• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 7

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
7



“நான் சொன்னதைக் கச்சிதமா முடிக்கணும். அங்க பத்த வைக்கிற நெருப்பு இங்க கொழுந்துவிட்டு எரியணும். சொல்லுறது புரியுதா?” ராஜேஸ்வரி சற்று சத்தமாகவேக் கேட்க,

“புரியுதுங்க அண்ணி. வேலையெல்லாம் சரியா நடந்துட்டிருக்கு. இன்னும் பத்து நாளைக்குள்ள அந்த வீடே ஆடிப்போயிரும்.”

“ஏன்கா, சைன் பண்ணி விவாகரத்து ஆனதும் இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சிரமாட்டாங்களா? அதுக்குப் பிரிந்தே இருக்கட்டும்னு விட்டுரலாமே. ஏன் சுத்தி வளைக்கணும்?” தன் சந்தேகத்தைக் கேட்டார் ராஜலட்சுமி.

“ராஜிமா! நாம இருக்கிறதை அப்பப்பத் தெரிவுபடுத்த வேண்டாமா?”

“புரியலைக்கா?”

“விவாகரத்து ஆகிட்டா அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிருவான்னு கிடையாது. அவன் அப்படிச் செய்யமாட்டான். ஒருத்தனுக்கு ஒருத்தின்ற பாலிசி அவனோடது. அதேபோல அவள்.. அந்த அழகி? உண்மையைச் சொல்லணும்னா ராஜி, அந்தப் பொண்ணுக்கு நம்ம பையன்மேல ஒரு இது வந்திருச்சி” என்று சிரித்தார்.

“எப்படிக்கா?” என்றார் ராஜலட்சுமி.

“எதுவுமே இல்லைனா மண்டபத்துல நடந்த களேபரத்துக்கு விவாகரத்தை அவள் கேட்டிருப்பா. அதோட அவன் செய்யுற வேலையைப் பற்றித் தெரிந்தும், ஏன் நாம அவங்களை ஏமாத்தினது தெரிந்தும், வா வாழலாம்னு கூப்பிட்டா பாரு, அப்ப தெரிந்தது அவளுடைய மனசு. இந்தக் கல்யாணம் உடைஞ்சா அவள் மனசு சுக்குநூறா உடையும். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கவே மாட்டா. மீறி அவள் வீட்டினர் கட்டாயத்துக்காகப் பண்ணினாலும் ஒட்டாத வாழ்வுதான். இல்லைனா கூட நாம எதுக்கு இருக்கோம்” என்று சத்தமாகச் சிரித்தார்.

“எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் திக்திக்னு இருக்குதுக்கா. உனக்கு ரொம்பவே தைரியம்தான்” என்றார் நெஞ்சைப் பிடித்தபடி.

“அந்தத் தைரியம்தான் அண்ணிக்கு அழகே” என்று சேகர் புகழ, அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் ராஜேஸ்வரி இல்லை. இன்னுமின்னும் என்ன தண்டனை அவளுக்குக் கொடுக்கலாம் என்றே யோசித்தார்.

“இருந்தாலும் எனக்குப் பயமா இருக்குக்கா. நாம செய்தது தெரிந்தும் உன் பையன் அமைதியா இருக்குறதே ஆச்சர்யம். இதுல நாம செய்யப்போறதும் தெரிந்தா, நினைக்கவே நடுங்குதுக்கா” என்றார் ராஜலட்சுமி.

“அவனை நான் பார்த்துக்குறேன். அவனை அடக்குற அஸ்திரம்தான் என்கிட்டயிருக்கே” என்றவர் குரலில் அத்தனை வன்மம்.

ஒருமாதம் கடந்த நிலையில் தன் கையிலிருந்த கவரை வெறித்துப் பார்த்திருந்த அன்பழகியைச் சுற்றிலும் அவள் குடும்பத்தினர்.

