- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
29
“ஓ... முடிச்சிரலாமே” என்ற குரலில் இளங்கதிரைக் கண்ட கார்மேகம், “நீ குருமூர்த்தி பையன்ல. ஏன்பா உனக்கு இந்த வேண்டாத வேலை. வேற பொண்ணா கிடைக்கல. பாரு பொண்டாட்டியைக் காப்பாத்துறேன்னு நீயும்...”
“என்ன பண்றது மாம்ஸ்? நான் வந்துதான் உங்க கொட்டத்தை அடக்கணும்னு விதியிருக்கிறதாலதான், என் மங்கையர்கரசிக்கு புருஷனாகிட்டேன் போல!” என்றான் நக்கலாக.
அப்பொழுது ஜெயராம் செல்லில் ரிங் வர, “என்னடா சொல்ற? சிபிஐ ரௌண்ட் பண்ணிருச்சா? என்ன பண்ணிட்டிருக்கீங்க எல்லாரும்?” என்றவன் வீட்டைப் பார்க்க தீ அணைந்து வீடு மட்டும் சற்று கறுப்படித்தாற் போலிருந்தது. “அப்பா நம்மைச்சுற்றி நமக்குத் தெரியாம ஏதோ நடக்குது” என்றான் வேகமாக.
“அதை இப்பதான் கண்டுபிடிச்சியா ஜெயராம். தீ அணைஞ்சதுக்குக் காரணம் நீ ஊத்தின பெட்ரோலுக்குப் பதிலாயிருந்த சினிமாவுக்கு யூஸ் பண்ற எரிபொருள்தான். இரண்டு இல்ல ஐந்து நிமிஷம்தான் அதனோட வேல்யூ. முடிஞ்சதும் அணைஞ்சிருச்சி.”
“உன்னை ரொம்ப ஈஸியா நினைச்சிட்டேன்டா” என்று துப்பாக்கியை எடுத்த கார்மேகத்தின் குறி கதிரை நோக்கிப்பாய, சட்டென்று விலகியதும் தோட்டா அங்கிருந்த வேப்பமரத்தில் பட்டுத்தெறித்தது.
துப்பாக்கி சத்தத்தில் பின்புறமிருந்த அனைவரும் மிரண்டனர். தோட்டத்திலிருந்த பாதுகாவலர் ஸ்பாட்டிலிருந்த ஒருவருக்கு போன் செய்து, “முன்ன என்ன சத்தம்?” என கேட்க... எதிரில் வந்த பதிலில் “என்ன கதிரைச் சுட்டாங்களா? இப்ப ஓகேதான” என்றதும் எதிரிலிருந்து ஆம் என்ற பதில் வர... அதையெல்லாம் கேட்க திருமொழி அங்கிருக்கவில்லை.
“என் மாமா உன் கையை வெட்டினதுக்குப் பதில் கழுத்தை வெட்டியிருக்கலாம். கழுவுற கையால தின்னும் உனக்கின்னும் புத்தி வரலையே கார்மேகம். ஏன்டா ஜெயராம் உனக்கு என் தங்கச்சி கேட்குதா? இப்ப என் முன்னாடி சொல்லு பார்க்கலாம்” என்றவன் கண்களில் பழிதீர்க்கும் வெறி.
அன்புவை அருகே இழுத்து, “கையெழுத்து போடலன்னா கொலை பண்ணி கைநாட்டு வைப்பியா? இனி காலம் முழுக்க நீ அதைத்தான்டா செய்யப்போற. இன்னொண்ணு இவனோட கையெழுத்து மட்டும் இருந்தா செல்லாதே. என் கையெழுத்தும் உங்களுக்கு இருந்தால்தான இவ்வளவு பெரிய வீடு, தேவநாதன் கம்பெனி இதர சொத்துகள்லாம் உங்களுக்குச் சொந்தமாகும்” என்றான் நக்கலாக.
எதுவோ ஒரு உறுத்தல் வர, “யார்டா நீ?” என்றான் ஜெயராம்.
“இன்னுமாடா தெரியல. என் குரல் உனக்கு என்னை ஞாபகப்படுத்தலையா? இந்நேரம் புரிஞ்சிருக்கணுமே. மறுபிறப்பெடுத்து வந்து உன்னைப் பழிவாங்குவேன்னு சொல்லிட்டு மலையிலிருந்து விழுந்த, தேவநாதன் பையன் இளநாதன்டா நான்!” என்றான் சத்தமாக.
