• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
6



“ஹேய் மொழி என்னாச்சி? ஏய் எழுந்திருமா? ஹெல்ப்” என்று சத்தமிட்டபடியே வீட்டினுள் அவளைத் தூக்கிச் செல்ல அப்பொழுதுதான் அவளின் அத்தை காமாட்சியை அழைத்து வந்தான் பிரஷாந்த்.

“ராஜா என்னாச்சி இந்தப் பொண்ணுக்கு?” கேள்வியுடன் மகனைத் தொடர்ந்த தாய்க்குப் பின்..

“திருமா... திரு என்னாச்சிடா?” என காமாட்சி கண்கலங்கியபடி வர அங்கிருந்தோருக்குள் பரபரப்புடன் ‘யார் இவர்கள்?’ என்ற கேள்வியும்.

தனி அறையில் படுக்கப் போட்டவன் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி முகத்தில் தெளித்தான். அவளிடம் சிறிது அசைவு தெரிய மற்றவர்களைச் சற்று விலகி நிற்கச் சொல்லி காற்றோட்டமாக விட... கண்விழித்தவள் விழிகளோ யாரையோ தேடியலைந்தது.

“திரு என்னாச்சிமா?” என தலையை வருடிவிட,

“அத்... அத்தை நான் பார்த்தேன்.”

“என்னமா பார்த்த?”

“என்னோட இளா அத்தானைப் பார்த்தேன்” என்றாள் “திருமொழியாக மாறியிருந்த மங்கையர்கரசி!”

“என்னமா சொல்ற? நீ சொல்றது நிஜமா?”

“ஆமா அத்தை. இளா அத்தான் வந்துட்டாங்க. என்னோட லட்சியம் கண்டிப்பா நிறைவேறும். அவங்களை எங்க அத்தை?” அவளின் உயிர் தேடி அலைந்தது அவளின் கண்கள்.

“அப்படி யாரும் வரலமா.”

“அத்தை அது யார் இளா? எனக்குமே அந்தப் பெயர் பரிச்சயமா தோணுது” என்றான் பிரஷாந்த்.

“இளா இவளோட முறைப்பையன். அவனுக்காகத்தான் ரொம்ப காலமா காத்திருக்கா” என்றார் அவர்.

தன் பெயரைக் கேட்டதும் மயங்கியவள் எப்பொழுது இளா என்ற பெயரை உச்சரித்தாளோ அப்போதிருந்த அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் கதிர். அவள் கண்களின் சுழற்சியில்தான் அவனும் நிற்கிறான். இருப்பினும் அவனைப் பார்க்கவில்லை அவளின் கண்கள். ஏனோ மனம் வேதனை கொள்ள கதிர் என்றழைக்காத அவளின் இளாவில் ஏதோ இருப்பதாய் உணர்ந்தான்.

அது அவளின் முறைப்பையன் பெயர் என்றதும் ‘அவளின் முறைப்பையன் பெயர் என்னில் பாதியா? அப்படியானால் நான் அவளின் பாதியில்லையா?’ கண்கள் கலங்குவது போல் தோன்ற வெளியே வந்துவிட்டான்.

ஆனால் சிவகாமி அவளைதான் பார்த்திருந்தார். அவள் ‘இளா’ என்றது தன் மகனைத்தான் என்று சந்தோஷப்பட்டவருக்கு அவளின் அடுத்தடுத்த வார்த்தைகள் குழப்பத்தையே கொடுத்தது. இவள் தேடும் இளா தன் பையன் இல்லையென்று உணர்ந்தபோது மகனின் கனவுகள்... அதையும் தாண்டி ஏதோ இருக்கிறதென்றது. அதேநேரம் கணவனின் தமிழ்நாட்டு மறுப்புகள் நினைவு வர அனைத்தையும் ஆராயத்தொடங்கியது மனது.

“அத்தை உங்க பையனைக் கூப்பிடுங்க. நீங்க கூப்பிட்டா வருவாங்க” என காமாட்சியை உலுக்கினாள்.

“இத்தனை வருஷம் உரிமைப்பட்ட நீ கூப்பிட்டே வரலன்னும்போது, நான் எப்படிமா?”

“எனக்கு நம்பிக்கை இருக்கு அத்தை. இளா அத்தான் சீக்கிரமே வருவாங்க. என் லட்சியமும் நிறைவேறும்” என்றவள் முகத்தினில் திடீர் பளபளப்பு.

