- Joined
- Aug 31, 2024
- Messages
- 657
- Thread Author
- #1
4
அவளுள்ளும் ஒரு தடுமாற்றம். ‘இது சரவணனா? பிறந்த நாளுக்காகதான் கோவிலுக்கு வந்திருக்காங்க. நான் பார்ப்பது நிஜமா?” என்று அவள் நினைத்த வேளையில்,
அதைப் பொய்யாக்கும் விதமாக, “டேய் சரண்! ஐயர் ரொம்ப நேரமா நிற்கிறார் பாரு. அர்ச்சனையைக் கொடு” என்று அவன் அத்தை சொன்னதும்தான், அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். சட்டென்று தலையை உலுக்கி ஐயரிடம் கொடுத்து பெயர் சொன்னான்.
அதுவரை அவனையே ஒருவித எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஆராதனாவுக்கு, அவளின் எதிர்பார்ப்பு உடைந்ததும், சிறிது நேரத்தில் கற்பனை செய்து கொண்ட தன் மனதையே நொந்து கொண்டாள்.
சரணுக்கோ அவளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் போல் இருக்க, முதல் முறையாக அதிர்ந்தான். ‘என்ன எண்ணம் இது? ஏன் அவளைப் பார்க்கணும்னு தோணுது? அவளைப் பார்க்கும் போது முதல் முறையாகப் பார்க்கிறோம் என்ற எண்ணம் ஏன் வரவில்லை? மாறாக நெடுநாள் விலகியிருந்த ஒருவரை நீண்ட நாள் கழித்துச் சந்திக்கிறோம் என்ற உணர்வு ஏன்?’ காரணமில்லாமல் அந்நேரம் தாயின் முகம் வந்துபோக, அந்த நிமிடம் ‘இவள் தான் தனக்கானவள்’ என்ற எண்ணம் வந்தது. இதுவரை அனைவரையும் அக்கா, தங்கையாகவே மதித்து வந்தவனால், இவளை அந்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்ல மனதில்லை.
ஆம். முருகனின் அருளாள் தன்னவளை முதன்முறையாக பார்த்தான். அதை நல்லபடியாக நடத்திக் கொடுக்க, முருகனிடமே விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்தான்.
அவன் தங்கை கையை இடித்து ஆரத்தி எடுக்கச் சொன்னதும்தான், சுயம் திரும்பினான்.
சற்று நேரத்திற்கெல்லாம் வந்த ஐயர், இருவரிடமும் அர்ச்சனையைக் கொடுக்க, அவரவர் வழியே திரும்பும் வேலையில் வேதவல்லி, “இது எங்க அர்ச்சனைத் தட்டு இல்லை” என்றாள்.
ஐயர் திரும்பி, “ஓ நீங்க ரெண்டு பேரும் பிறந்தநாளுக்காகச் சொன்னதுல மாறிருச்சி. கொடுங்க” என்று மாற்றிக் கொடுக்கும் பொழுது, இரண்டாம் முறையாகப் பார்வைப் பரிவர்த்தனை நடந்தது.
கோவிலைச் சுற்றிக் கொண்டிருந்த ஆராதனாவின் மனதிற்குள், சம்மதமே கேட்காமல் சரண் சட்டமாக அமர்ந்துவிட்டான். அதை அறியாதவளோ, ‘எப்படி அவனைப் பார்த்ததும் அப்படியே நின்னுட்டேன்? என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான்? ஆனால், அவனும்தான பார்த்தான். அந்தப் பார்வையில் எந்த கள்ளத்தனமும் இல்லையே. அதையும் தாண்டி ஏதோ ஒண்ணு இருக்கு. இவன் என் சரவணன் அத்தானா இருப்பானோ? சே... இல்லையே. அதான் அவன் கூட இருந்த அவங்க அம்மா, சரண்னு சொல்லிக் கூப்பிட்டாங்களே. அப்புறம் எப்படி?’ என மனசளவில் சோர்ந்தவள், ‘உன்னைத் தேடி தேடியே அலையணுமா அத்தான். நீங்க எங்கயிருக்கீங்க?’ என்று நினைத்து முடித்து நிமிர, அவளின் அருகிலேயே சரண் வந்து கொண்டிருந்தான்.
ஒரு நிமிடம் அவனைக் கண்டதும் வந்த சந்தோஷம், உண்மை உணர்ந்ததும் நொடியில் மறைந்தது.
