- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
27
“என்ன சித்தி சொல்றீங்க? அப்பவே சொல்லியிருந்தா நான் பார்த்திருப்பேன்ல?”
“இல்லப்பா. ரெண்டு பேரும் போனதால விளையாட்டுத்தனமா பேசிட்டு வர லேட்டாகுதோ நினைச்சேன்” என்றார் தவிப்பாக.
“இருங்க சித்தி” என்று போன் செய்து விசாரிக்க, “என்னது பார்க்கலையா? சார் நான் வர்றேன்” என்று வேகமாக சட்டையணிந்து தோட்டத்தை நோக்கி ஓட... அவனுடனே வந்த சிபிஐ ஒருவர், “சாரி சார். நான் அவங்க வந்ததைக் கவனிக்கல” என்றார்.
“என்ன சார் இவ்வளவு அசால்ட்டா சொல்றீங்க? உங்களை என்ன சொல்றது. நான்ல ஜாக்கிரதையா இருந்திருக்கணும். இப்ப...”
அதற்குள் விஷயமறிந்து வந்த கார்த்திக், “என்ன சேது இப்படி கோட்டை விட்டுட்டீங்க?” என்று கடிந்தான்.
“சாரி சார். அவுட் சைட் போயிருந்தேன். அந்த டைம் வந்திருக்கலாம்.”
“கதிர் உங்க சிஸ்டர்கு போன் பண்ணுங்க” என்றதும் அவனும் முயற்சிக்க, நாட் ரீச்சபுள், ஸ்விட்ஜ் ஆஃப் என்ற வாய்ஸ் மெசேஜ்களே திரும்பத்திரும்ப வர, மற்ற நம்பர்களுக்கு முயற்சித்தும் பதிலில்லாமல் போக, மனதில் புதுவிதமான பயம் எழுந்ததில், “சார் ஏதோ சரியில்ல” என்றான்.
“வெய்ட் கதிர் பதற்றப்படாதீங்க. எப்படியிருந்தாலும் நம்ம கண்காணிப்பு வட்டத்துலயிருந்து போயிருக்க முடியாது. கால் பண்ணி கேட்கிறேன்” என்று போனில் விசாரிக்க,
“சார் நாங்க விசாரிக்க போனப்ப டைம் ஏழு. அப்ப அவங்க வீட்ல யாருமில்லை. லைட் கூட எரியல. டென் வரைக்கும் வெய்ட் பண்ணினோம். ஒருவேளை உங்க கஸ்டடியில இருக்கலாம்னு...”
‘ஷிட்’ என்று தரையை உதைத்து, “அங்க பாதுகாப்புக்குப் போட்டிருந்த அதிகாரி ரோஹன் எங்க?”
“தெரியல சார். நாங்க போனப்ப அவரும் இல்ல. சார் சின்ன இன்பர்மேஷன்.”
“சொல்லுங்க கமல்?”
“அவங்க பக்கத்து வீட்டுப்பையன் ஒருத்தன் அப்பப்ப வந்து இவங்க வீட்டைப் பார்த்தான். முகத்துல அதிக டென்ஷன் தெரிஞ்சது. அந்நேரம் இன்னொருத்தனும் வர வேக வேகமா எங்கேயோ கிளம்பிப் போனாங்க.”
“சரி கமல். இனி அங்க நமக்கு வேலையில்ல. நீங்க எம்.எல்.ஏ ஜெயராம் வீட்டை வாட்ச் பண்ணுங்க. அப்படியே நான் சொன்னதையும் செய்திருங்க. சந்தேகப்படுற மாதிரி யார் இருந்தாலும் தூக்கிருங்க” என்று போனை வைத்துத் திரும்பி “எனி ஐடியா கதிர்?” என்றான்.
“பக்கத்து வீட்டுப் பையனோட போனது ஜெயராம் தம்பி பிரகாஷா இருக்கலாம்.”
“அப்ப நைட்டே மிஸ்ஸான விஷயம் தெரிஞ்சி பிரகாஷ் வந்திருக்கலாம். அப்படியில்லன்னா பிரகாஷே கடத்தியிருந்தா?”
“நோ சார். சான்ஸ் கம்மிதான்.”
“அண்ணன்கிட்டயிருந்து பாதுகாக்கக் கூட பண்ணியிருக்கலாமே. போன் நம்பர் இருக்கா?”
அவன் நம்பரும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ‘கயல்!’ மனம் அடித்துக் கொண்டு கண்கள் கலங்கியது கதிருக்கு. எதுவும் செய்வதறியாது நிற்க...
“கூல் கதிர். ஆட்கள் யாராவது இன்பார்ம் பண்ணுவாங்க பார்த்துக்கலாம்” என்றான் கார்த்திக்.
