• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
27



“என்ன சித்தி சொல்றீங்க? அப்பவே சொல்லியிருந்தா நான் பார்த்திருப்பேன்ல?”

“இல்லப்பா. ரெண்டு பேரும் போனதால விளையாட்டுத்தனமா பேசிட்டு வர லேட்டாகுதோ நினைச்சேன்” என்றார் தவிப்பாக.

“இருங்க சித்தி” என்று போன் செய்து விசாரிக்க, “என்னது பார்க்கலையா? சார் நான் வர்றேன்” என்று வேகமாக சட்டையணிந்து தோட்டத்தை நோக்கி ஓட... அவனுடனே வந்த சிபிஐ ஒருவர், “சாரி சார். நான் அவங்க வந்ததைக் கவனிக்கல” என்றார்.

“என்ன சார் இவ்வளவு அசால்ட்டா சொல்றீங்க? உங்களை என்ன சொல்றது. நான்ல ஜாக்கிரதையா இருந்திருக்கணும். இப்ப...”

அதற்குள் விஷயமறிந்து வந்த கார்த்திக், “என்ன சேது இப்படி கோட்டை விட்டுட்டீங்க?” என்று கடிந்தான்.

“சாரி சார். அவுட் சைட் போயிருந்தேன். அந்த டைம் வந்திருக்கலாம்.”

“கதிர் உங்க சிஸ்டர்கு போன் பண்ணுங்க” என்றதும் அவனும் முயற்சிக்க, நாட் ரீச்சபுள், ஸ்விட்ஜ் ஆஃப் என்ற வாய்ஸ் மெசேஜ்களே திரும்பத்திரும்ப வர, மற்ற நம்பர்களுக்கு முயற்சித்தும் பதிலில்லாமல் போக, மனதில் புதுவிதமான பயம் எழுந்ததில், “சார் ஏதோ சரியில்ல” என்றான்.

“வெய்ட் கதிர் பதற்றப்படாதீங்க. எப்படியிருந்தாலும் நம்ம கண்காணிப்பு வட்டத்துலயிருந்து போயிருக்க முடியாது. கால் பண்ணி கேட்கிறேன்” என்று போனில் விசாரிக்க,

“சார் நாங்க விசாரிக்க போனப்ப டைம் ஏழு. அப்ப அவங்க வீட்ல யாருமில்லை. லைட் கூட எரியல. டென் வரைக்கும் வெய்ட் பண்ணினோம். ஒருவேளை உங்க கஸ்டடியில இருக்கலாம்னு...”

‘ஷிட்’ என்று தரையை உதைத்து, “அங்க பாதுகாப்புக்குப் போட்டிருந்த அதிகாரி ரோஹன் எங்க?”

“தெரியல சார். நாங்க போனப்ப அவரும் இல்ல. சார் சின்ன இன்பர்மேஷன்.”

“சொல்லுங்க கமல்?”

“அவங்க பக்கத்து வீட்டுப்பையன் ஒருத்தன் அப்பப்ப வந்து இவங்க வீட்டைப் பார்த்தான். முகத்துல அதிக டென்ஷன் தெரிஞ்சது. அந்நேரம் இன்னொருத்தனும் வர வேக வேகமா எங்கேயோ கிளம்பிப் போனாங்க.”

“சரி கமல். இனி அங்க நமக்கு வேலையில்ல. நீங்க எம்.எல்.ஏ ஜெயராம் வீட்டை வாட்ச் பண்ணுங்க. அப்படியே நான் சொன்னதையும் செய்திருங்க. சந்தேகப்படுற மாதிரி யார் இருந்தாலும் தூக்கிருங்க” என்று போனை வைத்துத் திரும்பி “எனி ஐடியா கதிர்?” என்றான்.

“பக்கத்து வீட்டுப் பையனோட போனது ஜெயராம் தம்பி பிரகாஷா இருக்கலாம்.”

“அப்ப நைட்டே மிஸ்ஸான விஷயம் தெரிஞ்சி பிரகாஷ் வந்திருக்கலாம். அப்படியில்லன்னா பிரகாஷே கடத்தியிருந்தா?”

“நோ சார். சான்ஸ் கம்மிதான்.”

“அண்ணன்கிட்டயிருந்து பாதுகாக்கக் கூட பண்ணியிருக்கலாமே. போன் நம்பர் இருக்கா?”

அவன் நம்பரும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ‘கயல்!’ மனம் அடித்துக் கொண்டு கண்கள் கலங்கியது கதிருக்கு. எதுவும் செய்வதறியாது நிற்க...

“கூல் கதிர். ஆட்கள் யாராவது இன்பார்ம் பண்ணுவாங்க பார்த்துக்கலாம்” என்றான் கார்த்திக்.

