• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
6


மாலை ஐந்து மணிக்கு, நியாவின் பொட்டிக்கில் நுழைந்த புதியவன் சுற்றிலும் பார்வையிட, மூன்று பெண்களுடன் சுவாரசியமாக வேலையில் ஈடுபட்டிருந்த நியா கண்ணில் பட, சின்னச் சிரிப்புடன் அவளின் பின்னே சென்று கண்ணை மூடினான்.

அமர்ந்திருந்த நியாவின் இதழ்கள் சிரிப்புடன், “ராஜா” என்றழைத்தது. “ராஜா விடுடா. விடுடா சொல்றேன்ல” என்று அவள் சொல்லச் சொல்ல கையை எடுக்காதவன் மேல் கோவம் வர, தன் பலம் கொண்டு அவன் கையை விலக்கி, அவன் முகத்துக்கு நேரே, “எத்தனை தடவைடா சொல்றது விடச்சொல்லி” என்று முகம் சிவக்க இயலாமையில் நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு, அப்பொழுது தான் தன் தப்பு உரைத்தது.

“சாரி சாரி. நான் மறந்துட்டேன். இனி இப்படிப் பண்ணமாட்டேன்” என்று தோடர்ந்து மன்னிப்பை யாசிக்க, அதுவரை முகத்தைக் கடினப்படுத்திக் கொண்டிருந்தவள், அவன் குரலில் சிரிப்பு வர வாய்விட்டுச் சிரித்தாள்.

“என்னடா தம்பி. எக்ஸாம் எப்படி எழுதியிருக்க?”

“ஷப்பா! சிரிச்சிட்டியாக்கா. நான் பயந்தே போயிட்டேன்.”

“ஆமா. பயப்படுற ஆளைப்பாரு. என்னடா ஸ்கூல்ல நல்ல கவனிப்பு போல. ஆள் நல்லா கலரா, கொஞ்சம் புஷ்டியா தெரியுற?”

“எக்ஸாம் நல்லா பண்ணியிருக்கேன்கா. உன் தம்பியாச்சே உன்னைவிட டாப் மார்க் ஸ்கோர் பண்ண வேண்டாமா? அப்புறம் என்ன கேட்ட நல்ல கவனிப்பான்னா, அதையேன் கேக்குற. காலையில அந்த ஊட்டிக் குளிர்ல நாலு மணிக்கு எழுப்பி ஓட விட்டு, நாலரைக்கெல்லாம் படிக்கச் சொல்லி, சாப்பாடு குறைவில்லை தான். ஆனா, பிழிஞ்சி சாரெடுத்துடுறாங்க. நல்ல ஸ்ட்ரிக்ட்டான ஸ்கூல். தப்புக்கு அங்கு தடா. எவ்வளவு பெரிய பணக்காரனா இருந்தாலும் சரிசமமான கவனிப்பு மட்டுமே இருக்கும். யோகால ஆரம்பிச்சி ஸ்போர்ட்ஸ், காம்படிஷன்ஸ், அதோட “ஓழுக்கம்” தான் மெய்னான சப்ஜெக்டே.” எனக்கு அந்த ஸ்கூல் அட்மாஸ்பியர் ரொம்ப பிடிச்சிருக்குக்கா. இனி சென்னைதான். என்ன பண்றது? இதுக்கு மேல வெளியூர் போனா என்னை விரட்டி விரட்டி அடிப்பியே. அதான் வந்துட்டேன்” என்று விடாது பேசினான்.

அவனை இரண்டு அடி போட்டவள், “சென்னைக்கு வர அவ்வளவு சலிப்பா இருக்குதாடா. இரு அத்தைகிட்டச் சொல்றேன். இந்த ராணி உன்னைக் கண்டிச்சே வளர்க்கலடா. ராணிக்கு இருக்கு ஒரு நாள்.”

“ஹையோ அக்கா! என்னை எங்கக்கா ராணிய வளர்க்கவிட்ட. நீ தான என் தம்பியை நான்தான் பார்த்துக்குவேன்னு பேர்லாம் வச்சி, அது என்ன சொல்வாங்க? குழந்தை பிறந்ததும் கொடுப்பாங்களே சே... சே...”

“சேனைத் தண்ணீர்டா.”

