- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
30
குருமூர்த்தி எவ்வளவு தடுத்தும் மகனிருக்கும் இடம் கேட்டு வர, திருமொழி அவரைச் சமாளித்து, “அழக்கூடாது” என்ற கட்டளையுடன் ஐசியூவிற்குள் அனுப்பிவைத்தாள்.
மகனின் அந்நிலை பார்த்து மௌனக்கண்ணீர் வடித்தவர், முகம் வருடி நெற்றியில் முத்தமிட்டு, “ராஜா அம்மாவைப் பாருடா. தாயேன்னு கூப்பிட்டு கிண்டல் பண்ணுடா. உங்கப்பா இங்க வரவேண்டாம்னு சொல்லியும், உன்னை இங்கே கூப்பிட்டு வந்தது என்னோட தப்புதான் ராஜா. நாம என்ன நினைச்சாலும் நடக்குறதுதான் நடக்கும்னு அவர் வாயை அடைச்சிட்டேன். உன்னை இந்தக் கோலத்துல பார்ப்பேன்னு தெரிஞ்சிருந்தா அப்படிச் சொல்லியிருக்க மாட்டேன்.”
“உனக்கு எதாவதுனா அம்மாவால தாங்க முடியாதுடா. நானும் உன்னோடவே வந்திருவேன். நாங்க தவமிருந்து பெத்த பிள்ளைடா நீ. அம்மாவுக்காக வந்திருடா ராஜா. இங்க உன்னை தொல்லை செய்யக்கூடாதுன்னு திரு சொல்லி அனுப்பினா. சீக்கிரமா வா என்ன. அம்மா உனக்காக வெளிய காத்திருப்பேன்” எனும்போது அவன் கண்களிலும் சிறிது நீர் கசிந்ததோ!
அடுத்து இரண்டு நாட்கள் கழித்தே கண்விழித்தாலும் அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி. தொடர்ந்த இரண்டு வாரங்கள் மருத்துவமனை வாசமிருக்க, டிஸ்சார்ஜாகி வந்த வீட்டைப் பார்த்த சிவகாமி “எவ்வளவு பெரிய வீடு. பழையகாலத்து மாடல்ல... யார் வீடு ராஜா இது?” என்று மகனிடம் கேட்க...
தன் முன் புதிதாக வர்ணம் தீட்டப்பட்டிருந்த தங்கள் வீட்டைப் பார்த்திருந்தான் இளநாதன். நிறைய ஆட்கள் வைத்து பெய்ண்ட் செய்து, தோட்டத்தையும் சீரமைத்திருந்தார்கள். ஒவ்வொரு இடங்களிலும் சிறு வயது ஞாபகங்கள். தாத்தா பாட்டி அப்பா அம்மா மாமாவின் குடும்பமென்று அவ்வப்பொழுது சேர்ந்து வாழ்க்கையை வாழ்ந்த நினைவுகள் அவன் கண்களில். மனைவியைப் பார்க்க அவள் கண்களிலும் சந்தோஷக்கண்ணீர்.
அதேபோல் தமிழரசியின் வீடும் தலைகீழாய் மாறியிருந்தது. “உன் வீடு இருக்கும்போது நீ ஏன்கா யார் வீட்லயோ இருக்கணும்” என்று செல்வரசி வீட்டைக் காலி செய்து கொடுத்திருந்தார்.
“இந்த சொத்துக்காக நான் இழந்தது போதும் அரசி. எப்பவும் போல நீயே இரு.”
“இல்லக்கா. இது உன்னோடது. இங்கயிருந்த ஒவ்வொரு நாளும் முள்ளுல இருக்கிற மாதிரிதான். பாவத்தினால் கிடைச்ச வீடு, எனக்கோ, என் பையனுக்கோ, பேத்திகளுக்கோ வேண்டாம்கா. பேராசை பெருநஷ்டம்னு சொல்வாங்க. அதான் சொந்தமாயிருந்த வீடும் போயிருச்சி. அந்தாள் செத்த மறுநாளே வீட்டுக்கு வெள்ளையடிச்சி நேத்து பதினாறாவது நாள் காரியத்தோட பூஜையும் செய்தாச்சிக்கா. இனிமேல் எந்தக் கெட்டதும் உன்னை அண்டாது. நீயும் அத்தானும் சந்தோஷமா வாழ்ந்த வீடுக்கா” என்றார் வந்த கண்ணீரைத் துடைத்து.
