• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 23, 2024
Messages
22
கதைப்போமா 2

அந்தப் பெண்ணையே தான் பார்த்துக்கொண்டிருந்தான் அபிமன்யு.

அங்கிருந்த அசாதாரணமான சூழ்நிலையைக் கலைத்தது அம்பிகா தான். அபிமன்யுவின் தாயார்.

“என்னங்க விளையாடுறீங்களா?? ஆயிரம் பொய்ய சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னுவாங்க. நீங்க என்னன்னா இப்படி முழு பூசணிக்காவ சோத்துல மறைச்சிட்டீங்களே? “ என்றார்.

“அப்படியெல்லாம் இல்லங்க. நாங்க தரகர் கிட்ட எல்லாமே சொல்லித்தான் வைத்திருந்தோம். அவருக்குத் தெரியும்” என்றார் விசாலாட்சி தயங்கிய குரலில்.

“அப்ப நாங்க பொய் சொல்றோம்னு சொல்றீங்களா?, உண்மைய மறைக்கணும்னு நினைச்சு இருக்கீங்க” என்றார் அம்பிகா.

“எப்படிங்க இவ்வளவு பெரிய உண்மைய மறைக்க முடியும்?” பரிதவிப்பாகக் கேட்டார் விசாலாட்சி.

“நல்லா இருக்கு உங்க கதை. பொண்ணு அழகா இருக்கிறாள் தான். அதுக்காக ஒரு ஊமையை கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா?” என்று அவர் பேசிய நொடி. அவள் கண்கள் கலங்கிவிட்டது.

அபிமன்யு, “அம்மா” என்று ஓங்கி குரல் கொடுத்தான்.

“நீ அமைதியா இருடா இப்படித்தான் ஒரு சீக்காளியை உன் தலையில கட்டிவச்சு அல்பாயிசுல போய்ச் சேர்ந்துட்டா. இப்ப இது வேறயா?? உனக்குன்னு வந்து வாய்கிறதெல்லாம் இப்படித்தான் இருக்கு. குழந்தைய பாத்துக்கணும்னு தான் இரண்டாவது கல்யாணம் பண்றோம். ஊமையை கட்டி வச்சா எப்படி அவனுக்குச் சொல்லிக் கொடுப்பாள், பாத்துப்பாள்?”, என்று அவர் பாட்டிற்கு படபடுத்துக் கொண்டிருக்க.

அந்தச் சூழ்நிலையை எப்படி கையாளுவது என்று அங்கிருந்த ஒருவருக்குமே புரியவில்லை.

“தேவையில்லாத பேச்செல்லாம் வேண்டாம். அந்தத் தரகருக்கு முதல்ல போன போடு” என்று கூறினார் செந்தாமரை.

அம்பிகாவின் ஆட்சிதான் அந்த வீட்டில் போல. அவர் தன் அலைபேசியில் தரகருக்கு அழைப்பு விடுத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.

விசாலாட்சி வாயில் புடவையைப் புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்க கவிச்சந்திரன் தன் தங்கையைப் பார்த்தான். தலை கவிழ்ந்து இருந்தவள். சத்தமே இல்லாமல் அழுவது அவன் கண்ணிற்கு தெரிய.

“போதும் நிறுத்துங்க நாங்க எதையும் மறைத்துப் பண்ணல. அப்படி பண்ண வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. அவளுக்கு ஒன்னும் பிறவியிலேயே இந்தப் பிரச்சனை வந்துடல. உங்களுக்குத் தெரியாம தான் வந்து இருக்கீங்கன்னு தெரியுது. அதுக்காக நீங்கப் பேசறது எல்லாம் பொறுத்துக்கணும்னு எங்களுக்கு அவசியமில்லை”, என்றவன் தங்கையிடம் திரும்பி, “ஆராத்யா நீ ரூம்குள்ள போ” என்றவன்.