கணவனைத் தேடி வந்த திருவிற்கு ஆச்சர்யம், அதிர்ச்சி, கேள்விகள் சூழ கடைசியாக இளநாதன் என அடையாளம் காட்டியதில் சட்டென்று மயங்கிச் சரியப்போன தங்கையை பிரகாஷ் சட்டென்று தாங்கிப்பிடித்தான். அதைக் கண்ட கார்த்திக் பின்னே தூக்கிப்போகச் சொன்னான்.
மாமன் மகளை அப்படிப் பார்த்த கயலுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் போக, “என்னாச்சி மங்கைக்கு? இவளையும் கொன்னுட்டீங்களா? இன்னுமாடா உங்க வெறி அடங்கல?” என்று அவன் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.
“இவள் என் தங்கை கயல். நானே எப்படி...”
“ஏன் உன் அண்ணனுக்கும் இவள் தங்கைதான? கொல்லப் பார்த்தான்தான?”
“என்னை ஸ்ரீராமா பார்க்காம, பிரகாஷா பாரு கயல். எல்லாரும் பணம் புகழ்னு அலையமாட்டாங்க. அன்பு பாசத்துக்குக் கட்டப்பட்டவங்களும் இருக்காங்க.”
“கயல் சட்டையிலிருந்து கையை எடு. யாரோ செய்ததுக்கு இவன்கிட்ட ஏன் பாயுற?” தமிழரசி அதட்டல் போட...
“யாரோ இல்லை அத்தை. இவனோட அண்ணன்தான்.”
அவளிடம் வந்த செல்வரசி, “கயல் இவனை வளர்த்தது கார்மேகம் இல்ல. எங்க அம்மா. விவரம் தெரியுறதுக்கு முன்னாடியிருந்து அவன் அங்கதான் இருக்கான். என்னோட என் பையன் இருந்ததுன்னு பார்த்தா வருஷங்கள் கூட கிடையாது. நீயும் அக்காவும் இருக்கிறது தெரிஞ்சதுமே உங்களுக்குப் பாதுகாப்பு பண்ணினவன் அவன். ஏழு வருஷம் கழிச்சி போன வருஷம்தான் ஒருமுறை வந்திருந்தான். இப்பக்கூட எங்கம்மா இறந்துட்டதால வந்தான்.”
“அரசி அம்மா இறந்துட்டாங்களா? எப்ப?”
“ஒருமாசத்துக்கு மேலாகுதுக்கா. அம்மாகிட்டயே வளர்ந்த பாசம்தான் இவனை இழுத்துட்டு வந்தது. ஆனா இங்க...”
“அம்மா முதல்ல மங்கையைப் பாருங்க. நான் அங்க போறேன். போய் திரும்பி வருவேனா தெரியாது” என்று கயலைப் பார்த்தபடி நகர, அவள் முகத்தில் வந்த சின்ன அதிர்வு தனக்கானதாய் தோன்ற, சிறு நிம்மதியுடன் அங்கிருந்து சென்றான்.
சிபிஐ பற்றித் தெரிந்ததுமே ஜெயராம் ரௌடிகளை வரச்சொல்லியிருக்க... அடுத்த ஐந்தாவது நிமிடம் அவ்விடமே களேபரமானது. தனக்கு எதிரே நின்றிருந்த தம்பியின் மேல் கோபம் எழ அவனையும் விட்டுவைக்கவில்லை ஜெயராம்.
அனைத்தும் அந்தப் பெரிய வீட்டிற்குள்ளேயே நடந்ததால் வெளியில் அதிகம் தெரியாமல் போனது. வீட்டினருகில் அதிகம் வீடுகள் கிடையாது. அதுவுமில்லாமல் கார்மேகம் அங்கு வரும்போதெல்லாம் அலறல் சத்தங்கள் சகஜமாகிப் போயிருந்தது அத்தெருவாசிகளுக்கு. ‘இன்னைக்கு எந்த அப்பாவி மாட்டினானோ’ என்ற எண்ணம் மட்டும் அவர்களுக்கு. அநியாயம் செய்யும் அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொள்ளவும் முடியாதே.
மனிதர்களின் சத்தமில்லாமல் துப்பாக்கிகள் மட்டுமே பேச, சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்த திருவின் காதிலும் துப்பாக்கி சத்தங்கள் கேட்டது. “கதிர் அத்தான்” என சத்தமிட்டு ஓடப்போனவளை அனைவரும் தடுக்க, அவர்களைத் தள்ளிவிட்டு அவள் ஓட... பாதுகாப்பிற்கு இருந்தவர்கள் அவளைப் பிடிக்க வர... அவளை தான் பார்த்துக்கொள்வதாக சொல்லி பின் தொடர்ந்தாள் கயல்.
