• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 20, 2025
Messages
18
மறுநாள் காலை கண் விழித்த கார்த்திகேயன் தனதருகே உறங்கிய நிலையிலும் அழகுப் பதுமையாக இருக்கும் மனையாளைப் பார்த்து ரசித்தவனாய் தனது கைப்பேசியை எடுத்தவன் தனது முகத்தை அவளின் முகத்தருகே வைத்தவாறு, இருவரது முகங்கள் மட்டும் தெரியும் வண்ணம் தற்படங்களை (செல்ஃபி) எடுத்தான்.

அவளின் உறக்கம் கலையாது நெற்றியில் பட்டும் படாமல் முத்தமிட்டவன், எழுந்து சோம்பல் முறித்தவாறு கழிவறைக்குச் சென்றான்.

காலைக் கடன்களை முடித்துப் பல் துலக்கி முகம் கழுவியவனாய் வெளியே வந்து பார்க்க அவள் இன்னுமே உறக்கத்தில் தான் இருந்தாள்.

அவளருகில் படுத்தவனாய் கைப்பேசியை எடுத்தவன் தற்போது எடுத்த புகைப்படத்தைக் கருப்பு வெள்ளை படமாக்கி இருவரின் முகங்கள் மட்டும் தெரியுமாறு மாறுதல்கள் செய்து, 'sleeping beauty' என்ற அடைமொழியுடன்
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
எனும் பாடலுடன் ரீல்ஸ்ஸாக இன்ஸ்டாவில் பதிவேற்றினான். அதனுடன் இவளின் கவிதை இன்ஸ்டா பக்கத்தையும் டேக் செய்தான்.

அச்சமயம் அவள் புரண்டு படுக்கவும், அவளை அணைத்தவாறு உடன் இவனும் படுக்க, மெல்ல கண் விழித்தாள் அவள்.

கண் விழித்ததும் கணவனின் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"குட் மார்னிங் வைரக்கட்டி" என்று அவளின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சியவாறு இவன் கூறவும் புன்னகைத்தவளாய், "குட் மார்னிங்" என்றவாறு எழுந்து அமர்ந்தாள்.

"நாம க்யூட் ஜோடியாம்! பாரு எல்லாரும் சொல்றாங்க" என்றவனாய் தனது கைப்பேசியில் பதிவிட்டிருந்த ரீல்ஸூக்கு வந்திருந்த பின்னூட்டங்களை அவளிடம் காண்பித்தான்.

கண்களை அகல விழித்து அதிர்வுடன் பார்த்தவளாய், "என் போட்டோவை இன்ஸ்டால போட்டீங்களா? என்னைக் கேட்காம ஏன் போட்டீங்க?" கோபத்துடனே கேட்டவாறு பார்த்தவள், "இது எப்ப எடுத்த போட்டோ?" எனக் கேட்டாள்.

அவளின் கோபத்திற்கான காரணம் புரியாது பார்த்தவன், "ஏன் உனக்கு இன்ஸ்டால போட்டோ போட்டா பிடிக்காதா?" எனக் கேட்டான்.

"இது எப்ப எடுத்த போட்டோ. பெட்ல தூங்கிட்டு இருக்க மாதிரி இருக்கு. இப்படி யாராவது பப்ளிக்கா போட்டோ போடுவாங்களா? அறிவிருக்கா உங்களுக்கு?" என்று அவள் கத்தத் தொடங்கவும்,

"ஹே உன் முகம் மட்டும் தானே தெரியுது! அதுல அசிங்கமா எதுவும் இல்லையே! அதுக்கு ஏன் இப்படிக் கத்துற?" என்று கத்தினான் இவனும்.

"மொதல்ல இதை டெலீட் செய்யுங்க" என்றவள், "நீங்க என்ன செய்யுறது! நானே செய்றேன்" என்றவளாய் அந்தப் பதிவை டெலீட் செய்ய முனைய, "ஹே இருக்கட்டும்" என்று இவன் சொல்லி முடிப்பதற்குள் அதனை நீக்கியிருந்தாள் அவள்.

