• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
9



பத்து வருடங்களுக்கு முன்பு:

மனதில் எடுத்த முடிவோடு அனைத்தையும் நல்லபடியாக முடித்திருக்கிறோம் என்ற திருப்தியோடு சென்னையிலிருந்து பேருந்தில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து, திருச்சி தாண்டி விராலிமலை அருகிலுள்ள சுங்கச்சாவடியின் சிக்னலில் நின்றது.

அதே நேரம் பக்கத்து பிரிவில் எதிரில் மேலூரிலிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் தன் மாமாவைத் தேடி வந்த ஹரிப்ரியா அமர்ந்திருந்தாள்.

பேருந்தில் அமர்ந்திருந்த ஹரிப்ரியாவின் கண்களில் சுங்கச்சாவடியின் மறுபகுதியில் நடந்து கொண்டிருந்தவன் பட, கண்கள் சட்டென்று பளிச்சிட்டது. “மாமா” என உதடசைய, அவன்தானா என்று பார்க்க... அதே இளநீல கலர் நேர்கோடு போட்ட சட்டை, க்ரே கலர் பேண்ட் அணிந்திருந்தான். அவன்தான் என உறுதி செய்ததும் ‘மாமா’ என்றபடி பஸ்ஸிலிருந்து இறங்கினாள்.

ஒரு வினாடி நிதானமாக யோசித்திருந்தால் அந்த சட்டையை இப்பொழுது இவள்தான் அணிந்திருக்கிறாள் என்று தெரிந்திருக்கும். ஆனால், விதி யாரை விட்டது.

ஏற்கனவே தாவணிக்கு மேல் சட்டை போட்டிருந்ததால் அனைவரும் அவளை ஒரு மாதிரியாக பார்த்திருந்தனர். இப்பொழுது மாமா என்று நகர்ந்து கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து குதித்தவளை, ஓட்டுனர், நடத்துனருடன் சேர்ந்து மனிதாபிமானமுள்ள ஒரு சிலர் “எங்கமா போற?” என கேட்ட அக்கறையான வார்த்தைகள் காதில் விழவேயில்லை.

அவள் குதித்த அதே நேரம் பஸ்ஸிலிருந்த புழுக்கத்தால் காற்றோட்டமாக நிற்க எண்ணி இறங்கிய கிரியின் பார்வை, எதிரில் தற்செயலாய் செல்ல... ப்ரியா பஸ்ஸிலிருந்து குதித்து “மாமா” என எதிரிலிருக்கும் தன்புறம் வருவதைப் பார்த்தவனுக்கு திடீரென்று ராசாத்தியின் நினைவு வந்தது. தன்னருகே வரும்பொழுது வினாடி நேரமே ஆனாலும், அங்குள்ள வெளிச்சத்தில் அவள் கண்களைக் கண்டவனுக்கு, ராசாத்தியைத் தவிர எதுவும் தோன்றவில்லை. தன்னைத் தாண்டி சென்றதும், ‘அச்சோ! சின்னப் பெண்ணாக இருக்காளே. இந்த இடத்தில் யாரைத்தேடி போறாளோ தெரியலையே’ என்று அவள் பின்னே சென்றான்.

சுங்கச்சாவடி தாண்டி நிறைய தூரம் வந்தவள், அந்த இளநீல சட்டைக்காரனைப் பார்த்து சந்தோஷத்தில் “எங்க மாமா போறீங்க? வாங்க மாமா வீட்டுக்குப் போகலாம்” என்றதும் அவன் திரும்ப மின்சாரம் தாக்கியது போலானாள். “சா.. சாரி அண்ணா எங்க மாமான்னு நினைச்சிட்டேன்” என தடுமாறினாள்.