தங்கை திருமணத்தில் பிரச்சனை வந்த நாளிலிருந்து பலத்த யோசனை அகிலனுக்கு. ‘தான் இங்கே இருந்திருந்தால் தங்கைக்கு இந்த நிலை வந்திருக்காது’ என்ற தன் மீதான கோபம் அவனுக்கு.

மனைவியின் உடல்நலன் கருதி அவளின் தாய் வீட்டிற்கனுப்பி, வெளிநாடு சென்றவன் சென்னைக்கு மாற்றல் கேட்டு அதுவரை விடுப்பில் இருப்பதாக எழுதிக்கொடுத்து, சென்னை வரும்போதே மாமியார் வீடு சென்று மனைவியையும் அழைத்துக்கொண்டு, இன்று காலைதான் வந்திருந்தான். காரணம் கேட்டவர்களிடம் வேலை பிடிக்கவில்லை என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டான்.

அன்பழகிக்கு இன்று மாதவிடாய் நேரம் என்பதால் மதியம் வரை விடுப்பெடுத்து வீட்டிலிருக்க, நீண்ட நாட்கள் கழித்துக் குடும்பமாக வேண்டாததைத் தவிர்த்து சற்று சந்தோசமாகவே பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது அன்பழகிக்குப் பதிவுத்தபால் வர, கையெழுத்திட்டு வாங்கிப் பிரித்தவளுக்கு, மண்டபத்திலிருந்து வீடுவரை கூட வராத விவாகத்திற்கு விவாகரத்துக் கேட்டு வந்த கடிதம் கண்டு, தன் வாழ்க்கையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

“என்ன லெட்டர் பொம்மு?” தாயின் குரிலில் நிமிர்ந்து பார்த்தவள் வலுக்கட்டாயமாகப் புன்னகைத்து, “நான் வாழ்ந்த வாழ்க்கை போதும்ன்றதுக்கான விவாகரத்து பேப்பர் வந்திருக்கு. நல்லா காமெடி பண்றாங்கம்மா” என்றாள்.

“என்னக்கா சொல்ற? என்ன அன்பு?” என ஆளாளுக்கு பதறிப்போய் கேட்க, “உண்மையைச் சொல்றேன். நேர்ல வந்தால்தான் சைன் பண்ணுவேன்னு சொல்லிட்டேன். இதெப்படி தெரியலையே?” என்றாள் யோசனையுடன்.

“எப்படி வந்தால் என்னக்கா, அவர் சைன் இல்லாம வந்திருக்காதுதானே?” என்றதும் ‘அப்படி இருந்தால் நன்றாகயிருக்குமே’ என்ற நப்பாசையில் அதைக்காண, நங்கென்று நங்கூரமாய் அவள் நெஞ்சில் பாய்ந்தது அவன் கையெழுத்து. தன்னைப் பார்த்திருந்த தம்பியிடம் அதைக் கொடுக்க, அவனைத் தொடர்ந்து அனைவரும் படித்து அமைதியாகிப் போனார்கள். இந்நேரம் எது பேசினாலும் அனர்த்தமென்று புரிய எதுவும் பேசாதிருந்தனர்.

“இப்பவாவது அப்பா எதாவது செய்யவாடா? பெத்த பொண்ணுக்கு நடந்ததை வேடிக்கை பார்த்துட்டிருக்கிறதை விடக் கொடுமை வேறெதுவுமில்லை. எல்லா வகையிலும் கட்டிப்போட்டு வச்சிருக்கிற நீ. கொஞ்சம் கட்டை அவிழ்த்துவிடுமா. அப்பத் தெரியும் இந்த சதாசிவம் யாருன்னு” என்றார் கோபமாய்.

“அப்பா எனக்குக் கொஞ்சம் குழப்பமாயிருக்கு. இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க” என்றாள் அமைதியாக.

