• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
29



“ஓ... முடிச்சிரலாமே” என்ற குரலில் இளங்கதிரைக் கண்ட கார்மேகம், “நீ குருமூர்த்தி பையன்ல. ஏன்பா உனக்கு இந்த வேண்டாத வேலை. வேற பொண்ணா கிடைக்கல. பாரு பொண்டாட்டியைக் காப்பாத்துறேன்னு நீயும்...”

“என்ன பண்றது மாம்ஸ்? நான் வந்துதான் உங்க கொட்டத்தை அடக்கணும்னு விதியிருக்கிறதாலதான், என் மங்கையர்கரசிக்கு புருஷனாகிட்டேன் போல!” என்றான் நக்கலாக.

அப்பொழுது ஜெயராம் செல்லில் ரிங் வர, “என்னடா சொல்ற? சிபிஐ ரௌண்ட் பண்ணிருச்சா? என்ன பண்ணிட்டிருக்கீங்க எல்லாரும்?” என்றவன் வீட்டைப் பார்க்க தீ அணைந்து வீடு மட்டும் சற்று கறுப்படித்தாற் போலிருந்தது. “அப்பா நம்மைச்சுற்றி நமக்குத் தெரியாம ஏதோ நடக்குது” என்றான் வேகமாக.

“அதை இப்பதான் கண்டுபிடிச்சியா ஜெயராம். தீ அணைஞ்சதுக்குக் காரணம் நீ ஊத்தின பெட்ரோலுக்குப் பதிலாயிருந்த சினிமாவுக்கு யூஸ் பண்ற எரிபொருள்தான். இரண்டு இல்ல ஐந்து நிமிஷம்தான் அதனோட வேல்யூ. முடிஞ்சதும் அணைஞ்சிருச்சி.”

“உன்னை ரொம்ப ஈஸியா நினைச்சிட்டேன்டா” என்று துப்பாக்கியை எடுத்த கார்மேகத்தின் குறி கதிரை நோக்கிப்பாய, சட்டென்று விலகியதும் தோட்டா அங்கிருந்த வேப்பமரத்தில் பட்டுத்தெறித்தது.

துப்பாக்கி சத்தத்தில் பின்புறமிருந்த அனைவரும் மிரண்டனர். தோட்டத்திலிருந்த பாதுகாவலர் ஸ்பாட்டிலிருந்த ஒருவருக்கு போன் செய்து, “முன்ன என்ன சத்தம்?” என கேட்க... எதிரில் வந்த பதிலில் “என்ன கதிரைச் சுட்டாங்களா? இப்ப ஓகேதான” என்றதும் எதிரிலிருந்து ஆம் என்ற பதில் வர... அதையெல்லாம் கேட்க திருமொழி அங்கிருக்கவில்லை.

“என் மாமா உன் கையை வெட்டினதுக்குப் பதில் கழுத்தை வெட்டியிருக்கலாம். கழுவுற கையால தின்னும் உனக்கின்னும் புத்தி வரலையே கார்மேகம். ஏன்டா ஜெயராம் உனக்கு என் தங்கச்சி கேட்குதா? இப்ப என் முன்னாடி சொல்லு பார்க்கலாம்” என்றவன் கண்களில் பழிதீர்க்கும் வெறி.

அன்புவை அருகே இழுத்து, “கையெழுத்து போடலன்னா கொலை பண்ணி கைநாட்டு வைப்பியா? இனி காலம் முழுக்க நீ அதைத்தான்டா செய்யப்போற. இன்னொண்ணு இவனோட கையெழுத்து மட்டும் இருந்தா செல்லாதே. என் கையெழுத்தும் உங்களுக்கு இருந்தால்தான இவ்வளவு பெரிய வீடு, தேவநாதன் கம்பெனி இதர சொத்துகள்லாம் உங்களுக்குச் சொந்தமாகும்” என்றான் நக்கலாக.

எதுவோ ஒரு உறுத்தல் வர, “யார்டா நீ?” என்றான் ஜெயராம்.

“இன்னுமாடா தெரியல. என் குரல் உனக்கு என்னை ஞாபகப்படுத்தலையா? இந்நேரம் புரிஞ்சிருக்கணுமே. மறுபிறப்பெடுத்து வந்து உன்னைப் பழிவாங்குவேன்னு சொல்லிட்டு மலையிலிருந்து விழுந்த, தேவநாதன் பையன் இளநாதன்டா நான்!” என்றான் சத்தமாக.