சண்டை நடக்கும் பகுதி வந்த திரு கணவனைத் தேடினாள். அன்பு ஒருவனைப் பிடித்திருந்த கையை எடுக்க அவன் அன்புவைப் பிடிக்கவும், கார்த்திக் தன் துப்பாக்கியை கீழே வைத்து சரண்டராகி நிமிர... இன்னும் சிலரும் அதையே செய்ய... ஒருவித அமைதி அவ்விடத்தில்.
ஏதோ விபரீதமாய் தோன்றியது பெண்களுக்கு. அவர்கள் இருப்பது மற்றவர்களுக்கு தெரியாததால் தன் கணவன் எங்கேயென்று மெல்ல எட்டிப்பார்க்க நெஞ்சில் கைவைத்தபடி நின்றாள் மங்கையானவள்.
கயல் புரியாது அங்கு பார்க்க, கார்மேகத்தின் துப்பாக்கி முனையில் நின்றிருந்தான் அவள் அண்ணன் இளநாதன்.
‘இளா அத்தான்’ என கத்தப்போனவள் வாயை கயல் மூட, கண்களில் நீருடன் திரும்பியவளிடம், “வேண்டாம் மங்கை. அண்ணன் அவங்களைச் சமாளிச்சிருவான். நாம சத்தம்போட்டா பிரச்சனை வேற மாதிரியாகும். நம்மளால எதாவது செய்ய முடியுமா பார்க்கலாம்” என்றாள்.
நிராயுதபாணியாக நிற்கும் கணவனை எப்படிக் காப்பாற்றுவது என்று சுற்றிலும் பார்த்தவள் கண்களில் பட்டது, சிறுவர்கள் விளையாடும் பலம் வாய்ந்த உண்டிவில். ஜெயராமின் பெண்கள் இங்கு வந்து விளையாடும்போது விட்டுச் சென்றது. அதை எடுத்து இழுத்துப் பார்த்து அதன் பலம் தெரிந்ததும் சுற்றிலும் பார்க்க, அவ்விடத்தில் துப்பாக்கிக் குண்டு ஒன்று கிடக்க, அதை எடுத்தவள் உண்டிவில்லில் சரியாகப் பொருத்தி கார்மேகத்தைக் குறிவைத்தாள்.
கயல் அவளைத் தடுத்து, அங்கு கிடந்த பாலிதீன் கவரை அவள் கைகளுக்கு க்ளௌஸாக மாட்டிவிட்டு, “இப்ப அடி மங்கை. நம்ம கண் முன்னாடி போன உயிருக்கு இந்தக் கார்மேகம் உயிர் சமர்ப்பணம். அப்பதான் இறந்தவங்க ஆத்மா சாந்தியடையும். ம்...” என்றாள்.
அன்று முதல்முதலில் வெட்டி சாய்த்த தன் அப்பாவின் நினைவுடன், அதைத் தொடர்ந்து அவர்கள் ஆடிய வெறியாட்டங்கள் ஞாபகம் வர, “நம்ம குடும்பத்தை உறவாடி அழிச்ச அவனை விடாத மங்கை. எது வந்தாலும் பார்த்துக்கலாம். இது உன் லட்சியம் கூட” என்றாள் அத்தனை வருட ஆத்திரத்தையும் காட்டி.
மங்கையின் கண்களும் ஒருவித வெப்பத்தைக் கக்கி, சுட்டெரிக்கும் சூரியனாய் கார்மேகத்தின் நெற்றியைக் குறிபார்த்து, தான் கற்ற கலையை கைகளுக்குக் கொடுத்து, “போன தடவை போல் குறி தவறிடக்கூடாது காமாட்சி தாயே!” என்ற வேண்டுதலுடன் தன் ஒட்டுமொத்த பலத்தையும் விரல்களுக்குக் கொண்டு வந்து சரியான இலக்கு பார்த்து அத்தோட்டாவை அனுப்பினாள். சரியாக நான்கே நொடிகளில் ‘ஆ’ என்ற அலறலுடன் கார்மேகம் மண்ணில் சரிந்து விழ... ஒரு வெற்றிப்புன்னகை பெண்கள் இருவருக்குள்ளும்.
