• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
4



“மிஸஸ்.பரிபூரணி வசீகரன். ம்... பெயர் பொருத்தம் நல்லாதான் இருக்கு. இவ்வளவு நடந்தும் நீ என் மிஸஸா இருக்கன்னா, உன்னை நான் மிஸ் பண்ணவே கூடாதே மிஸஸ்.பரிபூரணி வசீகரன்” என்று புன்னகைத்தான் அங்கு நடப்பதை கைபேசி வழியாகக் கேட்டும், கண் வழியாகப் பார்த்துமிருந்த வசீகரன்.

“ஷப்பா! என்ன கோபம் வருது உனக்கு? இந்தக் கோபத்தை அன்னைக்கு அவங்ககிட்ட காட்டியிருக்கலாமே மிஸஸ்.பரிபூரணி வசீகரன். அப்படிக் காட்டியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன். அது சரி. நான் சரியாயிருந்திருந்தா உனக்கேன் இந்த நிலைமை. இதையே நீயும் நினைச்சிருப்பதான? எப்படி என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்ச? பார்த்ததும் பிடிச்சதால கல்யாணத்துக்கு சம்மதிச்சியா? இல்ல உன் அப்பனோட கட்டாயத்துனால சரி சொன்னியா?”

“எது எப்படியோ, இதுக்குக் காரணமான உன் அப்பனையும், என் அப்பனையும் என்னைக்கும் மன்னிக்கமாட்டேன் மிஸஸ்.பரிபூரணி வசீகரன். உனக்கு ஒரு அப்பனா அந்தாளும் எதையும் சரியா செய்யல. ஒரு மாமனாரா என் அப்பனும் நடந்துக்கல. நீ தப்புப் பண்ணிட்ட. இரண்டு பேரையும் போலீஸ்ல சொல்லி உள்ள தள்ளியிருக்கணும். நீ என்கிட்ட வந்ததும் இருக்கு அவங்களுக்கு.”

அதற்கு மிஸஸ்.பரிபூரணி வசீகரன் அவளின் வசீகரனிடம் வரவேண்டுமல்லவா! பூரணி பூரண சம்மதத்துடன் வருவாளா? இல்லை வசீகரன் அவளை வசீகரித்து தன்வசப்படுத்துவானா?

“ஏன் பூரணி என்கிட்ட சொல்லலை?” என்ற திடீர்க் கேள்வியில், அப்பொழுதுதான் தான் உண்மையை உளறிக் கொண்டிருந்ததை உணர்ந்தவள் அதிர்ந்து தோழியைக் காண, “சொல்லு பூரணி? இவர்கிட்ட சொன்னது உண்மையா? என்ன அமைதியாயிருக்க? வழிப்போக்கன்கிட்ட சொல்வ என்கிட்ட சொல்லமாட்ட அப்படித்தான?” என்றாள் கேட்ட உண்மையினாலான கோபம் குறையாது.

“ஹலோ! யாரை வழிப்போக்கன் சொல்றீங்க? நான் ஒரு டா...”

“டாக்கோ இல்ல டாக்கோட டாக்டரோ? எதுவாயிருந்தாலும் நீங்க வழிப்போக்கன்தான். புரியுதா? எல்லாம் வாங்கிட்டா வெளில போகலாம்” என்றதும், ஏதோ முனகியபடி அவன் வெளியேற, “ஹலோ! இங்க இருக்கிற மீதிப்பொருளை யார் எடுத்துட்டுப் போவாங்க? எடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணுங்க” என்றாள் எரிச்சலுடன்.

“கடைசியா வாங்கின இரண்டுக்கும் வேலை கிடையாது. நான் சிங்கிள் பாய்” என்று தான் வாங்கியதைக் கண்டு தானே முகம் சுளித்தபடி சொன்னான்.

“அப்புறம் ஏன்டா இதை வாங்குறேன்ற பெயர்ல இவ்வளவு நேரம் இவளை டார்ச்சர் பண்ணின?” தோழியின் மீதுள்ள கோபமும் சேர அவனிடம் கத்தினாள் சண்முகி.

