- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
9
பத்து வருடங்களுக்கு முன்பு:
மனதில் எடுத்த முடிவோடு அனைத்தையும் நல்லபடியாக முடித்திருக்கிறோம் என்ற திருப்தியோடு சென்னையிலிருந்து பேருந்தில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து, திருச்சி தாண்டி விராலிமலை அருகிலுள்ள சுங்கச்சாவடியின் சிக்னலில் நின்றது.
அதே நேரம் பக்கத்து பிரிவில் எதிரில் மேலூரிலிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் தன் மாமாவைத் தேடி வந்த ஹரிப்ரியா அமர்ந்திருந்தாள்.
பேருந்தில் அமர்ந்திருந்த ஹரிப்ரியாவின் கண்களில் சுங்கச்சாவடியின் மறுபகுதியில் நடந்து கொண்டிருந்தவன் பட, கண்கள் சட்டென்று பளிச்சிட்டது. “மாமா” என உதடசைய, அவன்தானா என்று பார்க்க... அதே இளநீல கலர் நேர்கோடு போட்ட சட்டை, க்ரே கலர் பேண்ட் அணிந்திருந்தான். அவன்தான் என உறுதி செய்ததும் ‘மாமா’ என்றபடி பஸ்ஸிலிருந்து இறங்கினாள்.
ஒரு வினாடி நிதானமாக யோசித்திருந்தால் அந்த சட்டையை இப்பொழுது இவள்தான் அணிந்திருக்கிறாள் என்று தெரிந்திருக்கும். ஆனால், விதி யாரை விட்டது.
ஏற்கனவே தாவணிக்கு மேல் சட்டை போட்டிருந்ததால் அனைவரும் அவளை ஒரு மாதிரியாக பார்த்திருந்தனர். இப்பொழுது மாமா என்று நகர்ந்து கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து குதித்தவளை, ஓட்டுனர், நடத்துனருடன் சேர்ந்து மனிதாபிமானமுள்ள ஒரு சிலர் “எங்கமா போற?” என கேட்ட அக்கறையான வார்த்தைகள் காதில் விழவேயில்லை.
அவள் குதித்த அதே நேரம் பஸ்ஸிலிருந்த புழுக்கத்தால் காற்றோட்டமாக நிற்க எண்ணி இறங்கிய கிரியின் பார்வை, எதிரில் தற்செயலாய் செல்ல... ப்ரியா பஸ்ஸிலிருந்து குதித்து “மாமா” என எதிரிலிருக்கும் தன்புறம் வருவதைப் பார்த்தவனுக்கு திடீரென்று ராசாத்தியின் நினைவு வந்தது. தன்னருகே வரும்பொழுது வினாடி நேரமே ஆனாலும், அங்குள்ள வெளிச்சத்தில் அவள் கண்களைக் கண்டவனுக்கு, ராசாத்தியைத் தவிர எதுவும் தோன்றவில்லை. தன்னைத் தாண்டி சென்றதும், ‘அச்சோ! சின்னப் பெண்ணாக இருக்காளே. இந்த இடத்தில் யாரைத்தேடி போறாளோ தெரியலையே’ என்று அவள் பின்னே சென்றான்.
சுங்கச்சாவடி தாண்டி நிறைய தூரம் வந்தவள், அந்த இளநீல சட்டைக்காரனைப் பார்த்து சந்தோஷத்தில் “எங்க மாமா போறீங்க? வாங்க மாமா வீட்டுக்குப் போகலாம்” என்றதும் அவன் திரும்ப மின்சாரம் தாக்கியது போலானாள். “சா.. சாரி அண்ணா எங்க மாமான்னு நினைச்சிட்டேன்” என தடுமாறினாள்.