கணவனைத் தேடி வந்த திருவிற்கு ஆச்சர்யம், அதிர்ச்சி, கேள்விகள் சூழ கடைசியாக இளநாதன் என அடையாளம் காட்டியதில் சட்டென்று மயங்கிச் சரியப்போன தங்கையை பிரகாஷ் சட்டென்று தாங்கிப்பிடித்தான். அதைக் கண்ட கார்த்திக் பின்னே தூக்கிப்போகச் சொன்னான்.

மாமன் மகளை அப்படிப் பார்த்த கயலுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் போக, “என்னாச்சி மங்கைக்கு? இவளையும் கொன்னுட்டீங்களா? இன்னுமாடா உங்க வெறி அடங்கல?” என்று அவன் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.

“இவள் என் தங்கை கயல். நானே எப்படி...”

“ஏன் உன் அண்ணனுக்கும் இவள் தங்கைதான? கொல்லப் பார்த்தான்தான?”

“என்னை ஸ்ரீராமா பார்க்காம, பிரகாஷா பாரு கயல். எல்லாரும் பணம் புகழ்னு அலையமாட்டாங்க. அன்பு பாசத்துக்குக் கட்டப்பட்டவங்களும் இருக்காங்க.”

“கயல் சட்டையிலிருந்து கையை எடு. யாரோ செய்ததுக்கு இவன்கிட்ட ஏன் பாயுற?” தமிழரசி அதட்டல் போட...

“யாரோ இல்லை அத்தை. இவனோட அண்ணன்தான்.”

அவளிடம் வந்த செல்வரசி, “கயல் இவனை வளர்த்தது கார்மேகம் இல்ல. எங்க அம்மா. விவரம் தெரியுறதுக்கு முன்னாடியிருந்து அவன் அங்கதான் இருக்கான். என்னோட என் பையன் இருந்ததுன்னு பார்த்தா வருஷங்கள் கூட கிடையாது. நீயும் அக்காவும் இருக்கிறது தெரிஞ்சதுமே உங்களுக்குப் பாதுகாப்பு பண்ணினவன் அவன். ஏழு வருஷம் கழிச்சி போன வருஷம்தான் ஒருமுறை வந்திருந்தான். இப்பக்கூட எங்கம்மா இறந்துட்டதால வந்தான்.”

“அரசி அம்மா இறந்துட்டாங்களா? எப்ப?”

“ஒருமாசத்துக்கு மேலாகுதுக்கா. அம்மாகிட்டயே வளர்ந்த பாசம்தான் இவனை இழுத்துட்டு வந்தது. ஆனா இங்க...”

“அம்மா முதல்ல மங்கையைப் பாருங்க. நான் அங்க போறேன். போய் திரும்பி வருவேனா தெரியாது” என்று கயலைப் பார்த்தபடி நகர, அவள் முகத்தில் வந்த சின்ன அதிர்வு தனக்கானதாய் தோன்ற, சிறு நிம்மதியுடன் அங்கிருந்து சென்றான்.

சிபிஐ பற்றித் தெரிந்ததுமே ஜெயராம் ரௌடிகளை வரச்சொல்லியிருக்க... அடுத்த ஐந்தாவது நிமிடம் அவ்விடமே களேபரமானது. தனக்கு எதிரே நின்றிருந்த தம்பியின் மேல் கோபம் எழ அவனையும் விட்டுவைக்கவில்லை ஜெயராம்.

அனைத்தும் அந்தப் பெரிய வீட்டிற்குள்ளேயே நடந்ததால் வெளியில் அதிகம் தெரியாமல் போனது. வீட்டினருகில் அதிகம் வீடுகள் கிடையாது. அதுவுமில்லாமல் கார்மேகம் அங்கு வரும்போதெல்லாம் அலறல் சத்தங்கள் சகஜமாகிப் போயிருந்தது அத்தெருவாசிகளுக்கு. ‘இன்னைக்கு எந்த அப்பாவி மாட்டினானோ’ என்ற எண்ணம் மட்டும் அவர்களுக்கு. அநியாயம் செய்யும் அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொள்ளவும் முடியாதே.