“அக்கா” என்று அருகில் வந்த பிரஷாந்தை யோசனையாய் பார்த்தவள், அதன் பின்னே சூழ்நிலை உணர்ந்து சுற்றிலும் பார்த்து, “சாரிடா தம்பி. கல்யாண வீட்ல வந்து நான்.. சாரிடா” என்று மன்னிப்பு கேட்டாள்.

“ப்ச்.. அதை எதுக்கு பேசுற. விடுக்கா எனக்கு உன் ஹெல்த் தான் முக்கியம். உன்னை அப்படிப் பார்த்ததும் எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியலக்கா. சரியா சாப்பிடலையாக்கா. இரு அம்மாகிட்டக் கேட்கிறேன்” என்று எழப்போனவன் கைபிடித்துத் தடுத்தாள்.

“அம்மான்னும் போதே என்னை எப்படி பட்டினி போடுவாங்கன்னு நினைக்கலாம்? தப்புடா தம்பி. அம்மான்ற உறவு இல்லாத என்னை மாதிரி ஆளுங்களுக்குத்தான் தெரியும். அம்மா எவ்வளவு முக்கிய...” தொண்டைக்குள் அடைத்த துக்கம் கேவலாய் வர கண்கள் அதன் வலியைப் பிரதிபலித்தது.

“திருமா!”

“உண்மைதான அத்தை. கண் முன்னாடி... இப்ப நினைச்சாலும் என் இரத்தம்லாம் கொதிக்குது அத்தை. இதுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும். அந்தத் தாயும் பதில் சொல்லணும்” என்றவளின் வலிகள் எல்லாம் வெறியாய் மாறியதோ!

திருமொழியைச் சுற்றிலும் புரியாத நிறைய மர்மங்கள் இருப்பது புரிந்தது சிவகாமிக்கு. ஒன்று மட்டும் புரியவில்லை அவருக்கு. அவர்களின் பிரச்சனைக்கும் தன் மகனுக்கும் என்ன சம்பந்தமென்று. இருப்பினும் அவள்மேல் ஒரு பரிவு வரத்தான் செய்தது. மெல்ல மகனைத் தேடி வந்தவர் அவனைக் கண்டதும் தன் குழப்பம் மறந்தவராய் “என்னடா ராஜா ரொம்ப குழப்பமாயிருக்கா?” என கேட்டார்.

“ஆமாம்மா ரொம்பவே. நல்லாதான்ம்மா பேசிட்டிருந்தா. என்ன நினைச்சாளோ பெயரைக் கேட்டா... இளங்கதிர்னு சொன்னதும் அப்படியே மயங்கிட்டா. இப்ப என்னைதான் இளா கூப்பிடறாளோன்னு சந்தோஷப்பட்டா, அது அவள் அத்தான் பெயர்னு சொல்றா. என்னைப் பார்க்கக்கூட இல்லம்மா. என்னைச்சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியல. எதோ ஒரு மர்மக்கதைக்குள்ள மாட்டிட்டு முழக்கிற மாதிரியிருக்கு.”

“நான் ஒண்ணு சொல்லவா கதிர்.”

“ம்மா...”

“அந்தப் பொண்ணோட இளா இறந்திருக்கணும். அதை ஏத்துக்காத மனசு அவன் வருவான்ற நம்பிக்கையில் இருக்கலாம். நிஷாந்த் அம்மாகிட்ட பேசினவரைக்கும் அவங்களுக்கு இவளைப்பற்றி முழுசா தெரியலைன்னாலும், திருவும் அவ அத்தையும் ரொம்ப காலமா தனியாதான் இருக்கிறாங்கன்னு தெரியுது. சொந்தம்னு யாரும் இல்லன்னு சொல்றாங்க. நேத்து நைட் கூட கனவுல என்னென்னவோ உளறியிருக்கா. சில நேரம் அமைதி! சில நேரம் ஆர்ப்பரிப்பு! மொத்தத்துல அவ மனசுல எதோ வெளிய சொல்லமுடியா பாரம் இருக்கு. அவளோட கண்ணுல ஒரு அலைப்புறுதல் இருக்கு. அதை இறக்கி வைக்காம அவளால வேற எதைப்பற்றியும் யோசிக்க முடியாது. உன்னையும் சேர்த்துதான் சொல்றேன். அவளோட அத்தைகிட்ட தனியா பேசிப்பார்க்கிறேன்.”

“ம்... சரிம்மா. என்ன பிரச்சனைனாலும் சரிபண்ணிடலாம்னு சொல்லுங்க.”

“ராஜா ஒருவேளை அவள் அத்தான் வந்துட்டா.. நீ?”