இவனுக்கு மேலும் கோபம் அதிகமாக, "யூ ஸ்டுப்பிட்! நான் எவ்ளோ ஆசை ஆசையா அந்தப் போஸ்ட் போட்டேன் தெரியுமா? நான் என்னமோ நீ வல்கரா டிரஸ் செஞ்சதை எடுத்து போட்டா மாதிரி இப்படிப் பதறுற! எனக்கும் டீசன்சி தெரியும். அதிலும் என் பொண்டாட்டியை எல்லார் பார்வைக்கு முன்னாடியும் எப்டி காண்பிக்கனும்னு எனக்கும் தெரியும்" கோபத்துடன் பேசிக் கொண்டே போனவன்,

"அந்தப் போட்டோ வேண்டாம்னா நேத்து நாம கல்யாணம் செஞ்சிக்கிட்ட போட்டோவும் வேணாம். அதை மட்டும் எதுக்குப் போட்டு வச்சிக்கிட்டு" என்று அவளின் கையிலிருந்த கைப்பேசியைப் புடுங்கியவன், முந்தைய நாள் போட்டிருந்த கல்யாணப் பதிவு அனைத்தையும் நீக்கினான்.

இவளின் கண்களில் கண்ணீர் பெருகி நிற்க, அதைக் கண்டும் காணாதவனாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு குளியலறைக்குச் சென்றிருந்தான்.

ஷவரை திறந்து விட்டு நீருக்கடியில் நின்றவனுக்கு மனது ஆறவேயில்லை. என்னைப் பற்றி என்ன நினைத்து வைத்திருக்கிறாள் இவள் என்று அத்தனை கோபமாக வந்தது அவனுக்கு.

இங்கே படுக்கையில் அழுதவாறு படுத்திருந்தாள் வள்ளி.

வள்ளிக்கு சமூக வலைத்தளம் என்றாலே அலர்ஜி. அதனால் நன்மையை விடத் தீமைகள் தான் அதிகம் நடக்குமெனத் தீவிரமாக நம்புகிறவள். கவிதை எழுதவென அந்த ஒரு பக்கத்தை வைத்திருக்கிறாளே தவிர வேறெங்கும் கிளைகள் இல்லை அவளுக்கு. அந்தப் பக்கத்திலும் கூடத் தனது படத்தையோ தன்னுடைய வாழ்வைப் பற்றியோ உத்தியோகத்தைப் பற்றியோ எதையுமே அவள் பகிர்ந்திருக்கவில்லை. அப்படி இருப்பவளுக்கு இப்படிப்பட்ட படத்தை அவன் பகிர்ந்ததைப் பார்த்ததும் உடலெல்லாம் கூசிவிட்டது.

அவனோ இவளுக்கு நேரெதிராகத் தனது அன்றாடங்களையும் படங்களையும் தொடர்ந்து இன்ஸ்டாவில் பகிர்ந்து வருபவன். அது அவனுக்கு மிகவும் பிடித்தமான விஷயமும் கூட. திருமணத்திற்குப் பிறகு தானும் தனது மனைவியும் இணைந்து தங்களது காதல் வாழ்வைக் குறிப்பிட்டு நிறையப் படங்கள் பதிவேற்ற வேண்டுமென்ற ஆசையில் இருந்தவன். இவையெல்லாம் சேர்ந்து அவனைக் கோபத்திற்குள் ஆழ்த்தியிருக்க, இவை எதையும் அறியாத பேதையாய் அழுதிருந்தாள் அவள்.

குளித்து முடித்து இடையில் துண்டுடன் வெளியே வந்தவன் அழுது கொண்டிருந்த மனைவியைச் சிறிதும் கண்டு கொள்ளாது உடுப்பை மாற்ற, இவளும் அவனைக் கண்டு கொள்ளாது குளியலறைக்குள் சென்றாள்.

இருவருமே அதன் பிறகு எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. இவள் குளித்து முடித்து வெளியே வரும் போது அவன் அறையில் இல்லை.

இவள் தயாராகி அறைக்கு வெளியே வந்த போது உணவு மேஜையில் அவன் உண்டு கொண்டிருக்க, பரிமாறிக் கொண்டிருந்தார் பார்வதி.

இவளைக் கண்டதும், "வா மா! உட்கார்! சாப்பிடு" என்று அவளை அருகே அமர்த்தி உண்ண பணித்தார்.

"நீங்க சாப்பிட்டீங்களா அத்தை? மாமா எங்கே?" எனக் கேட்டவாறு அமர்ந்தாள்.

"அவங்களுக்கு ஆபிஸூக்கு நேரமாகிடுச்சுனு கிளம்பிட்டாங்க. ஆமா உங்க இரண்டு பேருக்கும் இன்னிக்கு என்ன பிளான்? சினிமா பீச்சுக்குனு எங்கேயாவது போய்ட்டு வர்றீங்களா?" எனக் கேட்டார்.

