- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
7
மறுநாள் காலைதான் அவந்திகாவிற்கு சுயநினைவே வந்தது. கார்த்திக் அதுவரை அவளைவிட்டு அங்கேயிங்கே நகரவில்லை. அவனுக்கு நிறைய குற்றவுணர்ச்சியிருந்தது. அவளுக்கு ஆபத்து இருக்கிறதென்று தெரிந்தும் அவளை பாதுகாக்காமல் அசால்ட்டாக விட்டோமே என்று. அவள் கண் விழித்ததும்தான் அவனுக்கு உயிரே வந்தது.
அசையாது அவளையே பார்த்திருந்தவன் பார்வையை நோக்கியவள் அவன் பார்வையிலிருந்த பரிதவிப்பை உணர்ந்து, மெல்லிய புன்னகையை இதழுக்கு அளித்து “கார்த்திக் நான் பிழைச்சிட்டேன். எனக்காக! நான் உங்களோட சேர்ந்து வாழணும் என்பதற்காக கடவுள்கிட்ட சண்டை போட்டு திரும்ப வந்துட்டேன். இப்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்” என்றாள் மெல்லியகுரலில்.
“போடி... இங்க நேத்திலிருந்து ஒருத்தன் செத்து பிழைச்சிட்டிருக்கேன். உனக்கு ஹேப்பியா? உனக்காக ஒண்ணும் நீ பிழைக்கல தெரியுமா? எனக்காக இந்த கார்த்திக்கிற்காக!” என்று குரல் கரகரக்க குழந்தையாக பேசி கண்கலங்கிய, அவளின் நாயகனைப் பார்த்தவளின் கண்கள் மலர்ந்து சிரிக்க ஆரம்பித்தது. வயிற்றிலுள்ள தையல், ‘என்னை மீறி சிரிப்பாயா?’ என சுருக்கென்று வலியை ஏற்படுத்த, வயிற்றின் வேதனை சிரிப்புடன் சேர்த்து முகத்திற்கு வந்தது.
சிரிப்பையும் மீறிய வேதனை அவளின் முகத்தில் தெரியவும், “என்னமா வலிக்குதா? நீ அதிகம் சிரிக்காத. அதுவும் அடிவயிற்றிலிருந்து சிரிச்சா வலி அதிகமாகும். உனக்கு சரியான பிறகு நல்லா சிரிச்சிக்கலாம்” என அமைதிப்படுத்தினான்.
‘ம்...’ என்று தலையசைத்தவள், “சாரிங்க உங்களை கண்கலங்காம பார்த்துக்கறேன்னு சொன்னேன்ல. பாருங்க என்னால நீங்க...” வார்த்தை திக்கி முடிக்காமல் நிறுத்தினாள்.
“யாரு கண்கலங்க விடமாட்டேன்னு சொன்னது? நீயா? நல்லா யோசிச்சிப்பாரு அவந்தி. நம்ம வீட்ல உள்ளவங்களை மட்டும்தான் சொன்ன. என்னை கண்கலங்க வைப்பேன்னு சொன்ன. அதுவும் வெங்காயம் உரிக்க வச்சாவது” என நீட்ட... அவனின் பாவனையில் மனம் மகிழ மெல்ல சிரித்தவள், “ஓகே. இனிமேல் அதுக்காகக்கூட உங்களை கண்கலங்க விடமாட்டேன்.”
“இது சமத்து” என்றவனுக்குத் தெரியாது, அவன்தான் இனி அவளை அழவைக்கப் போகிறான் என்று.
அன்று மாலை யாரோ ஒரு பெண் அவந்திகாவை பார்க்க வந்திருப்பதாக செவிலி சொல்ல, “யாரையும் இப்ப பார்க்கமாட்டாங்க” என்று கார்த்திக் மறுத்து அனுப்ப முயற்சித்தான்.
“கார்த்திக் யாராவது முக்கியமானவங்களா இருக்கப்போறாங்க.” என்றவள் செவிலியிடம் திரும்பி “யார் சிஸ்டர்? பெயர் கேட்டீங்களா?” என,
“வைஷ்ணவி” சொன்னாங்க.
“ஓ... அவங்களா? அப்ப வரச்சொல்லுங்க சிஸ்டர்.”
வேண்டாம் என்று தடுக்க வந்த கார்த்திக்கை பார்வையால் கெஞ்சி, “அந்தப் பொண்ணுக்காகத்தான் கார்த்திக் அங்கேயே வந்தேன்” என்றாள்.
‘என்னவோ செய்’ என்பதுபோல் அவன் அமர, உள்ளே வந்த வைஷ்ணவியைப் பார்த்து அவந்திகா புன்னகைத்தாள்.
