- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
6
உள்ளே சந்நிதானத்துக்கு செல்லும் வழியில், ஒருசிலர் மேல் சின்னதாக சந்தேகம் எழுந்தது. அது உண்மையா என்று ஆராய இது நேரமில்லையென்று, முருகன் சந்நிதானத்திற்குச் சென்று அப்பன் முருகனை வணங்கி, சுற்றிலும் உள்ள தெய்வங்களையும் வணங்கினாள். கோவிலின் பின்புறம் உள்ள தெப்பக்குளம் செல்ல, அங்கிருந்த கூட்டத்தையும் தாண்டி படியில் செனறமர்ந்து அதை ரசிக்க ஆரம்பித்திருந்தாள். தண்ணீரில் எந்தவித கழிவுகளுமில்லாமல் தெளிவாக இருந்தது.
‘ம்... குட் நல்ல பராமரிப்பு’ என்று மனதினுள் பாராட்டிக் கொண்டாள்.
அப்பொழுது அவளருகில் வந்தமர்ந்தவனைக் கவனிக்காமல், சின்னச்சின்ன அலைகளாய் ஓடிக்கொண்டிருந்த, தெப்பக்குளத்து நீரையே வேடிக்கை பார்த்திருக்க,
“அழகா இருக்குல்ல அவந்தி” என்ற குரல் கேட்டு சட்டெனத் திரும்பிப் பார்க்க, அங்கே அவளின் நாயகன் அவளருகில். மனதின் மகிழ்ச்சியை முகத்தில் காட்டி, “வாட் எ சர்ப்ரைஸ்! நான் உங்களை இங்க எதிர்பார்க்கவேயில்லை?” என்றாள்.
“இதை நானும் கேட்கலாமே? நீ எப்படி இங்க? இவ்வளவு தூரம் வந்திருக்க. என்கிட்ட சொல்லவேயில்ல. எத்தனை நேரம் சொன்னேன், ஒரு மெசேஜாவது அனுப்புன்னு” என்றான் குரலில் தன் ஆதங்கத்தைக் காட்டி.
“சாரிங்க. நான் ஒரு கேஸ் விஷயமா அர்ஜெண்டா கிளம்பியதால, மெசேஸ் பண்ண மறந்துட்டேன். இனிமேல் இந்த தப்பு நடக்காது” என்று தன் காதைப்பிடித்து “சாரி கார்த்திக்” என்றாள்.
அவந்திகாவின் அந்த அழகிய பாவனையில் கிறங்கியவன், “சரி. வந்த வேலை முடிஞ்சிதா?” என கேட்டான்.
“இன்னும் இல்ல கார்த்திக். ஆனா, இப்ப உங்களைப் பார்த்ததும் சக்சஸாகிரும்னு நம்பிக்கை வந்திருச்சி.”
“அதென்ன என்னைப் பார்த்ததும்?”
கண்சிமிட்டி “அது அப்படித்தான். சென்டிமெண்ட்னு வச்சிக்கோங்களேன்.”
“ம்... வச்சிக்கிறேன்ன்” என்று ‘ன்’னுக்கு அழுத்தம் கொடுத்து, ஒரு மார்க்கமாய் அவளைப் பார்த்தபடி சொன்னான்.
“அச்சோ! போங்க கார்த்திக்” என்று கொஞ்சலாய் சொல்லி அவனுக்கு செல்லமாக ஒரு அடிவைக்க,
“ஏய் என்ன அடிக்கிற? அப்புறம் இதுக்கல்லாம் சேர்த்து, கல்யாணத்துக்கப்புறம் நான் நிறைய அடி கொடுப்பேன்” என்றான் தன் இதழ்களைக் காண்பித்து.
அவந்திக்குத் தெரியாதது, ‘அவன் கொடுக்கப்போகும் அடி தன் இதழ்களுக்கல்ல. தன் மனதிற்கென்று.’
கார்த்திக் சொன்னதில் இன்னும் வெட்கத்தில் உதடுகடிக்க, அவளையே பார்த்திருந்தவன், அவளைத் தொடப்போன தன் கைகளை அடக்கி, மனதை நடப்புக்கு இழுத்து வந்து “அவந்தி எதாவது பிரச்சனையா? எதுனாலும் தைரியமா சொல்லுமா? நீ சொல்ற நியூஸ் என்னைவிட்டு எங்கேயும் போகாது. என்னை நீ தாராளமா நம்ப...”