“எங்கள மன்னிச்சிடுங்க” என்று கரம் குவித்து மன்னிப்பு கேட்டபடியே அந்த வீட்டின் ஆண் மகனாக அடுத்தடுத்து அவன் செய்ய வேண்டியவைகளை செய்துகொண்டிருந்தான். அந்த நொடி அபிமன்யுவுக்கு அவனைப் பிடித்தது. வீட்டிற்கு வந்தவர்களை அவமதிக்கவில்லை. அதே நேரத்தில் தங்கையையும் விட்டுக் கொடுக்கவில்லை. அவளின் கண்ணீருக்கு அவன் விடை தேடி இருந்தான்.

“வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்றீங்களா?” என்று அப்பொழுதும் அம்பிகா விடாப்பிடியாகச் சண்டையிட தயாராக இருந்தார் .

“நான் அப்படி எல்லாம் சொல்லல” என்று கவிச்சந்திரன் பவ்யமாகவே பேசினான்.

“அம்மா ரொம்ப அதிகமா பேசுறீங்க” என்று அபிமன்யுவும் தன் பங்கிற்கு பேசினான். அவனுடைய அத்தையும் தன் பங்கிற்கு ஏதேதோ பிதற்ற ஆரம்பிக்க. அந்த வீடு அசாதாரணமான சூழ்நிலையைக் கையாண்டு கொண்டிருந்தது. தாயின் துணையோடு தன் அறையின் உள்ளே சென்றவள். தாழை போட்டுவிட்டு குலுங்கி குலுங்கி அழுதாள். அபிமன்யுவின் பார்வை அந்தக் கதவையும் அதன் நிலையையும் தொட்டுவிட்டு மீண்டது.

“இன்னும் என்ன உக்காந்துட்டு இருக்கீங்க?? எந்திரிங்க” என்று அனைவரையும் கிளப்பினார் அம்பிகா.

அபிமன்யுவின் மடியில் இருந்த மூன்று வயது பாலகன். “அப்பா அந்த அம்மா நல்லா இருக்காங்க. நம்ப அம்மா மாதிரியே இருக்காங்க. இந்தப் பாட்டி என்ன திட்டுற போலயே அந்த அம்மாவையும் திட்டுறாங்க. திட்ட வேணாம்னு சொல்லுங்கப்பா” என்றான்.

அவனுடைய தமக்கை தமக்கை கணவன் என்று யாரும் எதுவும் பேசவில்லை. அவனுக்கும் என்ன பேசுவது என்று புரியவில்லை. சற்றும் எதிர்பாராத சூழ்நிலை அதை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை.

“போதும் நிறுத்துங்கம்மா. விட்டா பேசிக்கிட்டே இருக்கீங்க. நீங்களும் ஒரு பொண்ணு தானே?? அவள் மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிக்க மாட்டீங்களா??. இந்தத் திருமணத்துக்கு நான் உடன்படவேயில்ல, ஆனா என் தங்கச்சி தான் பரவால்லன்னு சொன்னாள். நீங்க என்னன்னா அவளை ஹர்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்று கவிச்சந்திரன் பொறுக்க முடியாமல் பேசிவிட்டான்.

அதற்கும் பொங்கி எழுந்து விட்டார் அவர். அதிலேயே அபிமன்யுவிற்கு புரிந்தது. வீட்டில் மற்றவர்களுக்கு இந்தத் திருமணத்தில், அதாவது இரண்டாவது திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று.

“ஊமை தங்கச்சிக்கு முதல் கல்யாணம் வேற கேட்குதா?” என்று அப்பொழுதும் அவனுடைய அத்தை எதையோ பேசினார்.

“நிறுத்துங்க எல்லாரும். முதல்ல இங்கிருந்து கிளம்புங்க” என்றான் அபிமன்யு கட்டளையான குரலில். இவர்கள் இப்படி மாறி மாறிப் பேசிக்கொண்டிருக்க அந்தப் பெண்ணின் மனதையும் தன் வீட்டினர் தேவை இல்லாமல் கஷ்டப்படுத்திக் கொண்டிருப்பது புரிந்தது. அவளுடைய அண்ணன் விட்டுக்கொடுக்காமல் பேசுகிறான் தான். அவன் ஒரு வார்த்தை பேச இவர்கள் மறுவார்த்தை பேச என்று இது வளர்ந்து கொண்டே போகும். தேவையில்லாத பிரச்சினை என்று முதலில் அனைவரையும் கிளப்ப எண்ணினான். மகன் கேட்ட கேள்விக்கு அபிமன்யு பதில் அளிக்கவில்லை. அளிக்கும் சூழ்நிலையும் அங்கு இல்லை.