அப்புவின் குரலில் தெரிந்த பதற்றத்தில் வேகமாக வந்த பிரகாஷ் என்னவென்று விசாரிக்க, “நாம வச்ச ஸ்பை கால் பண்ணியிருந்தான்டா. உன் பெரியம்மாவையும் கயலையும் யாரோ கடத்திட்டுப் போறதாவும், அவனைப் பிடிக்கப் பின்னாடியே போயிட்டிருக்கிறதாகவும் சொன்னான்.”

“ஜெய்!” என பல்லைக்கடித்து “உன்னை என்னவோன்னு நினைச்சேன். நீ புத்திசாலின்னு நிரூபிச்சிட்டல்ல. இரு வர்றேன்” என்று ஆத்திரத்தை சுவற்றில் காட்டி, “வா அப்பு அவன்கிட்டயே கேட்கலாம்” என்று அண்ணன் இருப்பிடம் சென்று “எங்க அவங்களை?” என்றான்.

“எவங்களை?”

“வாடிப்பட்டியிலிருந்து கடத்திட்டு வந்தியே அவங்களைதான்.”

“என்னடா விளையாடுறியா? யார்னே தெரியாதவங்களை நான் ஏன் கடத்தணும்? சும்மா எதாவது சொல்லிட்டிருக்காம போ.”

“வேண்டாம் ஜெய். ஒழுங்கா அவங்களை விட்ரு. அவங்க மேல சின்னதா கீறல் விழந்தா கூட நீ உயிரோட இருக்கமாட்ட” என்றான் மிரட்டலாக.

“அட உனக்குள்ள இப்படி ஒரு அந்நியனா?” ஆவேசமாகத் தன்முன் நின்ற தம்பியை மெச்சுதலாகப் பார்த்தான் ஜெய்ராம்.

அதேநேரம் உள்ளே கட்டிப் போட்டிருந்தவர்கள் காதிலும் விழ, ‘பிரகாஷ் எங்களைத் தேடியா? யாரிவன்?’ என்பதாய் நினைத்தாள் கயல்.

“ஷப்பா என்ன ஒரு வேகம்டா தம்பி. அவ்வளவு லவ்வா அந்தப் பொண்ணுமேல? அன்னைக்கு நண்பனோட தங்கைன்னு சொன்ன? ஏன்டா அப்பு, உன் தங்கச்சி ஏன்டா உன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருக்கா? ஒருவேளை உன் அப்பா உங்களுக்குத் தெரியாம... ஹா..ஹா” என பயங்கரமாகச் சிரித்தான்.

“வேண்டாம்ணா வயசுக்கு மூத்தவர் ஃப்ரண்டோட அண்ணனாச்சே பார்க்கிறேன்.”

“பாருங்கப்பா புள்ளப்பூச்சிலாம் துள்ளிப்பாயுது. என்னடா பண்ணுவ?” என்று அவன் கன்னத்தில் ஓங்கி அடிக்க...

அடுத்த அடிக்கு கை ஓங்குமுன் இடைபுகுந்து தடுத்து, “தப்புப்பண்ற ஜெய். அடுத்தவங்களைப் பேசவோ அடிக்கவோ உனக்கு யார் உரிமை கொடுத்தது? உன் அப்பா பற்றிப் பேசினா நீ கேட்டுக்குவியா?” ஜெயராமின் முறைப்பில், “என்ன முறைக்கிற? மாட்டதான. அதே மாதிரிதான் அவனும்.”

“ஒரு பொண்ணுக்காக இவ்வளவு இறங்குறியே உனக்கு அசிங்கமாயில்ல.”

“நான் ஏன் அசிங்கப்படணும்? நான் பேசினேன்ற ஒரே காரணத்துக்காக கடத்திட்டு வந்த நீயில்ல அசிங்கப்படணும். எங்க வச்சிருக்க அவங்களை? அவங்களை அனுப்பிரு.”

“அப்ப நான் சொன்ன பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லு. இப்பவே பேசி தேதி முடிவு பண்ணிரலாம். இது என்னோட கௌரவப் பிரச்சனை” என்றான் பதிலுக்கு.

“கௌரவம்ன்றது தானா வரணும். மனுஷங்களைக் கொன்னு வாழ்ற உனக்கெல்லாம் கௌரவம்னு ஒண்ணு இருக்கா என்ன? சிரிப்புதான் வருது. இப்ப சொல்றேன் கேளு. கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது கயலோடதான். வேற யாரையும் எனக்குத் துணையா உன்னால நிறுத்த முடியாது” என்றான் உறுதியாக.