“இருந்தாலும் உன்னளவுக்கு எங்களுக்குப் பொறுமை இல்லமா. இப்பவும் உன் வார்த்தைக்குக் கட்டுப்படுறேன்” என்று எழ, “தேங்க் யூப்பா” என்றாள் சிறு கலக்கத்துடன்.

மகளின் தலைவருடி, “நல்லதே நடக்கும் பொம்மு. ராகினி நான் கோர்ட் கிளம்புறேன்” என்று சென்றுவிட்டார்.

“நீ மத்தவங்க மனசைப் படிக்கிறவ அன்பு. உன் மனசைப் படிக்க எங்களால முடியலை. அத்தனை அழுத்தமாயிருக்க. அப்பா சொன்ன மாதிரி நல்லது நடந்தா சரி. நீ வந்து ரெஸ்ட் எடு நேஹா” என்று மனைவியுடன் அறைக்குள் சென்றுவிட்டான்.

தன்னையே பார்த்திருந்த தாயைக் கண்டவள் மனம் கேளாது, “என்னம்மா?” என்றாள்.

“ப்ச்.. ப்ச்.. ஒண்ணுமில்லை” என்ற வார்த்தையில் ஓராயிரம் கேள்விகளைக் கேட்டுச் சென்றார்.

“சோ, எல்லாரையும் ஏதோ ஒரு வகையில் கண்ட்ரோல் பண்ற. இல்லக்கா?”

“நான் எங்கடா...”

“போதும் என்னை சமாளிக்கக் காரணம் தேடாதே. அவன் என் கண்ணுலபடாம இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கோ. கண்ணுலபட்டா இருக்கிற கோபத்துல என்ன செய்வேனோ தெரியாது” என்று கையை காற்றில் குத்தினான்.

“அதி அவங்க...”

“அக்கா போதும். அவனுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசாதே” என்றான் கண்கள் சிவக்க.

“எனக்காகவாவது மரியாதை கொடுடா” எனவும் அதற்கும் குதித்தவன் தன் அறைக்குள் நுழைந்தான்.

என்ன செய்வதென்று புரியாது ஹாலிலேயே நடந்தவள் பவானியை கைபேசியில் அழைத்து எங்கே இருக்கிறாள் என விசாரிக்கையில், ஸ்டடி ஹாலிடே என அவள் சொல்ல, உடனடியாகத் தன்னை வந்து பார்க்கச் சொல்ல, முதலில் தயங்கிய பவானி அன்பழகி மேலுள்ள நம்பிக்கையில் வருவது வரட்டுமென்று கிளம்பிவிட்டாள்.

அடுத்த அரைமணி நேரத்திற்கெல்லாம் வந்தவள், “சாரி அண்ணி. டிராபிக்னால லேட்டாகிருச்சி. என்ன விஷயம் அண்ணி?” என்றாள்.

“அம்மா பவிக்குட்டிக்கு கூலா ஒரு ஜுஸ்.”

“எதுக்கு அண்ணி?” என்று பதறியவளை அமைதிப்படுத்த, ஜுஸைக் கையில் கொடுத்த ராகினி முகம் தெளிவில்லாதிருக்க, “அத்தை முகம் ஒரு மாதிரியிருக்கு. என்ன பிரச்சனை அண்ணி?” ஏதோ பெரிதாக நடந்திருப்பாற்போல் தோன்றியது பவானிக்கு.

“முதல்ல கையிலுள்ளதைக் குடி பேசலாம்” என்றதும் மடமடவெனக் குடித்துக் கீழே வைத்தவள், “இப்பச் சொல்லுங்க அண்ணி?” என்றாள்.