“கிளம்பலாம் தேவையில்லாத பேச்சுக்கள் வேண்டாம்” என்று செந்தாமரையும் கூற.. மகனின் அதட்டலான பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாமல் அமைதியாகக் கிளம்பினார்கள்.

விசாலாட்சியும் கவிச்சந்திரனின் கரத்தைப் பிடித்துக் கொண்டார். பிரச்சனை வேண்டாம் என்பது போல.

வெளியில் சென்று செருப்பை போடும்போது அந்தப் பெண் சென்ற அறையைப் பார்த்தான் அபிமன்யு . பிறகு திரும்பிப் பார்க்காமல் நடந்து விட்டான். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கல்லூரி போக வேண்டிய வேலையில்லை. நேராக வீட்டிற்கு வந்தவன் மகனுடன் தன்னறைக்குள் தஞ்சம் அடைந்தான்.

அவர்களது குடும்பம் கவிச்சந்திரனை விடச் சற்று அதிகப்படியான வசதி உடையவர்கள் தான். முதல் திருமணமாக இருந்தால் அந்த வீட்டிற்கு பெண் எடுக்கச் சென்று இருக்கவே மாட்டார் அம்பிகா. ஆண் அழகனான தன் மகனுக்கு அப்சருசையான பெண்ணைத் தேடினார். அது மட்டும் அல்லாமல் வசதி வாய்ப்பையும் சேர்த்து பார்த்தார். அந்தப் பெண்ணுக்கு இருதய நோய் இருந்ததை மறைத்து அவர்கள் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். தாம்பத்தியத்தில் அவளுக்கு அதிகப்படியான மூச்சு வாங்கள் இருக்கும். மருத்துவமனைக்கு அழைத்தும் அவள் வரமாட்டாள். அதனால் அவளை மெண்மையாகவே கையாண்டான் அபிமன்யு. பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் என்றாலும் அவள்மீது உயிரையே வைத்திருந்தான் எனலாம். அவள் கர்ப்பவதியாக இருக்கும்போது அவ்வப்போது அவனும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறான். இருந்தாலும் இது மட்டும் அவர்கள் பார்வைக்கு வரவே இல்லை. பிரசவ நேரத்தில் உயிர் பிரியும்போது தான். எதனால் என்று அறிக்கையில் தெரிந்தது. அவளுக்கு இருக்கும் பிரச்சினையைப் பார்த்து துவண்டு போய் விட்டான்.

எள்ளளவும் குறைவில்லாத காதலை கொடுத்து இருந்தால் அவளுடைய மனைவி பிரீத்தி. விசாலாட்சி விடவில்லை சம்மந்தி வீட்டினரை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார். துவண்டு இருக்கும் மகனைப் பார்த்துத் தேம்பி தேம்பி அழுதார். ஆனால் அவன் தன்னை தேற்றிக்கொண்டு மனைவிக்கான எல்லா காரியங்களையும் செய்து முடித்தான். அவனிடமிருந்து இவ்வளவு பெரிய விஷயத்தை ப்ரீத்தியின் பெற்றோர்கள் மறைத்தது அவனுக்குக் குற்றமாகவே பட்டது.
 
New member
Joined
Dec 23, 2024
Messages
22
மனைவியாவது தன்னிடம் சொல்லி இருக்கலாமே?? எத்தனை முறை அவள் உடல் சோர்வுடன் இருக்கும் போதும் மூச்சுக்கு தவிக்கும்போதும் அவன் கேள்வி கேட்டிருக்கிறான். வீசிங் என்று தானே கூறினாள். அதற்கான மாத்திரைகளை உண்கிறேன் என்று தானே சொன்னாள். சரியாக அவர்களுடைய வாழ்க்கை ஒரு வருடம் மட்டுமே இருந்தது. ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலித்தார்கள். எல்லாம் முடிந்து விட்டது. ஏனோ இறந்துவிட்டவளை சாட அவனுக்கு மனம் வரவில்லை.