சட்டென்று அவன் வாயை மூடியவள், “என்னங்க இது நம்பலாம்னு கேட்குறீங்க? நான் என்னைவிட அதிகமா உங்களை... உங்களை மட்டும் நம்புறேன்” என்று அவன் இதயத்திற்கு நேரே கைவைத்து, நிறுத்தி நிதானமாகச் சொன்னாள்.
அவளின் கைபிடித்து தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து, “அதை எப்பவும் நியாபகம் வச்சிக்கோ. இப்ப சொல்லு? என்ன விஷயமா இவ்வளவு தூரம் வந்திருக்க?” என்றான்.
“அது..” என்று வைஷ்ணவி லெட்டர் போட்டது. விஷ்ணுவும் தானும் வந்தது, அந்த இன்ஸ்பெக்டர் பரத்தைப் பார்த்தது. பின் பந்தோபஸ்துக்கு இருந்த காவலர்களிடமும் தெரிவித்தது என சுருக்கமாக சொன்னாள்.
“ஏன்மா ரிஸ்க் எடுத்த? என்னைக் கூப்பிட்டிருக்கலாம்ல? அதுவுமில்லாம அவனுக்கு உன்னைத் தெரியும்ன்ற போது, அவன் உன்னைப் பார்த்திருந்தா, உனக்கு ஆபத்துதானே?”
“ம்... புரியுதுங்க. அதான் போலீஸூம் இருக்கிறாங்கள்ல. அதனால நோ ப்ராப்ளம். சரி நீங்க எங்க இவ்வளவு தூரம்?”
“ஃப்ரண்ட் பொண்ணுக்கு காதுகுத்தி மொட்டை போடுறாங்க. ரொம்ப வற்புறுத்தினதால வரவேண்டியதா போயிருச்சி. ம்... அதுவும் நல்லதுக்குத்தான். இல்லைன்னா, அந்த பாலசுப்ரமணியன் தரிசனத்தோட சேர்த்து, தி கிரேட் அவந்தி மேடம் தரிசனமும் கிடைச்சிருக்குமா?”
“உங்களை... என்ன நக்கலா அப்...” அவளின் பேச்சின் நடுவே தடுத்து, “ஒரு நிமிஷம் அவந்தி. ஒரு போன் பண்ணிட்டு வந்திடுறேன்” என்று கொஞ்சம் தள்ளிச்சென்று பேசிவிட்டு வந்தவனுடன், இன்னொருவனும் வந்தான்.
“அவந்தி இவன் தாமு. இவன் பொண்ணுக்குத்தான் பங்ஷன்” என்றதும், தாமு சற்று பே என விழித்து கார்த்திக்கை பார்த்தவன், அவன் ஏதோ சைகை செய்ததும், “வணக்கம் சிஸ்டர்” என்றான்.
பதிலுக்கு வணக்கம் சொன்னவள் அருகில் கார்த்திக் வந்து தோளணைத்தபடி, “என்னோட எதிர்காலம் எப்படிடா?” என்றவனை சட்டென்று திரும்பிப் பார்க்க, யாருமறியாமல் அவளைப் பார்த்து கண்ணடித்ததும், வெட்கத்தில் தலை கவிழ்ந்தவளையே கார்த்திக் ரசித்திருந்தான்.
அதைக் கண்டும் காணாதவனாய் “குட் செலக்ஷன்டா” என்று தாமு சொன்னதும்தான், இருவரும் நிகழ்வுக்கு திரும்பினார்கள். “ஏன் கார்த்திக். உங்க ப்ரண்ட் போலீஸா?” என திடீரென்று கேட்டாள்.
இருவரும் புரியாமல் விழிக்க, அதை உணர்ந்தவள் “இல்ல ஹேர் கட்டிங்லயிருந்து, ஃபேஸ் லுக் வரை பார்த்தா, அப்படித்தான் தெரியுது.”
“ஹா...ஹா மிலிட்டரிக்காரங்க கூட இப்படித்தான்மா இருப்பாங்க. இவனுக்கு வேலை கல்கத்தாவுல. ரெண்டு மாத லீவுல வந்த இடத்துலதான் பங்ஷன் வச்சிருக்காங்க. சரிமா நீ கிளம்பு. எதாவது ப்ராப்ளம்னா கால் பண்ணு. முடிஞ்சா நாம சேர்ந்தே போகலாம்” என்று அவளை அனுப்பிவிட்டு, நண்பனின் புறம் திரும்பி, “எப்படிடா உன் தங்கச்சி?” என்றான் தாமுவிடம்.
“அதான் என் தங்கச்சின்னுட்டியே. அப்புறம் என்ன ஸ்மார்ட்டாதான் இருப்பாங்க. ஆனா, கார்த்திக் உன்னைப்பற்றிய முழுவிவரம் தெரியுமாடா?”
