• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
16


கணவரின் கோவத்தில் மனம் சுணங்கினாலும், “நாம திரும்ப நட்சத்திரா வீட்டுல பேசலாமாங்க?” என்றார் சகுந்தலா.

“புரிஞ்சிதான் பேசுறியா நீ? இப்பப் போயி என்னன்னு கேட்ப? என் பையன் ஆசைப்பட்டது வேற யாரையும் இல்ல, உங்க பொண்ணைத்தான். அந்த நதீரா உங்க பொண்ணுதான்னு சொன்னா, காரித் துப்புவாங்கடி நம்மளை. என் பொண்ணு எவ்வளவு கெஞ்சினா அவனை. ஒரு செகண்ட் அந்த போட்டோவைப் பார்த்தானா? அவரோட காவியக் காதல், போட்டோ பார்த்தா சிதைஞ்சிரும்னுதான பார்க்கலை. உன் பையனைப் பார்க்கப் பார்க்க கோவமா வருது” என்று பல்லைக்கடித்தார் ரவிச்சந்திரன்.

“இவன் சொன்னதுக்காகத்தான எல்லாத்துக்கும் தலையாட்டினேன். படிப்புல இருந்து வேலைவரை எதுக்காகவாவது வற்புறுத்தினேனா? பணம் வேண்டாம் புகழ் வேண்டாம்னு அசிஸ்டெண்டாவே இருக்கான். அவனவன் வக்கீலுக்குப் படிச்சிட்டு, பணம், புகழுக்காக அலையுறான். இவன் நினைச்சா புகழின் உச்சாணிக் கொம்புல இருக்கலாம். அவ்வளவு திறமையிருக்கு இவன்கிட்ட. அந்த தன்யா பொண்ணுகிட்டதான் ஜுனியரா போவேன்னு அடம் பிடிச்சான். சரின்னு அவன் இஷ்டத்துக்கு விட்டு வருஷமும் ஆகிருச்சி. இன்னும் தனி கேஸ் எடுத்து நடத்தினபாடில்லை.”

“உங்க பையன் என்ன பண்றான்னு கேட்கிறவங்ககிட்ட, சென்னையில ஜுனியரா இருக்கான்னு சொன்னா, என்னை ஒரு மாதிரி பார்க்கிறானுங்க. இதுக்கும் மேல சுதந்திரம் யார் கொடுப்பாங்க. ஜுனியரா போனதுக்கு காலேஜ் லெக்சரரா போயிருக்கலாம். பேர் புகழ்னு எதுவும் இல்லாத அமைதியான வேலை. இதுல என் பொண்ணையும் கூடவே கூட்டிக்கிட்டு வந்துட்டான்” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.

“அவள் என் தங்கச்சியும்தான்பா. எதுக்கு இத்தனை கோவம்? நீங்க சொல்ற மாதிரி பேசாம காலேஜ் லெக்சரராவே சேர்ந்திடுறேன்” என்றான் அரிச்சந்திரன்.

“பாருடி நான் என்ன சொன்னா இவன் என்ன புரிஞ்சிக்கிறான்னு.”

“நான் என்னம்மா தப்பா சொல்லிட்டேன். அப்பா சொன்னதால டீச்சிங் போறேன்னு சொன்னேன்.”

“உனக்கெல்லாம் கோவம் ஒரு கேடாடா?” என்றார் கோவத்தில்.

“வார்த்தை விடுறீங்கப்பா.”

“வார்த்தையை விடு. நீ வாழ்க்கையை விட்டுட்டு வந்து நிற்கிறியேடா. அதை எப்படி சரி செய்றது? சொல்லுடா?” என்றார் மனம் தாளாது.

சில நொடிகள் அமைதியாக இருந்தவன் ஏதோ பேச வருகையில், “அண்ணன் வாழ்க்கை எங்கேயும் போகாதுப்பா. நீங்க டென்சனாகாதீங்க.” ரவிச்சந்திரன் மகளை புரியாத பார்வை பார்க்க, “நதிதான் எனக்கு அண்ணியா வரணும்னு இருந்தா அதை யாராலப்பா மாத்த முடியும்?”

