- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
8
அவன் சேகரைப் பார்ப்பதற்கு அரைமணி நேரம் முன்பு, சரவணனிடமிருந்து ஆராதனாவிற்கு போன் வந்தது. “ஆரா கொஞ்சம் பேசணும். வெளிய போகலாமா?” என கேட்டான்.
“என்ன பேசணும் அத்தான்? எதுவா இருந்தாலும் போன்லயே பேசுங்க, என்னால எங்கேயும் வர முடியாது.”
“ஆரா ப்ளீஸ். சரி எதிர்ல இருக்கிற பார்க்கிற்காவது வா” என்றழைத்தான்.
முதலில் யோசித்தவள், “சரி வர்றேன். ஆனா, கொஞ்ச நேரம் தான். அப்புறம் கிளம்பிருவேன். சண்டே எனக்கு நிறைய வேலையிருக்கு” என்றாள் அவளும்.
“சரி சரி ஒரு பைவ் மினிட்ஸ்ல அங்கே இருப்பேன்” என்று போனை வைத்தான்.
ஆராதனாவும், வேதவல்லியும் சில பொருள்கள் வாங்க வேண்டும் என்று கிளம்பிக் கொண்டிருந்ததால், சேகரை வரச் சொல்லியிருந்தார்கள். “வேதா, அத்தான் என்னைப் பார்க்கணுமாம். பார்க் வரச் சொன்னாங்க. என்னன்னு கேட்டுட்டு வந்துர்றேன். அங்கிள் வர்றதுக்குள்ள வந்திருவேன்” என்றாள்.
“என்னடி திடீர்னு?”
“தெரியலை. கேட்டுட்டு வர்றேன்” என்று கிளம்பிச் சென்றாள்.
பூங்காவில் இருவரும் ஒரே நேரத்தில் நுழைய, அங்கிருந்த இருக்கையில் சற்று இடைவெளி விட்டே உட்கார்ந்தார்கள். விடுதிக்கு எதிரில் உள்ள பூங்காதான். ஆனால், ஆராதனா அன்றைய சம்பவத்திற்குப் பின் இப்பொழுது தான் வருகிறாள். இதோ இப்பொழுதும் சரணின், ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’ வார்த்தைகள் அச்சு பிசகாமல் மனதில் உழன்று கொண்டிருக்க,
அருகில் இருந்த சரவணனின், “ஆரா நாம கல்யாணம் பண்ணிக்குவோம்” என்ற வார்த்தை அவள் காதில் விழவேயில்லை. “என்ன பண்ணிக்கலாம்ல? உனக்குச் சம்மதம்தான? என்று கொஞ்சம் சத்தமாகவேக் கேட்டான்.
அச்சத்தத்தில் கடைசி வார்த்தையைக் கேட்டவள், “என்ன சம்மதம் தானன்னு கேட்குறீங்க?” என்றாள் கேள்வியாய்.
“நான் சொன்னதைக் கவனிக்கலையா ஆரா? நாம கல்யாணம் பண்ணிக்குவோம்னு சொன்னேன்.”
“என்னது கல்யாணமா? என்ன பேசறீங்கன்னு யோசிச்சித்தான் பேசறீங்களா? கல்யாணம் பண்ணிக்குவோம்னு ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க. எப்படி இப்படிலாம் யோசிக்கத் தோணிச்சி? என் பெர்மிஷன் இல்லாம நீங்களே முடிவு பண்ணுவீங்களா? உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதா நான் எப்ப சொன்னேன்?” என கேட்டாள் கோவத்தில்.
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காகத் தான நீ சென்னைக்கு வந்ததே?” என்றான் இவனும்.
