• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 23, 2024
Messages
22
கதைப்போமா 3





காலையிலேயே அபிமன்யுவுக்கான வகுப்புகள் எல்லாம் முடிந்து விட. மதியம் அவனுக்கு வகுப்புகள் எப்பொழுதுமே இருக்காது. ஆனால் நான்கு மணிவரை கல்லூரியிலிருந்து விட்டுத் தான் செல்ல வேண்டும். நான்கு மணிக்கு கல்லூரியிலிருந்து கிளம்பினான்.


அவள் வேலை செய்யும் இடத்திற்கு பத்து நிமிடத்தில் வந்து விட்டிருந்தான். ஆராத்யாவின் அலுவலகம் முடியும் நேரத்திற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்தது. அருகில் இருந்த காபி ஷாப்பில் சென்று அமர்ந்து விட்டான். பொறுமையாக ஆற அமரக் காபி குடித்துவிட்டு. அலைபேசியில் ஒரு கண்ணும் அலுவலக வாசலில் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தான். சிலர் அலுவலகம் விட்டு வருவது தெரிந்து வெளியில் வந்து தன் வாகனத்தின் மீது சாய்ந்தபடி நின்று கொண்டான். மாலை பொழுது என்றாலும் சூரியன் இன்னும் இறங்காமல் அதன் உச்சக்கதிர்களை அவன்மீது செலுத்திக் கொண்டிருக்க. வாகனம் ஓட்டும்போது பயன்படுத்திய கூலர்சை எடுத்துக் கண்களுக்கு அணிவித்துக் கொண்டான்.


தளர்ந்த நடையுடன் யாரோ ஒரு பெண்ணுடன் அவள் நடந்து வருவது தெரிந்தது. நேற்று இருந்ததைவிடவும் சோர்வாகத் தெரிந்தாள். முகத்தில் எந்தவித அலங்காரமும் இல்லை. முதல் நாள் இருந்தது போலவே தான் அவனுக்குத் தோன்றினாள். அவள் அருகில் நடந்து வந்த பெண் தான் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் வாடி இருப்பதே நேற்றைய விஷயத்தின் கசடுகள் என்று புரிந்தது.


கூலர்சை கழட்டியவன். அவளை நோக்கி நடந்தான். மேலும் அவளை வாட்ட விரும்பாமல், கட்டிடத்தின் நிழலிலேயே அவளைப் பிடித்து விட்டான். “ஹலோ சார்” இப்படி செங்குத்தா வந்து முன்னாடி நின்னா நாங்க எப்படி போகிறது?” அருகில் இருந்த பெண் கூறவும் தான் அவள் நிமிர்த்து பார்த்தாள். ஆனால் உடனே அவளுக்கு அடையாளம் தெரியவில்லை போல, புருவத்தைச் சுருக்கினாள்.


பார்த்தால் தானே, மாப்பிள்ளையை அவளுக்குத் தெரிவதற்கு??. முந்தினம் அவள் அவனைப் பார்க்கவே இல்லையே??. அதற்குள் ஏதேதோ நடந்து விட்டது புகைப்படத்தைப் பார்ப்பதற்கு கொடுத்திருந்தான் தான். அதில் கிளீன் ஷேவில் இருந்தான். ஆனால் இப்பொழுது தாடியில் இருந்தான். ஆழ்ந்து கவனித்திருந்தாள் கண்டிப்பாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அவள் கண்டுபிடிக்கவில்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. அவள் தன்னை சரியாகவே பார்க்கவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.


“என்னங்க நேத்து உங்களைப் பொண்ணு பார்க்க வந்தேனே??, அதுக்குள்ள மறந்துட்டீங்களா?” என்று கூறியவுடன் தான் அவளுக்குப் புரிந்தது.


அவள் அதிர்ச்சியை அப்பட்டமாகக் காட்ட, அவளுக்குப் பதிலாக அவள் அருகில் இருந்த தோழி பேசினாள். பேசினால் என்பதைவிட அவனை வடைச் சட்டி இல்லாமலேயே வறுத்து எடுத்தால் என்று சொல்லலாம்.


“வாங்க சார் வாங்க. நீங்கத் தான் அந்த நல்லவரா??. நான் தெரியாம தான் கேட்கிறேன்?? ஆக்சிடென்ட்ல குரல் போனது அவளோட தப்பா??. அவள் எவ்வளவு பெரிய மனசு பண்ணி உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா. நீங்க என்னன்னா அவளோட சின்ன குறையைச் சுட்டிக்காட்டி அவளை அவமானப்படுத்தி இருக்கீங்க” ராதிகா என்ற அந்தப் பெண் பேசிக் கொண்டிருக்க. ஆராத்யா அவள் கரத்தைப் பிடித்துத் தலையை ஆட்டி வேண்டாம் என்பது போலக் கூறிக் கொண்டிருந்தாள்.