“யாரும் எதுவும் கேட்க வேண்டாம்பா. நானே பார்த்துக்கறேன்” என இடையிட்டான் அரிச்சந்திரன்.

“டேய்! நீ பேசாம இரு. பேசி கெடுத்ததுவரை போதும். இனி பெரியவங்க நாங்க பேசிக்கிறோம்” என்றார் பல்லைக்கடித்தபடி.

“அண்ணா நல்லா கேட்டுக்கோ, பெரியவங்க நாங்க” என்று தன்னையும் சேர்த்துக் காண்பித்து, ‘எதற்கும் கவலைப்படாதே’ என்று கண்மூடித் திறக்க, திருப்தியான புன்னகை அவனிடம்.

‘தேங்க்ஸ் டாட். நான் விட்டேத்தியா பேசினா நீங்க இப்படி ஒரு முடிவெடுப்பீங்க தெரியும்.’ தந்தைக்கும், தங்கைக்கும் ஆயிரம் நன்றிகள் சொன்னான் மனதிற்குள். “என்னவோ போங்க” என்பதாய் சலிப்புடன் சொல்லி, “அம்மா டிபன் எடுத்து வைங்க. காலையில சீக்கிரம் எழுந்து கிளம்பணும்” என்றான்.

“எங்கண்ணா?”

“ஒரு புது கேஸ்மா. சுஜய் சாரோட ஆப்போசிட் பார்ட்டி கேஸ் எங்ககிட்ட வந்திருக்கு. சின்ன க்ளாரிபிகேஷனுக்காக சாத்தூர் வரை போக வேண்டியிருக்கு.”

“சாத்தூர் எங்க இருக்குண்ணா?”

“விருதுநகர் மாவட்டத்துல இருக்கு.”

“அவ்வளவு தூரமா? வேற யாரையாவது போகச் சொல்லலாம்லடா” என்றார் தாய்.

“அம்மா... மேம்கு ஜுனியர்னாலும் இந்த கேஸ் முழுக்க முழுக்க நான்தான் பார்க்கப்போறேன். தனியா வாதாடத் தெரியாமல்லாம் கிடையாது. ஒன்ஸ் பேர் புகழ்னு இறங்கிட்டா வெளியில வரமுடியாது. அதனாலதான் கொஞ்ச நாள் ஜுனியராவே இருக்கலாம் நினைச்சேன். அப்பாகிட்ட சொல்லுங்க, சீக்கிரமே தனியா பண்றேன்னு.”

“அப்பா அவங்க ஆதங்கத்தைச் சொன்னாங்கடா. இருந்தாலும் அவ்வளவு தொலைவுக்கு போகணுமா?”

“அம்மா இது ரொம்ப சிக்கலான கேஸ். கொலை கேஸ்களைக் கூட ஈஸியா சால்வ் பண்ணிரலாம். இந்த சொத்து கேஸ் இருக்கு பாருங்க, அதுலதான் இல்லாத சிக்கலே வரும்.”

“நைட் வந்திருவதான?”

“முடிஞ்சா லேட் நைட்னாலும் வந்திருவேன்மா. இல்லன்னா மறுநாளாகிரும்.”

“இதுக்கு நீ லெக்சரராகவே ஆகிருக்கலாம்டா” என்றார் சகுந்தலா.

“ஹா...ஹா மாம் இஸ் ஆல்வேஸ் ஸ்பெஷல்” என்று கன்னத்தில் முத்தமிட இப்பொழுது பொறாமை ரவிச்சந்திரனிடம்.

“டாட் இதுக்கெல்லாம் நாம அசரக்கூடாது. நாமெல்லாம் கெத்து பசங்க” என்றாள் மின்னல்கொடி தந்தையிடம்.

“அது கெத்து இல்லடா மின்னல். வெத்து” என்று அவள் அடிக்க வருமுன் ஓடினான்.

மதுரையில் விமானத்தில் வந்திறங்கிய அரிச்சந்திரன், அங்கிருந்து வாடகைக்கார் பிடித்து முகவரி சொல்லி, விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருக்கும் அந்த பெரிய வீட்டின் முன் இறங்கினான்.

