Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 157
- Thread Author
- #1
கெளரவத் திருமணம்
“இதுக்குப் பிறகு என்னால இங்க இருக்க முடியாது ம்மா வாழ்க்கையே சூனியம் ஆன மாதிரி இருக்குது.
என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல. இதுக்கு அப்புறமா இந்த வீட்ல என்னை இருக்கணும்னு சொன்னீங்கன்னா நான் உயிரோட இருப்பேனா இல்லையான்னு தெரியாது. எனக்குப் பயமா இருக்குது மா. நிச்சயமா நான் ஏதாவது பண்ணிக்குவேன்.. என் வாழ்க்கை இத்தோட முடிஞ்சிடும்” என்று சொன்ன மகளின் குரல் கேட்டு திகைத்தார் புவனா.
“என்னடி என்ன உளர்ற... ஏன் இது மாதிரி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கற? உன் வீட்ல எல்லாரும் உன் மேல பாசமாதான இருக்கிறார்கள்.”
“அம்மா உனக்குச் சொன்னா புரியாதும்மா. நான் உனக்கு என்னன்னு சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல.”
“அங்க என்ன தாண்டி பிரச்சனை? நீ சொன்னாதானே தெரியும்.”
“குழந்தை இல்லன்னு ரொம்ப ஒரு மாதிரி பேசுறாங்க. அம்மா எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.”
“அவங்க கேட்கறது நியாயம் தான... கல்யாணம் முடிஞ்சு இதோ ரெண்டு வருஷம் முடியப்போகுது. இன்னுமுமே குழந்தை இல்லன்னா அக்கம் பக்கத்தில் கேட்க தான் செய்வாங்க. அதை வைத்து அவங்க ஏதாவது கோபத்தில் பேசி இருக்கலாம். மத்தபடி நீ பயப்படற அளவுக்குக் கிடையாது.
சம்மந்தி அம்மா ரொம்ப நல்லவங்க.”
“அம்மா உனக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல. நீ என்னை அழைச்சிட்டு போவியா இல்ல என்னை இப்படியே விட்டுடுவியா. இப்படியே விட்டுடுவேன்ணா சொல்லிடு. உனக்கு ஒரு பொண்ணு இருக்கிறதை மறந்திடு.”
“என்னடி உளறிக்கிட்டு இருக்கற? நீ எங்களுக்கு ஒரே ஒரு மகள் பார்த்து பார்த்து வளர்த்தோம் ஏன் இப்படி எல்லாம் பேசுற? நீ நல்லா இருக்கணும்னு தானே தேடி தேடி இந்த வரனை கண்டுபிடிச்சோம். ஏன் கொஞ்ச நாள் உன் ஹஸ்பண்ட் கூட வெளிநாட்டில் போய்த் தங்கிட்டுதான வந்த கொஞ்ச நாள் அம்மா வீட்ல இருன்னு தானே அனுப்பி வச்சாங்க .இங்க எல்லாமே சுமூகமா தான போயிட்டு இருந்தது. இப்ப என்ன ஆச்சு?“
“அம்மா நான் உன்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியல. இங்க என்னமோ தப்பு இருக்குதும்மா. எனக்கு ரொம்பப் பயமா இருக்குது. நீ முதல்ல என்னை வந்து அழைச்சிட்டு போ .பிறகு மத்த விஷயங்கள தெளிவா சொல்றேன்” என்று சொல்ல மகளின் கலங்கிய குரலே இவரைப் பதற்றத்திற்கு உள்ளாக்கியது.
அன்று மாலையே கணவனை அழைத்துக்கொண்டு நேராக மகளைக் காண சென்றிருந்தார். உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே மாமியார் சற்று சண்டையிடுவது போலத் தான் பேசியது.
“இதெல்லாம் சரி வராது. உங்க பொண்ணுக்கு எங்க வீட்டு வாரிசை பெத்து கொடுக்கிற தகுதி கிடையவே கிடையாது. தயவு செஞ்சு உங்க பொண்ண நீங்க அழைச்சிட்டு போயிடுங்க. என் பையனுக்கு வேற நல்ல இடமா பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிடறேன்.”