“நா..நானா.. அவளைப் பார்க்கலம்மா” என்று திணறியவன். “அம்மா.. அப்ப என் கனவு பலிக்காதா?” மனம் எதையோ இழந்தாற்போலிருந்தது கதிருக்கு.

மகனை உணர்ந்தவர், “நல்லதாவே நினைப்போம் கதிர். நல்ல வேளை உங்கப்பா வெளில போயிருக்காங்க. இல்லன்னா சிவா பேக்கப்னு சொல்லிருப்பாங்க. சரியான...”

“ஹலோ அன்னையாரே போதும். தந்தூரி பாவம். அவருக்குள்ள உள்ளதைச் சொல்ல முடியாதப்பவும் நமக்காக கூடவே இருக்கிறாரே அதுக்கே சந்தோஷப்படணும்.”

“உன் அப்பாவை எதுவும் சொல்லிரக்கூடாதே. சீன் மட்டும்தான் அம்மா பிள்ளைன்னு. பாசம்லாம் உன் அப்பா மேலதான்” என்றார் முறைப்பாய். மகனின் சிரிப்பில் “இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல. சரி உள்ள வா” என்றார்.

“மொழி இப்ப எப்படியிருக்கு?”

“சரியாகிருச்சி சார்.”

“ஓகே. நிஷா யாருன்னு கேட்டீங்கள்ல? இதுதான் நிஷா ஃபுல் நேம் நிஷாந்த்” என்று தன் பி.ஏவை அறிமுகப்படுத்தினான்.

“நான் யார்னு கேட்கலையே” என்று முறுக்கினாலும் “அண்ணா பெயர் நிஷாந்த் தெரியாது. சாரிண்ணா” என்றாள் நிஷாந்திடம்.

“பரவாயில்லமா. அண்ணன்னு ஆனதுக்கப்புறம் பெயர் எப்படி கேட்கத்தோணும்.”

‘ம்...’ என்று “உன் பெயர் என்னடா தம்பி?” என்றாள்.

சிரித்தபடி “பிரஷாந்த்” என்றான்.

“இவன் பெயரே இப்பதான் தெரியுமா?” என ஆச்சர்யமானான் கதிர்.

“அ..அது ஆமாம் சார்” என சின்னதாக வெட்கப்பட்டு “பார்த்ததிலிருந்து தம்பிப்பையா கூப்பிட்டே பழகிட்டேனா, அதான் பெயர் கேட்கத் தோணல. அப்படியே உங்க பெயரும் சொல்லிருங்க சார். இல்ல அதுக்குத் தனியா கலாட்டா செய்யப்போறீங்க?”

“என் பெயரைச் சொன்னேனேமா” என்றவனுக்குள் குழப்பமே.

“ஓ... எப்ப சொன்னீங்க?” என்றாள் கேள்வியாய்.

“அதைக் கேட்டதும்தான்மா மயங்கிட்ட” என்றான் அவள் முகம் பார்த்து.

“ஓ... அவ்வளவு மோசமாகவா சார் இருந்தது உங்க பெயர்?”

“மோசம்லாம் இல்லமா. கதிர்” என்றான் இளாவை எடுத்து. அவனுக்குப் புரிந்தது இளா என்ற பெயரைக் கேட்டதால்தான் மயங்கிவிட்டாளென்று.

சிறிது நேரத்தில் வீட்டில், ஸ்பீக்கர் ஒரு பக்கம், உறவினர்கள் ஒரு பக்கமென்று பிஸியாக நிச்சயத்திற்கு பெண் வீட்டிற்கு அனைவரும் செல்ல திருமொழியின் மயக்கம் கண்டுகொள்ளப்படாமலே விடப்பட்டது.

நிச்சயத்தாம்பூலம் மாற்றும் பொழுது “ஏன் தாயே? பத்திரிக்கை அடிச்ச பிறகு நிச்சயம் பண்றாங்க? எப்பவும் நிச்சயம் முடிஞ்சிதான பத்திரிக்கை அடிச்சி கல்யாணம் பண்ணுவாங்க. என்ன லாஜிக் இது?” என்றான்.

“இதெல்லாம் கிராமப்புறங்கள்ல சகஜம்டா ராஜா. இதான் பொண்ணுன்னு தெரிஞ்சதும் முதல்ல ஜாதகம் பார்த்து, அதுல எல்லா பொருத்தமும் பொருந்தினா, முறையா பெண் பார்க்க பெண் வீட்டுக்குப்போய் இவளை எங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு பூ வச்சிருவாங்க. அதுக்கப்புறம் நிச்சயம் தனியா வைக்கலாமா, கல்யாணத்தோட வைக்கலாமா கேட்டு நிச்சயம் கல்யாணத்தோடனா ஜோசியரைக் கேட்டு டேட் பிக்ஸ் பண்ணி.. இதோ பண்றாங்களே இப்படி செய்திருவாங்க.”

