• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
5



IMG-20241107-WA0000 (1).jpg
"பொண்ணு இங்க வந்த பின்னாடி, உண்மை தெரிந்து பிரச்சனை எதுவும் பண்ணிராதே?” என்று அண்ணனிடம் கவலையாகக் கேட்டார் குலசேகரன்.

“இன்னுமாடா உன் சந்தேகம் தீரலை? நம்ம பையன் போட்டோவை மட்டும் காண்பி. பொண்ணு வேண்டாம் சொல்ல வாய்ப்பே கிடையாது. முதல்ல எதிர்பாலின அழகு மட்டும்தான் தெரியும். மற்றதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதான் புரியும். பையனைக் கல்யாணத்தோடக் காண்பிச்சிக்கலாம். இல்ல பார்க்கணும்னு அடம்பிடிச்சா, கோவில் எங்கயாவது வச்சி காண்பிக்கலாம். அந்தளவு போக வாய்ப்பில்லை” என்றார் மலையரசனைப் புரிந்தவராய்.

“அப்ப சீக்கிரமே பேசுண்ணா” என்று அவசரப்படுத்தினார் குலசேகரன்.

அன்றைக்கே வேறொரு நபர் மூலம் மறுநாள் பெண்பார்க்க வருவதாகத் தகவல் அனுப்பி, அதை வீட்டிலும் சொல்ல, ஐஸ்வர்யாவிற்கும் சுவீகரனுக்கும் அதிர்ச்சிதான்.

“அப்பா அவனுக்கு எப்படி? இது தப்பில்லையா? எப்படியும் நிஜம் சொல்லியிருக்க மாட்டீங்க. வர்ற பொண்ணுக்கு உண்மை தெரிந்தால் என்னாகும்?” என்றான் கோபத்தில்.

“பிரச்சனை ஆகுற மாதிரி இடம் பார்ப்பேனா? இப்பக்கூட ஜாதகம் பார்த்ததில் இந்த வரனுக்கு இவள்தான்னு ஜோசியர் சொன்னதால் இந்த ஏற்பாடு. எல்லாம் சரியா நடக்கும். நாளைக்குப் பட்டுப்புடவை நகைன்னு கொஞ்சம் அதிகமாகவே போட்டுட்டுக் கிளம்புங்க” என்றதும் ஐஸ்வர்யா உள்ளே சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து வந்த கணவனை கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒரு வழி செய்துவிட்டாள்.

“தம்பியோட இந்த ப்ராப்ளம் இப்ப இரண்டு வருடமாதான ஐஸ். கல்யாணமானா சரியாகும்னு அப்பா அபிப்ராயப்படுறார். நிறைய வைத்தியம் பார்த்தாச்சி. அதுபோல இதையும் செய்து பார்க்கலாம்.” மனைவியின் முறைப்பில், “உன்னோட நியாயம் புரியுது ஐஸ். கல்யாணம் முடிஞ்சா சரியாகும்னு ஜாதகத்துல இருக்குதாம். அவங்க நம்பிக்கையை ஏன் கெடுக்கணும்?”

“எனக்கு அந்த நம்பிக்கைலாம் கிடையாதுங்க. சப்போஸ் க்யூர் ஆகிருச்சின்னா அந்தப் பொண்ணு நிலை?”

“அவள் நிலைக்கென்ன ஐஸ்? அப்பவும் அவள் நம்ம வீட்டு சின்ன மருமகள்” என்றான் யதார்த்தம் புரியாது.

“உங்களுக்குப் புரியலையா? இதே உங்க தம்பி நல்லாயிருந்தா இந்த மாதிரி கஷ்டப்படுற குடும்பத்திலிருந்து பொண்ணு எடுப்பாங்களா? ஏன் யோசிக்கக்கூட மாட்டாங்க. அப்படியிருக்கிறப்ப, அவருக்கு சரியாகிருச்சின்னதும் அவளை வீட்டைவிட்டு அனுப்பினா?”

“சேச்சே வீட்டுக்கு வந்த மருமகளை அப்படிலாம் செய்யமாட்டாங்க. நீ ரொம்ப கற்பனை பண்ற ஐஸ். அப்படியேனாலும் வசீக்கு சரியாகிருச்சின்னா அவன் மனைவியை அவன் பார்த்துக்கப்போறான். நல்லதையே நினைக்கலாமே! நம்ம வசீக்காக!” என்றான் கெஞ்சலும் கொஞ்சலுமாய்.

