• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
8



“உங்களுக்கு எத்தனை முறை சொல்றது? நம்ம பையனை நீங்களே பைத்தியம்னு சொல்லலாமா? முன்ன இருந்ததுக்கு இப்ப தெளிவாயிருக்கான். தினமும் மாத்திரை கொடுக்குறதால இப்பப் பரவாயில்லைங்க. இன்னும் சில வருஷம் போனா முழுசா நம்ம பையனாகவே மாறிருவான். இப்ப அவன் பாதி வளர்ந்துட்ட குழந்தை” என்றார்.

“ப்ச்.. எனக்கு நம்பிக்கையில்லை ஆனந்தி. இப்படியே ஒவ்வொரு வருஷமும் எதிர்பார்த்து ஏமாறுறதே வேலையாகிப் போச்சி. ஆனந்தி கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி வசீகரன் ஏன் ஆஃபீஸ் வரலை? ஏன் அவரோட அண்ணன் எம்.டி சீட்டுல இருக்கார்? அவரோட பைனான்ஸ் ஏன் போறதில்லை? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்.”

“சின்னவன் வெளிநாட்டுல தொழில் தொடங்குறது சம்பந்தமா போயிருக்கான். அவன் கல்யாணத்துக்கு வந்து திரும்பவும் கிளம்பிருவான். பெரியவன் பைனான்ஸ் கம்பெனி பெரிய மருமகள் பார்த்துக்குறதால அவன் தம்பி பிசினஸைப் பார்த்துக்குறான்னு சொல்லி சமாளிச்சிட்டிருக்கேன். எத்தனை காலத்துக்கு இதையே செய்யுறது?”

“சின்னவன் சரியாகி வர்றவரைக்கும் செய்யுங்க. நம்ம பையனை நாமளே விட்டுக்கொடுத்திரக் கூடாதுங்க” என்றார் அமைதியாக.

“அது எனக்குத் தெரியாதா ஆனந்தி. அதனாலதான் பையன் நிலை தெரிந்தும் கௌரவத்துக்காகனாலும் கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன். அப்புறம் ஆனந்தி இந்தப்பொண்ணு... “

அடுத்து என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்க முடியாமல், எதையும் சிந்திக்கத் தோன்றாமல் தங்களறைக்கு வந்திருந்தாள் பூரணி.

மீதியையும் கேட்டிருக்கலாமே என்பதாய் பார்த்தது விதி!

“உங்களுக்குப் பைத்தியமா வசீகரா? என்னால நம்பவே முடியலை. உங்க அப்பாவும் அம்மாவுமே சொல்லுறப்ப என்னன்னு எடுக்கிறது? உங்கம்மா என்ன சொல்றாங்களோ அதைதான் கிளிப்பிள்ளை மாதிரி என்கிட்ட சொல்றீங்களா? நான் என்னடான்னா ஏதேதோ கற்பனை செய்து... ஐயோ!” என்றலறி தலையைப் பிடித்தமர்ந்தாள்.

“ஏன்.. ஏன் இப்படி செய்தாங்க? கௌரவம்! ஹான் கௌரவம். அதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குவாங்களா? ஏன் வசீகரா இப்படிப் பொய்யாய் போயிட்டீங்க? நான் இதை சுத்தமா எதிர்பார்க்கலை. பணக்கார சம்பந்தம்னதும் எங்கப்பா விசாரிக்கலை. ஏமாற ஒருத்தி கிடைச்சா போதும்னு உங்க வீட்டாளுங்க என்னை... ப்ச்.. நடந்து முடிஞ்சதைப் பற்றிப் பேசி பிரயோஜனமில்லை” என்று கண்ணீரைத் துடைத்து கணவனாகியவனைப் பார்க்க, அவர்கள் சொல்வது பொய் என்ற ரீதியில் அமைதியாய் துயில் கொண்டிருந்தான் அவளின் வசீகரன்.

அவனருகில் அமர்ந்து, “என்ன வசீகரா இதெல்லாம்? உங்களைப் பார்த்தால் யாரும் அப்படிச் சொல்லமாட்டாங்க. உண்மை தெரிந்தும் உங்களை வெறுக்க மனம் வரலையே ஏன் வசீகரா? உங்களுக்கு உங்களையே தெரியாதப்ப என்னை எப்படிப் புரியும். இந்த.. உங்க...” ‘பைத்தியம்’ என்ற நினைவு கூட கசக்க கண்களில் தன்னால் கண்ணீர் வர, அதை அடக்க முயற்சித்தும் முடியாமல் திணறினாள்.