“ம்கூம்... தெரியாது. நான் யாரு, என் தொழில் என்ன, என்னோட ஒரிஜினல் கேரக்டர் என்ன, என் குடும்ப பேக்ரௌண்ட் என்ன, எதுவுமே தெரியாது. அவளா வந்தா, ப்ரபோஸ் பண்ணினா. நான் அக்செப்ட் பண்ணிட்டேன். இவ்வளவு அழகான பெண்ணை யாராவது வேண்டாம்னு சொல்வாங்களாடா? வேண்டாம்னு சொல்றதுக்குத்தான் நானும் என்ன லூசா” என்று சிரித்தான்.
“கேடிடா நீ! எங்க உன்னைப்பற்றிய உண்மை சொன்னா ஒத்துக்க மாட்டாங்களோன்னு, கடைசிவரை செக்யூரிட்டி ஆக்ட் குடுத்தே கவுத்துட்டியேடா. இதுக்கு உன் ஃபேமிலி வேற ஜால்ரா. ம்... நடத்துடா. பொண்ணு பத்திரிக்கைக்காரி. சின்னதா நீ பண்ற தில்லலாலங்கடி வேலை தெரிஞ்சிதுன்னு வையி, அவங்க எஸ்கேப்பு. அப்ப உன் நிலையை யோசிச்சிக்கோ. முடிஞ்சா சீக்கிரம் முடி. இல்லன்னா உனக்கு அடி” என்றான் ரைமிங்காக.
‘போடா! அவ என்னை முழுசா நம்புறா. பார்க்கலாம் சீக்கிரம் கரெக்ட் பண்றேன் எல்லாத்தையும்’ என்று கண்ணடித்துச் சிரித்தான்.
தன் முதுகுப்புறம் நடந்ததையும் அறியாமல், தனக்கு எதிராக வரப்போகும் ஆபத்தையும் அறியாமல், மீண்டும் ஒருமுறை முருகனை தரிசித்து வெளியே செல்ல யத்தனித்தவளுக்கு விஷ்ணுவிடமிருந்து தகவல் வர, என்னவென்று பார்த்தவள் அதிர்ந்தாள்.
அதில் இருந்தது இதுதான். ‘அவந்தி! நீ சொன்ன அந்த நபர், உன்னை அடையாளம் கண்டு பிடிச்சிட்டான்னு நினைக்கிறேன். அவனோட நடவடிக்கையெல்லாம் உன்னைச் சுற்றியே இருக்கு. முடிஞ்சா அவன் கண்ணுல படாம போயிரு. போலீஸ்கு இன்பார்ம் பண்ணியும், எந்தவித ஸ்டெப்பும் எடுத்தமாதிரி தெரியல. இன்னைக்கு வெள்ளிக்கிழமை சஷ்டிவிரதமாம். அதனால கூட்டம் ஜாஸ்தி. கூட்டத்தோட கூட்டமா எஸ்கேப்பாகி வெளியே வந்திரு. நான் வேற அந்த பரத்தை மிஸ் பண்ணிட்டேன். ஸோ, பி கேர்புல்’ என்றிருந்தது.
‘ஒரு கொலை செய்த மகாபாவியாகிற்றே’ என்ற எண்ணத்தில் சின்னதாக மனதினுள் பயம் எழ, டக்கென்று கார்த்திக்கின் நினைவு வர, அந்த மெசேஜை அவனுக்கு பார்வர்ட் செய்து வெளியே கிளம்பினாள்.
ரொம்ப சின்னதும் இல்லாமல், பெரியதும் இல்லாத கோவில் ஆகையால், விசேஷ நாள் என்றதும் கூட்டம் அதிமாகவே இருந்தது. திரும்பிச் செல்வதற்கான மறுவழி தேடிச் செல்கையில், தன்னை யாரோ தொடர்வதுபோல் தோன்ற, திரும்பிப் பார்த்தவள் கண்களில் யாரும் தென்படவில்லை. வாசல் செல்லும் சமயம் கார்த்திக்கிடமிருந்து, ‘உள்ளே வா என்ற தகவல் வர, அதைப் பார்த்து சிரித்தபடி திரும்பி உள்ளே சென்று கொண்டிருந்த பொழுதுதான், கண்சிமிட்டும் நேரத்தில் அது நடந்து முடிந்தது.