“ஹான்! அதேதான். அந்தக் குட்டி வயசுல அதையும் நீதான் கொடுத்தியாம்” என்று கிண்டலாகச் சொன்னாலும் பெருமையுடனே சொன்னான்.

“மாமா, அத்தையை பார்த்தியா ராஜா?”

“அப்பா வீட்டுல இல்லை. அம்மாவை மட்டும் பார்த்துட்டு வந்துட்டேன். இன்னும் ரிசல்ட் வர்றவரை ஃப்ரீ தான். அந்த டைம் வேஸ்டாக்காம, சைன்ஸ் சம்மந்தப்பட்ட எதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கணும்” என்றான்.

“ம்... உருப்படியா அதையாவது செய்” என்றாள்.

இடையில் வெற்றியைப் பார்த்து, நலம் விசாரித்து வந்தான். நியா பெண்களுடன் வேலையில் பிசியாக, அமைதியாக பார்த்தவனின் மனதினுள் பல எண்ணங்கள். தான் பிறந்த அன்றிலிருந்து தாயாய், சகோதரியாய், தோழியாய் இருந்தவள் நியா. அவளின் குறை அவனுக்கு விவரம் தெரிந்த பொழுதே சொல்லப்பட்டதால், அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டான். அவளின் அன்பில், அவளின் குறை அடிபட்டது. அவளின் இந்தப்பிரச்சனையைத் தீர்க்கவே, அவன் நல்ல பள்ளியாகத் தேடிப்பார்த்து ஊட்டியில் இருக்கும் கான்வென்டில் சேர்ந்தான்.

ஏனென்றால், எந்த வகையிலும் தன்னுடைய மனம் கெட்டுப்போகச் சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாது. தனக்கு உலக அறிவு அதிகம் வேண்டும் என்று தேர்ந்தெடுத்தப் பள்ளிதான் ஊட்டி. அனைவரும் தடுத்தும் பிடிவாதமாக போயே தீருவேன் என்று நின்றான்.

“ஏன்டா கேட்க மாட்டேன்ற? உன்னை விட்டுட்டு இருக்க முடியாதுடா.”

“இல்லக்கா. நான் போறதே உனக்காகத்தான்.”

“என்னடா உளர்ற? நீ அங்க படிக்கப் போறதுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்?”

“நான் டாக்டர் ஆகணும். அதுவும் உனக்குள்ள குறையைப் போக்குறதுக்கான ஸ்பெஷலிஸ்ட்குப் படிக்கணும். அதுக்கு ரெண்டு வகையான படிப்பு அவசியம். என் மூளைக்குத் தீனி வேணும். இது என் லட்சியம்னு நினைச்சி என்னை அனுப்புக்கா. ரெண்டு வருஷம், ரெண்டு நிமிஷமா பறந்திரும்” என்றான்.

“என்மேல அவ்வளவு பாசமாடா? உனக்குன்னு நான் எதுவும் செய்யலையேடா?”

‘என்னக்கா இப்படிச் சொல்லிட்ட? நீ நிறைய செஞ்சிருக்கக்கா. அந்த நன்றிக்கடனை செலுத்த இந்த ஜென்மம் போதாதுக்கா’ என்று மனதினுள் நினைத்தான்.

“இந்தச் சின்ன வயசுல எனக்காக யோசிக்கிறியே. எனக்காக இல்லன்னாலும், நீ படிக்கப்போற டாக்டர் படிப்பு நிறைய பேருக்கு பயன்படும். அதுக்காகவாவது போயிட்டு வா” என்றாள்.

வீட்டினரையும் அவளே சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

இப்பொழுதும் அவன் எண்ணங்கள் மாறவில்லை. தன் அக்காவைக் குணப்படுத்த என்னென்ன படிக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தான்.

“தம்பி எதாவது சாப்பிடுறியா?” என்று அவனின் யோசனையைக் கலைத்தாள்.

“இல்லக்கா. இன்னைக்கு நைட் நாம மூனுபேரும் ஸ்பெஷல் டிஷ் பண்ணி சாப்பிடலாம்” என்றான் புன்னகையுடன்.