“ம்.. உங்களுக்காக ஏத்துக்குறேன். ஏற்கனவே வீட்டுல நடக்குற கூத்து தாங்கலை. எதாவதுன்னா...” என எச்சரித்துவிட்டே நகர்ந்தாள்.

“பூரணி நாளையிலிருந்து வேலைக்குப் போகவேண்டாம்” என திடீர் அறிவிப்பு செய்த தகப்பனை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள்.

“ஏன் அப்படிச் சொல்றீங்க? வேற எங்கேயாவது வேலை ஏற்பாடு செய்திருக்கீங்களா?” என்றார் மைதிலி.

“வேற வேலை இல்லை மைதிலி. அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு. ஒரு வருஷம் முன்ன நம்ம ஜனனியை பொண்ணு கேட்டு வந்திருந்தாங்களே ஒரு டிரைவர் குடும்பம். அவங்களோட தனசேகரன் ஐயாவும் வந்திருந்தாரே.. ஞாபகமிருக்கா?”

“ம்.. அட ஆமா. அந்தப் பையன்கூட யாரையோ கல்யாணம் செய்துட்டு வந்துட்டான்னு நிறுத்தினாங்கதான?” தன் ஞாபகசக்தியை மைதிலி காட்ட,

“ஆமா அதேதான். அவங்க சார்புல வந்த தனசேகரன் ஐயாவோட தம்பி குலசேகரனோட இரண்டாவது பையனுக்குக் கேட்கிறாங்க.”

“பொய் சொல்லாதீங்க? அவ்வளவு பெரிய இடம் எப்படி நம்மைத்தேடி வருவாங்க? எதாவது கனவு கண்டுட்டு உளர்றீங்க நினைக்கிறேன்” என்றார் கேலியாக.

“என்ன இப்படிச் சொல்லிட்ட? எல்லாம் நான் எடுத்து வச்சிருக்கிற நல்ல பெயர் மைதிலி. அந்தப் பையன் செய்தது அவருக்குக் குற்றவுணர்ச்சியா இருந்திருக்கும். அதான் மனுஷர் தம்பி பையனுக்குக் கேட்டுவிட்டிருக்கார். இப்பேர்ப்பட்ட இடம் வரும்போது நம்ம பொண்ணு எதுக்கு வேலைக்குப் போகணும்? அதான் வேலையை விடச்சொன்னேன்.”

“அவங்க வசதிக்கு நம்மளால எப்படி நகை போட முடியும்னு யோசிச்சீங்களா? நம்ம தகுதிக்கு மீறினது வேண்டாம்” என்ற தாயை ஆச்சர்யமாகப் பார்த்தாள் பரிபூரணி.

“இதை நான் யோசிச்சிருக்க மாட்டேனா? இல்ல அவங்கதான் யோசிச்சிருக்க மாட்டாங்களா? பொண்ணு மட்டும் போதுமாம். நகை அவங்களே போடுறோம்னு சொல்லிட்டாங்க” என்றவர் குரலில் அப்படியொரு துள்ளல். அதைக்கேட்ட மைதிலிக்கும் சந்தோஷத் துள்ளலே!

சந்தோஷப்பட வேண்டிய மகளோ யோசனையுடன், “அப்பா எனக்கென்னவோ இது தப்பாத் தெரியுது. அவ்வளவு வசதியானவங்க இங்க சம்பந்தம் பேசுற அளவுக்கு நான் அழகும் கிடையாது. பாப்புலரான பெரிய வேலையிலும் கிடையாது. எதை செய்யுறதா இருந்தாலும் ஒண்ணுக்குப் பலமுறை யோசிச்சி விசாரிச்சிக்கோங்க” என்றாள் பரிபூரணி.

“இதைக் கேள்விப்பட்டதுமே எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன். பையன் நிறைய படிச்சிருக்கான். அவனுக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது. தனசேகரன் குடும்பத்தோட குலசேகரன் குடும்பம் நல்லவங்க. நம்ம ஏரியா கவுன்சிலர்ன்ற ஒண்ணு போதாதா. அப்படியே எதுனாலும் அவங்க அரசியல் பாதிக்கப்படாதா? அதையெல்லாம் பார்க்காமலா இருப்பாங்க? அவங்களும் நிறைய யோசிச்சிதான் சொல்லி விட்டுருப்பாங்க” என்று மகளை சமாதானப்படுத்தினார்.