அவனின் வார்த்தையில் உள்ளிருந்த இருவரும் அதிர, கயல்விழி வேகமாய் தன் அத்தையைப் பார்த்து, ‘தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்பதாய் தலையாட்டினாள். தமிழரசி ‘உன்னைத் தெரியும்’ என்பதாய் பார்வையிலேயே ஆறுதல் சொல்ல... ஒரு நிம்மதி மூச்சு வந்தபோதிலும் அவன்மேல் கோபமும் வந்தது. ‘என் சம்மதமில்லாமல் என்னைக் கல்யாணம் பண்றானாமா?’

அவள் அங்கிருப்பது தெரியாமல் அவனிருக்க, அவளுக்கோ அடுத்த அதிர்ச்சியும் காத்திருந்தது.

“அந்தப்பொண்ணு பெயர் கயலா? ஏன்டா அம்மாவும் பொண்ணுமா குருவிக்கூடு மாதிரியிருக்கிற வீட்ல இருக்காங்க. பார்த்ததுதான் பார்த்த கொஞ்சம் வசதியா பார்த்திருக்கக்கூடாது.”

“வீட்டைத்தான் அப்பனும் மகனுமா சேர்ந்து பிடுங்கிட்டீங்களேடா. எங்க வீட்லயே எங்களை அடைச்சி வச்சி...” கயலின் கண்களோ ஆத்திரத்தில் பளபளக்க... தமிழரசிக்கும் அதே எண்ணம்.

பிரகாஷினுள் சிறு அதிர்வு வந்தாலும் தன் அண்ணன் இன்னும் அவர்களைப் பார்க்கவில்லையென்ற நிம்மதி எழ, “இங்க பார் வெட்டித்தனமா பேச நேரமில்ல. நைட் நேரம் வயசுப் பொண்ணு வெளியில இருந்தா பார்க்கிறவங்க தப்பா பேசுவாங்க. அவங்களை விடச்சொல்லி போன் பண்ணு.”

“நான் எப்ப கடத்தினதா சொன்னேன்?”

“புத்திசாலித்தனமா பேசுறதா நினைக்காத. அவங்களை விடல நானே போலீஸ் கம்ப்ளைய்ண்ட் குடுத்து உன்னை உள்ள வச்சிருவேன்.”

“ஏன்டா அப்பு உன் ப்ரண்ட்கு அறிவில்லையா? இவன் கம்ப்ளைய்ண்ட் குடுத்தா எடுத்துப்பாங்களா? இல்ல இவனை அங்க விட்டுட்டு நான்தான் வேடிக்கை பார்ப்பேனா. யூ.எஸ்ல படிச்சிருந்தும் புத்தியில்லையே. அதுசரி புத்தியிருந்தா ஏன் தகுதியில்லாத பொண்ணை லவ் பண்றான்.”

“தகுதியில்லையா? கயலுக்கா? மிஸ்டர் எம்.எல்.ஏ சார் அவளைத் தவிர என் மனைவியாக வேற யாருக்கும் தகுதி கிடையாது. அவள் என்னவள்!” என்றான் குரலுயர்த்தி.

திக்கென்ற அதிர்வு கயலினுள். ‘ஒருவனை இத்தனை உதாசீனப்படுத்தியும், எப்படி என்னை? யாரிவன்?’ மனம் கேள்வியில் சுழன்றது.

“அவள் இருந்தால்தானடா காதல் கல்யாணம்னு பேசுவ?”

“அவள் இல்லன்னா அடுத்த நிமிஷம் நீயில்ல. திரும்பவும் சொல்றேன் என் வழியில வந்தா வகுந்துருவேன். அவள் மேல் ஒரு தூசுபட்டாலும் நீ என்னாவன்னு உனக்கே தெரியாது.”

“ஓ... பொண்ணு அவ்வளவு அழகோ! பேசாம நானே...”

“டேய்! உன்ன...” ஜெயராம் மேல் பாய்ந்து அடிக்க ஆரம்பித்தான்.

உள்ளே இருந்தவளுக்கோ உடலில் ஒருவித நடுக்கம். ஜெயராம் கடத்தியது தங்களை அறிந்ததால் என நினைக்க, இங்கு நடப்பதோ வேறாயிருக்கிறதே! ‘பிரகாஷ் காதலுக்கும் ஜெயராம்கும் என்ன சம்பந்தம்? ஏன் அவனுக்காக தங்களைக் கடத்த வேண்டும்?’

“அங்க சொன்னா இங்க எரியுது. இந்த பாதிப்பு அங்கயிருந்ததா பசங்க சொல்லலையே. என்ன ஒன் சைடா? என்னைப்பற்றித் தெரிஞ்சுமா கை ஓங்கிட்டு வர்ற?” தம்பியின் ஆத்திரம் தீராத முகம் பார்த்து, “நான் அயோக்கியன்தான்டா. ஆனா, பொம்பளைப் பொறுக்கியில்ல. பொம்பளைங்க சகவாசத்தால அசிங்கப்பட்டவன் எத்தனை பார்த்திருக்கேன். அதுல நானும் சிக்கி சீரழிவேன்னு நினைச்சியா? நான் சொல்ல வந்தது நானே வேற பையனைப் பார்த்துக் கொடுக்குறேன்னு.”

