• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
12

தன் கேள்விக்கு எந்த பதிலும் இல்லாது போக தன்னையே பார்த்திருந்த மாமியாரிடம், “என்ன பதிலையே காணோம்” என்று குரல் உயர்த்தினாள்.

“நீ என்னை பேசவிட்டால்தானே பதில் பேச. உங்கம்மா உனக்குக் கோவம்னா என்னன்னே தெரியாது சொன்னாங்க. என்கிட்ட மட்டும் ஏன் சண்டைக்கோழி மாதிரி சிலிர்த்துக்குற?” என்றார் புன்னகையுடன்.

“சண்டைக்கோழியா? நானா?” என அதற்கும் அவள் எகிற,

“பார்த்தியா சொன்னா கோவப்படுற” என்றார் அமைதியாக.

“அட ஆமாம்ல. ஏன் இப்படி? அதுவும் சில முறை பார்த்த உங்ககிட்ட கோவப்படுறேன்” என தனக்கும் சேர்த்தே கேட்டுக்கொண்டாள்.

“அது ப்ரெக்னென்சி ஸ்ட்ரெஸ் அனுமா. அப்புறம் ஒருசில முறை பார்த்ததா மூணாவது மனுசங்களைச் சொல்லலாம். நான் உன் மாமியார். அதான் உரிமையா பேசுற.”

“ஹான்! தெரியும் தெரியும். ஞாபகம் இருக்கு” என்றவள் குரலில் நக்கலே இருந்தது.

“ஞாபகம் இருக்குறவரை சந்தோஷம்” என்றார் அவரும் கேலியாக.

மாமியார், மருமகள் இருவரையும் ‘ஆ’வென வேடிக்கை பார்த்திருந்தனர் ஆனந்தனும், அறிவழகனும். பேச்சு ஆரம்பித்த வேகம் என்ன, கடைசியில் கேலி கிண்டலில் முடித்ததென்ன.

“அவ்வ்வ்வா! மாமா! எனக்கென்னவோ நம்ம வீட்டுல மாமியார், மருமகள் காம்போதான் டாப் லெவல்ல இருக்கும்னு நினைக்குறேன். எங்க ஜோடிப்பொருத்தம் கொஞ்சம் லோ கண்டிஷன்தான். பாருங்களேன்” என்று கன்னத்தில் கைவைத்து அவர்களை ஆசையாய் பார்த்திருந்தான்.

“பார்த்துட்டுதான் மருமகனே இருக்கேன். என் பொண்ணு கூட உங்கம்மாகிட்ட இந்தளவு வாயாட மாட்டாள். ஒரு விலகல் இருக்கும். உன் மனைவி ஆரம்பமே அட்டகாசமா போறா” என்று சிரித்தார் ஆனந்தன்.

“இதுவும் நல்லாதான் மாமா இருக்கு. நம்ம வீடு எப்பவும் சண்டை சச்சரவா இருக்கப்போகுதோன்னு பயந்தேன். இப்பதான் ரிலாக்ஸாயிருக்கு” என்றான்.

“சரி சொல்லுங்க. என்ன சொல்ல வந்தீங்க?” போனால் போகிறதென்பதாய் மாமியாரிடம் மிதப்பாய் கேட்டாள் அனுரதி.

“தனியா படுக்க வேண்டாம் என்கூட வந்து படுன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள உன் கற்பனைக் குதிரை அப்படிப் பறக்குது. மாசமா இருக்கிற புள்ளையை அப்படி கஷ்டப்படுத்துவேனா நான். மாமியாரை வில்லியா பார்க்காம ஃப்ரண்டா பாரு. கடின வார்த்தைகளும் அன்பா, அக்கறையா தெரியும்” என்றார்.