“கல்யாணம் நடந்துட்டதா நினைச்சி வாங்கிட்டேன்ங்க. இப்பதான் எனக்குக் கல்யாணம் ஆகலைன்றதே நினைவு வருது. இதை வச்சி நான் என்ன செய்ய? அதை நீங்களே...”

“டேய்ய்ய்!!!” என்ற அலறலில், எங்கே அடித்து விடுவாளோ என்று பதறி நகர்ந்தவன், ‘பாசத்துக்காக மனுஷன் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு’ என மனதில் அண்ணனவனைத் திட்டி, “ஏன்ங்க இத்தனை ஆங்காரம்? நீங்களே சேல் பண்ணிக்கோங்கன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள நீங்களே எதோ கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் ஆள் கிடையாதுங்க. இப்ப நான் கிளம்புறேன். தேவைன்னா வர்றேன்” என்று நகர ஆரம்பிக்க,

“வர்றேனா? வந்த உன்னைக் கொல்லுவேன். ஒழுங்கு மரியாதையா ஓடிப்போயிரு” என்று அவனை விரட்டி, “நீ சொல்லு பூரணி?” என நின்றாள்.

“அ..அது...”

“அந்த அது எதுவாயிருந்தாலும் சொல்லு. இன்னும் மறைச்சி என்ன செய்யுறதா உத்தேசம்? அவ்வளவுதான் நம்மளோட நட்பு இல்ல?” என்றாள் கோபம் குறையாது.

“சண்மு!” எனும்போது ஆட்கள் வர, “ஆள் வர்றாங்க பாரு. அப்புறமா பேசலாம்டா” என்றும் தோழியவள் தன்னை முறைப்பதைக் கண்டு என்ன செய்வதென்று புரியாது சின்ன பெருமூச்சுடன் வியாபாரத்தைக் கவனித்தாள்.

மதியம்போல் வினோத் வந்திருந்ததால் கடையைப் பார்த்திருக்கச் சொல்லி அங்கிருந்த அறைக்குள் வந்து உணவு முடித்து சற்று ஆசுவாசமாக அமர, “இப்ப சொல்லு? கல்யாணத்தை மறைக்கிற அளவுக்கு என்ன நடந்தது? உன் ஹஸ்பண்ட் கொடுமைக்காரரா? அதனாலதான் வந்துட்டியா?”

“ம்கூம்” என்று முனகலாய் வார்த்தை வெளியிட,

“தண்ணி, சிகரெட்னு...”

“இல்ல சண்மு” என்றாள் சலிப்பாய். ‘அப்படியிருந்தால் கூட விட்டுக்கொடுத்து வாழ்ந்திருக்கலாமே’ என்ற எண்ணம் வராமலில்லை.

“அப்ப ரொம்ப வசதியா? நீ மிடில்க்ளாஸ்னு விட்டுட்டாரா?”

“ப்ச்.. வசதிதான். அதுக்காக மல்டி மில்லியனர் கிடையாது. பணத்துக்குப் பின் ஓடுற ரகமுமில்லை.”

“ஒருவேளை கல்யாணத்துக்கு முன்ன வேற பொண்ணை விரும்பியிருந்ததால உன்னைப் பிடிக்கலையோ?” யோசிப்பதுபோல் முகத்தைத் தூக்கினாள்.

“அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை.”

“அப்ப பொம்பளைப் பொறுக்கியா?” என்றாள் பட்டென்று.

“அடியேய்ய்.. லவ்வுக்கே வழியில்லைன்றேன். இதுல பொண்ணுங்களைப் பொறுக்க வேண்டியதுதான் பாக்கி.”

“அப்ப நீயா சொல்லமாட்ட? ஏய்! ஒருவேளை அவனா இவன்?” அவள் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கும் பொருட்டு வாயில் வந்ததையெல்லாம் கேட்டாள்.