“பரவாயில்லமா” என்று அவன் சென்றுவிட மூச்சை இழுத்துவிட்டு குனிந்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள் சட்டையை. தன்னைத் தானே தலையில் தட்ட, பஸ் நினைவு வந்ததும் “ஐயையோ பஸ்ஸு!” என்று தலைநிமிர்ந்து சுற்றிலும் பார்த்தவளுக்கு எதுவோ வித்தியாசப்படுவது தெரிந்தது. சுங்கச்சாவடியிலிருந்து குறைந்தது முன்னூறு மீட்டர் தூரமாவது தள்ளி வந்திருப்பது புரிந்தது. அவளைச் சுற்றிலும் வெளிச்சம் மெல்லியதாக இருந்தாலும் அதையும் மீறி இருட்டும் இருந்தது. ஒருசிலர் ஜோடியாக நட்ட நடு ரோட்டில் தங்கள் சல்லாபத்தை ஆரம்பித்தபடி வந்திருந்த கார் பைக்குகளில் சென்றனர்.
“ச்சீய்.. இப்படியெல்லாமா நடக்கும்” என நினைத்தவளுக்குத் தெரியுமா? இதெல்லாம் நூற்றில் ஒரு பங்கென்று. வீட்டை விட்டால் பள்ளி, அதைவிட்டால் தங்களின் தோட்டம் என்றிருந்தவளுக்கு அந்த சின்னச் சின்ன சில்மிஷங்களே அதிகமாகப்பட்டது. “அச்சோ.. பஸ் போயிருக்குமே” என திரும்பவும் நினைவு வந்தவளாக, செல்ல யத்தனிக்கையில்...
“என்னடா செல்லம் ரொம்ப நேரமா நிற்கிறியா? நான்தான் கொஞ்சம் லேட் போல. சரிவா போகலாம்” என அழைத்தான் ஒருவன்.
தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பியவளுக்கு பயத்தில் மூச்சை அடைத்தது. மூன்று பேர் கண்களில் ஒருவித வெறியுடன் நின்றிருந்தனர். அவளுக்கு இந்த பார்வை புதிது. அதற்கான அர்த்தம் புரியவில்லை. ஆனாலும், ஒரு எச்சரிக்கை உணர்வு வந்து, “சாரி நான் உங்களுக்காக காத்திருக்கலை. என் மாமாவைத் தேடி வந்தேன்.” என்றாள்.
“அதான் செல்லம் நாங்கதான் உன் மாமா. டேய்! பாப்பாக்கு இருபத்தஞ்சு வயசுன்னு சொன்னாங்க. இது இருபதுக்கு கீழதான் இருக்கும் போல.”
“ஆமாடா. அதான் எனக்கும் புரியலை” என்றான் மற்றொருவன்.
“நீங்க வேற யாரோன்னு பேசிட்டிருக்கீங்க. எனக்கு கல்யாணமாகிருச்சி. எங்க மாமாவைத் தேடித்தான் வந்தேன்” என்று மூச்சுவிடாமல் சொல்லி தனக்கே குழிதோண்டினாள்.
“அப்ப சரிடா இவதான் ஒரே நேரத்துல மூணு பேர்னதும் பயந்துட்டா போல அதான் உளறுறா. நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு கன்னிப் பொண்ணா வரும். எல்லாம் முடிஞ்சதுங்கதான் வந்து மாட்டும்” என்றதும் அதிர்ச்சியில் இரண்டடி பின்னே எடுத்து வைத்தாள்.
“என்னடா பாப்பா பம்முது?”
“ஒருவேளை அது சொல்றது உண்மையோ என்னவோடா” என்றான் அடுத்தவன்.
“எதாயிருந்தா என்ன? நாம புக் பண்ணியாச்சி. அவ இல்லன்னா இவ அவ்ளோதான். கூட்டிட்டு வாடா. வரலன்னா தூக்கிட்டு வாடா பார்த்துக்கலாம்” என்றான் தலைவன் ஸ்தானத்திலிருந்தவன்.
மிரட்சியுடன் பார்த்த ப்ரியா ஓட ஆரம்பிக்க.. அவளை கைபிடித்திழுத்தான் மற்றொருவன்.
