- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
6
மாலை ஐந்து மணிக்கு, நியாவின் பொட்டிக்கில் நுழைந்த புதியவன் சுற்றிலும் பார்வையிட, மூன்று பெண்களுடன் சுவாரசியமாக வேலையில் ஈடுபட்டிருந்த நியா கண்ணில் பட, சின்னச் சிரிப்புடன் அவளின் பின்னே சென்று கண்ணை மூடினான்.
அமர்ந்திருந்த நியாவின் இதழ்கள் சிரிப்புடன், “ராஜா” என்றழைத்தது. “ராஜா விடுடா. விடுடா சொல்றேன்ல” என்று அவள் சொல்லச் சொல்ல கையை எடுக்காதவன் மேல் கோவம் வர, தன் பலம் கொண்டு அவன் கையை விலக்கி, அவன் முகத்துக்கு நேரே, “எத்தனை தடவைடா சொல்றது விடச்சொல்லி” என்று முகம் சிவக்க இயலாமையில் நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு, அப்பொழுது தான் தன் தப்பு உரைத்தது.
“சாரி சாரி. நான் மறந்துட்டேன். இனி இப்படிப் பண்ணமாட்டேன்” என்று தோடர்ந்து மன்னிப்பை யாசிக்க, அதுவரை முகத்தைக் கடினப்படுத்திக் கொண்டிருந்தவள், அவன் குரலில் சிரிப்பு வர வாய்விட்டுச் சிரித்தாள்.
“என்னடா தம்பி. எக்ஸாம் எப்படி எழுதியிருக்க?”
“ஷப்பா! சிரிச்சிட்டியாக்கா. நான் பயந்தே போயிட்டேன்.”
“ஆமா. பயப்படுற ஆளைப்பாரு. என்னடா ஸ்கூல்ல நல்ல கவனிப்பு போல. ஆள் நல்லா கலரா, கொஞ்சம் புஷ்டியா தெரியுற?”
“எக்ஸாம் நல்லா பண்ணியிருக்கேன்கா. உன் தம்பியாச்சே உன்னைவிட டாப் மார்க் ஸ்கோர் பண்ண வேண்டாமா? அப்புறம் என்ன கேட்ட நல்ல கவனிப்பான்னா, அதையேன் கேக்குற. காலையில அந்த ஊட்டிக் குளிர்ல நாலு மணிக்கு எழுப்பி ஓட விட்டு, நாலரைக்கெல்லாம் படிக்கச் சொல்லி, சாப்பாடு குறைவில்லை தான். ஆனா, பிழிஞ்சி சாரெடுத்துடுறாங்க. நல்ல ஸ்ட்ரிக்ட்டான ஸ்கூல். தப்புக்கு அங்கு தடா. எவ்வளவு பெரிய பணக்காரனா இருந்தாலும் சரிசமமான கவனிப்பு மட்டுமே இருக்கும். யோகால ஆரம்பிச்சி ஸ்போர்ட்ஸ், காம்படிஷன்ஸ், அதோட “ஓழுக்கம்” தான் மெய்னான சப்ஜெக்டே.” எனக்கு அந்த ஸ்கூல் அட்மாஸ்பியர் ரொம்ப பிடிச்சிருக்குக்கா. இனி சென்னைதான். என்ன பண்றது? இதுக்கு மேல வெளியூர் போனா என்னை விரட்டி விரட்டி அடிப்பியே. அதான் வந்துட்டேன்” என்று விடாது பேசினான்.
அவனை இரண்டு அடி போட்டவள், “சென்னைக்கு வர அவ்வளவு சலிப்பா இருக்குதாடா. இரு அத்தைகிட்டச் சொல்றேன். இந்த ராணி உன்னைக் கண்டிச்சே வளர்க்கலடா. ராணிக்கு இருக்கு ஒரு நாள்.”
“ஹையோ அக்கா! என்னை எங்கக்கா ராணிய வளர்க்கவிட்ட. நீ தான என் தம்பியை நான்தான் பார்த்துக்குவேன்னு பேர்லாம் வச்சி, அது என்ன சொல்வாங்க? குழந்தை பிறந்ததும் கொடுப்பாங்களே சே... சே...”