“இன்னொரு காரணம்னு பார்த்தா பையனுக்கோ பொண்ணுக்கோ டைம் கிடைக்காமலும் இருக்கலாம். இதே சிட்டிக்குள்ளனா நாம ரிஷப்சன்னு பொண்ணையும் மாப்பிள்ளையையும் சேர்த்து நிற்க வச்சிருவோம். கிராமங்கள்ல நிச்சயம் முடிஞ்சதும் நிற்க வச்சி விபூதி பூசி ஆசீர்வாதம் பண்ணுவாங்க.”

“அப்ப எனக்கும் மொழிக்கும் இப்படியே பண்ணலாம்மா.”

“பண்ணலாமே! அவள் சம்மதிச்சா?”

“அவள் சம்மதிச்சா இப்பவே கூட பண்ணிடலாம்மா. எங்க...” என பெருமூச்சுவிட்டான்.

“சிவா அங்க என்ன குசுகுசுன்னு சத்தம்?” என்ற குருவின் அதட்டலில்...

“ஒண்ணுமில்லங்க மாமா. சும்மா பேசிட்டிருந்தேன்” என்று ஒரு காமெடியைப் போட... அருகிலிருந்தவர்கள் சிரித்ததும் அவரின் முறைப்பைப் பார்த்து வாய் மூடியவர்கள்தான் அதன்பின் திறக்கவேயில்லை.

இரவு பெண் வீட்டில் உணவு முடித்து மற்றவர்கள் பையன் வீடு செல்ல, இரவு லாட்ஜ் சென்று காலை வருவதாகச் சொல்லி குருமூர்த்தி குடும்பத்தினர் சென்றார்கள்.

அவ்விரவில் கனவுகளுக்கும் பஞ்சமில்லாமல் போனதோ!

காலை நான்கு மணிக்கெல்லாம் திருமண விட்டில் மேளச்சத்தம் கேட்க, சின்னச்சின்ன ஆர்ப்பாட்டங்களுடன் விடியல் தன்னுடைய ஒளியை வெளிப்படுத்தியது.

தனது திருமணத்திற்கென்று நிஷாந்த் தன் தாயுடன் சேர்த்து, திருமொழிக்கும் பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்திருந்தான். அதனுடன் நகையும் சேர்த்து அவளிடம் கொடுத்த பத்மினியிடம் திருமொழி மறுக்க... “நீ அம்மா அண்ணன்னு பாசத்துலதான கூப்பிடுற?” என்றார்.

“ஏன்மா இப்படி?” என்றாள் வருத்தமாக.

“அப்ப இதைக் கட்டிக்கோ. இல்லன்னா சின்னவனைக் கூப்பிடுவேன்.”

“ஹான்! அவன் வந்தா எனக்கென்ன பயமா?”

“என்ன சத்தம் இங்க? என்னைத் தேடுனீங்களா என்ன?”

“ஆமாடா. உன் அக்காவுக்கு நாம வாங்கிக்கொடுத்தப் புடவை வேண்டாமாம். நகை குடுத்தா அதையும் போடமாட்டாளாம்.”

“எதுக்குடா தம்பிப்பையா இதெல்லாம்? என்கிட்ட இருக்கிறதே போதும்டா. நானும் அத்தையும்தான் வீட்ல. தோட்டத்துல வருமானம் வருது. அதனால தேவைக்கு அதிகமாகவே இருக்குடா.”

“நான் உன்கிட்ட இல்லன்னு எப்ப சொன்னேன். இது அண்ணன் கல்யாணத்துக்காக தங்கைக்குக் கொடுக்கிறது. மறுத்தா அண்ணன் மனசுதான் கஷ்டப்படும். உனக்கு அதுதான் வேணுமா?”

“ப்ச்... என்னடா. அப்படியே இருந்தாலும் இந்தப் புடவைக்கு ஜாக்கெட் தைக்கலைல்ல. அதனால உன்கிட்டயே இருக்கட்டும்” என எஸ்கேப்பாக.