“உங்க சூழ்நிலை மாறினால் என்னை மறந்துருவீங்களா வசீகரா? என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்காதா? இந்த உண்மை வெளில தெரிஞ்சா இந்தக் கல்யாணமே செல்லாது சொல்வாங்கள்ல. ஆசை ஆசையாய் உங்களைக் கல்யாணம் செய்ததுக்கு இன்னும் என்ன தண்டனை கொடுக்கப்போறீங்க? எனக்குப் பயமாயிருக்கு வசீகரா. என்ன செய்யுறதுன்னே புரியாத நிலையில் இருக்கேன். எனக்கு உண்மை தெரியும்னு வெளில சொன்னா என்ன சொல்வாங்க? உங்ககிட்டயிருந்து என்னைப் பிரித்து அனுப்பிருவாங்களா? இல்லை நான் உங்களோடதான் இருப்பேன். உங்களை விட்டுப் போகமாட்டேன்” என்று அவனை அணைத்தபடி படுத்துக்கொண்டாள்.

காலை எழுந்ததும் கண்முன் கைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த கணவனைக் கண்டவள் புன்னகைத்து, “குட் மார்னிங் குட்டிக்கண்ணா” என்றாள்.

“குட் மார்னிங் பரி. இன்னைக்கு என்னைவிட லேட்டா எழுந்திருக்க. சீக்கிரம் ரெடியாகி வா உனக்காகதான் உட்கார்ந்திருக்கேன்” என்றான்.

‘நானும்கூட உங்களுக்காக மட்டுமே இங்க இருக்கப்போறேன்’ என நினைத்து, “எனக்காக இருக்கீங்களா? ஏன்?” என்றாள்.

“எழுந்ததும் தனியா வரக்கூடாது பூரணியோடதான் வரணும்னு அம்மா சொல்லியிருக்காங்க. நீ சீக்கிரம் வா போகலாம்” என்றான்.

“ஓ.. அப்ப உங்கம்மா சொன்னதைதான் நீங்க செய்யுறீங்களா?”

“ஆமா. அம்மா சொல்லாம எனக்கே எப்படித் தெரியும்? அம்மா சொல்வதைத் தட்டாமல் செய்வதுதான் நல்லபிள்ளைக்கு அழகு. நீ எப்படி?” என்று அவளிடம் திருப்பினான்.

“நானும் உங்களைப் போலதான்” என்றவளுக்கு கண்கள் கலங்க, “இருங்க குளிச்சிட்டு வர்றேன்” என குளியலறை சென்று கதவடைத்தாள்.

வீட்டில் அனைவரோடும் பேசினாலும், கணவனைப் பற்றிய உண்மை தெரிந்ததை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. முடிந்தளவு குலசேகரன் பார்வை தன்மீது படாதளவு ஒழிந்து விளையாடப் பழகிக்கொண்டாள் பூரணி.

மனைவியின் வார்த்தை பொய்யாகிவிடக் கூடாதா என்ற எதிர்பார்ப்போடு தகப்பனை வேவு பார்த்த சுவீகரனுக்கு, அவரின் நடவடிக்கையில் எமாற்றம் மட்டுமே மிஞ்ச, அவர்மேல் ஆத்திரம் ஆத்திரமாக வர மனைவியின் வேண்டுதலின்படி பூரணியின் வாழ்விற்காகப் பொறுத்துக் கொண்டாலும், வீட்டில் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்தினான். இல்லையானால் மனைவியின் வீட்டிலிருக்கும் நேரத்தைக் குறைத்தான்.

வசீகரன்-பரிபூரணி திருமணம் முடிந்து எட்டாவது நாள் இன்று.

ஏனோ மாமியார் திடீரென்று தன்னைவிட்டு விலகுவது போலொரு தோற்றம் அவளுள். ஆரம்பத்தில் இருந்த அன்பு குறைந்திருந்ததோ! சுமூகமான பேச்சுகள் மொத்தமாய்க் குறைந்திருந்தது. அதே நேரம் ஐஸ்வர்யா பூரணிக்கு நெருக்கமாகியிருந்தாள்.

அன்று தனசேகரன் குடும்பத்துடன் வந்திருக்க, அவர்களே மறுத்தாலும் குடும்பத்தில் ஒருத்தியாய் அவர்களைக் கவனிக்க மறக்கவில்லை பரிபூரணி.

மாலை வடை காஃபியுடன் தங்களறைக்கு வந்தவள் அங்கே கேம் விளையாடிக் கொண்டிருந்த கணவனைக் கண்டு, “ஹேய் குட்டிக்கண்ணா! இங்க என்ன பண்றீங்க? காலையிலிருந்து கீழ வரவேயில்லையே ஏன்?” எப்பொழுதும் அப்படி இருப்பவன் இல்லையே என்பதால் கேட்டாள்.

“அந்த பெரியப்பா எப்பப்பாரு பைத்தியம்னு சொல்றார். அவங்க வீட்டுல தினா தவிர யாருமே சரி கிடையாது பரி. நீயும் அவங்ககிட்டப் பேசாத” என்று புகாரளித்தான்.