முடிந்த மட்டும் முறைத்து “போடி லூசு” என்றாள்.

“அப்ப பைத்தியமாடி உன் புருஷன்?” என்றாள் கோபமாக. எதைக் கேட்டாலும் இல்லை என்ற பதிலே வந்தால் அவளும்தான் என்ன செய்வாள்.. கோபத்தில் கேட்டேவிட்டாள். கேட்டபின் தன் தவறு புரிய மன்னிப்பு கேட்க வாய் திறக்கையில், “சண்மு ப்ளீஸ். அப்படிலாம் சொல்லாத” என்ற பூரணியின் வார்த்தையில் அதிர்ந்துவிட்டாள்.

“ப்..பூரணி நி..நிஜமாவேவா? எப்படி?” என்றாள் திணறலாய்.

“ம்.. எல்லாம் என் தலையெழுத்து.”

“கல்யாணத்துக்கு முன்ன இருந்தே அவர் அப்படித்தானா? இல்ல கல்யாணத்துக்கப்புறமா?”

“கல்யாணத்துக்கு முன்னயிருந்தே அப்படித்தான்.”

“ஓ.. அன்னைக்கு நீ சொன்ன சிஸ்டர் கதை உன்னோடதுதானா?”

“ம்..” என தலையசைத்தாள்.

“எல்லாம் விடு. உன் அப்பா எப்படி சம்மதிச்சாங்க?”

“இப்படின்னு தெரியாது. வசதி பார்த்து சம்மதிச்சிட்டாங்க. உனக்கு எங்க வீட்டைப்பற்றித் தெரியுமே சண்மு” என்றாள் குரல் கமற.

“ஆமா. நீ எனக்கு என்ன சொல்றியோ அது மட்டும்தான் எனக்குத் தெரியும். அப்பா கொஞ்சம் பெருமையடிக்கிற ஆள்னு சொல்லியிருக்க. உங்கம்மா அப்பாவுக்கேத்த தப்பாத மனைவி. உன்கிட்ட அன்பைக்காட்ட மறுக்கிறவங்க. என்னை உங்க வீட்டுக்கு வரவிடமாட்ட. அதனால அதிகம் உங்க வீட்டைத் தெரியாது. உன் அக்கா ஜனனிகிட்ட பேசலாம்னு போனா அவள் போடுற சீன்ல பயந்து ஓடியிருவேன். அவளும் காதல் கல்யாணம்னு போயிட்டா.”

“அதைவிடு படிப்பு வேலைன்னு எல்லா இடத்திலும் நாம ஒண்ணாதான் இருக்கோம். எனக்குத் தெரியாம எப்ப கல்யாணமாச்சிது? மிஸஸான நீ எப்படி திரும்பவும் மிஸ் ஆன?” என்று தோழியை ஆழ்ந்து பார்த்தாள்.

“இரண்டு வருஷம் முன்ன நீ உங்க ஊர் கோவில் திருவிழாவுக்குப் போனவ ஒரு மாசம் அங்கேயே இருந்துட்ட. அப்ப நடந்ததுதான் இது.”

“தெளிவா சொல்லு பூரணி?” என்றாள் சண்முகி.

“அண்ணி என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லுங்க” என்று ஐஸ்வர்யாவிடம் அடமாக நின்றிருந்ததை நினைத்துப் பார்த்தான் வசீகரன். நிறைய கெஞ்சிய பின்னரே சொல்லத் தயாரானாள். அதுவும் வீட்டில் பெரியவர்கள் யாருமில்லை என்பதை உறுதி செய்துவிட்டு.

சில நொடி கண்மூடிய பரிபூரணி, “அப்பா ஒரு வரட்டு கௌரவம் பிடிச்சவர்ன்றது உனக்கேத் தெரியும். வெளில யாராவது ஒருத்தர் எப்படியிருக்கீங்க கேட்டுட்டா போதும் தன்னோட புகழ்பாட ஆரம்பிச்சிருவாங்க.”