“ஹேய் யக்கா! நீ இப்படிலாம் செய்வன்னுதான் உனக்கேத் தெரியாம அத்தையைப் பிடிச்சி நீ ரெகுலரா தைக்கிற இடத்துல குடுத்து இப்போ உள்ள ட்ரெண்ட்கு ஏத்தமாதிரி தைச்சி, வாங்கிட்டே வந்தாச்சி. அவாய்ட் பண்ணக் காரணம்லாம் தேடியலையாத ஓகே.”

“ஏன்டா என்னை இம்சை பண்ற. புடவை சரிடா.. நகை எதுக்கு?”

“அது பத்துவோட ஆசை” என்று தாயைக் காண்பித்தான்.

“உன்னை... முதுகுல போட்டா தெரியும்” என்று பத்மினி அவனை அடிக்க வர...

“கோவிச்சிக்காதீங்க பத்து” என தாயைக் கொஞ்சி நகையைத் திருவின் கையில் திணித்து, நைசாக தாயுடன் நழுவிவிட்டான் பிரஷாந்த்.

ஆள் பாதி! ஆடை பாதி என்பார்கள். இரண்டு அழகும் சேர்ந்து மங்கையர்கரசியை மங்கையர்கு எல்லாம் அரசியாக்கிக் காண்பித்ததோ!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
காமாட்சி தன் மருமகளுக்கு கையால் திருஷ்டி கழிக்க...

“வாவ் அக்கா! ஒரு நிமிஷம் இரு” என்று உப்பு மிளகாய் எடுத்து வந்தவன் “ஊருக்கண்ணு.. உறவுக்கண்ணு.. பக்கத்து வீட்டுக்கண்ணு.. என் கண்ணு.. இப்படி யார் கண்ணும்படாம நூறு வருஷம் நல்லா வாழணும்கா” என்று சுத்தி முடித்துத் துப்பு என்றான்.

கண்கள் கலங்கியது அவனின் பாசத்தில். கலங்கிய கண்களுடன் சின்னப்புன்னகையும் எழ தூ..தூ..தூ.. என மூன்று முறை வார்த்தையை மட்டுமே துப்ப... “இருக்கா வர்றேன்” என்று சென்று சில நிமிடங்களில் வந்தவன் “யப்பாடி எவ்ளோ திருஷ்டிக்கா உனக்கு. கல்யாணம் முடிஞ்சதும் பொண்ணு மாப்பிள்ளையோட சேர்த்து உனக்கும் சுத்திப்போடணும்” என்றான் தீவிரமாய்.

“டேய் தம்பி இதெல்லாம் ரொம்ப அதிகம்டா. அப்படி என்ன செஞ்சிட்டேன் உனக்குன்னு இப்படி...” குரலில் தடுமாற்றம் எழ கண்கள் கலங்குவது போலிருந்தது.

“ஹேய் யக்கா! என்ன நீ சென்டிமெண்ட் பேசுற. திருமொழின்னா எப்படி தெரியுமா? அப்படியே அவளோட ஒவ்வொரு வார்த்தையும் தெரிச்சி மத்தவங்களை அலறவிட்டு ஓடவிடணும். பாசத்துலயும் திருமொழிக்கு ஈடே கிடையாது.”

சின்னப் புன்னகையுடன் “நல்லா பேசுறடா தம்பிப்பையா” என்றாள்.

“உன் தம்பியாச்சே! இதுகூடப் பேசலன்னா எப்படி. சரி வா டைமாகுது.”

இவர்கள் பெண் வீடு செல்ல இவர்களுக்கு முன் நின்றிருந்தார்கள் இளங்கதிர் குடும்பத்தினர்.

“சார் எப்ப வந்தீங்க? சாரி சார் கால் பண்ண மறந்துட்டேன்” என்றபடி நிஷாந்த் விசாரித்தபடி இறங்கினான்.

“அதான் காலையில நாலுமணிக்கே அலாரம் மாதிரி எழுப்பிட்டியே. அப்புறம் என்ன? அடிக்கடி போன் பண்ணினால்தான் எங்களை மதிச்சதா அர்த்தம் இல்ல நிஷாந்த்” என்றார் சிவகாமி.

பின்னால் நின்றிருந்த வேனிலிருந்து அடுத்தடுத்த ஆள்கள் இறங்க திருமொழிக்காகக் காத்திருந்த கதிரின் விழிகள் வேன் கார் இரண்டையும் பார்வையிட... காரிலிருந்து இறங்கியவளைக் கண்டவன் கண்கள் அப்படியே நின்று கவி பாடியதோ!

“திருமா நில்லு” என்ற காமாட்சி மடிப்பு விழுந்திருந்த புடவையைச் சரிசெய்து, “இப்ப போ” என்றார்.