“பரவாயில்லமா” என்று அவன் சென்றுவிட மூச்சை இழுத்துவிட்டு குனிந்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள் சட்டையை. தன்னைத் தானே தலையில் தட்ட, பஸ் நினைவு வந்ததும் “ஐயையோ பஸ்ஸு!” என்று தலைநிமிர்ந்து சுற்றிலும் பார்த்தவளுக்கு எதுவோ வித்தியாசப்படுவது தெரிந்தது. சுங்கச்சாவடியிலிருந்து குறைந்தது முன்னூறு மீட்டர் தூரமாவது தள்ளி வந்திருப்பது புரிந்தது. அவளைச் சுற்றிலும் வெளிச்சம் மெல்லியதாக இருந்தாலும் அதையும் மீறி இருட்டும் இருந்தது. ஒருசிலர் ஜோடியாக நட்ட நடு ரோட்டில் தங்கள் சல்லாபத்தை ஆரம்பித்தபடி வந்திருந்த கார் பைக்குகளில் சென்றனர்.

“ச்சீய்.. இப்படியெல்லாமா நடக்கும்” என நினைத்தவளுக்குத் தெரியுமா? இதெல்லாம் நூற்றில் ஒரு பங்கென்று. வீட்டை விட்டால் பள்ளி, அதைவிட்டால் தங்களின் தோட்டம் என்றிருந்தவளுக்கு அந்த சின்னச் சின்ன சில்மிஷங்களே அதிகமாகப்பட்டது. “அச்சோ.. பஸ் போயிருக்குமே” என திரும்பவும் நினைவு வந்தவளாக, செல்ல யத்தனிக்கையில்...

“என்னடா செல்லம் ரொம்ப நேரமா நிற்கிறியா? நான்தான் கொஞ்சம் லேட் போல. சரிவா போகலாம்” என அழைத்தான் ஒருவன்.

தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பியவளுக்கு பயத்தில் மூச்சை அடைத்தது. மூன்று பேர் கண்களில் ஒருவித வெறியுடன் நின்றிருந்தனர். அவளுக்கு இந்த பார்வை புதிது. அதற்கான அர்த்தம் புரியவில்லை. ஆனாலும், ஒரு எச்சரிக்கை உணர்வு வந்து, “சாரி நான் உங்களுக்காக காத்திருக்கலை. என் மாமாவைத் தேடி வந்தேன்.” என்றாள்.

“அதான் செல்லம் நாங்கதான் உன் மாமா. டேய்! பாப்பாக்கு இருபத்தஞ்சு வயசுன்னு சொன்னாங்க. இது இருபதுக்கு கீழதான் இருக்கும் போல.”

“ஆமாடா. அதான் எனக்கும் புரியலை” என்றான் மற்றொருவன்.

“நீங்க வேற யாரோன்னு பேசிட்டிருக்கீங்க. எனக்கு கல்யாணமாகிருச்சி. எங்க மாமாவைத் தேடித்தான் வந்தேன்” என்று மூச்சுவிடாமல் சொல்லி தனக்கே குழிதோண்டினாள்.

“அப்ப சரிடா இவதான் ஒரே நேரத்துல மூணு பேர்னதும் பயந்துட்டா போல அதான் உளறுறா. நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு கன்னிப் பொண்ணா வரும். எல்லாம் முடிஞ்சதுங்கதான் வந்து மாட்டும்” என்றதும் அதிர்ச்சியில் இரண்டடி பின்னே எடுத்து வைத்தாள்.

“என்னடா பாப்பா பம்முது?”

“ஒருவேளை அது சொல்றது உண்மையோ என்னவோடா” என்றான் அடுத்தவன்.

“எதாயிருந்தா என்ன? நாம புக் பண்ணியாச்சி. அவ இல்லன்னா இவ அவ்ளோதான். கூட்டிட்டு வாடா. வரலன்னா தூக்கிட்டு வாடா பார்த்துக்கலாம்” என்றான் தலைவன் ஸ்தானத்திலிருந்தவன்.

