- Thread Author
- #1
இரண்டாம் காதல்!
மின்விசிறியின் காற்று சிலுசிலுவென வீசிக்கொண்டு இருக்க, தன் முன் இருந்த திருமண அழைப்பிதழை யோசனையுடன் பார்த்தபடி ஹால் சோபாவில் அமர்ந்திருந்தாள் சந்தியா.
அவள் உடுத்தியிருந்த எளிமையான பட்டுப்புடவையின் வாசமும், தலை முடியில் சூடியிருந்த மல்லிகையின் மனமும் இரண்டற கலந்து, அறை முழுவதும் மென்மையாக வீசிக்கொண்டு இருந்தது.
முகூர்த்த நேரம் ஒன்பது மணிக்கு மேல் என்று போட்டு இருந்த எழுத்துக்களைப் பார்த்தவள், நிமிர்ந்து சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள்.
நேரம் எட்டு பத்து என்று காட்டியது. இப்பொழுது கிளம்பினால் தாலி கட்டும் நேரத்திற்குச் சரியாகச் சென்று விடலாம்.
திருமணத்திற்குப் போக விருப்பம் இல்லை இவளுக்கு. ஆனால் தோழி தான், ‘நீ போகலைன்னா, அவரை நீ இன்னமும் காதலிக்கிறதா நினைச்சிப்பாங்க. அப்படி இல்லை, நான் சந்தோஷமா தான் இருக்கேன்னு காட்டுறதுக்காகவாவது, நீ போகணும்.’ என்று ஒற்றைக்காலில் நிற்க, இதோ கிளம்பியாகிவிட்டது.
‘ஆனால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா?’ கேள்வி அவளுக்குள்.
கடிகாரத்தை வெறித்தாள். கடிகார முட்கள் நகரும் சத்தம், அவள் இதயத்தைச் சத்தமில்லாமல் அறுத்தது.
இன்னும் சற்று நேரத்தில் அவன் வேறு ஒருத்தியின் கணவன். இனி தங்கள் மகளைப் பார்க்க வருவானா? அவன் மனைவி வேண்டாம் என்று சொல்லிவிட்டால், தகப்பனை பார்க்க முடியாமல் குழந்தை தவித்துப் போவாளே!
அவள் மட்டுமா தவிப்பாள்?
உள்ளுக்குள் அவன் மேல் சிறு கோபம் இருந்தாலும், அவனைத் தன் மனம் தேடத்தானே செய்கிறது, இன்றும்..!
கடிகாரத்தின் சத்தத்தில், நொடிகள் கரையை, புள்ளியாய் மறையும் இரயிலை போல அவனை விட்டு வெகு தூரம் செல்வது போல ஒரு பிரம்மை.
இதயத்தை அழுத்தியது ஓர் இனம் புரியாத வலி..!
அவள் எண்ணங்களைக் கலைக்கும் விதமாய் அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. இதோ தோழி வந்து விட்டாள் என்ற சோர்வுடன் எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
திறந்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
அவளுக்கு எதிரே, பட்டு வேட்டி சட்டையில், வேர்க்க விருவிருக்க நின்று கொண்டு இருந்தான் அர்ஜுன், சந்தியாவின் முன்னாள் கணவன்.
‘இன்னும் கொஞ்ச நேரத்தில முஹூர்த்தம். இங்க என்ன செய்துட்டு இருக்கார்?’ சந்தியா யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுதே, அவளை விளக்கிவிட்டு உள்ளே நுழைந்தவன், சோபாவில் சென்று அமர, அவள் பின்னோடு சென்றாள் சந்தியா.
“தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாயேன்.”
கேட்க வேண்டிய கேள்வியை மறந்துவிட்டு, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
சொம்பில் இருந்த நீர் முழுவதையும் ஒரே மிடறில் குடித்து முடித்தான் அர்ஜுன்.
“முஹூர்த்த நேரத்தில இங்க என்ன செய்றீங்க?”
“கல்யாணத்தை நிறுத்திட்டேன்.”
அதிர்ந்து போனாள் சந்தியா.
“என்ன சொல்றீங்க?”
“அந்தப் பொண்ணுக்கு இந்தக் கல்யாணத்தில இஷ்டமில்லை. அதான் பெரியவங்க கிட்ட பேசி நிறுத்திட்டேன்.”
‘அர்ஜுனின் பதில் கலக்கத்தைக் கொடுக்காமல், இத்தனை நேரமிருந்த அழுத்தம் மறைந்து நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுத்தது சந்தியாவுக்கு.
ஒருவேளை, இத்திருமணம் நின்றுவிடாதா என்று இவள் நினைத்திருந்தாளோ என்னவோ, தெரியவில்லை.