“என்னால இன்னும் நம்பமுடியலைப்பா.”

“அட நம்புமா. காலையில பத்து மணிக்கெல்லாம் வந்திருவாங்களாம். நீ தயாராயிரு” என்றார்.

“சரிப்பா. அவங்க வந்துட்டுப் போன பின்ன வேலையை விடுறதைப் பற்றி யோசிக்கிறேன். சண்மு வேற நேத்துதான் ஊருக்குப் போனா. நானும் லீவ் எடுத்தா சரிவராது. நான் அவங்க வந்து போனதும் வேலைக்குக் கிளம்புறேன்” என்று அழுத்தமாகச் சொல்லி தன்னறைக்குள் வந்தவளுக்கு, தனக்குத் திருமணம் என்றதும் ஏதோ ஒருவித படபடப்பு. தன் வீட்டு சூழ்நிலையால் திருமணம் என்பதை இதுவரை யோசித்ததேயில்லை. எதிர்காலம் குறித்தோ, வரப்போகும் கணவன் குறித்தோ எந்தவொரு கனவும் கண்டதில்லை. வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தவள்தான். ஏனோ இன்று திருமணம் பற்றிய பேச்சு வந்ததும் ‘இது சரிவருமா?’ என்ற தவிப்பு மனதினுள்.

மறுநாள் சொன்ன நேரத்திற்கு மூன்று கார்களில் வந்திறங்கியவர்களைக் கண்டு மைதிலி பேச மறந்து நிற்க, மலையரசன் அவர்களை வரவேற்று, வாங்கி வைத்திருந்த வாடகைச் சேரில் அமரவைக்க, மாப்பிள்ளை வீட்டில் எடுத்து வந்த சீர்வரிசைத் தட்டுகள் அந்தச் சிறிய வீட்டை நிறைத்திருந்தது.

மாப்பிள்ளை வீட்டினரின் புடவை நகையையும், சீர் தட்டுகளையும் பார்த்த ஜனனிக்கு பொறாமை கொழுந்துவிட்டு எரிந்ததென்னவோ உண்மை.

ஐஸ்வர்யா தன் ஐந்து வயது மகனுடன் பூரணியைப் பார்க்க அவளின் அறைக்குள் வர, அவளை வரவேற்று உட்கார வைத்து பையனிடம் சாக்லேட் எடுத்துக் கொடுக்க, ஆனந்தியும் மருமகளைக் காண வந்துவிட்டார்.

அவர்கள் ஒவ்வொருவரும் வந்த தோரணையைக் கண்டு மிரண்ட பார்வை பார்த்த பூரணியைக் கண்ட ஆனந்திக்கு மனம் திருப்தியாக, திடீர்ப் புன்னகையை வரவழைத்து, “எங்க வசதி பார்த்து பயந்திராதடா. நீ எங்க வீட்டுல மகாராணியா வாழலாம். உங்க அம்மா போல பார்த்துக்குறேன்...”

‘எங்க அம்மா மாதிரியே மாமியாருமா? ஹாஹா விளங்கிரும்’ என்று பூரணியின் மனசாட்சி பதில் கொடுக்க...

“இதோ என் பெரிய மருமகள்கிட்ட நம்ம வீட்டைப்பற்றிக் கேட்டுப்பாரு” என்று ஆனந்தி சொல்லியதில் ‘நம்ம வீடு’ என்றதில் சுவாரசியம் எழுந்து அவர் பேச்சைக் கவனிக்க, ஐஸ்வர்யா பாடுதான் திண்டாட்டமானது.

‘தாய்போல பார்த்துக்குறாங்களா? ஆத்தாடி இப்படி அசராம ஆட்டோபாம் போட்டா நான் என்ன சொல்றது?’ முகத்தைப் புன்னகையுடன் வைக்கத் திணறியவள் தன்னைச் சமாளித்து, “அத்தை எதைச் சொன்னாலும் செய்தாலும் நல்லதுக்காகதான் இருக்கும் பூரணி. நீ தைரியமா வா” என்றாள் புகுந்த வீட்டை விட்டுக்கொடுக்காது.

ஆனந்தியின் நம்ம வீடு என்பது மனதிற்கு இதம் தர புன்னகையுடன், “உங்ககிட்டப் பேசுனதுல கொஞ்சம் தைரியம் வந்திருக்கு” என்றாள் இருவருக்கும் பொதுவாக.