“அது... அது” என்று சற்றுத் தடுமாறியவள், பின் சுதாரித்து, “நான் கல்யாணம் உங்களை பண்ணிக்கப் போறேன்னு சொன்னேனா? யார் சொன்னது? அது சரி இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேள்விகளை அடுக்க,
இப்பொழுது முழிப்பது அவன் வேலையாயிற்று. “இ...இல்லை என்னை அத்தான்னு அன்பா கூப்பிடுறியா? அதான் நானே உன்னை என் மனைவிய கற்பனை பண்ணி...” என்று அவன் இழுத்தான்.
“ச்சீ... நிறுத்துங்க. என்ன பைத்தியக்காரத்தனம் இது. உங்க கற்பனைக்கெல்லாம் நான் ஆளில்லை. உங்களைக் கல்யாணம் பண்ணனும் என்ற ஐடியாவும் எனக்கு இல்லை. நான் அத்தான்னு கூப்பிட்டது உறவு முறையில. அதைத் தாண்டி எந்த உறவும் நமக்குள்ள இல்ல. புரியுதா?” என்றாள் அழுத்தமாக.
“என்ன ஆரா இப்படிச் சொல்லிட்ட? என் ப்ரண்ட்ஸ் எல்லாரிடமும் நாம கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்லிட்டேன்.”
“லூசால நீ. என்ன கேனத்தனமா பேசிட்டிருக்கா? அது ஒன்னோட ப்ராப்ளம். எனக்கும் அதுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை” என்றாள் கோவம் குறையாது.
“ஆரா! அவங்க கல்யாணத்துக்கு ரெடி பண்றாங்க” என்று எச்சில் முழுங்கியபடி கொஞ்சம் திணறலுடன் சொல்லி முடித்தான்.
“என்னது? ஏற்பாடு பண்றீங்களா? யாரைக் கேட்டு பண்ணினீங்க? எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. எனக்குன்னு மனசு இருக்கு. அதுல ஆசைகளும் இருக்கு. சும்மா பேத்தாம வேலையைப் பாருங்க. நீங்களா முடிவெடுக்குறதுக்கு நான் ஒண்ணும் நீங்க வச்சி விளையாடுற பொம்மை இல்லை. என் சம்பந்தப்பட்ட விஷயம் உங்க நண்பர்களோட பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும் சொல்லிட்டேன். என்கிட்ட இந்த அளவு உரிமை எடுக்கிறது எனக்குப் பிடிக்காது. இந்த மாதிரி லூசுத்தனமா பேசிட்டு என்னைப் பார்க்க வராதீங்க. அவ்வளவுதான் சொல்வேன்.”
“நான் இன்னும் ஒரு மாசத்துல ஊருக்கு கிளம்புவேன். அப்ப உங்களைக் கூப்பிட்டுப் போயி உங்க மாமாகிட்ட ஒப்படைக்கிறேன். அதுவரை, இங்க வா, அங்க வான்னு கூப்பிட்டா நான் பொல்லாதவளாகிருவேன். தேவைன்னா நானே கூப்பிட்டுக்கறேன். குட் பை” என்றாள்.
அவள் சென்று சிறிது நேரம் கழித்து, “என்னையவாடி லூசுன்ற. என் மாமன் மகளே. உன்னைக் கல்யாணம் பண்ணி, உன்னை.. உன் வாயை அடக்கல... நான் சரவணன் இல்லடி. என்னை ரொம்ப லேசா எடைபோட்டுட்டன்னு நினைக்கிறேன். வர்றேன்டி உன் திமிரை அடக்க” என்றவன் குரலில் இருந்த கோவம் எதற்கோ!
அவனைத் திட்டி வெளியே வந்தவள், “என்னடா ஆராவுக்கு வந்த சோதனை. இந்த பார்க்குக்கும் நமக்கும் கல்யாண ராசி போல. எவன் வந்தாலும் கல்யாணத்தைப் பற்றியே பேசுறான்” என புலம்பியபடியே மகளிர் விடுதியின் வாசல் நுழைய, சேகரும் அதே நேரம் வந்தார்.
“என்னம்மா எதாவது பிரச்சனையா? ஏன் புலம்பிட்டு வர்ற?”
