Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 30
ரூபேஷ் அவ்வாறு அழைத்ததும், "என்னடா சொல்லுற?!!.. உனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சா? எப்போ?" என்று அதிர்ச்சியாகி கேட்டாள்..
"அதெல்லாம் ரெண்டு மாசம் முன்னேயே நிச்சயம் முடிஞ்சது.. அடுத்த மாசம் கல்யாணம்!" என்றான் ரூபேஷ்.
"உன்னோட கேள்வி பதில் செஷனை நிப்பாட்டு தாயே. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் அங்க போகல னா அந்த கல்யாணமே டவுட்டு தான்!.." என்று இடைபுகுந்தான் கார்த்திக்..
அதற்குள் தன்னருகே அமர்ந்திருந்த வித்யாவிடம்," இவ ஜிஷ்ணுவையும் விட மாட்டா போல!.. அங்க பாரு.. எப்படி சிரிச்சு சிரிச்சு பேசறாள் னு.." என ஈஸ்வரி புகைந்து கொண்டிருக்க,
யாரென திரும்பிப் பார்த்தவள், மதுமதியை கண்டு விட்டு,"ஹே!.. அப்படி சொல்லாத பா!.. அவ ஏற்கனவே ஒருத்தரை லவ் பண்ணிட்டு இருக்காளாம்!.."
"நானும் அன்னிக்கு அந்த டீச்சர்ஸ் சொன்னதை வைச்சு அவளை தப்பா நினைச்சுட்டேன்!.." என்று அவளைப் பற்றி வித்யா கூறியதும்,
ஆச்சர்யமாக அவளை திரும்பிப் பார்த்த ஈஸ்வரி,"உனக்கெப்படி தெரியும்?!!.."என வினவிட,
மதுமதி விலாவாரியாக இவளிடம் பகிர்ந்ததை உரைக்காமல், மேலோட்டமாக கூறினாள் வித்யா. அதை கேட்டதும் ஈஸ்வரிக்கும் சற்று நிம்மதியானது.
அதற்குள் மதுமதியோடு ஈஸ்வரியை நெருங்கிய ரூபேஷ், "அம்மு. இவங்க என்னோட ஸ்கூல்மேட்." என்று அவன் சொல்வதற்குள், " ஹாய் அமுதா. நீங்க தான் இவனோட பியான்சியா!?" என்றாள் மதுமதி.
"உனக்கு அம்முவை முன்னாடியே தெரியுமா?" என்று ரூபேஷ் விழி விரிய வினவிட,
"அமுதாவை மட்டுமில்ல, கார்த்திக்கையும் எப்படி தெரியும்னு நீ கேட்கவே இல்லடா." என்று கூறி நகைத்த மதுமதி.
"இவங்க எல்லோருமே என் அம்மா ஹெச்.எம் ஆ இருக்கற ஸ்கூல்ல தான் வொர்க் பண்றாங்க.நானும் அங்க தான் கம்ப்யூட்டர் டீச் பண்றேன்." என்று விளக்கிட அனைவரும் ஒன்றிணைந்தனர்.
சில பல கருத்து கணிப்புகளின் அலசல்களுக்கு பிறகு அனைத்து உடைகளும் எடுத்து முடித்த பின், அவர்களோடு சிறிது நேரம் இருந்த மதுமதி கிளம்புவதாக கூறிவிட்டு விடைபெற்றாள்.
எல்லாம் முடிந்ததால் கார்த்திக்கும் கிளம்புவதாக சொல்லவும்," இப்ப எங்க போறீங்க சீனியர்!? நைட் டின்னர் முடிச்சுட்டு தான் போகனும். பொம்முகுட்டி நீயும் தான்." என்று
இயல்பு போல் வித்யாவிடமும் கூறிவிட்டு, பின் நாக்கை கடித்துக் கொண்டு, " ஸாரிங்க. ஒரு ஃப்ளோல அப்படியே வந்துடுச்சு." என்று அவளிடம் மன்னிப்பு கேட்டான்.
இதை எல்லாம் பார்த்த ஒருவனுக்கு காதில் புகை வருமளவுக்கு வயிறு எரிந்தது.
'என் பொண்டாட்டியை நான் கூட செல்லப் பேர் வைச்சு கூப்பிடலைடா! எங்க இருந்து தான் எனக்குன்னு வருவீங்களோ?'என்று மனதில் பொங்கிக் கொண்டு இருந்தான்.
