- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
8
இன்று:
தான் இங்கிருந்து செல்வதற்குள் சேவியரின் வீடியோ பிரச்சனையை தீர்த்துவிடுவேன் என்ற சரத்திற்கு ராசி நன்றி சொல்ல... சட்டென்று அவளின் வாய்பொத்தி தன்புறம் இழுத்து பால்கனி இருட்டில் மறைந்தான்.
அவனின் இந்த திடீர் தாக்குதலில் அதிர்ந்திருந்தவளுக்கு அவனைக் கொல்லும் வெறி. அதை அவனிடம் காண்பிக்க நினைக்கையில், “அப்படியே கொஞ்சம் அந்த மாடியில பாருங்க. ஒருத்தன் எட்டிப் பார்க்கிறது தெரியும். அப்போதிருந்து நிமிஷத்துக்கு ஒருமுறை எட்டிப் பார்த்துட்டிருக்கான். அதனாலதான் சந்தேகமே வந்தது” என்று அவளின் காதோரம் மெல்லிய குரலில் சொன்னான்.
காதோரம் குனிந்து அவன் பேசிய வார்த்தைகளை விட்டு அவன் மூச்சுக்காற்றில், அவளின் தேகம் சில வினாடிகள் சிலிர்த்தடங்கியது. அவனோ கடமையே கண்ணாக, “என்ன ராசி பார்த்தீங்களா? எட்டிப் பார்த்துட்டு மறைஞ்சிட்டான்” என்று அவள் முகம் காணும்போது தான் அவளைத் தன் பிடிக்குள் வைத்திருப்பதும், அவளின் நெளிதலும் தெரிய... “சா..சா.. சாரி. ரியலி சாரி ராசி” என்று பதட்டமாக அவளை விட்டு விலகினான்.
“ப..ப..ரவாயில்லை” என்ற வார்த்தையை முடிப்பதற்குள் போதுமென்றாகி இது நானா என்றானது ராசிக்கு. எப்படி இவனை அடிக்காமல் விட்டேன்” எண்ணும்போதே...
“ஏங்க ராசி சாரிங்க. அடிச்சிராதீங்க. நான் வேணும்னுலாம் பண்ணல. அவன் உங்களை பார்த்திரக்கூடாதுன்னு ஒரு பதட்டத்துல” என்றதும்... அவனின் அக்கறையில் விழியுயர்த்தி பார்த்தவள் கண்களை அந்த இருளில் முழுதாக காணமுடியாவிடினும், அவள் பார்வையிலுள்ள வித்தியாசத்துடன், அவளின் பார்வை தன்னுள் ஏதோ மாற்றம் செய்ய உடல் சிலிர்த்து, தன் உணர்வுகள் தலைதூக்குவதை உணர்ந்தான்.
‘தனிமையும், இருளும் சரியில்லையே’ என்று மனம் சொல்ல, ‘திரும்பவும் ஒருமுறை இவளின் மென்மையான தேகத்தை அணைக்கலாமா!’ என்ற யோசனை வர முதலில் தன் நினைவில் திடுக்கிட்டவன், ‘இந்தப் பெண் என்னை ரொம்ப சோதிக்கிறாளே’ எனும்போதே முகத்தில் முறுவல் தன்னால் வந்தது. ‘ரொம்ப மோசமாகிட்டடா சரத்’ என தன்னைத்தானே திட்டினான்.
என்னவென்று கேட்டவளுக்கு, தோளைக்குலுக்கி “நத்திங்” என்றான்.
“சரி வாங்க போகலாம்” என்று அவள் முன்னே எட்டு வைத்தவள் திரும்பி “யூ” என்று பல்லைக்கடித்தபடி கோபத்தில் சரத்தின் புறம் திரும்பினாள்.
அவனோ, “அச்சோ! திரும்பவும் நானில்லங்க” என்று கைதூக்கி சமாதானக்கொடி பறக்கவிட்டான்.