சிறிது நேரத்தில் சரண் வர, நல விசாரிப்பு முடித்து வீடு வந்து, சமையலில் நுழைந்து, சமையலறையை தலைகீழாக்கி சமைத்து முடிக்க, கணேசும், ராணியும் வந்தார்கள்.

கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருந்த வெற்றியைப் பார்த்து, என்னவென்று விசாரிக்க, வெற்றி சமையலறையைக் காண்பித்தார்.

உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு, மூவரும் மூன்று வித தோரணையில் சமையல் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் போல் நிற்க, பார்த்ததும் சிரிப்பு வந்தது. வந்த சிரிப்பை அடக்கியவர்கள் உணவு மேஜைக்கு வர அவர்கள் சமைத்த உணவும் வந்தது.

வெற்றி மூவரிடமும் திரும்பி, “நம்பி சாப்பிடலாமா? வேணும்னா நூத்தி எட்டுக்கு போன் பண்ணிரவா? என்றார் பயத்தில்.

“அப்பா, மாமா” என்று மூவரும் குரல் கொடுக்க,

“ஓகே ஓகே. நானே முதல் எக்ஸ்பெரிமன்ட்டை ஆரம்பிக்கிறேன்” என்று சாப்பிட்டவர் முகம் அஷ்டகோணலாகி, பின், ‘சூப்பர்’ என்று விரல் வைத்துக் காட்டிச் சொல்ல, ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து உண்ண அந்த நாள் இனிதாக முடிந்தது.

ராஜாவிற்கு ரிசல்ட் வந்து, அவன் விருப்பப்பட்ட மருத்துவப் படிப்பிற்கு சென்னையிலுள்ள பெயர் பெற்ற கல்லூரியில் இடம் வாங்கி ராஜாவைச் சேர்ப்பதற்குள், மூன்று மாதங்கள் முடிந்திருந்தது.

முதல் நாள் கல்லூரியில் விட, சரண், ராஜாவுடன் சென்றான். கல்லூரியில் இறக்கி விட்டவன், “ராகிங் எல்லாம் இருக்காது. இது ரொம்ப டீசண்டான காலேஜ். மீறி யாராவது பண்ணினா கண்டுக்காத. ஓவரா போனா ரிப்போர்ட் பண்ணிரு. பார்த்துக்கலாம் சரியா? இப்ப கிளம்பு” என்றான்.

“ஓகே அண்ணா. நான் மேனேஜ் பண்ணிக்கறேன்” என்று கிளம்பியவனை பார்த்துக் கொண்டிருந்த சரண், வண்டியைத் முன்னும், பின்னும் திரும்பி சாலையைப் பார்த்து திரும்ப யத்தனித்தவன் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தான்.!

அங்கே அவனின் நாயகி இன்னொருவனுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள். அன்று பூங்காவிலிருந்து வந்தவன், அடுத்தமுறை அவளை நேரடியாகப் பார்த்தால் மன்னிப்புக் கேட்கலாம் என்றிருந்தான். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. அன்று பேசிப் பிரிந்த பிறகு, மூன்று மாதங்கள் கழித்து இன்றுதான் பார்க்கிறான். அதுவும் இன்னொரு ஆடவனுடன்.

‘இது அவளோட அத்தைப் பையனா? இந்த சிட்டிக்குள்ள அதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டாளா? இல்ல கூட வேலை செய்யுறவனா? தனியாகவா வந்திருக்கிறா? அவள் ப்ரண்ட் எங்க?’ குழப்பத்தில் சுற்றிலும் பார்வையை விட்டவன், சற்றுத் தள்ளி ஆட்டோ அருகில் நின்றிருந்த சேகர் கண்ணில் படவும் ஒரு திருப்தியோடு சென்றான்.

மறுவாரம் ஞாயிறு அன்று விடுமுறையைக் கழிக்கவென்று நினைத்த ராஜா, “பீச் போகலாம் அண்ணா. போயி ரெண்டு வருஷமாச்சி. இடையில வந்தப்பவும் போகல. நைட் வரும்போது அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வரலாம்” என்றதும் நியாவின் முகம் வெளிறியது.

“நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க” என்று வேக வேகமாக உள்ளே தன் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே வந்த சரண் அவள் அருகே அமர்ந்து, “ஒரு சம்பவம் தண்ணியினால நடந்தா, தண்ணீரே வேண்டாம்னு சொல்லுவியா? உன் பயம் எனக்குப் புரியுது. ப்ளீஸ் அதையெல்லாம் மறந்து ப்ராக்டிகலா இருமா?”

“முடியாது. வேண்டாம். நீங்களும் போகாதீங்க. தண்ணி ஆழமா இருக்கும். போகாதீங்க” என்றவளுக்குப் பதினெட்டு வருடங்களுக்கு முந்தின நினைவுகளில், கண்களில் ஒருவித ஏக்கமும், நிராசையும் வர, “அம்மா அம்மா” என்று அழுதாள்.

“குட்டிமா! ப்ளீஸ் அழாதடா. இனி நான் உன்னைத் தண்ணீர் இருக்கிற பக்கமே கூப்பிட்டுப் போகமாட்டேன். இப்ப தம்பிக்காக நான் மட்டும் போயிட்டு வர்றேன்”

“அண்ணா வேண்டாம். நானும் பீச் வரலை” என்று ராஜா சொன்னான்.

“டேய்! ஏன்டா நீ வேற. வா போயிட்டு வரலாம். எனக்கும் கொஞ்சம் ரிலாக்சா இருக்கும். நாங்க போயிட்டு ரெண்டு மணி நேரத்துல வந்திருவோம். எதையும் யோசிக்காம இரு” என்றான்.

“சரிண்ணா” என்று சொன்னாலும், ‘இன்றைய நிலைக்கு தான்தான் காரணம். என்னாலதான் எல்லாம்’ என்று பலவற்றையும் நினைத்தபடி சோபாவிலேயே சுருண்டு படுத்தாள்.

மாலை ஆறுமணி சூரியன் தன்னை முழுவதும் மறைத்து, நிலவுப்பெண் எட்டிப் பார்க்கும் தருணம். ஜில்லென்ற காற்று சரணின் தலைமுடி கலைத்து விளையாட, ராஜா கடல் அலையில் கால் வைத்து விளையாடுவதை வேடிக்கை பார்த்திருந்தான் சரண்.

அரைமணி நேரம் கரைந்த பொழுது, அங்குள்ள விற்பனைப் பொருட்களை வேடிக்கை பார்த்திருந்தவன் முகத்தில், ஜில்லென்று அடித்த காற்றில் மிதந்து வந்த தூதில், திரும்பிப் பார்த்தவன் முகம் பளிச்சென்றானது.

அதே சமயம் எதிரில் வந்த ஆராதனாவிற்கும் தூது செல்ல, அவளின் முகமும் சட்டென்று பிரகாசித்தது.

இருவர் பார்வையும் மோதி, பின் அதன் வேகம் குறைந்தது. அதைக் கவனித்த சரணின் மனம் சொன்னது, ‘ஆயிரம் தடை வந்தாலும், அவள் என்னவளே என்று.’ அவளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் அருகில் வந்தவனைக் கவனிக்கவில்லை. சில விநாடிகள் கழித்தே அருகில் இருந்தவனைக் கவனித்த சரணின் மனம் சுருங்கி, முகத்தில் அடிபட்ட வேதனை வந்தது.

சரணின் முகமலர்ச்சி தன்னருகில் இருந்தவனைப் பார்த்ததும், காணாமல் போய் அவனின் முகத்தில் தெரிந்த வலியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அவள் அருகில் இருந்தவன், “என்னாச்சி ஆரா?” என்று தன்னைத் தொட வருகையில் விலகியள், சற்று கோபத்தில், “தொட்டுப் பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல அத்தான். எனக்கு இது பிடிக்காது. இதனாலதான் நான் வரலன்னு சொன்னேன். வலுக்கட்டாயமா கூப்பிட்டுங்களேன்னு தான் வந்தேன்” என்று படபடவென பொறிந்தாள்.

“ப்ச்... போ ஆரா. அத்தான் நான் தொட்டால் என்ன? பெரிய ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் மாதிரி சட்டம்லாம் போடுற. இட்ஸ் ஓகே” என்று தோளைக் குலுக்கியவன் பார்வை மட்டும் அவள் மேலேயே இருந்தது.

