• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 20, 2025
Messages
18
"இந்த ஜீன்ஸ் டாப் உனக்கு நல்லாருக்கும் வள்ளி. இதை ட்ரையல் பார்த்துட்டு வா" என்று அவளின் கையினில் துணிகளைக் கொடுக்க,

"நான் காலேஜ் படிக்கும் போது தான் இதெல்லாம் போட்டிருக்கேன் கார்த்தி. அப்ப இருந்த உடம்புக்கு ஓகே. இப்ப கொஞ்சம் குண்டாகிட்டேன் எனக்குச் செட் ஆகாது கார்த்தி" என்று தயங்கியவாறு நின்றாள் வள்ளி.

தேனிலவுக்கென அவளுக்கான உடுப்புகள் வாங்க ஜவுளிக் கடைக்கு அழைத்து வந்திருந்தான் கார்த்திகேயன்.

"யாரு? நீ குண்டா? சரி தான்! உன்னை விட உடம்பு அதிகமா இருக்கிறவங்கலாம் போடும் போது உனக்கென்ன? உடம்பை இறுக்கி பிடிக்காத டாப் குர்தி போடும் போது குண்டா இருந்தாலும் அசிங்கமா தெரியாது. நான் உனக்கு அப்படித் தான் செலக்ட் செஞ்சி கொடுத்திருக்கேன். போய் டிரையல் பாரு" என்று அவளை அறைக்குள் தள்ளினான்.

அவன் கொடுத்த துணிகளை ஒவ்வொன்றாய் போட்டு அவனுக்குக் காண்பிக்க, "உனக்கு இந்த மாதிரி டிரஸ்லாம் சூப்பரா இருக்கு வள்ளி. அடிக்கடி உனக்குப் போட கம்ஃபர்டபுளா இல்லைனாலும் வேகேஷனுக்கு எங்கேயாவது போகும் போது போட்டுக்கோ" தனது விருப்பத்தைத் திணிக்காமல் அதே சமயம் அவளுக்கேற்ற வகையில் அவன் உரைத்திருந்த விதத்தை எண்ணி மெச்சிக் கொண்டாள்.

தனக்கும் சில துணிகளை எடுத்துக் கொண்டு அவளுடன் கிளம்பினான்‌.

காலை உணவை முடித்துக் கொண்டு பன்னிரண்டு மணியளவில் தேனிலவுப் பயணத்துக்குத் தேவையானவைகளை வாங்கவெனத் தி நகருக்கு வந்திருந்தனர் இருவரும்.

உடைகளை வாங்கி விட்டு அங்கேயே மதிய உணவை முடித்தவர்கள், அதன் பிறகு பெட்டி, காலணிகள் போன்ற பொருள்களை வாங்கவெனச் சுற்றினர்.

இப்படியே நேரம் நான்கை கடந்து விட, இதற்கு மேல் தாமதித்தால் செல்ல வேண்டிய விமானத்தைத் தவிர விட்டு விடுவார்கள் என்று பயந்தவர்களாய் அங்கிருந்து அவசர அவசரமாகக் கிளம்பியிருந்தனர்.

தி நகரிலிருந்து மகிழுந்தை கார்த்திகேயன் ஓட்டத் தொடங்கியதும், "கார்த்திப் போகும் போது அப்பா அம்மாவைப் பார்த்துட்டு போலாமா? நாம ஊருக்குப் போய்ட்டு வர எப்படியும் அஞ்சு நாள் ஆகும்ல. இப்பவே அவங்களைப் பார்த்துட்டு போய்ட்டா மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்" என்றாள்.

நேரத்தைப் பார்த்தவனாய் யோசித்தவன், "ஹனிமூன் போகும் போதே மூட் அவுட் ஆகிட்டு போகனுமா வள்ளி! அவங்களைப் பார்த்தா கண்டிப்பா உன்னைத் திட்டுவாங்க. நமக்கு நேரம் வேற இல்லை" என்றவன் சொன்னதும், "ஆமா திட்டுவாங்க தான். ஆனா திட்டுவாங்கனு அப்படியே விட்டுட முடியாதுல கார்த்தி" என்றாள்.

"ஹ்ம்ம் ஹனிமூன் போய்ட்டு வந்ததும் கண்டிப்பா உங்க வீட்டுக்குப் போகலாம்" என்று சமாதானம் செய்தான்.