அவனின் பாவனையில் சிரித்தவள் தன்னுடைய முடி அவனின் சட்டை பட்டனில் சிக்கியிருந்ததைக் கண்டாள். முடியை எடுக்க அவன்புறம் திரும்பியவளை, நெருக்கத்தில் பார்த்த சரத்தின் இதயத்துடிப்பு பலவாறு எகிறிக் குதித்தது. முடியை எடுத்துப் பார்த்தவளுக்கு வராமல்போக, “ப்ச்.. தனியா எடுக்கிறேன்ல. கொஞ்சம் ஹெல்ப் பண்ணமாட்டீங்களா?” என்றாள் சற்று எரிச்சல் குரலில்.
அந்தக் குரலில் உரிமை இருந்ததோ! என்று தோன்ற, அது தந்த உரிமையில் “ஹெல்ப் பண்ணட்டுங்களா?” என்றான் சரத் ஒருமாதிரிக் குரலில்.
அவனின் குரலின் வேறுபாட்டைக் கவனிக்காமல், “அதைத்தான சொல்றேன் மண்டு. கொஞ்சமாவது என்னோட அவஸ்தை புரியுதா பாரு” என திட்டிவிட்டு தன் வேலையில் கவனமானாள்.
அவளின் கையை மெல்ல விலக்கி ஒவ்வொரு முடியாக விலக்கி சிக்கல் எடுக்க, சீக்கிரமே வந்தாலும் அந்த நேரத்து இனிமையை இழுத்தடித்துக் கொண்டிருந்தவன், அவளின் “உங்களாலயும் முடியலயா? அப்ப அத்து எடுத்துறலாமா?” என்றதில், “அச்சோ எதுக்குங்க? முடியை கட்பண்ணாதீங்க. பொண்ணுங்களுக்கு முடிதான் அழகு” என்று முடிக்கு விடுதலை கொடுத்து, “ம்... எடுத்தாச்சி பாருங்க. இதுக்குப் போயி ஏங்க” என்றான்.
ஃப்பூ என வாயால் காற்றை வெளியிட்டு “தேங்க்ஸ்” என்றபடி அவனை நிமிர்ந்து பார்க்க... மெல்லிய நிலா வெளிச்சத்தில் அவனருகில் தான் நெருங்கி நிற்க, அவனோ! தன்னையே விழுங்குவது போல் பார்ப்பது தெரிந்ததும் சட்டென்று முகத்தில் வெட்கப்பூக்கள் பூத்ததோ! இவ்வளவு நேரம் தான் அவனிடம் பேசியது நினைவு வர, சட்டென்று நாக்கைக் கடித்தவள், தான் இவனிடம் உரிமையோடு பேசினதால்தான் இந்தப் பார்வை பார்க்கிறான் என்று புரிந்த ராசிக்கும் ‘இது சரியில்லையே.’ மனம் சொல்ல, “நான் போறேன்” என்று சொன்னாள்.
“அதுக்குள்ள போறீங்களா?” என்றவன் குரல் ஏக்கத்துடன் கலந்து வர...
அந்தக் குரலில் சிலவினாடிகள் கட்டுண்டவள், குழந்தையின் சிணுங்கல் குரல் கேட்க தன் மோனநிலை கலைந்து தலையை உலுக்கி, ‘சே.. ராசி என்ன பண்ணிட்டிருக்க?’ என்று தன்னையே கடிந்து உள்ளே சென்றாள்.
“என்னாச்சிமா?” என்ற சேவியரின் கேள்வியில் முழுதாக தெளிந்தவள், “நாளைக்கு காலையில ஆஃபீஸ் வரச்சொல்றாங்க அண்ணா. அந்த ராக்கி க்ரூப் மேலதான் டௌட்படுறாங்க.”
“அவனுங்களா? அவனுங்களை என்ன பண்றேன் பாரு” என்று கிளம்பியவனை..
“சார் ப்ளீஸ். நான் பிரச்சனையை யாருக்கும் தெரியாம முடிக்கணும்னு பார்க்கிறேன். நீங்க எல்லாருக்கும் தெரியப்படுத்திறாதீங்க. அந்த வீடியோவை இனி யாரும் பார்க்க முடியாத மாதிரி பண்ணியாச்சி. வேணும்னா உங்க செல்போன் வீடியோவை செக் பண்ணிப் பாருங்க” என்றதும் வேகவேகமாக செல்லை எழுத்து வீடியோவை ஓபன் செய்ய... அது வேலை நிறுத்தம் செய்திருந்தது.