முதலில் இரும்பு வியாபாரம்தான் செய்து கொண்டிருந்தார் மலையரசன். திடீரென்று என்ன நினைத்தாரோ அதை விட்டுவிட்டு, தாங்களிருந்தது வாடகை வீடு என்பதால் சிறிதளவு சேவல், கோழி வாங்கி வளர்த்து அதில் லாபம் பார்க்க ஆரம்பித்தார். சம்பாதிக்கும் பணம் வாடகை, சாப்பாடுக்கே சரியாகிவிட, கொஞ்சம் இருப்பு இருந்தாலும் சேர்த்து வைக்கத் தோன்றாது அவருக்கு. அதற்காகவே ஒரு செலவை உருவாக்கி காலி செய்வார்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜனனிக்கு ஒரு வரன் வந்தது. “நகை உங்களால் முடிந்தளவு போடுங்க. இல்லைன்னாலும் பரவாயில்லை” என்றார் மாப்பிள்ளை டிரைவராக வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி தனசேகரன்.

தனக்காகப் பேச பெரிய மனிதர் வேண்டுமென்று அவரை அழைத்து வந்திருந்தான் மாப்பிள்ளைப் பையன். பெண் அழகாக இருந்ததாலும் பெண்ணைப் பிடித்திருந்ததாலும் நகை வேண்டுமென கேட்கவில்லை.

மாப்பிள்ளை வீட்டாரின் அந்தப் பெருந்தன்மையை மலையரசன் தனக்கு சாதகமாக்க, “நகைலாம் பொண்ணுக்கு மாப்பிள்ளை போடலாமே! இப்பல்லாம் பையனுக்குப் பொண்ணு கிடைக்குறதே இல்லையாம். ஒரு ஐந்து பவுன் நகை போட்டு, உங்க வீட்டுப்பொண்ண கூட்டிட்டுப் போகலாமே” என்றார் பற்களைக் காட்டியபடி.

மலையரசன் பேராசை உணர்ந்தோ என்னவோ, மாப்பிள்ளையின் அப்பாவிற்குப் பதில் தனசேகரன், “போடலாமே! தப்பில்லையே!” என்றார் அவருக்கு எற்றவாறு.

உடனே முகமெல்லாம் பல்லாக, “அப்படியே இருபதாயிரம் ரூபாய் பணமா கல்யாணச் செலவுக்குத் தந்திருங்க. நீங்க இஷ்டப்பட்ட இடத்திலயே கல்யாணம் வச்சிக்கலாம்” என்றார்.

“அப்பா! எதுக்கு இவ்வளவு அவசரம்? நிதானமாகப் பேசலாம்” என்று இடையிட்டாள் பரிபூரணி. அவளுக்கு அவர்களின் முகமே சொன்னது, தன் தகப்பனின் எண்ணத்திற்கு ஏற்றார்போல் பேசுகிறார்களே தவிர இந்த சம்பந்தத்தில் விருப்பமில்லையென்று. தாய் மற்றும் உடன் பிறந்தவளின் குணம் தகப்பனைப்போல் என்பதால் அவர்களுக்கு மற்றவர்களின் எண்ணம் புரியவில்லை.

“அவசரம் இல்லம்மா. எங்ககிட்ட இருக்குது நாங்க போடுறோம்” என்று தன்மையாகவே தனசேகரன் பேச,

“அதான் ஐயா சொல்றாங்கள்ல. நீ சின்னப்பொண்ணு இப்படி நடுவுல பேசக்கூடாதுன்னு எத்தனை முறை சொல்றது. உள்ள போ” என அனைவரின் முன் அதட்டியதும், சொன்னாலும் கேட்கப் போவதில்லை என்பதை உணர்ந்து நகர்ந்துவிட்டாள்.