“உங்க மனோகரன் அண்ணனுமா?” ஐஸ்வர்யா சொல்வதை வைத்துப் பார்த்ததில் பெரியவர்கள் மட்டுமே தப்பாகத் தெரிந்தார்கள். இவன் என்னவென்றால் இப்படிச் சொல்கிறான் என்றே கேட்டிருந்தாள்.

“அவன் நல்லவன்தான். ஆனா, அண்ணி பக்கத்துல இருந்தா அவங்க சொல்றதைதான் கேட்பான். என்னைப்பற்றி தப்புத்தப்பா சொல்லித் தருவாங்க. அண்ணனும் அதைக்கேட்டு என்னை முறைப்பான்.”

“ஓ.. ஒய்ஃப் பேச்சைக் கேட்கிறது தப்பில்லையே வசீகரா” என்றாள் அவன் தலைகலைத்தபடி.

“நல்லதை மட்டும் கேட்கிறது தப்பில்லை. அண்ணா அப்படியா செய்றான்? பேட் பாய்” என்க, சட்டென்று சிரித்துவிட்டாள்.

“ஏன் சிரிக்கிற?”

“நீங்க சொன்ன விதம், உங்க வாய்ஸ் ரொம்ப க்யூட்டா இருந்ததா அதான் சிரிச்சுட்டேன். அவங்களைப் பிடிக்கலைன்னா விடுங்க. இப்ப காஃபி குடிச்சிட்டே பேசலாம்.”

“உனக்கு அவங்களைப் பிடிக்குமா?”

“என் குட்டிக்கண்ணாவைப் பைத்தியம்னு சொல்ற எந்தப் பைத்தியங்களையும் எனக்குப் பிடிக்காது” என்றாள் யோசிக்காது.

“நாங்க பைத்தியமா?” என்ற குரலில் இருவரும் திரும்ப, “உன் புருஷன்தான்டி பைத்தியம். இப்படி ஒருத்தன் கிடைச்சதுக்கே உனக்கு இவ்வளவு கொழுப்புனா, உனக்கெல்லாம் நல்ல புருஷன் கிடைச்சிருந்தா... ஹ்ம்.. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. இந்த சின்ன மாமியார் கொடுக்குற இடம் அப்படி” என்று முகம் கடுத்தாள் ஸ்வாதி.

தங்கள் இருவரின் தனிமையில் திடீரென வந்து தங்களைப் பேசுபவள் மேல் கோபம் எழ, “அண்ணி அப்படிச் சொல்லாதீங்க” என்றான் வசீகரன்.

“வேற எப்படிச் சொல்றது? அறிவாளின்னா? போடா பைத்தியம்” என்று அவனைத் திட்ட...

“ஏய்! இன்னொரு தடவை அந்த வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாது. வந்தது...” என்று பூரணி எச்சரிக்க...

“ஹா அப்புறம். ஹேய் ஒழுங்கா உன் வீட்டைப்பார்த்து ஓடிப்போ. இங்கயிருந்தா உனக்கு எந்த சுகமும் கிடைக்காது. இந்த வசதி மட்டுமே போதும்னா இரு” என்று ஏளனமாய்ப் பேச,

வசீகரனோ மனைவியின் கையை அழுந்தப் பற்றிக்கொண்டான். அவனின் பயம் உணர்ந்தாளோ! “வேண்டாம் ஸ்வாதி. நீங்க பேசுறது தப்பாயிருக்கு. வயசுக்கு மரியாதை கொடுத்து அமைதியாயிருக்கேன். இல்ல...”

“என் பேரைச் சொல்லிக் கூப்பிடுற அளவு பெரியாளா நீ? இப்படித்தான் பேசுவேன். உன் புருஷன் பைத்தியம்தான். என்னை என்ன செய்யமுடியும் உன்னால்?” என்றவள் குரலிலிருந்த எகத்தாளம் இன்னும் கோபத்தைத் தூண்ட,

“என்ன வேணும்னா செய்யமுடியும். இந்த வீட்டுக்கே வராத மாதிரி என்னால் செய்யமுடியும் பார்க்குறீங்களா?” என்று கோபத்தில் சத்தமாகச் சொல்ல,

“என்ன சத்தம்? ஸ்வாதி இங்க என்ன பண்ற?” என்றபடி அங்கிருந்த மூவரையும் நோட்டம் விட்டபடி வந்தார் ஆனந்தி.

“வசீயைப் பார்க்க வந்தேன் அத்தை. உங்க மருமகள் என்னென்னவோ சொல்லித் திட்டுறா” என்று ஸ்வாதி திடீர்க் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

“அப்படியில்லை அத்தை” என்பதற்குள், “பூரணி! அழுற அளவுக்கு என்ன சொன்ன இவளை? வீட்டுக்கு வந்தவங்களுக்கு இதான் நீ கொடுக்கிற மரியாதையா?” எதனாலோ அவள் மீதுள்ள கோபத்தைக் காட்டுவது போலிருந்தது அவரின் செய்கை.