“அதுக்கு அவள் புருஷனாகப்போற நான் ஒத்துக்கணுமே.”

“வரம்பு மீறிப் பேசிட்டிருக்க ஸ்ரீராம். நீன்றதாலதான் இவ்வளவு பொறுமையா பேசிட்டிருக்கேன். இல்ல...”

“எனக்கு எதாவதுன்னா மேலிடத்துக்கு பதில் சொல்லணும் பாஸ்” என்றான் நக்கலாக.

“எப்படிடா ஸ்ரீராம் நீ என் கூட பிறந்த?”

“இதையே நான் உன்னைக் கேட்கிறேன். விஷச்செடி நீ எப்படி என் அம்மா வயித்துல பிறந்த?” என்றாள் சத்தமாக.

உள்ளிருந்த கயலுக்கோ பெரும் அதிர்வு. ‘பிரகாஷ்! செல்வரசி அத்தையின் பையன் ஸ்ரீராமா! இவன் ஏன் என் பின்னால் சுத்தினான்? என்னை தன் அண்ணனிடம் விட்டுக்கொடுக்கவில்லை என்றாலும் என்னை ஏன்... இவன் காதலிச்சா நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு எப்படி நினைக்கலாம்? அதுவும் என் குடும்பத்தை அழிச்சவன் குடும்பத்துல நானா? முடியவே முடியாது.’ மனதின் ரௌத்திரம் அதிகமாகியதே தவிர பிரகாஷ் என்பவனைப்பற்றி தனக்குள் விவாதிக்கக் கூட தயாராகயில்லை கயல்விழி!

தமிழரசியோ வேறொரு மனநிலையிலிருந்தார். பிரகாஷைப் பற்றி ஏற்கனவே கதிர் சொல்லியிருந்ததால், அவனை கார்மேகம் பையனாகப் பார்க்காமல் தங்கை பையனாக நினைக்கையில், அவனின் காதல் உயர்வாகவே தோன்றியது. இதை விட யார் என் கயலை பார்த்துக் கொள்வார்கள். தன் மருமகளை நினைக்கையில் இது நிறைவேறுமா? ஜெயராம் தம்பி என்றதும் அவள் முகத்தில் தெரிந்த மாற்றங்கள் கண்டிப்பாக அவனை ஏற்றுக்கொள்ள மாட்டாள்’ என்றே தோன்றியது.

“விஷச்செடி! ஹா..ஹா பெரிய படிப்புன்னா சும்மாவா. என்னமா பேசறடா” என்றவன் சட்டென்று பேச்சை நிறுத்தி, “நான் விஷம்தான். ஆலகால விஷம். சின்ன வயசிலிருந்தே பழிவாங்கனும்ன்ற சொல்லைக் கேட்டுக்கேட்டு வளர்ந்தவன். அம்மா தம்பின்னு பார்க்கமாட்டேன். சும்மா வெட்டிப்போட்டுட்டுப் போயிட்டேயிருப்பேன். என் குணத்துல பத்து சதவீதம் இருந்திருந்தா கூட உன் புத்தி இப்படிப் போகாதுடா. சிவராம் இருந்திருந்தா யானை பலம் எனக்கு. அவனைக் கொன்ன அந்த இளாவை... ஹ்ம் செத்தவனைத் திட்டி என்னாகப்போகுது.”

“ஒருத்தனை பறிகொடுத்ததையே உன்னால தாங்க முடியலையே. நீங்க எத்தனை பேரைடா... ச்சே.. இளா வந்து உன் முன்ன நிற்கவும் நிறைய சான்ஸிருக்கு ஜெய். ஜாக்கிரதையாயிரு! இப்ப எனக்காக அவங்களை விட்ரு. அவங்க உன்னை எதுவும் செய்யலடா. ஆசைப்பட்டது நான்றப்ப தண்டனையும் எனக்குத்தான தரணும். உன் கோபத்தை என்கிட்ட காட்டு. அவங்களை விடு” என்றான் கெஞ்சலாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“ஓ... சென்டிமெண்டா? எனக்கு இதெல்லாம் செட்டாகாது தம்பி. என் கௌரவத்துக்கு எதாவது பிரச்சனைனா தம்பின்னு கூட பார்க்காம கோழித்தலையைத் திருகுற மாதிரி திருகிப் போட்டுருவேன். போ போயி போலீஸ்ல கம்ப்ளைய்ண்ட் குடுத்துட்டு நீயும் தேடு” என்று அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

“என்னடா இப்படி சொல்லிட்டுப் போறார்? கயலை எங்க போய் தேடுறது. ஒரு வருஷமா நீ போட்டிருந்த பாதுகாப்பையும் மீறி எப்படிடா கண்டுபிடிச்சாங்க?”