“அதுக்கு, வீட்டுக்கு போகாம இங்க என்ன பண்றீங்க?”
“உன்னைக் கூட்டிட்டு போக வந்தேன்.
“எதுக்கு?”
“கல்யாணம் செய்துக்க.”
அர்ஜுன் சொல்லவும், அதிர்ச்சியில் பின்னால் நகர்ந்த சந்தியா, கால் இடறி விழப்போக, சோபாவில் இருந்து வேகமாக எழுந்து, அவளின் கையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தான் அர்ஜுன்.
அர்ஜுன் இழுத்த வேகத்தில் அவன் மேல் வந்து விழுந்தாள் சந்தியா. அவள் இடையில் கை கொடுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் இவன்.
எல்லாம் சில நொடிகளில் நடத்து முடிந்து விட்டது.
கோபத்துடன் அர்ஜுனின் அணைப்பில் இருந்து விடுபட முயன்றாள் சந்தியா. ஆனால் முடியவில்லை. அவன் கை இவள் இடையில் அழுத்தமாகப் பதிந்திருந்தது.
“விடுங்க என்னை..!”
“என் உயிர் இருக்கிற வரைக்கும் உன்னை விடுற ஐடியா இல்லை.” அழுத்தமாகச் சொன்னான் அவன்.
நிமிர்ந்து அர்ஜுனின் முகம் பார்த்தாள் சந்தியா.
“இதோ இந்த அழகான முகத்தில் சுருக்கம் விழுந்து, இந்தப் பல்லெல்லாம் கொட்டி, நீ பாட்டி ஆகுற வரைக்கும் உன்கூடத் தான் இருப்பேன்,.”
அர்ஜுன் சொல்ல, கண்ணீர் எட்டிப் பார்த்தது சந்தியாவின் விழிகளில். தன் கண்ணீரை மறைக்கும் பொருட்டுத் தலை குனிந்தவள், வேகமாக அவனின் பிடியில் இருந்து திமிறி, தள்ளி நின்று கொண்டாள்.
“வேண்டாமுன்னு சொல்லிட்டு போயிட்டு, இப்போ எதுக்கு இங்க வந்தீங்க?” கோபமும் அழுகையும் போட்டிப்போட கேட்டாள்.
“நானா வேண்டாம்னு போனேன்? நீ தான சொல்ல சொல்ல கேட்காம வீட்டை விட்டு போன...!”
கணவன் சொல்ல சந்தியாவிடமிருந்து பதில் இல்லை.
நடந்து முடிந்துவிட்ட நிகழ்வுகளை அசை போட்டாள்.
கல்லூரி படிக்கும் காலத்தில் இருவருக்குள்ளும் காதல் மலர, வஷயம் இரு வீட்டாருக்கும் தெரிந்துவிட, பெரும் போராட்டத்திற்குப் பிறகு, இருபது வயதிலேயே திருமணம் செய்து கொண்டனர் அர்ஜுனும் சந்தியாவும்.
ஆனால் அத்திருமணம் வெல்லத்தைப் போல இனிப்பில்லாமல் பாகற்காயை போலக் கசக்க ஆரம்பித்தது சந்தியாவிற்கு.
பிடிக்காத மருமகள் என்பதால் தொட்டதெற்கெல்லாம் சந்தியாவைக் குற்றம் சொல்ல ஆரம்பித்தார் அர்ஜுனின் தாய், லட்சுமி. கணவனுக்காகப் பொருத்துப் போனாள் இவள். ஆனால் ஒரு நாள் வார்த்தைகள் எல்லை மீறிவிட்டது. பணத்திற்காகத் தான் சந்தியா தன் மகனை திருமணம் செய்ததாகச் சொன்ன அவள் மாமியார், சந்தியா மேல் வார்த்தை என்னும் சேற்றை வாரி இறைத்தார்.
முதன்முறையாகச் சந்தியா மாமியாரை எதிர்த்து பேச, சண்டை பெரிதானது.
இருபது வயதே ஆன அர்ஜுனுக்கு, நிலைமையை எப்படிச் சமாளிக்க என்ற புரிதல் இல்லை. யார் பக்கம் நின்று பேசுவது என்று தெரியாமல், இதுவரை தாயை எதிர்த்து பேசிப் பழக்கமில்லாதவன் மனைவியின் மரியாதையைக் காக்க தவறினான்.
விளைவு, கணவன் வீட்டை விட்டு வெளியேறி, பிறந்த வீட்டிற்குச் சென்றுவிட்டாள் சந்தியா.
அவளைச் சமாதனம் செய்யப் போராடினான் அர்ஜுன்.