“சேனைத் தண்ணீர்டா.”
“ஹான்! அதேதான். அந்தக் குட்டி வயசுல அதையும் நீதான் கொடுத்தியாம்” என்று கிண்டலாகச் சொன்னாலும் பெருமையுடனே சொன்னான்.
“மாமா, அத்தையை பார்த்தியா ராஜா?”
“அப்பா வீட்டுல இல்லை. அம்மாவை மட்டும் பார்த்துட்டு வந்துட்டேன். இன்னும் ரிசல்ட் வர்றவரை ஃப்ரீ தான். அந்த டைம் வேஸ்டாக்காம, சைன்ஸ் சம்மந்தப்பட்ட எதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கணும்” என்றான்.
“ம்... உருப்படியா அதையாவது செய்” என்றாள்.
இடையில் வெற்றியைப் பார்த்து, நலம் விசாரித்து வந்தான். நியா பெண்களுடன் வேலையில் பிசியாக, அமைதியாக பார்த்தவனின் மனதினுள் பல எண்ணங்கள். தான் பிறந்த அன்றிலிருந்து தாயாய், சகோதரியாய், தோழியாய் இருந்தவள் நியா. அவளின் குறை அவனுக்கு விவரம் தெரிந்த பொழுதே சொல்லப்பட்டதால், அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டான். அவளின் அன்பில், அவளின் குறை அடிபட்டது. அவளின் இந்தப்பிரச்சனையைத் தீர்க்கவே, அவன் நல்ல பள்ளியாகத் தேடிப்பார்த்து ஊட்டியில் இருக்கும் கான்வென்டில் சேர்ந்தான்.
ஏனென்றால், எந்த வகையிலும் தன்னுடைய மனம் கெட்டுப்போகச் சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாது. தனக்கு உலக அறிவு அதிகம் வேண்டும் என்று தேர்ந்தெடுத்தப் பள்ளிதான் ஊட்டி. அனைவரும் தடுத்தும் பிடிவாதமாக போயே தீருவேன் என்று நின்றான்.
“ஏன்டா கேட்க மாட்டேன்ற? உன்னை விட்டுட்டு இருக்க முடியாதுடா.”
“இல்லக்கா. நான் போறதே உனக்காகத்தான்.”
“என்னடா உளர்ற? நீ அங்க படிக்கப் போறதுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்?”
“நான் டாக்டர் ஆகணும். அதுவும் உனக்குள்ள குறையைப் போக்குறதுக்கான ஸ்பெஷலிஸ்ட்குப் படிக்கணும். அதுக்கு ரெண்டு வகையான படிப்பு அவசியம். என் மூளைக்குத் தீனி வேணும். இது என் லட்சியம்னு நினைச்சி என்னை அனுப்புக்கா. ரெண்டு வருஷம், ரெண்டு நிமிஷமா பறந்திரும்” என்றான்.
“என்மேல அவ்வளவு பாசமாடா? உனக்குன்னு நான் எதுவும் செய்யலையேடா?”
‘என்னக்கா இப்படிச் சொல்லிட்ட? நீ நிறைய செஞ்சிருக்கக்கா. அந்த நன்றிக்கடனை செலுத்த இந்த ஜென்மம் போதாதுக்கா’ என்று மனதினுள் நினைத்தான்.
“இந்தச் சின்ன வயசுல எனக்காக யோசிக்கிறியே. எனக்காக இல்லன்னாலும், நீ படிக்கப்போற டாக்டர் படிப்பு நிறைய பேருக்கு பயன்படும். அதுக்காகவாவது போயிட்டு வா” என்றாள்.
வீட்டினரையும் அவளே சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.
இப்பொழுதும் அவன் எண்ணங்கள் மாறவில்லை. தன் அக்காவைக் குணப்படுத்த என்னென்ன படிக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தான்.