“உங்களுக்கு வந்த மாதிரிதான் இதை இனி யார் ஓபன் பண்ணினாலும் அவங்களுக்கு ஓபன் ஆகாது. என்ன சார் இப்ப உங்களுக்கு திருப்தியா? இன்னும் அவனுங்களை மட்டும் கவனிக்கிற விதத்துல கவனிச்சா போதும்” என்றான்.
“சார் தேங்க்யூ! தேங்க்யூ ஸோ மச்! எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. இந்த மூணு மணி நேரத்துல செத்து செத்து பிழைச்சிட்டிருந்தோம் சார்.”
“உணர்ச்சிவசப்படாதீங்க சார். இதுக்கு நன்றி சொல்லணும்னா மிஸ்.ராசிக்குத்தான் சொல்லியாகணும். அவங்களாலதான் ரொம்ப பரவுறதுக்குள்ள நம்மளால சால்வ் பண்ண முடிஞ்சது.”
“கண்டிப்பா. என் தங்கச்சிக்கு நன்றி சொல்லியே ஆகணும்” என்று ராசியிடம் திரும்பி “தேங்க்ஸ்மா” என்றான்.
“தேங்க்ஸ்லாம் நமக்குள்ள எதுக்கு அண்ணா.” சேவியரிடம் மறுத்தவாறு சரத்தை பார்க்க... அவன் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டியதும்... “சீ.. போ” என வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்து, “நான் கிளம்புறேன்ணா. காலையில காரெடுத்துட்டு வர்றேன். ஜெபியை கிளம்பியிருக்கச் சொல்லுங்க” என்று வெளியேறப்போக...
“அப்ப நானும் கிளம்புறேன் சார்” என்று சேவியரிடம் சொல்லி அவளிடம் கண்ணால் விடைபெற்று அவளைத் தாண்டி செல்கையில் “பை மிஸ்.ராசி” என்றான் குறும்புக் குரலில். கண்ணால் எரிப்பதுபோல் அவனை ஒரு பார்வை பார்த்து தானும் கிளம்பினாள்.
மறுநாள் காலை குழந்தையை லோஜியிடம் ஒப்படைத்து மற்றவர்கள் யுவர்ஸ் ஃப்ரண்ட் வர... அலுவலகத்தின் பின்புறம் சரத் அவர்களை அழைத்துச் செல்ல, நாற்காலியில் இருவர் கட்டி வைக்கப்பட்டிருந்தார்கள். வந்த ஆத்திரத்தில் ராசி இருவரையும் திட்டி சரமாறியாக அடித்து சேவியரிடமும் ஜெபிதாவிடமும், “இவனை உங்களுக்கு என்ன செய்யணும்னு தோணுதோ செய்யுங்க” என்றவள், “அவங்க தான் செஞ்சதா ஒத்துக்கிட்டாங்களா சார்?” என்றாள் சரத்திடம்.
“ஆமா. நைட் பதினொன்றரைக்கு எல்லாம் இங்க உள்ள பசங்களோட என் ஃப்ரண்டும் சேர்ந்து இவனுங்க ரெண்டு பேரையும் இழுத்துட்டு வந்தாங்க. என்னடா ரெண்டு பேர்னு கேட்டா நீயே அவனுங்களை விசாரி நான் ஏன் அள்ளிட்டு வந்தேன்னு தெரியும்னான். முதல்ல விசாரிச்சப்ப எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொன்னாங்க. நைட் கொஞ்சம் ட்ரீட்மெண்ட் குடுத்ததுல ஒத்துக்கிட்டாங்க. இதைச் செய்தது நீங்க அடிச்ச ராக்கி கிடையாது. அவன் ஃப்ரண்ட் தான்.”
“எப்படி? எதுக்காக எடுத்தானாம்?” என்றாள் குரலில் கோபத்தை அடக்கி.