மிரட்சியுடன் பார்த்த ப்ரியா ஓட ஆரம்பிக்க.. அவளை கைபிடித்திழுத்தான் மற்றொருவன்.

“ஏய்.. ச்சீய் கையை பிடிக்காத. விடு.”

“ஏன் கையை பிடிச்சா என்ன? உன் புருஷன் பிடிச்சிருப்பான் தான, எங்களையும் கொஞ்ச நேரத்துக்கு அப்படி நினைச்சிக்கமா” என்றான் கேவலமாக சிரித்தபடி.

அருவருப்புடன் கையை விடுவிக்க முயற்சிக்க, “டேய் கையைப் பிடிக்காத என்னைப் பிடின்னு சொல்றா போலடா” என்று மூன்றாமவன் ஏற்றிவிட்டான்.

முதலாமவன் அவளை தன்னுடன் சேர்த்தணைக்க முற்பட, திமிறி விலகப் பார்த்தவளை இன்னும் இழுத்து முத்தமிட போகையில், நடுவில் ஒரு கரம் நீண்டது.

ஹரிப்ரியாவின் பின்னால் வந்த கிரி, அவள் வேகமாக ஓடவும், தானும் ஓடினால் பார்க்கிறவர்களின் பார்வைகள் இருவரின் மீதும் தவறாக விழுமென்பதால், அந்த கெட்ட பெயரை முன்னே செல்லும் பெண்ணுக்கு வாங்கிக் கொடுக்க விரும்பாமல் வேகமாக நடக்க மட்டும் செய்தான். அவன் பார்வை வட்டத்திலிருக்கும் போதே அந்த பெண் யாரையோ அழைப்பதையும் அவன் திரும்பியதும் பதற்றத்தில் ஏதோ சொல்வதையும் பார்த்தவனுக்கு பரிதாபமாகிப் போனது. ‘தெரிந்தவன் என்றெண்ணி யாரையோ பிடித்திருப்பாள் போல’ என்றபடி நடந்தவன் திரும்பிவிட எண்ணினான்.

அதே நேரம் காரிலிருந்து மூவர் இறங்கி அவளை நோக்கி நடந்து வர, அதைப் பார்த்தவனுக்கு எதுவோ சரியில்லையென்று பட்டது. பாவம் அந்தப் பெண் என்று தனக்கு பாதுகாப்புக்கு எதாவது கிடைக்குமா என சுற்றிப்பார்த்து அங்கு நின்றிருந்த லாரிக்கடியில் ஸ்பேர் பார்ட்ஸ் இருக்க அதிலிருந்த நீளமான ஸ்க்ரூவையும், அருகிலிருந்த மூன்றடி நீளமுள்ள சின்ன இரும்பு ராடையும் எடுத்து அவர்களை நெருங்க ஐந்தடி இருக்கும் இடைவெளியில் இரும்பு ராடை மறைத்து ஸ்க்ரூவை சட்டைக்குள் சொருகியபடி அந்த பெண்ணை நோக்கி வர, அதற்குள் அவர்கள் எல்லை மீற ஆரம்பிக்க, சட்டென்று கையை நடுவில் நீட்டினான்.

நடுவில் நீண்ட கரத்தைப் பார்த்தவன், “இந்த நேரத்துல யார்டா அது வில்லன்” என்றபடி திரும்ப...

“வில்லன் இல்லடா தம்பிகளா ஹீரோ” என்றான் கிரிதரன்.

“டேய்! ஹீரோவாம்டா” என்று மூவரும் சிரித்தபடி, “அப்புறம் ஏன்டா வில்லன் வேலை பார்க்கிற” என்றான்.

“பொறுக்கிங்களுக்கு நான் வில்லனா இருந்துட்டுப் போறேன்” என்று தோளைக்குலுக்க... தனக்குக் கிடைத்த ஆதரவில் கிரியின் பின்னால் உடல் நடுங்கியபடி கோழிக்குஞ்சாய் மறைந்தாள் ஹரிப்ரியா..