கண்கள் சிமிட்டவில்லை கதிருக்கு. கதிரானவன் அம்மங்கையின் மேல் தன் கதிர்வீச்சினை எல்லையில்லாமல் அள்ளித்தெளிக்க... மங்கையவள் அறியவில்லையோ அவ்வீச்சினை! ‘சின்னதாக திரும்பிப் பார்த்தால் போதுமடி பெண்ணே!’ என்ற அவனின் ஏக்கங்கள் கூட அவளிடம் நிராகரிக்கப்பட்டதோ! பாவம்தான் இளங்கதிரானவனும்.

மகனின் பார்வை சென்ற இடம் பார்த்த சிவகாமி திருவைக் காணவும் நேரே அவளிடம் சென்று, “ரொம்ப அழகாயிருக்க மொழி. வீட்டுக்குப் போனதும் சுத்திப்போடச் சொல்லு” எனும்போது... பத்மினியின் உறவுக்காரப் பெண் ஒருவர், “யார் இந்தப் பொண்ணு பத்மினி? பார்க்கிறவங்க பொண்ணு இவள்தான்னு நினைச்சிடப் போறாங்க” என கேலி செய்தார்.

“அக்கா பொண்ணுதான்மா. என் பையனோட தங்கச்சியும் பொண்ணு மாதிரிதான் இருக்கணும். அதான்...”

“எந்த அக்கா?”

“உனக்குத் தெரியாது. கல்யாணம்லாம் முடிஞ்சதும் சொல்றேன். பொண்ணு வீட்டுக்காரங்க வர்றாங்க பாரு. வா போகலாம்” என்று முன்னே நடந்தார்.

‘ஷப்பா! இதுக்குத்தான் நான் அவ்வளவு பிடிவாதம் பிடிச்சேன். இவங்க நேர்ல கேட்டுட்டாங்க. எத்தனை பேர் மனசுக்குள்ள டிசைன் டிசைனா கேள்வி கேட்டுட்டிருக்காங்களோ., ஹ்ம்... எல்லாம் இந்தத் தம்பிப்பையனுக்காகப் பொறுத்துக்க வேண்டியிருக்கு’ என்றாள் மனதினுள்.

பிரஷாந்த் அருகில் வந்த பெண்மணி அவனைத் தனியாக அழைத்து வந்து, “யார்டா இந்தப் பொண்ணு? பார்க்க லட்சணமா இருக்கா? பொண்ணு நம்மாளுகளா?” என்றார்.

“ஏன் கேட்குறீங்க?”

“உன் மச்சான்காரனுக்குப் பார்க்கலாம்னுதான்” என்றதில் “என்னது..?” என ஒரே நேரத்தில் கதிரும் பிரஷாந்தும் அதிர...

“என்ன அத்தை பேசுறீங்க. உங்க பையனுக்கு என் அக்காவா? அவ ராணி மாதிரி வாழ வேண்டியவள். உங்க பையன் எப்படின்னு ஊருக்கேத் தெரியும்” என்று கோபமாக கேட்டான்.

“கால்கட்டுப் போட்டாத் திருந்திருவான்டா. எத்தனை பசங்க கல்யாணமானதும் பொண்டாட்டி சொல் கேட்டு அடக்கமா குடும்பம் நடத்துறாங்க.”

“உங்க பையன் திருந்த என் அக்கா வேணுமா? அதுக்கு வேற ஆளைப்பாருங்க. அவனைத் திருத்துறதுக்காக அவள் பிறக்கல புரியுதா?” என அதட்டல் போட்டான்.

“என்னவோ உன்னோட ஒட்டிப்பிறந்தவள் மாதிரி கத்துற. அக்கான்னு கூப்பிட்டா நிஜ அக்கா ஆகிருவாளா?”

“அத்...” பிரஷாந்த் திட்ட வாயைத் திறக்க...

அதற்குள் கதிர் இடைபுகுந்து “பொய்யோ, நிஜமோ அக்கான்னா அக்காதான். அதை யாராலும் மாத்த முடியாது. அவளோட முகத்தைப் பார்த்துமா உங்க குடிகார மகனுக்குக் கேட்கத் தோணுது. மனசாட்சியே இல்லையா உங்களுக்கெல்லாம். நிஷாந்த் ரிலேடிவ்னு பார்க்கிறேன். இல்ல நடக்கிறதே வேற. இன்னொரு டைம் நீங்கன்னு இல்ல... வேற யாராவது அவளைப் பேசுங்க அப்புறம் இருக்கு” என்று சத்தமில்லாமல் பல்லைக்கடித்தபடி தன் முழுக்கோபத்தையும் முகத்தில் காட்டினான்.