அவள் தலையில் கைவைத்து, “நல்லாயிருக்கணும் பூரணி. நான் வெளிய பார்க்கிறேன்” என்று ஐஸ்வர்யா செல்ல...

“பூரணி இந்தாம்மா என் மகன் போட்டோ. வேலை விஷயமா வெளியூர் போயிருக்கிறதால வரமுடியலை. இப்போதைக்கு இதைப் பார்த்துக்கோ. பிடிச்சா சரின்னு சொல்லு. இல்லைனாலும் சொல்லிரு உன் விருப்பம்தான் எனக்கு முக்கியம்” என்று தேனொழுகப் பேசியவர் மனதோ, ‘என் பையன் நல்லா இருந்திருந்தா இந்த மாதிரி ஒரு இடத்துல பெண் எடுத்திருப்பேனா. ஹ்ம்.. யோசிச்சிருக்கக்கூட மாட்டேன். என் பையன் இருந்த இருப்புக்கும் இவளுக்கும்... எல்லாம் தலையெழுத்து’ என்றெண்ணி அவள் முன் புன்னகை முகமாக இருந்தார்.

“எனக்கு உங்க எல்லாரையும் பிடிச்சிருக்கு அத்தை. அப்ப உங்க பையனும் உங்களைப் போலதான் இருப்பாங்க. அ...”

“வேற எப்படியிருப்பான். தாய் சொல் தட்டாத பிள்ளை அவன். உன்னையும் நல்லா பார்த்துப்பான்.” பெருமையாகச் சொல்லியவர், “முதல்ல போட்டோ பார்த்துட்டுப் பிடிச்சிருந்தா மணமகளா வெளில வா” என்று வெளியே சென்றார் ஆனந்தி.

கவருக்குள்ளிருக்கும் புகைப்படத்தை எடுக்கையிலேயே “எனக்குப் பிடிக்கணும் முருகா!” என்ற வேண்டுதலுடன் எடுத்தவள் ‘என்னதிது?’ என்று குழம்பிப்போனாள். பின், நன்றாகப் பார்க்க ஷ_ அணிந்த காலும், ஜீன்ஸ் பேண்டும் தெரிந்தது. “சே.. லூசு” என தன் தலையில் தானே தட்டி திரும்பியிருந்த புகைப்படத்தை நேராக வைத்துப் பார்த்தவள் கண்கள் பார்த்தது பார்த்தபடியே இருந்தது.

பளிச்சென்ற முகத்தில் மின்னும் புன்னகை. சிரிக்கும் அவன் விழிகள் தன்னைத் துளைப்பது போலொரு பிரமை. சில நொடி கண்மூடி அவனைத் தன்னுள் பதித்து கண்திறந்து பார்த்தவளை, ‘ஹாய்’ என்ற வசீகரனின் கையசைப்பு வரவேற்றதோ! வியப்பில் கண்சிமிட்டிப் பார்க்க புகைப்படத்தில் எந்த எந்தவொரு மாற்றமில்லை. “அச்சோ! போட்டோவுக்கே இப்படியா மயங்குவ” என்று தன்னால் புன்னகை எழ, “எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு என்னைப் பிடிக்குமா? ஆமா உங்க பெயர் என்ன? இப்படிப் பார்த்தே வசீகரிக்குறீங்க. ஒருவேளை உங்க பெயர் வ...”

“ஹை சித்தப்பா போட்டோ. உங்ககிட்ட எப்படி வந்தது? யார் கொடுத்தாங்க? நீங்கதான் எங்க சித்தப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா? அப்ப நீங்களும் என்னோட விளையாடுவீங்களா?” கேள்விகளாய் அடுக்கினான் சுவீகரன் மகன் கிருஷ்கரன்.

“நான் விளையாடுறது இருக்கட்டும். உன் பெயர் என்ன?”

“கிருஷ்.. கிருஷ்கரன்!”

“கிருஷ்! பெயர் நல்லாயிருக்கு. உன் சித்தப்பா பெயர் என்ன?” என்றவள் குரலில் அத்தனை ஆர்வம்.

“வசீ சித்தப்பா.”

“வசீ! ஃபுல் நேம் சொல்லுடா செல்லம்” என்றாள் கெஞ்சலாக.

“மை சித்தப்பா நேம் இஸ் வசீகரன்” என்று வெளியே ஓடிவிட்டான்.