“அவளை எங்ககிட்ட விட்டுட்டுப் போயிரு. இவ நாங்க பிக்ஸ் பண்ணின பொண்ணு.”

“அச்சோ இல்ல. மாமாவைத் தேடித்தான் வந்தேன். இவங்கதான் அசிங்கமா பேசி கையெல்லாம் பிடிச்சிழுக்கிறாங்க. என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க ப்ளீஸ்” என்றாள் அழுகையுடன்.

“ஏன் பாப்பா மாமாதான் உன்னை அங்கேயே நிற்க சொன்னேனே, அப்புறம் ஏன் என்னைத்தேடி இவ்ளோ தூரம் வந்த” என்று அவள் புறம் திரும்பி கண்ணால் அவனை ஒத்து பேசச் சொல்லி ஜாடைகாட்ட, ‘பாப்பா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் புதுத்தெம்பு வர ஜாடையை புரிந்தவளும் அழுதபடி தலையசைத்தாள்.

“ஸ்.. பாப்பா எதுக்கு அழுற? அதான் மாமா வந்துட்டேன்ல. வா கிளம்பலாம். அம்மா தேடிட்டிருப்பாங்க” என்று அவ்விடத்தை விட்டு கிளம்பியவர்களை...

மூவரும் மறித்து, “என்ன எங்களையெல்லாம் பார்த்தா கேனைங்க மாதிரி தெரியுதா? முதல்ல அவளை விட்டுட்டுப் போடா. உன் மாமா போஸ்டை கொஞ்ச நேரம் நாங்களும் எடுத்துக்கறோம்” என்றான்.

“ப்ச்... உனக்கென்ன கட்டிப்பிடிச்சி முத்தம் குடுக்கணும் அவ்வளவு தான” என்று ஹரிப்ரியாவிடம் திரும்பிய கிரி, “பாப்பா! மாமா அழகா பார்க்க லுக்கா இருக்கேன் தானே” என்றான்.

அவனின் கேள்வியில் முதலில் திணறினாலும் ஹரியின் முகம் நினைவில் வர, “உங்களுக்கென்ன மாமா செம கலர்! செம ஸ்மார்ட்! ஹீரோ லுக்கா இருக்கீங்க” என்றவளுக்கே பேசுவது தான்தானா என்று தோன்றியது.

அதைக் கேட்ட கிரிதரனுக்கோ ராசாத்தியின் குதூகலிப்பை அவளின் பேச்சில் கண்டு முகத்தில் புன்னகை வர அவர்களிடம் திரும்பினான்.

“என்னடா நக்கலா? நாங்க என்ன கேட்கிறோம், எங்க முன்னாடியே நீங்க ஆணழகன் போட்டி நடத்துறீங்க?” என்றான் எரிச்சலாக.

“ம்... அதுக்குத்தான்டா வர்றேன். அழகாயிருக்கிறதால தான பாப்பாவை கிஸ் பண்ணப்போன, இப்ப நான் ஆணழகன்னு நீயே ஒத்துக்கிட்டல்ல. ஸோ, என்னைக் கட்டிப்பிடி, கிஸ்ஸடி நான் எதுவும் சொல்ல மாட்டேனே” என்றான் விஷமமாக.

கிரியின் பாவனையில் சட்டென்று ப்ரியா சிரிக்க... “என்னடா ரெண்டுபேரும் சேர்ந்து எங்களையே கலாட்டா பண்றீங்களா? உங்களை..” என்று பல்லைக் கடித்தபடி “மரியாதையா அவளை விட்டுட்டுப் போயிரு. இல்ல உன் உயிர் போயிரும் ஜாக்கிரதை” என்றான்.