அமைதியாக மனைவியின் காரியங்களை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் அறையே தஞ்சம் என்று இருந்தான். மகனைக் கூடப் பார்க்கவில்லை. அதன் பிறகு அவனாகத் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு தன் வேலையைக் கவனித்தான்.. தாய்ப்பால் கூட இல்லாமல் தவிக்கும் தன் மகனைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு இருதயம் நின்று துடிக்கும். ஆனால் தன் விதியைப் போலத் தன் மகனின் விதியும் எழுதியாகி விட்டதே என்று அமைதியாகக் கடந்து போனான். அதன் பிறகு அவனுடைய இரவுகள் எல்லாம் அழுகையோடு கரைந்தது.



எத்தனையோ முறை ப்ரீத்தியின் பெற்றோர்கள் பேரனைப் பார்க்க வந்தார்கள். ஆனால் அம்பிகா அவர்களை வீட்டின் உள்ளே கூட அனுமதிக்கவில்லை. அவனுக்குமே அவர்களின் மீது கோபம் இருக்க. தாயின் செயலில் தலையிடக் கூட இல்லை. ஒருவகையில் அம்பிகாவின் இந்த அதிகப்படியான பேச்சுக்கும் கத்தலுக்கும் காரணம் கூட இதுதான். அதனால் முதலில் திகைத்து இருந்தவன். பிறகு அவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் அவதானித்து விட்டுக் கடைசியாக ஆராத்யாவின் மீது வந்து அவன் பார்வை படியும்போது. அவள் அழுதது அவனை ஏதோ செய்தது.



கட்டிலின் அருகிலேயே இருக்கும் தன் மனைவியின் புகைப்படத்தை எடுத்தான். இதுவரை திருமணம் வேண்டாம் என்று தட்டிக் கழித்துக் கூறிக் கொண்டிருக்க. கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த மகன். தாய் வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தபிறகு தான். அம்பிகாவின் வார்த்தைக்குச் செவிமடுத்தான்.



அவர் எத்தனையோ வரன்களை போட்டோக்களைக் காட்டிய போதும் அவனுக்கு அதில் பிடித்தம் இல்லாமல் இருக்க. அவன் தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தான். இந்த வாரம் தான் ஆராத்யாவின் புகைப்படத்தைக் காட்டினார்கள். அது அவன் மனைவியின் புகைப்படத்திற்கு கீழேவே இருக்க. அதை எடுத்துப் பிரித்து பார்த்தான். பார்த்தவன் ஒரு நிமிடம் திகைத்து விட்டு, பிறகு தன் மனைவியைப் பார்த்தான்.



இருவருக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பது போலத் தெரிந்தது சாயலும் பொருந்தியது. ஆனால் அவனுடைய மனைவி அவனுடைய ஜாதியை சேர்ந்தவள். ஆராத்யாவின் பயோடேட்டாவை எடுத்துப் பார்த்தான். அதில் வேறு இனத்தைக் குறிப்பிட்டு இருக்க. பூர்வீகமும் வேறாகத் தான் இருந்தது. இருவருக்கும் முக சாயலை தவிர வேறு எந்த ஒற்றுமைகளும் இல்லை. ஆனாலும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டான்.



அதில் மட்டுமல்லாமல் குறைபாடுகளிலும் ஒற்றுமை இருப்பதாக இப்போது அவனுக்குத் தோன்றியது. கதவு தட்டும் ஓசை. கதவைத் திறந்தான். சாப்பிடுவதற்கு கூப்பிட்டுக் கொண்டு இருந்தார் தாயார்.



“அந்தத் தரகரோட போன் நம்பர் குடுங்க” என்று கேட்டான்.



“இப்ப எதுக்குடா இதெல்லாம்?” என்று கேட்டார் அம்பிகா.



“கொடுங்கன்னு சொன்னேன்”.



அவனுடைய அழுத்தமான குரலில் அவர் அமைதியாகச் சென்று அதைக் கொண்டு வந்து கொடுத்தார்.



“சாப்பாடு? “ என்று அவர் தயக்கத்தோடு இழுக்க.



“வேண்டாம் இவனுக்கு மட்டும் கொடுங்க” என்று மகனை அனுப்பிவிட்டு மீண்டும் கதவைச் சாத்தினான்..