‘வசீகரன்! என்னை வசியம் செய்யுறப்பவே நினைச்சேன். நீங்க வசீகரனாதான் இருப்பீங்கன்னு. ஆளுக்கேற்ற பெயர்தான் வச்சிருக்காங்க’ என்றவள் பார்வையில் ஒருவித மயக்கம்!


அழகு என்றும் ஆபத்தென்று பெரியோர்கள் சொல்வது உண்மைதானென்றுப் புரியவில்லையே பெண்ணவளுக்கு.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“வசீகரன்! எனக்கு இப்பப் பயமாயிருக்கு. என்னன்னு கேட்கறீங்களா? உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னா என்ன செய்யுறது? என்னைப் பிடிக்கும்னு உங்க அம்மாகிட்டச் சொல்லிருங்க வசீகரா! என் செல்லம்ல. கல்யாணத்துக்குப் பிறகு நானும் உங்க அளவு அழகாகப் பார்க்கிறேன். அது முடியுமா தெரியலை. இருந்தாலும் முயற்சிக்கிறேன்” என்று போட்டோவைக் கொஞ்சிக் கொண்டிருக்க...

“பூரணி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கூப்பிடுறாங்க வெளில வா” என்ற ஜனனியின் குரலில், கையிலிருந்த புகைப்படத்தை வேகமாக அவளின் துணிகளுக்கு நடுவில் வைத்து, தன் முகத்திலுள்ள வியர்வையை அங்கிருந்த துண்டினால் துடைத்து கண்ணாடியில் சரிபார்த்து வெளியே வர, ஜனனி தங்கையின் கையில் காஃபி இருக்கும் தட்டைக் கொடுத்து மாப்பிள்ளை வீட்டினருக்கு கொடுக்கச் சொன்னாள்.

“உங்க பொண்ணை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு மலையரசன். வீட்டுல போய் சொல்றேன்றது வேலைக்காகாது. உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க.. எல்லா ஏற்பாட்டையும் இப்பவே ஆரம்பிச்சிரலாம்” என்றார் குலசேகரன்.

“எங்களுக்கு பரிபூரண சம்மதம்ங்க. தனசேகரன் ஐயாவை முன்னவே தெரியும். ரொம்ப நம்பிக்கையானவர். அவர் தம்பி வீடுன்ற ஒண்ணு போதாதா” என்று புன்னகைத்தார்.

“அப்ப தட்டை மாத்திக்கலாமே” என்றதும் வெற்றிலை பாக்குத் தட்டுடன் ஐம்பதாயிரம் பணக்கட்டை வைத்துக் கொடுத்ததோடு அதிலிருந்த பதினைந்து பவுன் ஆரத்தை எடுத்து யாரும் எதிர்பாராதபொழுது பூரணியின் கழுத்தில் போட்டுவிட்டு, “என் மருமகளுக்கு ஐம்பது பவுன் நகை போட்டுதான் கூட்டிட்டுப் போகப்போறேன்” என்றதும் அனைவருக்கும் அத்தனை அதிர்ச்சி.

“என்ன அப்படியே நிற்குறீங்க? நிஜமாகவே என் மருமகளுக்கு நகை போட்டுதான் கூட்டிட்டுப் போகப்போறோம்” என்றார் சிரித்தபடி.

அவர்களின் இந்த அவசரம் ஏனோ பூரணிக்கு சந்தேகத்தைக் கொடுத்தாலும், வசீகரன் என்ற பெயரில் அனைத்தும் அடிவாங்கியது.

ஒருவேளை சண்முகி இருந்திருந்தால் அனைத்தும் மாறியிருக்குமோ! தோழிக்கு கனவை மீறிய யதார்த்தத்தைப் புரியவைத்திருப்பாளோ! விதியும் சற்று வினையம் பிடித்ததுதான் போலும்!

“பையன் ஜாதகத்துல அடுத்த பத்து நாளைக்குள்ள கிரகங்கள் மாறுது. அதுக்குள்ள கல்யாணம் செய்யணும்னு ஜோசியர் சொல்லியிருக்கார். இல்லைனா முப்பத்தைந்து வயதுக்கு மேலதான் ஆகும்னு சொல்றாங்க. அண்ணன்தான் உங்களைப் பற்றிச் சொன்னார். அண்ணன் சொன்னா சரியாதான் இருக்கும் அப்படித்தான் நமக்குப் பெரியவங்க சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்காங்க” என்றார் குலசேகரன்.

தனசேகரன் பெருமையாய் மீசையை வருட, மலையரசனுக்கு உச்சி குளிர்ந்து போனது.