அவன் கைகளைக் கட்டிக்கொண்டு அவளைத் தான் பார்த்து இருந்தான்.


“நீ சும்மா இருடி, இவங்க எத்தனை கல்யாண வேணாலும் பண்ணிப்பாங்கலாம். அதுவும் இவங்களுக்கு வெர்ஜின் பொண்ணு தான் வேணுமாம். ஒரு சின்னக் குறை அதுக்கு போய் இவ்ளோ பெரிய ரியாக்ஷன். அவளுக்கு வாய் பேச வந்தாலே அவள் அமைதியா தான் இருப்பாள்.. அமைதியா தான இருக்குறானு கடவுள் அவளை இன்னும் அமைதியாகிட்டாரு. அவள் கிட்ட இருக்க எவ்வளவோ நல்ல குணத்த பாக்காம. இந்த ஒரு குறை, அதுவும் சின்னக் குறைய பிடிச்சுக்கிட்டு தொங்குறீங்களே??. கல்யாணம் ஆனவனுங்களை கேட்டுப் பாருங்க? அவனவன் பொண்டாட்டி ஊமையாக மாட்டாளான்னு ஏங்கிக்கிட்டு இருக்கிறாங்க. இத ஒரு பெரிய விஷயமா பிடிச்சுகிட்டு வீடு தேடி வந்து அவமானப்படுத்தி இருக்கீங்க. பிடிக்கலன்னா எதுக்கு பொண்ணு பார்க்க வரணும்??, எதுக்கு அவளை ஹர்ட் பண்ற மாதிரி பேசணும்??”, ராதிகா படபடத்துக் கொண்டே இருக்க. அமைதியாக அவளின் அந்தக் கொந்தளிப்புகளை வாங்கிக் கொண்டு இருந்தான் அபிமன்யு.


அவளால் பேச முடியவில்லை என்றாலும், கஷ்டப்பட்டு தன் தோழியை அடக்க முற்பட்டுக் கொண்டிருந்தாள் ஆராத்யா. ஆனால் அவள் அடங்கினால்தானே??. இவனுடைய அந்த மௌனத்திற்கு காரணமும் அந்தப் பெண் ஆராத்யாவின் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு என்று உணர்ந்ததால் தான். அவர்கள் வீட்டிலும் தவறில்லை தங்கள் வீட்டிலும் தவறில்லை. ஆனால் தாய் பேசியது மிகப்பெரிய தவறு தான். அதுவும் அவளுடைய குறையைச் சுட்டிக்காட்டி பேசியது அதிகப்படியான விஷயம் என்று அவனுக்கும் தோன்றியது. அதற்குக் கண்டிப்பாக அவன் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும்.


அவனுக்கு உண்மையில் அந்த நொடியில் ஒன்று தோன்றியது. இப்படி பேசுவதற்கு பேசாமல் இருப்பது எவ்வளவோ மேல் என்று.


“எக்ஸ்கியூஸ் மி சிஸ்டர் உண்மையிலேயே உங்கள பாராட்டுறேன். உங்கள் தோழிக்காக நீங்க என்கிட்ட இவ்வளவு சண்டை போடுறீங்க. எனக்குக் கோவம் வரல. அவங்க மேல நீங்க வச்சிருக்க அன்பு தான் தெரியுது. ஆனா நான் அவங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். நீங்க அலோ பண்ணீங்கன்னா பேசுறேன்”


அப்பொழுதும் பொறுமையை கடைப்பிடித்தபடி தான் பேசினான் அபிமன்யு.


“என்னத்த தனியா பேசப் போறீங்க??, நேத்து அத்தனை பேர் எதிர்க்க அவமானப்படுத்தினது பத்தாம. இப்ப வந்து இன்னும் என்ன பேசப் போறீங்க?, அவங்க மேல எந்தத் தப்பும் இல்ல அவங்க தரகர் கிட்ட சொல்லித்தான் வச்சிருந்தாங்க. தரகர் சொல்லலையா, இல்ல உங்க வீட்ல இருக்கவங்களுக்கு காது கேட்கலையான்னு தெரியல. நான் தெரியாம தான் கேட்கிறேன்?? எத்தனை நாளைக்கு சார் இதை மறைக்க முடியும்??. இதென்ன உடம்புக்குள்ள இருக்குற வியாதியா மறைக்கிறதுக்கு??. ஒரு போன் கால், ஒரு போன் கால் பண்ணாலே அவளுக்கு வாய் பேச முடியாதது தெரிஞ்சிடும். அப்படி இருக்கும்போது எதுக்காக அவங்க பொய் சொல்லப் போறாங்க??. என்று அவள் இன்னும் படபடுத்துக் கொண்டிருக்க. அவனுக்கு அவள் கூறிய ஒரு வார்த்தையில் அவன் முதல் திருமணம் அதன் கசடுகள் ஞாபகத்தில் வந்தது.