தன் தவறு புரிய, ‘ஏன் கோவம் என்ற பெயரில் உறவுகளிடம் சிக்கலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், மென்மையைக் கையாளலாமே’ என்று மனதில் உறுதியெடுக்க, அதை உடனே காட்ட விரும்பாது, “சரி சரி போதும். மானி கூட என்னை இப்படி டார்ச்சர் பண்ணமாட்டா. போய்ப் படுக்கலாம் வாங்க. விட்டா பேசிட்டே இருப்பீங்க போல” என்று எழ,

வாயில் கைவைத்த அபிராமி, “அம்மாடியோவ்! நானா பேசுறேன்? பேசுனதெல்லாம் நீ” என செல்லமாய்த் திட்டியவாறு தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

“அச்சச்சோ! வடைபோச்சே” என்று செல்லும் மாமியார் மருமகளைப் பார்த்து ஆனந்தன் உச்சுக்கொட்டினார்.

“இப்படி ஒருத்தன் இங்க இருக்கேன்றதை கணக்குல வச்சக்கலையே மாமா. நான் யாரோவா” என்று வருத்தப்பட,

“கோவம் வருதா மருமகனே” என்று அவனின் மனநிலை புரிய கேட்டார் ஆனந்தன்.

“இல்ல மாமா. கோவப்பட்டா நஷ்டம் எனக்குதான். அவளைப் பொறுத்தவரை நான் எப்பவும் அகிம்சாவாதிதான். பொறுமைக்கே டஃப் கொடுக்குறவன்” என்று புன்னகைக்க,

“அப்புறமென்ன நிம்மதியா போய் படுத்துத் தூங்கு” என்றார்.

“வேற வழி” என்று எழுந்தவன், “அண்ணியைப் பார்க்கப் போனீங்களா மாமா?” என கேட்டான்.

“கல்யாண அலைச்சல்ல நாலுநாளா போகலை. நாளைக்குப் போயிட்டு வரணும். அநேகமா சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புவாங்க நினைக்குறேன்.”

“நல்லது மாமா. மறக்காம ப்ரசருக்கு மாத்திரை போட்டுட்டு படுங்க” என்று அனுப்பி வைத்துத் தன்னறைக்கு வந்தவன், “ஹ்ம் கல்யாணமானாலும் பிரம்மச்சாரின்னு தெரிந்ததுதான். இருந்தாலும், இந்த ரூம்லயாவது நீ இருந்திருந்தா, நல்லா இருந்திருக்கும்னு நினைக்குதே இந்த மனது. ஐ மிஸ் யூ” என காற்றிடம் பறக்கும் முத்தத்தை இட,

கன்னத்தில் ஏதோ ஒட்டியது போல் தோன்ற வேகமாகக் கைவைத்துத் துடைத்துவிட்டாள் அனுரதி.

மாமியாரும் மருமகளும் ஒரே கட்டிலில் எந்தவித வாக்குவாதமும் செய்யாது உறங்கிவிட, தன் வீடு போல் மிக நிம்மதியான உறக்கம் பாவைக்கு.

அவளின் சிந்தனையில் கூட கணவன் இல்லாது போக, அவனின் அனைத்தும் அவளாகிப் போனாள்.

மறுநாள் மறுவீட்டுக்கு அழைக்க வந்த தாய், தம்பியை தானே வரவேற்று உபசரிக்க சாரதாவிற்கு அவ்வளவு ஆச்சர்யம். அதைவிட மகிழ்ச்சி என்பதே சரி. இன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் மறுநாள் வரச்சொல்ல, “ஏன் அத்தை? இன்னைக்கே வந்தால் சாப்பாடு தரமாட்டீங்களா?” என கேட்டான்.

“இப்பவே வந்தால் கூட சந்தோஷமா அழைச்சிட்டுப் போவேன். ஆனா, திங்கள்கிழமைதான் திருப்பி அனுப்புவேன்” என்றார்.

“அப்புறமென்ன மிஸஸ்.அறிவழகன் கிளம்பலாமா? அம்மா நீங்களும் வாங்க. மாமா அண்ணியைப் பார்க்கப் போறதா சொன்னதால, இன்னொரு டைம் அவங்களைக் கூட்டிட்டுப் போகலாம்” என்றான்.