பிரகாரத்தைச் சுற்றிக்கொண்டே அவளைத் தேடியச் சரணின் விழிகளில், அவன் முன்னே சென்று கொண்டிருந்த ஆராதனா விழ, அவளைப் பார்க்கும் ஆசையில் வேகமாக முன்னே வந்தவன், அவள் அருகில் வருவதுபோல் பார்த்துக் கொண்டான். அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல், ஆராதனாவும் அவனைப் பார்க்க, அந்தப் பார்வையில் ஒருமுறை உடல் சிலிர்த்தான்.
முருகன் தரிசனம் முடித்து வெளியில் வரும்போது, தங்கையுடன் பேசியபடியே சரண் வர, கூட்ட நெரிசலில் இடிபடாமல் நகர்ந்து வந்த தோழிகள் இருவரும், வெளியே செல்ல யத்தனிக்கையில், சரணின் மேல் ஆராதனா மோதிவிட்டாள்.
மோதிய இருவரும் ஒரே நேரத்தில், “சாரி. சாரி” என்று விடாமல் கேட்டு முகம் பார்க்க, இருவருக்குள்ளும் சில விநாடிகள் தடுமாற்றம். அதை மறைத்து நிதானித்தவர்கள் திரும்பவும் மன்னிப்புக் கேட்டுப் பிரிந்து சென்றார்கள்.
பின்னே வந்த சரணுக்கும், முன்னே சென்ற ஆராதனாவுக்கும் இருவரின் குரலும் ஒருவருக்கொருவர் பரிச்சயமான உணர்வு. அதுவரை அமைதியாக வந்த வேதவல்லி, “என்னடி? என்னாச்சி? ஒரே யோசனையா இருக்கிற? இடிச்சிட்டு வந்தியே அந்தப் பையனைப் பற்றி யோசிக்கிறியா? செம ஹேண்ட்சம்ல. நிறைய பொண்ணுங்க அவனையே பார்த்துட்டுப் போனாங்க. பக்கத்துல ஒரு பொண்ணு இருந்தாளே செம அழகு. அவனோட தங்கச்சின்னு நினைக்கிறேன். பார்க்க அவள் உன்னை மாதிரியே தெரிஞ்சா” என்று சொல்லிவிட்டு தோழியின் முகம் காண, அவளின் கவனம் இங்கே இல்லை என்பதை உணர்ந்தவள், அவள் தோள் தட்டி, “என்னடி? நான் பாட்டுக்குப் பேசிட்டு இருக்கேன். உன் கவனம் எல்லாம் வேற எங்கேயோ இருக்கு?” என்றாள்.
“ஹா..ஹான்! என்னமா? சாரி. என்ன சொன்ன கவனிக்கலை” என்று வார்த்தையில் தடுமாறினாள்.
“ம்.. பார்த்தேன் பார்த்தேன் உன் கவனம் எல்லாம் எங்க இருந்ததுன்னு?”
“இல்ல வள்ளி. அவருக்கும் இன்னைக்குத் தான் பிறந்தநாளாம். அதனால...” ஆராதனா ரொம்ப உணர்ச்சிவசப்பட்டாளோ., அல்லது அதிக பாசம், கோவம் இப்படி இருந்தால்தான், வேதவல்லியை, வள்ளி என்றழைப்பாள்.
இன்று சற்று உணர்ச்சிவசப்பட்டிருக்க, “அதனால இவன் உன் அத்தைப் பையனாக இருக்குமோன்னு நினைச்சியா?” எனவும்,
“ம்... அதான் நிஜம். ஆனா, பேரு வேற. ப்ச்... என்ன பண்றது? எங்க போயி அவங்க பேமிலியைத் தேடுறதுன்னு தெரியலை. சரி கிளம்பு. வேலைக்கு முதல் நாள் வேற. எந்தவித மனக்கலக்கம் இல்லாம கிளம்பணும்னுதான கோவிலுக்கு வந்தது. சாமி தரிசனம் நல்லபடியா முடிஞ்சது” என்றாள்.
வெளியே வந்து ஆட்டோவைத் தேட, அவர் வெற்றியிடம் பேசிகொண்டே, அவர்களுக்குக் கையசைத்து ஆட்டோவில் உட்காரச் சொல்லி, வெற்றியிடம் திரும்பியாவர், “நம்ம ராணிம்மா ஹாஸ்டல்ல இருக்கிற பொண்ணுங்க. ஊரைப் பற்றி எதுவும் தெரியாதுன்றதால என்னை பார்த்துக்கச் சொல்லிட்டாங்க” என்றார்.