“நீங்க இவ்வளவு சொல்றப்ப நாங்க மறுக்கலைங்க. பத்து நாளைக்குள்ள நல்ல முகூர்த்தமா பார்த்து முடிச்சிரலாம்.”

“இன்னைக்கு மதியத்துக்குள்ள நேரம் குறிச்சிட்டு போன் பண்றோம் மலையரசன். சாயங்காலம் முகூர்த்தப்புடவை எடுத்துட்டு வந்திரலாம். மண்டபம்னு தனியா பார்க்கத் தேவையில்லை. நம்ம மண்டபமே இருக்கு. செலவுன்னு ஒரு பைசா நீங்க செலவழிக்கத் தேவையில்லை. பொண்ணைக் கூட்டிட்டு வர்றது மட்டும்தான் உங்களோட வேலை. தேதி முடிவு பண்ணினதும் நாளைக்கே பத்திரிக்கை கையில் கிடைக்கும்படி செய்றேன். உங்க சொந்த பந்தங்களுக்கும் வைங்க. நாலு பேரு வாழ்த்தினால்தானே நம்ம புள்ளைங்க வாழும்” என்றார் குலசேகரன்.

ஏனோ அவ்விடத்தில் இருக்க ஐஸ்வர்யாவால் முடியவில்லை. அவர்களின் போலியான நடிப்பிற்கு ஒரு பெண் பலியாவதைக் கண்கொண்டு பார்க்க முடியாமல் போன் பேசுவதுபோல் வெளியே சென்றுவிட்டாள்.

‘ஷப்பா! என்ன நடிப்புடா சாமி. நாம அங்கயிருந்தோம் பைத்தியம் பிடிப்பது கன்பார்ம். இப்படிப்பட்ட பையனை வச்சிக்கிட்டு எந்த தைரியத்துல கிராண்டா ரெடி செய்றாங்க. பணம் பாதாளம் வரை பாயும்ன்றது இதுதானோ! நம்மளும்தான் வசதியா பிறந்தோம். இப்படி ஒரு குறுக்கு புத்தி நம்ம வீட்டுல யாருக்கும் இல்லையே’ என்றெண்ணி பூரணிக்காக வருந்தினாள்.

“ஓய் ஐஸ்! என்ன தனியா நின்னுட்டிருக்க?” மனைவி வெளியே செல்வதைப் பார்த்திருந்த சுவீகரன் பின்னாலேயே வந்திருந்தான்.

“ம்.. உங்களை இப்படித் தனியா நிற்க வைக்கலாமா யோசிச்சிட்டிருக்கேன்” என்றாள் கோபமாக.

“ஏன்டா? ஏன் இந்த கோபம்?” என்றான் அலறலாய்.

“உங்க குடும்பம் பண்ற கூத்தை என்னால சகிச்சிக்க முடியலை. பேசாம பையனைக் கூட்டிட்டு அம்மா வீட்டுக்குக் கிளம்பிரலாமா பார்க்கிறேன்.”

“ப்ச்.. ஐஸ் நேத்துதான அவ்வளவு சொன்னேன். திரும்பவும் ஏன்டா?”

“பணக்கார மருமகளா நடிக்கிறது பிடிக்கலைங்க. முன்ன உங்க அப்பா அம்மா இப்படியில்லை. இப்ப உள்ள ஒண்ணு வச்சிக்கிட்டு வெளில ஒண்ணு பேசுறாங்க.. இல்லையில்லை நடிக்குறாங்க. உங்க பெரியப்பா பேச்சைக் கேட்டு இதோ இந்தப் பொண்ணை... எனக்கு இதெல்லாம் பிடிக்கலை. ரொம்ப நல்ல பொண்ணுங்க அவள். எனக்கு எதிலும் நேர்மையா இருக்கணும். சொந்த வீட்டுல நடிச்சிட்டிருந்தா அன்பு பாசம்ன்ற பந்தம் இருக்காது. ஐ ஹேட் தேர் ஆட்டிடியூட்” என்றாள் வெறுப்பாக.

“ஐஸ்மா! என்னதிது குழந்தை மாதிரி. நான் சரியா இருக்கிறேனா அதை மட்டும் பார். பழைய பழமொழிதான் இருந்தாலும் சொல்றேன். எல்லா விரலும் ஒரே மாதிரி இருக்குறதில்லை. குடும்பம்னா முன்னப்பின்னதான் இருக்கும். எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா” என்றான் மென்குரலில்.