“இல்ல அங்கிள். இந்த சரவணன் அத்தானைப் புரிஞ்சிக்கவே முடியல. இன்னைக்குத் திடீர்னு வந்து கல்யாணம் அது இதுன்னு என்னென்னவோ புலம்புறாங்க” என்றதும் உஷாரான சேகர், “எதுவாயிருந்தாலும் தெளிவா சொல்லுமா?” என்றார்.
பூங்காவில் இருவரும் பேசியதைச் சொல்லி, “சாரி அங்கிள். நாங்க இன்னைக்கு பர்சேஸ் போகல. தப்பா எடுத்துக்காதீங்க” என்றாள்.
“அதை விடுமா. இன்னொரு நாள் பார்த்துக்கலாம். மனசைப் போட்டுக் குழப்பிக்காம, ரெஸ்ட் எடுமா. நான் வர்றேன்” என்று கிளம்பினார்.
அறைக்குள் சென்ற ஆறாதனா தோழியிடம் புலம்பிக் கத்தித் தீர்த்தாள். “போதும்டி. வேணாம் வலிக்குது” என்று வேதவல்லி புலம்பும் அளவு போனது.
‘இதே வார்த்தையை சரண் கொஞ்சம் மாற்றிக் கேட்டாலும் கடைசியில் ஒரே அர்த்தம் தான். அவனிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னவள் இங்கே யாருக்காக ஊரை, உறவை விட்டு வந்தாளோ அதே அத்தைப் பையன், இன்று கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா, கத்திக் கலாட்டா பண்ணுறா. என்ன கொடுமை இது’ என்று புலம்பினாள் வேதவல்லி.
இதோ இப்பொழுது சேகரைச் சந்தித்த சரண், “என்ன அங்கிள்? என்னாச்சி? என்று கேட்க,
“ஒண்ணுமில்லை சரண். அந்தச் சரவணனைப் பற்றி, இன்னும் கொஞ்சம் தீவிரமா விசாரிக்கணும்னு நினைக்கிறேன்.”
“ஏன்? எதாவது பிரச்சனை பண்றானா?” என்று கொஞ்சம் பதற்றத்துடன் விசாரிக்க,
“அதெல்லாம் இல்ல. அப்படியே பிரச்சனைனாலும் அந்தப் பொண்ணே அவனை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிருவா. அவங்க ஊர் வழக்கப்படிச் சொன்னா சீவிருவா சீவி’ என்று சிரித்தார்.
அவளுக்குப் பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை என்று தோன்றியாதும் மனம் கொஞ்சம் நிம்மதியானது.
பின் ஆராதனாவிடம் பேசியதை அவனிடம் சொன்னார்.
“அங்கிள் ஆள் கொஞ்சம் டேஞ்சரா இருப்பான் போல. எதுக்கும் போலீஸ்ல சொல்லி விசாரிக்கணும். எங்க எம்டி மூலமா சைலன்ட்டா விசாரிக்க ரெடி பண்றேன். ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.”
“போடா. இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லிட்டு” என்று அவன் தோள்தட்டிக் கொடுத்தார்.
‘நீங்க கொடுத்த இன்பார்மேஷன் என் மனசுக்கு எவ்வளவு சந்தோஷம் கொடுத்ததுன்னு உங்களுக்குத் தெரியாது அங்கிள். யாருக்காக என்னை மறுத்தாளோ, அவனையே வேண்டாம்னு சொல்லியிருக்கா’ என்று மனதினுள் நினைத்து, “சரி கிளம்பறேன்” என்று வாய்மொழிந்து கிளம்ப,
“அத்தையைப் பார்க்கலையாப்பா?” என்றார் சேகர்.
“இல்ல அங்கிள் குட்டிமாக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட். அதனால, இந்நேரம் எல்லாரும் எங்க வீட்டுலதான் இருப்பாங்க” என்றதும் என்னவென்று பதற்றப்பட்டவரிடம், “லேசா சின்ன சிராய்ப்பு தான்” என்று பதிலளித்து, “அத்தைக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம் அங்கிள்” என்று சொல்லிக் கிளம்பினான்.