“வீட்டுலபோய் பேசிட்டு நிச்சயதார்த்தத்துக்கு நாள் சொல்லிவிடுறோம்” என்று அவர்கள் கிளம்ப, பூரணி சொன்ன எதுவும் அவர்கள் காதில் ஏறவில்லை.

ஒரு வாரமாகியும் மாப்பிள்ளை வீட்டினரிடமிருந்து எந்தத் தகவலும் வராமல் போக குழப்பத்திலிருந்தார் மலையரசன்.

“அப்பா நம்மளால முடிஞ்சதை செய்யுறேன்னு சொன்னா பரவாயில்லை. நீங்க அவங்ககிட்டயே நகை பணம்னு கேட்குறீங்க. அப்புறம் எப்படி வருவாங்க? பேசாம நமக்கு ஏற்றமாதிரி வேற இடம் பாருங்க.”

சின்ன மகளின் பேச்சில் கோபம் எழ, “நானும் அன்னையிலிருந்து பார்க்கிறேன். நீ என்ன இப்படிப் பேசிட்டிருக்க? அவங்க அப்படிப்பட்ட ஆளுங்க கிடையாது. அந்த தனசேகரன் இருக்காரே அவரும் அவர் தம்பியும் ஊர்ல பெரிய ஆளுங்க. இவர் தம்பி குலசேகரன் கவுன்சிலரா இருக்கார். நம்ம வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரணும்ன்ற அவசியமேயில்லையே. இருந்தும் வர்றாங்கன்னா, நான் எடுத்து வச்சிருக்கிற நல்ல பெயர் அப்படி. இன்னும் இரண்டு நாள்ல முடிவு சொல்வாங்க பாரு” என்றார் பெருமையாக.

“அவங்க பையனுக்கா கேட்டு வந்தாங்க. டிரைவருக்குதான? இதுல என்ன அவசியம் அவசியமில்லைன்னு. வேலைக்காரனுக்கு முதலாளி வர்றது ஒண்ணும் பெருசில்லை” என்றாள் வேகமாக.

மகள் பேசுவதிலும் நியாயம் இருந்ததோ! “நீ பேசாத போ” என்றார் மலையரசன்.

“மனசுல பட்டதை சொன்னேன்பா. நல்லவங்களா இருந்தா சரிதான்” என்று முடித்துவிட்டாள்.

மறுநாள் மொத்தக்கடை ஒன்றிற்கு முட்டை கொடுக்கச் செல்கையில் தற்செயலாக தனசேகரனைப் பார்க்க, அவரிடமே கேட்டுவிட்டார்.

“வீட்டுல போய்ப் பேசிட்டு உங்க வீட்டுப் பெண்ணை எடுக்கிறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்துட்டாங்க. மறுநாள் உங்ககிட்ட சொல்லலாம்னு நினைக்கிறப்ப, அவங்க பையன் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கூட்டிட்டு வந்துட்டான். வெறுமனே காதலிக்கிறேன்னு வந்தா ப்ளாக்மெய்ல் பண்ணியாவது, அந்தப் பெண்ணை விரட்டிட்டு உங்க பெண்ணோட முடிச்சி வச்சிருக்கலாம். அவன் என்னடான்னா தாலி கட்டிட்டான். அதான் ஒண்ணும் செய்ய முடியலை. அவங்களுக்கு சொல்ல சங்கடம். வேற ஒண்ணுமில்லை” என்று பேச்சிலேயே கரையவைத்தார் தனசேகரன்.