கதிரைத்தான் பார்த்திருந்தான் பிரஷாந்த். வாயில் கைவைக்காதது மட்டுமே குறை. திறந்த வாய் மூடவில்லை அவன். ‘இவர் ஏன் அக்காவிற்காக இவ்வளவு வக்காலத்து வாங்குகிறார்?’ என்ற யோசனையுடன் கதிரைப் பார்க்க...

“கொஞ்சமாவது அறிவிருக்காடா? கல்யாண வீட்டுக்கு வரும்போது அவளைப் பொண்ணு மாதிரிக் கூட்டிட்டு வந்தா, கண்டவங்களும் பெண் கேட்கத்தான் செய்வாங்க. இனி ஒருத்தர் வந்த பொண்ணு மாப்பிள்ளைன்னு வரட்டும் உன்னைக் கொன்னுருவேன்டா” என மிரட்டியவனும், அவளை இக்கோலத்தில் ரசித்ததை மறந்திருந்தான்.

“நா..நான் என்ன பண்ணினேன். அதுவுமில்லாம அவள் என்னோட அக்கா. எனக்கு என் அக்காமேல அக்கறை அதிகமாகவேயிருக்கு. நீங்க ஏன் இவ்வளவு எமோஷனலாகுறீங்க?”

“அவ உனக்கு அக்கா மட்டும்தான் ஓகே. அதையும் தாண்டிய உறவு எனக்கும் அவளுக்கும் இருக்கு. புரிஞ்சதா?”

“உறவா?”

பிரஷாந்தின் அதிர்வில் தான் செய்த செயல் புரிந்த இளங்கதிர் அதைச் சமாளிக்கும் விதமாக, “உன் அக்காவைக் கட்டிக்கிட்டா நான் உனக்கு என்ன உறவுன்னு யோசி” என்று கன்னத்தில் தட்டி சின்னப்புன்னகையுடன் நகர்ந்து தகப்பனருகில் நின்றான்.

அர்த்தம் உணர்ந்த பிரஷாந்தோ பிரமை பிடித்தாற்போல் நின்றான்.

“யார் அந்தப் பொண்ணு கதிர்? உன் அம்மா இந்தக் குழை குழையுறா?”

“நிஷாந்த் தங்கச்சிப்பா. அவளைப் பார்த்ததிலிருந்து அம்மாவுக்கு அவள்னா ரொம்ப இஷ்டம்” என்று திருமொழியைக் காண...

மகனை யோசனையாய் பார்த்தவர் அவன் கண்போன இடம் உணர்ந்து அதிர்ந்து, “இஷ்டம் உங்கம்மாவுக்கு மட்டும் மாதிரி தெரியலையே?” என சந்தேகமாக கேட்க...

“அவளை எல்லாருக்கும் பிடிக்கும்பா” என்றான் பார்வையை விலக்காமலே.

“எனக்கென்னவோ உனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருக்கிற மாதிரி தெரியுதே?” என்றார் யோசனையாக.

“ஆமாம்பா” என்றான் எதையும் மறைக்காது.

ஆனால் அவரிடம் மறுப்பிருந்தது. தமிழ்நாட்டுப் பெண்ணே தன் மகனுக்கு வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தவருக்கு,, அவனின் இந்த நிலை கலக்கத்தை உண்டு பண்ணியது. மகன் கேட்டது எதுவானாலும் செய்பவர் குரு. இப்பொழுது மகன் ஆசைப்படும் பெண்ணைக் கட்டிவைக்க ஆசைதான். ஆனால், பெண் தமிழ்நாடாச்சே!

“கதிர் எதுக்கும் பொண்ணு விஷயத்துல ஆழமா இறங்காத. நான் உனக்கு தெரிஞ்சவர் பெண்ணைப் பார்த்து வச்சிருக்கேன்” என்றார் அமைதியாகவே.

“அதனால என்னப்பா வேண்டாம் சொல்லிருங்க.” பார்வை மட்டும் அவளிடமே! தகப்பன் என்ன கேள்வி கேட்டார் என்று மறுமுறை அவனிடம் கேட்டால் பதிலில்லை என்பான்.

பிரஷாந்த் முன்பைவிட தீவிரமாகக் கதிரைக் கண்காணித்தான். அவன் நல்லவன் என்று அண்ணன் சொல்லியிருந்த போதும், இன்னும் விசாரிக்க வேண்டுமென்று தோன்றியது.