தரகருக்கு அழைப்பு விடுத்தான். அவர் அவனுடைய அலைபேசி எண்ணைச் சேமிக்காததால். அவர் யாரோ என்று அழைப்பை ஏற்க. அவன் பொறுமையாகவே பேசினான். அவனுக்கான சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொண்டான். அவர்களின் மீது தவறு இல்லை என்று தெரிந்தது.



தரகர் தன்னுடைய தவறுதான். பெண்ணையும் அவள் அழகையும் அடக்கத்தையும் பார்த்தால் பிடித்து விடும் என்று நினைத்து செய்ததாகக் கூறினார். அவளின் நிலையையும் எடுத்துக் கூறினார்.





“தப்பு தாங்கத் தம்பி ஆனால் நான் சாதாரணமா வீட்டுக்குப் போகும்போதே அவங்க அண்ணிக்காரி அந்தப் புள்ளையை வசப்பாடிக்கிட்டே இருப்பா. அந்தப் பொண்ணு வீட்ல இருக்குதோ இல்லையோ கருச்சி கொட்டிக்கிட்டே இருப்பா. இதுவரைக்கும் இதுபோல மறைச்சு எதையும் பண்ணல தம்பி. பொண்ணு அழகா இருக்காளேன்னு வீடுவரைக்கும் பாக்க போயிட்டு. சாப்பிட்டு போறவங்களை நானும் பார்த்து இருக்கேன். இல்ல பொண்ணுக்கு வாய் பேசத் தெரியாதுன்னாலே வரதட்சணை அதிகமா கேட்பாங்க. காரு பங்கலானு கேட்பாங்க. அவங்க நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவங்க தான். நல்லபடியா திருமணம் முடிப்பாங்க. அதிகப்படியா கேட்டா பாவம் அவங்களும் என்ன பண்ணுவாங்க?. தப்பா எடுத்துக்காதீங்க தம்பி, இரண்டாம் தாரம் தானே அதனால பொண்ணு பார்த்தா உங்களுக்குப் புடிச்சு. நீங்க ஒத்துப்பீங்கன்ற நம்பிக்கையில் அப்படி உண்மைய மறைச்சுட்டேன். ஆனா ரொம்ப குணவதி. பாவம் அந்த பிள்ளைக்குப் போய் கடவுள் இந்த நிலைய கொடுத்திருக்க வேண்டாம். இதுல அவங்க அம்மாவும் பையனும் கூடத் தயங்குனாங்க ஆனா அந்தப் பொண்ணுதான் எனக்குப் பரவால்ல நான் அந்த குழந்தைக்குத் தாயாக இருக்கிறேன்னு சொன்னாள். எனக்கு அந்தப் பொண்ணு பேசினது புரியல, மத்தவங்க பேசினதை வச்சிக்கிட்டு தான் புரிஞ்சுகிட்டேன்” என்று முடித்தார்.



அதன்பிறகும் அவனுடைய சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டான். ஆகப் பெண் வீட்டினர் மீதும் பெண்ணின் மீதும் எந்தத் தவறும் இல்லை என்று தெரிந்தது. தரகரும் அந்தப் பெண்ணிற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதால் கூறியிருக்கிறார். இரண்டாவது திருமணம் என்பதும் இதற்கு ஒரு காரணம்.



அன்று முழுவதுமே அவன் உண்ணவில்லை. இரவு உணவை முடித்துக் கொண்டு மகன் வந்து படுத்தான். “அப்பா அந்த அம்மாவைப் பத்தி பேசினா பாட்டி திட்டுறாங்க. ஆனா அந்த அம்மா நம்ப அம்மா மாதிரியே இருந்தாங்க இல்லப்பா? “ என்று கூறிய நொடி. மகனை அவன் பார்க்க. “கொஞ்சூண்டு” என்று கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சுருக்கி பாவணையாகக் கூறியவனின் அழகில் சொக்கி போனான் அபிமன்யு



அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து அவனைத் தன் மீதே படுக்க வைத்துக் கொண்டவன் மறுநாள் அந்த பெண்ணைச் சென்று பார்ப்பது என்று முடிவெடுத்தான்.
 
Top