“அப்படீங்களா ஐயா. வேற எதாவது நல்ல வரன் வந்தா சொல்லுங்க” என்று வீடு வந்தவர், “மனுஷன் தங்கமானவர்” என்று புகழ, தாயும் தமக்கையும் அப்படியா என்பதாய்க் கேட்பதைக் கண்டு கோபம்தான் வந்தது பூரணிக்கு. ‘எவ்வளவு நேக்கா கழட்டிவிட்டிருக்கான். அது புரியாம, என்னவோ போங்க’ என்று தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஏனோ மூத்த மகள் மேல் தனிப்பட்ட அன்பு மைதிலிக்கு. ஏன் இந்த ஓரவஞ்சனை என்றால், தன்னை முதன்முதலில் தன்னைத் தாய் ஸ்தானத்திற்கு உயர்த்தி அம்மா என்றழைத்ததால் பிடிக்கும் என்பார். ‘நானும் உங்களைத்தானேம்மா முதலில் அம்மா என்றழைத்தேன்’ என பூரணி கேட்டால் அதற்கும் ஒரு உப்புச்சப்பில்லாத காரணத்தைக் கூறுவார்.

தாயின் துணையில் வீட்டு வேலைகளைத் தங்கையின் தலையில் கட்டிவிட்டு ஏமாற்றும் வித்தை அறிந்தவள் ஜனனி. ஏமாற்றுதல் என்பது தங்கையை மட்டுமல்ல பெற்றோரையும் சேர்த்தே. அரசுப்பள்ளியில் கொடுத்த மடிக்கணிணியே எப்பொழுதும் ஜனனிக்குத் துணை. பூரணியிடமும் உண்டுதான் அவள் மெடிக்கல் சம்பந்தப்பட்ட குறிப்பை எடுத்து வைப்பதைத் தவிர அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆதலால் யாராவது அவசரத் தேவைக்குக் கேட்டால் தாராளமாகக் கொடுத்துவிடுவாள். தற்பொழுது தனி மெடிக்கல் ஆரம்பித்ததும்தான் அத்தியாவசியத் தேவை என்பதால் அதைப் பயன்படுத்திக் கொள்கிறாள்.

ஜனனியோ ஒரு டிகிரி முடித்ததோடு சரி. ‘யூட்யூப்பில் படிப்பு சம்பந்தப்பட்டதைப் பார்க்கிறேன்’ என்ற காரணம் கூறி இணையதள இணைப்பிற்குப் பணம் கட்டவைத்து விடுவாள். அவசரத்திற்கு யாரும் கேட்டாலும் மடிக்கணிணியை மடியைவிட்டு இறக்காமல் மறுத்துவிடுவதும் உண்டு.

“அப்படி இந்த லேப்டாப்பை வச்சி என்னதான் செய்றியோ” என்று எப்பொழுதாவது மலையரசன் திட்டுவதோடு சரி.

ஜனனியின் நடவடிக்கையில் வித்தியாசம் உணர்ந்த பூரணி தாயிடம் சொல்லி கண்டிக்கச் சொல்ல, அவரோ இவளைத் திட்டி அனுப்பிவிட, நேரே அக்காவிடம் சென்று, “நீ என்னவோ தப்புப் பண்ற ஜனனி. என்ன பண்றன்னுதான் தெரியலை. ஆன்லைன்ல அத்துமீறும் ஆண்கள்தான் அதிகம். ஜாக்கிரதையாயிரு” என்று எச்சரித்தாள்.

தெரிந்தே தப்பு செய்பவர்களிடம் சொல்லும் அறிவுரைகள் குப்பைக்குச் செல்லும் என்பது தெரியவில்லை அப்பெண்ணிற்கு.

அடுத்த பதினோரு மாதங்களுக்குப் பின்னர் ஒரு சம்பந்தம் வர பேசி முடித்திருந்த வேளையில், தன் பொருட்கள் அனைத்துடனும் காணாமல் போய்விட்டாள் ஜனனி. தெரிந்தவர்களிடம் விசாரித்தும் மகளைப்பற்றி எதுவும் தெரியாமல் போக, போலீஸ் செல்லலாம் என்ற நிலையில், ஒரு போன் வர அங்கே சென்று பார்த்தவர்கள் அதிர்ந்து நின்றுவிட்டனர்.

ஜனனியாகப்பட்டவள் ஜாஸ்மினாக உருவெடுத்து ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு, ஜெஃப்ரின் என்பவனிடம் புன்னகை முகமாக திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.