பெண்களுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்த வெற்றி, திரும்பிப் பார்ப்பதற்குள் ஆட்டோவில் ஏறி அமர்ந்திருந்தார்கள் பெண்கள். “சரி கிளம்புங்க சேகர். நம்ம ஊரைப்பற்றி உங்களுக்கேத் தெரியும். ஜாக்கிரதையாப் பார்த்துக்கோங்க” என்று அனுப்பி வைத்தார்.
வெளியே வந்த சரண், அவர்கள் சேகரின் ஆட்டோவில் செல்வதைப் பார்த்தபடி வந்தவன் தந்தையிடம், “கோவிலுக்கு உள்ளேயே வரலையாப்பா? நாங்க உங்களைத் தேடிட்டு இருந்தோம். ஆமா. சேகர் அங்கிள் கூடவா பேசிட்டு இருந்தீங்க?” என்று தனக்குத் தேவையான பதிலையும் தெரிந்துகொள்ளக் கேட்டான்.
“காரை பார்க் பண்ணிட்டு வர்ற வழியில் கஸ்டமர் ஒருத்தர் பிடிச்சிட்டார். அவர் போனதும் சேகரைப் பார்த்தேன். ராணிம்மா ஹாஸ்டலுக்குப் புதுசா வந்த ரெண்டு பொண்ணுங்களை, வெளில பார்த்துக்கிற பொறுப்பை உங்க அத்தை அவர்கிட்ட கொடுத்திருக்காங்களாம். அதான் உங்களைக் கூடப் பார்க்க டைம் இல்லாமல் போயிருச்சி. சரி. சாமி கும்பிட்டாச்சில்ல?” என கேட்டதும், அருகில் வந்த நியா அப்பாவின் நெற்றியில் விபூதி வைத்து, “வாங்க கிளம்பலாம்” என்றழைத்துச் சென்றாள்.
வீட்டிற்கு வந்ததும் அத்தையும், நியாவும் சமையலறைக்குள் நுழைய, சரண் வேகமாகப் படியேறி தன் அறைக்குச் சென்றான். இவ்வளவு நேரமாக மனதில் சுமந்ததை தாயிடம் சொல்லும் அவசரம் அவனுக்கு. உள்ளே வந்து கதவைத் தாளிட்டவன், அங்கிருந்த மேஜையின் உள்பெட்டியில் இருந்த போட்டோவை எடுத்து, “அம்மா! நான் பார்த்துட்டேன்ம்மா. நான் பார்த்துட்டேன். அந்த விஷயத்தை முதல்ல உங்ககிட்டச் சொன்னால்தான் மனசு திருப்தியா இருக்கும். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்ம்மா. நீங்க சொல்லியிருந்தீங்களே அம்மா, உனக்குன்னு ஒருத்தி வருவா. அவளைத் தவிர மத்த பொண்ணுங்களை அக்கா, தங்கையா பார்க்கணும்னு. நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனா, இன்னைக்குப் பார்த்தப் பொண்ணை அப்படி நினைக்க முடியலம்மா. அவள்தான் எனக்கானவள்னு நினைக்கிறேன். உங்களுக்கும் அவளைப் பிடிக்கும்மா. உங்களோட பேவரிட் கடவுள் முருகன் கோவில் சந்நிதானத்துல வச்சிப் பார்த்தேன்ம்மா. அடுத்து என்ன பண்றதுன்னு தெரியலம்மா? ஆனா, அவ நம்ம ராணியத்தை ஹாஸ்டல்ல இருக்கிறா. இன்னைக்குத் தான் முதல் நாள் வேலைக்குப் போறாளாம். சேகர் அங்கிள் அப்பாகிட்டச் சொல்லியிருக்கார். சரிம்மா ரொம்ப டைம் ஆகுது. கீழே என்னைத் தேடப் போறாங்க. நான் வர்றேன். அப்படியே வேலைக்கும் கிளம்பறேன்ம்மா” என்று தாயிடம் தன் என்னத்தைச் சொல்லிவிட்டுச் சென்றான்.