தன் கையிலிருந்த கவரை அவளிடம் கொடுக்க, கேள்வியாய்ப் பார்த்தபடி வாங்கி கவரைத் திறந்து உள்ளிருந்த பேப்பரை எடுத்துப் பார்த்துப் படித்தவளின் கண்கள் அதிர்வில் விரிய, கடைசியில் அண்ணனிட்ட கையொப்பம் அவளை நிலைகுலையச் செய்தது. ‘தான் பட்டபாடெல்லாம் வீணானதா.. இனிமேல் இவர்கள் தன் அண்ணி இல்லையா?’ நினைவே கசக்க கண்களில் கண்ணீர் உற்பத்தியாக, “அ...” என அண்ணியைக் கூட உரிமையாய்க் கூப்பிட முடியாது நிறுத்த,

“எப்பவும் நான் உனக்கு அண்ணிதான்டா. எதுக்கிந்த அழுகை? உன்னை வரச் சொன்னதுக்குக் காரணம் நீ அழுவதைப் பார்க்கிறதுக்குக் கிடையாது. இதை உன் அண்ணன்கிட்டக் கொடுத்து நேர்ல வந்து கையெழுத்து வாங்கிக்கச் சொல்லு. அப்ப உங்கண்ணன் கேட்டதை மறுக்காமல் கொடுக்கிறேன். தாலி கட்டினது உங்கண்ணன்தான? அப்ப அவங்களே இதுக்கும் வரட்டும்” என்றாள்.

“அண்ணி! அண்ணன் வந்து கேட்டா கையெழுத்துப் போட்டுருவீங்களா?” என்றாள் கலங்கிய குரலில்.

“கேட்டால் கொடுக்கத்தான செய்யணும் பவிக்குட்டி. என்னை வேண்டாம்னு சொல்லுற ஒருத்தர்கிட்டக் கெஞ்சிக் கால்ல விழுந்தா குடும்பம் நடத்த முடியும். படித்தத் திமிர்ல பேசுறேன்னு நினைக்காத, எனக்கும் தன்மானம் இருக்கு” என்றாள் அழுத்தமாக.

“அச்சோ அண்ணி! நான் எப்பவும் அப்படி நினைக்கமாட்டேன். உங்களை மாதிரி பொண்ணை மறுக்கிற என் அண்ணன்தான் துரதிர்ஷ்டசாலி. நான் கிளம்புறேன் அண்ணி” என்று எழ,

“பவிக்குட்டி நான் வர்றவரை கொஞ்சம் உட்கார்ந்திரு” என்று தன்னறைக்குச் செல்ல, அன்பழகி செல்வதைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த பவானியின் அருகில் வந்த அதியன், “என்ன நினைத்ததைச் சாதிச்சிட்டீங்க போல?” என்க,

தன்னருகில் திடீரெனக் கேட்ட கடுமையான குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள் புரியாது விழிக்க, அதில் கோபம் வந்தவன் “என்ன முழிக்குற? கல்யாணத்துக்காகப் பேசும்போதே உன் வீட்டாளுங்களோட சேர்த்து நீயும்தான ஏமாத்தியிருக்க?” என்று அவளையும் குற்றவாளியாக்கினான்.

“அ..அது அவங்க எனக்கு அண்ணியா வரணும்ன்ற ஆசையில...”

“உன் ஆசைக்கு என் அக்கா வாழ்க்கையைப் பலி கொடுத்தியா?” என்றான் கோபமாக.

“ஐயோ! அப்படில்லாம் இல்லைங்க. என் அண்ணா நல்லவங்கன்ற நம்பிக்கையில்தான் அமைதியாயிருந்தேன்.”

“அந்த நல்லவன் பார்த்த வேலையைப் பார்த்ததானே?” என்று அவள் கையிலிருந்த கவரைக் காண்பிக்கவும் அவளோ கண்ணீர் உகுக்க, “உனக்கு எவனாவது ஒருத்தன் தாலி கட்டிட்டு விட்டுட்டுப் போனா அப்பத் தெரியும் எங்களோட வலி. என் அக்காவை ஈஸியா தூக்கிப்போட்டுட்டான். என்ன நினைச்சான் அவன்? என் அக்கா ஒரு தேவதைப் பொண்ணு” என்றவன் குரலும் கலங்கியபடி வந்தது.