ரூபேஷ் அவ்வாறு அழைத்ததும் வித்யாவிற்கு சட்டென அவளது சகோதரியின் நினைவில் கண்கள் கலங்க அதை காட்டிக் கொள்ளாமல்,
தன்னை சமாளித்துக் கொண்டு "பரவால்லண்ணா. நீங்க அப்படியே கூப்பிட்டுக்கோங்க." என்று அனுமதி வழங்கிட,
'அடிப்பாவி! என்னை மட்டும் தான் கண்ணாலேயே எரிப்பா போல.'
"அவனுக்கு எல்லாம் அனுமதி உண்டு. ஆனா எனக்கில்லையா?" என்று பொறாமையில் பொங்கியவன் இரண்டாம் பாதியை வாய்விட்டு உளறி விட்டான் பையன்.
அவனை திரும்பிப் பார்த்த வித்யா, "என்ன எனக்கில்லையா?" என்று புருவங்கள் சுருங்க வினவிய பின்னர் தான் அதையே உணர்ந்தான் அந்த திருவாழத்தான்.
"ஒன்னுமில்லயே, ஒன்னுமே இல்ல." அசட்டுச் சிரிப்புடன் பல்வரிசை அனைத்தையும் காட்டி தலையாட்டி மறுப்பாக அவன் பதிலளிக்க, அவனை முறைத்து விட்டு,
"என்னமோ நான் இவரை கூப்பிட வேணாம்னு சொன்ன மாதிரி. ஹீம்!" என்று முணுமுணுத்துக் கொண்டு அவள் சென்றதை,
அவன் கேட்க வாய்ப்பில்லை ஏனெனில் அவன் தான் தனக்குள் புலம்பிக் கொண்டு இருந்தானே.
மூவரும் இரவு உணவையும் முடித்து விட்டு வீடு வந்து சேரும் போது, பைக்கில், காற்றில் வந்தது. குழந்தையை தாலாட்ட, வீடு வருவதற்குள் உறங்கி இருந்தாள்.
அவளை படுக்கையில் சீராக படுக்க வைத்து விட்டு வந்த வித்யா, மாலை முதல் தன் மனதில் எழுந்த சந்தேகத்தை அவனிடம் கேட்க முனைந்தாள்.
"ஆமா. அன்னிக்கு பேசுனப்ப நீங்க என்னை முதல்லயே பார்த்த மாதிரி தானே சொன்னீங்க?அப்றம் நீங்க அந்த அண்ணாவோட சீனியர்னு தானே சொன்னாங்க." என்று தன் சந்தேகத்தை கேட்க,
'ஆஹா! மறந்துட்டாள்னு நினைச்சுட்டு இருந்தா, ஞாபகமா கேட்குறாளே!' என பீதியானான் கார்த்திக்.
"ஒருவேளை நீங்க காலேஜ் படிக்கும் போது அவரை மாதிரியே பஸ்ல எதுவும் என்னை பார்த்து இருக்கீங்களா?" தன் கேள்வியை அவள் முன்வைக்க,'அப்பாடா!'என்று இருந்தது அவனுக்கு.
உடனே, "ச்சே!ச்சே!இல்லமா. நான் காலேஜ் க்கு பைக்ல தான் போனேன். பஸ்ல போனதில்ல." இயல்பாக பதில் சொல்கிறானாம்!.
"சரி. எனக்கு டயர்டா இருக்கு அதனால தூக்கம் தூக்கமா வருது. நீயும் போய் படுத்து தூங்குடா. குட் நைட்."அவளை கிளப்புவதில் அவன் முனைப்பாக இருக்க,
அவன் மீது சந்தேகப் பார்வையை பதித்துக் கொண்டே யோசனையோடு தனது அறைக்கு சென்றாள்.
'ப்ரசன்ட் சார்!' என்று ஆஜாராகிய கதிரவன் தன் வேலையை தொடர, அந்த காலைவேளை பரபரப்பில், இரவில் அவனிடம் கேட்டதை மறதிக் காட்டில் விட்டு விட்டாள் வித்யா.
அதன்பின் அவனிடம் அதனைப் பற்றி பேசுவதற்கான சந்தர்ப்பத்தை அளிக்காமல் அவனும் கவனமாக கையாள, அவள் மீண்டும் மொத்தமாக மறந்தே போனாள்.