“ஏய்.. ச்சீய் கையை பிடிக்காத. விடு.”
“ஏன் கையை பிடிச்சா என்ன? உன் புருஷன் பிடிச்சிருப்பான் தான, எங்களையும் கொஞ்ச நேரத்துக்கு அப்படி நினைச்சிக்கமா” என்றான் கேவலமாக சிரித்தபடி.
அருவருப்புடன் கையை விடுவிக்க முயற்சிக்க, “டேய் கையைப் பிடிக்காத என்னைப் பிடின்னு சொல்றா போலடா” என்று மூன்றாமவன் ஏற்றிவிட்டான்.
முதலாமவன் அவளை தன்னுடன் சேர்த்தணைக்க முற்பட, திமிறி விலகப் பார்த்தவளை இன்னும் இழுத்து முத்தமிட போகையில், நடுவில் ஒரு கரம் நீண்டது.
ஹரிப்ரியாவின் பின்னால் வந்த கிரி, அவள் வேகமாக ஓடவும், தானும் ஓடினால் பார்க்கிறவர்களின் பார்வைகள் இருவரின் மீதும் தவறாக விழுமென்பதால், அந்த கெட்ட பெயரை முன்னே செல்லும் பெண்ணுக்கு வாங்கிக் கொடுக்க விரும்பாமல் வேகமாக நடக்க மட்டும் செய்தான். அவன் பார்வை வட்டத்திலிருக்கும் போதே அந்த பெண் யாரையோ அழைப்பதையும் அவன் திரும்பியதும் பதற்றத்தில் ஏதோ சொல்வதையும் பார்த்தவனுக்கு பரிதாபமாகிப் போனது. ‘தெரிந்தவன் என்றெண்ணி யாரையோ பிடித்திருப்பாள் போல’ என்றபடி நடந்தவன் திரும்பிவிட எண்ணினான்.
அதே நேரம் காரிலிருந்து மூவர் இறங்கி அவளை நோக்கி நடந்து வர, அதைப் பார்த்தவனுக்கு எதுவோ சரியில்லையென்று பட்டது. பாவம் அந்தப் பெண் என்று தனக்கு பாதுகாப்புக்கு எதாவது கிடைக்குமா என சுற்றிப்பார்த்து அங்கு நின்றிருந்த லாரிக்கடியில் ஸ்பேர் பார்ட்ஸ் இருக்க அதிலிருந்த நீளமான ஸ்க்ரூவையும், அருகிலிருந்த மூன்றடி நீளமுள்ள சின்ன இரும்பு ராடையும் எடுத்து அவர்களை நெருங்க ஐந்தடி இருக்கும் இடைவெளியில் இரும்பு ராடை மறைத்து ஸ்க்ரூவை சட்டைக்குள் சொருகியபடி அந்த பெண்ணை நோக்கி வர, அதற்குள் அவர்கள் எல்லை மீற ஆரம்பிக்க, சட்டென்று கையை நடுவில் நீட்டினான்.
நடுவில் நீண்ட கரத்தைப் பார்த்தவன், “இந்த நேரத்துல யார்டா அது வில்லன்” என்றபடி திரும்ப...
“வில்லன் இல்லடா தம்பிகளா ஹீரோ” என்றான் கிரிதரன்.
“டேய்! ஹீரோவாம்டா” என்று மூவரும் சிரித்தபடி, “அப்புறம் ஏன்டா வில்லன் வேலை பார்க்கிற” என்றான்.
“பொறுக்கிங்களுக்கு நான் வில்லனா இருந்துட்டுப் போறேன்” என்று தோளைக்குலுக்க... தனக்குக் கிடைத்த ஆதரவில் கிரியின் பின்னால் உடல் நடுங்கியபடி கோழிக்குஞ்சாய் மறைந்தாள் ஹரிப்ரியா..
“அவளை எங்ககிட்ட விட்டுட்டுப் போயிரு. இவ நாங்க பிக்ஸ் பண்ணின பொண்ணு.”