இவள் இட்லியை உண்டவாறே அவனைப் பார்க்க, "எனக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்குமா. நேத்து ஆன்சைட்லருந்து நேரே வீட்டுக்கு வந்துட்டேனே! சில பெண்டிங் வேலைகள் இருக்கு. முடிச்சிட்டு வரேன்" என்றான்.

பார்வதி கேள்வியுடன் வள்ளியைப் பார்க்க, "நான் முந்தா நேத்தே ஆபிஸூக்கு ஒரு வாரம் லீவ் சொல்லிட்டேன் அத்தை" என்றாள்‌.

இருவரின் முகங்களைக் கண்டே அவர்களுக்குள் ஏதோ பிரச்சினை என்று கண்டு கொண்ட பார்வதி, "சரி மா நீயும் கிளம்பி அவன் கூட ஆபிஸூக்கு போய்ட்டு வா!" என்றார்.

இருவருமே புரியாது பார்வதியைப் பார்க்க, "நீயும் அதே ஆபிஸ்ல தானே மா வேலை செய்ற. உன் வேலையைப் பார்க்க போகச் சொல்லலை. அவன் ஆபிஸ்ல வேலையை முடிக்கிற வரைக்கும் கூட இருந்துட்டு அப்படியே எங்கேயாவது வெளில போய்ட்டு வாங்க" என்றார்.

"ம்மாஅஅஅஅ! அதுலாம் சரி வராது" என்று அவன் மறுப்பு தெரிவிக்க, இவளோ கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்தாள்.

அவனின் ஒதுக்கமும் பாராமுகமும் அவளை வாட்டியது.

"எல்லாம் சரி வரும். போமா நீ போய்க் கிளம்பு" என்று வள்ளியை அறைக்குள் அனுப்பி வைத்தவர், மகனுக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தார்.

"உன் விளையாட்டு புத்தியை அந்தப் பொண்ணுக்கிட்ட காண்பிக்காத! இவ கண்ணாடி மாதிரி எதுனாலும் சட்டு சட்டுனு ஒடிஞ்சி போற சென்சிட்டிவ் பொண்ணு. கொஞ்சம் பார்த்து பத்திரமா ஹேண்டில் செய்யனும்டா மவனே! உன் கோபத்தை எல்லாம் கொண்டு போய் அவகிட்ட காண்பிச்சிட்டு இருக்காத" என்றார்.

"ம்மாஅஅஅ அவகிட்ட கோபப்பட எனக்கு உரிமை இல்லையா?" என்று இவன் ஆதங்கத்துடன் கேட்கவும்,

"உரிமை இருக்குனு இப்பவே உன்னோட நெகட்டிவ் சைட்லாம் காண்பிச்சீனா, உன்னைப் புரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடியே உன் மேல வெறுப்பு வந்துடும்டா! மொதல்ல இரண்டு பேரும் புரிஞ்சிக்க முயற்சி செய்யுங்க. உங்களோடது பேருக்குத் தான் லவ் மேரேஜ் ஆனா உண்மையிலேயே இது அரேஞ்ச் மேரேஜ் போலத் தான். காதல் சொன்ன கையோட கல்யாணம் செஞ்சாச்சு. இனி மேல் தான் புரிஞ்சி விட்டுக் கொடுத்து வாழப் பழகனும்" என்றார்.

அமைதியாக அன்னையின் சொல்லைக் கேட்டவனாய், "புரியுது மா" என்றான்.

"சரி நான் அவ கிளம்பிட்டாளானு பார்க்கிறேன்" என்று அறைக்குள்ளே சென்றான்.

வழமைப்போல் சுடிதார் அணிந்து கிளம்பி நின்றவளைப் பார்த்தவன், "வள்ளி புடவைக் கட்டுறியா?" எனக் கேட்டான்.

அவன் அவளிடம் பேசிய மகிழ்ச்சியில், ஏன் எதற்கு என்று கூடக் கேட்காமல், "ஹ்ம்ம் கட்டுறேன்" என்றவளாய் தனது பிறந்த வீட்டினிலிருந்து தான் கொண்டு வந்திருந்த புடவைகளைக் காண்பித்து,

"இதுல எதைக் கட்டனு சொல்லுங்க" எனக் கேட்டாள்.