“தெரியும். வேணும்னா நீங்க எனக்குத் தாலி கட்டிட்டு விட்டுட்டுப் போயிருங்க” என்றாள் வற்றாத கண்ணீருடன்.

“ஏய் லூசா நீ? நான் உதாரணத்துக்குச் சொன்னேன்” என்றவன் குரலில் திடீர் நடுக்கம்.

நிமிர்ந்து கண்ணீர் துடைத்து அவனை நேராகப் பார்த்து, “நான் நிஜமாதான் சொல்றேன். ஆனா, என் அண்ணனுக்கு என்மேல் பாசம்னு எதுவும் கிடையாது. என்னைப் பெத்தவளுக்கு அன்புன்னா என்னன்னே தெரியாது. எனக்கு எது நடந்தாலும் அவங்களுக்கு வலிக்குமா கேட்டா சொல்லத் தெரியலை. வலிக்கணும்னா எனக்கு மட்டுமே வலிக்கும். அண்ணிக்காக எவ்வளவு வலினாலும் நான் தாங்கிக்குவேன். நாளைக்கே வேணும்னாலும் ஏற்பாடு செய்துட்டுக் கூப்பிடுங்க வர்றேன்” என்று வேதனையை மறைத்து நிற்காமல் செல்ல, அவன் அப்படியே அசையாது நின்றிருந்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“பவிமா” என்ற ராகினியின் அழைப்பில் திரும்பி, “என்னம்மா இந்தப் பொண்ணு இப்படிச் சொல்லிட்டுப் போறா?” என்றவன் தாய் வந்ததை ஏற்கனவே கவனித்திருந்தாலும் கோபத்தில் கண்டுகொள்ளாமல் இருந்தான்.

“இதுதான்டா அவள் நிலை. பேசுறதுக்கு முன்ன கொஞ்சம் யோசி அதி. அக்கா மேல உள்ள பாசத்துல பவியை ரொம்ப ஹர்ட் பண்ணிட்ட. நானோ, உன் அக்காவோ ஒருத்தர்கிட்டப் பழகுறோம், நெருங்க விடுறோம்னா அவங்க நல்லவங்களா மட்டும்தான் இருப்பாங்க. நல்ல பொண்ணுடா. ஏற்கனவே அவளுக்கு ஏகப்பட்ட பிரச்சனை. இதுல நீ வேற... சரி எப்ப தாலிகட்டப் போற? எங்களுக்கு அழைப்பு உண்டா?” என்றார் சிரிக்காது.

“ம்மா..” என்று பல்லைக்கடித்தவன், “சும்மா சொன்னதுக்கு இவ்வளவு பேசணுமா?” என்றான்.

“அதை நீ பேசும் முன்ன யோசிக்கணும்டா தம்பி. நீ தாலி கட்டிட்டு விட்டாலும் நாங்க விட்டுட்டுலாம் வரமாட்டோம். அங்கே கிடைக்காத அன்பை இங்கே அள்ளிக் கொடுத்துக்குறோம். சீக்கிரமே நல்ல முடிவெடுடா” என ஆசையாகக் கேட்ட அக்காவையும், அதற்கு சம்மதிப்பாற்போல் நின்றிருந்த தாயையும் முறைத்து, “ஆக ஒரு முடிவோடதான் இருக்கீங்க? உங்க கற்பனையைக் குறைத்து ஓரங்கட்டிட்டு வேலையைப் பாருங்க” என்று அதட்டியவன், “விட்டா இவங்களே ஏற்பாடு பண்ணிருவாங்க போலடா அதியா” என புலம்பியபடி சென்றான்.

தற்செயலாக செந்தூரன் மதியம் வீட்டிற்கு வந்திருக்க, நேரே அண்ணனிடம் சென்றவள், “நீங்க இப்படிச் செய்வீங்கன்னு எதிர்பார்க்கலை” என்றாள்.

“ஏய்! எங்க போய் சுத்திட்டு வர்ற?” என்றார் ராஜலட்சுமி.