“வாங்க தம்பி. பையன் போன் பண்ணியிருந்தான்” என்று இன்முகத்துடன் வரவேற்றவர், “ஏய் செல்லா இங்க வா லாயர் தம்பி வந்தாச்சி” என்றதும் ரங்கசாமியை விட இரண்டு அங்குலம் அதிக உயரத்தில், வயதுக்கேற்ற உடல்வாகுடன் புன்னகை முகத்துடன் வந்தார் செல்லம்மா.

“விட்டா வெளிய நின்னே பேசி அனுப்பிருவீங்க. நீங்க உள்ள வாங்க லாயர் தம்பி.” உள்ளே வருகையிலேயே ஒவ்வொன்றாக ஆராய்ந்தபடி வந்தவனிடம், “பாத்ரூம் எதுவும் போகணும்னா அந்த ரூம் போங்க. சாப்பிட்டு அப்படியே கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பேசிக்கலாம்” என்றதும் நன்றி சொல்லி அந்த அறைக்குச் சென்று தயாராகி வந்தவன் கண்ணில் பட்டவை அனைத்தும், நல்லவை மட்டுமே!

மதிய உணவு முடித்துக் கணவன், மனைவி இருவரிடமும் பேசியவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. செல்லம்மாள் பெயரில் மட்டுமே. மற்றபடி ஒரு மினி அண்டர்க்ரௌண்ட் தாதா அவர் என்று. சொத்து சேர மூலதனம் அவரின் மூளை செய்த மூளைச்சலவைகளே! தாங்கள் சம்பாதிக்கும், (அப்படித்தான் சொல்லிக் கொள்வார்கள் திடீர் பணக்காரர்கள்.) சொத்தை ஆள சித்தார்த் மட்டுமே போதுமென்று அடுத்து குழந்தை எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை.

மகன் எதை ஆசைப்பட்டாலும், அதை உடனே வாங்கிக் கொடுப்பதை தலையாய கடமையாக வைத்திருப்பவர்கள். அது தரமுள்ளதா? பொன்னா, பொருளா, இல்லை பெண்ணா, எதுவும் கணக்கில்லை மகனுக்குக் கொடுப்பதற்கு.

‘அப்படித்தான் சித்தார்த்தின் திருமணமும் நடந்திருக்குமோ!’ அதெதுக்கு அர்ஸ் நமக்கு. நாம வந்த வேலையை மட்டும் பார்ப்போம். மனசாட்சியைத் தட்டிவிட்டு, “சார் உங்க ஆப்போசிட் பார்ட்டியை பார்க்கலாமா?” என்றான்.

“அவங்களை எதுக்கு லாயர் தம்பி?”

“சார் நமக்குத் தேவையான பாய்ண்ட்ஸ், அவங்க வாய்மொழியாவும் வரலாம். நமக்கு கேஸ் ஜெயிக்கணும். அதுக்கு என்ன வேணுமோ அதைச் செய்யணும்ல.”

“லாயர் தம்பி சொன்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நம்ம மேலதான் தப்புன்னு திருப்பிவிட்டா என்ன செய்யுறது?”

“எங்க மேம் எடுக்கிற கேஸும் தோத்துப் போனதில்லை. போகவும் விடமாட்டாங்க சார். எங்களை நீங்க தாராளமா நம்பலாம். இங்க இருக்கிறதுவரை நான் யாரை மீட் பண்றேன். என்னென்ன பேசுறேன்னு உங்களுக்கு நியூஸ் வந்திரும். இப்பக் கூட உங்க பையனுக்கு நாம பேசுறது போயிட்டுதான் இருக்கு. உங்களுக்குமே நாங்க முழசா இறங்கியிருக்கோம்னு, தெரிஞ்சி நம்பிக்கை வரணும்ல சார்.” தன் வார்த்தையாடலை அழகாய்க் கோர்த்தான்.