“இல்ல அறிவா. நீங்க போயிட்டு வாங்க. நான் ஆஃபீஸ் போகணும்” என்கையில், தாயின் சூழ்நிலை உணர்ந்ததால் வேறு வழியில்லாமல் சம்மதித்துக் கிளம்பி மறுவீடு செல்ல, அங்கு அனைத்தும் தடபுடல்தான்.

மறுவீட்டில் மருமகன் மட்டுமே பிரதானமாகிப் போக, உள்ளுக்குள் கடுப்பாகினாலும், ‘என்னவோ செய்யுங்க’ என்று வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தாள் அனுரதி.

பகலெல்லாம் பெரிதாகத் தெரியாமல் போக, இரவானதும்தான் அவள் மனம் துணுக்குற்றது. ஏனெனில் இருப்பது இரண்டு அறைகள். மாமியார் வீட்டில் பெரிதாகத் தெரியாதது இங்கே பூதாகரமாகத் தெரிந்தது. தாயிடம் சொல்லலாம் என்றால், இவள் நிலை புரிந்தாலும், ‘தாங்கள் தனித்தனியாக இருப்பதைப் பார்த்தால் அவர் வருத்தம் கூடுமல்லவா? தம்பியும் வேலைக்குச் சென்றுவிட்டால், தனியாக இருக்கும் தருணங்களில் தன்னைப் பற்றி யோசித்து உடம்பிற்கு எதுவும் ஆகிவிட்டால்?’ தன்னுடனேயே இருப்பதற்குக் கேட்டதற்கும், ‘மகனுக்குத் திருமணம் முடியும் வரை இங்குதான்’ என்றுவிட்டார் சாரதா. அவளறியாமல் அறிவழகன் கேட்டதற்கும் இதே பதில்தான் கொடுத்தார். தம்பி இருப்பதால் அவளாலும் அதற்குமேல் பேச முடியவில்லை.

மாமியாரிடம் கணவனுடன் ஒரே அறையில் இருக்கமாட்டேன் என்று அடித்துப் பேசியவளால், தாயிடம் பேச நா எழவில்லை. முகத்தில் அத்தனை குழப்பத்துடன் இருந்த மனைவியின் கலக்கத்தை மனம் உணர்த்தியதோ!

“என்ன மிஸஸ்.அறிவழகன் சோர்வா இருக்கீங்க? உடல் சோர்வா? இல்ல மனச் சோர்வா?”

“எதுவாயிருந்தா உங்களுக்கென்ன? கடுப்பைக் கிளப்பாம கொஞ்ச நேரம் அமைதியாயிருங்க” என்று முகத்தைக் காட்ட,

அதையெல்லாம் பொருட்படுத்தாது, “உடல் சோர்வுன்னா டாக்டர்கிட்டப் போகலாம். மனச் சோர்வுன்னு சொன்னா, முடிந்தளவு நான் தீர்த்து வைக்குறேன்” என்றான்.

“உங்களை... ப்ச்... போங்க. போய் வேற வேலையிருந்தா பாருங்க. உடல் சோர்வு, மனச் சோர்வுன்னுட்டு” என்று முனகினாள்.

இரவு உணவு உண்ணுகையில், “அத்தை அர்ஜென்டா வெளிய ஒரு வேலையிருக்கு. நைட் வர லேட்டாகிரும் போல. நீங்க அனுரதி கூட படுத்துக்கோங்க. அவள் தனியா இருக்க வேண்டாம். அரவிந்த் நீயும் பார்த்துக்கோ” என்றான் மச்சினனையும் விடாது.

“கண்டிப்பா போயே ஆகணுமா மருமகனே?” என்று சாரதா கேட்க, நொடி நேரத்தில் மனைவியைப் பார்த்து விலகிய விழிகள் சிறு புன்னகையுடன், “கம்பெனியில் எதோ பிரச்சனை போல அத்தை. நான் போனால்தான் சரியாயிருக்கும். பிரச்சனை பெருசானா போலீஸ் அது இதுன்னு அலையணும்” என்றான்.