“உங்ககிட்ட அப்புறம் பேசுறேன் சித்தி. நீங்க சொல்லுங்கண்ணா?” என விடாப்பிடியாய் நின்றாள்.

“எதாவது தெளிவா பேசுறியா? நான் உன்னைப் பார்த்துக்குறதுல தப்புப் பண்ணிட்டேன்தான் ஒத்துக்குறேன். உடனே ஓடி வந்து அன்பைப் பொழிய முடியலை. அதனால்தான் விலகியிருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா என்னை சரி பண்ணிக்குறேன்” என்றான் தணிவாகவே.

“உங்க அன்பை எதிர்பார்த்த காலமெல்லாம் முடிஞ்சிருச்சி. இப்ப எனக்கு யாரோட அன்பும் தேவையில்லை” என்றாள் மூஞ்சிலடித்தாற்போல்.

“பவி!” என்றான் அதிர்வுடன்.

“பவின்ற பெயர் நினைவிருக்கா உங்களுக்கு? நான் கஷ்டப்பட்ட காலத்துல வராத அன்பு இனியும் வேண்டாம்” என்க, அவனோ வேதனையுடன் தங்கையைக் கண்டான்.

“அப்படி என்ன கஷ்டப்படுத்திட்டாங்கன்னு இந்தக் குதி குதிக்குற? கண்டிப்பா இருந்தது தப்பா? பொண்ணைக் கண்டிக்காம வளர்த்து ஊர் சுத்தச்சொல்றியா?” என்றார் ராஜலட்மி.

“நீங்க கொடுத்தது கண்டிப்பு இல்லை. அதிகாரம் செய்து அடிமையா வச்சிருந்தீங்க. பேசக்கூட சுதந்திரமில்லாத அடிமை நான். ப்ச்.. உங்ககிட்ட என்ன பேச்சு. நான் என் கூடப்பிறந்தவன்கிட்ட பேசிக்குறேன்” என்று தன் கைப்பையிலிருந்த கவரை எடுக்க, ராஜலட்சுமிக்கு அது எதுவென்று புரிய, ‘கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டா போலிருக்கே’ என உள்ளமெங்கும் பரபரப்பு.

அதை அண்ணனவனிடம் கொடுத்து,” நீங்க அண்ணிக்குப் பண்ணின மாதிரி எனக்கு நடந்திருந்தா ஒரு அண்ணனா உங்களுக்கு எப்படி வலிக்கும்னு அண்ணியோட தம்பி கேட்டாங்க. ஹா அவருக்கெங்கே தெரியும்.. உங்களுக்கும் அன்புக்கும் ரொம்ப தூரம்னு” என்றாள் விரக்தியாக.

“என்னை இந்தளவுக்கு சீப்பா நினைச்சிருக்க வேண்டாம் பவிமா. இதுக்கு நீ என்னைக் கொன்னு போட்டிருக்கலாம்” என்றான் அடக்கப்பட்ட வலியுடன்.

“அதான் இரண்டு பொண்ணுங்க மனசை உயிரோடக் கொன்னு புதைச்சிட்டீங்களே! அண்ணி.. என் அண்ணி! அவங்க என்ன செய்துட்டாங்க உங்களுக்கு? இவங்க நாடகம் போட்டுக் கல்யாணம் செய்தாலும், நீங்க நல்லவர்னு நினைத்துதான் இவங்க ஆடின ஆட்டத்துக்கு ஆடி இந்தக் கல்யாணத்தை நடத்தவிட்டேன். நீங்க இப்படின்னு தெரிஞ்சிருந்தா, அவங்களை இங்க இழுத்துட்டு வந்திருக்கமாட்டேன். என் சுயநலம்தான் அவங்களை எனக்கு அண்ணியாக்கிருச்சி. ஆனா, அவங்க... உங்களுக்கெல்லாம் பொண்ணுங்கன்னா அவ்வளவு இளப்பமா போச்சில்ல? தாயைப்போல் பிள்ளைன்னு சும்மாவா சொன்னாங்க” என்றாள் உச்சஸ்தாபியில்.