“அன்னைக்கு ரோட்ல கயலை மறிச்சிப் பேசினதுதான்டா தப்பாகிருச்சி. இவன் என்னை வச்சி நிறைய ப்ளான் பண்ணியிருக்கான். கயலைத் தூக்கிட்டா இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவேன்னு தெரியும். இவ்வளவு கெட்டதிலும் நல்லதா, கயல் தமிழரசி பெரியம்மாவை இன்னும் நேர்ல பார்க்கல. நாம பாதுகாப்புக்கு வச்சவனை எங்கடா? கடத்திட்டாங்கன்னு சொன்னதோட ஆளைக்காணோம்?”

“அவனைத்தான்டா நானும் தேடுறேன். ஒரு வருஷத்து வேலையை ஒரே நிமிஷத்துல கோட்டை விட்டுட்டானே.”

“இது அம்மாவுக்குத் தெரியக்கூடாதுடா. அக்காவும், மருமகளும் ஏதோ ஒரு இடத்துல பத்திரமா இருக்கிறதா நினைச்சிட்டிருக்கிறவங்க, தெரிஞ்சா கஷ்டப்படுவாங்கடா. கயல்தான் அவங்க மருமகள்னு ப்ராமிஸ் பண்ணிக் கொடுத்திருக்கேன். ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கிறவங்களை ஏமாற்ற வேண்டாம். அம்மாவுக்காகவாவது கயல் கிடைக்கணும். வாழ்க்கையில் எந்தவித சந்தோஷத்தையும் அனுபவிக்காதவங்கடா என் அம்மா. அவங்க அக்காவையும், அவங்க குடும்பத்தையும் பழிவாங்குறதுக்காக என் அம்மா வாழ்க்கையைக் கெடுத்துட்டார்டா அந்த ஆள்” என்றான் ஆத்திரமாய்.

“பிரகாஷ் என்னயிருந்தாலும்...”

“நிறுத்துடா அந்த ஆளெல்லாம் அப்பான்ற வார்த்தைக்குத் தகுதியில்லாதவர். இப்ப பெரியம்மாவையும் கயலையும் கண்டுபிடிக்கணும். எங்க போய் தேடுறது? இளா கேட்டா என்ன சொல்றது தெரியல. அவங்களுக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்டா. இது என் அம்மா மேல சத்தியம்” என்றான் உறுதியாக.

அவனின் அந்த உறுதி கயல் அறியாமல் அவளுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதோ! ‘ஒரு வருஷம் எங்களைப் பாதுகாத்தானா? ஏன்? தாய் மேலுள்ள பாசத்தினாலா? துரியோதனன் சபையில் கர்ணனாய் நீயிருந்தாலும், எனக்கு நீ வேண்டாம் பிரகாஷ்.’

“கொஞ்ச நேரம் போய் தூங்குடா. காலையில தேடலாம்.”

“இல்ல அப்பு. நைட்குன்னு ஒரு வேல்யூ இருக்கு. நிறைய தப்புகள் நடக்கிறதும் இரவில்தான். நிறைய கண்டுபிடிக்கப்படுறதும் இரவில்தான். நான் இந்த ராத்திரியை வேஸ்ட் பண்ண விரும்பல. நீ கிளம்பு நான் பார்த்துக்கறேன்.”

“இல்லடா நானும் கூடயிருக்கேன். இங்க நடந்ததை டீச்சரோட அண்ணனுக்குச் சொல்ல வேண்டாமா?”

“காலையில வரை தேடிப் பார்த்துட்டு, முடியாத பட்சத்துல சொல்லிக்கலாம். அனுப்பானடி, பழங்காநத்தம், ஆனையூர் பக்கத்துலல்லாம் அவன் பெயர்லயும் பினாமி பெயர்லயும் வீடு வாங்கிப்போட்டிருக்கான். அங்க போய் பார்க்கலாம்.”

“பிரகாஷ் எல்லாம் வேற வேற திசையில இருக்கு. எப்படிடா?”

“நம்பிக்கையோட தேடலாம்டா!”

‘நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்’ என்பதைத் தெரிவிக்க இயலாத நிலையில் வாயும் கையும் நகர முடியாதளவு கட்டப்பட்டு தமிழரசியும் கயல்விழியும்!