தமிழரசியின் நினைவுகளும் பழையவற்றை அசை போ சில நிமிட அமைதிக்குப் பின், “அப்ப ஒண்ணு செய்யலாம். நீயும் இங்கேயே இரு” என்றார் தமிழரசி.
“அக்கா வேண்டாமே!”
“இல்லன்னா வீட்டைப் பூட்டிப்போட்டுட்டு வாடிப்பட்டிக்கே போயிருவேன்” என்றார் மிரட்டலாக.
“அக்கா மருமகள் இருக்கா?”
“இருக்கட்டுமே. வீடு போல நம்ம மனசும் பெருசு அரசி.”
பிரியா தன் கணவனுக்கு சரியாகி போலீஸ் கஸ்டடி சென்றதும், தகப்பன் அழைத்ததற்கு வரமறுத்து, “கணவன் செய்த தப்பிற்கு என் அப்பா அம்மா தம்பி ஏன் கஷ்டப்படணும். நான் எதாவது வேலை பார்த்து என் பிள்ளைங்களை வளர்த்திருவேன்” என மருமகள் சொன்னதைச் சொல்ல,
“வேலைக்குப் போறது நல்ல விஷயம்தான். அதுக்குத் தனியா இருக்கணுமா என்ன? நாம எல்லாரும் ஒரே வீட்டுல இருக்கிறோம். இதான் என் முடிவு” என்று மறுக்க வழியில்லாமல் செய்தார் தமிழரசி.
கெட்டாலும் மேன் மக்கள்.. மேன் மக்களே!
“இது நம்ம வீடுதான்மா. உங்க பொண்ணு கயல் வீடு. எனக்கு ட்ரீட்மெண்ட் முடியுறது வரை இங்கதான் இருக்கப்போறோம்” என்று சிவகாமியைச் சமாளித்தான் இளங்கதிர்.
வீட்டினுள் கணபதி ஹோமமும் ஆத்மாக்களை சாந்திப்படுத்தும் ஹோமமும் நடந்து கொண்டிருக்க அனைத்து சந்தோஷங்களும் அங்கே கொட்டிக்கிடந்தது.
கயலுக்குள் சிறிதாக உறுத்தல்,,, ‘பிரகாஷ் எங்கே? ஏன் யாரும் அவனைப்பற்றி பேசவில்லை? அண்ணன் ஹாஸ்பிடலில் இருந்ததால் மற்றவை எதுவும் கண்ணில் படாமலேயே போனதா? ஒருவேளை அன்றைய துப்பாக்கிச் சூட்டில் எதாவது... மை காட்!’ மனம் சிறிது அதிரத்தான் செய்தது. எப்படி யாரிடம் கேட்பது என சின்னதாக தவிப்பு அவளுள். அந்த உணர்வுக்குப் பெயர் காதல் கிடையாது. ஒருவர் மேலிருக்கும் நல்ல அபிப்ராயம் மட்டுமே!
“என்ன மதினி எங்க அண்ணனைத் தேடுறீங்களா?”
“உங்கண்ணனா? உனக்கு ஏது அண்ணன்? இருந்த ஒருத்தரும்தான் இப்ப இல்லையே மங்கை?” என்றாள் குழப்பமாக.
“அறிவு அண்ணன் மட்டுமில்ல. பிரகாஷ் கூட எனக்கு அண்ணன்தான் மதினி.”
“மங்கை உனக்குப் புத்திகித்தி கெட்டுப்போச்சா? அவனைப்போய் அண்ணன்னு சொல்ல எப்படி மனசு வந்தது? அவங்க குடும்பம் நமக்குச் செய்ததெல்லாம் மறந்திருச்சா?” என்றாள் கோபமாக.
“இரண்டு பேர் செய்த தப்புக்கு மத்தவங்களை ஏன் தண்டிக்கனும்? சித்திதான் நடந்த எல்லாத்தையும் சொன்னாங்கள்ல?”
அதுக்கு முன்னரே பிரகாஷ் அப்புவின் பேச்சில் தெரிந்திருந்ததை சொல்லவில்லை கயல்விழி.