“அத்தை நான் ஒண்ணும் செய்யலை. இவங்கதான்...”

பூரணியின் மீதான ஆனந்தியின் பிடிப்பின்மையை உணர்ந்த ஸ்வாதி, “என்ன இவங்கதான்ற? வசீ ரொம்ப அமைதி. ஆனந்தி அத்தை ரொம்பவே நல்லவங்க. இங்க உள்ளவங்களை நல்லபடியா பார்த்துக்கச் சொன்னது தப்பா அத்தை? அதுக்குப்போய் யார்கிட்ட எப்படிப் பேசணும்னு எனக்குத் தெரியும். நீங்க எதுவும் சொல்லாம வீட்டைப்பார்த்துப் போங்கன்னு அப்படிக் கத்துறா” என்று நடந்ததை அப்படியே மாற்றினாள்.

“நான் உன்னை என்ன செய்தேன்மா? எதுக்காக அப்படிச் சொன்ன? நான் உன்கிட்ட இந்தளவு எதிர்பார்க்கலை” என்றார் ஆனந்தி.

“அத்தை நான் எதுவும் சொல்லலை. இவங்கதான் உங்க பையனைப் பார்த்து...”

“என்ன பார்த்தாங்க? வந்த ஒரு வாரத்துல எங்க இரண்டு குடும்பத்தையும் பிரிக்கப் பார்க்குறியா? எத்தனை வருட ஒற்றுமை தெரியுமா எங்களது?” என்று பூரணியைப் பேசவிடாமல் செய்ய...

‘அடிப்பாவி’ என்பதாய் நினைத்த பூரணி, “ஏன்ங்க என்னென்னவோ பேசுறீங்க. ப்ளீஸ் கொஞ்ச நேரம் நீங்க பேசாம இருங்க. நான் எங்க அத்தைகிட்ட பேசிக்குறேன்” என்றாள் சற்று காட்டமாகவே.

“பூரணி!” என அதட்டலிட்ட ஆனந்தி, “தப்பு” என்றார் அவ்வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து.

“அத்தை. நான்.. ப்ச்.. ஒரு நிமிஷம்..” என்றவள் தங்களை வேடிக்கை பார்த்திருந்த கணவனிடம் வந்தாள். பூரணி சத்தமாகப் பேசுகையில் அவளை விட்டு விலகி நின்றவன் சற்று பயத்துடனே அவளைப் பார்க்க, “உங்களைத் தப்பாப் பேசினாங்கள்ல. அதை அத்தைகிட்ட சொல்லுங்க” என்றாள்.

“நானா? மாட்டேன் போ” என்று தாயின் பின்னே ஒழிந்தான் வசீகரன்.

“நீங்க பேசலைன்னா நான் தப்புப் பண்ணின மாதிரியாகிரும். ப்ளீஸ் நடந்ததைச் சொல்லுங்க” என்று தன்னிடம் கெஞ்சுபவளை புரியா பார்வை பார்த்து, “அம்மா அவளைப் போகச் சொல்லுங்க” என்று ஸ்வாதியை நோக்கி நீட்டிய கையோ பூரணியைச் சுட்ட... அதில் பூரணியின் மேல் இன்னுமே வெறுப்பைக் காட்டிய ஆனந்தி, “ஸ்வாதிகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு கீழ போ” என்று கட்டளையிட்டார்.

அதில் அதிர்ந்தவளோ, “அத்தை! நான் எதுவுமே செய்யலை” என அழுகுரலில் சொல்ல.. “நான் சொன்னதை மட்டும் செய்” என பிடிவாதமாக நிற்கவும், வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டு அழுதபடி வெளியே சென்றுவிட்டாள்.

அதன்பிறகே வெளியே சென்றிருந்த சுவீகரன் ஐஸ்வர்யா வர, சற்று நேரத்திற்கெல்லாம் தனசேகரன் குடும்பம் சென்றுவிட, இரவு படுக்க அறைக்கு வந்தவளை அங்கிருந்த ஷோபாவில் தன்னுடன் அமரவைத்து, “அழுதியா பூரணி? நாங்க இல்லாத நேரத்துல என்ன நடந்தது?” என கேட்டாள் ஐஸ்வர்யா.

தனசேகரன் குடும்பம் வந்ததிலிருந்து நடந்ததைச் சொல்லி முடித்து, “உங்க கொழுந்தனுக்கு இப்படின்னு ஏன்கா சொல்லலை? கோவில்ல வச்சி அவங்க சொன்னதைக் கேட்டு பயந்து உங்ககிட்ட கேட்டப்ப இல்லைன்னு சொன்னீங்க? நீங்களும் மறைச்சிருக்கீங்கதான?” கண்கலங்கக் கேட்டாள்.