“பவி! நீ ரொம்பப் பேசுற? அந்தம்மாவோட என்னை சேர்த்துப் பேசுற வேலை வச்சிக்காத” என்றான்.

“வேற எப்படிப் பேசுவாங்க? அவங்க நினைத்ததைதான நீங்க செயல்படுத்துனீங்க?” என்றாள் உக்கிரம் குறையாது.

“எதுவாயிருந்தாலும் ஓபனா பேசு” என்றான் கோபத்துடன்.

“நீங்க கையில வச்சிருக்கிற கவரை ஓபன் பண்ணிப் பாருங்க தெரியும். சாரி நீங்க அனுப்பினதை உங்ககிட்டேயே சொல்லுறேன் பாருங்க” என்றாள் நக்கலாய்.

அவள் பேசிக் கொண்டிருக்கையிலேயே அதைப் பிரித்தவன், “டைவர்ஸ் நோட்டீஸ்!” என்றான் அதிர்வுடன்.

“அதிர்ச்சியாகுற மாதிரி நடிக்க வேண்டாம். நீங்க அனுப்பினதுதான். என்ன ஒண்ணு நேர்ல கேட்டிருந்தா அண்ணியே கொடுத்திருப்பாங்க. நீங்க தாலி கட்டினதால நீங்களே நேர்ல போயி வாங்கிப்பீங்களாம். சொல்லியே இதைக் கொடுத்துவிட்டாங்க” என்றாள் வேதனையுடன்.

“இ..இல்லை நான் இதை...” தன்னைச் சுற்றி ஏதோ சூழ்ச்சி நடக்கிறதென்பதை உணர, தங்கைக்காக அன்று பேசிய மனைவியே கண்முன் வந்தாள். இத்திருமணத்தில் தன் தாய்தான் எதோ செய்திருப்பது புரிவது போலிருந்தது. அதற்கான காரணம் நிச்சயம் தங்கைக்குத் தெரியுமென்று உறுதியாக நம்பினான். இச்சூழ்நிலையில் கேட்டாலும் சொல்லும் நிலைமையில் அவளில்லை என்பது அவளின் பேச்சிலேயே புரிந்தது.

‘இத்தனை வருடம் வாழ்ந்து என்ன பிரயோஜனம். தாலி கட்டிய மனைவியையும், உடன்பிறந்த தங்கையையும் தவிக்க விட்டுட்டேனே’ என்று மனம் புலம்பியது. வெளிப்படுத்தாத பாசமும், காதலும் செல்லாது செல்லரித்துப் போகுமென்பதை இப்பொழுது உணர்ந்தான் செந்தூரன்.

ஏனோ மனைவி அனைத்தையும் மறந்து வாழலாம் என்றழைத்த கணம் கனமாய் மனதை அழுத்தியது. அத்தனை பெரிய மண்டபத்தில் கரம்பிடித்த பெண்ணை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியே அனுப்பியது கண்முன் வர, எதிலாவது முட்டி சாகலாம் என்றிருந்தது அவனுக்கு.

“மிஸ்டர்.பிரதர் இதுவரை நீங்கதான் என்னை ஒதுக்கியிருந்தீங்க. இப்ப நான் உங்களை என் வாழ்க்கையிலிருந்து, நம்ம அண்ணன் தங்கை உறவிலிருந்து விலகிக்குறேன்” என்று நகர்ந்தாள் பவானி.

நெஞ்சில் கத்தியைச் சொருகிச் செல்லும் தங்கையைக் கண்டவன் வலது கண்ணிலிருந்து ஒருதுளி நீர் கொட்ட, அது சொல்லியது அவன் துயரத்தின் அளவை.