அப்புவின் குரலில் தெரிந்த பதற்றத்தில் வேகமாக வந்த பிரகாஷ் என்னவென்று விசாரிக்க, “நாம வச்ச ஸ்பை கால் பண்ணியிருந்தான்டா. உன் பெரியம்மாவையும் கயலையும் யாரோ கடத்திட்டுப் போறதாவும், அவனைப் பிடிக்கப் பின்னாடியே போயிட்டிருக்கிறதாகவும் சொன்னான்.”
“ஜெய்!” என பல்லைக்கடித்து “உன்னை என்னவோன்னு நினைச்சேன். நீ புத்திசாலின்னு நிரூபிச்சிட்டல்ல. இரு வர்றேன்” என்று ஆத்திரத்தை சுவற்றில் காட்டி, “வா அப்பு அவன்கிட்டயே கேட்கலாம்” என்று அண்ணன் இருப்பிடம் சென்று “எங்க அவங்களை?” என்றான்.
“எவங்களை?”
“வாடிப்பட்டியிலிருந்து கடத்திட்டு வந்தியே அவங்களைதான்.”
“என்னடா விளையாடுறியா? யார்னே தெரியாதவங்களை நான் ஏன் கடத்தணும்? சும்மா எதாவது சொல்லிட்டிருக்காம போ.”
“வேண்டாம் ஜெய். ஒழுங்கா அவங்களை விட்ரு. அவங்க மேல சின்னதா கீறல் விழந்தா கூட நீ உயிரோட இருக்கமாட்ட” என்றான் மிரட்டலாக.
“அட உனக்குள்ள இப்படி ஒரு அந்நியனா?” ஆவேசமாகத் தன்முன் நின்ற தம்பியை மெச்சுதலாகப் பார்த்தான் ஜெய்ராம்.
அதேநேரம் உள்ளே கட்டிப் போட்டிருந்தவர்கள் காதிலும் விழ, ‘பிரகாஷ் எங்களைத் தேடியா? யாரிவன்?’ என்பதாய் நினைத்தாள் கயல்.
“ஷப்பா என்ன ஒரு வேகம்டா தம்பி. அவ்வளவு லவ்வா அந்தப் பொண்ணுமேல? அன்னைக்கு நண்பனோட தங்கைன்னு சொன்ன? ஏன்டா அப்பு, உன் தங்கச்சி ஏன்டா உன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருக்கா? ஒருவேளை உன் அப்பா உங்களுக்குத் தெரியாம... ஹா..ஹா” என பயங்கரமாகச் சிரித்தான்.
“வேண்டாம்ணா வயசுக்கு மூத்தவர் ஃப்ரண்டோட அண்ணனாச்சே பார்க்கிறேன்.”
“பாருங்கப்பா புள்ளப்பூச்சிலாம் துள்ளிப்பாயுது. என்னடா பண்ணுவ?” என்று அவன் கன்னத்தில் ஓங்கி அடிக்க...
அடுத்த அடிக்கு கை ஓங்குமுன் இடைபுகுந்து தடுத்து, “தப்புப்பண்ற ஜெய். அடுத்தவங்களைப் பேசவோ அடிக்கவோ உனக்கு யார் உரிமை கொடுத்தது? உன் அப்பா பற்றிப் பேசினா நீ கேட்டுக்குவியா?” ஜெயராமின் முறைப்பில், “என்ன முறைக்கிற? மாட்டதான. அதே மாதிரிதான் அவனும்.”
“ஒரு பொண்ணுக்காக இவ்வளவு இறங்குறியே உனக்கு அசிங்கமாயில்ல.”
“நான் ஏன் அசிங்கப்படணும்? நான் பேசினேன்ற ஒரே காரணத்துக்காக கடத்திட்டு வந்த நீயில்ல அசிங்கப்படணும். எங்க வச்சிருக்க அவங்களை? அவங்களை அனுப்பிரு.”
“அப்ப நான் சொன்ன பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லு. இப்பவே பேசி தேதி முடிவு பண்ணிரலாம். இது என்னோட கௌரவப் பிரச்சனை” என்றான் பதிலுக்கு.
“கௌரவம்ன்றது தானா வரணும். மனுஷங்களைக் கொன்னு வாழ்ற உனக்கெல்லாம் கௌரவம்னு ஒண்ணு இருக்கா என்ன? சிரிப்புதான் வருது. இப்ப சொல்றேன் கேளு. கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது கயலோடதான். வேற யாரையும் எனக்குத் துணையா உன்னால நிறுத்த முடியாது” என்றான் உறுதியாக.