“அதைத்தான நிதமும் செய்றேன். நீங்க மட்டும் கொஞ்சம் வேற மாதிரி இருந்திருந்தா, இந்த ஐஸ்வர்யா யாருன்னு தெரிஞ்சிருக்கும்” என்றாள் மிரட்டலாக.

“அப்படி எதாவது நடந்தா என்னை அடிச்சித் திருத்திரமாட்ட” என்று வம்பிழுக்க...

“ஆமா இவங்களத் திருத்துராங்க. எங்களுக்கு வேற வேலையில்லை பாருங்க” என்றவள் முகத்தில் இளநகை பூத்தது.

“யார் இல்லைன்னு சொன்னது. எப்பவும் என்னை அடக்கியாளும் வேலையைச் செய்யுறதான” என்றான் கண்சிமிட்டி.

“ச்சோ.. வரவர பேட் பாயாகிட்டீங்க புருஷா” என்று கணவன் தோள் சாய... “சீக்கிரமே சரியாகிரும்டா. அப்பறம் பாரு எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்ற பாட்டா ஓடும்.”

“ஹ்க்கும்.. ஓடினா போய்ப் பிடிங்க” என பேசி சிரித்துக் கொண்டிருக்க, சபையிலிருந்து அறைக்குள் வந்த பூரணியின் கண்களில் ஜன்னல் வெளிப்புறம் நின்றிருந்த சுவீகரன் ஐஸ்வர்யா ஜோடி விழ, “லைவ் ரொமாண்டிக் ஷோ. நீங்களும் நானும் இப்படி இருப்போமா வசீகரா? நம்ம கல்யாணத்துல ஆரம்பிக்கிற லவ் காலத்துக்கும் தொடரணும். இதுவரை நான் அனுபவிச்சிராத அத்தனை அன்பையும் உங்ககிட்ட வாங்கிப்பேன். தருவீங்கதானே?” புகைப்படத்திலிருக்கும் அவளின் வசீகரனிடம் கேட்டாள்.

‘தரணுமா?’ என்பதான குறுஞ்சிரிப்பு அதிலிருக்க... ‘ம்ம்..’ என வேகமாக தலையசைத்து, “ஸ்ஸ்.. இந்த கொஞ்ச நேரத்துல என்னை மெண்டலாக்கிட்டீங்க வசீகரா. பார்த்ததும் காதல்ல நம்பிக்கையிருந்தது கிடையாது. என் நட்புல யாராவது அப்படிச் சொன்னாலும் திட்டிருவேன். ஆனா, இப்ப.. ம்.. ஏதோ பண்றீங்க என்னை. இதே உணர்வு உங்களுக்கும் இருக்குமா? இருக்கணும்னு கடவுளை வேண்டிக்குறேன்” என்று கண்மூடி கடவுளைப் பிரார்த்தித்தாள்.

மதியமே தேதி குறிக்கச் செல்ல, அவர்கள் நினைத்ததையே ஜோசியரும் சொல்லியிருந்தார். பூரணியின் ஜாதகம் வசீகரனை முழுதாக்கும். அவர்களின் வாழ்வும் சிறப்புறும் என்று. மாலையே புடவை, தாலி எடுத்து வர, மறுநாள் பத்திரிக்கை வந்ததும் அருகிலிருக்கும் கோவிலில் சாமி சன்னிதானத்தில் வைத்து வாங்கி அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தார்கள். வேகம் வேகம் அத்தனை வேகம் திருமணத்திற்கு.

மித வேகம் மிக நன்று என்று சும்மாவா சொன்னார்கள்.

திருமணத்திற்கு முன்தின இரவுவரை வசீகரனை நேரில் பார்க்காதிருந்த பூரணிக்கு விடிந்தால் திருமணம் என்றிருக்க மனதினுள் ஒருவித போராட்டமாக இருந்தது.