“பூரணி! உனக்கு...” என்றாள் திகைப்புடன்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அதிர்வு, கோபம், ஆத்திரம் அனைத்தும் காட்ட வேண்டியவளோ அமைதியாக, “கோவிலுக்குப் போயிட்டு வந்தன்னைக்கு உங்ககிட்ட பேசிட்டுப் போனப்ப ஏதேதோ குழப்பம் சரியா தூக்கம் வராம தலைவலி வந்தது. அதான் தைலம் கேட்க வந்தப்ப அத்தை மாமா பேசிட்டிருந்ததைக் கேட்டுட்டேன். ஆனா, ஏன் என்னை...” பேச முடியாமல் வார்த்தைகள் திக்கியது.

“அ..அது பூரணி...”

ஐஸ்வர்யாவின் தடுமாற்றத்தைக் கண்டு, “கௌரவத்துக்காக! இல்லையாக்கா? வசதியான வீட்டுப் பொண்ணுங்க சரிவரமாட்டாங்கன்னு எங்கப்பா கேரக்டர் தெரிஞ்சி முடிச்சிட்டீங்க புரியுது. அப்புறமும் ஏன் உண்மையைச் சொல்லலை?” என்றாள் நிதானமாக.

“அ..து ம்.. க்கும்..” என தொண்டையைச் செருமி, “முதல்ல சண்டை போட்டேன். இவங்கதான் தம்பி ட்ரீட்மெண்ட் எடுத்திட்டிருக்கான். மேரேஜானா சிலருக்கு சரியாகும்ன்றது சைன்டிபிக்கா நிஜம். ஜாதகமும் அதையேதான் சொல்லுது. தம்பி சரியானா அந்தப்பொண்ணை நல்லா பார்த்துப்பான்னு சொன்னாங்க. முதல்ல ஒத்துக்கலை பூரணி..” என வேகமாகச் சொன்னவள், “அப்புறம்தான்...” குரல் இறக்கி, “வசீ ரொம்ப நல்லவர் பூரணி. இயல்பிலேயே ரொம்ப அமைதியானவர். யாருக்காவது எதாவதுன்னா முன்ன வந்து நிற்பார். அந்த உதவுற இளகிய குணம்தான் அவர் இப்படியாகக் காரணம்.”

“நடந்ததைப் பேசி எதுவும் ஆகப்போறதில்லை. அவங்களுக்கு எப்ப இப்படியாச்சின்னு தெரிஞ்சிருந்தா மறைக்காம சொல்லுங்க?”

“உன்கிட்ட மறைக்க ஒண்ணுமில்லை பூரணி” என்றவளிடம், “ஆமா ஒண்ணுமில்லை. ஆனா, ஓராயிரம் இருக்கு இல்லையாக்கா?” என்றாள் நக்கலாக.

“பூர...” என ஆரம்பித்தவளை கைநீட்டித் தடுத்து, “என் பெயர் எனக்கே தெரியும். திரும்பத் திரும்பச் சொல்றதால மாறிராது. என்ன நடந்ததுன்னு மட்டும் சொல்லுங்க?” என்றாள்.

“இரண்டு வருஷம் முன்ன வசீயோட கன்ஸ்ட்ரக்ஷன் மூலமா, ஒரு ஷாப்ட்வேர் கம்பெனிக்கு ஏழுமாடி கட்டிடம் கட்டிட்டிருந்தார். கிட்டத்தட்ட பில்டிங் முடியுற நேரம் அது. இன்டீரியர் ஒர்க் மட்டும் நடந்துட்டிருந்தது. சைட் விசிட் போயிட்டு வர்றேன்னு கிளம்பியவர் வாசல்கால்ல வலதுகால் கட்டைவிரல் அடிபட்டு இரத்தம் வர, பதறி தண்ணீர் கொடுத்து சின்னதா கட்டுப்போட்டு வீட்டுல இருக்கச் சொன்னோம். ஒரு பக்கம் மட்டும் பெயிண்டிங் வேலையிருக்கு. அதோட கொஞ்சம் இன்டீரியர் ஒர்க்கும் முடிச்சிட்டு சீக்கிரம் வந்திருவேன்னு அத்தையை சமாளித்துக் கிளம்பினார்.”

“அடுத்த ஒருமணி நேரத்துல வசீக்கு ஆக்சிடெண்ட்னு போன் வர, பதறியடிச்சி நாங்க போறதுக்குள்ள ஆம்புலன்ஸ் மூலமா ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு, என்ன நடந்ததுன்னு விசாரிக்க நானும் கிருஷ் அப்பாவும் சைட்டுக்குப் போனோம்.”

இரண்டாவது மாடியில் சாளரத்தில் தொங்கியபடி கலர் அடித்துக் கொண்டிருந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தான் வசீகரன். அந்நேரம் டம்மென்ற பயங்கரமான சத்தம் வந்ததில், பெயிண்டர் கைப்பிடியை விட்டு கீழே விழப்போக, கண்முன்ன நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து, பெயிண்டரைக் காப்பாற்ற வசீகரன் கைகொடுத்துப் பிடித்தான்.