சரியெனத் தலையசைந்தாலும் அவளின் மனத்தில் ஏதோ நெருடல்.

பெற்றோரை எதிர்த்துத் திருமணம் செய்ததினால் அவளால் முழுமையாக இந்த வாழ்வை மகிழ்வுடன் ஏற்க முடியவில்லை. தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரைத் தனியாகத் தவிக்க விட்டு வந்து விட்டோமே, சுயநலமாய் முடிவெடுத்து விட்டோமே, தன்னைச் சீரும் சிறப்புமாய் வளர்த்த பெற்றோரை சுற்றத்தினரின் இழிப்பேச்சுக்கு ஆளாக்கி விட்டோமே என உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தாள் வள்ளி. அதனாலேயே எவ்வாறேனும் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றிட வேண்டும், அல்லது அவர்கள் தன்னிடம் முகம் கொடுத்து பேசுமளவாவது மாற வேண்டும் அதன் பிறகே தன்னால் இந்தத் திருமண வாழ்வில் முழு மகிழ்ச்சியுடன் பயணிக்க முடியும் என்று நம்பினாள். தேனிலவில் இருந்து வந்த பிறகு இதற்கு ஏதேனும் வழி செய்ய வேண்டுமென எண்ணிக் கொண்டாள்.

அன்றிரவு விமான நிலையத்திற்குச் சென்றதுமே அவளுடன் இணைந்து நிறையத் தற்படங்கள் எடுத்தான் கார்த்திகேயன். இருவரின் உள்ளமும் மிகுதியான மகிழ்ச்சியில் திளைத்திருந்தன.

விமானம் ஏறியதும் அவளுடன் சில தற்படங்கள் எடுத்தவன், விமானம் பறக்கவும் கண்ணாடி வழியாக மின்சாரத்தினால் இருளில் ஒளிர்ந்த பூமியை படம் எடுத்து தனது இன்ஸ்டாவில், "First Flight travel with Wife" என்று குறிப்பிட்டுப் பதிவேற்றினான். அவளின் கவிதைப் பக்கத்

தினையும் டேக் செய்திருந்தான்.
 
New member
Joined
May 20, 2025
Messages
18
அவனின் செயலைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவள், தான் சொல்லியதற்காகத் தங்களது படங்களைப் போடாது விமானப் படத்துடன் போஸ்ட் போட்டவனைக் கனிவுடன் பார்த்தவளாய், "உங்களுக்கு இன்ஸ்டால போஸ்ட் போடுறது பிடிக்குமா கார்த்தி?" எனக் கேட்டாள்.

கைப்பேசியில் தீவிரமாக எதையோ செய்து கொண்டிருந்தவன் அவளின் கேள்வியில் திரும்பி அவளைப் பார்த்தான்.

"ஏன் இந்தப் போஸ்ட் போட்டது பிடிக்கலையா? இதையும் டெலீட் செஞ்சிடவா?" அவள் இதனைப் பிடிக்காமல் இவ்வாறு கேட்கிறாளோ என்று நினைத்து அவன் கேட்க,

"உங்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா? அதைச் சொல்லுங்க" எனக் கேட்டாள்.

"எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் வள்ளி. என் இன்ஸ்டா பேஜ் நீ பார்த்ததில்லையா?" என்றவன் கேட்டதும், உதட்டைப் பிதுக்கி இல்லையெனத் தலையசைத்தாள்.

தனது இன்ஸ்டா பக்கத்தைத் திறந்து கைப்பேசியை அவளிடம் கொடுத்தான். அவன் கல்லூரியில் படித்த நாளிலிருந்தே இதனைப் பயன்படுத்துவதைக் காண்பித்தான். அப்பக்கத்தை லட்சக் கணக்கானோர் பின்தொடர்ந்திருந்தனர்.

அவன் படித்துப் பட்டம் பெற்ற புகைப்படம், முதல் நாள் வேலை, அன்றாடம் உண்ணுவது, உறங்குவது, அவன் நினைப்பது, அவனுக்கு நடப்பது, அவன் எடுத்த இயற்கைப் படங்கள், வாழ்வியல் படங்கள், வாழ்வின் அவமானங்களைத் துயரங்களை அவன் கடந்து வந்த விதம், அவனது வாழ்வின் பற்றிய கண்ணோட்டமெனக் குவிந்து கிடந்தன பதிவுகள்.