“என்ன லாயர் தம்பி நீங்க. உங்களை நம்பாமலா இங்க உள்ள வக்கீலெல்லாம் விட்டுட்டு சென்னை வந்தோம். நாங்க அங்க வரக்காரணம் தங்கச்சி பொண்ணுதான். யாரோ சொந்தக்காரன் மூலமா பெரிய வக்கீல்னு சொல்லி சென்னையில கேஸ் கொடுத்துட்டா. எங்களுக்கும் வேற வழியில்லாமல் போச்சிது.”

‘எதிர் பார்ட்டி புத்திசாலிதான் போல.’ மனதினுள் கணக்கிட்டு “இன்ட்ரெஸ்டிங்! நான் அவங்களை சந்திக்கணுமே? எங்கே இருக்காங்க?”

“பக்கத்துல கொஞ்சம் தள்ளி நடந்துபோற தொலைவுதான் லாயர் தம்பி. டிரைவரோட போங்க” என்றார் ரங்கசாமி.

“நடந்து போற தொலைவுன்னா, கார் எதுக்கு சார்? எனக்கு வீடு காண்பிக்க மட்டும் ஒருத்தரை அனுப்புங்க. நான் போகும்போதே சித்தார்த் சார்கிட்ட பேசிடுறேன்.”

“சரிங்க லாயர் தம்பி. டேய் மாடசாமி! தம்பியை அழைச்சிட்டு திலகா வீட்டுல விட்டுட்டு வா.”

“சரிங்கய்யா. வாங்க தம்பி” என்று முன்னே நடக்க, சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி பின் தொடர்ந்தான் அர்ஸ்.

“இதுதான்ங்க தம்பி திலகாம்மா விடு. அங்க இருந்து வந்தேன்னு அவங்ககிட்ட நீங்க சொன்னா, அப்படியே வெளிய அனுப்பிருவாங்க. எதாவது பொய் சொல்லிட்டு போங்க.”

“நான் பார்த்துக்கறேன் நீங்க கிளம்புங்க” என்று வீட்டைப் பார்த்தவனுக்கு சித்தார்த்தன் வீட்டை ஒப்பிடுகையில் பாதி கூட இல்லாதிருப்பது புரிந்தது.

உரிமைப்பட்டவன் குடிசையில்! ஒட்டிக்கொண்டவன் கோபுரத்தில்! மனிதர்களை நினைக்கையில் ஒரு ஏளனச்சிரிப்பு மட்டுமே அவனுள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
அழைப்பு மணியை அடித்துக் காத்திருக்கையில், கதவு திறந்து நின்ற பெண்ணைப் பார்த்ததும் அதிர்ந்து அப்படியே சிலையாகிப் போனான் அரிச்சந்திரன்.

சில நொடிகளில் தன்னைச் சமாளித்து அப்பெண்ணைப் பார்த்து கைகுவிக்க, பதிலுக்கு வணக்கம் வைத்தவள், “யார் நீங்க?” என்ற கேள்வியில் மென்மையாகப் புன்னகைத்தவன், “உங்ககிட்ட இருந்து சில பதில் வேணும். கிடைச்சதும் கிளம்பிருவேன்” என்றான் அவள் விசாரிப்புக்குச் சம்பந்தம் இல்லாது.

“எங்ககிட்ட இருந்து பதிலா? என்ன சார் உளர்றீங்க? முதல்ல நீங்க யார்னு சொல்லுங்க?”

“உள்ள போய் பேசலாமே? இங்கயே நின்னா பார்க்கிறவங்க தப்பா நினைக்கமாட்டாங்களா?”

“சாரி சார். முன்னப்பின்ன தெரியாதவங்களை வீட்டுக்குள்ள விட முடியாது. உங்களை உள்ள விட்டால்தான் தப்பா பேசுவாங்க” என்றாள் கறாராய்.

“பாப்பா யார்கிட்ட பேசிட்டிருக்க?” கேட்டபடி அவளின் தாய் திலகவதி வர,

“தெரியலம்மா. யார்னு கேட்டதுக்குப் பதில் சொல்லாம உள்ள வந்து பேசலாம் சொல்றார்.”