**************
வாசலில் வாழைத்தாரின் தோரணத்துடன், பூக்களின் அலங்காரத்தோடு ஒரு கல்யாணத்திற்கான சகல கலைகளோடு மங்களகரமாக விளங்கியது அந்த மண்டபம்.
அழகான பெண்களின் தந்தையிடம் "என்ன மாமா எப்படி இருக்கீங்க?" என்று கேட்டிடும் இளசுகளும்,
"கங்காதரன் மகன் தானடா நீ. அட லூசுப்பயலே!. நான் உனக்கு சித்தப்பாடா." என்ற பெருசுகளின் உறவுமுறை வேர்களும் வெளிப்படும் இடம்.
பிள்ளைகள் பட்டாம்பூச்சிகளாய் ஓடித் திரிந்து, கிளுக்கி சிரித்தபடி இருக்க, மங்கள இசையின் ஓசையில், சுகந்தம் கமழும் அந்த மண்டபத்தின் மணமகன் அறையில்,
"ஏன்டா மாப்ள? இப்ப நீ என்ன சாதிச்சிட்டனு மூஞ்சில பல்பு எரிய விட்டுருக்க?" என்று ரூபேஷை வம்பிழுத்துக் கொண்டிருந்தான் பாலா.
"அதெல்லாம் கல்யாண களைடா பாலா!. உனக்கு எல்லாம் அது பற்றி தெரியாது." என்று அவனை கலாய்த்துக் கொண்டிருந்தான் மணமகன்.
"சரி, சரி. ரொம்ப ஓவரா பண்ணாதடா. எனக்கும் ஒரு காலம் வரும்." என மூக்கில் காற்றடித்துக் கொண்டு கடுப்புடன் கூறிய பாலா,
"மாப்பிள்ளையை கூட்டிட்டு வாங்கோனு ஐயர் அங்க கூப்பாடு போடுறாரு. கிளம்பு, கிளம்பு." ரூபேஷை விரட்டினான்.
"அட பக்கி. இதை முதல்ல சொல்லாம, சும்மா கதையடிச்சுட்டு இருக்குற." திட்டியவனிடம்," மாப்ளைக்கு அவ்ளோஓஓ அவசரம். அப்படி தானடா?" எனக் கூறிவிட்டு சிரித்தான்.
சிரித்துக் கொண்டே மணமேடைக்கு அவனை அழைத்து வந்த பாலா, அப்போது அங்கே வந்த கார்த்திக்கை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தான்.
"கார்த்திக் அண்ணா!" என அவன் கூவிட, "டேய்! சொல்ல மறந்துட்டேன் சீனியரும் என்னோட வைஃப் வொர்க் பண்ற ஸ்கூல்ல தான் வேலை செய்யறார்." என ரூபேஷ் அறிவித்தான்.
"உன்னோட வைஃப்ஆ! அப்ப ஏற்கனவே ஒரு வைஃப் வச்சுட்டு தான் மறுபடியும் கல்யாணம் பண்ணுறியா படுபாவி." என்று அதிர்ந்த மாதிரி நடித்தான் பாலா.
"கடுப்பேத்தாத டா தடிமாடு. நான் சொன்னது அம்முவை தான். தாலி கட்டல னாலும் என் மனைவி அவ தான்டா பக்கி." அவன் தோளில் அடித்துக் கொண்டே ரூபேஷ் கூறிட,
" சரி விடு. நான் போய் கார்த்திக் அண்ணா கிட்ட பேசிட்டு வர்றேன்." என்று பாலா நகர முனையும் போது,
கார்த்திக்கின் பின்னால் கையில் குழந்தையுடன் வந்த வித்யாவை கண்டு ஷாக் அடித்தது போல் அதிர்வுக்குள்ளான் பாலா.
அவன் அதிர்ந்து நின்ற கணம், "காலேஜ் டைம்ல நாம பஸ்ல பார்ப்போமே. நீ கூட பொம்மைனு சொல்லுவியே. அவங்க பேர் வித்யரூபிணி.
"சீனியர் அவங்கள தான் மேரேஜ் பண்ணி இருக்காங்க." என்று ரூபேஷ் அவர்களை பற்றி விளக்க, மயக்கம் வராத குறை தான் பாலாவுக்கு.
மணமகனை அமரச் சொல்லி ஐயர் உரைத்திட, பாலாவை கண்ட கார்த்திக் புன்னகையுடன், "அடேய் அரட்டை. நீ எப்படா வந்த?" என ஆச்சர்யமாக கேட்டுக் கொண்டே அவனை நெருங்கினான்.