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்னவிட்டா எனக்காரு அம்மா
கைபேசி சத்தம் கேட்டு, பார்த்தவனுக்கு எம்டி நாராயணனிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. ‘வேலைக்கு வர்ற நேரம்தான? அதுக்குள்ள என்ன திடீர் போன்? கம்பெனியில எதாவது பிரச்சனையா?’ பலவற்றையும் யோசித்தவாறு அழைப்பை ஏற்று, “ஹலோ சார். குட் மார்னிங்” என்றான்.
“குட் மார்னிங் சரண். கொஞ்சம் சீக்கிரமா வாப்பா. பெங்களுர் பிராஞ்ச் ஆபீசர் வந்திருக்காரு. திடீர் மீட்டிங்” என்றார் அவசரக்குரலில்.
“இதோ. இதோ ஒரு அரைமணி நேரம் சார். வந்திடுறேன்” என்று போனை வைத்து, அனைவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்ப யத்தனித்தவனை, தாத்தாவும், பாட்டியும் சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள்.
“ரொம்ப அவசரம் தாத்தா. ப்ளீஸ்.”
“அப்ப இந்த கேசரி மட்டுமாவது கொஞ்சம் சாப்பிட்டுப் போ அண்ணா. காலையில் இருந்து ஒண்ணும் சாப்பிடலை” எனவும் அதை வாங்கக் கைநீட்டியவனைத் தடுத்து கொஞ்சம் சூடு ஆறவைத்து ஊட்டி விட்டாள். இரண்டு ஸ்பூன் வாங்கியவன் பொறுமையில்லாமல், “நான் கிளம்புறேன்” என்று விடைபெற்றான்.
மற்றவர்களும் கிளம்புவதாக சொல்ல, “நான் வந்து விட்டுட்டு வரவா அம்மா” என்று தாயிடம் கேட்க,
“வேண்டாம்பா. அக்கா காரை டிரைவர்கிட்டச் சொல்லி எடுத்துட்டு வரச் சொல்லிட்டா. பக்கத்துல இருக்கிற எம்எம்டிதான. பத்தே நிமிஷத்துல வரப் போறான்” என்றார் மகனிடம்.
“சரிம்மா. பார்த்துப் போயிட்டு வாங்க” என்றார் வேற்றியும்.
ஏழரை மணிக்கெல்லாம் அலுவலகம் நுழைந்த சரண், அவசர அவசரமாக எம்டியைச் சந்திக்கச் சென்றான். அங்கு அவரின் அறை முன் அனைவரும் கூடியிருப்பதைப் பார்த்தவன். என்னவென்று புரியாமல் விழிக்க, அவனுக்கு வழிவிட்ட அடுத்த வினாடி, அனைவரும் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்துப்பாடினர்.
சந்தோசத்தில் வாயடைத்து அவன் நிற்க, கேக் வெட்டச்சொல்லி கையில் கத்தியைக் கொடுக்கவும், எம்டி நாராயணன் முன்னிலையில் கேக் வெட்டி அவருக்கு முதலில் ஊட்டிவிட்டான். எம்டியே வந்து இதையெல்லாம் செய்யவும் கொஞ்சம் பெருமையா உணர அவரிடம், “ரொம்ப தேங்க்ஸ் சார். நான் இதை எதிர்பார்க்கல” என்றான்.
“இந்தக் கம்பெனி வளர்ச்சிக்கு நீயும் ஒரு காரணம் சரண். உன்னோட ஐடியால நிறைய காண்ட்ராக்டும், லாபமும் கிடைச்சிருக்கு. எம்டினா மேலயே தான் நிற்கணுமா? நமக்கு உழைக்கிறவங்களுக்காக இறங்கி வந்தா தப்பில்லையே? அப்பத்தான் நான் இன்னும் ஒரு நார்மல் மனுசனா இருக்கேன்னு எனக்கே தெரியும். என்ஜாய் மை பாய். உனக்காகதான் ஸ்டாப்ஸ் கூட சீக்கிரம் வந்துட்டாங்க. சீக்கிரம் செலப்ரேட் பண்ணிட்டு வேலையைத் தொடங்குங்க. ஓகே நான் கிளம்பறேன்” என்று விடைபெற்றார்.
தன் சக தோழர்களுக்கு நன்றி சொல்லி கம்பீரமாகச் சிரித்துக் கொண்டிருந்தவனை, தன் மனமெனும் பெட்டகத்தில் சேர்த்துக் கோர்த்து வைத்தாள் சக்தி.