அவளின் சிரிப்பைக் கண்ட வைஷ்ணவி குற்றவுணர்ச்சியை குத்தகைக்கு எடுத்தவளாய் கண்கலங்கியபடி, “என்னை மன்னிச்சிருங்க மேடம். என்னாலதான் உங்களுக்கு இப்படி..” என்றவள் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வந்தது.
“வைஷ்ணவி ஏன் அழறீங்க? இதுல உங்க தப்பு எதுவும் இல்ல. இப்படித்தான் நடக்கணும்னு இருந்தா, யாரால தடுக்க முடியும் சொல்லுங்க. உங்க மூலமா நடத்தலன்னா, அந்த முருகன் இன்னொருத்தரை அனுப்பி வச்சிருக்கப்போறான். உங்களுக்குத் தொல்லை கொடுத்த பரத்தை எனக்குத் தெரியும். இவன்தான் கொலைகாரன்னு தெரியாம, ஒரு கேஸ்ல நான் இன்வால்வ் ஆகிட்டேன். அது அவனுக்கு தெரிஞ்சிருச்சி. அதான் என்னைப் பழிவாங்க நேரம் பார்த்திட்டிருந்தான். ஏற்கனவே ஆறு மாசமா டெய்லி என்னை கொன்னுருவேன்னு மிரட்டி, லெட்டர் போட்டிட்டு இருந்தவன், இன்னைக்கு இல்லன்னா இன்னொரு நாள் எதாவது ஒருவகையில் ட்ரை பண்ணியிருப்பான். இதுக்குப் போயி அழுதுகிட்டு.”
“அவந்தி என்ன சொல்ற? மிரட்டல் கடிதம் வந்திச்சா? அதுவும் டெய்லி. ஏன் என்கிட்ட சொல்லல? அப்பவே சொல்லியிருந்தா போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணியிருக்கலாம் தான. எது எதை விளையாட்டா எடுத்துக்கிறதுன்னு இல்லையா?” என்றான் கோபத்துடன் கூடிய வருத்தத்துடன்.
“ப்ச்... என்னங்க நீங்க? இப்ப அவங்களை சமாதானப்படுத்துவேனா. இல்லை உங்களையா?” நம்ம பஞ்சாயத்து அப்புறமா வச்சிக்கலாம். இப்ப இவங்களை பார்க்கிறேன்.”
கொஞ்சம் குற்றவுணர்வு குறைய, அப்பொழுதுதான் தன் கணவன் அருகிலிருப்பதை உணர்ந்து, “இவர் என்னோட ஹஸ்பண்ட் வெங்கடேஷ்” என்று கணவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, “நேத்து உங்களை அந்த கோலத்தில் பார்த்ததும் முடிவு பண்ணிட்டேன் மேடம். எல்லாத்தையும் இவங்ககிட்ட சொல்லிட்டு, வர்றதைப் பார்த்துக்கலாம்னு. இவங்க என்னடான்னா, ஏன் முன்னாடியே சொல்லலைன்னு திட்டினாங்க” என்றாள்.
“ஆமாங்க. முன்னாடியே சொல்லியிருந்தா இந்த பிரச்சனையை இந்தளவுக்கு வந்திருக்க விடமாட்டேன். படிச்சவதான கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். என்ன சொல்றது அவளோட பயம் அவளுக்கு. எங்கம்மாவுக்கும் கொஞ்சம் புத்தி போதாதுதான். இல்லன்னு மறுக்கமுடியாது. அதனாலதான் நான் சப்போர்ட் பண்ணுவேனோ, மாட்டேனோன்னு, இவளோட பயம் வேறமாதிரி யோசிக்க வச்சிருக்கு. சாரிங்க என் ஒய்ஃப் கொஞ்சம் அவசரப்பட்டுட்டா” என்று மன்னிப்பு கேட்டான் வெங்கடேஷ்.
“அச்சோ! இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்” என்று அவந்திகா பதற,
“இருந்தாலும் மேடம். என்னோட அழைப்புனாலதான நீங்க வந்தீங்க. என்னோட சுயநலத்தால தான் உங்களுக்கு இப்படியாகிருச்சின்றதை என்னால தாங்க முடியல” என்றாள்.
“வைஷ்ணவி! நீங்க எனக்கு எந்த கெட்டதும் நினைக்கல. உங்களால எனக்கே எனக்குன்னு நடந்த நல்ல விஷயம் கார்த்திக். இவங்களுக்கு என்மேல உள்ள காதல் தெரிஞ்சது. அதுக்கு என்னோட ஆயுளுக்கும் உங்களுக்கு நான்தான் தேங்க்ஸ் சொல்லணும். அப்புறம் இவ்வளவு நெருங்கிட்டோம் இந்த மேடம் வேண்டாமே. எனக்கும் ப்ரண்ட்ஸே இருந்ததில்ல. ஸோ... ஃப்ரண்ட்ஸ்” என்றாள் கைநீட்டி.