தகப்பனின் நிலை பார்த்து கோவத்தில் இளநாதனைக் குறிபார்த்த ஜெயராமின் கையில், அன்பு எறிந்த வேப்பமரத்துக் கட்டை விழ... கீழே விழுந்த துப்பாக்கியை எடுக்குமுன், இளங்கதிர் தான் வைத்திருந்த இன்னொரு துப்பாக்கியால் ஜெயராமின் காலில் சுட, அலறியபடி விழுந்தவன் கையில் கிடைத்தது அந்தத் துப்பாக்கி.
“உன் மறுபிறப்பிலும் உனக்கு எமன் நான்தான்டா இளநாதா!” என்று கதிர் அதிர்ந்த நேரம் இதயப்பகுதியிலும் வயிற்றுப்பகுதியிலும் சுட்டான். அடுத்த குண்டு செலுத்துவதற்குள் ஜெயராமின் வலப்புறத் தோளில் கார்த்திக்கின் புல்லட் பாய, அடுத்தடுத்த துப்பாக்கிச் சூட்டில் சுற்றிலுமிருந்த ரௌடிகள் விழுந்தார்கள்.
“அண்ணா” என்ற கயலின் அலறலில் மற்றவர்கள் ஓடிவர...
மங்கையவளோ அதிர்ச்சியில் உறைந்து மயங்கப்போனவள் கணவனின் சரிவில் மூளை விழிக்க, “இ..இளா அத்தான்” என்று கத்தியபடி ஓடி வந்து கணவனைத் தாங்கினாள்.
“ஹா..ஹா ஒரு வழியா நான்தான் உன் இளா அத்தான்னு கண்டுபிடிச்சிட்டியா? லவ் யூ ஏர்போர்ட்” என்று கண்மூட, மங்கையர்கரசியின் அலறல் அங்கே உச்சஸ்தாபியில்.
பதினைந்து வருடங்களாக கண்ணீரைக் காணாத திருமொழியின் கண்கள் இன்று மொத்தமாய் கொட்டித் தீர்த்ததோ!
கதிரின் அந்நிலை அனைவரையும் உலுக்கிப்போட, பெண்களின் அழுகை சத்தம் மட்டும் அங்கே!
ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஆம்புலன்ஸ் வர, கதிரையும், ஜெயராமையும் சிகிச்சைக்காக முதலுதவி ஆம்புலன்ஸில் ஏற்றினர். மற்ற சிலரைத் தனியாகவும் இறந்தவர்களைத் தனி வாகனத்திலும் கொண்டு செல்ல...
மருத்துவமனை நுழையும் பொழுதே அவசர சிகிச்சைப் பிரிவில் டாக்டர்கள் தயாராகயிருக்க, இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் ஜெயராம்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், குண்டை எடுத்து விட்டதால் இனிமேல் பிரச்சனையில்லையென்று சொன்னார்கள்.
அடுத்து ஒரு மணி நேரங்கழித்து கதிருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் வெளியே வர அவர்களின் முகத்தைப் பார்த்தவர்களுக்குள் சின்னதாக பயம் கவ்விக்கொண்டது.
“எப்படியிருக்கான் டாக்டர்?” தன்னைத் திடப்படுத்திக் கேட்டார் தமிழரசி.
“ரெண்டு குண்டும் ரிமூவ் பண்ணியாச்சி. கொஞ்சம் ஆழமான காயம்தான். கான்ஷியஸ் வந்ததும்தான் மேற்கொண்டு சொல்ல முடியும்.”
“எப்ப நினைவு வரும் டாக்டர்?” என்றார் குருமூர்த்தி.
“இதான் டைம்னு குறிப்பிட்டு சொல்லமுடியாது குரு. உங்க பையன் நல்லபடியா உங்களுக்குக் கிடைப்பான்” என்றார் இளநாதனை இளங்கதிராக மாற்றிய டாக்டர் அமல்ராஜ்.
“என் பையனைப் பார்க்கலாமா டாக்டர்?”
“நாளைக்கு பார்க்கலாம். உங்களுக்குத் தெரியாததா? ஐசியூல வெளியாளுங்க அலவ் கிடையாது. இப்போதைக்கு அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. கார்த்திக் சார் கேட்டுக்கிட்டதால வேணும்னா ஒவ்வொருத்தரா பாருங்க. அதுவும் நாளைக்குதான் இன்னைக்குக் கிடையாது” என்று முடித்து நகர்ந்தார்.