சரணுக்கும், ஆராதனாவிற்கும் இடையில் இருவதடி தூரம் இருக்கும். அந்தப் புதியவன் ஆராவைத் தொட வருகையில், அவள் நாசூக்காக விலகியதும், அதைத் தொடர்ந்து அவளின் பேச்சுக்களும், பதிலுக்கு முகம் சுருங்க அவன் பேசிய விதமும், அங்கு என்னவிதமான பேச்சுவார்த்தை நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது.

‘ஆனால், இவனுடன் தனியாக ஏன் வந்தாள்?’ என்ற எண்ணம் அலைக்கழித்தது. ‘இதைக் கண்டிப்பாக விசாரிச்சே ஆகணும். என்னோட தனு!’ ஆம்! அவனின் தனு. அவளுக்காக அவன் வைத்த பெயர். ‘தவறானவங்ககிட்ட மாட்டிக்கக் கூடாது. இவன் நல்லவனா இருந்தா அவங்க லைப்ல தலையிடக் கூடாது. இல்லன்னா, கண்டிப்பா எதாவது நடவடிக்கை எடுக்கணும். இதை இப்படியே விடக்கூடாது’ என்ற முடிவிற்கு வந்தான்.

“அண்ணா, அண்ணா” என்றழைத்த ராஜாவின் குரல் சரணின் காதுகளை எட்டவேயில்லை. அவன் பார்த்த திசையில் திரும்பி பார்த்த ராஜா அதிர்ந்துதான் போனான். அதிர்ச்சியுடன், சற்று ஆச்சர்யமும் சேர அவளைப் பார்த்தான். அண்ணனின் உறை தன்மைக்கான காரணம் தெரிந்தது. அண்ணனின் பார்வைக்கு அர்த்தம் புரிந்தது. ஆனால், ராஜாவின் கணிப்பு வேறு.

சரணை ஆராதனா கடந்து செல்லும் பொழுது, ஏதோ சொல்ல வந்து, அவனின் முகக்கவலையைப் பார்த்ததும், ‘வேண்டாம்’ என நினைத்து விலகிச் சென்றாள்.

அவளின் அந்த செய்கையைப் பார்த்த ராஜா தான் குழம்பி நின்றான். ‘இவங்களுக்கு அண்ணனை ஏற்கனவே தெரியுமா? அதான் பார்த்ததும் நிற்கிறாங்களா? என்ன நடக்குது இங்க? அச்சோ ஒண்ணும் புரியலையே. கேட்டாலும் பதில் கிடைக்காது போலிருக்கே. அண்ணா! அண்ணா” என்று கொஞ்சம் சத்தமாக அழைத்தான்.

“என்னடா பிரச்சனை உனக்கு? பேசாம வா கிளம்பலாம்” என்று காருக்கு அழைத்துச் சென்றான்.

“அடப்பாவி! நான் இவங்களுக்கு என்ன பிரச்சனைனு யோசிச்சி மண்டையைப் போட்டுக் குடைஞ்சா, ஒரே வார்த்தையில ப்ளேட்டையே திருப்பிப் போட்டுட்டாங்களே. என்னமோ நடக்குது பார்க்கலாம்” என்றெண்ணினான்.

கடற்கரையில் சரணைப் பார்த்த ஆராதனாவிற்கு அதற்கு மேல் அங்கு இருக்க விருப்பமில்லை. அருகில் இருந்தவன் எவ்வளவு சொல்லியும் அசராமல் விடுதிக்கு வந்து சேர்ந்தாள்.

அறைக்குள் வந்ததும் வேதா பிடித்துக் கொண்டாள். “என்னடி ஆரு.? அதுக்குள்ள வந்துட்ட? நீ கிளம்பின நேரத்துக்குப் போயி கடலைப் பார்த்துட்டு, ஒரு ஹாய் சொல்லத்தான் டைம் இருந்திருக்கும். எதுவும் ப்ராப்ளமா ஆரு?” என தோழியின் கலக்கம் உணர்ந்து கேட்டாள்.

“இல்ல வேதா தலைவலி தாங்க முடியலை. அதான் திரும்பிட்டேன். நான் போயி படுத்துக்கறேன். காலையில பேசிக்கலாம்” என்றாள்.