மனிதர்களின் சத்தமில்லாமல் துப்பாக்கிகள் மட்டுமே பேச, சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்த திருவின் காதிலும் துப்பாக்கி சத்தங்கள் கேட்டது. “கதிர் அத்தான்” என சத்தமிட்டு ஓடப்போனவளை அனைவரும் தடுக்க, அவர்களைத் தள்ளிவிட்டு அவள் ஓட... பாதுகாப்பிற்கு இருந்தவர்கள் அவளைப் பிடிக்க வர... அவளை தான் பார்த்துக்கொள்வதாக சொல்லி பின் தொடர்ந்தாள் கயல்.

சண்டை நடக்கும் பகுதி வந்த திரு கணவனைத் தேடினாள். அன்பு ஒருவனைப் பிடித்திருந்த கையை எடுக்க அவன் அன்புவைப் பிடிக்கவும், கார்த்திக் தன் துப்பாக்கியை கீழே வைத்து சரண்டராகி நிமிர... இன்னும் சிலரும் அதையே செய்ய... ஒருவித அமைதி அவ்விடத்தில்.

ஏதோ விபரீதமாய் தோன்றியது பெண்களுக்கு. அவர்கள் இருப்பது மற்றவர்களுக்கு தெரியாததால் தன் கணவன் எங்கேயென்று மெல்ல எட்டிப்பார்க்க நெஞ்சில் கைவைத்தபடி நின்றாள் மங்கையானவள்.

கயல் புரியாது அங்கு பார்க்க, கார்மேகத்தின் துப்பாக்கி முனையில் நின்றிருந்தான் அவள் அண்ணன் இளநாதன்.

‘இளா அத்தான்’ என கத்தப்போனவள் வாயை கயல் மூட, கண்களில் நீருடன் திரும்பியவளிடம், “வேண்டாம் மங்கை. அண்ணன் அவங்களைச் சமாளிச்சிருவான். நாம சத்தம்போட்டா பிரச்சனை வேற மாதிரியாகும். நம்மளால எதாவது செய்ய முடியுமா பார்க்கலாம்” என்றாள்.

நிராயுதபாணியாக நிற்கும் கணவனை எப்படிக் காப்பாற்றுவது என்று சுற்றிலும் பார்த்தவள் கண்களில் பட்டது, சிறுவர்கள் விளையாடும் பலம் வாய்ந்த உண்டிவில். ஜெயராமின் பெண்கள் இங்கு வந்து விளையாடும்போது விட்டுச் சென்றது. அதை எடுத்து இழுத்துப் பார்த்து அதன் பலம் தெரிந்ததும் சுற்றிலும் பார்க்க, அவ்விடத்தில் துப்பாக்கிக் குண்டு ஒன்று கிடக்க, அதை எடுத்தவள் உண்டிவில்லில் சரியாகப் பொருத்தி கார்மேகத்தைக் குறிவைத்தாள்.

கயல் அவளைத் தடுத்து, அங்கு கிடந்த பாலிதீன் கவரை அவள் கைகளுக்கு க்ளௌஸாக மாட்டிவிட்டு, “இப்ப அடி மங்கை. நம்ம கண் முன்னாடி போன உயிருக்கு இந்தக் கார்மேகம் உயிர் சமர்ப்பணம். அப்பதான் இறந்தவங்க ஆத்மா சாந்தியடையும். ம்...” என்றாள்.

அன்று முதல்முதலில் வெட்டி சாய்த்த தன் அப்பாவின் நினைவுடன், அதைத் தொடர்ந்து அவர்கள் ஆடிய வெறியாட்டங்கள் ஞாபகம் வர, “நம்ம குடும்பத்தை உறவாடி அழிச்ச அவனை விடாத மங்கை. எது வந்தாலும் பார்த்துக்கலாம். இது உன் லட்சியம் கூட” என்றாள் அத்தனை வருட ஆத்திரத்தையும் காட்டி.

மங்கையின் கண்களும் ஒருவித வெப்பத்தைக் கக்கி, சுட்டெரிக்கும் சூரியனாய் கார்மேகத்தின் நெற்றியைக் குறிபார்த்து, தான் கற்ற கலையை கைகளுக்குக் கொடுத்து, “போன தடவை போல் குறி தவறிடக்கூடாது காமாட்சி தாயே!” என்ற வேண்டுதலுடன் தன் ஒட்டுமொத்த பலத்தையும் விரல்களுக்குக் கொண்டு வந்து சரியான இலக்கு பார்த்து அத்தோட்டாவை அனுப்பினாள். சரியாக நான்கே நொடிகளில் ‘ஆ’ என்ற அலறலுடன் கார்மேகம் மண்ணில் சரிந்து விழ... ஒரு வெற்றிப்புன்னகை பெண்கள் இருவருக்குள்ளும்.