சில நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் பெயிண்டர் விழப்போக, வசீகரன் இன்னும் சாய்வாகி முன்னேறியதில் அடிபட்ட விரல் எதிலோ தட்ட, அது கொடுத்த வலியில் கையிலும் காலிலும் உள்ள உறுதி தளர, பெயிண்டரும் வசீகரனும் கீழே விழுந்துவிட்டார்கள். அதில் பெயிண்டர் கையில் கிடைத்த சாளரத்தைப் பிடித்துக்கொள்ள, எந்தப் பிடிமானமும் இல்லாத வசீகரன் கீழே விழுந்துவிட்டான்.

நடந்ததை ஐஸ்வர்யா சொல்ல பூரணி, “கடவுளே!” என்றலற,

“ஹாஸ்பிடல்ல உயிர் பிழைச்சி ஆபரேஷன்லாம் முடிய வசீ கோமாவுக்குப் போயிட்டார்.”

“ஐயோ! அப்புறம்?” என்றாள் தற்பொழுது நடந்ததுபோல் பதறிப்போய்.

“நாலு மாசம் அதுலயே போச்சிது. அப்புறம் நார்மலாகிருவார் பார்த்தா, நான் யாருன்னு மட்டும்தான் கேட்கலை. அவருக்கு அம்மா மட்டுமே நினைவுல இருந்தாங்க. மத்தவங்க யாரையும் தெரியலை. நாங்க ஒண்ணு கேட்டா வசீ ஒண்ணு சொல்வார். டாக்டர்கிட்ட அம்னீஷியாவா கேட்டதுக்கு, மேலிருந்து கீழ விழுந்து அடிபட்டது, விழுந்த அதிர்ச்சியினால் வந்த மனப்பிறழ்வுன்னார்” என்றவள் அன்றைய தினம் நடந்ததைச் சொன்னாள்.

“டாக்டர்” என்று அனைவரும் அலற... “என் தம்பியைப் பைத்தியம்னு சொல்றீங்களா?” என சண்டைக்கு வந்தான் சுவீகரன்.

“உண்மை அதுதான் தம்பி. உங்க ஆதங்கம் புரியுது. அதுக்காக இருக்கிற ஒண்ணை இல்லைன்னு சொல்ல முடியாதே. இல்லைன்னு சொல்லிட்டு ட்ரீட்மெண்ட் எப்படிக் கொடுக்க முடியும்?”

“எப்ப டாக்டர் சரியாகும்?”

“டைம் கொடுக்க நான் கடவுள் இல்லை தம்பி. நாளைக்கே குணமானாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை. சீக்கிரம் சரியாகிருவார்னு முதல்ல நீங்க நம்புங்க. நல்லதே நடக்கும் அப்படின்னு முடிச்சிட்டார்.”

“வசீக்கு இப்படியான விஷயத்தை மாமாங்க இரண்டுபேரும் வெளில தெரியாம மறைச்சி, விழுந்ததுல பட்ட அடி சரியானதும் வெளிநாட்டுக்குப் போயிட்டதா சொல்லி எல்லாரையும், ஏன் நெருங்குன நண்பர்கள் சொந்தக்காரங்கன்னு எல்லாரையும் நம்பவச்சாங்க. ஸ்வாதிக்குக்கூட உங்க கல்யாணத்தப்பதான் தெரியும். எங்க வீட்டுக்கும் முதல்ல தெரியாது. ஒருநாள் அப்பா வந்தப்ப வசீ கண்முன்ன வர, அப்பா என்கிட்ட வெளிநாட்டுல இருக்கிறதா சொன்னவன் இங்க எப்படின்னு துருவித்துருவிக் கேட்டதுல உண்மையைச் சொல்லிட்டேன்.”

“நாளாக நாளாக உங்க இரண்டாவது பையனுக்கு ஏன் இன்னும் கல்யாணம் செய்யலைன்ற கேள்வியை மத்தவங்க கேட்க ஆரம்பிக்க, ஒரு அளவுக்கு மேல காரணங்கள் சொல்ல முடியலை. முதல்ல கேள்வி மட்டுமே வந்த இடத்துல, கேட்டவங்களே, பையன் யாரையாவது காதலிக்குறானா? வேற ஜாதியா? இல்லை வேற மதமா? இல்லைனா கல்யாணமே செய்துட்டானா? நாங்க கேள்வி கேட்போம்னு மறைச்சிட்டீங்களான்னு ஒருவழி பண்ணிட்டாங்க. ஜாதகம் பார்த்த இடத்திலும் கல்யாணமானா சரியாகிரும்னு சொல்ல, வசதியான பெண்ணெடுத்தா சமாளிக்க முடியாதுன்னு, பெரிய மாமா சொல்லி உன்னைத் தேர்ந்தெடுத்தாங்க. கல்யாணத்தையும் எல்லாருக்கும் இங்க தப்பு நடக்கலைன்னு தெரியணும்னு மத்தவங்க பார்க்க க்ராண்டா பண்ணிட்டாங்க.”