கட்டிலில் அமர்ந்திருந்தவனின் அருகில் கைகளில் புடவையை வைத்துக் கொண்டு அவள் நிற்க, நிமிர்ந்து அவளைப் பார்த்து சிரித்தவனாய் அவளின் இடையோடு இறுக்கி அணைத்து வயிற்றில் முகம் புதைத்தவன், "சாரி" என்றான்.

கையிலிருந்த புடவையைக் கட்டிலில் வைத்தவளாய் அவனின் தலைமுடிக்குள் விரலை விட்டுக் கோதியவள், "நானும் சாரி" என்றாள்.

சிரிப்புடன் அவளின் வயிற்றில் இதழ் பதித்துச் சிலிர்க்கச் செய்து நிமிர்ந்தவன், "சரி நீ கிளம்பு" என்றவனாய் வெளியே சென்றான்.

அழகாய் புடவை உடுத்தி கை நிறையக் கண்ணாடி வளையல்கள் அணிந்து, நீண்ட கூந்தலைப் பின்னி, மஞ்சள் தாலியுடன் வகிட்டில் குங்குமம் வைத்து வந்த மனைவியைப்‌ பார்த்ததும் இவனின் கண்கள் மின்ன, "அழகா இருக்கடா வள்ளி" என்றான்.

மகனின் கையினில் மல்லிப்பூவைக் கொடுத்த பார்வதி, "உன் பொண்டாட்டிக்கு வச்சி விடுடா" என்றார்.

அவன் அவளின் கூந்தலில் வைக்கத் தடுமாற, எப்படி வைக்க வேண்டுமெனச் சொல்லிக் கொடுத்தவாறு மகன் மருமகளுக்குப் பூச்சூடுவதை மகிழ்வுடன் பார்த்திருந்தார் பார்வதி.

இருவருமே மகிழ்வுடன் மகிழுந்தில் பயணத்தை மேற்கொள்ள, "எங்க வீட்டு வழியா போறீங்களா கார்த்தி. அப்பா அம்மா என்ன செஞ்சிட்டு இருப்பாங்களோனு அவங்க நினைப்பாவே இருக்கு" என்றவள் சொன்னதும், சரி என்றவனாய் அவளின் வீட்டு வழியாக மகிழுந்தைச் செலுத்தினான்.
 
New member
Joined
May 20, 2025
Messages
18
அவர்களின் கடை இன்றும் மூடப்பட்டு இருக்க, வீட்டு கதவும் மூடியிருந்தது போல் தான் தெரிந்தது.

'இன்னிக்கும் கடையைத் திறக்கலையா? அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க கேட்டா என்ன பதில் சொல்றதுனு திறக்காம இருந்திருப்பாங்களா இருக்கும். அப்பா அம்மாவை தலை நிமிர்ந்து வாழ வைக்கிறேன்னு வைராக்கியமா இருந்த நானே இப்படி ஒரு அவமானத்தையும் தலைக்குனிவையும் கொடுத்துட்டேனே! இதை எப்படிச் சரி செய்யப் போறேன் முருகா' கவலையுடன் மனத்தோடு நினைத்தவளாய் அவளது வீட்டைக் கடக்க, அவளின் முகத்தையும் சாலையையும் மாறி மாறி பார்த்தவாறு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த கார்த்திகேயன், "இன்ட்ரோவெர்ட் ஆளுங்க கூடக் குடும்பம் நடத்துறது கொஞ்சம் கஷ்டம் தான் போல" என்றான்.

திடீரெனச் சம்பந்தம் இல்லாமல் பேசியவனை இவள் புரியாத பார்வைப் பார்க்க, "நீ மனசுல எதையோ நினைச்சு கலங்குறனு உன் முகத்துலயே தெரியுதுடா வள்ளி. ஆனா வாயைத் திறந்து சொல்ல மாட்டேங்கிறியே! அதைச் சொன்னேன்" என்றவன் கேட்டும்,

"ஒன்னுமில்ல அம்மா அப்பாவை நினைச்சேன்" என்று மட்டும் உரைத்தாள்.

"ஹ்ம்ம்ம் எதுவா இருந்தாலும் என்கிட்ட மனசு விட்டு பேசு வள்ளி. நீ சொன்னா தானே எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட ஒரு வருஷமா உன் கூட லன் சாப்பிட வரேன். எப்பவும் கேட்டதுக்கு மட்டும் தான் பதில் வருமே தவிர வேற எதுவும் என்கிட்ட ஷேர் செஞ்சது இல்ல நீ! அப்பலாம் இந்தப் பொண்ணு உம்முனாமூஞ்சி போலன்னு நினைச்சிருக்கேன். ஆனா உன் கவிதைலாம் படிச்ச பிறகு தான் நீ இன்ட்ரோவெர்ட்னு புரிஞ்சிது" என்றான்.