ஜனனி தன் பங்கிற்கு, “பெரிய இடம் நம்ம வீடுதேடி வருதுன்னா ஏதோ இருக்கு பூரணி. ஒருவேளை பையன்கிட்டக் குறையிருக்குமோ?” என்று அடிக்கடி அதையே சொல்லிக்காண்பிக்க, “சும்மா எதையாவது பேசாதக்கா. போட்டோ பார்த்ததான? நிறை நிறைய இருக்கு. குறை சொல்ல எதுவுமில்லை” என்று அக்காவின் வாயடைக்கப் பார்க்க,

“ப்ச்.. பூரணி போட்டோ பார்த்து ஏமாந்தவங்க அதிகம். அதைவிட உன் மாமியார் கேரக்டர் ஓவர் ரியாக்ட் பண்ற மாதிரியிருக்கு. ஏதோ இருக்கப்போய்தான் இவ்வளவு நகை, ரொக்கம் கொடுத்திருக்காங்க. பத்தாததுக்கு நம்ம வீட்டுல உள்ள எல்லாருக்கும் அதிக மதிப்புள்ள புடவை வேற” என்ற ஜனனி பொறாமையில் சொன்னாலும் அதில் யதார்த்தம் இருக்கிறதே!

இதுவும் ஒருவகையான எச்சரிக்கையே! கடவுள் யாரோ ஒருவர் மூலம் நமக்கு உணர்த்தும் உண்மை! சரியாகப் புரிந்துகொள்வோர் நூற்றில் ஒருவரே!

ஜனனியின் பேச்சில் உள்ள நியாயம் பூரணியின் மனதிற்குப் புரிந்தாலும், புத்தி அதனை ஏற்க முனையவில்லையோ!

“ஜனனி அவளை ஏன் குழப்புற? அவங்களா வந்தது பூரணியோட அதிர்ஷ்டம். உங்க அப்பா அடிக்கடி சொல்வாங்கள்ல நம்ம பிள்ளைங்க ஆஹா ஓஹோன்னு வாழ்வாங்கன்னு. அது எந்தளவு சாத்தியமாயிருக்குன்னு பாரு” என்று பெருமையடித்தார் மைதிலி.

“நான் என்ன ஓஹோன்னு வாழ்றேன்” என்றாள் கடுப்பாக.

“அது உன் தப்பு. நாங்களா உனக்குப் பார்த்தோம். நீயே உனக்கான வாழ்க்கையைத் தேடிக்கிட்டிதால இப்ப இப்படியிருக்க. அப்பக்கூட உன் வீட்டுல ஓரளவு நல்லாதான இருக்காங்க” என்று நொடிக்க...

“என்னம்மா பணக்கார சம்பந்தி கிடைச்சதும் என்னைத் தூக்கிப்போடுறீங்களா? பணக்காரப் பகட்டு உள்ள போனால்தான தெரியப்போகுது.”

“சும்மா எதாவது பேசாத ஜனனி. அவள் நல்லாயிருந்தா நம்மளையும் நல்லா பார்த்துக்கப் போறா” என்றதும் ஜனனி வாயை மூடிக்கொண்டாள். பூரணிக்குதான் தாயின் பேச்சு அதிசயத்தைக் கொடுத்தது.

ஜனனியின் கணவன் ஜெஃப்ரினுக்குமே ஏதோ ஒரு நெருடல்தான். மறைமுகமாக மாமனாரிடம் சொல்லிப்பார்க்க, அவர் கொடுத்த பதிலில் வாயை மூடிக்கொண்டு நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தான்.

நேரம் ஆக ஆக மனதைக் கவ்வும் பயத்தில் அமைதியில்லாமல் அமர்ந்திருந்தவள் மணமகள் அறையை விட்டு வெளியே வர, கீழே ஆட்கள் நடமாட்டமிருக்க மாடியில் ஒரு சிலரது நடமாட்டமே! அதுவும் அலங்காரம் செய்பவர்கள் என்பது புரிந்தது.

‘உங்க மண்டபமா வசீகரா? ரொம்ப நல்லாயிருக்கு. சகலகலா வல்லவனாமே நீங்க? நிறைய ஃபேமஸான பில்டிங் நீங்கதான் கட்டிக் கொடுத்திருக்கீங்களாம். அதோட இன்டீரியர் முதற்கொண்டு நீங்கதான் செய்வீங்களாம்? லேசா விசாரிச்சா உங்களைப்பற்றிய நியூஸைக் கொட்டுறாங்க. அவ்வளவு ஃபேமசா நீங்க? எனக்குதான் எதுவும் தெரியலை. விடிந்தால் நமக்குக் கல்யாணம். ஒருமுறை கூட நீங்க என்னைப் பார்க்க வரலை? உங்களை நேரில் பார்க்கணும் போலிருக்கு’ என்று தனக்குள்ளேயே பேசியபடியிருந்தாள்.

காதலின் முதற்கட்டம் புலம்பல்கள்தானோ!
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top