காலை வரை தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போக, அப்புவை தூங்கச்சொல்லி சோகமாய் அமர்ந்திருந்தவன் அருகில் வந்த செல்வரசி, “என்னபா கண்ணெல்லாம் சிவந்திருக்கு? நைட் தூங்கலையா? ஏன் ஒருமாதிரியிருக்க?” என்றார் வாஞ்சையாய்.

அதுவரை சொல்லக்கூடாது என்றிருந்தவன் கண்கள் கலங்க “ம்மா.. கயல்...” என்றான் உடைந்த குரலில்.

“கயலா! கயலுக்கு என்ன? உன் அப்பாவுக்குத் தெரிஞ்சிருச்சா? ஐயோ என் மருமகளை அவங்க உயிரோட விடமாட்டாங்களே.”

“ம்மா.. அவள் நம்ம கயல்னு தெரியாது. நான் காதலிக்குற பொண்ணை கடத்தினதா நினைச்சிட்டிருக்கான் உங்க பெரிய பையன். எங்க வச்சிருக்கான் என்ன ஏதுன்னு தெரியல. நைட் முழுக்க தேடியாச்சி.”

“இளாகிட்ட சொல்லிட்டியா?”

“இல்லமா. எப்படி சொல்றது தெரியல. போன்ல சார்ஜ் போட்டுட்டு சொல்றேன்.”

“சரி கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு பிரகாஷ்.”

“இப்ப எப்படிம்மா? கயலையும் பெரியம்மாவையும் தேடணும்.”

“தேடலாம் ஒரு மணிநேரமாவது கண்மூடு” என்று படுக்கவைத்தார்.

“வணக்கம் தம்பி.”

தன்முன் கைகுவித்து வணங்கியவர் முகம் பார்த்து, “நீங்க?” என தயங்கிய ஜெயராம், “ஓ.. மாமா வாங்க. சாரி அடிக்கடி பார்த்தது கிடையாதுல்ல. திடீர்னு ஞாபகம் வரல. உட்காருங்க மாமா. என்ன சாப்பிடுறீங்க? இதோ வர்றேன்” என்று எழுந்து சென்று “ப்ரியா கூல்ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு, அப்படியே அப்பாவையும் வரச்சொல்லு” என்றான்.

“இவங்களுக்கு என் பெயர் தெரியுமா?” என்பதாய் அவள் விழிக்க,

“என்ன முழிக்கிற? எனக்கு தெரிஞ்சது நாலே பெண்கள். நீயும், அம்மாவும் என் பொண்ணுங்களும்தான். அதனால பெயர் மறக்காது” என்றான்.

வாயடைத்துப் போய் மாமனாரிடம் சொல்லியனுப்பி கூல்ட்ரிங்க்ஸுடன் அவர்களிடம் வர, “இவளை உங்களுக்குத் தெரியுமே மாமா” என்றான் மனைவியைக் காட்டி.

“ஏன்பா தெரியாது. உங்க வீட்டுப் பெண்கள் ரொம்ப சாந்தமானவங்க. அன்னைக்குப் பார்த்தப்பவே உங்களுக்குள்ள நல்ல ஜோடிப்பொருத்தம்னு தோணிச்சி. பிள்ளைகள் எங்க?”

“ஸ்கூல்கு போயிருக்காங்க மாமா. என்ன விஷயம் முகமெல்லாம் ஒருமாதிரியிருக்கு?”

“வாங்க மச்சான். எப்படியிருக்கீங்க? என்ன நம்ம வீடு தேடி வந்திருக்கீங்க? முகமே சரியில்ல. எதாவது பிரச்சனையா?” என்றபடி கார்மேகம் வந்து அமர,

“பிரச்சனைதான்பா. எனக்கில்ல என் மருமகளுக்கு. இன்னைக்குக் காலையில, அவளையும் அவளோட போன தெரிஞ்ச பையனையும் காணோம். எனக்கு இந்த ஊர்னாலும் அதிகம் இங்க இருந்ததில்லையா.. யார்கிட்ட ஹெல்ப் கேட்கிறதுன்னு நினைச்சப்ப, உன்னோட நினைவுதான் வந்தது. பையன் அரசியல்ல இருக்கான்னு சொன்னல்ல பெயர் சொல்லிக் கேட்டதும் வீட்டுகிட்டயே விட்டுட்டாங்க. நல்லவேளை நீ வீட்லயிருக்க. கடவுளுக்குதான்பா நன்றி சொல்லணும்” என்று கையை உயரே தூக்கிக் கும்பிட்டு இறக்கினார்.

அப்பாவும் மகனும் ஒருவரையொருவர் யோசனையாய் பார்த்தார்கள்.

“உன் அத்தைக்கு இன்னும் தெரியாதுப்பா. தெரிஞ்சா அவளுக்கு எதாவது ஆகிருமோன்னு பயம். போலீஸ்கிட்ட கூட போகாம உன்னை மட்டும் நம்பி வந்திருக்கேன். கைவிட்றாதப்பா” என்று கண்கலங்கினார்.

