேடிக்கை பார்த்தபடி மறைந்திருந்தவன், அவர்கள் இருந்த இருக்கையில் யோசனையுடன் அமர்ந்தான். நிறைய புதிர்களுக்கு விடை தெரிவது போலிருந்தது. உடனே தாய்க்கு அழைத்து, “அம்மா வர்ற வெள்ளிக்கிழமை உங்க மகனுக்கும், மருமகளுக்கும் கல்யாணம்” என்றான்.

எதிரில் அவன் தாய் நிறைய பேச, “இல்லம்மா வேண்டாம். நானே பார்த்துக்கறேன். அதான் வேண்டாம் சொல்றேன்லம்மா. கண்டிப்பா உங்க மருமகளோடதான் நம்ம ஊருக்குத் திரும்பி வருவேன்” என்று அழைப்பைத் துண்டித்து, “கல்யாணமா உனக்கு? அதெப்படி நானில்லாமல் நடக்கும்? ஏற்கனவே கல்யாணமாம் ஆனவளுக்கு திரும்பவும் முடிக்கிறாங்களா? என் மனைவி நீ! எனக்கு மட்டும்தான் சொந்தம்! நடுவுல எவன் வந்தாலும் கதம் கதம் ஹோகையா!” என்றபடி பல்லைக்கடித்தான் சித்தார்த்!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top