“ஓ...” என அனைத்தையும் உள்வாங்கி, “அவங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே அக்கா. இந்த மாதிரி பிரச்சனை உள்ளவங்க, எதையாவது புலம்பிட்டோ, யாரையாவது அடிச்சிட்டோ, இல்லை தனக்குத்தானே தண்டனை கொடுத்துட்டுன்னு, இப்படி ஏதோ ஒரு வகையில் வெளியில் தன்னை வெளிப்படுத்திருவாங்களே? இவங்க கல்யாணத்தப்ப அவ்வளவு கூட்டத்திலும் நிதானமாதான இருந்தாங்க? ஏன் அன்னைக்கு நைட்கூட ரொம்ப இதமா பேசினாங்க” என்றாள் கேள்வியாக.

“அதனாலதான் மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்க்காம வசீயை வீட்டுக்கு அனுப்பிட்டார் டாக்டர். வசீயைக் குழந்தையிலும் சேர்க்க முடியாது. குமரன்லயும் சேர்க்க முடியாது. அத்தை மட்டுமே ஆதாரம் மாதிரி, அத்தை சொல்றது மட்டுமே புரியும். புரியும்ன்றதைத் தவிர, அவங்களைத் தாண்டி யாரையும் கண்டுக்குறதில்லை. அத்தை சொல்றது மட்டுமே வேதம். அவரோட அந்த குணத்தை அத்தை சரியா பயன்படுத்தினாங்க. தனக்கான நேரத்தை முழுக்க பையனுக்கே செலவழிச்சாங்க. முரண்டு பிடித்தக் குழந்தையை தன் அன்பாலயும், மருத்துவத்தாலயும் நார்மலுக்குக் கொண்டுவரப் போராடுனாங்க.”

“தன்னோட வேலையை தானேதான் செய்யணும்னு அதுக்கும் வசீயைப் பழக்கினாங்க. நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து, எப்பவும் அமைதியாயிருக்க கேம் பழக்கிவிட்டாங்க. அதுவுமே மூளைக்கு வேலை கொடுக்குறதாதான் இருக்கும். தொடர்ந்து எடுத்துக்கிட்ட மெடிக்கல் ட்ரீட்மெண்டும் சேர, இப்ப கொஞ்சம் பரவாயில்லை.”

“அப்ப நான் சொன்னா கேட்கமாட்டாங்களா?” என்றாள் வருத்தமாக.

“டெஸ்ட் பண்ணிப்பாரு. எதாவது மாற்றம் வந்திருக்கா பார்க்கலாம். அதேநேரம் ரியாக்ஷன் எதுவுமில்லைனா சோர்ந்து போயிரக்கூடாது. விடாமுயற்சி விண்ணைத்தொடும் வெற்றி” என்றாள் புன்னகையுடன்.

“விஸ்வரூபத்தை மாத்தி சொல்றீங்க அக்கா?” என்றாள் தெளிந்த மனதோடு.

“அவங்க சொன்னதை அப்படியே சொன்னா நமக்கென்ன மரியாதை?” என்று சிரிக்க, உடனிணைந்து சிரித்தாள் பரிபூரணி.

“எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை ரொம்ப சாதாரணமா எடுத்துக்கிட்ட பூரணி? நானாயிருந்தா இந்த வீட்டையே கொளுத்தியிருப்பேன்.”

“இப்ப நீங்க சொன்னீங்களே அதுதான்கா இதுக்குப் பொருந்தும். மத்தவங்க செய்யுற மாதிரி நானும் செய்தா எனக்கென்ன மரியாதை” என்று புருவம் உயர்த்த, அவளின் தோளணைத்து, “நல்லாயிருப்பமா” என்றாள் ஐஸ்வர்யா.

இரவு உறக்கத்தின் இடையே பூரணியின் ‘ஆ’ என்று தொடர்ந்த அலறல் அரைத் தூக்கத்திலிருந்த வசீகரனை எழுப்ப, “என்னாச்சி?” என்றான் கண்ணைத் தேய்த்தபடி. மனைவியின் அழுகை குறையாமலிருக்க அவனுக்கும் தூக்கம் முழுதும் கலைய அவளை நெருங்கி காய்ச்சலடிக்கிறதோ என்று நெற்றியில் கழுத்தில் கைவைத்துப் பார்த்தான்.

கணவனின் திடீர்த் தொடுகையில் திடுக்கிட்டுப் பார்த்தவள் பதறி விலக, “காய்ச்சலான்னு பார்க்கிறேன் வா” என்றழைக்க... “இல்லைங்க வேண்டாம்” என்று திணறினாள்.

“அப்ப ஏன் அழுத?” என்றானவன்.