“பாவம் ஓரிடம், பழி ஓரிடம் எதுக்கு மதினி? அதை விடுங்க நீங்க ஏன் அண்ணனைத் தேடுறீங்க?
“ப்ச்... நான் யாரையும் தேடல. தேட வேண்டிய அவசியமும் இல்ல.”
“டீச்சர் நீங்க பொய் சொல்லலாமா?”
“கறை படுறதால நல்லது நடந்தா கறை நல்லதுதான்” என்றாள் விளம்பரபாணியில்.
“ஹா..ஹா வந்தீங்களா வழிக்கு. சொல்லுங்க மதினி ஏன் தேடுறீங்க?”
“மங்கை தப்பா எந்த அர்த்தத்திலும் கிடையாது.” புரிந்ததாய் திருவின் பார்வையிருக்க... “அன்னைக்கு நீ மயங்கி விழுந்தப்ப உங்க குடும்பத்தாலதான்னு ரொம்பத் திட்டிட்டேன். போகும்போது போனா திரும்புவேனா தெரியாது சொல்லிட்டுப் போனாங்க. இப்ப வரை பார்க்கல. ஒரு குற்றவுணர்ச்சி மங்கை. நல்லாயிருக்கிறதா தெரிஞ்சா கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவேன்.”
“ஆனா, மதினி கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்ததா கேள்விப்பட்டிருக்கீங்கள்ல. அங்க பாருங்க” என்று கண் காண்பித்த இடத்தைப் பார்க்க, காம்பௌண்ட் கேட் அருகில் வந்து கொண்டிருந்தான் பிரகாஷ். நெற்றியில் காயத்திற்காகப் போட்ட ப்ளாஸ்டருடன் கையில் சின்னதாய் கட்டு. இருந்தும் புன்னகை மாறாது தெரிந்தவர்களுடன் பேசிவிட்டு நடந்து வந்தான்.
“என்ன கட்டு மங்கை?” கயல் அமைதியாகக் கேட்க,
“அன்னைக்கு நமக்கு ஆதரவா நின்னதால, அவங்க அண்ணன் கொடுத்த பரிசு. நெத்தியில வெட்டுக்காயம் தையல் போட்டு பிரிச்சாச்சி. கையில சின்னதா ப்ராக்சர். அவங்க அப்பாவுக்குக் கொள்ளிவைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். அவங்க உறவுல யாரோதான் வச்சிருக்காங்க.”
“ஓ...”
“ஆமா மதினி. அந்தாள் சாகுறதுக்கு முன்ன பொண்டாட்டி புள்ளையை பழி கொடுக்கப் பார்த்தவர். அவர் கணக்குப்படி நாங்க செத்தாச்சின்னு முடிச்சிட்டாங்களாம். அறிவு அண்ணன் இருந்தா இப்படித்தான் இருந்திருப்பாங்கள்ல. ரொம்ப கேரிங் டைப்.”
“ரொம்ப புகழ்ற அவரை. உன்னால எல்லாத்தையும் ஈஸியா மறக்க முடியுது. என்னால முடியல மங்கை. சரி நான் உள்ள போறேன்” என்று நகர, அருகில் வந்த பிரகாஷ் முகம் சுருங்கியது.
“சரியாகிரும்ணா. உங்களைத் தேடுற அளவுக்கு வந்திருக்காங்களே.”
“நிஜமாவே என்னைத் தேடுனாளா மங்கை?”
“ஆமாண்ணா. என்ன இத்தனை வருஷமா அடக்கி வச்சிருந்த கோபமெல்லாம் உங்களைப் பார்த்ததும் வெளிப்படுது. அவங்க அளவுல இது சரிதான். நான் கூட கோபத்தை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தியிருக்கேன். அவங்களுக்கு அதற்கான சந்தர்ப்பமே கிடைச்சதில்ல.”
“வேணும்னா கவுன்சிலிங் கூட்டிட்டுப் போகலாமா?”
“ஏன் இந்தக் கொலைவெறி? அப்புறம் நார்மலாயிருக்கிறவங்க மலையேறி மாரியாத்தாளாகிருவாங்க. தேவையா உங்களுக்கு?”
“ஆமால்ல” என்று பிரகாஷ் சத்தமாகச் சிரிக்க...