“அப்படியென்ன பிரச்சனை? அப்படியென்றாலும் கம்பெனி ஓனர் போல் பில்டப் கொடுக்கிறான்” என்று சிறு குரலில் கிண்டலாக கணவனைப் பார்க்க, பளிச்சென்று அவளைக் கண்டு சிரித்தவன், அவள் தன்னைக் கிண்டல் செய்கிறாள், அவளுக்குத் தன்னுடையதுதான் அந்தக் கம்பெனி என தெரியும் என்றே நினைத்தான். அதனாலயே அவளுக்குப் பதில் சொல்லும் விதம், “மேனேஜரும் மேனேஜ் பண்ணலாம்” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறினான்.

“ம்க்கும்...” என்றவள் தம்பியின் ஆர்வப்பார்வை கண்டு பற்களை ஈயென காட்டி, “மேனேஜருக்கு அதைவிடப் பெரிய வேலை என்ன இருக்கு மேனேஜர் சார். லட்சக்கணக்குல வாங்குற சம்பளத்துக்கு வேலையும் செய்யணும்ல” என்றாள்.

“மிஸஸ்.அறிவழகன் அறிவாதான் பேசுறீங்க. உங்க மனச்சோர்வுக்கு என்னால் முடிஞ்சது” என்கையில் அவள் புரியாது பார்க்க, “ஐ மீன் உங்க மனசைச் சோர்வா வைக்காம, அதுல என்னை மட்டும் நினைங்க சொல்றேன்” என்று சிரித்தான்.

அவ்வார்த்தைதனில் கோவம் எழ, “என்ன?” என்று அதட்டலிட்டாள்.

வேகமாக மாமியார் மச்சினனைப் பார்த்தவன் அங்கே அவர்கள் இல்லையென்றதும், “அடிக்கடி எமோஷனல் ஆகாதீங்க மிஸஸ்.அறிவழகன். குழந்தை என்னை மாதிரி சாந்தமா இல்லாம, உங்களை மாதிரி டென்சன் பார்ட்டியா வந்திரப்போகுது. இரண்டு பேரையும் வச்சிட்டு நான் எப்படி சமாளிக்கிறது?” என்றான் அப்பாவியாய்.

“உன்னை எவன் சமாளிக்கச் சொன்னது? எங்களை நாங்க பார்த்துப்போம். நீ போயா” என்று உணவில் கவனத்தைத் திருப்பிவிட்டாள். பதிலுக்குப் பதில் பேசுவதால் சில நேரம் நன்மையும் விளையுமோ!

“போயா! சிறப்பு” என்று சொன்னவன் மனதில் முட்டி நின்ற இறுக்கங்களில் சில விடுபட சற்றே ஆசுவாசம் அவனுள். அதில் புன்னகை இன்னும் விரிய அவள் மீதான ரசனையும் அதிகரித்ததோ!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
மறுநாள் காலையில் குளித்து வேறு உடையில் மாமியார் வீடு வந்தவனிடம், “ஆஃபீஸ்ல ட்ரெஸ் தர்றாங்களா என்ன?” என்றாள் கேலியாக.

முதல் நாள் இப்படி ஒருத்தனைத் திருமணம் செய்திருக்கிறோம் என்பதை கிஞ்சித்தும் உணராமல், அவனை மனிதனாகவே மதிக்காது மாமியாருடன் சென்றவளா இவள் என்றிருந்தது அவளின் கேள்வி. அவளின் இம்மாற்றத்தினால் அவன் அகத்தினுள் குளிர்ச்சி.

பின், “என்ன பண்ணுறது மிஸஸ்.அறிவழகன்? லட்சக்கணக்குல சம்பளம் தர்ற முதலாளி ஒரு செட் ட்ரெஸ் தரலன்னா ஸ்ட்ரைக் பண்ணுவேன்னு மிரட்டினேன். மனுசன் பயத்துல உடனே ரெடி பண்ணிக் கொடுத்துட்டார்” என்றான் சிரிக்காமல்.

“நாங்களும் சத்தியமா நம்பிட்டோம்” என்றாள் பதிலுக்கு.

“தட் இஸ் மிஸஸ்.அறிவழகன். நான் கொஞ்ச நேரம் படுத்துக்குறேன்” என்று முன்தினம் உபயோகித்த அறைக்குள் சென்று படுத்துக்கொண்டான்.