“என்ன சம்பந்திம்மா இப்படிச் சட்டுன்னு சொன்னா என்ன அர்த்தம் இன்றைக்கு மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறி இருக்குது .என்ன எதுன்னு பார்க்கலாம். நானே என் மகளை அழைச்சிட்டு போறேன். டாக்டர்கிட்ட காட்டறேன்.“
“போதும்! போதும்! ஒரு வருஷமா இதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இவ வந்த நேரமோ என்னமோ தெரியல. வந்த நாள்ல இருந்து எல்லாமே தப்பு தப்பா நடக்குது. பொண்ணுக்கு சரியா வரன் அமையலை. இங்க படிக்கிறவனும் சரியா படிக்க மாட்டேங்கறான். அதுக்குத் தகுந்த மாதிரி வெளிநாட்டில் இருக்கிறவனுக்கும் எதுவும் சரியா இல்ல. சரி புருஷன் கூடச் சந்தோஷமா இருக்கட்டும்னு வெளிநாடு வரைக்கும் அனுப்பி வச்சேன் போயிட்டு 6 மாசத்துல திரும்பி வந்தாச்சு. சரி இங்கேயாவது எங்களை எல்லாத்தையும் அனுசரிச்சு போவான்னா அதுவும் இல்ல. தொட்டதுக்கு எல்லாம் சண்டை, கோவம் ,பேச்சும் சரியில்ல”
“என்ன நந்தினி இங்க இப்படிச் சொல்றாங்க?“
“அம்மா ப்ளீஸ் என்னை உன்னால அழைச்சிட்டு போக முடியுமா முடியாதா? இல்ல நான் இங்கதான் இருக்கணும்னா இந்த நிமிஷமே என்னை மறந்திருங்க. இதுக்கு அப்புறம் எப்பவும் என்னைத் தேடி வர வேண்டாம். இந்த வீட்டோடவே என் லைஃப் முடிஞ்சிடட்டும்” கோபமாகச் சொல்ல,
”சரி சரி நீ முதல்ல எங்க பின்னாடி வா. பிறகு என்னன்னு பாத்துக்கலாம் .பத்து நாளைக்கு அழைச்சிட்டு போறேன் சம்பந்திம்மா.”
‘இந்தப் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல .அழைச்சிட்டுப் போறதுன்னா போங்க. திருப்பி எல்லாம் அவளை அனுப்பி வைக்க வேண்டாம். நாங்க நிம்மதியா இருப்போம்” சண்டை இடுவது போலப் பேச அப்போதே புவனாவிற்குப் புரிந்து விட்டது இதற்கு மேல் இந்தப் பெண்ணிடம் தன்மகள் இருந்தால் நிச்சயமாக விபரீதமாக ஏதாவது நடந்து விடும் என நினைத்தவர் நேராக மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டார் .
“எதா இருந்தாலும் சரி மாப்பிள்ளை கிட்ட போன்ல பேசிட்டு முடிவு பண்ணிக்கலாம்” என்று சொல்லி அழைத்துச் செல்ல, சுரேந்தரோ வேறு கூறினான்.
“உங்க பொண்ணுக்கு இந்த வெளிநாட்டு வாழ்க்கை சுத்தமா புரியல. அது மட்டும் இல்ல அனுசரிச்சுப் போகத் தெரியல. அவ கூட வாழ்ந்ததை நினைச்சாலே எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்குது. எனக்கு அவ வேண்டாம்.. உங்க பொண்ணை உங்க வீட்டிலேயே வச்சுக்கோங்க.” சற்று கறாராகக் கேட்க இவர்களுக்குமே ஒன்றும் புரியவில்லை.
“கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு நந்தினி .அப்படி என்னதான் உன் லைஃப்ல நடக்குது. ஒன்னும் புரியல ஆளுக்கு ஒரு பக்கம் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க. மாப்பிள்ளை என்னடான்னா நீ குடும்பம் நடத்தவே லாயக்கு இல்லங்கறார். மாமியாரோ வேற மாதிரி பேசறாங்க என்னதான் நடந்துச்சு?”
“இந்த ரெண்டு வருஷம் நடந்தது எல்லாத்தையுமே சொல்றேன் மா உனக்கு ஏதாவது புரியுதான்னு சொல்லு.”
“கல்யாணம் முடிஞ்ச உடனே எங்க அம்மா கூடக் கொஞ்ச நாள் இரு. உனக்கு விசா பாஸ்போர்ட் எடுத்த பிறகு அழைச்சிட்டு போறேன்னு சொல்லி விட்டுட்டுப் போனார். உனக்குத் தான் தெரியுமே. இங்க ஆறு மாசம் இருந்தேன். இந்த ஆறு மாசம் நரக வாழ்க்கையாக இருந்தது. மாமியார் தொட்டதுக்கெல்லாம் குறை சொன்னாங்க. என்ன செஞ்சாலும் தப்புன்னு சொல்லி சண்டை பிடிச்சாங்க. ஒரு ஸ்டேஜ்ல என்னால இங்க இருக்க முடியாதுன்னு ஆகும் போது நான் சுரேந்தர்க்கு போன் பண்ணி அழ ஆரம்பிச்சேன். என்னால இங்க இருக்க முடியாது. தயவு செஞ்சு என்னை அழைச்சிட்டு போயிருங்க.. இல்ல நான் எங்க வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். உடனே சுரேந்தரும் இல்ல இல்ல வேண்டாம். அது அவ்வளவா நல்லா இருக்காது. நானே உன்னை அழைச்சிட்டு போறேன்னு வந்து என்னை வெளிநாட்டு அழைச்சுட்டுப் போனார். அதுவரைக்கும் எல்லாம் சரியா தான் இருந்தது. அதுக்கு அப்புறம் தான் நிறையக் குழப்பம். அங்க ஒன்னேகால் வருஷம் இருந்தேன்மா. ஆனா அந்த ஒன்னேகால் வருஷத்துலேயும் எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதுவுமே நடக்கல.”