தகப்பனின் நிலை பார்த்து கோவத்தில் இளநாதனைக் குறிபார்த்த ஜெயராமின் கையில், அன்பு எறிந்த வேப்பமரத்துக் கட்டை விழ... கீழே விழுந்த துப்பாக்கியை எடுக்குமுன், இளங்கதிர் தான் வைத்திருந்த இன்னொரு துப்பாக்கியால் ஜெயராமின் காலில் சுட, அலறியபடி விழுந்தவன் கையில் கிடைத்தது அந்தத் துப்பாக்கி.

“உன் மறுபிறப்பிலும் உனக்கு எமன் நான்தான்டா இளநாதா!” என்று கதிர் அதிர்ந்த நேரம் இதயப்பகுதியிலும் வயிற்றுப்பகுதியிலும் சுட்டான். அடுத்த குண்டு செலுத்துவதற்குள் ஜெயராமின் வலப்புறத் தோளில் கார்த்திக்கின் புல்லட் பாய, அடுத்தடுத்த துப்பாக்கிச் சூட்டில் சுற்றிலுமிருந்த ரௌடிகள் விழுந்தார்கள்.

“அண்ணா” என்ற கயலின் அலறலில் மற்றவர்கள் ஓடிவர...

மங்கையவளோ அதிர்ச்சியில் உறைந்து மயங்கப்போனவள் கணவனின் சரிவில் மூளை விழிக்க, “இ..இளா அத்தான்” என்று கத்தியபடி ஓடி வந்து கணவனைத் தாங்கினாள்.

“ஹா..ஹா ஒரு வழியா நான்தான் உன் இளா அத்தான்னு கண்டுபிடிச்சிட்டியா? லவ் யூ ஏர்போர்ட்” என்று கண்மூட, மங்கையர்கரசியின் அலறல் அங்கே உச்சஸ்தாபியில்.

பதினைந்து வருடங்களாக கண்ணீரைக் காணாத திருமொழியின் கண்கள் இன்று மொத்தமாய் கொட்டித் தீர்த்ததோ!

கதிரின் அந்நிலை அனைவரையும் உலுக்கிப்போட, பெண்களின் அழுகை சத்தம் மட்டும் அங்கே!

ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஆம்புலன்ஸ் வர, கதிரையும், ஜெயராமையும் சிகிச்சைக்காக முதலுதவி ஆம்புலன்ஸில் ஏற்றினர். மற்ற சிலரைத் தனியாகவும் இறந்தவர்களைத் தனி வாகனத்திலும் கொண்டு செல்ல...

மருத்துவமனை நுழையும் பொழுதே அவசர சிகிச்சைப் பிரிவில் டாக்டர்கள் தயாராகயிருக்க, இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் ஜெயராம்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், குண்டை எடுத்து விட்டதால் இனிமேல் பிரச்சனையில்லையென்று சொன்னார்கள்.

அடுத்து ஒரு மணி நேரங்கழித்து கதிருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் வெளியே வர அவர்களின் முகத்தைப் பார்த்தவர்களுக்குள் சின்னதாக பயம் கவ்விக்கொண்டது.

“எப்படியிருக்கான் டாக்டர்?” தன்னைத் திடப்படுத்திக் கேட்டார் தமிழரசி.

“ரெண்டு குண்டும் ரிமூவ் பண்ணியாச்சி. கொஞ்சம் ஆழமான காயம்தான். கான்ஷியஸ் வந்ததும்தான் மேற்கொண்டு சொல்ல முடியும்.”

“எப்ப நினைவு வரும் டாக்டர்?” என்றார் குருமூர்த்தி.

“இதான் டைம்னு குறிப்பிட்டு சொல்லமுடியாது குரு. உங்க பையன் நல்லபடியா உங்களுக்குக் கிடைப்பான்” என்றார் இளநாதனை இளங்கதிராக மாற்றிய டாக்டர் அமல்ராஜ்.