அப்படியா என்பது போல் அவனை அவள் பார்த்திருக்க, "நீ என் லவ்வை அக்சப்ட் செய்யவே ஒரு வருஷம் ஆகிடும்னு நினைச்சேன். ஆனா ஒரே மாசத்துல இப்படி என் மனைவியா என் பக்கத்துல உட்கார்ந்திருப்பனு நினைச்சு கூடப் பார்க்கலை. எப்ப உனக்கு என் மேல காதல் வந்துச்சு வள்ளி?" எனக் கேட்டான்.

உதட்டைப் பிதுக்கியவளாய், "தெரியலை கார்த்தி! ஆனா உதயனை அப்பா கல்யாணம் செஞ்சிக்கச் சொன்னதும், மனசுக்குள்ள ஒரு மாதிரி கவலை. முருகர் முன்னாடி நின்னு கண்ணை மூடினப்ப, நீங்க தான் கண்ணு முன்னாடி வந்தீங்க! உங்ககிட்ட நம்ம கல்யாணத்தப் பத்தி பேசனும்னு அப்ப தான் முடிவு செஞ்சேன்" என்றவள்,

"ஆனா இப்படி அப்பா அம்மாவை எதிர்த்து வீட்டை விட்டுப் போய்க் கல்யாணம் செஞ்சிப்பேன்னுலாம் நான் கனவுல கூட நினைச்சதில்லை கார்த்தி. இப்ப நினைச்சாலும் மனசு பதறுது. அம்மா அப்பா இப்ப என்ன நிலைல இருப்பாங்களோ. நான் ஒரே பொண்ணு வேற!" என்று கூறும் போதே அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளியாக,

வள்ளியின் கரத்தினைப் பற்றித் தட்டிக் கொடுத்தவனாய், "முருகர் கோவிலுக்குப் போய்ட்டு ஆபிஸ் போலாமா?" எனக் கேட்டான்.

தன்னிலையைப் புரிந்து அவன் செயல்படுவதில் அவளின் மனம் மகிழ்வு கொள்ள, "தேங்க்ஸ் கார்த்தி" என்றாள்.

மகிழுந்தை ஓட்டியவாறே மெல்ல அவளைத் தோளோடு அணைத்தவாறு தட்டிக் கொடுத்தவன், "சியர் அப் பொண்டாட்டி! முருகரைப் பார்த்துட்டு ஜோடியா ஆபிஸ் போய்ட்டு வருவோம்" என்றவனாய் கோவிலுக்குச் சென்றான்.

அங்கே இருவருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்து முருகரிடம் பிரார்த்தனையும் முடித்து விட்டுப் பிரகாரத்தில் அமர்ந்த போது வள்ளியின் மனம் நிறைந்திருந்தது.

மனநிறைவும் மகிழ்வுமாய் அலுவலகத்திற்குச் சென்றனர்.

வள்ளி அலுவலகத்தில் எவரிடமும் பேசவே மாட்டாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். ஆனால் அதற்கு நேர்மாறாகக் கார்த்திகேயனோ வண்டியை நிறுத்தமிடத்தில் இருக்கும் பணியாள் முதல் அந்த அலுவலகத்திற்குள் இருக்கும் அனைத்து கடைநிலை ஊழியர்கள் முதல் உயர்நிலை ஊழியர்கள் வரை அனைவரிடமும் நட்புடன் பழகுபவன். அனைவருக்கும் கார்த்திகேயன் வெகு பரிச்சயம்.

அலுவலகத்தில் மகிழுந்தை நிறுத்தும் இடம் முதல் அங்கிருந்து அவனது இருக்கைக்குச் செல்லும் வரை அனைவரிடமும் வள்ளியை தனது மனைவி என்று அறிமுகம் செய்து வைத்தவாறு அவன் செல்ல, "என்ன சார் லவ் மேரேஜா?" என்று தான் அனைவரும் கேட்டிருந்தனர்.