மதிய உணவு முடித்ததும், ‘அருகே எங்கேயாவது போய் வரலாமா?’ என்று அறிவழகன் கேட்டதும் அல்லாமல், தான் வரவில்லை என்ற சாரதாவையும் அழைத்துச் சென்றான். முதன் முதலில் மனைவியுடன் செல்வதால் அருகில் இருந்த அம்மன் கோவில் சென்று வேண்டிக்கொண்டு, அடுத்து அந்த பெரிய வணிக வளாகத்திற்கு அழைத்துச் சென்றான்.

“ஒர்க்கிங் டேன்றதால கூட்டம் கொஞ்சம் கம்மியாயிருக்குல்ல” என்று அறிவழகனிடம் சொன்ன அரவிந்தை முறைத்து, “மாமா, மச்சான்னு எதாவது சொல்லிக் கூப்பிடுடா. அதை விட்டுட்டு மூணாவது மனுசன்கிட்ட பேசுற மாதிரி பேசுற” என்றான் சற்றே அதட்டலாக.

“சா...சாரி மச்சான். அ...அது ஏன்னு தெரியலை. மரியாதைன்னு வச்சிக்கோங்களேன்” என்றான் சங்கோஜமாக.

“அது மனசுல இருந்தால் போதும். நீ சாதாரணமா பேசு. என் பிள்ளைகளுக்கு ஒரேயொரு தாய்மாமன் நீதான். எல்லாத்திலும் நீதான் முன்ன நிற்கணும். நீ என்னடான்னா மரியாதைன்ற பேர்ல வெட்கப்பட்டு ஓடி ஒளியுற. ஃப்ரீயா இருக்கணும் மேன்” என்று தட்டிக்கொடுத்தான்.

“சரிங்க மச்சான்” என்றான் அரவிந்த்.

“உன் அக்காவுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு? ஃபர்ஸ்ட் கிஃப்ட்லயே இம்ப்ரஸ் ஆகணும்.”

“வாங்குறது பிரச்சனையில்லை. அக்கா இம்ப்ரஸ் ஆகணுமே மச்சான். நிறைய டிராஜடி தாண்டி வந்ததால அவ்வளவு சீக்கிரம் இம்ப்ரஸ் ஆகமாட்டாங்க.”

“அதெல்லாம் என் பிரச்சனை. உன் அக்காவே தினமும் அதை ரசிக்கிற மாதிரி செய்யலாம்” என்றான்.

“ஓவர் கான்பிடென்ஸ்தான். ம்... பறவைகள் பலவிதம்! மீன்கள் விதவிதம்! வீட்டுல வைக்குற குருவிக்கூடு புதுவிதம்!” என்றான் சிரிப்புடன்.

“மற்ற இரண்டும் ஓகே. இந்தக் குருவிக்கூடுதான்... ம்... சரி விடு பார்த்துக்கலாம்” என்று அவனுக்குப் பிடித்ததைக் கேட்டு வாங்கிக் கொடுத்து. மாமியாருக்கும் புடவை எடுத்துக் கொடுக்க, மறுத்தவரிடம் மருமகன் மகன்போல் என்ற வசனம் பேசி வாங்க வைத்துவிட்டான்.

மெல்ல மனைவியின் அருகில் வந்தவன், “என்ன மிஸஸ்.அறிவழகன் என்ன பிடிக்கும்னு சொல்லுங்க வாங்கித் தர்றேன்” என்று கேட்க,

அவனை விட்டு விலகி வந்தவள், “லட்சக்கணக்குல சம்பாதிச்சுமே ஒரு நைட் தங்கினதுக்கு, உங்க முதலாளியை துணி எடுத்துத் தரச் சொன்ன ஆள்தான சார் நீங்க. அப்பேர்பட்ட கஞ்சப்பிசினாறி எனக்குப் பிடிக்குறதை வாங்கித் தர்றீங்களா?”