“மாமா என்னை நம்பி வந்துட்டு கண்கலங்கலாமா? முழு விவரம் சொல்லுங்க?” என்றான்.

“என் மருமகள் பெயர் திருமொழி.”

அப்பா மகன் இருவரும் அர்த்தப்பார்வை பரிமாறிக்கொள்ள, அதைக் கண்டும் காணாதவராய், “பொண்ணுக்கும் ஆந்திராதான். சமீபத்துலதான் கல்யாணமாச்சிது. ரிசப்ஷன் ஹைதராபாத்ல வச்சோம். ரிசப்ஷன் முன்னாடிதான் அவளோட ப்ரண்ட் கல்யாணம் தமிழ்நாட்டுல நடக்கிறதாகவும், குடும்பத்தோட போகணும்னும் ஆர்டர் போட்டிருந்தா. மாப்பிள்ளைப் பையனும் எங்க ஸ்டாப். அதான் எல்லாரும் வந்திருந்தோம். வந்த இடத்துலதான் உங்களை நான் பார்த்தது.”

“கல்யாணத்தப்ப நிஷாந்த் தம்பி பிரஷாந்த் அவளுக்கு அறிமுகமாகி அக்கான்னு பழக ஆரம்பிச்சான். அவனும் சின்னப்பையன் மருமகளும் ஒரே பொண்ணுன்றதால, பழகுறதுக்கு அவன் நல்லவனா இருந்ததால விட்டுட்டோம். ரிசப்ஷன் முடிஞ்ச ரெண்டாவது நாள்ல புருஷன் கூட சண்டைபோட்டு இங்க அவளோட அத்தை வீட்ல வந்து உட்கார்ந்துட்டா. பொண்ணு போயிட்டாளேன்னு அப்படியே விட்ர முடியுமா? வீட்டு கௌரவமாச்சே! முதல்ல பையனை சமாதானப்படுத்தி அனுப்ப, வரமாட்டேன்னுட்டா. அப்புறம் நாங்க நேத்து சாயங்காலம் வந்தோம்.”

“அந்தப் பையன் அவன் வீட்டுக்குப் போகாம எங்களோடவே தங்கிட்டான். சரி சின்னப்பையன்னு விட்டுட்டோம். காலையில தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுறேன்னு போன அத்தையைத் தடுத்து, ரெண்டு நாளா நீங்க செஞ்சதைப் பார்த்திருக்கேன். இன்னைக்கு நான் போறேன்னு மருமகள் போக... வெளியில படுத்திருந்த பிரஷாந்த் நானும் வர்றேன்னு போயிருக்கான். போன என் மருமகளையும் அந்தப்பையனையும் காணோம்பா. அவன்தான் என் மருமகளை எதோ பண்ணிட்டான்பா. அக்கான்னு கூப்பிட்டது கூட நடிப்போன்னு தோணுது. நல்லவன் மாதிரி நடிச்சி நேரம் பார்த்து அவளைக் கடத்திட்டான்.”

“அவளைப் பெத்தவங்க வந்து கேட்டா நான் என்ன சொல்றது தெரியலப்பா. பிசினஸ்ல என்னைவிட இரண்டு மடங்கு பெரியவங்க. இது தெரிஞ்சா எங்களை இல்லாமலேயே பண்ணிருவாங்க” என்றார் கலக்கமாக.

அதுவரை அமைதியாகக் கேட்டிருந்த ஜெயராம் “அந்தப் பையன் பிரஷாந்த் யாருன்னு தெரியாதா?”

“இல்லப்பா கல்யாணத்தப்பதான் அறிமுகம். நிஷாந்த் தம்பின்றதாலதான் மருமகளை பழகவிட்டது. நிஷாந்த்கிட்ட கேட்டா பதில் தெரியாம முழிக்கிறான். உன் அம்மா கூட அவள்கிட்ட பேசினதைப் பார்த்தேனே. அவன் ஏன் அப்படிப் பண்ணினான்னு தெரியல. ஒருவேளை பணம்தான் குறின்னா இன்னும் போன் கூடப் பண்ணல. எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு கார்மேகம். வீட்டுக்கும் சொல்ல முடியல. பையன் வரப்போற பிரச்சனையை நினைச்சி டென்சனாயிருக்கான். நீதான்பா எதாவது செய்யணும். இதோ பாருப்பா என் பையனும் மருமகளும்” என்று ரிசப்ஷனில் இருபரும் புன்னகையுடன் இருப்பதையும் வாழ்த்த வந்த நண்பர் குடும்பத்தைப் பெண்ணின் அப்பா அம்மாவாக காண்பித்து, நிஷாந்த் திருமணத்தில் சரண்யாவும் அவர்களுடன் மகனும் மருமகளும் சேர்ந்து இருப்பது என்று சில போட்டோக்களைக் காண்பித்தார்.