அவள் படுத்ததும் அருகில் அமர்ந்தவள், தோழியின் தலையை தடவிக் கொடுத்து, “ரொம்ப வலிக்குதா? உன்முகமே சரியில்லையே ஆரு. என்கிட்ட எதுவும் மறைக்கிறியாடி? சரியில்லாதது உடம்பா? இல்ல மனசா?” என சரியாகக் கேட்க,

“வள்ளி ப்ளீஸ். கொஞ்சம் ப்ரீயா விடேன். நான் காலைல பதில் சொல்றேன். எனக்கு உண்மையிலேயே முடியலடா.”

‘வள்ளி’ என்ற அழைப்பிலேயே அமைதியானாள் வேதவல்லி. அவள் ‘ப்ளீஸ்’ என்றதும், “ம்... ஓகே எதுவும் கேட்கலை. சாப்பிடலையா.? சாப்பிட்டுப் படுக்கலாமே?” எனவும் பதிலுக்குத் தோழி பார்த்த பார்வையில் வாயை மூடினாள்.

“நீ போய் சாப்பிட்டு வா வேதா” என்றாள்.

“சரி நீ தூங்கு. நான் வர்றேன்” என்று எழுந்து சென்றாள். தான் செல்லவில்லை என்றால், அவளால்தான் சாப்பிடவில்லை என்று அவள் மனம் கஷ்டப்படும் என அறிந்ததால், பேருக்கு உண்டுவிட்டு வந்தவள் ஆராதனாவைப் பார்க்க, அவள் அழுதிருப்பது நன்றாகவே தெரிந்தது.

‘என்ன பிரச்சனைனு தெரியலையே? எதுவும் சொல்லாம மனசுக்குள்ளேயேப் போட்டு அழுத்திக்கிறா. எப்படி வாயடிச்சிக்கிட்டு, எல்லாரையும் வம்பிழுத்துக்கிட்டு அலைஞ்சவ. அத்தானைத் தேடுறேன்னு ஆரம்பிச்சதில் இருந்துதான் பிரச்சனையே. அவன் கிடைச்ச பிறகாவது சரியாகிருக்கனுமே. அப்புறமும் ஏன் இந்த தடுமாற்றம்? எதுவாயிருந்தாலும் நல்லதே நடக்கணும் கடவுளே!” என்று வேண்டினாள்.

கண்களை முடினாலும் ஆராதனாவின் கண்களுக்குள் தூக்கம் வர மறுத்தது. கடந்த மூன்று மாதமாக, அவள் எதற்காக சென்னைக்கு வந்தாளோ அதற்காக, வேலையில்லாத நாட்களில் மெரீனா கடற்கரை, சாந்தோம் கடற்கரை, பெயர் பெற்ற கோவில்கள், பூங்கா, பாரீஸ், சென்ட்ரல், கண்காட்சிகள், வணிக வளாகங்கள் என்று தேடி அலைந்தாள். அவளுக்குத் தெரியும். எந்த விதமான அடையாளமும் இல்லாமல் ஒருவரைத் தேடுவது பைத்தியக்காரத்தனம் என்று.

முடிந்த மட்டும் தேடி அலைந்து சலித்தவள், எதிரில் இருந்தப் பூங்காவில் அமர்ந்திருந்த பொழுது, “ஏன் வேதா? என் அத்தானைப் பார்க்கவே முடியாதா? பாட்டியோட ஆசையை நிறைவேத்த முடியாதா? எங்கெல்லாம் தேடியாச்சி. சரவணன் என்ற பெயரைத் தவிர வேற எதுவும் தெரியலையேடி. வேல் மாமா குடும்பத்தை எப்படிக் கண்டுபிடிப்பேன்? என்று புலம்பினாள்.

“சும்மா புலம்பாம இரு ஆரு. கண்டிப்பா கிடைப்பாங்க.”

“இல்லடி. ஊரில் இருந்தாலாவது அப்பாவுக்கு உதவியா இருந்திருப்பேன். திருநெல்வேலி டவுன்ல இரண்டு மாடி டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மெயின்டெய்ன் பண்றது சுலபமான காரியமா? ஒரு சில டைம் அத்தானும் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம்னு, ஊருக்கேப் போயிரலாம்னு இருக்கு. வீடு, உறவுன்னு எல்லாத்தையும் விட்டுட்டு, உன்னையும் இழுத்தடிச்சிட்டு, கஷ்டமா இருக்குடி. ஆனா, பாட்டி சரவணனை கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னதும் மனசுல வந்து கொல்லது. என்னால சுயமா முடிவெடுக்க முடியல வள்ளி.”