“ஓய்! அவரும் நீயும் ஒண்ணா? யூ மை ஒய்ஃப். பெட்டர் ஹாஃப். என்னில் சரிபாதி. உனக்கு இல்லாததா? பஞ்ச பூதங்களைக் கேட்டாலும் வாங்கித் தருவேன்” என்று வசனம் பேசினான்.

“ஓ... இது நல்லாயிருக்கே. அப்ப அதையே வாங்கிக்கொடுங்க மேனேஜர் சார். எல்லாவற்றையும் ஒண்ணா பார்க்கிற வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்” என்றாள் புருவம் உயர்த்தி.

“நிஜமாதான் சொல்றீங்களா மிஸஸ்.அறிவழகன்?”

“பொய் ஏன் சொல்லணும்?” என்றாள் மிடுக்கான பார்வையோடு.

“கூடிய சீக்கிரம் நிறைவேற்றப்படும்” என்றான்.

“வானத்தை எப்படி சார் கீழ கொண்டு வருவீங்க? அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்ற மாதிரி தண்ணிக்குள்ள நிலாவைக் காண்பித்து சரி கட்டுவீங்களோ? அதுக்குப் பெயர் சீட்டிங்” என்றாள் கிண்டலாக.

“லட்சக்கணக்குல சம்பாதிச்ச எல்லாத்தையும் செலவழித்தாவது ஐம்பூதங்களையும் ஒரே நாள்ல காட்டுறேன்” என்றான் சபதம் போல்.

“ம்... பார்க்கலாம் பார்க்கலாம்” என்று திரும்பிக்கொண்டாள்.

அடுத்து கடற்கரை சென்று உப்புக்காற்றை வாங்கி மனது நிறைவாக உணர, உணவகம் சென்று இரவு உணவை முடித்து வீடு வந்த அரைமணி நேரத்திற்கெல்லாம், வராத போனை எடுத்துப் பேசி முந்தைய தின காரணத்தையே சொல்லிக் கிளம்பிவிட்டான்.

“என்ன அனுமா இவ்வளவு நேரம் எந்த போனும் வரலை. இப்ப எப்படி? அவர்கிட்ட நீ பேசுறதில்லையா? பழையதை நினைச்சி இவரைத் தள்ளி வைக்குறியா? அதனால்தான் வீடு தங்காம போறாரா?” என கேள்விமேல் கேள்வி கேட்டார் சாரதா.

“அம்மா அது” என்று தயங்க,

“இங்க பாரு அனுமா? ஒருத்தன் தப்புன்னா எல்லாருமே தப்பாகிரமாட்டாங்க. பொண்டாட்டியைத் தாங்குற எத்தனை பேரைப் பார்த்திருக்கோம். பெண்கள் முன்ன மாதிரி இல்லைடா அனுமா. இங்க நிறைய மறுமணங்கள் நடந்துட்டுதான் இருக்கு. அவங்கவங்க வாழ்க்கையை நேர்மையா கொண்டு போறாங்க. நீ முறுக்கிக்கிறதால யாருக்கு நஷ்டம் சொல்லு? உனக்காக என்று பார்த்துப் பார்த்துச் செய்யும் குடும்பம் கிடைக்குறது வரம்டா. உடனே அவரை ஏத்துக்கிட்டு குடும்பம் நடத்துன்னு சொல்லலை. அவரைப் புரிந்து உன் வாழ்க்கையை வாழச் சொல்றேன்” என்று மகளுக்கு வாழ்க்கைக்கான புரிதலைச் சொல்லிக்கொடுத்தார்.

“புரியுதும்மா” என்று சொன்னாலும் தாய் சொன்னாற்போல் ‘தனக்காகதான் செல்கிறானோ?’ என தோன்ற ஆரம்பித்த நிமிடம், ‘சேச்சே.. ஆணினம் அந்தளவு நல்லது கிடையாது. நிஜமாகவே வேலை இருந்திருக்கும். இல்ல இப்படிச் செய்து சிம்பதி கிரியேட் பண்ணி என்னை நெருங்க முயற்சிப்பான். இடியட்’ என்று திட்டியபடியே தாயுடன் படுத்துக்கொண்டாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top