இருவருக்கும் மாதங்கள் வித்தியாசப்படுமே தவிர ஓரே வயதுதான் இருக்கும்.
“நானா? என்னை நீங்க ஃப்ரண்டா ஏத்துக்கறீங்களா?” என தடுமாறி பின் சிரித்து “ஃப்ரண்ட்ஸ்” என்றாள், அவள் கையுடன் தன் கையை வைத்து.
“சரிமா நாங்க கிளம்புறோம். வா வைஷு“ என்ற கணவனை ஒரு பார்வை பார்த்து, தோழியிடம் திரும்பி, “பார்த்தியா அவந்திகா. இந்த ஒரு வருஷத்துல, என்னை இப்பத்தான் வைஷுன்னே கூப்பிட்டிருக்காங்க” என்று குறை சொன்னாள்.
“இனிமேல் இப்படியே கூப்பிடுறேங்க மேடம். போகலாம் வர்றீங்களா?” என்று பவ்யமாய் அழைத்தான் வெங்கடேஷ்
“ம்... கிண்டலு. இருந்தாலும் இப்ப ஓகே” என்று அவந்திகா-கார்த்திக்கிடம் விடைபெற்று வாசல் செல்ல, “வைஷு” என்ற அழைப்பில் திரும்பியவளைப் பார்த்து, “ஹேப்பி மேரீட் லைஃப்” என்றதும் “தேங்க்ஸ் அவந்தி” என்று வெளியேறினாள்.
வெளியே செல்பவர்களையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவளை, கார்த்திக்கும் பார்த்திருக்க, அவன்புறம் திரும்பியவள் என்னவென்று புருவம் உயர்த்த,
“அழகிடி நீ! உன் மனசு, உன் சிரிப்பு, செயல், எண்ணம். அப்புறம்...” என்று நிறுத்தினான்.
“அப்புறம்?” என ஆவலாக கேட்டாள்.
“அப்புறம் நீ! ஐ மீன் உன்னோட கலர் அன்ட் ஸ்ட்ரெக்சர்” என்று கண்ணடித்துக் கூறினான்.
“யூ படவா! எனக்கு குணமாகட்டும். அப்புறம் கவனிச்சிக்கிறேன் உங்களை.”
“ஏன்டா.. இப்ப கவனிச்சா ஆகாதுன்னா இருக்கு. நான் ரெடி” என அவந்தியினருகில் நெருங்கினான்.
“எ...எ...எதுக்கு ரெடி? ஏன் இப்படி கிட்ட வர்றீங்க?” என திணற,
“என்னடா வயிறு வலிக்குதா? ஏன் இப்படி திணறுற?” அவளின் முறைப்பில் “ஓகே கூல்... கிஸ் பண்றதுதான சொன்ன? அதுக்கு நான் ரெடி நீ கொடு” என்று சாய்ந்து அமர்ந்திருந்தவள் அருகில் சென்றான்.
“அச்சோ நான் அந்த அர்த்தத்துல சொல்லல. நான் மாட்டேன் போங்க.”
“நீ மாட்டேன்னு சொன்னா போ. நான் போறேன்” என்று வெளியே செல்லப்போக,
அவனது கைபிடித்தவள், “என்னை விட்டுட்டு எங்க போற கார்த்திக்? நீதான் எனக்கு எல்லாமே. நீயில்லன்னா நான் என்னாவேனோ எனக்கே தெரியாது. ப்ளீஸ். இனிமேல் இந்த வார்த்தையை, எப்பொழுதும் என்கிட்ட யூஸ் பண்ணாத கார்த்திக்” என்றாள் சட்டென்று கலங்கிய குரலில்.
அவளின் வார்த்தைகளில் உள்ள அன்பை உணர்ந்தவன், அவளருகில் அமர்ந்து அவளின் கண்துடைத்து, “அவந்தி என்னதிது? இதுக்குப்போயி கண்கலங்கிட்டு. நீயே விரட்டினால்கூட, நான் எப்போதும், எங்கேயும் உன்னைவிட்டுப் போகமாட்டேன்” என்றான்.
“நான் விரட்டமாட்டேன்ற தைரியம்தான உங்களுக்கு.”