அனைத்தையும் பார்த்தவாறு இருந்தவளிடம், "எனக்கு இந்த இன்ஸ்டா பேஜ் என்னோட கிளோஸ் ஃப்ரண்ட் மாதிரி வள்ளி. என்னோட சுகம், சோகம், துக்கம், சந்தோஷம் எல்லாத்தையும் இதுகிட்ட சொல்லிடுவேன். அப்படிச் சொல்லிட்டா மனசு ரிலாக்ஸ் ஆகிடும்" கண்கள் மின்ன உரைத்தான்.

அவனது மகிழ்வான முகத்தை ரசித்துப் பார்த்தவளாய் அவள் இருக்க, "ஆனா உனக்குப் பிடிக்கலைனா நம்மளோட படம் எதுவும் போட மாட்டேன்" என்றவன் கழிவறைக்குச் செல்வதாய் உரைத்து விட்டுச் சென்றான்.

தனது வார்த்தைக்கு இத்தனை மதிப்பளிப்பவனுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென அவளின் மனம் உந்தித் தள்ள, அவனது இன்ஸ்டா பக்கத்தில் தங்களது திருமணப் படத்தை, "வள்ளியின் கார்த்திகேயன்" என்று குறிப்பிட்டுப் பதிவிட்டாள்.

அதன் பிறகு தாங்கள் விமான நிலையத்தில் ஜோடியாக எடுத்த படங்களை, "என்னவளுடனான தேனிலவுப் பயணம்" என்று குறிப்பிட்டுப் பதிவேற்றியவள் கழிவறையில் இருந்து வந்து தன்னருகே அமர்ந்த கணவனிடம் அதைக் காண்பித்தாள்.

இன்ப அதிர்வுடன் விழிய விரிய பார்த்தவன், அவள் என்ன என்று உணரும் முன், மைக்ரோ நொடிப் பொழுதில் அவளின் கன்னத்தில் இதழ் பதித்து விலகி அமர்ந்தான்.

திகைப்புடன் கன்னத்தைத் தொட்டவளாய், "கார்த்தி பப்ளிக்" என்று கண்டனப் பார்வை பார்த்தாள் அவள்.

தீண்டும் தூரத்தில்
நானிருந்தும்
தீண்டாது நீ உறங்குகையில்
எம் காதல் உணர்வின் அதிர்வுகள்
உம்மைத் தீண்டவில்லையோவென
கலக்கம் கொள்கிறது மனம்
என்னவனே!

முந்தைய நாள் இரவு அவள் பதிவேற்றியிருந்த கவிதையை அவனுரைக்க, திகைத்த விழிப் பார்வை மேலும் விரிய அவனைப் பார்த்தவளுக்கு, நேற்று அவன் தன்னைத் தீண்டாது உறங்கியதை அந்நேரம் கவிதையாய் பதிவிட்டதை வாசித்திருக்கிறான் என்று புரிந்ததும் வெட்கம் பிடுங்கித் தின்ன, அவன் கண்களை நேர்க்கொள்ள இயலாது விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள் வள்ளி.

அவளின் தாடையைப் பற்றி நிமிர்த்தியவன் ரகசிய சிரிப்புடன் அவளின் கண்களுக்குள் ஊடுருவியவனாய், "சாரிடா, நேத்து ரொம்ப எதிர்பார்த்தியா?" எனக் கேட்டான்.

"அய்யோ அதைப் பேச வேண்டாமே" என்று சிணுங்கியவளாய் வெட்கத்துடன் அவன் தோளில் முகம் சாய்த்தாள் அவள்.

ஹா ஹா ஹா என வாய்விட்டுச் சிரித்தவனாய், "இந்தக் கவிதை விடு தூது நல்லாருக்குடா வைரக்கட்டி" என்று அவளின் கன்னத்தை அவன் கிள்ள,

"அச்சோ நேத்து ஏதோ மூட் அவுட்ல அப்படி எழுதி போட்டுட்டேன். இனி எழுதலை போங்க" என்று சிணுங்கலாய் முனகியவளைப் பார்த்துச் சிரித்தவனாய்,

"நோ நோ! எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ப்ளீஸ் உன் எழுத்தை மட்டும் எதுக்காகவும் யாருக்காகவும் நிறுத்தாத வள்ளி! உனக்கு என்ன தோணினாலும் எழுது" என்றான்.