அதுவரை அவளின் புலம்பலைக் கேட்டு அமைதியாக இருந்த வேதவல்லி, “கடவுள் வழிகாட்டுவார் ஆரு. வீட்டுக்கு போன் பண்ணுனியா? இல்லை வீட்டையே மறந்திட்டியா?” என கேட்டாள்.

“ரெண்டு நாளா பேசலை. நான் அப்புறமா பேசுறேன்.”

“அதெல்லாம் வேண்டாம் இப்பவே பண்ணு. உன் போன் வரலைன்னதும் வீட்ல பயப்படப் போறாங்க. என்னதான் பாதுகாப்பான இடத்துல இருக்கிறோம்னு சொன்னாலும், வெளியே போற பிள்ளைங்கன்னு பயப்பட மாட்டாங்களா?”

தோழி சொல்வதின் உண்மையை உணர்ந்தவள், உடனே வீட்டிற்கு அழைத்தாள். அழைப்பை ஏற்ற அவளின் தாய், “என்னடா செல்லம். ரெண்டு நாளா போன் பண்ணலை? எங்களையும் நினைத்த நேரத்துக்கு பேச விடமாட்டேன்னு சொல்ற. உடம்பு எதுவும் சரியில்லையாமா? தனியா வேற இருக்கீங்க. பார்த்து சூதானமா இருந்துக்கோங்கடா” என்றார்.

“ம்... சரிம்மா. நான் இனிமேல் டெய்லி மறக்காம போன் பண்றேன். நீங்க எல்லாரும் நல்லாயிருக்கீங்கள்ல? கீர்த்தி வந்துட்டாளா?”

“நல்லாயிருக்கோம்மா. இரு அவகிட்ட கொடுக்கிறேன்” என்று சின்ன மகளிடம் கொடுக்க, கீர்த்தி வாங்கி, “ஹாய் ஆரு! எப்படியிருக்க?” என்று சகோதரியிடம் பேசம் மகிழ்ச்சியில் நலம் விசாரித்தாள்.

“நான் நல்லாயிருக்கேன். உன்னோட படிப்பெல்லாம் எப்படிப்போகுது?”

“ம்... அதுக்கென்ன சூப்பராப் போகுது. என்ன ஒண்ணே ஒண்ணு மட்டும் தான் மிஸ்ஸிங்.”

“என்னமா? மிஸ்ஸாகுது, மிஸசாகுதுன்ற?”

“நீ பக்கத்துல இல்லையேன்றது தான்கா.” சின்ன ஏக்கத்துடன் சொன்ன தங்கையின் பாசத்தில் ஒருநிமிடம் நெகிழ்ந்தாள். அடுத்து அவள் சொன்ன வார்த்தையில் இரத்தக்கொதிப்பு அதிகமாகியது.

“நீ பக்கத்துல இருந்தா, என் மார்க்கைச் சொல்லி உன்னைக் கடுப்பேத்தி, உன் முகத்திலிருக்கும் ஆவேசத்தை ரசிச்சிருப்பேன். நீதான் அந்த சான்ஸ் எனக்குக் கிடைக்காம சென்னைக்கு எஸ்ஸாகிட்டியே. எனக்கு லீவு நாள்ல நேரம் போகமாட்டேன்னுது அக்கா. இந்தத் தாத்தாகிட்டயும், அம்மாகிட்டயும் எத்தனை நாள் தான் வம்பிழுக்கிறது. அவங்களுக்கு உன்னளவுக்கு முகத்தில் எக்ஸ்ப்ரஷன் காட்டத் தெரியலக்கா. வேதாக்காவையும் நீ கூடவே கூப்பிட்டுப் போயிட்ட. நான் என்ன பண்றது?” என்றாள் அழாத குறையாக.