அனைவரும் உள்ளே செல்கையில் அவளின் அந்த இளா அத்தானாக தான் இருந்திருக்கக்கூடாதா என்றுதான் தோன்றியது கதிருக்கு. அவள் தனக்குக் கிடைப்பாளா? மாட்டாளா? என்ற பட்டிமன்றமே மனதினுள் சுழல, அவர்கள் பின்னாடியே சென்றான் என்றால் அவளோ மணப்பெண் சரண்யாவுடன் சேர்ந்து அரட்டையடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

கிட்டத்தட்ட முகூர்த்த நேரம் நெருங்கும் பொழுது கல்யாண வீடே சற்று பரபரப்பானது. நிஷாந்த் அப்பா ரத்தினமும், தாய் பத்மினியும் வாசல்வரை வந்து அவர்களை வரவேற்று மணமேடையில் முன்னிருந்த வரிசையில் அமரவைத்தார்கள்.

“ஹேய் அண்ணி. அதென்ன உங்களுக்கும் அண்ணனுக்கும் பெயர் ஒற்றுமை அருமையா அமைஞ்சிருக்கு.”

“நீ எங்களைக் கேலி செய்யலையே மொழி?”

“சே..சே.. உங்களது பையன் பெயர். அண்ணாவோடது பொண்ணு பெயர். வாட் எ காம்பினேஷன்யா” என்றவள் செய்தது அத்தனையும் கேலியே.

“ஓய்! நான் சரண்யா. அவங்க நிஷாந்த் ஓகே.”

“அதைத்தான் நாங்களும் சரண்-நிஷான்னு சொன்னோம்.”

“வாய் உனக்குக் கொஞ்சம் அதிகம்தான். அப்புறம் நேத்து எதோ சாகசம்லாம் பண்ணுனியாமே?”

“ஹலோ ஜஸ்ட் மயக்கம்தான். என்னவோ பெரிய லெவல் நோயாளி மாதிரி சொல்றீங்க?”

“பாவம்தான் அவர். சிங்கிள் மேனா உன்னை எப்படி உள்ளே தூக்கிட்டுப் போனாரோ?”

“என்னைத் தூக்கிட்டு வந்தாங்களா? யார் அது?”

“வேற யாரு உன் அண்ணாவோட பாஸ்தான்.”

“அச்சோ! நிஜமாவா?”

“இதுவரை உனக்குத் தெரியாதா?” என்றாள் புன்னகையை மறைத்தபடி.

“நிஜமா தெரியாது அண்ணி. இதைப்பற்றி யோசிக்கக்கூட இல்லை. ஒரு ஆண் என்னைத்தொட்டு.. சே.. அப்படியென்ன மயக்கம் எனக்கு” என தன்னையே திட்ட...

தப்பு செய்தாற்போல் தவித்தவளிடம், “மொழி இதெல்லாம் நம்மையறியாமல் நடக்கிறது. யாரையும் குறை சொல்லவும் முடியாது. சொல்லவும் கூடாது.”

“என்ன சமாதானப்படுத்தினாலும், ஒரு ஆண்.. ப்ச்.. என்னைத் தொடுற உரிமை என் புருஷனுக்கு மட்டும்தான் அண்ணி இருக்கணும்” என்றாள் தீவிரமாக.

“அதனாலென்ன அவரையே மேரேஜ் பண்ணிக்கோ. ரொம்ப நல்லவர்னு எங்க எம்.டி சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.”

“யார் எவ்வளவு நல்லவங்களாயிருந்தாலும் எனக்கு என் இளா அத்தான் மட்டும்தான் புருஷனாக முடியும். மத்த எந்த ஆணுக்கும் என் வாழ்க்கையில் இடமில்லை.”

சரண்யா எதோ கேட்கவர, “அண்ணி கல்யாணப் பொண்ணா அழகா அமைதியாயிருங்க. கண்டதையும் பேசுற நேரமில்லை இது. இதோ வர்றேன்” என்று வெளியே மணமேடையருகே வர, அதேநேரம் கதிரும் அவள் வருவதைக் கண்டு அவளை நோக்கி வர... அடுத்ததாக ‘அக்கா’ என்றபடி பிரஷாந்த் வந்தான்.

காமாட்சியைப் பார்த்து குருமூர்த்தி அதிர்ந்தார் என்றால், முதல் வரிசையில் அமர்ந்திருந்த குடும்பத்தைப் பார்த்து உச்சபட்ச அதிர்ச்சியில் இருந்தார்கள் இளங்கதிர், திருமொழி. பிரஷாந்த் மூவரும்!
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top