“என் பையனைப் பார்க்கலாமா டாக்டர்?”

“நாளைக்கு பார்க்கலாம். உங்களுக்குத் தெரியாததா? ஐசியூல வெளியாளுங்க அலவ் கிடையாது. இப்போதைக்கு அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. கார்த்திக் சார் கேட்டுக்கிட்டதால வேணும்னா ஒவ்வொருத்தரா பாருங்க. அதுவும் நாளைக்குதான் இன்னைக்குக் கிடையாது” என்று முடித்து நகர்ந்தார்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சற்று நேரத்திற்கெல்லாம் ஐசியூ மாற்ற கதிரை வெளியே கொண்டு வரும்பொழுது கணவனிடம் வேகமாக வந்தவள், “கதிர் அத்தான் என்னைப் பாருங்க. நான் உங்க மொழி. தயவு செய்து வந்திருங்க. பழிவாங்குறது லட்சியம் எதுவும் நமக்கு வேண்டாம். மாமா பயந்த மாதிரி ஆகிருச்சி. ரிசப்ஷன் முடிஞ்சி அங்கேயே இருந்திருந்தா உங்களுக்கு இந்த நிலை வந்திருக்காதுல்ல. எல்லாம் என்னாலதான்! நான்தான் லட்சியம் அது இதுன்னு உங்களை இந்த நிலைக்குத் தள்ளிட்டேன். நாம இங்கயே இருக்க வேண்டாம். மாமா அத்தை கூட நம்ம வீட்டுக்குப் போயிரலாம். ப்ளீஸ் வாங்க அத்தான்” என்று கெஞ்சிக் கதறினாள்.

மாமனாரிடம் திரும்பி, “மாமா என்ன நிற்கிறீங்க? உங்க பையனை எழுப்புங்க. நாம ஹைதராபாத் போயிரலாம். நாம இங்கயிருக்க வேண்டாம்” என கெஞ்சினாள்.

“திருமா என் பையனுக்கு ஆயுசு கெட்டி. இன்னும் இரண்டே நாள்ல உன்கிட்ட பேசுவான் பாரு.”

“நிஜமாவா மாமா?” அத்தனை எதிர்பார்ப்பு அவள் கண்களில்.

“சத்தியமாடா. ஏற்கனவே இறப்பைப் பார்த்துத் திரும்பினவன் திரும்பவும் இறப்பைச் சந்திக்கமாட்டான். உன் தாலிக்கு ஆயுசு கெட்டிமா.”

அன்பு ஒருபுறம் நிஷாந்தின் தோள்சாய்ந்து புலம்பிக் கொண்டிருந்தான். “நான் போயிருக்கணும். இளா அத்தானை விட்டுட்டேன். என்னால அக்காவை இந்த நிலைமையில பார்க்க முடியலண்ணா. அவளோட லட்சியத்தை நான் நிறைவேத்துறேன்னு சொல்லிட்டு இப்ப...” அவனைத் தேற்றுவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது நிஷாந்திற்கு.

அன்று மாலையே கார்மேகத்தின் உடலை எரியூட்டினார்கள். செல்வரசியிடம் ஒருதுளிக் கண்ணீர் கூட இல்லாதது சொந்தங்களின் முகம் சுழிக்க வைத்தபோதிலும், எதையும் கண்டுகொள்ளவில்லை அவர்.

இரவு கணவனின் அறைக்கு ப்ரியா வர, விஷயமறிந்து திருச்சியிலிருந்து அவளின் அப்பாவும் அம்மாவும் வந்திருந்தார்கள். நடந்தது முழுதும் கேள்விப்பட்டதும் மகளைத் தன்னுடனே அழைத்தார்கள்..

“நான் வர்றேன்பா. ஆனா, இப்ப இல்ல. அவர் குணமானதும் வர்றேன்.”

“அவன் உன்னைக் கொல்லப் பார்த்தவன்மா. எல்லாம் சரியா நடந்திருந்தா இப்ப உன்னை கண்ணால பார்த்திருக்க முடியாது. என் பொண்ணை என்னன்னு நினைச்சிட்டிருக்கான் அவன். பொண்ணுங்க அருமை தெரியாதவனுக்கு கல்யாணம் ஒரு கேடா.”

“நீங்க பார்த்த மாப்பிள்ளைப்பா” என்றாள் விரக்தியாக.