“ஏய்! வேணாம்ல. வெறுப்பேத்துற. மவளே! ஏதோ புள்ள, பாசத்துல பொலம்புறாளே நம்ம மேல அம்புட்டு பாசமான்னு நெனைச்சேன். நெனச்சதே தப்புன்னு நெனைக்க வச்சிட்டியே. இரு சீக்கிரமா வாறேன் ஒன்னைய கவனிக்க.”

“வந்து கவனிக்கிறதைப் பார்த்துக்கலாம். நீ போன வேலை முடிஞ்சிதா?” என்றாள் அக்கறையுடன்.

“அதான் வேலையில ஜாய்ன்ட் பண்ணி மூனு மாசம் ஆகுதே. அப்புறம் என்ன திடீர்னு?”

“நான் கேட்டது உனக்குப் புரியலையாக்கா? நீ சென்னைக்குப் போன காரியம் முடிஞ்சிதான்னு கேட்டேன்” என்றாள் ஆழ்ந்த குரலி;ல்.

“கீத்து” என்று ஆராதனாவின் கண்கள் வியப்பில் விரிய, “உ..உனக்கு எப்படித் தெரியும்? நான் வீட்ல யார்கிட்டயும் சொல்லவே இல்லையே?” என்றாள்.

“நீ சொல்லலைக்கா. ஆனா, வேதாக்காகிட்ட சொல்லும் போது நான் கேட்டேன். அப்ப நான் உங்க பின்னாடி தான் வந்துட்டு இருந்தேன்.”

“ஓ... அப்ப ஏன் என்கிட்ட அப்போவே கேட்கலை?”

“தோணலை. திடீர்னு ஏற்பட்ட ஆசைன்னா சொல்லித் தடுக்கலாம். ஆனா, இது உன் சின்ன வயசில் இருந்து உன் மனசுல ஏத்தி வச்ச நெருப்பு. அதை தடுக்குறதுன்றது முடியாதுன்னு தெரிஞ்சது. நீ யோசிக்கத் தெரிஞ்சவ. அதனால, எது நல்லது, எது கெட்டதுன்னு தெளிவான முடிவு எடுப்பன்ற, அந்த நம்பிக்கை உன்மேல இருக்கு. அதான் உன் ஆசை நிறைவேறட்டும் நினைச்சேன். நிறைவேறலை என்றாலும், தெளிவா லைப்ல அடுத்த ஸ்டெப் எடுத்து வைப்பக்கா. நல்லா நிதானமா முடிவெடுக்கா” என்றாள்.

“சரிமா. நான் பார்த்துக்குறேன்” என்று போனை வைத்ததும், வேதாவிடம் திரும்பி, கீர்த்திக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குடி. சென்னைக்கு வந்த காரணம் முதற்கொண்டு.

சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருக்க, ஆராதனாவின் எண்ணங்கள் யாவும் சரவணனே இருந்தான். தேடித் தேடி அலைந்த அலைச்சலின் வலிகளும் சேர, மனதினுள் மருகினாள்.

உன் முகமோ தெரியாது.

உன் குணமோ அறிந்ததில்லை.

உன் குரலோ கேட்டதில்லை.

உன்னிடமோ நெருங்கிப் பழகியதில்லை.

ஆனால், உன் பெயரை மட்டுமே

தாங்கிய என் மனம்.!

அதை மட்டுமே உச்சரிக்கும்

என் உதடுகள்.!

உன் மேலுள்ள அன்பால்,

என்னவர்களையெல்லாம் விலக்கி,

உனைச் சேரத் தேடுகிறேன்.!

என் கண்களில் பட்டு,

கருத்தினில் நுழைய

வரம் தருவாயா!

உனைக் காணும் வரை,

பாவை நெஞ்சம் பரிதவிக்க,

வருகிறேன் உந்தன் நினைவாக!

நிஜமாக உனைக் காணும்வரை,

உன்னைத் தேடி தேடியே

என் கால்கள் ஓய்ந்தாலும்,

கண் விழிப்பார்வைகள் ஓய்வதில்லை!

மனதிலுள்ள வலிகளெல்லாம் கண்ணீராய் வர, அதைப் பார்த்துக் கொண்டிருந்த வேதவல்லி அவளைத் திட்டி, “வா ஹாஸ்டலுக்கு” என்று இழுத்துச் சென்றாள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top