“நீங்க வெண்மதிதான? இவங்க உங்கம்மா திலகவதி. ஆம் ஐ கரெக்ட்?” என்றான் புன்னகை மாறாது.

“யார் தம்பி நீங்க? எங்களை எப்படித் தெரியும்?”

“உங்களை மட்டும் இல்ல ஆன்ட்டி. உங்க ஜாதகமே தெரியும். நான் அரிச்சந்திரன். சென்னையில வக்கீலா இருக்கேன்.”

“சுஜய் சார் அனுப்பினாங்களா?” என்றாள் ஆர்வமாய்.

“நோ தன்யா மேம் ஜுனியர் நான்.”

“ஓ...” என்றாளவள்.

“யாரு பாப்பா?”

“ம்... உங்க அண்ணன் மகன் பார்த்திருக்கிற வக்கீல்” என்றாள் எரிச்சல் குரலில்.

“என்ன பாப்பா நீ? அவ்வளவு தொலைவில் இருந்து வந்திருக்கிற புள்ளையை வாசல்ல வச்சே பேசிட்டிருக்க.” மகளைக் கடிந்து, “நீங்க உள்ள வாங்க” என்றழைத்து அங்கிருந்த இருக்கையில் அமரச்சொல்லி “என்ன சாப்பிடுறீங்க தம்பி?” என விசாரித்தார்.

“எதுவும் வேண்டாம் ஆன்ட்டி” என்று வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தான்.

“இது ஒண்ணும் பேலஸ் இல்லை. நீங்க சுத்திப் பார்க்க” என மீண்டும் கடுப்படித்தாள் வெண்மதி.

“பாப்பா சும்மாயிரு.” மகளை அதட்டி, “கேட்டா வேண்டாம்தான் சொல்வீங்க.. டீயா இல்ல காப்பியாபா?” என்றார்.

“டீ ஓகே ஆன்ட்டி. அதுவும் இப்ப வேண்டாம். நான் கிளம்புறதுக்கு முன்ன கேட்கிறேன். இப்ப நீங்களும் வந்து உட்காருங்க. உங்க பையன் எங்க?”

“அவன் வேலைக்கு போயிருக்கான். வேலை மதுரையிலன்றதால டெய்லி வந்துபோக முடியாது. அதனால லீவுக்கு வந்து போவான்.”

“ஓ... அவர்கிட்ட பேசணும்னா...”

“ஏர்போர்ட்ல இமிக்ரேஷன் ஆபீஸரா ஒர்க் பண்றான். நினைச்ச நேரம் லீவ் எடுக்க முடியாது. பெர்மிஷன் கேட்டு போய்ப் பார்க்கலாம்” என்றார்.

‘இமிக்ரேஷன் ஆபீஸரா ஏர்போர்ட்ல ஒர்க் பண்றவன் வீடா இது? ரொம்ப சின்ன வீடா இருக்கே’ என்றுதான் அரிச்சந்திரனுக்குத் தோன்றியது.

அதை உணர்ந்தாளோ வெண்மதி, “என் அண்ணன் வேலைக்கு போயி ரெண்டு மாசம்தான் ஆகுது. எக்ஸாம் மேல எக்ஸாம் எழுதி, போஸ்டிங்காக இத்தனை வருஷமா காத்திருந்து இப்பதான் கிடைச்சது.”

“ம்... குட் காத்திருத்தலுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு. ஆமா. நீங்க ஏன் கேஸை வாபஸ் வாங்கக்கூடாது?” என்றான் தடாலடியாக.

சட்டென்ற கேள்வியில் புரியாது விழித்தவள், புரிந்ததும் பல்லைக் கடித்தபடி, “நீங்க ஏன் அவன் போட்ட கேஸை வித்ட்ராப் பண்ணக்கூடாது?” என்றாள் பட்டென்று.

அவளின் உடனடி பதிலில் புன்னகைத்தவன், ‘ஸ்மார்ட்’ என தனக்குள் பாராட்டி, “அப்ப நீங்க ஸ்டெடியா இருக்கீங்க ரைட்?”