அதில் அரண்ட ப்ரியா கிரியின் கையைப் பிடிக்க அவள் கையை ஆறுதலாக தட்டிக்கொடுத்து, “ஒருத்தனை கொன்னு போட்டு அவன் பிணத்து மேல ஒரு பொண்ணோட சல்லாபிக்கிறது வேணுமாடா? இதே உன் அக்கா தங்கைனா விட்டுட்டு ஓடுவியா?” என்றான் கோபமாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“இதையே எத்தனை காலத்துக்குத்தான்டா கேட்கிறது. வேற எதாவது ட்ரை பண்ணு.”

“நாங்களும் தான் எத்தனை தடவைதான்டா சொல்றது. நீங்களும் தான் கேட்டுப் பாருங்களேன்டா. என்ன குறையப் போறீங்க? ஒரு நேரம் கேட்டுப்பாருங்க அடுத்து இந்த டயலாக் வராது” என்றான் கிரிதரன்.

முதலாமவன் “அவ்வளவுதான? டேய்! எங்கக்காவுக்கு ஒரு போனைப் போட்டு சாருக்கு கம்பெனி கொடுக்கச் சொல்லு” என்றுவிட்டு, “நீ வா செல்லம் போகலாம்” என ப்ரியாவின் கைபிடிக்கப் போக, பயத்தில் கிரியின் புறம் இன்னுமே ஒண்டினாள்.

அப்பொழுதுதான் கிரிக்கு இவர்கள் மிகவும் வில்லங்கமானவர்கள் என்று தோன்றியது. எப்படி தப்பிப்பது என புரியாமல் நின்றவன் மெல்ல அவளை பின்புறமாக தள்ளியபடி இரும்பு ராட் இருக்கும் பக்கமாக வந்து இடுப்பிலிருந்த ஸ்க்ரூவை எடுத்து, “எதாவது பண்ணனும்னு நினைச்சா உங்க உடம்புல உயிரிருக்காது போங்கடா” என விரட்ட ஆரம்பித்தான்.

“பார்றா ஹீரோவோட பொருளை. நாங்களும் தான் வச்சிருக்கோம்” என்று பாக்கெட் கத்தியை நீட்டியபடி, “மச்சி கார்லயிருந்து அதையும் எடுத்துட்டு வா” என்றதும் ஒருவன் சென்று எடுத்து வந்த பொருளைப் பார்த்ததும் கிரிக்கு உடல் உதறத்தான் செய்தது. அவர்கள் மூவர் தான் ஒருவன். எப்படி சமாளிப்பது என்று யோசித்தானே தவிர எப்படி ப்ரியாவை கைவிட்டு ஓடுவது என்று நினைக்கவில்லை. கையில் பெட்ரோல் தீப்பெட்டி மட்டுமல்லாமல் துப்பாக்கியும் வைத்திருந்தான்.

“சுட்டுட்டு பெட்ரோல் ஊத்தி எரிச்சி அடையாளமே இல்லாமல் பண்ணிருவோம்” என்று தங்களின் பலத்தைக் காட்ட...

சுற்றிலும் பார்த்து வேகமாகக் குனிந்த கிரிதரன் இரும்பு ராடால் துப்பாக்கி ஏந்தியவன் கையில் போட அது இருட்டில் ஏதோ ஒரு பள்ளத்தில் விழுந்தது. மற்றவர்கள் வளைக்கும் முன் மூவரையும் சரமாரியாக அடித்து அவளையும் இழுத்துக் கொண்டு திரும்பிப்போக கால் வைக்க...

கிரியின் உடலில் இறங்கியது அவன் எடுத்து வந்த ஸ்க்ரூ ட்ரைவ். எதை தன் பாதுகாப்பிற்காக எடுத்து வந்தானோ, அது அவனுக்கே பாதகமாக முடிந்தது. “பாப்பா நீ போயிரு” என்று அவளைத் தள்ளிவிட்டு விரட்ட அவளை பிடிக்கப் போனவனைத் தடுக்க அவனின் அடுத்த தாக்குதலையும் சேர்த்தே வாங்கினாலும், கை அவன் கழுத்தைப் பிடித்ததில் மற்ற இருவர் நெருங்குமுன் பாதி உயிராய் தூக்கிப் போட்டான். அதே போல் மற்ற இருவரையும் தாக்கத் தயாராக, ஒருவன் கிரியின் கையில் மாட்ட மற்றவன் கிரியிடமிருந்து தப்பி, ஓடிக்கொண்டிருந்தவளை பிடித்தான்.