தன் தாய் சொன்னது ஞாபகம் வர, ‘அம்மா சொல்றதும் இவர் சொல்றதும் உண்மையா? அப்படியில்லன்னாலும் என்கிட்ட வந்து நடிக்க வேண்டிய அவசியமில்லையே. அந்தப் பொண்ணுக்கு அப்பா அம்மான்னு உறவிருக்குது. மங்கைக்கு அப்படி எதுவும் கிடையாதே. தப்பா தூக்கிட்டோமோ? இப்ப என்ன பண்றது?’ குழப்பத்துடன் தகப்பனைப் பார்க்க அவருக்குமே அதே குழப்பமென்று புரிந்தது.

“மாமா என்னை நம்பி வந்துட்டீங்க. விடுங்க நம்மாளுங்களை வச்சிக் கண்டுபிடிச்சிரலாம்” என்றான் அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில்.

“தம்பி போலீஸ் வேணும்னா...”

“போலீஸ் வேண்டாம் மாமா. இப்ப மணி பனிரெண்டாகுது. இன்னும் ஒரு மணிநேரத்துல இந்த மதுரையைச் சுத்தியுள்ள எல்லா ஏரியாவிலும் சல்லடை செய்து கண்டுபிடிச்சி, உங்க மருமகளை ஒப்படைக்கிறேன்.”

“ரொம்ப நன்றிப்பா. பணம் எதாவது...”

“என்ன மாமா நீங்க? என்னை நம்பி வந்துட்டு பணம் பத்தி பேசுறீங்க. அடுத்தவனா.. அடிச்சினாலும் வாங்குறதுக்கு. உங்களுக்கு மருமகள்னா எனக்கு தங்கச்சிதான. நீங்க அப்பாகிட்டப் பேசிட்டிருங்க மாமா. நான் பசங்களோட போய்ப்பார்க்கிறேன்.”

“நாங்க இருக்கும்போது என்ன பயம் மச்சான். எங்க அம்மா வழி சொந்தம் நீங்க. அப்படியே விட்ருவோமா. எம்மா மருமகளே மதியத்துக்கு அசைவம் சமைச்சிருமா” என்று சத்தமாக குரல் கொடுத்தார்.

“பையன் ரொம்ப சுறுசுறுப்பு கார்மேகம். சின்ன வயசுல உன்னைப் பார்த்த மாதிரியிருக்கு.”

“ஆமாம் மச்சான். வாரிசுக்கு ஒண்ணு வேணும்ல. சின்னவன் அவன் அம்மா மாதிரி. பெரியவன் நான் கோடு போட்டா ரோடு போடுற ஆள்.”

“கார்மேகம் திரும்பவும் கேட்கிறேன் கோவப்படாத. பணம் எதாவது...”

“ஸ்ஸ்... மச்சான் அந்த பேச்சே எடுக்கக்கூடாது. இப்ப ஹைதராபாத்ல எதாவது கம்பெனி ஆரம்பிக்கணும்னா, நீங்க ஹெல்ப் பண்ணமாட்டீங்களா என்ன?”

‘அதான என்னடா பணம் வேண்டாம்ன்றாங்களே பார்த்தேன். சோழியும் குடுமியும் சும்மாவா ஆடும்.’ மனதில் நினைத்ததை சிரிப்பால் மறைத்து, “அதுக்கென்னபா தூள் கிளப்பிடலாம். எங்க உன் சின்னப்பையனைக் காணோம். போன முறையும் பார்க்கல?”

“அவனா.. செல்விகிட்ட கேட்டா தெரியும்.”

“அடடே வாங்கண்ணே! திரு எப்படியிருக்கா?”

“உனக்கு என்னை ஞாபகமிருக்காமா?”

“அதுக்கென்ன குறைச்சல் மச்சான். பிறந்தப்ப நடந்ததைக் கேட்டால் கூட ஞாபகம் வச்சிருப்பா” என்று தன் வன்மத்தைக் காட்ட... அதையும் புன்னகையுடன் செல்வரசி ஏற்றுக்கொண்டார்.

“நல்லாயிருக்காமா.”

“என்னண்ணே இந்தப்பக்கம்?”

“ஏன் என்னைப் பார்க்க வரக்கூடாதா. போ போய் வேலையைப் பாரு” என சிடுசிடுத்த கணவனை முறைத்து, குருமூர்த்தியிடம் அர்த்தப்புன்னகை கொடுத்து நகர்ந்தார் செல்வரசி.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top