“ஆமா சார். ஒருத்தர் எத்தனை நாள்தான் ஏமாளியாவே இருக்கிறது நாங்களும் வாழணும்ல. கர்ணன் வாழ்ந்த காலங்கள்லாம் மலையேறிப் போயாச்சி சார்.”

தாய் மகளிடம் வழக்கு சம்பந்தமாகப் பேசியவன், திடீரென அந்தக் கேள்வியைக் கேட்டான். அதில் இருவரும் அதிர, “என்னாச்சி? பேசாம சித்தார்த்தைக் கல்யாணம் பண்ணி இதைச் சரி செய்திருக்கலாமேன்னு கேட்டேன். இதுக்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சி?” என்றான் கூலாக.

“ஏன் சார் உங்களுக்கே இது அநியாயமா தெரியலை. கடனை வசூலிக்க கடன்காரனை யாராவது கட்டிப்பாங்களா?”

“சித்தார்த்தைப் பார்த்தா கெட்டவரா தெரியலையேங்க” என்று போட்டு வாங்கினான்.

“உங்க கட்சிக்காரனை விட்டுக்கொடுக்காம பேசுறீங்க. ஏன் சார்? யாராவது கருங்குரங்கைக் கல்யாணம் பண்ணிப்பாங்களா?” என்றதும் அர்ஸ் அரண்டுபோய் பார்க்க, “அதோட அவன் ஒரு பச்சைப்புள்ள கழுத்துல தாலியைக் கட்டினதும் இல்லாம, அவளை நிம்மதியா இருக்கவிடாம தேடிட்டு அலையுறான்” என்றாள் கோவமாய்.

“ஏங்க வெண்மதி அவ்வளவு லவ்வா இருக்கும். இதை ஏன் தப்பா பார்க்கணும்? சாதாரணமா ஏத்துக்கலாமே.”

“அட நீங்க வேற சார். அதையெல்லாம் லவ்வுன்னு சொன்னா அப்ப காதல்ன்ற வார்த்தைக்கு என்ன மரியாதை. இந்த லூஸை யாரும் கைநீட்டிப் பேசிரக்கூடாதுன்னு கௌரவத்துக்காகத் தேடுது. நல்லவேளை அந்தப் பொண்ணு எஸ்கேப். இல்ல காதலுக்கும், கௌரவத்துக்கும் வித்தியாசம் தெரியாத இந்த லூசன்கிட்ட மாட்டி லைஃப்லாங் கஷ்டப்படணும்.”

அரிச்சந்திரனுக்குத் தோன்றியது ஒன்றே ஒன்றுதான். சித்தார்த்திற்கு ஏற்ற சண்டைக்கோழி இவள்தான்! இவள் மட்டும்தான் என்று! அதை மறைத்து, “அவர் உங்க மாமா பையன்ங்க” என்றான்.

“அவர் எங்கம்மா கூடப்பிறந்த அண்ணனே இல்லைன்றப்ப அந்த மாமனுக்கு மகன் இருந்தாலென்ன, இல்லாமல் போனாலென்ன. அடுத்தவங்க சொத்துல உயிர் வளர்க்கிறதுக்குப் பெயரே வேற சார். இதுல என்ன கௌரவம் வாழுது. அவன் எல்லை, அதான் நட்பு வட்டத்தைத் தாண்டி வெளியில வந்து பார்க்கச் சொல்லுங்க சார். அவன் கௌரவம் எந்தளவு நாறிப்போயிருக்குன்னு தெரியும்” என்று சித்தார்த்தின் குடும்ப கௌரவத்தைக் கோர்ட் படி ஏறாமலே மேடை ஏற்றினாள் வெண்மதி. அத்தனை வருடமாக ஏமாந்த, ஏமாளியாக்கப்பட்ட கோவமல்லவா!

“பாப்பா” என்று மகளை அதட்டி “தம்பி கேஸ் சம்பந்தப்பட்டது மட்டும் பேசுங்க” என்று அவனுக்கு அறிவுறுத்தினார்.

“சாரி ஆன்ட்டி” என்றான்.