அவனின் வார்த்தையில் உள்ளிருந்த இருவரும் அதிர, கயல்விழி வேகமாய் தன் அத்தையைப் பார்த்து, ‘தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்பதாய் தலையாட்டினாள். தமிழரசி ‘உன்னைத் தெரியும்’ என்பதாய் பார்வையிலேயே ஆறுதல் சொல்ல... ஒரு நிம்மதி மூச்சு வந்தபோதிலும் அவன்மேல் கோபமும் வந்தது. ‘என் சம்மதமில்லாமல் என்னைக் கல்யாணம் பண்றானாமா?’
அவள் அங்கிருப்பது தெரியாமல் அவனிருக்க, அவளுக்கோ அடுத்த அதிர்ச்சியும் காத்திருந்தது.
“அந்தப்பொண்ணு பெயர் கயலா? ஏன்டா அம்மாவும் பொண்ணுமா குருவிக்கூடு மாதிரியிருக்கிற வீட்ல இருக்காங்க. பார்த்ததுதான் பார்த்த கொஞ்சம் வசதியா பார்த்திருக்கக்கூடாது.”
“வீட்டைத்தான் அப்பனும் மகனுமா சேர்ந்து பிடுங்கிட்டீங்களேடா. எங்க வீட்லயே எங்களை அடைச்சி வச்சி...” கயலின் கண்களோ ஆத்திரத்தில் பளபளக்க... தமிழரசிக்கும் அதே எண்ணம்.
பிரகாஷினுள் சிறு அதிர்வு வந்தாலும் தன் அண்ணன் இன்னும் அவர்களைப் பார்க்கவில்லையென்ற நிம்மதி எழ, “இங்க பார் வெட்டித்தனமா பேச நேரமில்ல. நைட் நேரம் வயசுப் பொண்ணு வெளியில இருந்தா பார்க்கிறவங்க தப்பா பேசுவாங்க. அவங்களை விடச்சொல்லி போன் பண்ணு.”
“நான் எப்ப கடத்தினதா சொன்னேன்?”
“புத்திசாலித்தனமா பேசுறதா நினைக்காத. அவங்களை விடல நானே போலீஸ் கம்ப்ளைய்ண்ட் குடுத்து உன்னை உள்ள வச்சிருவேன்.”
“ஏன்டா அப்பு உன் ப்ரண்ட்கு அறிவில்லையா? இவன் கம்ப்ளைய்ண்ட் குடுத்தா எடுத்துப்பாங்களா? இல்ல இவனை அங்க விட்டுட்டு நான்தான் வேடிக்கை பார்ப்பேனா. யூ.எஸ்ல படிச்சிருந்தும் புத்தியில்லையே. அதுசரி புத்தியிருந்தா ஏன் தகுதியில்லாத பொண்ணை லவ் பண்றான்.”
“தகுதியில்லையா? கயலுக்கா? மிஸ்டர் எம்.எல்.ஏ சார் அவளைத் தவிர என் மனைவியாக வேற யாருக்கும் தகுதி கிடையாது. அவள் என்னவள்!” என்றான் குரலுயர்த்தி.
திக்கென்ற அதிர்வு கயலினுள். ‘ஒருவனை இத்தனை உதாசீனப்படுத்தியும், எப்படி என்னை? யாரிவன்?’ மனம் கேள்வியில் சுழன்றது.
“அவள் இருந்தால்தானடா காதல் கல்யாணம்னு பேசுவ?”
“அவள் இல்லன்னா அடுத்த நிமிஷம் நீயில்ல. திரும்பவும் சொல்றேன் என் வழியில வந்தா வகுந்துருவேன். அவள் மேல் ஒரு தூசுபட்டாலும் நீ என்னாவன்னு உனக்கே தெரியாது.”
“ஓ... பொண்ணு அவ்வளவு அழகோ! பேசாம நானே...”
“டேய்! உன்ன...” ஜெயராம் மேல் பாய்ந்து அடிக்க ஆரம்பித்தான்.
உள்ளே இருந்தவளுக்கோ உடலில் ஒருவித நடுக்கம். ஜெயராம் கடத்தியது தங்களை அறிந்ததால் என நினைக்க, இங்கு நடப்பதோ வேறாயிருக்கிறதே! ‘பிரகாஷ் காதலுக்கும் ஜெயராம்கும் என்ன சம்பந்தம்? ஏன் அவனுக்காக தங்களைக் கடத்த வேண்டும்?’