“தப்புப் பண்ணிட்டேன்மா. உன்னை நல்லா பார்த்துக்குவேன்னு சொல்லிதான் பொண்ணு கேட்டான். நல்ல வசதி. எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால நல்லவன்னு நினைச்சிட்டேன். கெட்ட பழக்கங்கள் இல்லாட்டியும் குணம் இல்லன்னா, அவன் குப்பைதான்னு இப்பதான்மா புரியுது.”

“அப்பா” என்றாள் பலகீனமான குரலில்.

“இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்றேன்னு உன்னை மிரட்டினானாம். உனக்கு என்னமா குறை. வா வீட்டுக்குக் கிளம்பு” என்றார் பிடிவாதமாக.

“அப்பா அவங்க கொலை செய்திருக்கலாம். அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்பட்ட கொள்ளைக்காரனாகவும் இருக்கலாம். ஆனா, பொம்பளைப் பொறுக்கியில்லப்பா. காலையில் பேசினது கோவத்துல. கோவத்துல பேசுற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தேடக்கூடாதுப்பா. வாரிசுக்கு பையன்தான் வேணும்னா எப்பவோ என்னைக் கொன்னுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கலாமே! கொலைக்கு பயந்தவங்க கிடையாதே.”

அவர்கள் பேசுவதை உள்ளேயிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஜெயராம்குள் முதல்முறையாக ஒரு குற்றவுணர்வு. ‘தன்னைக் கொல்லப் பார்த்த என்னை நியாயப்படுத்துகிறாளா? பணத்துக்காக அவளை...’ அடுத்தவர்கள் கண்களில் மட்டுமே கண்ணீரைக் கண்டவன் கண்கள் இப்போது கலங்கியிருக்க, ‘என்னை மன்னிச்சிருமா பிரியா. எப்படியும் எனக்கு ஆயுள் தண்டனை உறுதி. அதுவும் ஒண்ணா ரெண்டா தெரியாது. நீயும் பிள்ளைகளும் நல்லாயிருக்கணும்’ என்று மனதார வாழ்த்தினான்.

நன்னடத்தை காரணம் காட்டி சீக்கிரமே வெளியே வந்து குடும்பத்துடன் சேர இது சினிமாயில்லையே.

இரவு கணவனருகில் அமர்ந்து தேவைப்பட்டால் கூப்பிடுவதாக சொல்லி நர்ஸை அனுப்பியிருந்தாள். இரத்தம் ஏற்றி முடிந்ததும் க்ளுகோஸ் ஏறிக்கொண்டிருக்கையில்தான் திருமொழி உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

கணவனின் தலைவருடி அதிக நேரம் முகத்தையே பார்த்திருந்தாள். கண்கள் தன் வேலையை விடாது செய்ய, கைகள் அவனை வருடியபடியிருந்தது. அத்தனை வருடத்து மன அழுத்தங்களும் கண்ணீரில் கலந்து கரைந்து காணாமல் போனதோ!

“அன்னைக்கே கோவில்ல அந்த சாமியார் சொன்னார். உன் மனம் கவர்ந்தவன் கையாலதான் தாலி வாங்குவன்னு. நான் உணராமல் போயிட்டேன் அத்தான். நேத்துதான் உங்களுக்குத் தெரிஞ்சதாமே அன்பு எல்லாத்தையும் சொன்னான். நானே கண்டுபிடிக்கணும்னு என்னென்ன பண்ணனீங்க. எதையும் புரிஞ்சிக்கலையேங்க. மச்சம் பார்த்தும்... நான் லூசுதான்ல?”

“எல்லாம் என்னாலதான். என்னால மட்டும்தான் நீங்க இங்க இப்படி... எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையைப் பார்த்துட்டு நிம்மதியாயிருக்க எனக்கெதுக்கு லட்சியம் அது இதுன்னு வீம்பு. நம்ம கல்யாணத்துக்குப் பிறகாவது எல்லாத்தையும் விட்டிருக்கலாம். வீம்பு பண்ணி இங்க வந்திருக்கக்கூடாது. ரெண்டு அடிபோட்டு அங்கேயே வச்சிருக்கலாமே! ப்ச்... அப்படி செஞ்சாலும் அடங்குறவளா நான். அதையே காரணம் காட்டி இன்னும் கோவப்பட்டிருப்பேன்.”