“அச்சோ இல்ல. மாமாவைத் தேடித்தான் வந்தேன். இவங்கதான் அசிங்கமா பேசி கையெல்லாம் பிடிச்சிழுக்கிறாங்க. என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க ப்ளீஸ்” என்றாள் அழுகையுடன்.
“ஏன் பாப்பா மாமாதான் உன்னை அங்கேயே நிற்க சொன்னேனே, அப்புறம் ஏன் என்னைத்தேடி இவ்ளோ தூரம் வந்த” என்று அவள் புறம் திரும்பி கண்ணால் அவனை ஒத்து பேசச் சொல்லி ஜாடைகாட்ட, ‘பாப்பா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் புதுத்தெம்பு வர ஜாடையை புரிந்தவளும் அழுதபடி தலையசைத்தாள்.
“ஸ்.. பாப்பா எதுக்கு அழுற? அதான் மாமா வந்துட்டேன்ல. வா கிளம்பலாம். அம்மா தேடிட்டிருப்பாங்க” என்று அவ்விடத்தை விட்டு கிளம்பியவர்களை...
மூவரும் மறித்து, “என்ன எங்களையெல்லாம் பார்த்தா கேனைங்க மாதிரி தெரியுதா? முதல்ல அவளை விட்டுட்டுப் போடா. உன் மாமா போஸ்டை கொஞ்ச நேரம் நாங்களும் எடுத்துக்கறோம்” என்றான்.
“ப்ச்... உனக்கென்ன கட்டிப்பிடிச்சி முத்தம் குடுக்கணும் அவ்வளவு தான” என்று ஹரிப்ரியாவிடம் திரும்பிய கிரி, “பாப்பா! மாமா அழகா பார்க்க லுக்கா இருக்கேன் தானே” என்றான்.
அவனின் கேள்வியில் முதலில் திணறினாலும் ஹரியின் முகம் நினைவில் வர, “உங்களுக்கென்ன மாமா செம கலர்! செம ஸ்மார்ட்! ஹீரோ லுக்கா இருக்கீங்க” என்றவளுக்கே பேசுவது தான்தானா என்று தோன்றியது.
அதைக் கேட்ட கிரிதரனுக்கோ ராசாத்தியின் குதூகலிப்பை அவளின் பேச்சில் கண்டு முகத்தில் புன்னகை வர அவர்களிடம் திரும்பினான்.
“என்னடா நக்கலா? நாங்க என்ன கேட்கிறோம், எங்க முன்னாடியே நீங்க ஆணழகன் போட்டி நடத்துறீங்க?” என்றான் எரிச்சலாக.
“ம்... அதுக்குத்தான்டா வர்றேன். அழகாயிருக்கிறதால தான பாப்பாவை கிஸ் பண்ணப்போன, இப்ப நான் ஆணழகன்னு நீயே ஒத்துக்கிட்டல்ல. ஸோ, என்னைக் கட்டிப்பிடி, கிஸ்ஸடி நான் எதுவும் சொல்ல மாட்டேனே” என்றான் விஷமமாக.
கிரியின் பாவனையில் சட்டென்று ப்ரியா சிரிக்க... “என்னடா ரெண்டுபேரும் சேர்ந்து எங்களையே கலாட்டா பண்றீங்களா? உங்களை..” என்று பல்லைக் கடித்தபடி “மரியாதையா அவளை விட்டுட்டுப் போயிரு. இல்ல உன் உயிர் போயிரும் ஜாக்கிரதை” என்றான்.
அதில் அரண்ட ப்ரியா கிரியின் கையைப் பிடிக்க அவள் கையை ஆறுதலாக தட்டிக்கொடுத்து, “ஒருத்தனை கொன்னு போட்டு அவன் பிணத்து மேல ஒரு பொண்ணோட சல்லாபிக்கிறது வேணுமாடா? இதே உன் அக்கா தங்கைனா விட்டுட்டு ஓடுவியா?” என்றான் கோபமாக.