“ஏய் நில்லுடி. வீடுன்னு ஒண்ணு இருக்கிறதாலதான நினைத்த நேரம் வெளியில் போயிட்டு வர்ற. இரு அதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்” கோபத்தில் கத்தினார் ராஜலட்சுமி.

“சித்தீஈஈ.. இது எங்க வீடுன்றதை மறந்துட்டீங்களா? தாயா பார்த்துக்குவீங்கன்னுதான் உங்களை இங்க இருக்கவிட்டேனே தவிர, என் தங்கையை விரட்டிட்டு நீங்க இருக்க இல்லை” என்றான் கடுமையாக.

பவானியின் பார்வையில் இருந்த கேலி சொல்லியது, இதைச் சொல்ல உனக்கு என்ன தகுதியென்று!

“அச்சோ! சித்தி.. சித்தி! முன்னதான் போக இடமில்லாதவள். இப்ப என் அண்ணி இருக்காங்க. நான் போய் எனக்குன்னு ஒரு இடம் கேட்டு நின்னா விரட்டி விட்டுரமாட்டாங்க” என்றவள் குரல் பெருமையில் ஒலித்தது.

அக்காவின் ‘சாது மிரளக்கூடாது ராஜி’ என்ற வார்த்தையை மறந்திருந்தாரோ! “என்னடி அண்ணி.. அண்ணின்னு ரொம்பப் பேசுற? வாயில்லாப்பூச்சியா ஒரு ஓரத்துல இருந்த உனக்கு எதிர்த்துப் பேச அவள் கத்துக் கொடுத்தாளா? அன்னைக்குக் கோவில்ல அவளோட ஆட்டம் போட்டியே அப்போதிலிருந்தா?” என்றார் அதட்டலாக.

இரு பெண்களின் வார்த்தைப் போர்களைத் தடுக்கவியலாது தங்கையின் கைபிடித்து, “நாம நிதானமா பேசிக்கலாம். நீ உள்ள போ” என்றான்.

அவளோ கையை உதறி முறைத்து, “ஏன் சித்தி கோவில்ல ஆட்டம் போட்டதோட விட்டுட்டீங்க? அத்தனை ஜனங்க முன்னாடி எங்கண்ணி, உங்க அக்கா ஆட்டத்தை ஆட்டம் காண வைத்த அந்த கண்கொள்ளாக் காட்சியை விட்டுட்டீங்க? அவங்க சாட்டையடியா கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறின உங்க அக்கா நிலையைச் சொல்லுங்க?” என்று தைரியமாய் நெஞ்சை நிமிர்த்திக் கேட்டாள்.

செந்தூரனோ என்ன உணர்கிறோம் என்று சொல்ல முடியா உணர்வில் சிக்கித் தவித்தான். ‘அவள்தானா! அவளேதானா! சாமியம்மாவிற்கு சாட்டையடி அடித்தவள்தான் என் மனைவியாக வந்தாளா? எப்படி அவளின் குரலை மறந்தேன்?’ இத்தனை நாளிருந்த அழுத்தம் போய் தன் தவறு மட்டுமே மேலோங்கி நின்றது.
 
Member
Joined
Sep 3, 2024
Messages
30
அட குரல் கொடுத்தவன்தான் ஹீரோவா 😂 அப்போ எங்க கணிப்பு தப்பலை. பவியின் நெத்தியடி கேள்விகள் செந்தூரனுக்கு உறைக்குமா?
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அட குரல் கொடுத்தவன்தான் ஹீரோவா 😂 அப்போ எங்க கணிப்பு தப்பலை. பவியின் நெத்தியடி கேள்விகள் செந்தூரனுக்கு உறைக்குமா?
அவனேதான் இவன். ஹீரோக்கு உறைத்தாலும் ராஜேஸ்வரின்னு ஒரு கேரக்ட்டர் இருக்கே. விடுமா?
 
Member
Joined
Sep 12, 2024
Messages
35
நான் கெஸ் பண்ணேன்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top