“அ..அது க..கை ஹான்.. கால் வலிக்குதுங்க. ரொம்ப நேரமா வலிக்குறதால தாங்க முடியாம அழுதுட்டேன்” என்று காலைப்பிடித்து உதடு பிதுக்கி அழ ஆரம்பிக்க...

“அழாத பரி. நீ அழாமலிருக்க நான் என்ன செய்யணும்?” என்றவன் குரலில் அத்தனை பதற்றம்.

அவள் கண்களிலோ நட்சத்திரம் மின்ன, “நான் சொன்னா கேட்பீங்களா?” என்றாள்.

“நீ என் மனைவி. இப்ப என் ஃப்ரண்ட். அப்ப உன் பேச்சைக் கேட்கணும்தான?” என்று அவளிடமே கேட்டான்.

“என் பேச்சைக் கேட்கணும்னு யார் சொல்லித் தந்தாங்க?”

“யார் சொல்லித்தரணும்? நானேதான் தெரிஞ்சிக்கிட்டேன். என்னை என்ன குழந்தை நினைச்சியா?” என்றதில் அவள் மனம் குளிர, “அந்த டேபிள்ல உள்ள டிரால, பச்சைக்கலர்ல குட்டியா தைலம் டப்பா இருக்குது பாருங்க. அதை எடுத்துக் கால்ல தேய்க்கணும்” என்றதும் வேகமாக எடுத்து வந்தவன் அவளிடம் கொடுத்து திறக்கச் சொல்லித் திறந்ததும் அதைப் பிடுங்கியவன், வேகமாக காலருகில் வந்த புடவையை விலக்கி பாதத்திற்கு மேலுள்ள கெண்டைக்காலில் தேய்க்க ஆரம்பித்தான்.

“வசீ..வசீகரா என்ன பண்றீங்க?” அவனின் அவசரச் செயலில் திகைத்து விழித்துக் கேட்டாள்.

“நீ அழாம இருக்க தேய்க்குறேன். வலி போனதும் தூங்கு என்ன” என்றான்.

முதலில் இருந்த திகைப்பு விலகி தனக்காகப் பார்க்கும் கணவன் முகம் தொட்டு, “சோ ஸ்வீட் குட்டிக்கண்ணா நீங்க. இந்த நிலையிலும் எனக்கான கேர் எடுக்குறீங்க. நீங்க நார்மலா இருந்திருந்தா நான் ரொம்ப லக்கி கேர்ளா இருந்துருப்பேன். அதான் கடவுள் சரியான இடத்துல செக் வச்சிட்டார்போல குட்டிக்கண்ணா” என்று அவன் கேசம் வருடி, சோகத்தைத் தன்னுள் புதைத்தாள்.

“இன்னும் வலிக்குதா?”

“ம்கூம் உங்க கைபட்டதும் வலி போயிருச்சி. நீங்க படுத்துக்கோங்க” என்றாள்.

“போயிருச்சின்னா சரி. வேற எங்கேயாவது வலிச்சா மறைக்காம சொல்லு?”

“வேற எங்கேயும் இல்லங்க. இங்க மட்டும்தான் அப்பப்ப வலிக்குது” என்று பேச்சுவாக்கில் நெஞ்சைத் தொட்டுக் காண்பிக்க, சொன்னபின்னே தன் தவறை உணர, அதற்குள் அவளின் வசீகரன் அவ்விடம் நோக்கி நெருங்கியிருக்க, அவனைத் தள்ளக்கூட முடியாத நெருக்கத்தில் பாவையவள் தவிக்க, “இங்கதான வலிக்குது?” என்று கை தைலத்துடன் அவளுடலை நெருங்க...

“இல்ல.. இல்லைங்க. வலி போயிருச்சி. கொஞ்சம் தள்ளி நிற்குறீங்களா?” என்றாள் படபடப்பு குறையாது.

“நிஜமா போயிருச்சில்ல.”

“ஐயோ ஆமாங்க. போயே போச்சி” என அனைத்து பற்களையும் காட்டிச் சிரித்தாள்.

“இப்படியே இரு” என்று அருகில் வந்து படுத்தவன் சில நிமிடத்திற்கெல்லாம், “பரி தூக்கம் வரலை. ஆனா, உடம்பு என்னவோ செய்யுது. என்னன்னு தெரியலை” என உடலை முறுக்கிக்கொண்டு சொல்ல... பக்கென்றானது பரிபூரணிக்கு.

‘ஹையோ டெஸ்ட் ஓவர் லோடாகிருச்சி போலவே! ஒண்ணுந்தெரியாத பிள்ளையை நீயே கெடுக்குற பரி.’ தன் தலையில் தானே அடித்துக்கொண்டு, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துத் தூங்க வைத்து, ஒருவித நிம்மதியுடன் அவன் தோள்சாய்ந்தாள் பரிபூரணி.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top