‘ஆம்’ என்று தலையசைத்தவன், “சரி விடு. நீ கொடுக்கலன்னா என்ன. நான் தர்றேன்” என்று சொல்லிக்கொண்டே அவள் எதிர்பாராத சமயம் கன்னத்தில் முத்தமிட்டான்.
சட்டென்று வந்த வெட்கசிவப்பை மறைத்து, “ப்ச்... கார்த்திக். என்ன பண்றீங்க? இப்ப இதெல்லாம் தப்பு” என்று தப்பை தப்பாகச் சொன்னாள் அவந்திகா.
“ம்... அது சரி” என்றான் கார்த்திக்.
“மாமாகிட்ட நடந்ததை சொல்லிரலாமா?”
“வேண்டாம்மா. உன்னை இந்த கோலத்துல பார்த்ததுக்கே, பாவம் புலம்ப ஆரம்பிச்சிட்டார். அங்க நடந்தது அனைத்தையும் தெளிவா சொன்னா தாங்கமாட்டார். அதுக்குன்னு ஒரு நேரம் வரும். அப்ப இதெல்லாம் பெரிய விஷயமா தெரியாது. அதை இன்னொரு நாள் முடிவு பண்ணிக்கலாம். இப்ப எனக்கு வெளில கொஞ்சம் வேலையிருக்கு. உங்க மாமா வந்ததும் நான் கிளம்பறேன். உங்க அத்தைக்கு பயந்து அம்மாவை வரச்சொல்லல. உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?”
“நோ கார்த்திக். ஆமா. உங்களுக்கு வேலை கிடைச்சிருச்சா?”
“ம்... கிடைச்சிருச்சி.”
“அப்ப சரி. நீங்க கிளம்புங்க. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்.”
“அதெல்லாம் முடியாது உன்னைத் தனியா விட்டுட்டுப் போகமாட்டேன்” என்று அடம்பிடித்து அமர்ந்தான்.
‘பிடிவாதக்காரன்! வேலையைவிட நான்தான் முக்கியம்னு எனக்கு காவலுக்கு இருக்கிறான் பாரு’ என்று மனம் பாராட்டியது.
அதேநேரம் விஷ்ணு வரவும் கார்த்திக்கை அனுப்பி வைத்தாள். கார்த்திக்கிடம், ‘என்ன வேலை? எங்கே வேலை?’ என்பதை கேட்காமல் விட்டிருந்தாள், அவன்மேல் உள்ள நம்பிக்கையில். கேட்டிருந்தால் சொல்லியிருப்பானோ! என்னவோ!”
ஒரு மணிநேரம் கழித்து அவள் அறைக்கு வந்த செவிலி, “உங்களுக்கு வந்தது” என்று ஒரு பொக்கே கொடுத்தாள்.
அதை வாங்கியவளுக்கு, அந்த அழகான பூக்களில் தன் பூமனம் மலர்ந்தது, பெயரைப் பார்க்கும் வரை. பெயரைப் பார்த்ததும், சட்டென முகம் இறுக அதிலிருந்த கடிதத்தைப் பிரித்தாள்.
பெண்ணே!
இரத்தம் சொட்டும் வேளையிலும்,
மலராய் உன்முகம் மலரக் கண்டேனே!
முடியாதென தெரிந்தும்,
நின் வலி போக்கி,
அவ்வலியை என்னுள்
பெற்றுக்கொள்ளவே விழைகிறேன்!
நிதர்சனம் வேறல்லவா!
நின் ஒவ்வொரு முகச்சுருக்கத்திலும்,
என்னெஞ்சம் எனை
வெட்டிச் சாய்க்கிறதே!
உன் துடிப்பை
என்னுள் வாங்க முயற்சித்தும்,
முடியாமல் மடிகிறேனடி!
“அவந்திகா! உனக்கு அடிபட்டப்ப நான் அங்கதான இருந்தேன். ஆனா என்னால உன்னை நெருங்க முடியல. இந்த சி.என் என்றுமே உன்னை தொடமுடியாத தூரத்திலேயே நிற்கிறேன். கண்டிப்பாக இவன் உன் மனம் வெல்வான். ஆயிரம் கார்த்திக் வந்தாலும், உனக்கு முதலாமவன் நானே! டேக் கேர் அவந்தி.”
படித்து முடித்ததும், “ஹ்ம்... இவன் என்னைக்குத் திருந்தப் போறானோ தெரியலையே. முன்னைக்கு இப்ப தேறியிருக்கான். நாலுவரிக் கவிதையோட முடிக்கிறவன், இப்ப எக்ஸ்ட்ரா லைன்ஸ் எழுதிருக்கான் அவ்வளவுதான்” என்று எப்பொழுதும்போல் அதை ஓரம் கட்டினாள்.