“அங்க சொன்னா இங்க எரியுது. இந்த பாதிப்பு அங்கயிருந்ததா பசங்க சொல்லலையே. என்ன ஒன் சைடா? என்னைப்பற்றித் தெரிஞ்சுமா கை ஓங்கிட்டு வர்ற?” தம்பியின் ஆத்திரம் தீராத முகம் பார்த்து, “நான் அயோக்கியன்தான்டா. ஆனா, பொம்பளைப் பொறுக்கியில்ல. பொம்பளைங்க சகவாசத்தால அசிங்கப்பட்டவன் எத்தனை பார்த்திருக்கேன். அதுல நானும் சிக்கி சீரழிவேன்னு நினைச்சியா? நான் சொல்ல வந்தது நானே வேற பையனைப் பார்த்துக் கொடுக்குறேன்னு.”
“அதுக்கு அவள் புருஷனாகப்போற நான் ஒத்துக்கணுமே.”
“வரம்பு மீறிப் பேசிட்டிருக்க ஸ்ரீராம். நீன்றதாலதான் இவ்வளவு பொறுமையா பேசிட்டிருக்கேன். இல்ல...”
“எனக்கு எதாவதுன்னா மேலிடத்துக்கு பதில் சொல்லணும் பாஸ்” என்றான் நக்கலாக.
“எப்படிடா ஸ்ரீராம் நீ என் கூட பிறந்த?”
“இதையே நான் உன்னைக் கேட்கிறேன். விஷச்செடி நீ எப்படி என் அம்மா வயித்துல பிறந்த?” என்றாள் சத்தமாக.
உள்ளிருந்த கயலுக்கோ பெரும் அதிர்வு. ‘பிரகாஷ்! செல்வரசி அத்தையின் பையன் ஸ்ரீராமா! இவன் ஏன் என் பின்னால் சுத்தினான்? என்னை தன் அண்ணனிடம் விட்டுக்கொடுக்கவில்லை என்றாலும் என்னை ஏன்... இவன் காதலிச்சா நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு எப்படி நினைக்கலாம்? அதுவும் என் குடும்பத்தை அழிச்சவன் குடும்பத்துல நானா? முடியவே முடியாது.’ மனதின் ரௌத்திரம் அதிகமாகியதே தவிர பிரகாஷ் என்பவனைப்பற்றி தனக்குள் விவாதிக்கக் கூட தயாராகயில்லை கயல்விழி!
தமிழரசியோ வேறொரு மனநிலையிலிருந்தார். பிரகாஷைப் பற்றி ஏற்கனவே கதிர் சொல்லியிருந்ததால், அவனை கார்மேகம் பையனாகப் பார்க்காமல் தங்கை பையனாக நினைக்கையில், அவனின் காதல் உயர்வாகவே தோன்றியது. இதை விட யார் என் கயலை பார்த்துக் கொள்வார்கள். தன் மருமகளை நினைக்கையில் இது நிறைவேறுமா? ஜெயராம் தம்பி என்றதும் அவள் முகத்தில் தெரிந்த மாற்றங்கள் கண்டிப்பாக அவனை ஏற்றுக்கொள்ள மாட்டாள்’ என்றே தோன்றியது.
“விஷச்செடி! ஹா..ஹா பெரிய படிப்புன்னா சும்மாவா. என்னமா பேசறடா” என்றவன் சட்டென்று பேச்சை நிறுத்தி, “நான் விஷம்தான். ஆலகால விஷம். சின்ன வயசிலிருந்தே பழிவாங்கனும்ன்ற சொல்லைக் கேட்டுக்கேட்டு வளர்ந்தவன். அம்மா தம்பின்னு பார்க்கமாட்டேன். சும்மா வெட்டிப்போட்டுட்டுப் போயிட்டேயிருப்பேன். என் குணத்துல பத்து சதவீதம் இருந்திருந்தா கூட உன் புத்தி இப்படிப் போகாதுடா. சிவராம் இருந்திருந்தா யானை பலம் எனக்கு. அவனைக் கொன்ன அந்த இளாவை... ஹ்ம் செத்தவனைத் திட்டி என்னாகப்போகுது.”
“ஒருத்தனை பறிகொடுத்ததையே உன்னால தாங்க முடியலையே. நீங்க எத்தனை பேரைடா... ச்சே.. இளா வந்து உன் முன்ன நிற்கவும் நிறைய சான்ஸிருக்கு ஜெய். ஜாக்கிரதையாயிரு! இப்ப எனக்காக அவங்களை விட்ரு. அவங்க உன்னை எதுவும் செய்யலடா. ஆசைப்பட்டது நான்றப்ப தண்டனையும் எனக்குத்தான தரணும். உன் கோபத்தை என்கிட்ட காட்டு. அவங்களை விடு” என்றான் கெஞ்சலாக.