“தம்பி எதாவது சாப்பிடுறியா?” என்று அவனின் யோசனையைக் கலைத்தாள்.
“இல்லக்கா. இன்னைக்கு நைட் நாம மூனுபேரும் ஸ்பெஷல் டிஷ் பண்ணி சாப்பிடலாம்” என்றான் புன்னகையுடன்.
சிறிது நேரத்தில் சரண் வர, நல விசாரிப்பு முடித்து வீடு வந்து, சமையலில் நுழைந்து, சமையலறையை தலைகீழாக்கி சமைத்து முடிக்க, கணேசும், ராணியும் வந்தார்கள்.
கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருந்த வெற்றியைப் பார்த்து, என்னவென்று விசாரிக்க, வெற்றி சமையலறையைக் காண்பித்தார்.
உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு, மூவரும் மூன்று வித தோரணையில் சமையல் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் போல் நிற்க, பார்த்ததும் சிரிப்பு வந்தது. வந்த சிரிப்பை அடக்கியவர்கள் உணவு மேஜைக்கு வர அவர்கள் சமைத்த உணவும் வந்தது.
வெற்றி மூவரிடமும் திரும்பி, “நம்பி சாப்பிடலாமா? வேணும்னா நூத்தி எட்டுக்கு போன் பண்ணிரவா? என்றார் பயத்தில்.
“அப்பா, மாமா” என்று மூவரும் குரல் கொடுக்க,
“ஓகே ஓகே. நானே முதல் எக்ஸ்பெரிமன்ட்டை ஆரம்பிக்கிறேன்” என்று சாப்பிட்டவர் முகம் அஷ்டகோணலாகி, பின், ‘சூப்பர்’ என்று விரல் வைத்துக் காட்டிச் சொல்ல, ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து உண்ண அந்த நாள் இனிதாக முடிந்தது.
ராஜாவிற்கு ரிசல்ட் வந்து, அவன் விருப்பப்பட்ட மருத்துவப் படிப்பிற்கு சென்னையிலுள்ள பெயர் பெற்ற கல்லூரியில் இடம் வாங்கி ராஜாவைச் சேர்ப்பதற்குள், மூன்று மாதங்கள் முடிந்திருந்தது.
முதல் நாள் கல்லூரியில் விட, சரண், ராஜாவுடன் சென்றான். கல்லூரியில் இறக்கி விட்டவன், “ராகிங் எல்லாம் இருக்காது. இது ரொம்ப டீசண்டான காலேஜ். மீறி யாராவது பண்ணினா கண்டுக்காத. ஓவரா போனா ரிப்போர்ட் பண்ணிரு. பார்த்துக்கலாம் சரியா? இப்ப கிளம்பு” என்றான்.
“ஓகே அண்ணா. நான் மேனேஜ் பண்ணிக்கறேன்” என்று கிளம்பியவனை பார்த்துக் கொண்டிருந்த சரண், வண்டியைத் முன்னும், பின்னும் திரும்பி சாலையைப் பார்த்து திரும்ப யத்தனித்தவன் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தான்.!
அங்கே அவனின் நாயகி இன்னொருவனுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள். அன்று பூங்காவிலிருந்து வந்தவன், அடுத்தமுறை அவளை நேரடியாகப் பார்த்தால் மன்னிப்புக் கேட்கலாம் என்றிருந்தான். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. அன்று பேசிப் பிரிந்த பிறகு, மூன்று மாதங்கள் கழித்து இன்றுதான் பார்க்கிறான். அதுவும் இன்னொரு ஆடவனுடன்.
‘இது அவளோட அத்தைப் பையனா? இந்த சிட்டிக்குள்ள அதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டாளா? இல்ல கூட வேலை செய்யுறவனா? தனியாகவா வந்திருக்கிறா? அவள் ப்ரண்ட் எங்க?’ குழப்பத்தில் சுற்றிலும் பார்வையை விட்டவன், சற்றுத் தள்ளி ஆட்டோ அருகில் நின்றிருந்த சேகர் கண்ணில் படவும் ஒரு திருப்தியோடு சென்றான்.