“பாப்பா என்ன இருந்தாலும் அது என் அண்ணன் குடும்பம். மத்தவங்ககிட்ட அவங்களை தரம் இறக்கிப் பேசுறது எனக்குப் பிடிக்கலை” என்றார் மகளிடமும்.

“தராதரம் இல்லாதவங்களுக்குத் தரம் பார்க்கணுமா? உங்களை ஏமாத்தினதெல்லாம் மறந்திருச்சாம்மா?” ஆத்திரத்தில் தாயைக் கத்த,

“எனக்குச் சொத்துல பாதி தந்தால்தான் கொள்ளி வைப்பேன்னு அவர் சொல்லலையேமா. பெரியவங்க பேசினாங்க. நாங்களும் சரின்னு சொல்லிட்டோம். என்ன பணம் சேரச்சேர அதனோட ஆசை அதிகமாகிட்டுது. அது மனித இயல்புதான” என்றார் யதார்த்தவாதியாய்.

“சரி இனிமேல் உங்க அண்ணனைப் பேசலை” என்றாள் மனமேயில்லாமல்.

அதன்பின் அவரை டீ எடுத்து வரச்சொல்லி “டீ குடிச்சி முடிக்கிறது வரை நோ கொஸ்டின்ஸ். ஒன்லி அமைதி” என்று அவர் போட்டு எடுத்து வந்து குடித்து முடிக்கும் வரை எந்தவித பேச்சு வார்த்தைகளும் இல்லை. “தேங்க்ஸ் ஆன்ட்டி டீ சூப்பர். அப்புறம் உங்க பையன் நம்பர் கொடுங்க பார்த்து பேசிட்டே போறேன்” என்றான்.

“ட்யூட்டி டைம்ல போன் எடுக்கமாட்டான்பா.”

“நோ ப்ராப்ளம் ஆன்ட்டி. நான் யாரையாவது பிடிச்சி பெர்மிஷன் வாங்கிடுறேன். இது என்னோட கார்ட். எனி டைம் எனி ஹெல்ப். ஒன்ஸ் அகெய்ன் தேங்க்யூ. நான் உங்ககிட்ட இருந்து இவ்வளவு சப்போர்ட் எதிர்பார்க்கலை. வர்றேன் ஆன்ட்டி. வர்றேன் வெண்மதி” என்று விடைபெற்றான்.

வெளியே வந்தவன் கைபேசியைக் காதுக்குக் கொடுத்து, “சொல்லுங்க சித்தார்த்?” என்றதுதான் தாமதம் வாணலியில் போட்ட சோளமாய் பொரிய ஆரம்பித்தான்.

அதையும் மீறி வெண்மதியின் உண்மை வார்த்தைகள், அவன் மனதைக் கீறச் செய்திருந்தது நிஜம். ‘நம் தேடல் காதலால் இல்லையா? கௌரவத்திற்காகவா? காதல் இல்லாமலா இத்தனை ஆண்டுகளாக அவளைத் தேடுகிறேன்? இல்லை என் காதல் நிஜம்’ என்றான் தனக்குத்தானே!

“சித்தார்த், ஹலோ மிஸ்டர்.சித்தார்த்” என்று வேகமாக அரிச்சந்திரன் அழைத்ததுமே சித்தார்த் தன் எண்ணத்திலிருந்து கலைய, “நெக்ஸ்ட் வெண்மதி அண்ணனை சந்திக்கப்போறேன். ஏர்போர்ட்ல அவரோட பேசும்போது செல்போன் அக்செப்ட் பண்ணினா உங்களுக்கு கால் பண்றேன். இல்லைன்னா ரெகார்ட் அனுப்பி விடுறேன்” என்றான்.

“லாயர் சார் எதுக்கு தேவையில்லாம. உங்களை நம்பினதாலதான் கேஸை ஒப்படைச்சிருக்கேன். இனி கேஸ் பத்தின எல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க.”

சித்தார்த் சொல்லிவிட்டாலும் ஏர்போர்ட்டிலும் அவர்கள் பேசுவதை லைவாகவே கேட்க வைத்தான்.

‘அங்கும் ஒரு டீ ப்ரேக். எதற்கோ அது!’
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top