“எனக்கு நீங்க திரும்பக் கிடைச்சதே போதும் அத்தான். நாளைக்கே வீட்டுக்குக் கிளம்புற மாதிரி பாருங்க. பாவம் அத்தை யாரையும் காணோம்னு புலம்புறாங்களாம். உங்களுக்கு நடந்தது தெரிஞ்சா அவங்களால தாங்கிக்க முடியாது. நீ எப்படி தாங்கிக்கிட்ட கேட்குறீங்களா? நான்தான் உங்களை லவ் பண்ணலையே. அப்புறம் எப்படி பாதிப்பு இருக்கும். நான் உங்களை லவ் பண்ணலை சொல்றேன் ஏன்டி பொய் சொல்றன்னு எழுந்து அடிக்க வரமாட்டீங்களா? நீங்கதான் பொறுமையின் சிகரமாச்சே நீ லவ் பண்றது வரை நானும் காத்திருக்கேன்னு சொல்லிருவீங்க.”

கணவன் நெற்றியில் முத்தமிடுகையில் ஒரு துளி நீர்பட்டு அவன் உடலில் சிறு அதிர்வை உண்டாக்கியதோ! எதையும் அறியவில்லை அவள்.

“அத்தான் ஐ லவ் யூ சொன்னா எழுந்திருவீங்களா? அப்ப சீக்கிரம் வாங்க சொல்றேன். ஒண்ணு தெரியுமா? நான் கதிர் அத்தானை லவ் பண்றேன். இளா அத்தான் மேல அன்பும் நிறைய நம்பிக்கையும் வச்சிருக்கேன் சொன்னப்ப, அவர் வரலன்னா என்ன செய்வ கேட்டீங்கதான. நான் சொன்னது நடந்திருச்சா. அந்த கோகிகிட்ட என் இளா அத்தானைதான் கல்யாணம் பண்ணியிருக்கேன்னு தைரியமா சொல்வேன். அவளும் என்னை லூசு சொல்வாள்ல. நான் இவ்வளவு பேசுறேன் அசையக்கூட மாட்டீங்களா? நான் அழுறேன்ங்க. என் கண்ணீர் துடைக்க வரமாட்டீங்களா?” ஏதேதோ புலம்பல்களுடன் அவளறியாமல் கண்மூடினாள்.

அவளின் தலைவருடி கண்ணீர் துடைத்து, “உனக்காகத்தான் இவ்வளவும் ஏர்போர்ட். எனக்குத்தான் எல்லாம் மறந்திருச்சி. உன் இளா பக்கத்துலயே இருந்தும் எப்படி கண்டுபிடிக்காமல் விட்ட? கயல் கண்டுபிடிச்சிட்டா. உன்னோடவே வளர்ந்தவன்தான? என்னையே நினைச்சிட்டிருந்தவள் வேற. என்னோட கடைசி வார்த்தை எல்லாத்தையும் மறக்கடிச்சிருச்சா? நானே வந்து நான்தான் இளான்னு சொன்னப்ப,கூட மாதிரி மாதிரின்னு சொல்லி மாதிரி வினாத்தாள் ஆக்கிட்டியேடி. என் வினாத்தாள் எனும் மனதை உன் ஐ லவ் யூக்களால் எப்பொழுது நிரப்புவாய்.”

“அச்சோ! எப்பொழுதும் போல கவிதை வரலையே. ப்ச்... உன்னைப் பார்த்த என் மூளை மொத்தமும் வெற்றுக் காகிதமாகிருது. எழுந்து வரலன்னா ஐ லவ் யூ சொல்லமாட்டியா? இது அநியாயம் மொழி. ஹேய் இரு கவிதை சொல்றேன்.”

வெற்றுக்காகிதமான என் மனதில்

வினாக்களை மட்டுமே எழுதியிருக்கிறேன்!

நான் உன்னைக் காதலிக்கிறேனென்ற - ஒற்றை

பதிலுக்காய் காத்திருக்கிறதடி அக்காகிதம்!

அதை ஆயிரம் ஐ லவ் யூக்களால்

நிரப்பிட வா பெண்ணே!