வள்ளிக்குச் சங்கோஜமாகிவிட, "அவங்க கேட்காம நீங்களா ஏன் என் பொண்டாட்டி, என் பொண்டாட்டினு கொட்டம் அடிச்சிட்டு இருக்கீங்க?" என்று வினவ,

"பொண்டாட்டியை பொண்டாட்டினு தானே சொல்ல முடியும்" என்று இவன் கூறிய பதிலில் தலையில் அடித்துக் கொண்டாள் இவள்.

"சரி நான் கேட்டீன்ல உட்கார்ந்திருக்கேன். நீங்க வேலையை முடிச்சிட்டு வாங்க" என்றவளாய் உணவகத்தில் இவள் அமர்ந்த நொடி, சத்யாவுடன் கார்த்திகேயனின் பெண் நட்புகள் நாலைந்து பேர் இவளைச் சூழ்ந்து கொண்டு இவர்களின் காதலைப் பற்றிக் கேள்வி மேல் கேட்டு படுத்தி எடுத்தனர்.

"எப்படிக் கார்த்தியை கரெக்ட் பண்ணீங்க வள்ளி?"
"லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா?"
"யாரு லவ்வை பர்ஸ்ட் சொன்னது?"
"கார்த்தித் தான் சொல்லிருப்பான்" என்று ஒரு பெண்ணும், "இல்ல இல்ல வள்ளி தான் சொல்லிருப்பாங்களா இருக்கும், கார்த்தியோட ஹேண்ட்சம்ல மயங்கிருப்பாங்க" என்று ஒரு பெண்ணும் பேசிக் கொண்டே போக,

'கார்த்தி இப்ப மட்டும் நீங்க என் கைல கிடைச்சீங்க' என்று மனத்தோடு அவனைத் திட்டியிருந்தாள் வள்ளி.

இறுதியில் சத்யா தான் வள்ளியின் வாட்டமான முகத்தைப் பார்த்து அனைத்து பெண்களையும் அனுப்பி வைத்தாள்.

"இந்தப் பூனையும் பால் குடிக்குமானு இருந்துட்டு இப்படி ஒரு ஹார்ட் அட்டாக் நியூஸ் கொடுப்பனு நினைக்கலை வள்ளி" என்று சிரித்தவாறு சத்யா கூறவும்,

"யூ டு புரூட்டஸ்" என்று கடிந்து கொண்டாள் வள்ளி.

"எனக்குப் பயமா இருக்கு சத்யா! இனி இந்த ஆபிஸ்ல எல்லாரும் என்னைப் பார்க்கிற பார்வை எப்படி இருக்கும்?" எனக் கவலையுடன் வள்ளி கேட்க,

"லவ் மேரேஜ்னாலே ஊரு உலகம் கண் காது மூக்கு வச்சி ஆயிரம் பேசத் தான் செய்யும். அதுலாம் காதுல வாங்காம உன் வாழ்க்கையை வாழப் பழகு வள்ளி" என்று அறிவுறுத்தினாள் சத்யா.

மதிய உணவு வேளையில் கார்த்திகேயனையும் வள்ளியையும் சேர்த்து வைத்து கிண்டல் செய்து ஒருவழி ஆக்கிவிட்டாள் சத்யா.

கார்த்திகேயன் குழுவில் உள்ளவர்கள் இவர்களுக்கெனக் கேக் வாங்கி வெட்ட வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

கார்த்திகேயனின் மேலாளர் அவனிடம் ஒரு கவரை கொடுத்தவராய், "இது நம்ம டீம் சார்பாக உனக்கான கல்யாணப் பரிசு கார்த்தி" என்றார்.

பிரித்துப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தவனாய், "சார் ஹனிமூன் பேக்கேஜ்ஜா? அதுவும் நாளைக்கேவா?" என வினவினான்.

"ஆமா கார்த்தி. கல்யாணம் முடிஞ்ச கையோட ஹனிமூன் போறது தான் பெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும். நீயும் உங்க வைஃப்பும் டூ டேஸ் த்ரீ நைட்ஸ் ஸ்டே பண்ற மாதிரி முல்லைமலைங்கிற ஹில் ஸ்டேஷன்ல புக் செஞ்சிருக்கோம். என்ஜாய் யுவர் ஹனிமூன்" என்றார்.

மறுநாள் மகிழ்வுடன் தேனிலவுக்குக் கிளம்பிச் சென்றிருந்தனர் இருவரும். இவர்கள் தேனிலவு முடித்து

வரும் பொழுது ஓர் அதிர்ச்சி செய்தி அவர்களுக்காகக் காத்திருந்தது.
 
Top