வெகு நேரமாகியும் மங்கை உள்ளே வராததால் அவளை அழைக்க வந்த கயல்விழி கடுப்பாகி நின்றுவிட்டாள். “மங்கை அண்ணன் கூப்பிடறான் உள்ள வா” என்றாள் அந்த கடுமை தொனி மாறாமல்.
“நீங்களும் வாங்கண்ணா.” திருமொழி பிரகாஷையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.
தன் வீட்டிலுள்ள அனைவரும் அவனை பகை பாராட்டாது சகஜமாகப் பேச, பகைவரையும் மன்னிக்கும் தன் குடும்பத்தாரை என்ன செய்வதென்று சொல்லமுடியாத கோபம் அவளுள்ளே சுழன்றது.
“கயல்மா என்ன யோசனை?”
“அம்மா எனக்கு சில விஷயம் புரியமாட்டேன்னுது.” தன் குழப்பத்தைச் சிவகாமியிடம் சொல்ல...
“உன் மனசைத் தொட்டு சொல்லு கயல்? பிரகாஷுக்கும் உங்க வீட்டுப் பிரச்சனைக்கும் ஒரு சதவீதமாவது சம்பந்தமிருக்கா?”
“இல்லம்மா” என்றாள் குரல் இறங்க.
“மூளைக்குப் புரியுறதை, மனசு ஏற்கலதான கயல். எதிரியோட பையன் எப்படி நல்லவனாவான்? அவன் குணம்தான இவனுக்கும் இருக்கும் நினைக்கிற. ஐந்து விரலும் ஒண்ணா இருக்கிறதில்லைன்னு டீச்சர் உனக்குத் தெரியாதா கயல்? அந்த ஜெயராம் பொண்ணுங்களைக் கூட இதே மாதிரிதான் பார்க்குறியா?” என்றார்.
“சேச்சே.. அவங்க சின்னக் குழந்தைங்கம்மா.”
“ஜெயராமோட நேரடி இரத்த சம்பந்தமுள்ள குழந்தைகளை மன்னிக்க முடியுற உன்னால, ஏன் பிரகாஷை மன்னிக்க முடியல? இவ்வளவுக்கும் அவன் நல்லதைத் தவிர எதுவும் செய்யல” என்று கயலை சிவகாமி குற்றம் சாட்டினார்.
“அம்மா அவன் என் பின்னாடி கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சுத்தினான்மா. சரியான இரிடேட்டிங் பெலோ” என்றாள் கடுப்பாக.
“காதலிக்கச் சொல்லிச் சுத்தலையே கயல். அங்கங்க போய்ப்பாரு காதல்ன்ற பெயர்ல என்னென்ன அநியாயம் நடக்குதுன்னு. என்னைக் கல்யாணம் பண்ணினா, உன்னைப் பாதுகாப்பா பார்த்துக்குவேன்னு எவனும் சொல்லமாட்டான். அவன் அப்பா, அண்ணன்கிட்டயிருந்து உன்னைப் பாதுகாக்க கல்யாணம்தான் சரியான வழின்னு நினைச்சது தப்பில்லையே. அவனுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு கயல்.”
“எனக்கு எதுவுமே பிடிக்கலம்மா. கல்யாணம்னாலே அலர்ஜியாயிருக்கு. அதுவும் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டினு... அவங்களை நினைச்சாலே அந்த கார்மேகம் செய்த கொடுமைதான் ஞாபகம் வருது. அந்த வீட்டுப்பையனை எப்படிம்மா? அந்தளவுக்கு என் மனசு பக்குவப்பட்டது கிடையாது.”
“சரிமா. அவன் வேண்டாம். வேற பார்க்கிறோம் சம்மதிக்கிறியா?” முடியாதென்பதாய் கயல் தலையசைக்க, “ஏன்மா?” என்றார் சிவகாமி.
“அதான் சொன்னேனேம்மா, எனக்கு கல்யாணம் பிடிக்கல. நிறைய குழப்பமாயிருக்கு.”
“அதுக்காக அப்படியே விடமுடியாது கயல். இரண்டே நாள்ல ஒரு முடிவு சொல்லு. நல்ல பையனா பார்க்கலாம்.”
“நான் யோசிச்சி சொல்றேன்ம்மா.”
“குட்” என்று தலைவருடியவருக்குள் குழம்பிய குட்டை தெளிவாகும் என்ற எண்ணம்.