மூவரும் சத்தமில்லாமல் வீடு வர, மைதிலிக்கு மனம் கிடந்து அடித்துக்கொண்டது. ஆசை மகள் அல்லவா! அப்படியே ஒதுக்கிவிட மனம் வராமல் அவள் செய்த துரோகம் மறந்ததோ! அது மறந்து மறைந்தே போக ஒரு வாரத்திற்குள் ஜனனியின் பிறந்த வீட்டு வரவு ஆரம்பித்தது. வீம்பு பிடித்த மலையரசனும் மனைவியின் தொல்லையில் ஏற்றுக் கொண்டிருக்க, பூரணியால்தான் அவளிடம் சகஜமாகப் பேச முடியவில்லை.

கெட்டதிலும் ஒரு நல்லதாக ஜெஃப்ரின் நல்லவனாக இருந்தான். மரியாதைக்காக ஓரிரு வார்த்தைகளே அவனிடம் பேசுவாள். ஜனனியோ எதுவுமே நடக்காததுபோல் இயல்பாகப் பேச, மனதினுள் கோபம் இருந்தாலும் இனி இதுதான் என்றான பிறகு தன் இறுக்கத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு பேச ஆரம்பித்திருந்தாள்.

“என்ன சேகரா சின்னவனுக்குக் கல்யாணம் முடிக்கலையா?” என கேட்ட உறவினரிடம், “முடிக்கணும் மச்சான். பொண்ணு பார்த்துட்டிருக்கோம். முடிவு பண்ணினதும் உங்களுக்குதான் முதல் அழைப்பு” என்று தன் வீட்டிற்குப் பத்திரிக்கை வைக்க வந்தவரிடம் சொல்ல, “சரிப்பா சீக்கிரமே நல்ல செய்தி சொல்லு. மறக்காம பையனையும் கூட்டிட்டுக் கல்யாணத்துக்கு வந்திரு. நம்ம சொந்தத்துல எதாவது பொண்ணு இருந்தா அங்கேயே பேசி முடிச்சிருவோம்.” என்றார்.

அவர் சென்றதும் அமைதியாக யோசிக்க ஆரம்பிக்க, “என்னங்க இப்படி ஒவ்வொருத்தரா கேட்டா என்ன பதில்தான் சொல்றது? பேசாம வசீக்குக் கல்யாணம் செய்து வச்சிருவோமா?”

அவர் மனதிலும் அதுதான் ஓடியதுபோலும், “எப்படி ஆனந்தி? இது சரிவருமா? எதுவும் பிரச்சனை வந்துராதே?”

“அதெல்லாம் வராது. பையனைப்பற்றி நமக்கும் உங்க அண்ணன் வீட்டுக்கு மட்டும்தான் தெரியும். அது போதாதா? கொஞ்சம் நிறையவே கஷ்டப்படுற, அமைதியான, நம்ம சொல் கேட்கிற பொண்ணா பார்த்துக்கலாம்.”

“இந்தக்காலத்துல அப்படிப்பட்ட பொண்ணுங்க இருக்காங்களா என்ன?”

“ஏன் இல்லைன்றீங்க? எல்லா பொண்ணுங்களும் இன்னும் நாகரீகமா வளர்ந்து பெண்ணியம் பேச ஆரம்பிக்கலை. இன்னும் பழைய கலாச்சாரத்தோட வளர்றவங்களும் இருக்கதான் செய்யுறாங்க. அப்படி ஒரு இடத்திலிருந்து பெண் பார்க்கலாம். எந்தக் கேள்வியும் நம்மளைக் கேட்காதளவு இருக்கணும். வசதிக்காகவோ இல்ல வேறெதாவது காரணத்துக்காகவோ, இரண்டாந்தாரமா வயசானவங்களுக்குக் கட்டிக்கொடுக்குறவங்க இன்னும் இருக்குறாங்கதானே? அப்படிப் பார்த்தா நாம முதல் தாரமாதான் கேட்கிறோம். என்ன பையனுக்கிருக்கிற குறை வெளியில தெரியாமல் பார்த்துக்கணும்.”