அவளை கிரி இருக்குமிடமே இழுத்து வந்தவன், “இவளுக்கு எதுவும் ஆகிரக்கூடாதுன்னு தான நீ உயிர்விடப் போற? அப்ப இவள் மட்டும் எதுக்குடா உயிரோட இருக்கணும்” என்றவன் தன் கத்தியை எடுத்து ப்ரியாவின் கையில் கோடிழுக்க, அவளின் அலறலில் கிரி பிடித்திருந்தவனை விட... அவன் கிரியை மடக்கினான். அலறிய ப்ரியாவின் வாயை மூடி, “உன்னை கிஸ் பண்ணக்கூடாது சொன்னான்ல” என்று முத்தம் கொடுக்குமுன் கிரி சுதாரித்து அவனுக்கு உதைவிட்டான்.

“அட! நீ இன்னும் அடங்கலையா?” என்று அவளுக்கு தோளில் ஒரு கீறல்போட்டான்.

இதையெல்லாம் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பாத்ரூம் செல்ல இறங்கி வந்தவன் பார்த்து, அங்கிருந்த காவலரிடம் தெரிவிக்க பைக்கை மெல்ல தள்ளிக்கொண்டே சென்றான். இவர்களின் நேரம் காவல்துறை வருவதற்குள் முக்கால்வாசி முடிந்திருந்தது.

அவன் சென்றதும் ப்ரியாவின் தலைமுடியைப் பிடித்திருந்தவன், “எங்கடி ஓடப்பார்க்கிற? அவ்வளவு ஈஸியா உன்னை விட்ருவோமா? எங்க அடுத்த வெட்டு போடலாம்” என்று வெளிப்படையாகவே சொல்லி யோசிக்க... போலீஸ் சைரன் சத்தம் அருகே கேட்கவும், “டேய்! போலீஸ் வா கிளம்பலாம்” என்று மற்றவன் சொல்ல...

“இவளை என்னடா பண்ணலாம்?” என அவளை பிடித்திருந்தவன் கேட்டான்.

“எதாவது பண்ணு? அதுக்குள்ள இங்கே எதுவும் எவிடென்ஸ் இல்லாம கார்ல தூக்கிப் போடுறேன்” என்று பெட்ரோல் கேனை டிக்கியில் தூக்கிப்போட அதன் மூடி கழண்டு மெல்லியதாக பெட்ரோல் வடிய ஆரம்பித்தது.

ஹரிப்ரியாவைப் பிடித்திருந்தவன் “சாகுடி” என்று கழுத்தை அறுத்துவிட்டு வேகமாக ஓடி காரில் ஏற பெட்ரோல் கேன் அசைவில் முழுவதும் கொட்ட ஆரம்பித்தது.

ஹரிப்ரியாவின் கழுத்தைப் பார்த்த கிரி, ‘ஐயோ கடைசிவரை காப்பாத்த முடியாமல் போயிருச்சே’ என்று நினைத்தவனுக்கு செல்பவர்களின் மேல் குரோதம் வர பெட்ரோல் சிந்தியபடி வண்டி நகர்வதைப் பார்த்தவன் தன்னருகில் இருந்தவன் சட்டைப் பையில் உள்ள தீப்பெட்டியை எடுத்து, “தெய்வம் நின்று கொல்லாதுடா! அன்றே கொல்லும்!” என கண்கள் சிவக்க கொளுத்திப் போட்டான். அதில் பற்றிய தீ சரியான இலக்கை அடைந்து கார் வெடித்துச் சிதறியது.