“சின்ன பசங்க சில்லறைத்தனமா நடந்திருக்காங்க. இவங்க கல்யாண நாளுக்கு நீங்க எல்லாரும் வெளில கிளம்பினதை பார்த்திருக்காங்க. அப்பத்தான் ப்ரண்ட் ஒருத்தன், டேய்! இன்னைக்கு கண்டிப்பா பர்ஸ்ட் நைட் நடக்கும் நான் பார்த்ததே இல்லைன்னு ஒருத்தன் சொல்ல., மத்தவனுங்களும் அதை ஆமோதிக்க, இந்த ரோஹன் கொஞ்சம் ஓவரா போயி வீடியோ எடுத்திருவோம்னு சொல்லிருக்கான். சும்மா ஜாலிக்காக பேசிட்டிருந்ததால கூடவே பேசிட்டிருந்த ராக்கி வீடியோன்னதும், இல்லடா தப்புன்னு தடுக்க மத்தவங்களும் பயத்துல ஆமாம்டா வேண்டாம்னு சொல்லிருக்காங்க.”
“அடுத்தவனுக்கு அவங்க மறுக்க மறுக்க செஞ்சா என்னன்ற வெறில, நீங்க வரலன்னா போங்க. நான் இன்னைக்கு நைட் எடுக்கத்தான் போறேன். சக்சஸ் பண்ணிட்டு வந்து காட்டுறேன் பாருங்கன்னு, நீங்கல்லாம் டின்னர்கு வெளியில போயிட்டு வர்றதுக்குள்ள யாருக்கும் தெரியாம பால்கனியில ஏறிட்டான். நம்ம வீடு தானேன்னு சேவியர் ஃபேமிலி அசால்ட்டா இருக்க இவனுக்கு சாதகமா போச்சி. குழந்தை அழுததும் வெளியில ஒழிஞ்சி திரும்ப வந்து எடுக்கலாம்னு பார்த்தா கதவடைச்சிட்டாங்க. எடுத்தவரை ஃப்ரண்ட்ஸ்கிட்ட போட்டு காண்பிக்க எல்லாத்தையும் பார்க்கணும்ன்ற வயசு அதனால இவனுங்களும் பார்த்திருக்காங்க.”
“அப்பத்தான், டேய்! வாட்சப்ல போடப்போறேன்னு ரோஹன் சொல்ல, ராக்கிக்கு கோபம் வந்து, இது அவங்க புருஷன் பொண்டாட்டி சம்பந்தப்பட்டது. சேலஞ்ச் பண்ணின, எடுத்த, பார்த்திட்ட அழிச்சிருன்னு சொல்லியிருக்கான்.”
“லூசாடா நீ! நாம என்ஜாய் பண்ணினதை மத்தவங்க பண்ண வேண்டாமான்னு ரோஹன் சொல்ல... ரெண்டுபேருக்குள்ளயும் பிரச்சனையாகிருக்கு. அப்புறம் மத்தவங்க சமாதானப்படுத்தினதும் சரி நான் யார்கிட்டயும் காண்பிக்க மாட்டேன் ரெண்டுநாள் பார்த்துட்டு அழிச்சிடுறேன்னு ராக்கிகிட்ட சொன்னதும், வேற வழியில்லாம இவனும் சரின்னு சொல்லிட்டான்.”
“ஆனா, ரெண்டுநாள் கழிச்சி அதை வாட்சப்ல பார்த்தப்ப தான் ராக்கிக்கே தெரிஞ்சிருக்கு. போன் செஞ்சி அவனை வீட்டுக்கு வரவழைச்சி அடிச்சி, போலீஸ் போனா என்ன பண்ணுவன்னு கேட்ட பிறகுதான், ஐயையோ! நான் இதை யோசிக்கலடான்னு அழுதிருக்கான். போலீஸ் வருமான்னு பார்க்கத்தான் அவன் அடிக்கடி சேவியர் வீட்டை நோட்டம் விட்டது. அதை எப்படியாவது அழிக்கணும்னு தான் மத்தவங்க போன பிறகும் இவனுங்க அங்கேயே நின்னிட்டிருக்க நம்மாளுங்க தூக்கிட்டு வந்துட்டாங்க.”
“இதான் அவங்க வாக்குமூலம். இனிமேல் உங்க இஷ்டம்தான். போலீஸ் போகலாம்னு முடிவு பண்ணினாலும் சொல்லுங்க நான் ஹெல்ப் பண்றேன்” என்றான்.