மறுவாரம் ஞாயிறு அன்று விடுமுறையைக் கழிக்கவென்று நினைத்த ராஜா, “பீச் போகலாம் அண்ணா. போயி ரெண்டு வருஷமாச்சி. இடையில வந்தப்பவும் போகல. நைட் வரும்போது அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வரலாம்” என்றதும் நியாவின் முகம் வெளிறியது.
“நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க” என்று வேக வேகமாக உள்ளே தன் அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே வந்த சரண் அவள் அருகே அமர்ந்து, “ஒரு சம்பவம் தண்ணியினால நடந்தா, தண்ணீரே வேண்டாம்னு சொல்லுவியா? உன் பயம் எனக்குப் புரியுது. ப்ளீஸ் அதையெல்லாம் மறந்து ப்ராக்டிகலா இருமா?”
“முடியாது. வேண்டாம். நீங்களும் போகாதீங்க. தண்ணி ஆழமா இருக்கும். போகாதீங்க” என்றவளுக்குப் பதினெட்டு வருடங்களுக்கு முந்தின நினைவுகளில், கண்களில் ஒருவித ஏக்கமும், நிராசையும் வர, “அம்மா அம்மா” என்று அழுதாள்.
“குட்டிமா! ப்ளீஸ் அழாதடா. இனி நான் உன்னைத் தண்ணீர் இருக்கிற பக்கமே கூப்பிட்டுப் போகமாட்டேன். இப்ப தம்பிக்காக நான் மட்டும் போயிட்டு வர்றேன்”
“அண்ணா வேண்டாம். நானும் பீச் வரலை” என்று ராஜா சொன்னான்.
“டேய்! ஏன்டா நீ வேற. வா போயிட்டு வரலாம். எனக்கும் கொஞ்சம் ரிலாக்சா இருக்கும். நாங்க போயிட்டு ரெண்டு மணி நேரத்துல வந்திருவோம். எதையும் யோசிக்காம இரு” என்றான்.
“சரிண்ணா” என்று சொன்னாலும், ‘இன்றைய நிலைக்கு தான்தான் காரணம். என்னாலதான் எல்லாம்’ என்று பலவற்றையும் நினைத்தபடி சோபாவிலேயே சுருண்டு படுத்தாள்.
மாலை ஆறுமணி சூரியன் தன்னை முழுவதும் மறைத்து, நிலவுப்பெண் எட்டிப் பார்க்கும் தருணம். ஜில்லென்ற காற்று சரணின் தலைமுடி கலைத்து விளையாட, ராஜா கடல் அலையில் கால் வைத்து விளையாடுவதை வேடிக்கை பார்த்திருந்தான் சரண்.
அரைமணி நேரம் கரைந்த பொழுது, அங்குள்ள விற்பனைப் பொருட்களை வேடிக்கை பார்த்திருந்தவன் முகத்தில், ஜில்லென்று அடித்த காற்றில் மிதந்து வந்த தூதில், திரும்பிப் பார்த்தவன் முகம் பளிச்சென்றானது.
அதே சமயம் எதிரில் வந்த ஆராதனாவிற்கும் தூது செல்ல, அவளின் முகமும் சட்டென்று பிரகாசித்தது.
இருவர் பார்வையும் மோதி, பின் அதன் வேகம் குறைந்தது. அதைக் கவனித்த சரணின் மனம் சொன்னது, ‘ஆயிரம் தடை வந்தாலும், அவள் என்னவளே என்று.’ அவளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் அருகில் வந்தவனைக் கவனிக்கவில்லை. சில விநாடிகள் கழித்தே அருகில் இருந்தவனைக் கவனித்த சரணின் மனம் சுருங்கி, முகத்தில் அடிபட்ட வேதனை வந்தது.
சரணின் முகமலர்ச்சி தன்னருகில் இருந்தவனைப் பார்த்ததும், காணாமல் போய் அவனின் முகத்தில் தெரிந்த வலியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.