மனதில் ஒரு திருப்தி வர ப்ரியாவினருகில் வந்தவன் தன் சட்டையைக் கழற்றி இரத்தம் வராமல் தடுத்தபடி அவளின் முகம் திருப்பி, “பாப்பா பாரு நம்மளை கொன்னவங்களுக்கு சாகுறதுக்கு முன்னாடியே தண்டனை கொடுத்துட்டேன்” என்றான்.

சில நிமிடங்கள் கழித்து, “உன் பெயர் என்னமா?” என்று விசாரித்தான்.

“ஹ..ஹரி..ப்ரியா” என்றாள்.

“என்னது? ஹரிப்ரியாவா?” அதிர்ந்தவனுக்கு, ஏதோ ஒரு உந்துதலில் அவளின் பின்னால் வந்ததால், தங்கள் வீட்டுப் பெண்ணின் பெயரைக் கொண்டவளின் மானத்தைக் காப்பாற்ற முடிந்ததே என்ற சந்தோஷம். ‘இதைப்போன்ற காவாலிகளை ராசாத்தி எப்படி தாண்டிச் செல்வாள்’ என்ற சிறு பயமும் பிடித்தது. பின் ‘இவளைத் தன்னால் தூக்க முடியுமா?’ என்று நினைத்தவன் ‘முயற்சித்துப் பார்க்கலாமே’ என்றெண்ணி குனிந்தவன் குத்துபட்ட இடம் வலிக்கவும் சட்டென்று நிமிர, அதே நேரம் அவன் காலில் பெரிய அடிவிழ நிலையில்லாமல் தடுமாறி விழுந்தான் கிரி.

கிரி கழுத்தைப் பிடித்து நெறித்ததில் அரை உயிராய் விழுந்தவனுக்கு நினைவு வந்த நேரம், கிரி தீ பொருத்திப் போடுவதைப் பார்த்து அரண்டான். அதைத் தடுக்க வருமுன் எல்லாம் முடிந்திருந்தது. அவன் எழுந்து கிரியை அடிக்கத் தேட அந்த இரும்பு ராடு கண்ணில் பட்டது. இதையெதையும் அறியாத கிரிதரன் ஹரிப்ரியாவைத் தூக்க முயற்சிக்கையில் குனிந்தவனின் தலையை குறிவைத்தான். தலையில் போட ராடை சுழற்ற அதற்குள் வலியினால் நிமிர்ந்தவன் கால் கிட்டத்தட்ட ஒடிந்தே போயிருந்தது. அந்த அடி தலையில் விழுந்திருந்தால் அடுத்த நொடி மரணம் உறுதி என்பது நிச்சயம்.

சட்டென்று அடுத்த அடிக்கு ராடைத் தூக்க அதற்குள் அவனின் கழுத்து கிரியின் கையிலிருந்தது. “சாகும்போது ஒரு நல்லது செஞ்சிட்டுப் போறேன்” என்று தன் வலிமையை முழுவதும் திரட்டி இரண்டே நிமிடத்தில் அவனைக் கொன்றான்.

வயிற்றில் இரத்தம் கொட்ட ப்ரியாவினருகில் காலை இழுத்தபடி வந்தவன், அவளின் கழுத்தில் நிற்காமல் வந்த இரத்தத்திற்கு தன் பனியனைக் கழற்றி நிறுத்த முயற்சித்தான். காவல்துறை வாகன சத்தம் சத்தம் கேட்டு பயந்து அவசரத்தில் கழுத்தை அறுத்தவன் அரைகுறையாக செய்துவிட்டு ஓடிவிட்டான்.