“எப்புடி” என்கையில் தூக்கத்தில் அழகிய புன்னகை அவள் இதழ்களில். அதை ரசித்து, “உன் இளா அத்தான் வந்துட்டதால கதிரை மறந்திடாத செல்லம். கதிர்தான் உன் ஆள் நினைவிருக்கட்டும். இளா வேற. கதிர் வேற எப்படி ஏத்துக்க முடியும்னு புது ரூட் ஆரம்பிச்சி எனக்கு ஆப்பு வச்சிராத மொழி. உன் புருஷன் பாவம்ல.”

அவளின் இதழ்ப்புன்னகை அதிகமாக கன்னத்தில் அழுந்த முத்தமொன்றைப் பதித்து “லவ் யூ ஏர்போர்ட்” என... அதில் சட்டென்று விழிப்பு வந்து புன்னகை மாறாது சுற்றிலும் கணவனைத் தேடினாள். அவனோ அதே இடத்தில் அசையாது படுத்திருந்தான்.

‘இவ்வளவு நேரம் நான் கண்டது கனவுதானா? சே.. எப்படி நிஜம் மாதிரியிருந்தது. பைத்தியம் முத்திடுச்சி திரு.’ தனக்குத்தானே தலையிலடித்துக் கொண்டு கணவனின் கையை தனக்குள் எடுத்துத் தலைவைத்துக் தூங்க... இரவெல்லாம் யாரோ அவள் தலைவருடும் உணர்வு.

மறுநாள் காலை ஒன்பது மணியளவில் வந்த சிவகாமியை யாராலும் சமாளிக்க முடியாமல் போனது. இதுவரை எதற்காகவும் மனைவியை கலங்கவிட்டதில்லை குருமூர்த்தி. மனைவியிடமிருந்து அனைத்தையும் மறைத்திருக்க, தற்செயலாக காலையில் செய்தி பார்த்த சிவகாமி, காமாட்சி இருவருக்கும் அதிர்ச்சி.

நேற்று நடந்த சம்பவத்தில், எம்எல்ஏ சம்பந்தப்பட்ட கேஸை முடித்து தீர்ப்புக்காக காத்திருப்பதாக சொல்லி, அது சம்பந்தப்பட்ட வீடியோ ஓடியது. அதில் கார்மேகத்தை போலீஸ் ஒருவர் சுட, இளங்கதிரை ஜெயராம் சுட, தற்காப்புக்காக ஜெயராமை போலீஸ் சுடுவதுபோல் பதிவாகியிருந்தது.

எதை மனைவிக்குத் தெரியக்கூடாது என நினைத்தாரோ, அது தன் கண்முன். டிவியை அணைக்கவும் வழியில்லாமல் போனது. சட்டென்று சிவகாமி மூச்சுக்குத் திணற, “சிவா கதிருக்கு எதுவுமில்லமா. நல்லாதான் இருக்கான்” என்றார் மனைவிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதென்ற பதற்றத்தில்.

“இல்ல என் பையனை நெஞ்சுல சுட்டுட்டாங்க. நான் பார்த்தேன்” என்றார்.

“சிவா சொன்னா கேளுமா. அவனுக்கு எதுவுமில்லன்னு தெரிஞ்சதும்தான் நைட் வந்தேன். வந்தேன். நியூஸ்ல கூட சொன்னாங்களே.”

“இல்ல பொய் சொல்றீங்க. நியூஸ்ல இன்னும் கண் முழிக்கல எதுவும் சொல்றதுக்கில்லன்னுதான் சொன்னாங்க.”

“சிவா அது நியூஸ் சேனல் சும்மா போடுறது. காமாட்சி கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாமா” என்றதும் அவர் செல்ல,

“இல்ல என் பையனை நெஞ்சுல சுட்டுட்டாங்க. என் பையன்... அவனைக் கொன்னுட்டாங்க.” சிறு அரற்றலாய் ஆரம்பித்தது பெரியதாகி மயக்கத்தில் ஆழ்த்த, வேகமாக காரில் ஏற்றி மதுரைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.

சிகிச்சை ஆரம்பித்த ஒரு மணிநேரத்திற்கெல்லாம் சிவகாமிக்கு மயக்கம் தெளிய எங்கேயிருக்கிறோம் என்பதற்கு பதிலாய் கையில் ஏறிய ட்ரிப்ஸ் பட, அதை உருவியெடுத்து மகனைத் தேடி வந்தார் அந்தத் தாய்!
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top