அவன் தான் உறைந்து இருக்கிறானே. எப்படி பதில் அளிப்பான்? அதற்குள் பவிக்குட்டி காத்திப்பாவிடம் செல்ல, அடம் பிடித்ததால், அவனிடம் அவளை கொடுக்க வந்த வித்யா,
பாலாவை கண்டு எங்கேயோ பார்த்த முகம் என்று தன் நினைவுகளை தூசி தட்ட தொடங்க, பாப்பாவின் சத்தத்தில், அதை விடுத்து கார்த்திக்கிடம் குட்டியை ஒப்படைத்து விட்டு, ஈஸ்வரியின் அறைக்கு சென்றாள்.
"என்ன கார்த்திக் அண்ணா இது, எப்போ!!? எப்படி?" என்று பாலா வார்த்தைகள் வராமல் தந்தியடிக்க, அதற்குள்,
"காத்திப்பா!" என்று குழந்தை கார்த்திக்கிடம் எதையோ காட்டி பேச, "இதோ வர்றேன்டா." என்று விட்டு கார்த்திக் அங்கிருந்து அகன்றான்.
ஈஸ்வரியின் அறைக்கு வந்த வித்யா, கல்யாண கலகலப்பில் கலந்து இருந்தாலும், மனதின் மூலையில் பாலா பற்றிய நினைவை தேடிக் கொண்டு இருந்தாள்.
'கெட்டிமேளம்! கெட்டிமேளம்!' என்று ஐயர் உரைத்திட, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, ஈஸ்வரியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக ஏற்றான் ரூபேஷ்.
அதன் பின்னான சடங்குகள், மணமக்களுக்கான பிரத்யேக விளையாட்டுகளின் கலகலப்பில், பாலா பற்றிய எண்ணம் வித்யாவின் மூளையில் ஓரம் தள்ளப்பட்டது.
கிடைத்த ஏதாவது ஓர் தருணத்தில் பாலாவிடம் பேச எண்ணி இருந்த கார்த்திக்கிற்கு, அந்த தருணம் தான் வாய்க்காமல் போனது.
குழந்தை, காத்திப்பாவை விட்டு விலகாமல் இருக்க, அனைத்து சம்பிரதாயங்களின் பரபரப்பு முடிந்த வேளையில்,
வித்யாவின் மூளை பாலாவை ஏதோ ஒரு இக்கட்டான தருணத்தில் கண்டதாக உரைக்க, என்னவென்று தெளிவாக தெரியாமல் அல்லாடினாள்.
ஒரு விசயம் என்னவென்று முழுதாக நினைவில்லை என்றால் கூட இயல்பாக கடந்து விடலாம்.
ஆனால் அரைகுறையாக அதைப் பற்றிய ஞாபகத்தோடு இருப்பது கடினம். வித்யாவும் அம்மாதிரியான தவிப்பில் தான் இருந்தாள்.
அவளால் முழுதாக அறிய முடியாத அவஸ்தையை பொறுத்துக் கொள்ள இயலாது, பாலாவிடமே கேட்டு விடலாம் என்று முடிவு செய்து அவனை தேட,
அவளது நல்ல நேரமா? கெட்ட நேரமா? தெரியவில்லை. அவனும் ஏதோ சிந்தனையில் தனிமை நாடி வெளியே வராண்டாவில் நின்று இருந்தான்.
அவனை நெருங்கிய வித்யா, "எக்ஸ்க்யூஸ் மீ!" என்று அவன் கவனத்தை திசை திருப்ப, அவளை கண்ட பாலா, "பொம்மை." என்று முணுமுணுத்தான்.
"அது வந்து, நீங்க தப்பா நினைக்கலனா ஒன்னு கேட்கவா?" என்று தொடங்கிய வித்யா சற்று தயங்கி,
"இதுக்கு முன்ன உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. அதுவும் ஒரு க்ரிக்டிகல் டைம்ல, எங்கேனு நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்துட்டேன்."
"ஆனா நினைவுக்கு வரல. உங்களுக்கு எதாவது அதைபற்றி நினைவிருக்கா?" என்று கேட்டே விட்டாள். அவள் கேள்வியில் திகைத்தவன், என்ன பதில் அளிக்க என்று தெரியாமல் தடுமாறினான்.