திடீரென்று தன் போன் நினைவு வர, தாய்க்கு அழைத்தவன் “அம்மா உடனே கிளம்பி திருச்சி கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல் வாங்க” என்றதும்... என்ன ஏதென்று கேட்ட தாயின் குரலில் தெரிந்த கலக்கத்தை உணர்ந்தவன் தாயிற்காக கண்ணீர் விட்டான். அதன்பின் நண்பனிடம் போன் செய்து தான் பிழைக்க மாட்டேனென்று சொல்லி, என் இறப்பிற்குப் பின் தன் வீட்டுப் பெண்கள் இருவரையும் பாதுகாக்கச் சொல்லி போனை வைக்க அரைமணி நேரமானது. ப்ரியாவிடம் திரும்பி நம்பர் கேட்க, ஏற்கனவே தெரிந்த தன் நிலையில் போகும் உயிர் தன் குடும்பத்தினரையும், மாமாவையும் பார்த்ததும் போகட்டுமென்று இழுத்துப் பிடிக்க ஆரம்பித்திருந்தவள், கிரி போன் நம்பர் கேட்டதும் செல் வாங்கி நம்பர் போட்டுக் கொடுத்தாள்.

“மாமான்னா ரொம்ப பிடிக்குமா பாப்பா?”

“எ..எங்க மா..மா..ன்னா உ..யிர். சி..சின்..ன வ..யசிலிருந்தே” என்றாள் திக்கித் திணறியபடி கண்கள் மின்ன.

“எங்க வீட்டு பாப்பாக்கு கூட உன்னை மாதிரிதான் கண்ணு. ஆனா, கண்ணுல மச்சம் கிடையாது. பெயர்கூட ஹரிப்ரியா தான்.”

“எ..என்னோட க..ண்ணை எ..ப்ப பா..ர்த்தீங்க?” என்ற ப்ரியாவின் கண்கள் அவனையே பார்க்க...

“நீ மாமான்னு இறங்கி வந்தியே அப்ப என் முன்னாடி ஒரு பத்து வினாடியாவது நின்னுட்டிருந்த. நீ ஓடவும் எங்க பாப்பா மாதிரி தோணினதால தான் பின்னால வந்தேன்” என்றான் விளக்கமாக. பின், “ப்ச்... எங்க பாப்பா ரொம்ப சின்னப்பொண்ணு. இருவது வயசுன்னு சொல்லி ஏமாத்தி கட்டிக்குடுத்திட்டாங்க. ரொம்ப சின்னப்பொண்ணு பாப்பா. அவளை எப்படி என் பொண்டாட்டியா பார்க்கிறது சொல்லு. என்னை மாமான்னு தான் கூப்பிடுவா. மனசுல அவளுக்கு அப்பான்ற நினைப்பு தான். அவ வளர்ந்ததும் நல்ல பையனா பார்தது கல்யாணம் முடிச்சித் தரலாம்னு இருந்தேன். ஆனா, அதுக்குள்ள நானே முடிஞ்சிட்டேன்” என்றான் வருத்தமாக.

அவன் பேசுவதையே பார்த்திருந்தவளுக்கு எதுவோ புரிவது போலிருந்தது. ‘பார்த்தே அறியாத ஒரு பெண்ணை அதுவும் மனைவியாக வந்தவளை மகளாக எண்ணுகிறானா?’ எங்கோ இடித்தது. ‘அப்படின்னா தன்னுடனேயே வளர்ந்த என்னை ஹரி மாமா மகளாகப் பார்த்தது தப்பில்லையே!’ அவளின் யோசனைகளின் நடுவே சைரன் சத்தம் கேட்டது.

மெல்ல சிரித்தவன் “முதல்ல வந்த ஆம்புலன்ஸைப் பார்த்து போலீஸ்னு ஓடினானுங்க. பாரு க்ளைமேக்ஸ்ல தான் போலீஸ் வரும் என்பதும் சரியாகத்தானிருக்குது” என்றான்.

வலியையும் மீறி அவளுள்ளும் புன்னகை.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top