அவள் வாயை கைக்கொண்டு பொத்தினாள் ஆராத்யா. ராதிகா அப்பொழுதும் அவளுடைய கையைத் தட்டி விட்டுவிட்டு படபடத்துக் கொண்டு இருக்க. அவள் முன்னாள் வந்து நின்றாள். உதட்டில் கையை வைத்துக் கண்களால் உருட்டி மிரட்டி எதையோ கூறினாள். அந்தப் பெண் அமைதியாகி முகத்தைத் திருப்பிக் கொள்ள. இவன் புறம் திரும்பியவள்.


மன்னிப்பு கேட்கும் விதமாய் முகத்தை மட்டும் அல்ல கைகளையும் குவித்து உதட்டை அசைத்து ‘சாரி’ என்று கேட்டாள்.


“நான் தாங்க உங்ககிட்ட சாரி கேட்கணும். நேத்து எதிர்பாக்காம என்னென்னமோ நடந்துருச்சு. உண்மையிலேயே எங்களுக்கு அந்த விஷயம் தெரியாது. தெரிஞ்சிருந்தா மென்டலா நான் கொஞ்சம் ப்ரிபெர்டா இருந்திருப்பேன். திடீர்னு எல்லாம் நடந்ததுனால என்னால எந்த ரியாக்ஷனும் கொடுக்க முடியல. பட் நான் அங்க ஏதாவது பேசி இருந்திருக்கணும். ஆனா அங்க இருந்த சூழ்நிலையை அமைதியாக்குறதுக்கு எனக்குப் போதும் போதும்னு ஆயிடுச்சு. உங்க அண்ணனும் கோவமா பேசினாரு. அதுல தப்பு இல்ல. எனக்கு ஒரு தங்கை இருந்து அவளை இப்படி ஒருத்தவங்க, அதுவும் வீடு தேடி வந்து கோவமா பேசினா, நானும் அவங்களுக்காகக் குரல் கொடுத்து இருப்பேன். ஆனா உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றான்.
 
New member
Joined
Dec 23, 2024
Messages
22
“என்ன பேசப் போறீங்க?” என்று அவள் செய்கையால் கைகளை ஆட்டிக் கேட்டாள்

அது அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை, அவன் திரும்பித் தோழி ராதிகாவை பார்த்தான்.


“இப்ப மட்டும் எதுக்கு என்ன பாக்குறீங்க??, நான் எதையும் சொல்லமாட்டேன்” என்றாள் அவள்.

அவனுடைய பாவனையே, அவனுக்குப் புரியவில்லை என்பதை அவளுக்குக் காட்டிவிட. கைகளை உயர்த்தி காட்டியவள். தன் ஹாண்ட் பேக்கிலிருந்து ஒரு பேப்பரையும் பென்னையும் எடுத்து அதை எழுதி அவனிடம் கொடுத்தாள்.

“சாரி கேக்குறதுக்கு தான் வந்தேன். இருந்தாலும் சில விஷயங்கள் பேசணும். இப்படி பொது இடத்தில் பேச முடியாது. அங்க ஒரு காபி ஷாப் இருக்கு. அங்க உக்காந்து பேசலாமா?” என்று கேட்டான்.

அவள் வேண்டாம் என்பது போலத் தலையை ஆட்டினாள். “கவலைப்படாதீங்க உங்கள ஹர்ட் பண்ற மாதிரி நான் எதையும் பேசமாட்டேன். ஒரு டென் மினிட்ஸ் அவ்வளவுதான்” என்று அவன் மெல்லிய குரலில் பேசினான்.

“இங்கேயே பேசுங்க” என்பது போல அவள் செய்கை செய்தாள்.

“போறவங்க வரவங்க எல்லாம் நம்மள பாக்குறாங்க” என்று கூறினான் அபிமன்யு.

அப்பொழுது சரியாக அவளுடைய அலுவலகத்தில் வேலை செய்பவர் ஒருவர் “ஆராத்யா” என்று அழைக்க. இருவருமே அவரை திரும்பிப் பார்த்தனர். இல்லை மூவருமே அவரை திரும்பிப் பார்த்தனர்.


“ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டார். அவள் இல்லை என்று தலை ஆட்ட. ராதிகா ஆமாம் என்று தலையாட்டினாள்.

இரு பெண்களின் வெவ்வேறு பாஷையில், புரியாமல் பார்த்தவர், அவர்களை நெருங்கினார்.