வீட்டிற்கு வந்தால், தன் குடும்பம் முழுவதும் அங்கே இருந்தது. தாத்தா, பாட்டி, அத்தைகள், மாமா என்று அறிவுரை மழை பாதி, ஆறுதல் மழை மீதியென்று பொழிந்து கொண்டிருந்தது வீட்டிற்குள்.
உள்ளே நுழைந்ததும், “என்னத்தை யாரையோ பார்க்கப் போகணும்னு கிளம்புனீங்க பார்த்தாச்சா?”
“இல்லடா. அங்க போய்ச் சேர போன் வருது. அதான் அடுத்தவாரம் பார்த்துக்கலாம்னு வந்திட்டேன்.”
தங்கையிடம், “வலி எப்படி இருக்கு?” என்று விசாரித்தான்.
“பரவாயில்லண்ணா. ஐம் ஆல்ரைட்” என்றாள்.
வெற்றி, “போட்டோ பார்த்தியா பிடிச்சிருக்கா?” என்றதும் தான், காலையில் அத்தை கொடுத்துச் சென்ற புகைப்படம் நியாபகம் வந்தது. ‘அச்சோ! இதை எப்படி மறந்தேன். இந்த அத்தைதான் விடமாட்டாங்களே’ என்றவள் கண்முன் அந்த மருத்துவன் வந்து எட்டிப் பார்த்தான். ‘ப்ச்... அதெல்லாம் நடக்காத விஷயம். அவனே அவ்வளவுதான்னு சொல்லிட்டான். பி பராக்டிகல் நியா” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
“நான் பார்த்திட்டேன்கா. பையனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம பாப்பாக்கு ஏற்ற ஜோடி” என்று மற்றவர்களுக்கும் புகைப்படத்தைக் காண்பிக்க, சரணும், ராஜாவும் ஆச்சர்யப்பட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அது வேறு யாருமல்ல அந்த டாக்டரே தான். நியாவிடம் யாரென்று சொல்லாமல் புகைப்படத்தைக் காண்பிக்க, ஒரு கையால் தடுத்து, “வேண்டாம் நான் பார்க்கல. உங்களுக்குப் பிடிச்சா எனக்கு ஓகே தான்” என்றாள்.
“குட்டிமா கொஞ்சம் பாருடா. உனக்கும் பிடிக்கும்” என்ற அண்ணனிடம் மறுத்து, “உனக்குப் பிடிச்சிருக்குல்ல. அது போதும்” என்று உள்ளே சென்றாள்.
“அத்தை அவளுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கும். எப்ப பார்க்க வர்றாங்க?”
“நாளைக்கே வரச் சொன்னாலும் வருவாங்க. நாளைக்கு அமாவாசை. போயி ஜாதகம் பார்த்துட்டு வந்து ஞாயிற்றுக்கிழமை வரச் சொல்லிரலாம்” என்று தம்பியிடம் திரும்பி, “அது யார் பையன்னு தெரியுமா? கூடவே ஜாதகம் இருந்துதே பார்க்கலையா?” என கேட்டார்.
“இல்லக்கா. பாப்பாக்கு அடிபட்டதும் எதுவும் தோணலை. இப்பதான் பார்க்கிறேன்.”
“என்ன அப்பன் நீ? உன் பொண்ணைப் பொண்ணு பார்க்க வர்றப்ப சம்பந்தி யாருன்னு தெரியாம, சபையில நிற்பியா? என்று தம்பியை கிண்டலடித்துவிட்டு, “அவன் உன்னோட ப்ரண்ட் ஈஸ்வரோட பையன் அசோக்டா” என்றார்.
“அக்கா நிஜமாவா? என்னால நம்பவே முடியலை. பையனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு அப்பவே நினைச்சேன்.”