“உங்களை நம்பி தானே கல்யாணம் செய்துட்டு உங்க வீட்டுக்கு வந்தேன். இத்தனை நாள் உங்க அம்மாவை செய்த எதையாவது உங்க கிட்ட சொல்லி இருக்கேனா....? அப்படி இருந்தும் என்னைப் பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொல்றாங்க. இப்போவும் நீங்க அமைதியா இருந்தா எப்படி? அந்த இடத்தில என்னோட மரியாதையைக் காப்பாத்த வேண்டியது நீங்க தானே? நம்ம நண்பர்களும், என்னோட பெத்தவங்களுமா வந்து பேச முடியும்...?”
“நான் அமைதியா இருந்தது தப்பு தான் சந்தியா. என்னை மன்னிச்சிடு. அம்மா சார்பா நான் மன்னிப்புக் கேட்கிறேன். ப்ளீஸ்...!”
“நீங்க மன்னிப்பு கேட்கிறதால உங்க அம்மாவுக்கு என் மேல இருக்கிற அபிப்பிராயம் மாறிட போகுதா என்ன..? எல்லாம் நடந்து முடிஞ்ச பிறகு இனி மன்னிப்பு கேட்டு என்ன பிரயோசனம். கிளம்புங்க.”
சந்தியா உறுதியாகச் சொல்லிவிட, அவளின் அண்ணன்மார்களால் அங்கிருந்து அடித்துத் துரத்தப்பட்டான் அர்ஜுன்.
அடுத்தச் சில நாட்களில் சந்தியா கற்பமாக இருக்கும் செய்தி தெரியவந்தது..
குழந்தைக்காக வேண்டி இரு வீட்டுப் பெரியவர்களும் சமாதான முயற்சியில் இறங்கினர். அப்பேச்சு வார்த்தையில் இருவீட்டு பெரியவர்களுக்குள்ளும் வாய் வார்த்தை முற்றிவிட, சமாதன முயற்சியும் சண்டையில் முடிந்தது.
“உன் சின்ன மாமியாக்காரி அந்தப் பேச்சு பேசுறா, உன் புருஷன் என்னடான்னா அமைதியா வேடிக்கை பார்த்துட்டு இருக்கான். இதுல இருந்தே தெரியல, உன் புருஷன்கிட்ட இல்லாதது பொல்லாததையும் சொல்லி நல்லா உசுபேத்தி விட்டு இருக்காங்க.”
சந்தியாவின் சித்தி அவளிடம் இவ்வாறு சொல்ல, அந்தப்பக்கம் அர்ஜுனிடமோ, “உன்னை அவ மாமன்காரன் கண்டபடி திட்டுறான். உன் பொண்டாட்டி ஒரு வார்த்தை வாயை திறந்து பேசினாளா? இதுலையே தெரியலை அவளுக்கு உன்கூட வாழ இஷ்டமில்லைன்னு.” என்றார் அவனின் அத்தை ஆத்திரத்துடன்.
“அப்படியும் இருக்குமோ...?!”
இருவருக்குள்ளும் சந்தேக விதை முளைக்க, ஏற்கனவே உருவாகியிருந்த விரிசல் பெரிதானது.
அவ்விரிசல் இருவரையும் நீதிமன்ற வாசலில் போய் நிற்க செய்ய, இரண்டு வருடத்தில் விவாகரத்து உத்தரவு கைக்கு வந்து சேர்ந்தது.
நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்போது, அவள் திரும்பிப் பார்த்த நேரம் அர்ஜுன் பார்க்கவில்லை. இவன் திரும்பிப் பார்த்த நேரம் சந்தியா திரும்பிப் பார்க்கவில்லை.
விவாகரத்து வாங்கும் வரை கூடவே இருந்த சொந்தங்கள் எல்லாம், அதன்பின் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட, தனிமையில் விடப்பட்ட இருவருக்கும் இப்பொழுதுதான் நிதர்சனம் புரிய ஆரம்பித்தது.
இப்புரிதல் தேடுதலாக மாறியது.
“அடுத்தவங்க பேச்சை கேட்டுத் தப்பு செய்திட்டோனோ...?”
ஆனால் இதை உணரும் நேரம் காலம் கடந்து சென்று விட்டது.
மனைவி தன் மேல் கோபமாக இருப்பாள் என்ற குற்ற உணர்ச்சியின் காரணமாக அர்ஜுன் விலகி இருக்க, அன்றைய கணவனின் சூழ்நிலை இப்பொழுது புரிந்தும், சுயகவுரவம் தடுக்க, கணவனை நெருங்க முடியாமல் தள்ளி நின்றாள் சந்தியா.
விவாகரத்து வாங்கி இதோ எட்டு வருடம் ஓடி விட்டது.