“சார் பர்சனல் விஷயமா பேச வந்திருக்கேன். நான் நேத்து அவங்கள பொண்ணு பாத்துட்டு போனவன் தான்” என்று பொறுமையாகப் பேசினான் அபிமன்யு .

அவர் ஆராத்யாவை பார்க்க. அவள் ஆமாம் என்று தலையாட்டினாள். பிரச்சனை இல்லை என்பது போலச் செய்கை செய்தாள். அவளுடன் பழகியதால் அவளுடைய செயல்கள் புரிந்தது போல. அவர் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டார். பிறகு தன் தோழியிடம் பேசிவிட்டு வருவதாகக் கூறியவள். ஒதுக்கு புறமாக இருந்த மரத்தடிக்கு சென்று நின்றாள். அங்குத் தான் அவன் பைக்கையும் நிறுத்தி இருந்தான்.

“என்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு பெரிய மனசோட ஒத்துக்கிட்டீங்க. இப்ப என்னை நம்பி ஒரு காபி ஷாபுக்கு வர மாட்டேங்கறீங்க” அவன் சலுகையாகக் கூறினான்.

அவள் ஏதோ செய்கை செய்ய. அது அவனுக்குப் புரியாமல் போக. பேப்பரில் அவள் மீண்டும் எழுதிக் காட்டினாள்.

“அப்படி இல்லங்க. நான் யாரோடவும் அப்படி போய் உட்கார்ந்து சாப்பிடுவதில்லை. கேண்டின்கு கூட ராதிகா கூடத் தான் போவேன். ஈவினிங்ல அது கூடக் கிடையாது. நாம ரெண்டு பேரும் பேசினால் அது தேவை இல்லாத வதந்திகளைப் பரப்பும். இங்க சிலபேர் என் மேல ஏதாவது பிளாக் மார்க் வராதான்னு பார்த்துக்கிட்டு இருக்காங்க” என்று கூறினாள். அவள் கூறுவது அவனுக்குப் புரிய, அவளிடமிருந்து சற்று விலகி அவனுடைய பைக்கின் மீது சென்று சாய்ந்து கொண்டான். இப்பொழுது இருவருக்கும் இடையே சற்று இடைவெளி இருந்தது. பார்வையால் அந்த இடைவெளியைச் சுட்டிக்காட்டி ‘இந்தத் தூரம் போதுமா? என்று பார்வையாலேயே கேட்டான். அவளுக்கும் அது புரிந்து தொலைய. நெஞ்சில் கையை வைத்து அழுத்தியவள் பிறகு, அதே வலக் கையை உயர்த்தி ஓகே என்பது போலக் காட்டினாள். அவன் இதழ்களில் லேசான புன்னகை.

“எனக்கு இது செகண்ட் மேரேஜ். ஆனா உங்களுக்கு ஃபர்ஸ்ட் மேரேஜ். அப்படி இருந்தும் நீங்க இந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?? பிகாஸ் உங்க வீட்ல இந்த மேரேஜ்க்கு இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கும்போது நீங்க ஒத்துக்கிட்டீங்கனா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கணும் இல்லையா?” என்று கேட்டான். அவள் அவசரமாக இல்லை என்று தலையாட்டினாள்.


எதையோ கூறினாள் அவனுக்குப் புரியவில்லை. மீண்டும் பேப்பரை எடுத்து எழுதினாள். அவள் பொறுமையாக எழுதட்டும் என்று அமைதி காத்தான். அவளே முன்வந்து அவனிடம் நீட்டினாள்.


“நீங்க உங்க போட்டோவ கொடுக்கும்போது. உங்க பையனோட கொடுத்து இருந்தீங்க. தாய் இல்லாத அந்த பிள்ளையைப் பார்க்கும் போது. எனக்கு அவனுக்குத் தாயா இருக்கணும்னு தோணுச்சு. ஆனா அது தப்புன்னு உங்க அம்மா சொன்னதுக்கப்புறம் தான் புரிஞ்சது. உங்க மகனுக்கு மட்டும் இல்ல. நான் யாருக்குமே தாயாக இருக்க தகுதி இல்லாதவள். அதனால அண்ணன் கிட்ட சொல்லி எனக்கு இனிமே திருமணம் வேணாம்னு சொல்லிட்டேன்” என்று எழுதி இருந்தாள்.

அந்த வார்த்தைகள் அவனை வதைத்தது. தாயின் வார்த்தைகளால் அவள் மிகவும் காயப்பட்டிருக்கிறாள் என்று புரிந்தது.
 
New member
Joined
May 9, 2025
Messages
19
Abi teach a lesson to your mom how to behave in other places before you take her somewhere. This poo girl didn’t think about her life but she felt bad for your son.
 
Top