கார்த்திக்கின் தகவல் பார்த்து உள்ளே நுழைந்தவள் எதிரில், அந்த பரத் நின்று வழிமறித்தான். ஒரு வினாடி உடல் அதிர, கண்களில் தோன்றிய பயத்தை தன் தைரியத்தால் மறைத்து, ‘கூட்டத்தில் என்னை என்ன செய்ய முடியும் இவனால்? நான் கற்ற கராத்தே என்னைக் கைவிடாது’ என்ற அசட்டு தைரியம் வந்தது.
ஆம் அசட்டு தைரியம்தான். என்னதான் கராத்தே கற்றிருந்தாலும். எதிரியின் மனநிலையை எவ்வாறு யூகிக்க முடியும். அந்த தைரியம் முகத்திற்கு வர, அவனை நேரிடையாகவே எதிர்கொண்டாள்.
“என்னை அடையாளம் கண்டுகிட்டபோல. நான் அனுப்பின அத்தனை கொலை மிரட்டலுக்கும் பயப்படலையே நீ. ஆனாலும், உனக்கு தைரியம்தான்டி.”
“ஏய்! இந்த டி போட்டுப் பேசுற வேலையெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன். அப்புறம், அந்த மிரட்டல் வீரன் நீதானா? என்னடா அட்ரஸில்லா அறிவுகெட்ட நாய் எதோ, மிரட்டல்ன்ற பெயர்ல டெய்லி லெட்டர் போடுதேன்னு நினைச்சேன். கடைசியா அந்த அ-நா... நீதானா?” என நக்கலாக கேட்டாள்.
“ஏய்! என்னடி வாய் ஓவரா நீளுது. பத்திரிக்கைக்காரின்ற திமிறுதான உன்னைப் பேசவைக்குது. அதை அடக்கத்தான்டி இந்த கடவுளே என்னை அனுப்பியிருக்கான்.”
“நீ பண்ற வேலைக்கு கடவுளை கூட்டு சேர்க்கிறியா” எனும்போது பரத்தின் பின்னால் வந்த விஷ்ணுவைப் பார்த்தாள்.
‘இனி பயமில்லை’ என்று அவன் ஜாடை செய்ய, மனம் கொஞ்சம் நிம்மதியானாள் அவந்திகா.
அவள் அறியாத ஒன்று, அந்த இடைவெளியில் பரத் தன் பேண்ட் பாக்கெட்டில் கைவைத்தபடி, எப்பவும் எடுக்கத் தயாராக கத்தியை பிடித்திருந்தது.
சுற்றிலும் ஒருதரம் பார்த்தவன், “கடவுள் குடுத்த வேலையை நான் செய்யலன்னா எப்படிமா?” என்றபோது போலீஸ் அவனை நெருங்கி கைவைக்கப் போக., அந்தச் சின்ன இடைவெளியில், யாரும் யோசிக்காத நேரம், சட்டென்று பேண்ட் பாக்கெட்டிலிருந்த கத்தியை எடுத்து, அவந்திகா வயிற்றில் சொருகப்போக, ஆட்கள் இடித்ததில் அது வயிற்றுப் பகுதியை நேர்கோடாகவும், கொஞ்சம் ஆழமாகவும் கிழித்துச் சென்றது.
அதே நேரம் அவனை போலீஸூம் மடக்கிப் பிடிக்க, அவந்திகா கத்திக்குத்து பட்டதை யாரும் அறியவில்லை. ஏன் அவளே அதை உணரவில்லை. வயிற்றுப் பகுதியில், ஏதோ ஒரு வலி திடீரென்று வர, குனிந்து என்னவென்று வயிற்றைப் பார்த்த பொழுதுதான், வெட்டுப்பட்டது அவளால் உணரப்பட்டது.
அதற்குள் மக்கள் கூட்டம் கூச்சலுடன் அவர்களைவிட்டு விலகிச் செல்ல, அவளோ அதிர்ச்சியில் கண்களில் தோன்றிய வேதனையுடன், நேராக நின்றிருந்த விஷ்ணுவைப் பார்க்க, அவன் ‘சக்சஸ்’ என்று விரல் தூக்கி காண்பிக்கும் பொழுதுதான் கவனித்தான் அவள் நிலையை. அதிர்ச்சியானவன் அவளை நோக்கி வர,
அதற்குள் கீழே விழப்போனவளை “அவந்தீஈஈஈ...” என்று ஓடிவந்து தன் மடியில் தாங்கிக் கொண்டான். கார்த்திக்.
தன்னை கைகளில் ஏந்தியவனின் முகத்தைப் பார்த்ததும் அந்த நிலையிலும் கூட முகம் மலர்ந்து புன்னகைத்தாள்.