அவனின் இச்சொல் அவள் நெஞ்சில் அவன் மீதான நேசத்தை அதிகரிக்க, அவன் புஜத்தில் உதட்டை அழுத்தி எடுத்தாள்.

"இதுக்குப் பேர் முத்தமா?" என்று கண் சிமிட்டி அவன் கேட்க, "பப்ளிக்கா இவ்வளோ தான்" என்றாள் அவள்.

"இல்லனா மட்டும் அள்ளிக் கொடுத்துடுவப் பாரு" என்று கேலிச் செய்தவனாய் தனது இன்ஸ்டாவில் அவள் போட்டிருந்த படத்தைப் பார்த்தவன், "வாவ் கேப்ஷன் வள்ளி! இனி போஸ்ட் போடுறதுனா உன்கிட்ட கேப்ஷன் கேட்கிறேன்" என்றவனாய் அவளைத் தோளோடு அணைத்து, "தேங்க்ஸ் வள்ளி" என்றான்.

அவனின் புஜத்தைப் பற்றியவளாய் அவன் தோள் சாய்ந்தவள், "உங்களுக்குப் பிடிச்ச எதுவும் எனக்கும் பிடிக்கும் கார்த்தி. எனக்குப் பிடிக்கலைனாலும் உங்க முகத்துல தெரியுற இந்தச் சந்தோஷத்துக்காக ஐ வில் அக்சப்ட் இட்! இப்படி அப்பப்ப ஏதாவது விசேஷனும் போது போட்டோ போட்டுக்கோங்க. தினமும் வேண்டாம். நம்மளுடைய பர்சனலையும் அங்கே எதுவும் ஷேர் செய்ய வேண்டாம்" என்றாள்.

தனது தோள் மீது தலைச் சாய்த்திருந்தவளின் தலை மீது தனது தலையைச் சாய்த்தவனாய் அவளின் விரல்களோடு விரல்களைக் கோர்த்தவன், "ஷூயர் வள்ளி. உனக்குப் பிடிக்காததை எதுவும் நான் செய்ய மாட்டேன்" என்றான்.

ஒருவிதமான மோன நிலையில் இணையரின் அண்மையை ரசித்தவர்களாய் அந்நொடியினில் இன்பத்துடன் பயணித்திருந்தனர் இருவரும்.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த முல்லைமலை எனும் இடத்திற்கு, விமான நிலையத்தில் இருந்து குண்டூசி வளைவுகளில் மேலும் இரண்டு மணி நேரம் பயணித்து அங்கு முன்பதிவு செய்திருந்த அறையை அடைந்திருந்தனர் இருவரும்.

அங்கே பெரிய உணவகங்கள் எல்லாம் கிடையாது. அங்கிருக்கும் மலைவாசி மக்கள் தான் உணவகங்கள் வைத்திருந்தனர். தனித்தனியாய் மூங்கிலாலான வீடுகளைத் தான் அறையாக விருந்தினர்களுக்கு வழங்குவார்கள் அங்கே. அவ்வாறு மூங்கில் வீடு ஒன்றில் தான் தங்கினர் இருவரும்.

மேகத்தின் அருகே வசிப்பது போன்ற மாயத்தோற்றதைக் கொண்ட அம்மலையில் எங்குக் காணினும் பச்சை பசேலென வனங்களே சூழ்ந்திருந்தன.

அந்த இடத்தைச் சென்று அடைந்ததும் தாய் தந்தையருக்கு அழைத்துப் பேச முற்பட்டவனின் எண் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாய் உரைக்க, அவளின் கைப்பேசி எண்ணும் அங்கே இயங்கவில்லை. எங்கோ ஓர் இடத்தில் மட்டும் கைப்பேசி அழைப்பெடுக்கும் என்று அங்கிருந்தவர்கள் கூறிய இடத்திற்குச் சென்று தாய் தந்தையரிடம் பேசி விட்டு அறைக்கு வந்த கார்த்திகேயன், "அடுத்த அஞ்சு நாளுக்கு நம்மளை யாரும் போன் செஞ்சி டிஸ்டர்ப் செய்ய முடியாதுடா வள்ளி. நீயும் நானும் மட்டும் தான் நம்ம உலகம்னு வாழ போறோம்" என்று பூரிப்புடன் உரைத்தவனாய் அவளைத் தன்னோடு இணைத்து இறுக அணைத்திருந்தான் கார்த்திகேயன்.
 
Top