“அப்ப தைரியமா இறங்கலாம்ன்றியா?”

“ஆமாங்கறேன். அப்படியே நம்ம ஜோசியர்கிட்ட கல்யாண யோகம் வந்திருக்கா கேட்டுக்கலாம். கல்யாண ராசியிலயாவது பையனுக்குக் குணமானா நல்லதுதானங்க” என்க, குலசேகரனும் புன்னகையுடன் சம்மதித்தார்.

உடனே அண்ணன் தனசேகரனுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, சட்டென்று அவர் மனதில் தோன்றியதென்னவோ மலையரசன்தான்.

“சேகரா ஒரு குடும்பம் இருக்கு. நாம நகை போட்டு கட்டிட்டு வர்றதா சொன்னா, உனக்கு கேட்டால்கூட அவன் பொண்ணைக் கொடுப்பான். நம்ம பையனுக்குத் தரமாட்டானா என்ன? நம்மகிட்ட பணத்துக்குப் பஞ்சமில்லை. அங்க பணம்தான் பஞ்சமே! ஐம்பது பவுன் நகையும், ஐம்பதாயிரம் ரொக்கமும் தர்றோம்னு சொல்லு, பையனை விசாரிக்கவே செய்யாம பொண்ணைக் கொடுத்துருவான். எப்படியும் நகை நம்ம வீட்டுக்குத்தான வருது. ஐம்பதாயிரம் ரொக்கம் போனா போகட்டும். நம்ம பையனுக்காக இதை செய்யலாம்” என்றார் அறிவுரையாக.

“வேற எதுவும் பிரச்சனை ஆகிராதேண்ணா?”

“பிரச்சனை பண்ண அங்க யாரும் இல்லை. பிரச்சனை பண்ற அளவுக்கு அவங்களுக்கு பலமும் கிடையாது. ஆளுங்களும் வரமாட்டாங்க. அப்படியே பையனை விசாரிக்கணும்னாலும் என்கிட்டதான் வருவான். நான் பார்த்துக்குறேன். நாளைக்கு வெள்ளிக்கிழமை. நாளைக்கே பேசி முடிவு பண்ணி, அடுத்த வெள்ளி கல்யாணத்தை முடிச்சிருவோம்” என்றார்.

“சரிண்ணா” என்று தலையாட்டினார் குலசேகரன்.

“அப்புறம் சேகரா! நாம சின்னப் பொண்ணைதான் பார்க்கப் போறோம். அவளோட அக்கா ஒரு கிறிஸ்தவப் பையனோட ஓடிப்போயிட்டா. இப்போதைக்கு அதைப் பெருசுபடுத்தாத. தேவைன்னா பார்த்துக்கலாம்.”

“சரிண்ணா. பொண்ணு எப்படி?”

“பொண்ணுங்க அழகுடா. அதனாலதான் பெரிய பொண்ணுக்கு நகை வேண்டாம்னு பேசினோம். அவளோட அப்பன் பேராசைக்கு சரிவராதுன்னு வந்துட்டேன். சின்னப்பொண்ணு கொஞ்சம் விவரம்னாலும் வீட்டுக்கு அடங்கின பொண்ணு. எப்படியும் நாம போடுற நகை அவள் வாயை மூடிரும். இல்ல அவளோட அப்பன் அடக்கிருவான். அவள் அப்பனுக்குத் தலைக்கனம் கொஞ்சம் ஜாஸ்தி. மத்தபடி மண்டையில ஒண்ணும் கிடையாது. இதைவிட வேற சம்பந்தம் நம்ம பையனுக்குக் கிடைக்காது” என்றார் விளக்கமாய்.

அனைவரையும் சரியாகக் கணித்தவர், பூரணியின் மீதான கணிப்பில் சறுக்கிவிட்டாரோ!
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top